Sunday, February 15, 2009

ஆதவனின் 'இரவுக்கு முன்பு வருவது மாலை'

அபூர்வமும் அருமையுமாய் நாம் நினைப்பவை அதிக நாள் நீடிப்பதில்லை என்பது ஒரு சோகமயமான யதார்த்தம். இலக்கியத்திலும் அப்படித்தான். பாரதியும், புதுமைப்பித்தனும் மிக அபூர்வமான மேதைகள். அவர்கள் 50 வயதுக்குள் மறைந்து விட்ட மாதிரி நம் தலைமுறையின் அபூர்வ படைப்பாளியான ஆதவனும் 45 வது வயதில் அகால மரணமுற்றது தமிழ் இலக்கிய உலகின் ஈடு செய்ய முடியாத இழப்பு. 1965 வாக்கில் 'தீபம்', 'கணையாழி'யில் எழுதத் தொடங்கிய அவர் மிகக் குறுகிய காலத்தில் தனித்தன்மை கொண்ட சாதனைகளை தமிழ்ப் படைப்புலகில் நிகழ்த்தி தனக்கென ஒரு அழியாத இடத்தை வாசகர் நெஞ்சில் பிடித்துக்கொண்டவர்.

சமூகத்தின் அகமனப் பிரச்சினைகளை கூர்ந்து நோக்கி அவற்றை மையமாக வைத்து யதார்த்தமும், ரசனையும் மிக்க கதைகளை எழுதிய அவரது படைப்புகளை
தற்போது மறுபிரசுரம் செய்து வரும் 'கிழக்கு பதிப்பகம்', முதல் முயற்சியாக அவரது ஆறு குறுநாவல்கள் கொண்ட 'இரவுக்கு முன்பு வருவது மாலை' என்கிற தொகுப்பைக் கொணர்ந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு உவப்பளிக்கும் செய்தியாகும்.

தன்னைப்போலவே, பிழைப்பை முன்னிட்டு டில்லி போன்ற பெருநகரங்களின்
வாழ்க்கைப் பொறியில் சிக்கிக் கொண்டு, தமது வேர்களுக்காக ஏங்குபவர்களின் சமூக ஒவ்வாமைகள், தங்களுக்குத் தாங்களே அந்நியப்பட்டுப்போதல், அதன் காரணமாய்ப் படும் அல்லல்கள், இளம் தலைமுறையினரின் முகம் தேடும் முயற்சிகள், அவர்களது பாலுணர்வுச் சிக்கல்கள் ஆகியவைகளே அவரது கதைகளில் அதிகம் காணப்படுபவை.இத்தொகுப்பில் உள்ள ஆறு குறுநாவல்களிலும் அத்தகைய மனச்சிக்கல்கள் மனித நேயத்தோடு வெகு நுட்பமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

'இரவுக்கு முன்பு வருவது மாலை' என்ற முதல் குறுநாவல், வாழ்வின் அந்தக் கணத்துக்குமேல் எதையும் நிச்சயம் செய்ய முடியாத மனநிலையில் உள்ள ஒரு இளைஞனது ஒருமாலை நேரத்து அனுபவத்தைச் சொல்கிறது. ஒரு நோக்கமும் இன்றி ஒரு மாலை நேரத்தில் ஒரு சிக்னல் சந்திப்பில் சாலையைக் கடப்பதற்காக நின்று கொண்டிருப்பவன் சிக்னலில் காத்திருப்போரது அவசரம், பொறுமை இன்மை,அலுப்பு ஆகியவற்றைப் பொறுமையாய் அவசரமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறான். 'மனிதனால் மனிதனுடைய சௌகரியத்துக்காக ஏற்படுத்தப்படும் விதிகளும் சட்ட திட்டங்களும் இறுதியில் அவனுக்கே எஜமானனாக மாறி அவனுக்கு சங்கடத்தையும் வெறுப்பையும் அளிக்கும் ஒரு அந்தஸ்தையும் பலத்தையும் பெற்றுவிடும் வேடிக்கை'யை ரசித்துக்கொண்டிருக்கிறான்.

பச்சைவிளக்கு விழுந்து சாலை நெருக்கடி குறைந்தும் - அவன் சாலையைக் கடந்துதான் ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாததால், வேகமாக விரைந்து கொண்டிருக்கும் மனிதர்களுக்கு மத்தியில், பதற்றமின்றி நின்ற இடத்திலேயே தன்னைத்தானே தனிமைப் படுத்திக் கொண்டவனாக நிற்கிறான். தன்னுடைய இந்தத் தனித்தன்மை, தன்னால் நிராகரிக்கப்பட்ட சமூகத்தினரிடையே ஒரு சலசலப்பை ஏற்படுத்தவேண்டும் அல்லது குறைந்தபட்சம் கவனிக்கப்பட வேண்டுமென்றும் அவனுக்குள்ளே ஒரு ரகசிய மூலையில் இருக்கும் விருப்பம்' துரதிர்ஷ்டவசமாக
கவனிப்பாரின்றி வீணாகிக் கொண்டிருந்தது.

அப்போது எதிர்ச்சாரியில் தன்னைப் போலவே சாலைக் கடக்கும் அவசரத்தில் இல்லாத, அவனைப் போலவே தனித்தன்மை வாய்ந்த, சமூகத்துடன் ஒத்துப்போகாத ஒரு பிரகிருதியாய் நின்று கொண்டிருக்கும் ஒருத்தியைப் பார்க்கிறான். அவளும் இவனைக் கண்கொட்டாமல் பார்த்தபடியே நின்று கொண்டிருந்தவள், சற்றுப் பொறுத்து சாலையைக் கடந்து இவனை நோக்கி வருகிறாள்.

இருவரும் புன்னகை செய்தபடி பரஸ்பரம் அறிமுகம் செய்து கொண்டு
நடக்கிறார்கள். பிறகு பரஸ்பர விருப்புவெறுப்புகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன.
தொடர்ந்து பரஸ்பர ஈர்ப்பு, கைகோர்ப்பு என நெருக்கம் அதிகமாகி அர்த்தமில்லாமல் எதிர்காலத் திட்டமேதுமின்றி அந்த மாலைப்பொழுது கேளிக்கையிலும் அசட்டு நெருக் கத்திலும் கழிகிறது. டில்லி போன்ற நகரக்குக்கு வரும் இளைஞர்களும் யுவதிகளும் இப்படி தனித் தன்மைக்கும் தன் வேர்களுக்கும் ஏங்கி தமக்குத்தானே சுமையாகிக் கொண்டிருக்கும் அவலத்தை மென்னகை பூக்கவைக்கும் தன் எழுத்தால் ரசமாகச் சித்தரிக்கிறார் ஆதவன்.

'சிறகுகள்' என்கிற அடுத்த குறுநாவல், பெண்மைச் சிறகுகள் முளைத்துப்
பிறந்த வீட்டின் சுவர்களுக்கு அப்பால் பறக்கத் துடிக்கும் இளம் பெண்ணொருருத்தி
யின் படிப்படியான அகபுற மாற்றங்களைச் சித்தரிக்கிறது. குஞ்சு என்கிற அந்தப் பெண்ணின் பாத்திரப்படைப்பு மிகச் சிறப்பானது. கல்லூரிப் படிப்பின் கடைசி நாள் முதல், பின்னர் வீட்டில் சும்மா இருக்க முடியாமல் வேலைக்கு முயற்சிப்பதும், அதற்கான யதார்த்தமான தடைகளும், பின்னர் வேலைக்குப் போனதும் அங்கு சந்திக்கும் பிரச்சினைகளும், அடுத்து திருமண ஏற்பாட்டை அவள் எதிர்கொள்வது வரையிலான இன்றைய இளம் உள்ளங்களின் தேடல்களையும் தனித்தன்மைக்காகப் போராடும் மனப்போக்கையும் இயல்பாய், வலிந்து கட்டாமல் ரசமாய்ச் சொல்கிறது கதை. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இன்றைய தலைமுறை இடைவெளிச் சிந்தனைகளின் பிரச்சினைகள் மிகையின்றி சித்தரிக்கப்படுகிறது. ஆதவன் பெண் பாத்திரமாகவே மாறி அவளது சிந்தனை, பேச்சு எல்லாவற்றையும் அசலாய் எழுதியுள்ளார் .

தலைமுறை இடைவெளிச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டாய் இதைச்
சொல்லலாம்:
"நம் நாட்டில் பெரியவர்கள் சிறியவர்கள் வாழ்க்கையில் ரொம்பக் குறுக்கிடு
கிறார்கள். இல்லை?" என்றாள் ருக்கு. "குழந்தைகளை ஒரு குறிப்பிட்ட வயதுவரை வளர்த்துவிட்டு அவர்கள் போக்கில் விட்டுவிடவேண்டியதுதானே! அது கிடையாது. அவர்களுடைய உத்தியோகம், கல்யாணம், குடித்தனம், குழந்தை வளர்ப்பு எல்லாவற்றிலும் இடைவிடாமல் குறுக்கிட்டுக் கொண்டே இருகிறார்கள். அமெரிக்காவிலோ, ஜெர்மனியிலோ, ஜப்பானிலோ ஏற்பட்டிருப்பது போன்ற பிரமிக்கத்தக்க முன்னேற்றங்களோ மாறுதல்களோ, நம் நாட்டில் ஏற்படாததற்கு இதுதான் காரணம். ஒவ்வொரு தலைமுறையும் பிந்தைய தலைமுறைகளின் நிழலிலேயே வளருகின்றன. சுதந்திரமான மனோபாவங்களும் புதிய சிந்தனைகளும் வாய்ப்போ ஊட்டமோ இன்றிப் பழைமையின்
சுமைக்கடியில் நசுங்கிப் போகின்றன. ஒரு ஆயிரம் பேராவது துணிந்து இந்தச் சுமையைத் தலையைச் சுற்றி எறிந்துவிட்டுப் புத்தம் புதிதாகத் தொடங்கினால்தான் நமக்கு விடிவுகாலம்".

'பழைமையின் சுமை, புதுமையை நசுக்கப் பார்க்கிறது. புதுமை சுமையை இறக்கிவிட்டு தலை தெறிக்க ஓடப்பார்க்கிறது. சுமைக்குச் சுமப்பவர்களிடம் ஏன் இந்த அலட்சியமும் அவநம்பிக்கையும்? சுமப்பவர்களுக்குச் சுமையின்மீது ஏன் இந்த மிரட்சியும் வெறுப்பும்? இப்படிப் பிடிக்காமல் ஒருவருக்கொருவர் தொத்திக் கொண்டிருப்பானேன்? சுமப்பவர்கள் சுமையை அவ்வப்போது இறக்கி வேண்டாதவற்றை எடுத்தெறிந்துபளுவைக் குறைக்கட்டும்; அல்லது சுமையே சுமப்பவர்களை அனுசரித்து தன் பளுவைக் குறைத்துக் கொள்ளட்டும்; உருவை மாற்றிக் கொள்ளட்டும்; தானும் இறங்கி வந்து சற்று நடக்கட்டும்...' என்கிறார் ஆதவன் அந்தப் பாத்திரத்தின் மூலமாக.

'மீட்சியைத்தேடி' என்கிற குறுநாவல் டில்லி வாழ்க்கைபற்றியும் அது பற்றிய
மிகையான கற்பனையும் மிகையான அலுப்புமான இரு வேறு பார்வை பற்றியும்
சித்தரிப்பது.

இயந்திரமாய்ப்போன டில்லி வழ்க்கையில் அலுத்துப்போயிருக்கிற சங்கர்
விடுமுறையில் தன் சொந்த மண்ணான திருவையாறுக்கு வருகிறான். ரயிலை விட்டு இறங்கிய கணத்திலிருந்து அவன் பார்க்கிற முகங்களும், நுகர்கிற மணங்களும், ஓசைகளும் அவன் மனதில் ஒரு அழகிய அமைதியையும், விடுதலை உணர்வையும் ஏற்படுத்துகின்றன. 'இந்தக் கணத்தை நிரந்தரமாக்க முடியுமானால்!' என்ற ஏக்கம் எழுகிறது. இறங்கியதும் குடிக்கிற காப்பி, வழியில் தென்படுகிற வயல்களின் செழிப்பு, குறுக்க்¢டுகிற ஆற்றுப்பாலம், அதனடியில் சுழித்துக்கொண்டு ஓடும் நீர் எல்லாமுமே 'இங்கேயே இருந்துவிடலாம் போலிருக்கிறது' என்று சொல்ல வைக்கிறது. அதைக் கேட்கிற - அவனை அழைக்க வந்திருக்கும் அவனுடைய சித்தப்பா மகன் கிச்சாவுக்கு
அது ரசிக்கவில்லை. அவன் படித்துவிட்டு பம்பாய்க்கும் டில்லிக்கும் வேலைக்கு மனுப்
போட்டு இண்டர்வியூகளுக்குப் போய், முடிவு தெரியாமல் அலுத்துப்போய் இருப்பவன். "நீ அப்படித்தான் சொல்வாய். இந்த ஊர், இந்த வாழ்க்கை - இவற்றுக்கு வெளியில் நீ இருக்கிறாய். இதை ஏற்றுக் கொண்டாக வேண்டிய கட்டாயம் உனக்கு இல்லை. எனக்கோ, இது என் மேல் திணிக்கப்பட்ட ஒரு நிர்ப்பந்தம். ஒரு தளை" என்கிறான். 'நிர்ப்பந்தமாகிவிடும்போது, எந்த விஷயமுமே சுவாரஸ்யம் அற்றதாகி விடுகிறதோ?' என்று இவனுக்குத் தோன்றுகிறது. ஆபீஸ் வேலை, நகர வாழ்க்கையின் பரபரப்பு அவசரம், காதலி மீராவின் புன்னகை - இவற்றையெல்லாம் விட்டு ஓடிப்போக வேண்டும் என்று அவனுக்கு ஏன் தோன்ற வேண்டும்?

இப்படி அவன் சந்திக்கிற ஒவ்வொன்றும் - தியாராஜர் சமாதியின் அழகான அமைதி, அருகில் யாருக்கும் எதற்கும் கவலைப்படாமல் தன் சொந்தப் போக்கில், சொந்த நியமங்களுக்கு உட்பட்டு ஓடும் காவிரி - எல்லாமும், 'படிப்பு, நாகரிகம், வக்கணையான பேச்சும் பாவனைகளும் ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையிலும் மட்டத்திலும் புழங்குவதற்காக அவன் அணிய வேண்டியிருந்த எண்ணற்ற போர்வைகளைக் கழற்றி எறிந்துவிட்டு இந்த நதிக்கரையில், இந்த ஓசைகளின் மத்தியில், பெயர் இல்லாமல், டெலிபோன் நம்பர் இல்லாமல் உட்கார்ந்திருக்க முடியுமானால்!' என்று ஏங்க வைக்கிறது. சித்தப்பா வீட்டுக்குப் போனதும் சித்தப்பா, சித்தி சித்தப்பா மகள் எல்லோரும் காட்டும் பாசம், விருந்தோம்பல் அனைத்தும் அந்த ஏக்கத்தை வலுப் படுத்துகின்றன. மாறாக அவனுடைய சித்தப்பா மகன், அவனது இந்த மன அவசம் எல்லாம் 'இக்கரைக்கு அக்கரைப் பச்சை' என்பது போலத்தான் என்று உணர வைக்கிறான். அவனுடைய சித்தப்பா சொன்ன, "எதிலுமே நீ உன்னைப் பூரணமாக ஆழ்த்திக்
கொள்ள வேண்டும். பூர்ண சமர்ப்பணத்தில் பந்தங்களே இருக்காது. பந்தங்களைப் பற்றி நினைப்பது ஒரு பக்குவமற்ற நிலை" என்பதும் அவனைச் சிந்திக்க வைக்கிறது. 'என்னை உருவாக்கிய, என் சிந்தனைகளை உருவாக்கிய வாழ்க்கை முறையை திரஸ்கரிக்க நினைப்பது எவ்வளவு மோசமானது! எவ்வளவு நாட்கள் இங்கே தங்கினாலும் அவன் என்றைக்காவது ஒரு நாள் திரும்பிப் போக வேண்டியவன்தான்; ஒரு அன்னிய உலகத்தின் பிரஜைதான். இதை ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு
வழியில்லை' என்பதை உணர்ந்து திரும்புகிறான்.

'கணபதி கீழ்மட்டத்து ஊழியன்' என்கிற குறுநாவலில் எல்லா அலுவலகங்
களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆரோக்கியமற்ற இன்றைய சூழ்நிலைகளின் எரிச்சல் அதிகமும் காட்டப்படுகிறது. கீழ்மட்டத்து ஊழியர்களின் சோம்பல், அலட்சியம், மேலதிகாரிகளின் ஆணவம், அடுத்த நிலை ஊழியர்களிடம் காட்டும் உதாசீனம், செய்யும் அவமதிப்பு ஆகியவை ஆதவனுக்கே உரிய மென்மையான நகைச்சுவையுடன் சித்தரிக்கப்படுகின்றன. புதுமைப்பித்தனைபோலவே நடுத்தர வர்க்கத்தின் விரக்தியை, வாழ்வின்மீதான அதிருப்தியை இக்கதையில் வரும் கணபதி போன்ற பாத்திரங்கள் கசப்போடு வெளிப்படுத்துகிறார்கள். அவர்களுக்கு எல்லோர் மீதும் எதற்கும் ஊமைக்கோபம் பீரிட்டு, சிறுமையாக உணர்கிறார்கள். அதிலும் டில்லி போன்ற வெளி மாநிலங் களில் வேற்றுமொழி அதிகாரிகளிடம் காணப்படும் தென்னிந்தியர் மீதான இளக்காரம், எள்ளல் எல்லாம் இவர்களை எரிச்சலூட்டி இயலாமையால் சோர்ந்து போகிற சுயபரிதாபத்தைச் சித்தரிக்கின்றன.

இவர்கள் வெளியில் மட்டுமின்றி வீட்டுக்குள்ளும் அவமதிப்பையே அதிகமும் உணர்கிறார்கள். இக்கதையில் வரும் கணபதிக்கு, 'வீட்டில் அண்ணன் சம்பாத்தியத்தில்
சாப்பிடுகிற தாழ்வுணர்ச்சி, பணம் கொடுத்தாலும் வாங்கிக் கொள்ள மறுத்து அவனது
பாதுகாப்பில் அவனிருப்பதாக மறைமுகமாக உணர்த்தும் அண்ணனின் செயல், அலுவலகத்தில் தன்னிடம் அன்பாக இருப்பதுபோல் காட்டிக்கொள்ளாமலே வேலை வாங்கும் மேலதிகாரி போலவே அவனிடம் வேலை வாங்கும் அண்ணி, மாதாமாதம் பணம் அனுப்புவதற்குப் பிரதி உபகாரமாய் அவனுக்கு மனைவி தேடி அவமானப்படுத்தும் அப்பா'-எல்லாமும் தன்னை அவமதிப்பதாகவே படுகிறது. அவன் அலுவலகப் பொறுப்பில் இருக்கும்போது அவனை லட்சியம் செய்யாத அடுத்தநிலை ஊழியர்கள், மேலதிகாரியு டனான கௌரவமற்ற விவாதம், விதிகளைமீறிய விளையாட்டு - இவ்வளவும் எதனால்?' என்று குமைகிறான். கிராமத்தைவிட்டு வந்து இங்கே டில்லியில் அவனுக்கென்று
யாருமில்லாதது போன்ற பிரிவுணர்ச்சி, சமூகத்தின் ஜாதியமைப்பால் தனக்கு விரும்பிய கல்லூரியில் படிப்பில் இடம் கிடைக்காது போன ஆற்றாமை என்று எதிலும் அவனுக்கு ஏமாற்றமும் விரக்தியுமே மிஞ்சுகின்றன. எல்லோருக்குமான இந்த யதார்த்தமான ரசபேதமான அனுபவங்கள் கணபதி என்கிற கீழ்மட்டத்து ஊழியனுக்கு அதீதமாகத் தோன்றுவதை எள்ளல், நையாண்டி நிறைந்த சமூக விமர்சனங்களுடன் காட்சிப்படுத்தியுள்ளார் ஆதவன் இக்கதையில்.

'நதியும் மலையும்' என்கிற தலைப்புடனான குறுநாவல் நதியை நாடி மலை செல்வதான உருவகத்தைக் கருவாகக் கொண்டது. புதுமைப்பித்தனையே படிக்கிற மாதிரியான உணர்வவைத் தரும் அசல் திருநெல்வேலி வட்டார வாழ்வு முறை, சொல்லாட்சிகள் கொண்ட படைப்பு. இசக்கியாப் பிள்ளை என்பவரின் இளமை முதல் அவரது ஈடேறாத காதலின் மறுபிறப்பு ஈறாக, மரபுவழிப்பட்ட எதிர்பார்ப்பு, பெற்றவரால் கிட்டும் ஏமாற்றம், நிறைவேறாத காதலின் உயிர்ப்பு பற்றிய கனவு என கதை விஸ்தார மாக ரசமாகப் பின்னப்பட்டுள்ளது. டில்லி வாழ்வில் பிணைக்கப்பட்ட தமிழ்நாடு இளைஞனின் சுயபரிதாபத்துக்கு சற்றும் குறைவில்லாமல் திருநெல்வெலி கிராமத்து இளைஞனுக்கும் ஏற்படும் விரக்தி, எங்கும் எதிலும் பிடிப்பில்லாத மனப்போக்கு, தன்னையே தண்டித்துக் கொள்ளும் கோபம், எல்லோர்மீதும் ஏற்படுகிற கோபம் என ஆதவனின் எல்லாக் கதைகளையும் போலவே இதுவும் விரக்தியின் கசப்பையே அதிகமும் காட்டுகிறது. இவ்வுணர்வு திரும்பத் திரும்ப அவரது எல்லாப் படைப்புகளிலும் காணப்பட்டாலும், யதார்த்தமான வாழ்வின் சித்தரிப்புகளாலும் அவரது ரசனை மனதின் கூர்மையான அவதானிப்புகள் தரும் வாசிப்பு சுகத்தாலும் அது ஒரு குறையாகப் படவில்லை. கதையினூடே வரும் தலவருணைகள் அற்புதமானவை.

உதாரணத்துக்குச் சுட்டுவதானால்: காந்திமதி என்பவளின்மீது கொண்ட இளம் பருவத்து நேசம் அவள் மீது காதலாகப் பரிணமித்து, பெற்றவர்களின் கௌரவப்பிரச்சினையால் அக்கனவு தகர்க்கப்பட்டு இருவரும் வெவ்வேறு துணையுடன் பிணைக் கப்பட்டு, வாழ்க்கை திசை மாறிப்போய் இருவரும் தம் துணையின்றி வாழும் சூழ்நிலை யில், விதியின் விளையாட்டு மீண்டும் அவர்களை நெருங்கச் செய்கிறது. கணவனால் கைவிடப்பட்ட காந்திமதி, மனைவியை இழந்த இசக்கியாப் பிள்ளையைப் பார்க்க குற்றாலத்திலிருந்து அழைக்கிறாள். அவளது அழைப்பைப்பற்றிச் சிந்திக்கிற பிள்ளையின் மனவோட்டம் இப்படிச் சித்தரிக்கப்படுகிறது: 'சோ'வேன விழும் குற்றாலம் நீர்வீழ்ச்சி அவர் கற்பனையில் தெரிந்தது. நதி தன் பாதையில் வரும் மலையைத் தழுவி வசப் படுத்திக் கொள்ள முயலுகையில் நீர்வீழ்ச்சி உண்டாகிறது. தன் பாதையில் குறுக்கிடு பவற்றை அரவணைத்துக்கொள்ளத்தான் நதி முயலுகிறதே தவிர எதையும் அணைத்துக் கொள்வதற்கென்று தன் போக்கைவிட்டு விலகிச் செல்வதில்லை. மலை இல்லாவிட்டால் அது சமவெளியில் ஓடிக் கொன்டிருப்பதில்தான் நதியின் அழகும் கம்பீரமும் இருக்கிறது. பெண்கள் கூட நதியைப் போன்றவர்கள்தாமோ? ஆனால் நதிகள் கரைகளுக்கிடையில் செல்லும்போது மதிப்புப் பெறுகின்றனவென்றால், மலைகளும் தனியே இருக்கும்போது தானே மதிப்புப் பெறுகின்றன?'

கடைசியில் மலை நதியை நோக்கிப் போகிறது என்பதாகக் கதை முடிகிறது. வழக்கமான நகர்ப்புறச் சிந்தனைக்கு மாற்றாக இக்கதையில் கிராமத்து வாழ்வினைச்
சித்தரித்திருக்கிறார் ஆதவன்.

'பெண், தோழி, தலைவி' என்கிற கடைசிக் குறுநாவல் நடுத்தர வர்க்கத்துப் பெண் ஒருத்தி வேலைக்குப் போவது, அங்கு அவளுக்கு ஏற்படுகிற அனுபவங்கள் பற்றியும் வீட்டில் உள்ளவர்களுக்கு அவள் பெண்ணாகவும், அலுவகத்தில் உள்ளவர்களுக்குத் தோழியாகவும், பின்னர் அலுவலக சங்கத்தின் தலைவியாகவும் படிப்படியாய் பரிணாமம் பெறுவது பற்றியும் சொல்கிறது. லல்லிக்கு அலுவலகத்தில் சக ஊழியர்களான பெண்களின் வம்புப் பேச்சும், நேர் மேலதிகாரியான செல்வராஜ் என்பவனின் ஒட்டாத போக்கும் ஆரம்பத்தில் சுவாரஸ்யமற்றதாக இருந்தாலும் போகப் போக அவளுக்கு நடைமுறை அலுவலக யதார்த்தம் புரிந்து சுவாரஸ்யம் ஏற்படுகிறது. செல்வராஜைப் பற்றி மற்றவர் உருவாக்கும் சித்திரம் மெல்ல மெல்ல நாளடைவில் கலைந்து அவனிடம் ஒரு ஈர்ப்பு ஏற்படுவதும் பின்னர் அவள் ஏகமனதாய் சங்கத் தலைவியாய் ஏற்கப்படுவதுமான நிகழ்ச்சிகள் ஆதவனின் வழக்கமான விரக்திப் பாணியில் இல்லாமல் ஆரோக்கியமான நம்பிக்ககயூட்டும் வாழ்வின் பதிவுகளாகக் கதை வளர்ந்து நிறைவு பெறுகிறது.

ஆதவனின் படைப்புகளில் நமக்கு இனிய வாசிப்பு அனுபவம் கிட்டினாலும் ஏன் அவர் வாழ்வின் நம்பிக்கை வறட்சியையே அதிகமாகச் சித்தரிக்கிறார் என்று அவர் மீதான அனுசரணை மிக்க ஒரு அனுதாபம் ஏற்படுவதை தவிர்க்க முடியைவில்லை. அதற்குக் காரணம் அவரே சொல்வது போல "நானென்ன, என்னிடமிருந்தே தப்ப முயன்று கொண்டிருக்கிறேனா, அல்லது என்னைக் கண்டுபிடிக்கவா?" என்பதுவாக இருக்கக் கூடுமோ என்றே சிந்திக்க வைக்கிறது. 0

நூல் : இரவுக்கு முன்பு வருவது மாலை.
ஆசிரியர்: ஆதவன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.
விலை : ரூ. 120/-

Sunday, February 01, 2009

அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்

மக்களைப் பைத்தியமாக அடிக்கும் சினிமா என்கிற கனவுலகம் பற்றி
சுஜாதா எழுதிய 'கனவுத் தொழிற்சாலை' தொடர் 'ஆனந்தவிகடனி'ல் வெளியானதற்கு
வெகு காலத்துக்கு முன்பே அறுபதுகளில் 'தீபம்' இதழில் சினிமா உலகம் பற்றி,
திரு.அசோகமித்திரன் அவர்கள் எழுதிய 'கரைந்த நிழல்கள்' என்கிற நாவல் தொடராக
வெளியானது. முழு நேர எழுத்தாளராக ஆவதற்கு முன்னால் கொஞ்ச காலம் ஜெமினி ஸ்டுடியோவில் பணியாற்றிய காலத்து அனுபவங்களை மிகை என்று எண்ண முடியாத
யதார்த்தத்துடன் ஆசிரியர் இந்நாவலில் பதிவு செய்துள்ளார். நாவல் இரத்தமும்
சதையுமாய் ஜீவனுடன் இருப்பதற்கு ஆசிரியரின் வெகு இயல்பான தனித்துவம் மிக்க
நடையே காரணமாய் உள்ளது.

'கரைந்த நிழல்கள்' வெறும் சினிமாவைப் பற்றி மட்டும் பேசுகிற நாவல் அல்ல.
சினிமா என்கிற மாய உலகத்தின் பிரமிப்புகளினூடே மறைந்து கிடக்கும் ஏமாற்றங்கள், இழப்புகள், வலிகள், கண்ணீர் என்று - அதில் பரிச்சயம் இல்லாத நம்மால் கற்பனை செய்ய முடியாத சோகங்க¨ளையும், முகமறியாத மனிதர்களின் காலநேரப் பிரக்¨¨ஞையற்ற உழைப்புகள் அர்த்தமற்று, அடையாளமற்றுப் போகிற பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல் ஆகும்.

கதை என்னவென்று கேட்டால உடனே சொல்லிவிட முடியாதுதான். இதில் ஒருவரது கதையல்ல - பலரது கதைகளும் பிணைந்துள்ளன. படப்பிடிப்பில் சகலத்துக்கும் பொறுப்பாய் உள்ள மிகக் கஷ்டமான பணியேற்றிருக்கும் 'சந்திரா கிரியேஷனி'ன்
புரொடக்ஷன் மானேஜர் நடராஜன், விடிய இன்னும் வெகு நேரம் இருக்கும்போதே
அன்று மாமண்டூர் அருகே நடக்க உள்ள 'அவுட்டோர் ஷ¥ட்டிங்கு'க்குப் புறப்படுவதில்
நாவல் தொடங்குகிறது. வீட்டிலிருந்து கம்பனிக்காரில் கிளம்பி ஸ்டூடியோவுக்குப்போய், அங்கு படப்பிடிப்பு உபகரணங்கள், அன்றைய படப்பில் குழுவாய் நடனமாட வேண்டிய துணை நடிகைகள் ஆகியோரை படப்பிடிப்பு ஸ்தலத்துக்கு வேன்களில் ஏற்றி அனுப்பிவிட்டு,
பட முதலாளியிடம் காட்டமுடியாத கோபத்தை புரொடக்ஷன் மானேஜரிடம் காட்டுகிற டைரக்டர், காமிராமேன், மோசமான சாலையில் வண்டியை ஓட்ட முனகும் டிரைவர்
ஆகியோரைச் சமாளித்து, படப்பிடிப்பின் இடையே எல்லோருக்கும் சாப்பாடு ஏற்பாடு செய்துவிட்டு, சரியான நேரத்துக்குப் போய்ச் சேர்ந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு
திரும்புகிற - ஒரு சதாவதானியின் சாகசத்தை ஒத்ததாய் செயல்படுகிற புரொடக்ஷன்
மானேஜர் படும் பாடுகளைப் படிக்கும்போது 'பாவி மகன் படுந்துயரம் பார்க்கொணாதே' என்றுதான் பாடத் தோன்றும்.

வெளிப்புறப் படப்பிடிப்பு முடிந்து ஸ்டூடியோவுக்குள் நடைபெறும் படப்பிடிப்புக்கு எல்லோரும் வந்து காத்திருக்கிற நிலையில், உடம்பு சரியில்லை எனப் பொய்க்காரணம்
சொல்லி முக்கிய நடிகை வர மறுத்து விடுகிறாள். பட முதலாளியே நேரில் போய் மிரட்டியும் தன்னை நடிகையாக்கிய அவருக்கும் தண்ணிக் காட்டிவிட, படப்பிடிப்புமல்ல படத்தையே
நிறுத்திவிட நேர்கிறது. அதனால் படத் தயாரிப்பாளர் மட்டுமின்றி - அது சார்ந்த அனைவருமே நொடித்துப் போகிறார்கள். படத்தின் முக்கிய பொறுப்பாளனாய் அயராது உழைத்த புரொடக்ஷன் மானேஜர் பிச்சை எடுக்கு நிலைக்குத் தள்ளப்படும் பரிதாபத்தையும் கண்டு அதிர்கிறோம்.

தொடர்ந்து அந்தப் படத்தை வாங்கி முடிக்க எண்ணும் 'விநாயகா ஸ்டுடியோ'
உரிமையாளர் ராம அய்யங்காரது கதையும் சினிமாவால் சீரழிபவர்கள் பற்றிய இன்னொரு சோகச் சித்திரம்.

ஒரு திரைப்படம் முழுமையான பிறகு தியேட்டரில் கண்டு பரவசப்படும் நமக்கு, அதன் பின்னணியில் வாழ்வின் கனவுகளைச் சிதைத்துகோண்டு உருக்குலைகிற வர்க்கத்தின் துயரம் தெரிவதே இல்லை. கவி மில்டன் சொன்னது போல, ரோஜாவின் அழகு மட்டுமே
நம் கண்களுக்குத் தெரிகிறது; அதைப் பயிரிட்டு, பறித்து விற்பனை செய்கிறவர்கள்
அனுபவித்த வலிகள் நமக்குத்தெரிவதில்லை. அந்தப் பரிதாப யதார்த்தத்தை நாவல் படம்
பிடித்துக் காட்டுகிறது. இத்தனைக்கும் - கனமான, அடுக்கு மொழிஅலங்காரம், பரபரப்பு, அதிர்ச்சி எதுவுமற்ற லகுவான- அவருக்கு மட்டுமே சாத்யமாகியுள்ள அற்புத மொழிநடையில் அசோகமித்திரன் இந்த நாவலை எழுதி, வாசிப்பவர்களை நெகிழ்ச்சி கொள்ளச்
செய்துள்ளார். நமது கற்பனைக்கும் மாறான வேறு உலகத்தின் நிஜங்கள் பற்றி அறிந்து
அதிர்கிறோம்.

நாவலில் அசோகமித்திரனின் பாத்திரப்படைப்புகள் கச்சிதமானவை. வெகு
இயல்பானதாய், நாம் தினசரி பார்க்கும் மனிதர்களின் வாழ்வை மிகைப்படுத்தாமல் நாம்
ஏற்கும் வகையில் சித்தரிப்பதாய் அமைந்துள்ளன. புரொடக்ஷன் மானேஜர் நடராஜனின் முமுணுக்காத, எதற்கும் அலட்டிக் கொள்ளாத, கனவுகளற்ற வாழ்க்கை இறுதியில்
சிதைந்து போவதை திடீர் அதிர்ச்சியாய்த் தராமல், நாவலின் இறுதியில் ஒரு பேச்சுக்
கிடையே வாசகர் அறிந்து கொள்கிறமாதிரியான பாத்திர வார்ப்பு நம்மை வியக்க
வைக்கிறது. படத் தயாரிப்பாளர்களும் நமக்கு வெளியே தெரிகிறமாதிரி மகிழ்ச்சியாய்,
குடும்ப வாழ்வில் நிம்மதியாய் இல்லாத நிஜத்தை - ரெட்டியார், ராம அய்யங்கார்
ஆகியோரின் பாத்திரப் படைப்பின் மூலம் அறிகிறோம். தாமஸ்ஹார்டி நாவலில் வருவது
போன்று, ஊழ் மனிதனின் வாழ்வில் எப்படிப் புகுந்து சழற்றி அடிக்கிறது என்பதையும் -
ஆசிரியர் கூற்றாக அல்லாமல் - இவர்களது வாழ்க்கைச் சித்தரிப்பின் முலம் வாசகன்
தானாக உணர்ந்து கொள்ளச் செய்திருப்பது அவரது எழுத்தாற்றலைக் காட்டுவதாகும்.

சின்னச் சின்னப் பாத்திரங்கள் கூட - சண்டித்தனம் பண்ணும் நடிகை
ஜயசந்திரிகா, அவளது தாயார் தனபாக்கியம், நடேச மேஸ்திரி, எடுபிடி ஆளாய்
இருந்து படத் தயாரிப்பாளராகும் சம்பத் என்று அனைவருமே - ஒரு கைதேர்ந்த
ஓவியன் சின்னச் சின்ன தூரிகைத் தீற்றலின் மூலம் முழு உருவமாக்கிக் காட்டி விடுவது
போல - சிறு நிகழ்வுகளையும் விடாது நுணுக்கமாய்க் கவனித்து சிறப்பான சித்திரங்களாய் ஆக்கி விட்டிருப்பதின் மூலம், நம் மனதில் நீங்கா இடம் பெறச் செய்திருக்கிறார்.

வருணனைனகளிலும் சின்னச் சின்ன விவரங்களையும் விட்டுவிடாமல் பதிவு செய்து ஒரு படக்காட்சியைப் பார்ப்பது போலவே சித்தரித்துள்ளது புதிதாக எழுத வருபவர்களுக்கு உதவும் குறிப்புகளாகும்.

மொழிநடை, பாய்ந்து பரபரவெனச் செல்வதில்லை என்றாலும். கதை வளரும்போது ஒரு துப்பறியும் நவீனம் போல் அடுத்து என்ன நிகழப் போகிறது என்பதை அறியத்துடிக்கிற ஆவலை உண்டாக்கி நாவலின் வாசிப்பு வேகத்தை உயர்த்திவிடுகிறது. அவரது நகைச்சுவை உணர்வும் ரசிக்க வைப்பது. அவரது சிறுகதைளில் மெலிதாய் வாசகனை மென் முறுவல் பூக்க வைக்கிற மாதிரி இந்த நாவலிலும் பல இடங்களில் காண்கிறோம். உதாரணத்துக்கு ஒரு இடம்: 'அவள் இன்னும் நட்சத்திர நடிகை ஆகிவிடவில்லை. ஒல்லியாகத்தான்
இருந்தாள். முகம், உடல், சருமம் எல்லாம் இன்னும் விசேஷமான, அபரிமிதமான சத்துள்ள உணவு உட்கொள்வதன் மூலம் ஏற்படும் மினுமினுப்பு இல்லாமல், ஒரு குழந்தைக்குத்
தாயான ஒரு நடுத்தர வீட்டுப் பெண்மணியினுடையது போல் இருந்தது'.

பலரும் கிராமம் சார்ந்த, வட்டாரக் கதைகளையும் மாந்தர்களையும் பதிவு செய்து வருகையில் - நகரம் சார்ந்த, குறிப்பாக சென்னை சார்ந்த நடுத்தர மக்களின்
வாழ்வின் ஆசாபாசங்கள், நிறைவேறாத அபிலாஷைகள், எப்போதும் எதிலும் நிறைவு
காணாத நடைமுறை வாழ்க்கை, அவற்றின் எதிர்வினைகள் போன்றவற்றைச் சித்தரிக்கும்
மாநகரக் கதைகளை எழுதி தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர் அசோகமித்திரன். அந்த மாநகர வாழ்வின் ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை, அதன் அவலத்தை இந்த நாவலிலும் அற்தமாய்ப் பதிவு செய்திருக்கிறார்.

பல இடங்களில் அவர் நேரடியாகப் பேசிவிடுவதில்லை என்பதால் வாசிப்பவன்
சூழ்நிலையைப் புரிந்து கொள்ள சிரமப்பட நேர்வதைக் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை.
வாசகன் பலவற்றைத் தன் யூகத்தால் மட்டுமே உணர வைக்கும் எழுத்து அவருடையது.
இந்த நாவலிலும் அப்படிப் பல நிகழ்வுகளின் முடிவுகளை வாசகன் யூகத்தால் உணர்ந்தே
நிறைவு கொள்ள நேர்கிறது. அது ஒரு குறையாக இல்லாமல் அசோககமித்திரனின்
தனித்தன்மையின் ஒரு உக்தியாகவே அதனை ஏற்றுக் கொள்ள முடிகிறது.

நூல்: கரைந்த நிழல்கள்.
ஆசிரியர்: அசோகமித்திரன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம், சென்னை.

----- 0 -----

'எதிர்காலம் என்ற ஒன்று' - அச்சம் அல்லது நம்பிக்கையின் பிரதிபலிப்புகள்

ஜூல்ஸ்வெர்ன் என்பவர் 1873ல் எழுதிய 'பூமியின் மையத்துக்கு ஒரு பயணம்'
என்கிற அறிவியல் கற்பனைப் புதினம்தான் இன்றைய அறிவியல் புனைகதைகளுக்கெல்லாம் முன்னோடி. 'க்ரிப்டாலஜி' என்னும் துறையை யாரும் அப்போது கனவுகூடக் கண்டிருக்க
வில்லை. ஆனால் ஜூல்ஸ்வெர்ன் 'க்ரிப்டாலஜி'யின் நுணுக்கங்களைக் கிட்டத்தட்ட அப்படியே எழுதி விட்டார். இன்று 'க்ரிப்டாலஜி' ஒரு முக்கிய துறை. ராணுவ அதிகாரிகள், நிறுவனங்கள், புலனாய்வு அதிகாரிகள் என்று பலரும் புலனாய்வில் சங்கேதக் குறியீடுகளை அனுப்பும் சவாலான பணி இது. இதுபோன்று, கற்பனை நிஜமாகும் சாத்தியத்தை அறிவியல் புனைகதைகள் நிரூபித்துள்ளன.

எனக்குத் தெரிந்தவரை, நாற்பதுகளில் வெளிவந்த டாக்டர் மு.வரதராசனாரின்
'கி.பி 2000' என்னும் புனைகதைதான் தமிழின் முதல் முழுநீள அறிவியல் புனைவு நூல் எனலாம். கி.பி 2000மாவது ஆண்டில் தமிழகம் எப்படி இருக்கும் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டாரோ அதைக் கற்பிதமாக எழுதினார். அதில் அவர்
கொண்ட நம்பிக்கைகள் - மனிதனை மனிதன் இழுக்கும் நரவாகனமான கைரிக்ஷா ஒழிய வேண்டும், பள்ளிகளில் தொலைக்காட்சி மூலம் பாடம் கற்பிக்கப்பட வேண்டும் போன்றவை - அவர் காலத்திலேயே நிறைவேறத் தொடங்கி விட்டன.

ஐம்பதுகளில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு திரைப் படத்தில் 'ஐம்பதும் அறுபதும்' என்று ஒரு கற்பனையை மதுரத்துடன் இணைந்து காட்சிப் படுத்தினார். மதுரம் அடுக்களையில் பெண்களுக்கு வேலைப்பளு குறைய, எல்லாம் எந்திர மயமாக வேண்டும் என்று கேட்பார். அது இன்று நிறைவேறி விட்டது. ஏன் ராமாயணத்தில் ராவணன் சீதையை புஷ்பக விமானத்தில் தூக்கிச் செல்வதும், சீவகசிந்தாமணியில் சீவகன் மனைவி விசையை மயிற்பொறியில் ஏறித் தப்புவதும் இன்றைய வானஊர்திகளின் கற்பனைதானே?

மேலைநாடுகளில் சென்ற நூற்றாண்டுகளிலேயே ஹெச்.ஜி.வெல்ஸின் 'காலஇயந்திரம்', 'உலகங்களுக்கிடையேயான போர்' போன்ற அறிவியல் புனைகதை நாவல்கள் எழுதப்பட்டு, திரைப்படங்களாகவும் வந்து 'மக்களை இப்படியும் நடக்குமா?' என்று அதிர வைத்தன. அத்தகைய நாவல்கள், திரைப் படங்களில் கண்ட - விண்வெளி நிலையங்கள், ரிமோட் கண்ட்ரோல் போன்றவை இன்று நிஜமாகி விடவில்லையா? இத்தனைக்கும் இப்படிக் கனவு கண்டவர்கள் விஞ்ஞானிகள் அல்லர். அவர்கள் எழுத்தாளர் கள். வாழ்க்கையின் அச்சம் அல்லது நம்பிக்கைகளைத்தான் அவர்கள் எழுதினார்கள். அவை பின்னாளில் நிஜமானவை அதிகம். அதே போல இந்த 'எதிர்காலம் என்ற ஒன்று' - என்று 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டிருக்கும் அறிவியல் புனைகதைகளின் தொகுப்பும் வித்தியாசமான, பிரமிப்பூட்டுகிற, பயமுறுத்துகிற கற்பனைகளைக் கொண்டதாய் மனிதர்களின் 'அச்சம் அல்லது நம்பிக்கை'யின் வெளிப்பாடாக அமைந்துள்ளது.

'திண்ணை.காம்' மற்றும் 'மரத்தடி குழுமம்' நடத்திய 'அறிவியல் புனைகதைப் போட்டி'
யில் பரிசு பெற்ற கதைகள் மற்றும் போட்டிக்கு வந்தவைகளில் தேர்ந்தெடுக்கப் பட்ட கதைகளை 'எதிர்காலம் என்ற ஒன்று' என்ற தலைப்பில் திரு.கோ.ராஜாராம் தொகுத்தளித்
திருக்கிறார். இந்த நூல்தான் தமிழில் பலஎழுத்தாளர்களின் அறிவியல் சிறுகதைகளின்
முதல் தொகுப்பு என்கிறது பதிப்புரை.

இத்தொகுப்பில் 21 புனைகதைகள் உள்ளன. எல்லாமே விதம் விதமான கற்பனைகள். இனிய அதிர்ச்சியும் பிரமிப்புமாய் புருவத்தை உயர்த்த வைப்பவை. முதல் கதை, சுஜாதாவை அடுத்து அறிவியல் புனைகதைப் படைப்பில் குறிப்பிட்டுச் சொல்லத் தக்கவரான
திரு.ஜெயமோகன், போட்டிக்கு முன்னதாக 'திண்ணை'யில் எழுதிய கதையான 'நாக்கு' என்பது. அவரது பெயர் ஏற்படுத்துகிற அதிர்ச்சி பல என்பதற்கேற்ப இந்தக் கதை தரும் செய்திகளும் அதிர்ச்சியளிப்பவை. ஒரு கடுமையான பஞ்ச காலத்தில் ஈராக்கில் மனிதர் களையே கொன்று தின்கிற நிலை ஏற்பட்டது என்பதும் இப்போதும்கூட வெளியே தெரியாமல், ருசிகண்ட சில நரமாமிச பட்சிணிகள் இருக்கவே செய்கிறார்கள் என்பதும் தலையை உதற வைப்பவை. கதை முடிவும் அதிர்ச்சி தருவது.

அடுத்த இரு கதைகளும் திரு.ராமன்ராஜாவால் மொழிபெயர்க்கப்பட்டுள்ள - இன்று ஆங்கில அறிவியல் புனை கதைகளில், சிக்கலான மரபணு கதைகளுக்குப் பெயர்போன
நான்ஸி க்ரெஸ் என்பவரின் 'ஜீன் திருடனின் விநோத வழக்கு', 'நாலாவது குழந்தை' என்கிற கதைகளாகும். முதல் கதை மரபணுத் திருட்டு பற்றியது. ஒருவனது மரபணுவைத் திருடி
விஷக்காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடித்த கம்பனி, உரிமையாளனுக்கு நியாயமாகச் சேர வேண்டிய பங்குத்தொகையைக் கொடுக்காமல் தப்பிக்க வேண்டி, அவன் நீதிமன்றத்துச் செல்லுமுன் அவன் மீது வழக்குத் தொடுக்கிற சுவாரஸ்யமான கதை. பத்திரிகைச் செய்தி, கடிதங்கள், மெமொக்கள் மூலம் கதை சொல்லப்பட்டுள்ளது. இரண்டாவது கதை
'குளோனிங்' பற்றியது. கருக்களை குளிர்பதனப் பெட்டியில் சேமித்து வைக்கும் சாத்தியம் பற்றிய கற்பனை. இருக்கிற குழந்தை நம் எதிர்பார்ப்பின்படி உருவாகாவிட்டால் அது போல இன்னொன்றை உருவாக்கிக் கொள்ளலாம் என்கிறது கதை.

அடுத்தது முதற்பரிசு பெற்ற திரு.சேவியர் என்பவரின் 'ஏலி ஏலி லாமா சபக்தானி' என்பது. 'கால இயந்திரம்' போல ஒரு பின்னோக்கிய காலத்துக்குப் பயணப்படுவது பற்றியது.
இந்தக் கதை 'ஏசுநாதர் சிலுவையில் அறையப்பட்டது தடுக்கப்பட்டு பாரபாஸ் சிலுவையில் அறையப்பட்டிருந்தால்?' என்ற கேள்வியை எழுப்பி அதனால் உலகில் எத்தகைய மாற்றங்கள்
நிகழ்ந்திருக்கும் என்று நம்மைக் கற்பனை செய்ய வைக்கிறது.

இரண்டாம் பரிசைப் பகிந்து கொள்ளும், தலைப்புக் கதையான 'எதிர்காலம் என்ற ஒன்று' திரு.ரெ.கார்த்திகேசு எழுதியது. ஏற்றுக் கொள்ளக்கூடிய போர்க்காலக் கொலைகள், அழிவுகளை நியாயப்படுத்துகிற எதிர்கால விபரீதத்தை சுட்டிக் காட்டிப் பயமுறுத்துகிறது கதை.

இரண்டாம் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் மற்றொரு கதையான 'வானத்திலிருந்து வந்தவன்' திரு.நளினி சாஸ்திரி எழுதியது. வேற்று கிரகத்து மனிதர்கள் பற்றியது. வேற்று
கிரகத்திலிருந்து வரும் உயிரினம் ஒன்றை வரவேற்கக் காத்திருப்பது பற்றி வித்தியாசமாக கற்பிதம் செய்து நகைச்சுவையுடன் சஸ்பென்ஸை உடைக்கிறது. வரும் விருந்தாளி மனிதன் தான் என்பதும் காத்திருப்பது நம்முடைய முன்னோர்களான குரங்குகள்தாம் என்பதும்
சுவாரஸ்யமான கற்பனை.

கணினியில் புரோகிராம் எழுதுகிற சிலரின் வக்கிரமான முயற்சிகள் வெற்றி பெற்றால் என்று ஆகும் என்று பயங்காட்டுகிறது அருண்வைத்தியநாதனின் 'பிம்ப உயிர்கள்'.

முன்றாம் பரிசைப் பகிர்ந்து கொள்ளும் என்.சொக்கனின் 'மழலைச்சொல் கேளாதவர்' என்கிற கதை குழந்தைகளே இல்லாத எதிர்காலத்தைக் கற்பனை செய்கிறது. உதவிக்கு என்று நாம் கண்டுபிடித்திருக்கிற ரோபோ போன்றவை எப்படி நமக்கு உபத்திரவமாகக் கூடும் போன்ற எதார்த்தத்தைச் சுட்டுகிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கும் செலவினங் களைக் குறைக்கும் அரசின் திட்டத்தின் புதிய உத்தரவின்படி எட்டரை மாதத்தில் ஒரு ஊசி போடப்பட்டு, பிறந்த உடனே பதினாறு வயது பிள்ளையாய் வளர்வதன் மூலம் நாட்டின் செலவினங்களைச் சேமிக்கலாம் என்கிற அரசின் நோக்கத்துக்கு, பெற்றவர்கள் தர வேண்டிய விலையை அதிர்ச்சி தரும் கற்பனையில் காட்டுகிறது.

திரு.துக்காராம் கோபால்ராவின் 'ஒரு சொட்டு இரும்பு', 'மரபணு', 'மூன்றாவது
தோல்வி' என்னும் மூன்று கதைகளும்கூட சிந்தனையைத் தூண்டும் புதிய கற்பனைகள்தாம். 'இயந்திரங்கள் மனித உணர்வுபெறும் அளவிற்குத் தொழில் நுட்பம் ஏற்பட்டுவிட்டால்
எதிர்கொள்ள நேரும் பிரச்சினையைக் கோடி காட்டுகிறது 'ஒரு சொட்டு இரும்பு'. இதுவரை அறிவியல் தொடக்கூடாது என்று தடை செய்யப்பட்டிருந்த மரபணுத்துறையில் இன்று அறிவியலையும், தொழில் நுட்பத்தையும் திணிக்க முயலும் அறிவியலாளர்களையும், அரசியல்வாதிகளையும் எதிர்க்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது 'மரபணு' என்கிற கதை. 'உலகங்களுக்கிடையேயான போர்' கதையைப் போல விண்வெளி யுத்தம் ஒன்றை,
கணினி விளையாட்டாய்க் காட்டி, மூளைச்சலவைக்குள்ளான முகமறியாப் போர் வீரர்கள் முகமறியா எதிரிகளுடன் போரிடத் தூண்டக்கூடிய அபாயகரமான தளத்தைக் காட்டுகிறது 'மூன்றாவது தோல்வி'.

திரு.நாகரத்தினம் கிருஷ்ணா இரண்டு கதைகள் எழுதி இருக்கிறார். 'ஆபரேஷன்
மஹாசங்காரம்' என்கிற கதை, கணினியில் 'மென்பொருள் செயலி' எழுதுவர்களின்
வக்கிரமான சிந்தனைகள் பற்றியது. உலகமனைத்தும் ஒரே காலத்தில் அழிவதான 'மகா சங்கார'த்தில் இவர்கள் திட்டமிட்டிருப்பது - சீனாவில் சார்ஸ் நோயினைப் பரவச் செய்வது, ஈராக் மீது பிரிட்டிஷ் அமேரிக்கத் தாக்குதல், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்கள் தகர்ப்பு போன்ற உலகை உலுக்கிய அழிவுகள். 'அமலா..விமலா..கமலா' என்கிற கதை குளோனிங்கின் எதிர்காலம் பற்றிய ரசமான கற்பனை. விறுவிறுப்பான கதை ஒட்டம்,
நறுக்குத் தெறித்த மாதிரியான சொல்பிரயோகங்கள் வாசிப்பை சுவாரஸ்யமாக்குகின்றன.

திரு.சன்னாசி எழுதியுள்ள 'பிறழ்ந்த குறிப்புகள்' வயது பின்னோக்கி வளர்வதன்
பிரச்சினையக் கற்பனை செய்கிறது. 'ஒருத்தி பிறக்கும்போது வயது 60. அதற்குப் பின் அவளது வயது இன்னும் குறையத் தொடங்கியபோதுதான் அந்தக் கேள்வி எழுந்தது.
கிழவியாக இருந்து வயது குறைந்து இளம் பெண்ணாக மாறிப் பின்னும் வயது குறைந்து
சிறுமியாகிப் பின்னும் வயது குறைந்து குழந்தையாகிப் பின்னும் வயது குறைந்து....?' - என்று
எப்படியெல்லாம் கற்பனை செய்கிறார்கள் என்று புருவம் உயருகிறது.

திரு.மண்ணாந்தை என்பவரின் 'பழைய ஆல - விதைக்கதை' தாயுமானவர் சொல்லும் அட்டமா சித்திகளில் ஒன்றான 'ககனத்தில் உலாவலாம்' போல அண்டங்களில் எல்லாம் உலாவுகிற கற்பனை. விண்வெளியில் மற்ற கிரகங்களில் கிடைக்கும் உலோகங்களை அறிந்து அங்கு நம் குடியேற்ற சாத்தியம் பற்றியெல்லாம் பேசுகிறது.

'மூளை மாற்று ஆராய்ச்சி' என்கிற கதையில் திரு.நா.சுவாமிநாதன் மூளைமாற்று அறுவை சிகிச்சையின் எதிர்காலம் பற்றிக் கற்பனை செய்கிறார். மனிதக்குரங்குகளுக்கு
மனிதமூளையைப் பொருத்தி ஆபத்தான காரியங்களுக்குப் பயன்படுத்துவதன் விளைவுகளைப் பற்றிய விபரீதக் கற்பனை.

திடுமென ஒரு திருப்பத்தைத் தரும் 'பால்பேதம்' என்கிற கதையில் திரு.மீனாக்ஸ்
அதிர்ச்சியோடு மென்னகை பூக்கவும் வைக்கிறார். பயணத்தின்போது எதிரே பேசிக்
கொண்டிருக்கிற இ¨ளைஞன் 'செக்ஸ்சேஞ்ச்' ஆபரேஷனுக்குக்குப் பின் ஆணாக
மாறியுள்ள தன் மகள்தான் என்று கதைசொல்லி அறிகிறபோது நமக்கும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இத்தொகுப்பின் நீண்ட கதையான 'பகல் நிலம்' இன்னொரு வகையான பயத்தைத் தோற்றுவிக்கிறது. 'புவியீர்ப்பு மையவிலக்குவிசை' இல்லாமல் போய் புவியீர்ப்பு கொஞ்சம் அதிகமாகி விட்டால்......' என்று கற்பனை செய்திருக்கிறார் திரு.சீராளன். புவியின் ஒரு பக்கம் மட்டுமே சூரியனைப் பார்த்து சுற்றி வருவதும் அதனால் ஒர் பக்கம் முழுதும்
நிரந்தரப் பகலாகவும், மறுபாகம் முழுதும் நிரந்தர இரவாகவும் மாறிவிட்டதால் நாட்கள் என்பதே இல்லாமல் போய்விடுவதும், இருண்ட பகுதியில் ஆச்சரியமான, அபாயகரமான பூச்சிகள் பெருகி பகல்பகுதிக்கும் நகர்ந்து மக்கள் வாழமுடியாத நிலை எழுவதுமான பயங்கரம் எலும்புக் குருத்தையும் அதிர வைக்கிறது. இது தொடர்ந்தால் இன்னும் என்னென்ன சிரமங்கள் ஏற்படும் என்பதை எல்லாம் ஒரு துப்பறியும் நவீனத்தின் விறுவிறுப்
போடு சொல்கிற கதை, முடிவில் நின்றுபோன பூமி கம்ப்யூட்டர் வைரஸ் மூலம் மீண்டும் பழையநிலைக்குத் திரும்புவதைச் சொல்லி வாசிப்பவரை ஆசுவாசப் படுத்துகிறது.

காலையில் கண்விழித்ததும் ஒருவனுக்கு, கனவோ என்று மருளும்படி உலகில் அவனைத் தவிர யாரும் இல்லாமல் போவதும் அது ஏன் எப்படி என்று குழம்புவதுமாய் கதையைச் சொல்லி முடிவையும் குழப்பத்தில் விடுகிறது திரு.இரா.மகேசனின் '14-10-2010' என்கிற கதை.

உலகின் பல்வேறு நாடுகளிலிருந்து தவல்களைச் சேகரித்து, அதில் இருந்து புதிய - இதுவரை கண்டுபிடிக்காத, மனிதகுலத்துக்கு பயனுள்ள உண்மைகளைக் கண்டறிய முயலும் 'ஐ.டி.சி இன்டர்நேஷனல் டேட்டா கன்சார்ட்டியம்' செய்யும் ஆய்வையும் அதன் முடிவையும் பற்றிச் சொல்கிறது திரு.நந்தன் எழுதியுள்ள 'சம்பவாமி யுகே யுகே' கதை.

தொகுப்பின் கடைசிக் கதையான 'மரக்கலாஞ்சி மாஞ்சிளா' வின் ஆசிரியர்
திரு.நடராஜன் ஸ்ரீனிவாசனின் கற்பனை இன்னொரு புதிய புதிரைச் சொல்லி விடுவிக்கிறது.
கனவில் மஞ்சள் நிறத்தில் நிழல் வருவதான கற்பனை. அது சாத்தியமா, உண்மை என்ன என்று ஆய்வதாகக் கதை.

படித்து முடித்ததும் ஒரு புதிய, புதிரான உலகில் உலவித் திரும்பிய அனுபவம்
ஏற்படுகிறது. தொகுப்பாசிரியர் திரு.ராஜாராம் பதிப்புரையில் ஆசைப்படுகிற மாதிரி
'எனி இந்தியன் பதிப்பகத்'தின் இந்த நூல் வெளியீடு - அறிவியல் மீதும் அறிவியல் புனைகதைகள் மீதும் தமிழ் வாசகர்களுக்கு ஈடுபாடு கொள்ளச் செய்யும் என்று நிச்சயமாய்
நம்பலாம். 0

நூல்: எதிர்காலம் என்ற ஒன்று.(அறிவியல் புனைகதைத் தொகுப்பு)
தொகுப்பாசிரியர்: கோ.ராஜாராம்.
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.80.

எழுத்துக்கலைபற்றி இவர்கள்: 40. சாலை இளந்திரையன்.

1. சிறுகதையைப் பொறுத்தவரையில், சொல்லுதற்கு ஒரு செய்தி இருந்தால் மட்டும்
போதாது; அதைச் சுவைபடச் சொல்லும் திறமையும் இருக்க வேண்டும்.

2. பல நிகழ்ச்சிகளை வளர்த்துச் செல்வது சிறுகதையின் இயல்பன்று. குறிப்பிட்ட
ஒரு சூழ்நிலை, ஒரு சிறிய கருத்துடன் இணைத்துப் பின்னப்படும் நிகழ்ச்சி இயக்கமே சிறுகதை. அதேபோல் குறிப்பிட்ட ஒரு நிகழ்ச்சி மூலம் ஒன்று அல்லது சில பாத்திரங்
களின் முக்கிய பண்பைச் சுட்டிக் காட்டி விட்டு விடுதலே சிறந்த சிறுகதை.

3. கதையின் தலைப்பு, கதையின் உள்ளீட்டை ஒருவாறு சுருக்கித் தருவதாக இருக்க வேண்டும். அப்போதுதான் ஒரு சிறிய அளவான எண்ணம் படிப்போர் மனதில் எழுந்து, கதையைப் படிக்கத் தூண்டும்.

4. கதையின் இலக்கியப் பண்புக்கும் அதன் தொடக்கத்துக்கும் நெருங்கிய தொடர்பு
இருக்கின்றது. கதையின் தொடக்கம் படிப்போரின் உள்ளத்தைக் கதையின்பால்
கவர்ந்து இழுப்பதோடு சிறந்த சிந்தனை ஆற்றலையும் தோற்றுவிக்கிறது. நன்றாகத்
தொடங்கப்பட்ட கதை ஆசிரியனுக்குப் பாதி வெற்றியைத் தேடித் தந்துவிடுகிறது.

5. சிறுகதையின் இறுதிப் பகுதியில், கதையின் உச்சநிலை பொதிந்த முடிவு அமைகிறது.
உச்சநிலை என்பது கதையின் உள்ளீடு முழுவிளக்கம் பெற்று முடியும் இடம். உச்ச
நிலைதான் கதையின் மிகப் பெரிய கவர்ச்சிப் புள்ளி. அதற்கு முன் உள்ள பகுதி
எல்லாம் படிப்போரின் உள்ளக் கவர்ச்சியை வளர்த்து வருகின்றன; உச்சநிலையில்
அக்கவர்ச்சி வளர்ச்சி பெற்று முடிகிறது.

6. கதையின் முடிவு இன்பியலாகவும் இருக்கலாம், துன்பியலாகவும் இருக்கலாம்;
கதையில் அது வரும் இடம் உச்சநிலையோடு இணைந்தும் இருக்கலாம். அதற்குப்
பிற்பட்டும் இருக்கலாம். ஆனால் அது படிப்போரின் உள்ளத்தை முற்றும் கவர்ந்து அதன் வழியிலே இழுத்துக் கொண்டு போய்ச் சிந்திக்கச் செய்யும் பேராற்றலைப் பெற்றிருக்க வேண்டும்.

7. இறுதியாக, சிறுகதையின் நடை அதன் பாத்திரங்களின் இயல்புக்கேற்ப அமைய
வேண்டும். சாதாரணப் பொது மக்களில் ஒருவனும், இலக்கியம் கற்ற பேராசிரியர்
ஒருவரும் ஒரே நடையில் பேசினால் படிப்போரின் உள்ளத்தில் கதையும் அது சொல்லும்
கருத்தும் பதிய இயலாது. வேறுபட்ட நிலையும், இயல்பும் உடைய பாத்திரங்கள்
வெவ்வேறு நடையில் பேச வேண்டும். பாத்திரத்தின் இயல்பும் அதன் வளர்ச்சியும்
பெரிதும் அதன் பேச்சைப் பொறுத்தது அல்லவா?

----- 0 -----

எழுத்துக்கலைபற்றி இவர்கள்:39. ராஜாஜி

1. சிறுகதை வாமனாவதாரத்தைப் போன்ற கலை உருவம். நல்ல சிறுகதைக்கு
அடையாளம் ஒன்றே: அதைப் படித்து நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும்.

2. நாவல், குறுநாவல், சிறுகதை எதுவானாலும் எழுதும்போது, எழுத்தாளர்கள் தங்களது
படைப்பில் அழுத்தமான 'மாரல்' என்ற ஒன்று இருக்கும் விதத்தில் எழுத வேண்டும்.
'மாரல்' இல்லாமல் எழுதுவது கதையே இல்லை. அவர்கள் அப்படி எழுதுவதைவிட
எழுதாமல் இருப்பதே சிறந்தது.

3. சிறுகதை என்பபது பெருங்கதையை உடைத்தெடுத்த சிறிய துண்டு அல்ல. அது தனிப் பண்பும் முழுமையும் கொண்ட ஒரு இலக்கிய அமைப்பு. சிறிய அமைப்புக் குள்ளேயே அதற்குப் பிரத்தியேகமான ஒரு ஜீவன் உண்டு. ஒரே ஒரு நெருக்கடியை
மையமாக வைத்து அதைச் சுற்றிப் புனையப்படும் இலக்கியம் சிறுகதை. ஒரு குறிப்பிட்ட கருத்ததை அது பளிச்சென்று விளக்கும். இம்மாதிரியான சிறுகதைப் பாணியில்
உபநிஷங்களிலே ஆங்காங்கு காணலாம்.