Tuesday, November 08, 2005

நினைவுத் தடங்கள் - 35

எங்கள் வட்டாரத்தில் அப்போது எங்கள் குடும்பம்தான் எல்லா வகையிலும் முன்னணியில் இருந்தது. பொருளாதார நிலையிலாகட்டும், கல்வியிலாகட்டும், குடும்ப நபர்களின் எண்ணிக்கையிலாகட்டும் நாங்கள் தான் முதல். நாங்கள் எங்கள் பெற்றோருக்குப் பத்துப் பிள்ளைகள். ஐந்து பிள்ளைகள் ஐந்து பெண்கள். இப்போது போல அப்போது குடும்பக்கட்டுப்பாடு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

அனேகமாக எல்லா வீட்டிலும் சராசரியாக ஆறு முதல் எட்டுப் பிள்ளைகள். அப்போதெல்லாம் பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்வதை குறைவாக எண்ணுவ தில்லை. 'மாறாக மக்களைப் பெற்ற மகராசி' என்றே மதித்தார்கள். பின்னாளில் எங்களது அடுத்த கிராமத்தில் ஒரு பெற்றோருக்குப் பதினாறு பிள்ளைகள். 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ' வாழ்த்துவது பிள்ளைகள் எண்ணிக்கையில் என்ற அர்த்தத்தில் கொள்வதானால் அவர்கள் அதை நிரூபித்தார்கள். பெருவாழ்வு என்பதை செல்வச் செழிப்பில் என்று கொள்ளாமல் மன நிறைவான வாழ்வு என்று கொண்டால் அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். பல குடும்பங்களில் பத்துக் குழந்தைகள் போலப் பெற்றிருந்தாலும் இப்போது போல மருத்துவ வசதியில்லாததால் நிறையக் குழந்தைகள் மொட்டிலேயே உதிர்ந்து போனார்கள். பொருளாதார வசதி மற்றும் சுகாதார விழிப்புணர்வு காரணமாய் எங்கள் பெற்றோர்கள் எங்களை பாதிப்பு இன்றி வளர்த்து ஆளாக்கினர்கள். எங்களை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக உருவாக்கி இன்றளவும் எல்லோரும் நிறைவான வாழ்க்கை வாழ்வதில் எங்கள் அப்பாவைப் போல் எங்கள் அம்மாவுக்கும் பெரும் பங்கு உண்டு.

பின்னாளில் நான் தலை எடுத்து பணிக்கு வந்த பிறகு 1966ல் அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்த டேப் ரெகார்டர் கருவி ஒன்றை வாங்கினேன். அதில் முதல் பதிவாக என் தாயாரையே பேட்டி கண்டு பதிவு செய்தேன். அறுபதுகளில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகி இருந்த நேரம். "இப்போது பிள்ளைகள் அதிகம் வேண்டாம் என்று அரசாங்கமே தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதை எல்லோரும் குறைவாக எண்ணுகிற நிலைமை இருக்கிறதே- நீங்கள் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொண்டது பற்றிக் கூச்சமாக இல்லையா?" என்று பேட்டியின் போது கேட்டேன். "இதுலே என்ன கூச்சம்? வீடு நிறையப் பிள்ளைகள் இருப்பது ஒரு அழகுதான்! 'ஒரு மரம் தோப்பாகுமா? ஒரு பிள்ளையும் பிள்ளையாகுமா?' ண்ணுதான் அப்போ நெனச்சாங்க. இப்போ மாதிரி ரெண்டு போதும்னு நாங்க நெனைக்கலே" என்று என் தாயார் பதில் சொன்னார்கள்.

"ந்¢றையப் பிள்ளைகள் இருப்பது அழகாக இருக்கலாம். ஆனால் அத்தனை பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைமைக்குக் கொண்டு வரணும்னா இப்போது முடியுமா?'' என்று கேட்டேன். "வசதி உள்ளவங்களுக்கே முடியலையே?"

"இப்போ கஷ்டம்தான். அப்போ உங்களுக்கு காலையிலே பாலைக் கொடுத்து கையிலே ப்¢ஸ்கோத்து ஒண்ணக் கொடுத்து ஒரு ஓரமா ஒக்கார வச்சா நீங்க பதுவிசா ஒக்காந்திருப்பீங்களெ இப்போ அப்பிடியா? நாட்டுக் கைத்தறித் துண்டு ஒண்ணை- அப்போ நாலணா- இடுப்புலே கட்டினா சமத்தா பிள்ளைங்க அடம் புடிக்காம இருக்குமே இப்போ அப்படியா? டெரிலின்லே சட்டை, கால்சட்டை கேக்குதே! அப்போல்லாம் இந்த ஹார்லிக்சும், பால் பவுடரும் ஏது? அதெல்லாம் செலவுதான் ஆகும். கொடிக்குக் காய் பாரமா என்ன? உங்களாட்டமா எடுத்த துக்கெல்லாம் டாக்டருக்கிட்டே போனோம்? எல்லாம் கை வைத்தியம்தான்" என்று பெருமிதத்துடன் சொன்னார்கள்.

வீட்டில் எப்போதும் கோரோசனையும் தஞ்சாவூர் மாத்திரைகளும் இருக்கும். எங்களுக்கு என்று இல்லை - ஊரில் எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்கும் மாத்த்¢ரையும் மருந்தும் தந்து உதவுவார்கள். குழந்தை வைத்தியத்துக்காக என்று இல்லை -தங்கள் வீட்டில் நல்லது கெட்டது எதற்கும் அம்மாவையே 'ஆகிவந்த கை' என்று யோசனையும் உதவியும் கேட்பார்கள். எங்கள் தாயாரும் முகம் சுளிக்காமல் யார் கேட்டாலும் உதவுவார்கள். 95 வயது வரை வாழ்ந்து இப்போது 2001ல் தான் காலமானார்கள். கடைசி ஐந்து ஆண்டுகள் நினைவுப் பகுதி செயலிழந்து எங்களைக் கூட யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது தவிர எனக்குத் தெரிந்து நோய் என்று எப்போதும் படுத்ததில்லை. 90 வயதிலும் கண்ணாடி போடாமல் படிக்கவும் எழுதவும் அவர்களுக்கு முடிந்தது. வீட்டின் நிர்வாகம் அப்பாதான் என்றாலும் வரவுசெலவுக் கணக்கை தவறாமல் எழுதி வந்தது எங்கள் அம்மாதான். இன்றும் நான் கடந்த 50 வருடங்களாக வரவுசெலவுக் கணக்கை விடாது எழுதி வருவது அம்மாவிடமிருந்து கற்றதுதான். கடைசிவரை ஒரு பல் கூட எங்கள் தந்தையைப் போலவே அவர்களுக்கு விழவில்லை. அப்படிப் பட்ட உடல் நலமும் மன நலமும் உடையவர்களாக - அப்போதெல்லாம் நமது சராசரி வயது 28 ஆக இருந்தும் - எப்படி இருக்க முடிந்தது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

குழந்தை வளர்ப்பிலும் அப்படி ஒன்றும் தனிப்பட்ட விசேஷம் எதுவும் இருந்த தில்லை. இப்போதுபோல் காபியும் டீயும் இல்லை. காலையில் இட்டிலி , தோசை தொடர்ச்சியாக இல்லை. பழையதும் தயிரும் பழங்குழம்பும்தான். இருந்தும் நாங்கள் அதிகமும் நோய் வாய்ப்பட்டதில்லை. மாதம் ஒருமுறை கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவார்கள். சனிதோறும் எண்ணெய்க் குளியல். தின்பதற்கு ஏதாவது எப்போது கிடைக்கும். வீட்டில் செய்யும் பலகாரங்கள் தவிர தெருவோடு போகும் இலந்தை, மா, பலா, பாலப்பழம் என்று எது விற்றாலும் மாற்றாக நெல் போட்டு வாங்கித் தருவார்கள். படிப்பு விஷயத்தில் அவர்கள் பங்கு எதுவும் இல்லயே தவிர, நாங்கள் எல்லொரும் படித்து உத்தியோகத்துக்கு வந்தது தன் அண்ணன்கள் வீட்டைப் பார்த்துதான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மையில் எங்கள் தகப்பானார் 1914லிலேயே மெட்றிகுலேஷன் படித்தவர்கள். எங்கள் வட்டாரத்தில் அப்போது மெட்றிகுலேஷன் வரை படித்தவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை. அதனால் முன் யோசனையோடு அப்போதே எங்கள் அனைவரையும் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பினார்கள்.

அம்மா அப்படித் தன் பிறந்த வீட்டுப் பெருமையைப் பேசக் காரணம் உண்டு. எங்கள் தாய் மாமா ஒருவர் எங்கள் தந்தை படித்த காலத்திலே கல்லுரியில் படித்து வழக்கறிஞர் தொழிலில் அமோகமாய் சம்பாதித்து, அரசியலிலும் மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக - பக்தவத்சலத்தின் பார்லிமெண்ட்ரி செயலராக இருந்தவர். அவர் எங்கள் அப்பா போல தன் பிள்ளைக¨ளையும் தன் சகோதரர்கள் பிள்ளைகளையும் தானே படிக்க வைத்தவர். அதைப் பார்த்துத்தான் எங்கள் அப்பா எங்களையும் படிக்க வைத்ததாக எங்கள் தாயார் சொல்வது வழக்கம். எங்கள் தாயார் தன் பிறந்தகத்தைப் பற்றிப் பெருமைப்பட வேறொரு காரணமும் உண்டு.

எங்கள் தாயாரின் தந்தை ஜமீன் ஒழிப்புக்கு முன் ஒரு சின்ன கிராமத்துக்கு 'ஜாகிர்தார்' ஆக இருந்தவர். உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்ட அம்மாகுளம் என்கிற கிராமத்தின் வரிவசூல் மற்றும் பாராமரிப்பு உரிமை பெற்ற குட்டி ஜமீன். எங்கள் மாமாக்களில் ஒருவர் உடையார்பாளையம் ஜமீனில் பேஷ்கார் (நிதிப் பொறுப்பு) ஆக இருந்தவர். இதிலெல்லாம் எங்கள் அம்மாவுக்குப் பெருமை. ஜமீன் ஒழிப்பு நேர்ந்த போது ரு.60000 போல அரசாங்கத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையாக எங்கள் மாமாக்களுக்குக் கிடைத்தது.

அம்மாவின் பிறந்த ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை எல்லோரும் போய் ஒருமாதம் போல டேரா அடித்துவிட்டு வருவோம். அப்போது - 50 ஆண்டுகளுக்கு முன்வரை அந்தப் பக்கம் பேருந்தெல்லாம் இல்லை. ஓரிரு தனியார்கள் - டி.வி.எஸ் போல -நடத்தியவை பெரிய முக்கிய வழித்தடங்களில் மிகக் குறைந்த அளவில் இருந்தன. அதனால் எங்கும் மாட்டு வண்டிப் பயணம்தான். எங்கள் ஊரிலிருந்து ஏறக்குறைய 25 மைல் தூரம் அம்மா பிறந்த ஊரான வாணதிரையன் பட்டணம் . இப்போதைய ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் செல்லவேண்டும். நீளமான கூண்டு வண்டியில் விடியற்காலை 4 மணிக்குப் புறப்பட்டால் மாலை இருட்டும் வேளைக்கு 6 மணியளவில் போய்ச் சேர முடியும். மேல் படிப்புக்குப் போன மூத்த இரு சகோதரர்கள் தவிர அப்போதைக்கு இருந்த 5,6 பிள்ளைகளுடன் கட்டுசாதம் கட்டிக்கொண்டு அப்பா அம்மாவுடன் கிளம்புவோம். வண்டி மெதுவாகத்தான் போகும். வேகமாகப் போக சாலையும் அனுமதிக்காது. ஏறக்குறைய 12 மணிக்கு மேலாக பயணம் செய்தாலும் எங்களுக்கு அலுத்ததில்லை. பள்ளிக்கூடச் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை, வீட்டுக்கு வெளி¢யே புதிய இடங்களின் ஈர்ப்பு என பயணம் உற்சாகமாய் இருக்கும். இடையில் பத்து மைலுக்கு ஒரு தடவை சாலையோரம் தென்படும் பெரிய குளத்தருகே வண்டியை அவிழ்த்து நிறுத்தி கட்டுச்சோறு சாப்பிடுவோம். அது ஒரு ரசமான அனுபவம்.

மாமா வீட்டின் பின் பகுதியில் பெரிய மொட்டை மாடியுடன், உள்ளே விசால மான காலரி ஹால் போன்ற கூடம். அதில் உயரமான சுவரில் எங்கள் தாத்தா காலத்திலிருந்தே மாட்டப் பட்டிருந்த 3அடி உயரமான பெரிய பிரேம் போட்ட ரவிவர்மா ஓவியங்கள் இன்றும் இன்றும் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்முன்னே அப்படியே நிற்கிறது. பகீரதன் தவம், தமயந்தி அன்னத்தைத் தூது அனுப்புதல், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் என கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஓவியங்கள் என் கலைரசனைக்கு அந்தச் சின்ன வயதில் தூண்டுகோலாக இருந்தன. அதற்காகவே நான் அடிக்கடி அன்கே போக ஆசைப்படுவேன். இன்று அறுபது ஆண்டுகளுக்குப் பின் அங்கே ஒருமுறை போனபோது வீடு கைமாறி உருவம் மாறி பழைய அடையாளத்தை இழந்து எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. மாமாக்களி¢ன் வாரிசுகளும் இப்போது அங்கில்லை.

பெரிய இடத்திலிருந்து நிறைய நகைகளுடன் வந்த எங்கள் அம்மாவுக்கு ஊரில் மிகுந்த மரியாதை. எங்களது வளர்ச்சியில் அப்பாவுக்கு மிகவும் ஒத்துழைத்து, பெரியப்பா சுமத்திய பெரிய கடன் பங்கை அடைக்க தன் நகைகளை முகம் சுளிக்காமல் தந்துதவிய அம்மாவின் தியாகத்தை அப்பா நினவுகூர்வதுண்டு. ஆனால் அம்மா அதனைப் பெரிதாகச் சொல்லிக் காட்டாவிட்டாலும் அந்கக் காலத்தில் மிகக் கௌரவமாய்க் கருதப் பட்ட காசுமாலையைக் கொடுத்ததை ஆதங்கத்தோடு குறிப்பிடுவதுண்டு. பின்னாளில் மீண்டும் காசுமாலை வாங்கிவிட வேண்டும் என்ற அம்மாவின் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை. ஏனென்றால் எங்கள் பத்து பேரையும் ஆளாக்கி, திருமணம் செய்வித்துக் கரையேருவதற்குள் அம்மாவுக்கு அதற்கு நேரமோ வாய்ப்போ கிட்டவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் குறைதான்.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

1 comment:

வெளிகண்ட நாதர் said...

இது போன்ற பெரிய குடும்பங்கள் நிறைய உண்டு. உங்கள் தலைமுறையில் பத்தானது, எங்கள் தலைமுறையில் ஐந்து ஆறானது. பிறகு இரண்டுக்கு மேல் எப்போதும் வேண்டாமென்றானது. இப்போது ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்றாகி விட்டது. இது போன்ற விரிந்த ஆலமர சூழ்நிலையிலே வாழ்ந்த வாழ்க்கை பொன்னானது