Wednesday, June 08, 2005

உவமைகள் - வர்ணனைகள் - 40

நான் ரசித்த உவமைகள்- வருணனைகள் - 40

க.நா.சுப்ரமண்யம் படைப்புகளிலிருந்து:

1. ஒருதடவை பி.சுந்தரம் பிள்ளையின் மனோன்மணியத்தைப் பற்றிப் பேச்சு வந்தது. சுந்தரம் பிள்ளையிடம் ஈடுபாடுள்ளவர் வையாபுரிப் பிள்ளை. அவர்தான் தமிழில் மறுமலர்ச்சிக்கு வித்தை ஊன்றியவர் என்கிற நினைப்பு உண்டு அவருக்கு. இலக்கியத் தரமே இல்லாத நூல் என்பது என் கட்சி. நாடகமாகவோ, கவிதையாகவோ, வெறும் கதை என்கிற அளவில்கூட வெற்றி பெறாத நூல். ஓடாத காளை மாட்டை வாலைக் கடித்து ஓட வைப்பது போலத் தமிழை ஓட வைக்கிறார் ஆசிரியர் சுந்தரம் பிள்ளை என்று நான் சொன்னபோது அவருக்குக் கோபமே வந்து விட்டது.

- 'வையாபுரிப் பிள்ளை - க.நா.சு பக்கம்'.

2. மனிதச் சிந்தனைகள் எல்லாமே ஓரளவுக்கு நன்கு சீல் வைக்கப் பட்ட இருட்டுக் கூடங்களாகத்தான் இருக்கின்றன. அதில் ஒன்றுக்கொன்று முரணாகத்தான் இருக்கின்றன. அவற்றைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் தெரிந்து கொள்வது நல்லதுதானே?

- 'கிருஷ்ணன் நம்பி - க.நா.சு பக்கம்'.

3. இப்போது நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு பொறையார் திராட்¨க்ஷயின் புளிப்பு மாறிவிட்டது. திரா¨க்ஷயின் தலைமுறைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து புளிப்பை முழுவதும் இனிப்பாக மாற்றிவிட்டன- மனிதர்களின் மிகவும் கசப்பான நினைவுகள் கூட இனியவையாக மாறிவிடுவது மாதிரி.

- 'ஏ.கே.செட்டியார் - க.நா.சு பக்கம்'.

4. இலக்கியத் தரத்தை எட்டுவதற்கு ஏதோ ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. அதேபோல் சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கும் ஒரு சக்தி வேண்டியதாக இருக்கிறது. ராஜாஜிக்குப் பல சந்தர்ப்பங்களில் பெரிய மனிதனாக இருப்பதற்கு வேண்டிய சக்தி இருந்தது என்பதுதான் விஷயம். இலக்கியத் தரத்துக்கு வேறு ஆளைத் தேடிக் கொள்ளலாம்.

- 'ராஜாஜியும் நானும் - க.நா.சு பக்கம்'.

5. மனித குலத்துக்கெல்லாம் பின்னாலுள்ள ஆத்மஞான மானஸ்ரோவரை எட்டி அணுகக் கற்றுக் கொண்ட கவிக்குக் கவிதை அற்புதமாகத்தான் அமையும் - அது டாண்டேயானால் என்ன, ஷேக்ஸ்பியரானால் என்ன?

- 'விமர்சனக்கலை'.

6 . மேட்டுத்தெருப் பெண்களைப் பெண்கள் என்று சொல்வது பொருந்தாது. அவர்களைப் பேய்கள் என்று சொல்வதும் ..... பேய்களுக்குத் தெரிந்தால் சண்டைக்கு வந்து விடலாம்.

- 'பொய்த்தேவு' நாவலில்.

7. குறட்டுக்குக் கீழே வாசல் 'கேட்'டுக்குக் காவல் போல இரண்டு தென்னை மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. எதையோ எதிர் பார்த்து வேண்டுபவை போல, வானத்தை நோக்கித் தூக்கும் பூமாதேவியின் கரங்கள் போல அவை ஆடாமல் அசையாமல் நின்றன.

- 'சர்மாவின் உயில்' நாவலில்.

8. அவளுடைய சிந்தனைத் தேருக்கு எண்ணற்ற அச்சுகள் இருந்தன. அவள் சிந்தனை களை அலைமோதும் கடலுக்கு ஒப்பிடலாம். அந்தக் கடலில் எண்ணற்ற சிற்றாறுகள் வந்து கலந்தன.

- 'சர்மாவின் உயில்'.

9. புயல், பெரும் புயல் அடித்தால் மரம் சாய்ந்துவிடும். நாகரீகம் என்ற புயல் அடித்துப் பல குடும்பங்களை வேரோடு கல்லிக்கொண்டு போய் நகரத்திலே சாய்த்து விட்டது.

- 'சர்மாவின் உயில்'.

10. எல்லாம் மாற வேண்டியதுதானே? காலம் என்கிற ஆற்றிலே விழுந்து உருமாறிப் போவதற்குத்தனே மனிதன் பிறந்திருக்கிறான்?

- 'சர்மாவின் உயில்'.

- மேலும் வரும்.

- அடுத்து ஆர்.சூடாமணியின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: