Showing posts with label நினைவுத் தடங்கள். Show all posts
Showing posts with label நினைவுத் தடங்கள். Show all posts

Wednesday, September 12, 2012

நினைவுத்தடங்கள் - 40




   
    ரசனை, இலக்கியம், ஓவியம், புகைப்படம், மேடைப்பேச்சு, இசை, நாடகம் போன்ற பல்வேறு ஈடுபாடுகளுடன் சோதிடக்கலை மீது எனக்கு ஏற்பட்ட ஈடுபாட்டையும் சொல்ல வேண்டும்.

    எங்கள் தகப்பனார் சோதிடக்கலையில் வல்லவர்கள். நிறைய சோதிட நூல்களைக் கற்றதோடு, சோதிடப் பத்திரிகைகளையும் வரவழைத்து அவ்வப்போதைய சோதிடக்கலை பற்றிய புதிய தகவல்களையும் அறிந்தவர்கள். உள்ளூரில் இருந்த எங்கள் புரோகிதர் துரைசாமி அய்யர் அவர்கள் சோதிடம் பார்ப்பதைத் தன் தொழிலாகவும் கொண்டிருந்தவர். அப்பா அவருடன் அடிக்கடி ந்துரையாடி தன் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்வார்கள்.அய்யரைப் போல தொழிலாகச் செய்ததில்லை. தவிர்க்க முடியாத, தன் மீது நம்பிக்கை வைத்து வற்புறுத்திக் கேட்பவர்க்கு மட்டும் பார்த்துப் பலன் சொல்வதுண்டு.

    எங்கள் குடும்பத்திற்கென்று ஆஸ்தான சோதிடர் போல சதாசிவம் என்கிற பக்கத்து ஊரில் வசித்த வள்ளுவர் இனத்தவரான ஒருவர் இருந்தார். அப்பாவுக்கு அவரது திறமையில் மிகுந்த நம்பிக்கை. ஒருவரது ஜாதகத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுப் பலன் சொல்லுவதில் அவர் கில்லாடி என்பார்கள் அப்பா. உதாரணத்துக்கு ஒரு நிகழ்ச்சியைச் சொலலுவார்கள். உள்ளூரில் ஒருவர் தன் மகனது திருமணத்தை முன்னிட்டு ஜாதகத்தைக் கொடுத்து எப்போது நடைபெறும் என்று அறிய விரும்பினார். அப்பாவும் அப்போது அருகில் இருந்தார்கள். வள்ளுவர் சதாசிவம் கணக்கிடத் தொடங்கி, ''இந்த ஜாதகனுக்குத் தந்தை இல்லை" என்றார். ஜாதகத்தைக் காட்டியவர் ஏளனமாகச் சிரித்து, அப்பாவிடம், "கில்லாடி ஜோசியர் என்கிறீர்கள், எடுத்த எடுப்பிலேயே தப்பா இருக்கே?" என்றார். அப்பா "சரியாகப் பார் சதாசிவம். இவர்தான் பையனோட அப்பா!" என்றார்கள். சதாசிவம் உறுதியாக, "ஐயா! என் கணக்கில் பிசகில்லை. ஜாதகனது தகப்பன் இப்போது இல்லை. 5 வருஷத்துக்கு முன்னால ஒரு விபத்துலே காலமாகி  இருக்கணும்" என்றார். வந்தவர் கோபித்துக் கொண்டு. "அட! போய்யா நீயும் உன் ஜோசியமும்!" என்று கிளம்பி விட்டார். அவர் போன பிறகு சதாசிவம் அப்பாவிடம் அது பற்றிக் கேட்க அப்பா சிரித்தபடி, "உன் கணக்கில் தப்பில்லைதான். அவரது அடுத்த வீட்டுக்காரர் அஞ்சு வருஷத்துக்கு முன்னே ஒரு பஸ் விபத்துலே இறந்து போனது உணமைதான்" என்றார்களாம்.

    "சோதிடத்தில் இப்படியெல்லாம் கூட சரியாகச் சொல்ல முடியுமா?" என்று அப்பாவிடம் கேட்டேன்.

    "நிச்சயமாக முடியும். சோதிடம் ஒர் கணித சாஸ்திரம். கணிதம் போலவே கடினமான, கவனத்துடன் புத்தி கூர்மை உள்ளவர்களே பயிலக்கூடிய சாஸ்திரம். ஆழ்ந்து கற்றபின், சதாசிவம் போல அனுபவமும் அர்ப்பணிப்பும் உள்ள சோதிடர்களின் வழிகாட்டுதலோடு பயிற்சி மேற்கொள்ளுவது அவசியம். நிறைய உழைப்பும், மதியூகமும், சரியாகக் கணிக்கும் புத்திகூர்மையும் தேவை. அப்படி இல்லாமல் வயிற்றுப் பிழைப்புக்காகப பலரும் இதில் ஈடுபட்டு வாய்ச்சவடால் பேசி மக்களை ஏமாற்றுபவர்கள் கிளம்பி விட்டதால் சோதிடக்கலையின் நம்பகத்தன்மை பற்றிப் பேச்சு எழுகிறது. சோதிடக்கலை எல்லோருக்கும் சாத்தியமாகி விடுவதில்லை. அதற்கும் உன் ஜாதகத்தில் இடம் இருக்க வேண்டும். அப்போதுதான் உன் வாக்குப் பலிக்கும்" என்றார்கள் அப்பா. அப்பாவுக்கு தனக்குப் பின் தன் பிள்ளை யாராவது சோதிடம் பயிலவேண்டும் என்ற விருப்பம் இருந்திருக்கலாம்.

    நான் கணித ஆசிரியனாக இருந்தாலும் ஏனோ எனக்கு சோதிடத்தில் ஆர்வமில்லை. பத்திரிகைகளில் வரும் ராசிபலன்களை நான் பார்ப்பதில்லை. இன்று எல்லா பத்திரிகைகளிலும் நீக்கமற நிறைந்திருக்கிற அசட்டு ராஜா ராணி நகைச்சுவைத் துணுக்குகளைப் பார்க்காமலே ஒதுக்கித் தள்ளுகிற மாதிரி, ராசிபலன் பக்கங்களையும் நான் ஒதுக்கி விடுவதுண்டு. ஒரே நட்சத்திரம், ஒரே ராசியுள்ள பல்லாயிரக் கணக்கானவர்களில் யாராவது பத்துப் பேருக்காவது இந்த ராசிபலன்கள் ஒத்துப் போவதுண்டு. ஆனால் இந்த ராசிபலனை நம்பி லாட்டரிச் சீட்டு வாங்கி நஷ்டமடைபவரே அதிகம். ஆனாலும் என் தகப்பனார் என் ஜாதகப்படி எனக்கு occult power என்கிற வாக்கு சொல்கிற சக்தி இருப்பதாகச் சொன்னதை நான் அப்போது நம்பவில்லை. பின்னாளில் எனக்கு கைரேகை சாஸ்திரம் கற்றதன் மூலம் அது ஓரளது சாத்யமானது நேர்ந்தது.

    தமிழ்வாணன் எழுதிய கனத்த புத்தகம் 'கை ரேகை சாஸ்திரம்' ஒன்று எனக்கு என் பதிப்பாளரால் அன்பளிப்பாக அளிக்கப்பட்டது. அதைப் படித்துப் பார்த்தேன். அது கைரேகை சாஸ்திரத்துக்கு ஒரு அறிமுகம்தான். அது அந்த சாஸதிரத்தின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை. மேலும் அது சம்பந்தமான பலர் எழுதிய நூல்களை பழைய புத்தகக் கடைகளில் வாங்கினேன். எல்லாமே மேலோட்டமான நூல்கள். கடைசியாக 'ஷீரோ'(Cheiro) என்ற மேலைநாட்டு கைரேகை நிபுணர் எழுதி'ய 'Palmistry for all' என்ற அற்புதமான நூல் ஒரு நடைபாதைக் கடையில் கிடைத்தது. அதைப் படித்ததும்தான் கைரேகை சாஸ்திரத்தின் உண்மையான மதிப்பு தெரிந்தது. அதன்மீது நம்பிக்கை பிறந்தது.

    ஷீரோ கைரேகைக் கலையை அறிவியல் ரீதியாக அணுகினார். அதைப் பயில நூற்றுக்கணக்கானவர் களின் - ஏழை, பணக்காரன், தொழிலாளி, முதலாளி, அரசியல்வாதி, குழந்தைகள், முதியவர்கள் என பலதரப்பட்ட ஆண் பெண்களின் கைகளைப் பார்வையிட்டு பதிவு செய்து கொண்டு, 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்து அனுபவ அறிவில் அந்த நூலை எழுதி உள்ளார். உதாரணத்துக்கு உள்ளங்கையின் நடுவில் உள்ள தனரேகை என்னும் Fate line கடினமான கைவேலை செய்வர் கைகளில் இல்லாமலிருப்பதும், செல்வந்தர் கைகளில் நடுவிரல் வரை நீண்டிருப்பதும் கண்டு அந்த ரேகையின் நீளத்தைக் கொண்டும் கையின் அமைப்பைக் கொண்டும் ஒருவரது பொருளாதார நிலையையும் வாழ்வின் திருப்பங்களையும் கணக்கிட்டுச் சொல்லாம் என்று கண்டார். அப்படியே மற்ற எல்லா ரேகைகளும் கைக்குக் கை அவரவர் அன்றைய வாழ்நிலையை ஒட்டி மாறுபடுவதைக் கண்டறிந்து அதைக்கொண்டு எப்படிப் பலன் சொல்வது என்று பதிவு செய்துள்ளார். இது அறிவுபூர்மான அனுபவக் கணிப்பு என்பதால் ஆர்வத்துடன் அந்தப் புத்தகத்தைப் படித்தேன். சோதனை முறையில் பலருடைய கைகளைப் பார்த்துப் பலன் சொன்னேன். பல முடிவுகள் சரியாகவும் பல சரியில்லாமலும் இருந்தன. பின்னர் அனுபவத்தில்தான் சிலவற்றை யூகித்துச் சொல்ல முடிந்தது.

    உதாரணத்துக்கு ஒன்று. எனது ஒன்று விட்ட சகோதரி ஒருவர் காசநோயால் உடல் நலிந்து, என்ன வைத்தியம் செய்தும் பலனில்லாமல் வாழ்வின் முடிவை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரது கையைப் பார்த்து அவரது ஆயுளைக் கணித்துச் சொல்லும்படி அப்பா சொன்னார்கள். உள்ளங்கையில் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் புறப்பட்டு, மணிக்கட்டுவரை நீண்டிருக்கும் ஆயுள்ரேகையின் நீளத்துகேற்ப ஓருவரது ஆயுட்காலத்தைக் கணக்கிடும் முறைப்படி அவருக்கு 80வயது வரை ஆயுள் உள்ளது என்று சொன்னேன். ஆனால் என் தகப்பனாரது சோதிடக் கணக்குப்படி அவருக்கு அப்போது - 50 வயதில் கண்டம் இருப்பதாகச் சொன்னார்கள்.அப்படியேதான் ஆயிற்று. அவர் ஓராண்டுக்குள் இறந்து போனார். அப்பா என் கணக்கில் என்ன பிழை என்று பார்க்குமாறு சொன்னார்கள். ஷீரோவின் நூலை மீண்டும் படித்துப் பார்த்தேன். சுண்டு விரல் அடியிலிருந்து புறப்பட்டு சாய்வாக ஆயுள்ரேகை நோக்கிச் செல்லும் ஆரோக்கியரேகை, ஆயுள்ரேகையை வெட்டும் இடம் கண்டம் என்று கணக்கிடவேண்டும் என்று தெரிந்தது. நான் அக்காவின் கையில் ஆரோக்கியரேகை இருந்ததா, அது எங்கே ஆயுள்ரேகையை வெட்டுகிறது என்று பார்க்கவில்லை. இப்போது அது ஒரு பாடமாயிற்று.

        என் அப்பாவின் கணிப்புக்கு மாறுபட்ட எனது இன்னொரு கணிப்பு பலிதமானது. என் நெருங்கிய உறவினர் ஒருவருக்குத் திருமணமாகி, ஒரு குழந்தை பிறந்த பிறகு கருத்து வேறுபாட்டால் மனைவி பிரிந்து தாய் வீட்டிற்குப் போய் விட்டார். 4ஆண்டுகள் அவர் திரும்பாத நிலையில் அவரது தாயார் மகனை இன்னொரு திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தினார். ஆனால் மகன் மனைவி எப்படியும் திரும்பி விடுவார் என்ற நம்பிக்கையில், தாயாரின் கோரிக்கைக்கு இணங்கவில்லை. தாயார் என் தகப்பனாரிடம் மகனின் ஜாதகத்தைக் கொடுத்து, பிரிந்தவர்கள் மீண்டும் சேர வாயப்பிருக்கிறதா என்று பார்த்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். அப்பாவும் பார்த்து, மருமகள் திரும்புவது சாத்யமில்லை என்று சொன்னார்கள். என்னிடம் அப்பா கணவரது கையைப்  பார்த்துச் சொல்லுபடி சொன்னார்கள. சுண்டு விரலுக்குக் கீழே பக்கவாட்டில் செல்லும் சிறிய ரேகையான திருமணரேகையில் பிளவு ஏற்பட்டிருந்தால் இப்படி ஏற்படும் என்று படித்திருந்த நான் மீண்டும் பிழை ஏற்படாதிருக்க, ஷீரோ திருமணரேகை பற்றி சொல்லி உள்ளதைக் கவனத்துடன் படித்தேன். பிளவுபட்ட திருமணரேகையில், பிளவு பட்ட ரேகையின் இரு துண்டுகளும் சற்று மேலும் கீழுமாக overlapping ஆக இருந்தால் பிரிந்தவர் மீண்டும் சேரக்கூடும் என அறிந்தேன். கணவரது ரேகையை ஆராய்ந்தபோது அது பிளவுபட்டும் மேலும் கீழுமாக overlapping ஆகவும் இருந்தது. எனவே பிரிவு நிரந்தரம் அல்ல, விரைவில் இணைவது சாத்யமே என்றேன். அப்படியே ஆயிற்று. மறு ஆண்டில் மனைவி திரும்பி வந்தார்.

    இப்போது அப்பாவுக்கு, தான் விரும்பியபடி தன் வாரிசுகளில் ஒருவர் தன்னை இக்கலையில் தொடருவார் என்று நம்பிக்கை ஏற்பட்டது. என் ஜாதகப்படி என் வாக்கு பலிதமாகும் அம்சம் எனக்கு இருப்பதாகச் சொன்னது போலவே, கைரேகைப்படியும் occult power என்கிற இந்த அம்சம் எனக்கு இருப்பதை அறிந்தேன். தொடர்ந்து நான் அக்கலையைப் பயின்று செயல்படுத்தி இருந்தால் அதில் சோபித்திருக்கலாம். ஆனால் பின்னாளில் வேலைப்பளு காரணமாகவும் என் ரசனை இலக்கியத்தின்பால் திரும்பி விட்டதாலும்  அக்கலையை மறந்து போனேன். இன்றும் அக்கலையின் அறிவியல் அம்சம் கருதி மீண்டும் முயற்சிக்கத்தான் விரும்புகிறேன். ஆனால் இப்போது முதுமை காரணமாக அதில் ஆழ்ந்த கவனம் செலுத்த முடியவில்லை.     0
   




Sunday, November 16, 2008

நினைவுத்தடங்கள் - 39

பின்னாளில் எனக்கு நாடகக்கலையில் ஆர்வம் குறைந்து போனது
என்றாலும் இளமையில் நான் பார்க்க நேர்ந்த உள்ளூர், வெளியூர் தெருக்கூத்துகள்,
நாடகங்கள் தந்த ரசனையால் அக்கலையில் ஒரு மோகம் இருந்தது. அதன்
காரணமாய் எங்கள் கிராமத்து இளைஞர்கள் நாடகம் கற்றுக்கொண்ட போது
அவர்களுக்காக சில காட்சிகளை எழுதவும், கல்லூரி நாட்களில் விடுதி விழாக்
களுக்காக வானொலி நாடகங்கள் எழுதவும் நேர்ந்தது.

ஒரு டிசம்பர் விடுமுறையில் நான் ஊர் வந்திருந்தபோதுதான் ஆர்வ
மிகுந்த சில இளைஞர்கள் நாடகக்குழு ஒன்றை ஆரம்பித்திருந்தார்கள். எங்கள்
எதிர் வீட்டுக்காரர் - நடுத்தர வயதைக் கடந்தவர் - ஒருவர்தான் அமைப்பாளர்,
வழிகாட்டி. அவர் எங்கு நாடகமோ, தெருக்கூத்தோ, டெண்ட் கொட்டகை
சினிமாவோ நடந்தாலும் அவற்றைத் தவறாது பார்த்துவிட்டு வந்து வசனம்,
பாடல்கள், நடிப்பு எல்லாவற்றையும் அச்சு அசலாய் ஊர் விடலைப் பையன்
களுக்குச் சொல்லிக் காட்டியவர். அதனால் அவர் பொறுப்பில் எல்லாவற்றையும்
விட்டிருந்தார்கள்.

'சிறுத்தொண்ட நாயனார்' கதை முதல் நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாடக வாத்தியாரையும் எங்கிருந்தோ அழைத்து வந்திருந்தார்கள். அவர்
தோற்றத்தில் நாடக ராஜபார்ட் போல பாகவதர் கிராப்புடன் இருந்தாலும் ஆசாமி
படுகிழம் என்பதில் இளைஞர்களுக்கு அவரிடம் நம்பிக்கை எழவில்லை. ஆனால்
அமைப்பாளர் அவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை நாடக சபாவில் நடிகர்களுக்கு வெகுகாலம் பயிற்சியளிப்பவராக இருந்தவர் என்றும் முதுமையால் அதிலிருந்து
விலகி விட்டதாவும் அவர் மிகுந்த அனுபவசாலி என்றும் சொல்லி அவர்களைச்
சமாதானப் படுத்தினார். ஆனாலும் அவர் சிவாஜிகனேசன், எம்.ஜி.ஆர் போன்றவர்
களுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக் கொடுத்திருப்பதாகச் சொன்னதை மட்டும்
அவர்கள் நம்பவில்லை. ஆனால் அப்புறம் சில மாதங்களுக்குப் பிறகு சிவாஜிகணே
சனின் மகளின் திருமண அழைப்பு அவருக்கு வந்த போது கொஞ்சம் அசந்துதான்
போனார்கள்.

நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவரவர்க்குரிய வசனங்கள் எழுதிக்
கொள்ளப் பட்டு ஒத்திகை ஆரம்பமானபோது என்னைப் பார்வையாளராக அமைப்
பாளர் அழைத்திருந்தார். அப்போதுதான் நான் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்
திருந்தேன். அதையும் எனது நாடக ஆர்வத்தையும் அறிந்திருந்ததால் என்னை
வந்துபார்த்து யோசனை சொல்லுமாறு அழைத்திருந்தார். நாடகத்தின் ஆரம்பக்
காட்சியில், பல்லவமன்னரிடம் சேனாதிபதியாய் இருந்த பரஞ்சோதி வாதாபிப்
போருக்குப் பிறகு சிவத்தொண்டு செய்யத் தன்னை விடுவிக்குமாறு கேட்டதையும்,
அதன்படி நரசிம்ம பல்லவர் அவரை விடுவித்து சிவத்தொண்டுக்கு அனுப்பியதையும்
சேர்க்கலாம் என்று சொன்னேன். அவர்களது நாடகப் பிரதியில் அது இல்லை.
அமைப்பாளர் அந்தக் காட்சியை நீயே எழுதிக்கொடு என்று கேட்டுக் கொண்டார். இப்படித்தான் எனது நாடக எழுத்து ஆரம்பமாயிற்று. அந்தக் காட்சியை எழுதிக்
கொடுத்ததோடு தர்பார் சீனில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியைச் சேர்க்கவும் யோசனை
சொன்னேன். அப்போது நடனம் ஆடுவதில் அதீத ஆர்வமும் திறமையும் கொண்ட
ஒரு வெளியூர் இளைஞருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்காக ஒரு
நாட்டியப் பாடலும் எழுதிக் கொடுத்தேன். அப்போது 'பராசக்தி' படம் வெளியாகி
அதன் பாடல்கள் பிரபலமாக இருந்த நேரம். அந்தப் படத்தில் வரும் 'ஓ ரசிக்கும்
சீமானே.......!' என்ற பாடல் மெட்டில் 'ஓ இனிக்கும் தமிழே...!' என்று தொடங்கும்
பாடலை எழுதித் தந்தேன். அதோடு நாடகத்தின் நடுவில் நகைச்சுவை நடிகன் பாட, ஏ.வி.எம்மின் 'வாழ்க்கை' படத்தில் வரும் 'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம்
கொண்டாடுதே' என்ற மெட்டில்,

'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் துன்பமிகவாகுதே
எண்ணைக்குத்தான் கோடைகாலம் போகுமிண்ணு தோணுதே
தண்ணித் தண்ணி தண்ணியின்னு தவியாய்த் தவிக்குதே
தாகத்துக்கு ஐஸ்போட்ட ஆரஞ்சுன்னு கேட்குதே!'

என்று ஒரு பாடலும் எழுதிக் கொடுத்தேன். இதன் மூலம் பாடல் ஆசிரியராகவும்
ஆனேன்.

நாடக ஒத்திகையின்போது நாடகவாத்தியாரை மிகவும் படுத்திவிட்டார்கள். கிராமம் என்பதால் சமூக ஏற்றத்தாழ்வின் பிரச்சினையால் சின்னச் சின்ன சிக்கல்கள்
எழுந்தன. சிறுத்தொண்டர் பாத்திரத்துக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தவர், மேல்
ஜாதிக்காரர். நரசிம்ம பல்லவன் பாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் மேல்ஜாதி வீடுகளில் ஊழியம் செய்யும் கீழ்ஜாதிக்காரர். நரசிம்மபல்லவர், 'சேனாதிபதி!' என்று
விளிக்கும்போது, பரஞ்சோதி தலை வணங்கி, 'சக்கரவர்த்தி!' என்று பேசவேண்டும்.
ஆனால் மேல் ஜாதிக்காரரான நடிகர், 'ஏன் ராஜன்?' என்றுதான் கேட்பேன், 'இந்த .......ஜாதிப்பயலை 'சக்கரவர்த்தி' என்று அழைக்கமாட்டேன், தலைவணங்கியும் பேச
மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தார். பாவம் நாடக வாத்தியார்!. அவரால் சமாளிக்க முடியவில்லை. பிறகு நான் தலையிட்டு 'பரஞ்ஜோதி'க்கு அது நடிப்புதான், அதனால்
கௌரவப் பிரச்சினை இல்லை என்று சமாதானப் படுத்தினேன். இப்படி பல
இடைஞ்சல்கள் வாத்தியாருக்கு! வயிற்றுப் பிழைப்பை எண்ணி சகித்துக் கொண்டார்.

நாடகம் நடந்தபோது பரஞ்ஜோதியின் ஒப்பனையிலும் சம்பந்தப்பட்டவர்
ஒரு விசித்திரம் செய்தார். தலையில் தளபதிக்கான தலைப்பாகையை வைத்துக்
கொண்ட அவர், தளபதிக்கான அங்கிகளையும் அட்டைக் கவசங்களையும் அணிய
மறுத்து நாடகத்துக்காக அவர் மாமனார் தைத்திருந்த பேண்டும் புஷ் ஷர்ட்டும்
அணிந்து இடதுகையில் புதுவாட்சும் காலில் கட்ஷ¥வுமாய் தர்பார் சீனில்
நுழைந்தார். இப்படி ரசமான வினோதங்கள் நிறைய கிராமத்து நாடகங்களில்!

நாடகத்துக்கு இடையிடையே 'குறவன் குறத்தி' போன்ற துக்கடா
நிகழ்ச்சிகள் நடக்கும். இதை 'சில்லரை' என்பார்கள். மரபான இந்த 'சில்லரை'
களிலிருந்து ஒரு மாற்றமாய் உள்ளூர் ஆரம்பப்பள்ளி மாணவர்களை வைத்து நான்
எழுதித் தயாரித்திருந்த 'சாணக்கியன் சபதம்' என்கிற சின்ன ஒரங்க நாடகத்தை
மக்கள் மிகவும் ரசித்தார்கள். இதே போல நாடகம் நடந்த மூன்று நாட்களுக்கும்
கலைஞர் கருணாநிதி எழுதி சிவாஜி நடித்த 'சாக்ரடிஸ்', 'சாம்ராட் அசோகன்"
ஆகியவற்றையும் பள்ளிப் பிள்ளைகளைக் கொண்டு தயாரித்து இடைவேளைகளில்
மேடை ஏற்றினேன்.

அவற்றிற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்ததால் முழு நேர நாடக
மாக ஒன்றை தனியாக ஒருநாள் நடத்திக் காட்ட ஆசைப்பட்டேன். அது நவீன
நாடகம் போல் மூன்று மணி நேரத்தில் சினிமா பாணியில் பாட்டு, நடனம் குறை
வாகக் கொண்டதாக நடத்த முடிவு செய்தேன். அப்போது கல்லூரிக் கோடை
விடுமுறைக்காலம் என்பதால் மூன்று மாத அவகாசம் கிடைத்தது. முன்பு சிறுவர்
களைக் கொண்டு நடத்திய சாணக்கியன் சபதம் செய்யும் காட்சியை மட்டும்
கொண்ட பிரதியை விஸ்தரித்து மூன்றுமணி நேர நாடகம் அளவுக்கு 'சாணக்கியன்
சபதம்' என்ற பெயரிலேயே எழுதி முடித்தேன். நடிகர்களுக்கு - நிறையப் பேர்
ஆசைப்பட்டும், ஓரளவு படித்தவர்களாகத் தேர்வு செய்தேன். அதுவரை நான் நடித்த
தில்லை என்றாலும் நானும் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க முடிவுசெய்தேன்.
நாடக வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டு ஒத்திகைக்குள் மனப்பாடம் செய்துவிட
நடிகர்களுக்குச் சொல்லி விட்டு ஒத்திகைக்கான இடத்தை ஏற்பாடு செய்வதில்
முனைந்தேன். எங்களுக்குச் சொந்தமான கூரைக் கொட்டகை ஒன்று ஏர், கலப்பை முதலியவற்றைப் போட வைத்திருந்ததை ஒழித்துச் சுத்தம் செய்து தரையை சாண
மிட்டு மெழுகி புழங்கும் இடமாக ஆக்கினேன்.

நாடக ஒத்திகைத் தொடங்கியது. இரவு 8 மணிக்கே உணவை முடித்துக் கொண்டு நடிகர்களை வரச் செய்திருந்தேன். முதல் நாள் ஒத்திகையே வேடிக்கையும், ந¨ச்சுவையும் நிரம்பியதாக இருந்தது. சாணக்கியன் நடந்து வரும்போது கட்டைப்
புல் தடுக்கி விழும் காட்சி. சாணக்கியன் கோபத்துடன் தன்னை விழச்செய்த கட்டைப் புல்லைப் பிடுங்கி அதனிடம் உச்சுக் கொட்டியபடி "ஏ கட்டைப்புல்லே....!" என்று
பேசவேண்டும். சாணக்கியராக நடிப்பவர் கட்டைப்புல் கையில் இருக்கும் பாவனை
யுடன்,"த்சோ! த்சோ! ஏ கட்டைப்புல்லே....." என்றார். எனக்கு நான் எழுதியதாக இல்லாமல் வசனம் வித்தியாசமாகப் படவே, "இருங்க..இருங்க..! அதென்ன த்சோ..
த்சோ?'' என்றேன். "நீங்கதான் சார் எழுதி இருக்கீங்க" என்றார் நடிகர். "எங்கே
காட்டுங்க" என்று பிரதியை வாங்கிப்பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.
உச்சுக் கொட்ட அடைப்புக் குறிக்குள் நான் எழுதிக் கொடுத்ததையும் அவர் மனப்
பாடம் செய்திருக்கிறார். இப்படியாக முதல் நாள் ஒத்திகை இரவு 12 மணிவரை
நடந்து முடிந்தது. "சரி, நாளைக்கும் இதே மாதிரி நேரத்துக்கு வந்து விடுங்கள்"
என்று எல்லோரையும் அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தேன் - மறுநாள் ஒத்திகை
நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல்.

நான் இரவில் திண்ணையில்தான் படுப்பதால் நான் நடுநிசிக்குமேல் படுக்க வந்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. காலையில் தாமதமாக எழுந்தபோது அப்பா வயல்காட்டுக்குப் போயிருந்தார்கள். பல்துலக்கி காபி சாப்பிடும்போது அம்மா
ஆரம்பித்தார்கள். ''ராத்திரி எப்ப படுக்க வந்தே?"

"ஏன்? பத்து மணிக்கு மேலே ஆயிட்டுது." என்றேன்.

"மணி பன்னண்டு வரைக்கும் நீ வராதத அப்பா பாத்துட்டு எங்கே
போயிருக்கேன்னு கேட்டாங்க. எங்கிட்ட சொல்லிட்டா நீ போனே? எனக்குத்
தெரியாதுன்னு சொன்னேன். ஆனா ஆரோ சொல்லித் தெரிஞ்சிருக்கு நீ நாடகம்
போடறது. அப்பா ரொம்ப வருத்தப்படுறாங்க"

"ஏம்மா! அதுலே என்னா?"

"அதுலே என்னாவா? நம்ம மானமே போயிடுச்சிங்கிறாங்க அப்பா. நம்ம குடும்ப கௌரவம் என்ன, அந்தஸ்து என்ன? இன்னார் வீட்டுப்பையன் கூத்தாடு
றான்னா....? ஊருக்குப் பெரிய குடும்பம், பரம்பரையா நாட்டாமக் குடும்பம் ஒன்னாலே கூத்தாடிக் குடும்பம்னு பேசணுமா? அப்பாவுக்குப் பிடிக்கலே! படிக்கிற வயசிலே
என்னா கூத்தாட வேண்டியிருக்குங்கிறாங்க. நீ கெட்டுப்போறதும் இல்லாமே ஊரான் வீட்டுப் பிள்ளைகளையும் கூத்தாடக் கூப்பிடுறதும் பேச்சுக்கு எடமாயிடும்னு அப்பா
வுக்குக் கவலையா இருக்கு. இன்னியோட அந்தக் கூத்தைத் தல முழுகிடு. அப்பா மனசு நோகிற மாதிரி பண்ணாதே"

எனக்கு இடி விழுந்தமாதிரி இருந்தது. என் ஆசைக்கு இப்படி ஒரு தடை
வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்பா படித்தவர்கள்; முற்போக்கு எண்ணம் உடையவர்கள். அவர்களுக்கு எப்படி இதைக் கொச்சைப்படுத்த முடிகிறது?

மனம் கசந்து வெளியே வந்தேன். அப்போது நாடக முயற்சியில் எனக்கு
உறுதுணையாய் நிற்கும் நண்பர் வந்தார். அவரிடம் சொல்லி ஒரு பாட்டம் அழலாம்
என்று நிணைத்த போது அவரே ஆரம்பித்தார். நாங்கள் நாடகம் நடத்துவதைக் கௌரவக் குறைவாக, நடிக்கும் பையன்களின் பெற்றவர்கள் பலர் நினைப்பதாகவும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இனி அனுப்பமாட்டர்கள் என்றும் சொன்னார். நான்
நொந்து போனேன். அதோடு என் நாடக ஆசை அற்பாயுளில் மரித்தது.

--- 0 ---

Saturday, February 24, 2007

நினைவுத் தடங்கள் - 38

எனது இளமைப் பருவத்தில் எனக்கு ஓவியத்தில் ஈடுபாடு ஏற்படக் காரணமானவர்களையும், அதற்கான சூழ்நிலைகளையும் முன்பே சொல்லி இருக்கிறேன். கோயிலுக்காக மரச்
சிற்பங்கநளையும் சுதைச் சிற்பங்களையும் செய்த எங்கள் ஊர் அப்பாவு ஆசாரி என்கிற தச்சாசாரியும், எபோதும் காதில் கூர் சீவிய பென்சிலைச் சொருகிக் கொண்டு ஊரில் சுவர் கிடைத்த இடங்களில் எல்லாம் தெய்வ உருவங் கநளை வரைந்து கொண்டிருந்தவருமான அவர் மகன் நடேச ஆசாரியும் தான் எனக்குப் பிள்ளைப் பிராயத்திலேயே ஒவிய, சிற்பக் கலைகளில் மோகத்தை உண்டாக்கியவர்கள். அவர்கள் அவ்வேலைகளில் ஈடுபட்டிருந்த போது நான் அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருந்ததால் அவற்றின் மீது நாட்டம்
ஏற்பட்டது.

கொஞ்சம் வளர்ந்து ஆரம்பப் பள்ளியில் படித்தபோது எனக்கு ஓவியம் வரைய வழிகாட்டியாக இருந்தவர் என்னை விட இரண்டு வகுப்பு மேலே படித்தவரும் எங்கள் ஊர்ப் புரோகிதரின் மகனுமான ராமு என்கிற ராமச்சந்திரன் என்பவர். அவர் ஒரு டிராயிங் நோட்டு வைத்துக் கொண்டு வரலாற்றுப் பாடப்புத்தகத்திலுள்ள அக்பர், சிவாஜி, தாஜ்மஹால் படங்களையெல்லாம் தடியான ஒரு பென்சிலால் அப்படியே அச்சு அசலாய் பெரிய அளவில் வரைந்து எங்களை எல்லாம் பிரமிக்க வைப்பார். நானும் அவரைப் போலவே டிராயிங் நோட்டு வாங்கி அவர் வரைந்த படஙங்களை எல்லாம் வரைவேன். அவர் அதற்காக என்னைப் போட்டியாகக் கருதாமல் நான் வரைந்தவற்றைத் திருத்தித் தருவார். இதனால் எங்கள் நட்பு வளர்ந்தது.

எங்களூர்ப் படிப்பு முடிந்ததும் அவர் மேலே படிக்க வசதியில்லாதாலும் அருகில் மேல்வகுப்புள்ள பள்ளி இல்லாததாலும் சிதம்பரத்தில் அவரது சகோதரி வீட்டுக்குப் போய் அங்கு
அப்போது பிரபலமாய் இருந்த சுதைச்சிற்பியும் ஓவியருமான யான கோவிந்தராஜு என்பவரிடம் அவரது ஓவிய வேலைகளுக்கு உதவியாளராகச் சேர்ந்தார்.அவரிடம் பல ஆண்டுகள் உடனிருந்து சுதைச்சிற்பஙகளுக்கு வண்ணம் தீட்டுவதிலும் சுவர் ஓவியங்கள் வரையவும் தேர்ச்சி பெற்றார். அதற்குள் நான் பள்ளிப் படிப்பெல்லாம் முடிந்து கல்லூரிப் படிப்புக்காகச் சிதம்பரம் சென்றதும் அவருடன் நெருக்கமான தொடர்பும் அதன்மூலம் ஓவிய நுட்பங்களை அவரிடமிருந்து கற்றுக் கற்றுக்கொள்ளவும் முடிந்தது.

என் கல்லூரிப் படிப்பு முடிந்து வீடு திரும்ப்஢யபோது அவரும் சுயமாக ஓவிய வேலைகளுக்குப் போகும் தகுதி பெற்று ஊருக்கு வந்து விட்டார். இப்போது எங்கள் நட்பு மேலும் நெருக்கமாயிற்று. எப்போதும் - தூங்குகிற சாப்பிடுகிற நேரம் தவிர ஒன்றாகவே இருந்தோம். அனேகமாக நான் அவரது வீட்டில்தான் அதிகம் இருந்தேன். அவரது அம்மாவின் பேச்சு எப்போதும் ரசமாக இருக்கும். பேச்சில் அநாயசமாக நகைச்சுவை துள்ளும். உவமைகளும் வருணனைகளும் கதை எழுதுகிறவர்கள் தோற்று விடுவார்கள். அவர்கள் சொல்லும் பழமொழிகளும் சொலவடைகளும் நாம் வழக்கமாய்க் கேட்பதற்கு மாறாய் வித்தியாசமாய் இருக்கும். 'சுண்டைக்காய் கால் பணம் சுமைகூலி முக்கால் பணம்' என்பதை 'வெடிப்புலே விழுந்தது கால் பனம் வெட்டி எடுக்க முக்கால் பணம்' என்பது போல வித்தியாசமாகச் சொல்வது சிரிக்க வைக்கும்.

ஒருமுறை நான் அவர்கள் வீட்டுக்கு, ஊரிலிருந்து வந்திருந்த என் அண்ணன் குழந்தையை - நல்ல சிகப்பு - பளிச் சென்ற வெய்யலில் தூக்கிக் கொண்டு போனேன். துரத்திலேயே
அந்த அம்மா அதைப் பார்த்து விட்டார்கள். நான் நெருங்கியதும் "வா, யாரு அண்ணா கொழந்தையா? காக்கா மொளாப்பழம் தூக்கிண்டு வரமாதிரி இருக்கு!" என்று என் கருப்பு நிறத்தை குழந்தையின் நிறத்துடன் ஒப்பிட்டுச் சொன்னது நக்கலாகப் உறுத்தாமல் அதில் இருந்த உவமை ரசனையை மிகவும் ரசித் தேன்.அப்படி அவர்கள் பேச்சைக் கேட்டுக்கேட்டு எனக்கு என் கதைகளில் அக்ர காரத்து மொழி சரளமாய் விழுவதற்கு உதவியது.

நண்பரின் அப்பா புரோகிதராய் இருந்தாலும் புதிய சிந்தனைகளும் மற்றவர்களிடமிருந்து தன்னைப் பிரித்துக் காட்டுகிற செயல் பாடும் உடையவர். கூரைவீடுதான். ஆனால் அதில் அவர்
அரசருக்கான கம்பீரத்துடன் வாழ்ந்தார்.அவருக்குப் படியளக்கிற உள்ளூர்ப் பணக்காரர்களை விட அவர் நாகரீகமாகவும் சுதந்திரமாகவும் வாழ்ந்தார். வேத, புராண விஷயங்களை கேட்பவர் வாய்பிளந்து ரசிக்கிற மாதிரியான சொல் வளமும் ரசனையும் மிக்கவர். என் அப்பாவிடம் நான் சிறுவயதில் தமிழ் புராணக் கதைகளையும் தமிழ்க் கவிதைகளையும் கேட்டது
என் எழுத்துக்கு உரமாக அமைந்த மாதிரி அவரிடம் கேட்ட சம்ஸ்கிருத இலக்கியக் கதைகளும் கருத்துக்களும் கூடப் பின் பலமாய் உதவுகிறது.

எங்கள் ஊரில் முதன்முதலாய் கிராமபோன் வாங்கி ஊரே அவர் வாசலில் நின்று பிரமிக்க வைத்தது அவர்தான். ஒற்றைக் குதிரை பூட்டிய சின்ன ரேக்ளாவில் தான் அவர் பக்கத்துக்
கிராமங்களுக்குப் புரோகிதத்துக்குச் செல்வார்.அதை வேடிக்கை பார்க்கவே சிறுவர்கள் அவர் வீட்டுக்கு முன்தினமும் கூடி நிற்பார்கள்.

அவர்கள் வீட்டில் அனைவருமே நல்ல சங்கீத ரசனையும் குரல் வளமும் உடையவர்கள். நண்பர் நன்றாகப் பாடவும் மிமிக்ரி செய்யவும் வல்லவர். அதனால் எங்காவது கச்சேரிக்குப் போய்வந்தால் அதே பாணியில் அச்சு அசலாய் முக சேஷ்டை களுடன் எனக்குப் பாடிக் காட்டுவார். மதுரை மணி ஐயரின் சங்கீதத்தில் எனக்கு ருசி ஏற்பட்டது அப்படித்தான். சினிமாவுக்குப் போய் வந்தாலும் அதன் கதை பாடல் முழுதும் அப்படியே சொல்லி உடனே அப் படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை உண்டாக்கி விடுவார். அப்போதைய சினிமாக்கள் எல்லாம் 40 பாடல்கள், 50 பாடல்கள் என்று இருக்கும். பாபநாசம் சிவன் பாடல்களை தியாகராஜ பாகவதரும், பி.யூ.சின்னப்பாவும்பாடி, தமது அற்புதமான குரல் வளத்தால் சினிமாவின் மூலம் தமிழ் இசையைப் பரப்பி வந்தனர். நண்பர், நான் போய்ப் பார்க்க முடியாத அவர்களது பாடல்களைப் பாடி எனக்கும் சங்கீத ரசனையை உண்டாக்கினார். ஒவ்வொரு பாடலும் என்ன ராகம், என்ன தாளம் என்றெல்லாம் சொல்லுவார். கே.பி.சுந்தராம்பாள் நடித்த ஜெமினியின் ஓளவையார் பாடல்களை அதே கனத்துடனும் உருக்கத்துடனும் பாடி என்னை அப்படத்தை தேடிப் பார்க்க வைத்தது இன்னும் பசுமையாய் நினைவில் நிற்கிறது. அவர் பாடியதும் கண் முன்னால் நிற்கிறது. அப்பாடல்கள் இன்றும் - 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் காதில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது. இப்படி எத்தனையோ பேர் என் இளமையில் என்னைப் பாதித்து என் கலை, இலக்கிய ரசனைகளை வளர்த்து இன்று நானும் ஒரு ரசிகனாகவும் படைப்பாளியாகவும் ஆவதற்கு உதவியிருக்கிறார்கள். அது இளம்பிராயத்தில் வேறு யாருக்கும் கிடைக்காத பாக்யம் என்றே சொல்ல வேண்டும்.

- வே.சபாநாயகம்.

Friday, February 09, 2007

நினைவுத் தடங்கள் - 37

இளமையில் என் ரசனையையும் இலக்கிய ஆர்வத்தையும் தூண்டியவர்களில்
ஒருவரான என் பெரியப்பா மகன் - சின்ன அண்ணன் என்பவரை அவசியம் நினைவு கூர்தல் வேண்டும். எங்கள் பெரியப்பாவின் குணவியல்புகளுக்கு ரசனை சாத்யமில்லை. ஆனால் அவரது இரண்டாவது மகனுக்கு இசை ரசனையும் இலக்கிய ரசனையும் இருந்தது. அவருக்கு என் பெரியப்பாவிடம் கடைசிவரை இணக்கமில்லை. எங்கள் அப்பாவிடம்தான் தன் இலக்கிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்வார்.

பெரியப்பாவின் முரட்டு சுபாவம் மனைவி மக்களிடம் கூட இணக்கம் ஏற்படுத்தி இருக்க வில்லை. முன்பே நான் குறிப்பிட்டபடி அவர் சர்வாதிகாரி. யாரும் எதுவும் கேட்க முடியாது. ஒரே ஒருவர் மட்டும்தான் அவரைக் கேட்க முடிந்தவர். அவரும் கட்டுப் படுத்திவிட முடியாது. அடுத்த தெருவில் இருந்த அவரினும் மூத்த - 'ஆலத்தெரு மாமா' என்று நாங்கள் அழைக்கும் உள்ளூர் உறவினர்தான் அவர்.

எங்கள் சின்ன அண்ணன் கொஞ்சம் நவ நாகரிகம். அப்போதைய நாகரீகப்படி, கால் குதிக்குக் கீழே புரளும் எட்டு முழ மல்வேஷ்டி, பளிச்சென்ற வெள்ளை லாங் கிளாத்தில் கல்லிஜிப்பா, கழுத்தில் மைனர் சங்கிலி, ஸ்நோதடவி பவுடர் பூசிய முகம், குனேகா செண்ட், காலில் கட்ஷ¥ என்று வலம் வருவார். ஆனால் இதெல்லாம் பெரியப்பா கண்முன்னால் கிடையாது. ஒரு தடவை குதிபுரளும் வேட்டியில் பார்த்த பெரியப்பா பிடரியில் ஒரு அறை
வைத்து "இதென்ன தெருப் பெருக்கக் கட்டுறியா? தூக்கிக் கட்டுடா" என்றார். அவர் எப்போதும் கணுக்காலுக்கு நாலு விரற்கடை மேலேயே, நெஞ்சுவரை வேட்டியை உயர்த்திக் கட்டுபவர். ஜிப்பாவும், மைனர்செயினும் பெரியப்பாவுக்குப் பிடிக்காது. அப்போதெல்லாம் நாதஸ்வரம் வாசிக்கிறவர்கள்தான் ஜிப்பாவும், மைனர் செயினும் போடுவார்கள். ஜிப்பா- மைனர் செயினுடன் அண்ணனை ஒருதடவை பார்த்துவிட்ட பெரியப்பா அப்போது ஒரு அறை கொடுத்து "இதேன்ன மேளக்காரன் மாதிரி? கழற்றி எறி" என்று பெரியப்பா கண்டித்திருக்கிறார். ஆனாலும் வெகுநாட்கள் வரையிலும் அண்ணன் அவற்றை விடவில்லை. பெரியப்பா கண்மறைவில் - எங்காவது வெளியூர் கல்யாணத்துக்கு, பக்கத்து நகரமான விருத்தாசலத்துக்கு சினிமா பார்க்கப் போகும் போது என்று - மேற்சொன்ன அலங்காரங்களுடன் செல்வார். பெரியப்பா கண்டித்தும் விலக்காத ஜிப்பாவையும் மைனர் செயினையும் அவருக்கே விரக்தி ஏற்பட்டு எடுக்கும் நிலை ஏற்பட்டது சுவாரஸ்யமானது.

ஒரு முறை பக்கத்து ஊரில் ஒரு திருமணத்துக்கு, பெரியப்பாவின் பிரதிநிதியாக
சின்ன அண்ணன் தன் நண்பருடன் போயிருந்தார். நண்பரும் அண்ணன் மாதிரியே
ஜிப்பா- மைனர்செயின் அணிந்திருப்பவர். திருமணம் முடிந்து விருந்து சாப்பிட்டு விட்டு
கையில் தாம்பூலத்துடன் இருவரும் வெளியே வந்தார்கள். எங்கள் வட்டத்தில் ஒரு
பைத்தியம் வெகு நாட்களாய்ச் சுற்றிக் கொண்டிருப்பான். 'தளவாய்ப் பித்துக்குளி' என்று நாங்கள் அவனை அழைப்போம். வெறும் கோவணம் மட்டுமே அணிந்து புழுதியும் அழுக்குமான உடலுடன், அடர்ந்த தலை முடி, தாடியுடன் கல்யாண வீடுகளில் தவறாமல், எச்சில் இலைக்காகக் காத்திருப்பான். வாய் எதையாவது பினாத்திக் கொண்டிருக்கும்.
அன்றும் அவன் கல்யாண வீட்டுக்கு முன்னால் பந்தல் காலருகே நின்று கொண்டிருந்தான். அண்ணன் நண்பருடன் வெளியில் கையில் தாம்பூலத்துடன் வருவதைப் பார்த்து, "இப்பத்தான்
மேளக்காரனே சாப்புட்டு வரான்'' என்றான். அண்ணனுக்கு என்னவோ போல ஆகிவிட்டது. 'இவன் என்னடா எங்கப்பா மாதிரியே சொல்றான்?' கிற மாதிரி நண்பரைப் பார்த்தார்.

அடுத்த விமர்சனம் அதிகார பூர்வமானது. அதே நண்பருடன் ஒருநாள் சினிமா
பார்க்க விருத்தாசலம் சென்றபோது கடைவீதியில் இருவரும் தனியான தெருவில் நடக்கிறமாதிரி சாவதானமாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அது மாசிமக
விழா நேரம். போலீஸ், சாலையில் கும்பலாக நடக்கும் பாதசாரிகளை போக்கு வரத்துக்கு இடைஞ்சல் இல்லாதபடி விரட்டிக் கொண்டிருந்தார்கள். அது தெரியாத இருவரும் ஜாலியாகக் கைகோர்த்தபடி சாலை நடுவில் வந்து கொண்டிருந்தார்கள். போலீஸ் ஸ்டேஷன் வந்ததையோ அங்கு ஏட்டு நின்று கொண்டிருப்பதையோ பார்க்கவில்லை. ஆனால்
ஏட்டு பார்த்து விட்டார். "ஏ மைனர் செயின் தம்பிகளா! இப்பிடி வாங்க!" என்று அழைத்தார். இரண்டுபேரும் மிரண்டு போனார்கள். போலீஸ் என்றாலே பயப்படுகிற காலம். பயந்தபடி ஏட்டருகே வந்தார்கள். "உள்ள போய் அப்டி உக்காருங்க. இது என்னா உங்கப்பா வீட்டு ரோடுன்னு நெனைப்பா? மைனர்செயினும் ஜிப்பாவும் போட்டா கண்ணு
தெரியாதா?" என்று சொடுக்கினார். 'இது என்னடா இது? மைனர் செயினுக்கும் ஜிப்பாவுக்கும் எங்கே போனாலும் நக்கலா இருக்கே' என்று இரு மைனர்களும் குமைந்தார்கள். அப்புறம் எதை எதையோ சொல்லிக் கெஞ்சி சினிமா பார்க்க வைத்திருந்த காசை அழுது விட்டு 'தப்பினோம் பிழைத்தோம்' என்று வீடு திரும்பினார்கள். அதற்குப் பிறகு யாரும் அண்ணனையும் அவர் நண்பரையும் ஜிப்பா-மைனர் செயினில் பார்த்ததில்லை.

அண்ணன் வாய்ஜாலம் மிக்கவர். அவர் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு பேசி யாரும் மீள முடியாது. வாதம் செய்தால் அவருக்கு ஒரு நியாயம் எதிரிக்கு ஒரு நியாயமாகத் தான் இருக்கும். தன் பொருள் என்றால் உயர்த்தியும் மற்றவர் பொருள் என்றால் மட்டம் தட்டியும் பேசுவது அவரது சுபாவம். ஒரு தடவை எங்கள் தெருவில் ஒரு மைனர் பையன், அப்போதைய
விடலைகளின் ஆசைக்கேற்ப எங்கேயோ ஒரு கூலிங் கிளாஸ் வாங்கி அணிந்து கொண்டு கம்பீரமாகத் தெருவில் வந்து கொண்டிருந்தான். அண்ணன் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அவர்தான் இந்த மாதிரி விஷயங்களுக்கு எல்லாம் அவன் ஈட்டுப் பையன்களுக்கு அத்தாரிட்டி என்பதால் அவரிடம் காட்டிப் பெருமைப்பட விரும்பினான். அண்ணனுக்கு தனக்கெதிரே
நேற்றைய பயல் கறுப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டு நடப்பது உறுத்தியது. அவரே வம்புக்கு இழுக்க நினைக்கையில் அவனே விளக்கில் வந்து விழும் விட்டில் பூச்சியென அருகில் வந்தான். கண்ணாடியைக் கழற்றி அண்ணனிடம் நீட்டி, "இதப் பார்த்துச் சொல்லுங்க அத்தான். எப்பிடி? தேவலையா?" என்றான். அண்ணன் முகத்தை அருவருப்பான எதையோ பார்க்கிற மாதிரி வைத்துக் கொண்டு, "ஏது இது?" என்றார். "நேத்து விருத்தாலம்
கடத்தெருலே வாங்குனேன். 15ரூபா பொறுமில்லியா?" என்றான் இறைஞ்சலாக. "என்னது? 15ரூபாயா? நல்லா ஏமாத்தி இருக்கான் உன்னை. மெட்றாஸ் ப்ளாட் பாரத்துலே இது 5 ரூபாய்க்கு சிரிப்பா சிரிக்குது! எத்தன வேணும் ஒனக்கு?" என்றார். பாவம் அவனுக்கு அழுகையே வந்து விட்டது.

அவர் ஒரு முறை ஹீரோ பேனா ஒன்றை வாங்கி வந்திருந்தார். அது ஜப்பான் சரக்கு. அப்போது நான் கல்லூரி மாணவன். என்னை விட்டால் அப்போதைக்கு ஊரில் அப்படிப் பட்ட வெளிநாட்டுப் பொருளைக் காட்டிப் பெருமைப்பட ஆளில்லை. எனவே என்னிடம் காட்டி, "தோ பாத்தியா? ஜப்பான் பேனா! என்ன விலை தரலாம்?" என்றார். அவர் சுபாவம் தெரிந்தபடியால் கொஞ்சம் உயர்த்தியே - அப்போது 10ரூபாய்க்கு ஹீரோ பேனா
கிடைத்தது - "15ரூபாய் கொடுத்தீங்களா?" என்றேன் பயந்து கொண்டே. "என்னது? 15ரூபாய்க்கு எவன் குடுக்கிறான்? எங்கே எனக்கு ஒரு நாலு பேனா 15ன்னு வாங்கிக் குடேன் பார்க்கலாம்!" என்று எகிறினார். "சொளையா 25ரூபா குடுத்தேன்" என்றார். "இருக்கும் இருக்கும்" என்று ஜகா வாங்கிவிட்டேன்- அவரிடம் மேற்கொண்டு வாதம் செய்வதில் பயனிருக்காது என்பதால்.

எங்கள் பக்கத்து ஊரான நேமத்திலிருந்து ஒரு கிழவன் மாம்பழங்கள், பலாப்
பழச்சுளை என்று சீசனுக்குத் தக்கபடி தலைச் சுமையாய்க் கொண்டுவந்து எங்கள் ஊரில் விற்பான். அவன் கொஞ்சம் முசுடு.விலையை எப்போதும் கூட்டியே சொல்லுவான். பேரமே பேச விடமாட்டான். அவன் சொன்ன விலைதான். எங்கள் அம்மா பேரம் பேசாமல் வாங்கியதில்லை. தினமும் அவனிடம் தகராறுதான்.கடைசியில், அம்மா தொடர்ந்து வாங்கும்
வாடிக்கையாளர் என்பதால் கொஞ்சம் விட்டுக்கொடுத்து விட்டு "எப்பவும் உங்கிட்ட இதே ரோதனைதான் ஆச்சி! சொன்ன வெலையைக் குடுக்கமாட்டியே" என்று முனகிவிட்டுக் கொடுத்து விட்டுப் போவான். சின்னண்ணன் இதை வெகுநாட்களாய்க் கவனித்து வந்தார்.

ஒருநாள் அவன் மாம்பழக்கூடையுடன் வந்தபோது சின்னண்ணன் அவனை அழைத்து மாம்பழங்கள் கேட்டார். அவன்சொன்ன விலைக்குப் பேரம் எதுவும் பேச வில்லை. அவனுக்கு மிகவும் சந்தோஷம். 5ரூபாய்க்குப் பழங்கள் கொடுத்தான்.
அண்ணன் பழங்களுடன் உள்ளே சென்றவர் கையில் 100ரூபாய் நோட்டுடன் வந்தார். "இந்தாப்பா! 5ரூபா போக மீதி 95ரூபா குடு" என்று 100ரூபாய் நோட்டை நீட்டினார்.. "ஐயோ சாமி! நீ தான் மொத போணி! எங்கிட்ட ஏது சில்லறே? 5ரூபாக் குடு சாமி" என்று பணிவுடன் சொன்னான். அண்ணன் அவனைத் திட்டத் தொடங்கிவிட்டார்.
"சில்லறை இல்லாம ஏண்டா வியாபாரம் பண்ண வர்ரே? சுத்த மடையனா இருக்கியே! 95ரூபாயக் குடுத்துட்டு 100ரூபாய வாங்கிக் கிட்டுப் போ!" என்று உள்ளே போய்விட்டார். பாவம்! அவனிடம் ஒரு ரூபாய் கூட இல்லை. கூடையில்
இருந்த பழமே 100ரூபாய்க்கு இல்லை. அழும் நிலைக்கு அவன் வந்து
விட்டான். "வேணாம் சாமி! எம் பழத்தக் குடுத்துடு. நான் போறேன்" என்று கெஞ்சினான். அண்ணன் வாங்கியதைத் தருவதற்கில்லை என்று மறுத்து விட்டார். ''95ரூபாயக் குடுத்துட்டு 100ரூபாய வாங்கிக்கோ1" என்பதுதான் அவரது பதிலாக இருந்தது.
பரிதாபத்துக்குரிய அக்கிழவன் அதன்பிறகு அனேக தடவைகள் நடையாய் நடந்துதான் அந்த 5 ரூபாயை வாங்க முடிந்தது. வாங்கிய பிறகு அவன் சொன்னான், "எதிர்த்த வூட்டு ஆச்சி எவ்வளவோ தேவலை. பேரம் பேசுனாலும் இந்த அழிச்சாட்டியம் இல்லே!" அதன் பிறகு அவன் எங்கள் தெருப் பக்கமே வருவதில்லை.

பெரியப்பாவிடம் சுமுகமாக இல்லையே தவிர அவரது அட்டூழ்¢யம் எல்லாம் அண்ணனிடம் இருக்கவே செய்தது. ஆனாலும் பெரியப்பாவிடம் இல்லாத ரசனை அவருக்கு இருந்தது. இசையில் அவருக்கு ஆர்வம் அதிகம். நான் முன்பே குற்¢ப்பிட் டுள்ளபடி எங்கள் ஊருக்கு முதலில் கிராமபோன் வாங்கி வந்து அந்த அதிசயத்தை ஊருக்குக் காட்டியவர் அவர்தான். ரேடியோ கூட அதுவரை கேட்டறியாத நாங்கள் அந்தக் கிராமபோன் பாட்டுக்களைக்
கேட்டு மயங்கினோம். அண்ணன் தெருத்திண்ணையில் கிராமபோனை வைத்து பிளேட்டைப் போட்டார் என்றால் ஊரே திரண்டு தெருவை நிறைக்கும். எம்.எஸ் பாட்டையும், தியாகராஜ பாகவதர் பாட்டையும், இன்னும் என்.எஸ்.கிருஷ்ணன், காளி என்.ரத்தினம் காமிக் பாடல்களை யும் அங்குதான் முதலில் கேட்டு என் இசை ரசனை உருவாயிற்று. இன்று
தொலைக் காட்சியில் அந்தப் பழைய பாடல்களைக் கேட்கையில் அவற்றை முதன் முதல் கேட்ட இளம்பருவ நாட்கள்தான் நினைவுக்கு வருகின்றன.

அடுத்து அவருக்கு வில்லி பாரதத்தில் அற்புதமான ஞானம். அவர் படித்தது எழாம் வகுப்புதான். ஆனாலும் பண்டிதர்களப் போல அனாயசமாக வில்லிபாரதப் பாடல்களை விளக்குவார். இது எப்படி சாத்யமாயிற்று என்றால்- எங்கள் ஊரில் ஆண்டுதோறும்
திரௌபதி அம்மன் கோயில் உற்சவத்தில் பாரத பூசாரி ஒருவர் - உள்ளூர் தச்சாசாரி-
பாரதம் பாடுவார். அண்ணன் தவறாது அந்தக் கதையைக் கேட்டு வளர்ந்தவர். பூசாரி யிடமே கேட்டறிந்து அவர் படிப்பது வில்லிபுத்தூரார் எழுதிய பாரதக் கதை என்று
தெரிந்து கொண்டு அப்பாவிடமிருந்து வாங்கிப் படிக்க ஆரம்பித்தார். ஆசான் யாரு மில்லை. அவரே திக்கித் திணறி, பதம் பிரித்து, சந்தம் அறிந்து, ராகம் போட்டுப் பாடிப் புலமை பெற்றார். பின்னர் அப்பாவிடமும் பாரதம் பாட வரும் வெளியூர்ப் பூசாரிகளிடமும் வாதம் செய்து அவர்களைத் திக்கு முக்காட வைப்பார். அதை அருகிருந்து கேட்டுக் கேட்டு எனக்கும் வில்லிபாரததத்தில் ஒரு ரசனையும் பிடிப்பும் ஏற்பட்டது. அந்த சின்ன வயதில்
அப்பாவிடமிருந்து கேட்ட பெரிய புராணமும், திருவிளையாடற் புராணமும், அண்ணனிடம் கேட்ட வில்லிபாரதமும் பின்னாளில் என் இலக்கிய ரசனைக்கும் படைப்புக்கும் பெரிதும் ஆதாரமாய் இருந்தன. அந்த வகையில் சின்னண்ணன் என் நினைவில் என்றும் நிலைத்திருப்பார்.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.

Tuesday, November 22, 2005

நினைவுத் தடங்கள் - 36

எனது கலை ரசனைக்கு சிறுவயதில் நான் பார்த்த தெருக்கூத்து மற்றும் நாடகங்களும் காரணம். அந்த வயதில் நான் நாடகங்களைக் காணும் வாய்ப்பு எங்கள் எதிர் வீட்டில் இருந்த 'தொந்தி மாமா'வால் நேர்ந்தது. கனத்த பாரியான உடம்பு; ஒரு சின்னக் குதிர்போல இருப்பார். பெருத்த தொந்தி; தலையில் சின்ன மடக்கைக் கவிழ்த்தது போல வட்டமாய் நரை கலந்த முடி; மூக்கினடியில் காய்ந்து கருமஞ்சளில் காட்சி தரும் பொடி; எப்போதும், 'சவரம் செய்து கொண்டு ஒரு வாரம் ஆகியிருக்கும்' என்று எண்ண வைக்கும் முகவாய்; பெருத்த தொந்தி வயிற்றில் தொற்றிக் கொண்டு முழங்காலுக்குக்குச் சற்று கீழே தொங்கும் நாலு முழ வேட்டி; இடது தோளி¢ல் மூன்று முழத்துண்டு. இதுதான் தொந்தி மாமா. அவரது வித்தியாசமான பெரிய தொந்தியை உத்தேசித்தே எல்லோரும் அவரை 'தொந்திப் பிள்ளை' என்று அழைத்தார்கள். வயது அப்போதே அறுபதுக்கு மேலிருக்கும்.

அவருக்குக் குழந்தைள் கிடையாது. வெகு தாமதத் திருமணம் என்று எங்கள் அம்மா சொல்வார்கள். அவரது மனைவி அம்மாவுக்கு நெருங்கிய தோழி. அவர்களுக்கு நாங்கள்தான் குழந்தைகள். அம்மா கைவேலையாய் இருக்கும்போது எங்களை அவர்களிடம்தான் கொண்டு விட்டுவிடுவார்கள். மாமாவுக்கு நானும் என் தம்பியும் செல்லம். சிறு குழந்தைகளாய் இருக்கையில் எங்கள் இருவரையும் - என் தம்பியைத் தோளிலும் என்னை இடுப்பிலுமாகச் சுமந்து திரிவார். அவர் மடியில் எப்போதும் வறுத்த பாசிப் பயறோ வெவித்த மொச்சையோ எங்களுக்காக இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்து நடக்கிற வயதில் அவர் எங்களைப் பக்கத்து ஊரில் நடக்கும் தெருக்கூத்துகளுக்கும் நாடகங்களுக்கும் அழைத்துப் போவார். அப்படி அவர் ஒரு முறை அழைத்துப் போனது அரிச்சந்திரன் நாடகத்துக்கு. அப்பா எங்களை அப்படியெல்லாம் இரவில் அனுப்ப மாட்டார்கள். ஆனால் மாமாவின் பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டு அனுப்புவது உண்டு. நாடகம் கிராமங்களில் இரவு பத்து மணிக்கு மேல்தான் துவங்கும். வேலைக்குப் போனவர்கள் எல்லாம் வீடு திரும்பி ராத்திரி சாப்பாடு முடிந்து சாவகாசமாய்த்தான் நாடகம் ஆரம்பிக்கும். அப்போது அரிச்சந்திரன் வேஷத்துக்குப் புகழ் பெற்றிருந்தவர் சோழமாதேவி என்ற ஊரைச் சேர்ந்த நடேசன் என்பவர். மதனத்தூர் குண்டு என்பவர் பபூன் வேஷக்காரர். ராஜபார்ட் - சோழமாதேவி நடேசன், பபூன் - மதனத்துர் குண்டு வருகிறார்கள் என்றால் நாலா பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனக்கூட்டம் நெரியும். மேடைக்கு அருகில் இடம் பிடிக்க இரவு ஏழு மணிக்கே போட்டியாக இருக்கும்.

சோழமாதேவி நடேசனுக்கு அற்புதமான குரல் வளம். ஆளும் உயரமாய் கனத்த கட்டுமஸ்தான உடல் கொண்டவர். ராஜபார்ட்டுக்கு ஏற்ற உடல் அமைப்பு. ஜிகினா உடையும், பின்தோளில் முதுகின் பின்னே தொங்கும் நீண்ட வண்ணச் சால்வையும் பெட்ரோமாக்ஸ் ஒளியில் தங்கமாய் ஜொலிக்கும் கிரீடமும் வளைந்த காலணியுமாய் அவர் எட்டுக் கட்டை சுதியில் பாடிக் கொண்டே மேடையில் பிரவேசிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். கே.பி.சுந்தராம்பாளைப் போல கம்பீரமான கனத்த குரல். கம்பீரமான ரிஷபம் ஒன்று ஹ¥ங்காரம் செய்கிற மாதிரி இருக்கும் அவர் மேடையில் பாடும்போது. அரிச்சந்திர நாடகம் மூன்று நாட்கள் விடியவிடிய நடக்கும். அவர் மயான காண்டத்தில், சுடலை காப்பவனாகத் தோன்றி சந்திரமதியை நோக்கி கேதாரகௌளையில் 'யாரடி கள்ளி நீலீ......' என்று எட்டுக் கட்டையில் முழங்குவது ஒரு பர்லாங்கு தொலைவுக்குக் கேட்கும். சுருதி சுத்தமான அந்த சங்கீதம் என்னை அந்தச் சின்ன வயதிலேயே உருக்கி சங்கீதத்தில் ரசனையை ஏற்படுத்தியது. அந்தக் காம்பீர்யம் மிக்க குரல் இதை எழுதும்போதும் - ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குப் பின்னேயும் காதில் ரீங்காரமிடுகிறது.

இப்படி பத்து வயதுக்குள் பல தடவை தொந்தி மாமா எங்களை அழைத்துப் போனது எனக்கு நாடகத்திலும் இசையிலும் ஆர்வத்தை உண்டாக்கியது. பின்னாளில் கல்லூரியில் படிக்கும்போது விடுதிவிழாவுக்கு நாடகம் எழுதித்தரவும் கோடைவிடு முறையில் சிறுவர்களைக் கொண்டு ஓரங்க நாடகங்கள் தயாரித்து உள்ளூரில் நடைபெறும் நாடகங்களுக்கிடையே நடத்தவும் சிறுவயதில் பார்த்த நாடக ரசனையே காரணமாக இருந்தது. இதற்கு வாய்ப்புண்டாக்கித் தந்த தொந்தி மாமா நினைவில் என்றும் இருப்பார்.

நாடகத்துக்கு மட்டுமில்லாமல் பக்கத்து ஊர் கோயில் திருவிழாக்களுக்கும் எங்களை அவர் அழைத்துச் சென்றிருக்கிறார். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. இன்று இராஜேந்திரப் பட்டணம் என்று அழைக்கப்படும் திருஎருக்கத்தம்புலியூர் தேவாரப்பாடல்களுக்குப் பண் அமைத்த ஒரு தாழ்ந்த குலத்துப் பெண் பிறந்த ஊர். அங்கு ஆண்டு தோறும் மாசிமாதத்தில் பத்து நாட்கள் - கொடியேற்றம் நடந்து தேரும் தீர்த்தவாரியும் எங்களூரில் ஓடும் ஸ்வேத நதி என்கிற வெள்ளாற்றில் நடைபெறும். அந்தப் பத்து நாளும் மாமா எங்களை - ஐந்து வயதும் மூன்று வயதுமாய் இருந்த என்னையும் என் தம்பியையும் மூன்று மைலும் இடுப்பிலும் தோளிலும் சுமந்து அழைத்துப் போய்க் காட்டி நள்ளிரவில் பத்திரமாய் அவர் அழைத்து வந்ததை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.

சொந்தமாகத் தனக்கென்று பிள்ளை இல்லாத குறையை இப்படியுமா தீர்த்துக் கொள்ள முடியும் என்று மனம் உருகுகிறது. என்னுடைய ரசனைக்கு படிப்பறிவில்லாத தொந்திமாமாவும் காரணமாய் இருந்தார் என்பதை என் நினைவுத் தடங்களிலிருந்து எண்ணிப் பார்க்கிறேன். நான் படித்து வேலைக்கு வந்து அவருக்கு ஏதாவது செய்து அவரது பாசத்துக்கும் என்னுள் ரசனையை அவரையும் அறியாமல் ஏற்படுத்தியமைக்கும் நன்றிக் கடன் செலுத்தமுடியாது போனது உறுத்தலாக உள்ளது. பின்னாளில் நான் எழுத்தாளனாய் ஆன நிலையில் அந்தக் கடனை என் நாவலில் ஒரு முக்கிய பாத்திரமாய் அவரை உலவ விட்டும், 'தமிழரசி' மாத இதழில் 'தொந்தி மாமா சொன்ன கதைகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதிப் பிறகு அது நூலாக வந்தபோது அந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்தும் ஒரளவு தீர்த்தேன். ஆனால் அவர் இறந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எனக்குத் தகவல் கிடக்காது போன சோகம் மட்டும் இன்னும் தீராது தங்கியுள்ளது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, November 08, 2005

நினைவுத் தடங்கள் - 35

எங்கள் வட்டாரத்தில் அப்போது எங்கள் குடும்பம்தான் எல்லா வகையிலும் முன்னணியில் இருந்தது. பொருளாதார நிலையிலாகட்டும், கல்வியிலாகட்டும், குடும்ப நபர்களின் எண்ணிக்கையிலாகட்டும் நாங்கள் தான் முதல். நாங்கள் எங்கள் பெற்றோருக்குப் பத்துப் பிள்ளைகள். ஐந்து பிள்ளைகள் ஐந்து பெண்கள். இப்போது போல அப்போது குடும்பக்கட்டுப்பாடு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

அனேகமாக எல்லா வீட்டிலும் சராசரியாக ஆறு முதல் எட்டுப் பிள்ளைகள். அப்போதெல்லாம் பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்வதை குறைவாக எண்ணுவ தில்லை. 'மாறாக மக்களைப் பெற்ற மகராசி' என்றே மதித்தார்கள். பின்னாளில் எங்களது அடுத்த கிராமத்தில் ஒரு பெற்றோருக்குப் பதினாறு பிள்ளைகள். 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ' வாழ்த்துவது பிள்ளைகள் எண்ணிக்கையில் என்ற அர்த்தத்தில் கொள்வதானால் அவர்கள் அதை நிரூபித்தார்கள். பெருவாழ்வு என்பதை செல்வச் செழிப்பில் என்று கொள்ளாமல் மன நிறைவான வாழ்வு என்று கொண்டால் அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். பல குடும்பங்களில் பத்துக் குழந்தைகள் போலப் பெற்றிருந்தாலும் இப்போது போல மருத்துவ வசதியில்லாததால் நிறையக் குழந்தைகள் மொட்டிலேயே உதிர்ந்து போனார்கள். பொருளாதார வசதி மற்றும் சுகாதார விழிப்புணர்வு காரணமாய் எங்கள் பெற்றோர்கள் எங்களை பாதிப்பு இன்றி வளர்த்து ஆளாக்கினர்கள். எங்களை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக உருவாக்கி இன்றளவும் எல்லோரும் நிறைவான வாழ்க்கை வாழ்வதில் எங்கள் அப்பாவைப் போல் எங்கள் அம்மாவுக்கும் பெரும் பங்கு உண்டு.

பின்னாளில் நான் தலை எடுத்து பணிக்கு வந்த பிறகு 1966ல் அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்த டேப் ரெகார்டர் கருவி ஒன்றை வாங்கினேன். அதில் முதல் பதிவாக என் தாயாரையே பேட்டி கண்டு பதிவு செய்தேன். அறுபதுகளில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகி இருந்த நேரம். "இப்போது பிள்ளைகள் அதிகம் வேண்டாம் என்று அரசாங்கமே தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதை எல்லோரும் குறைவாக எண்ணுகிற நிலைமை இருக்கிறதே- நீங்கள் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொண்டது பற்றிக் கூச்சமாக இல்லையா?" என்று பேட்டியின் போது கேட்டேன். "இதுலே என்ன கூச்சம்? வீடு நிறையப் பிள்ளைகள் இருப்பது ஒரு அழகுதான்! 'ஒரு மரம் தோப்பாகுமா? ஒரு பிள்ளையும் பிள்ளையாகுமா?' ண்ணுதான் அப்போ நெனச்சாங்க. இப்போ மாதிரி ரெண்டு போதும்னு நாங்க நெனைக்கலே" என்று என் தாயார் பதில் சொன்னார்கள்.

"ந்¢றையப் பிள்ளைகள் இருப்பது அழகாக இருக்கலாம். ஆனால் அத்தனை பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைமைக்குக் கொண்டு வரணும்னா இப்போது முடியுமா?'' என்று கேட்டேன். "வசதி உள்ளவங்களுக்கே முடியலையே?"

"இப்போ கஷ்டம்தான். அப்போ உங்களுக்கு காலையிலே பாலைக் கொடுத்து கையிலே ப்¢ஸ்கோத்து ஒண்ணக் கொடுத்து ஒரு ஓரமா ஒக்கார வச்சா நீங்க பதுவிசா ஒக்காந்திருப்பீங்களெ இப்போ அப்பிடியா? நாட்டுக் கைத்தறித் துண்டு ஒண்ணை- அப்போ நாலணா- இடுப்புலே கட்டினா சமத்தா பிள்ளைங்க அடம் புடிக்காம இருக்குமே இப்போ அப்படியா? டெரிலின்லே சட்டை, கால்சட்டை கேக்குதே! அப்போல்லாம் இந்த ஹார்லிக்சும், பால் பவுடரும் ஏது? அதெல்லாம் செலவுதான் ஆகும். கொடிக்குக் காய் பாரமா என்ன? உங்களாட்டமா எடுத்த துக்கெல்லாம் டாக்டருக்கிட்டே போனோம்? எல்லாம் கை வைத்தியம்தான்" என்று பெருமிதத்துடன் சொன்னார்கள்.

வீட்டில் எப்போதும் கோரோசனையும் தஞ்சாவூர் மாத்திரைகளும் இருக்கும். எங்களுக்கு என்று இல்லை - ஊரில் எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்கும் மாத்த்¢ரையும் மருந்தும் தந்து உதவுவார்கள். குழந்தை வைத்தியத்துக்காக என்று இல்லை -தங்கள் வீட்டில் நல்லது கெட்டது எதற்கும் அம்மாவையே 'ஆகிவந்த கை' என்று யோசனையும் உதவியும் கேட்பார்கள். எங்கள் தாயாரும் முகம் சுளிக்காமல் யார் கேட்டாலும் உதவுவார்கள். 95 வயது வரை வாழ்ந்து இப்போது 2001ல் தான் காலமானார்கள். கடைசி ஐந்து ஆண்டுகள் நினைவுப் பகுதி செயலிழந்து எங்களைக் கூட யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது தவிர எனக்குத் தெரிந்து நோய் என்று எப்போதும் படுத்ததில்லை. 90 வயதிலும் கண்ணாடி போடாமல் படிக்கவும் எழுதவும் அவர்களுக்கு முடிந்தது. வீட்டின் நிர்வாகம் அப்பாதான் என்றாலும் வரவுசெலவுக் கணக்கை தவறாமல் எழுதி வந்தது எங்கள் அம்மாதான். இன்றும் நான் கடந்த 50 வருடங்களாக வரவுசெலவுக் கணக்கை விடாது எழுதி வருவது அம்மாவிடமிருந்து கற்றதுதான். கடைசிவரை ஒரு பல் கூட எங்கள் தந்தையைப் போலவே அவர்களுக்கு விழவில்லை. அப்படிப் பட்ட உடல் நலமும் மன நலமும் உடையவர்களாக - அப்போதெல்லாம் நமது சராசரி வயது 28 ஆக இருந்தும் - எப்படி இருக்க முடிந்தது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

குழந்தை வளர்ப்பிலும் அப்படி ஒன்றும் தனிப்பட்ட விசேஷம் எதுவும் இருந்த தில்லை. இப்போதுபோல் காபியும் டீயும் இல்லை. காலையில் இட்டிலி , தோசை தொடர்ச்சியாக இல்லை. பழையதும் தயிரும் பழங்குழம்பும்தான். இருந்தும் நாங்கள் அதிகமும் நோய் வாய்ப்பட்டதில்லை. மாதம் ஒருமுறை கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவார்கள். சனிதோறும் எண்ணெய்க் குளியல். தின்பதற்கு ஏதாவது எப்போது கிடைக்கும். வீட்டில் செய்யும் பலகாரங்கள் தவிர தெருவோடு போகும் இலந்தை, மா, பலா, பாலப்பழம் என்று எது விற்றாலும் மாற்றாக நெல் போட்டு வாங்கித் தருவார்கள். படிப்பு விஷயத்தில் அவர்கள் பங்கு எதுவும் இல்லயே தவிர, நாங்கள் எல்லொரும் படித்து உத்தியோகத்துக்கு வந்தது தன் அண்ணன்கள் வீட்டைப் பார்த்துதான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மையில் எங்கள் தகப்பானார் 1914லிலேயே மெட்றிகுலேஷன் படித்தவர்கள். எங்கள் வட்டாரத்தில் அப்போது மெட்றிகுலேஷன் வரை படித்தவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை. அதனால் முன் யோசனையோடு அப்போதே எங்கள் அனைவரையும் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பினார்கள்.

அம்மா அப்படித் தன் பிறந்த வீட்டுப் பெருமையைப் பேசக் காரணம் உண்டு. எங்கள் தாய் மாமா ஒருவர் எங்கள் தந்தை படித்த காலத்திலே கல்லுரியில் படித்து வழக்கறிஞர் தொழிலில் அமோகமாய் சம்பாதித்து, அரசியலிலும் மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக - பக்தவத்சலத்தின் பார்லிமெண்ட்ரி செயலராக இருந்தவர். அவர் எங்கள் அப்பா போல தன் பிள்ளைக¨ளையும் தன் சகோதரர்கள் பிள்ளைகளையும் தானே படிக்க வைத்தவர். அதைப் பார்த்துத்தான் எங்கள் அப்பா எங்களையும் படிக்க வைத்ததாக எங்கள் தாயார் சொல்வது வழக்கம். எங்கள் தாயார் தன் பிறந்தகத்தைப் பற்றிப் பெருமைப்பட வேறொரு காரணமும் உண்டு.

எங்கள் தாயாரின் தந்தை ஜமீன் ஒழிப்புக்கு முன் ஒரு சின்ன கிராமத்துக்கு 'ஜாகிர்தார்' ஆக இருந்தவர். உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்ட அம்மாகுளம் என்கிற கிராமத்தின் வரிவசூல் மற்றும் பாராமரிப்பு உரிமை பெற்ற குட்டி ஜமீன். எங்கள் மாமாக்களில் ஒருவர் உடையார்பாளையம் ஜமீனில் பேஷ்கார் (நிதிப் பொறுப்பு) ஆக இருந்தவர். இதிலெல்லாம் எங்கள் அம்மாவுக்குப் பெருமை. ஜமீன் ஒழிப்பு நேர்ந்த போது ரு.60000 போல அரசாங்கத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையாக எங்கள் மாமாக்களுக்குக் கிடைத்தது.

அம்மாவின் பிறந்த ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை எல்லோரும் போய் ஒருமாதம் போல டேரா அடித்துவிட்டு வருவோம். அப்போது - 50 ஆண்டுகளுக்கு முன்வரை அந்தப் பக்கம் பேருந்தெல்லாம் இல்லை. ஓரிரு தனியார்கள் - டி.வி.எஸ் போல -நடத்தியவை பெரிய முக்கிய வழித்தடங்களில் மிகக் குறைந்த அளவில் இருந்தன. அதனால் எங்கும் மாட்டு வண்டிப் பயணம்தான். எங்கள் ஊரிலிருந்து ஏறக்குறைய 25 மைல் தூரம் அம்மா பிறந்த ஊரான வாணதிரையன் பட்டணம் . இப்போதைய ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் செல்லவேண்டும். நீளமான கூண்டு வண்டியில் விடியற்காலை 4 மணிக்குப் புறப்பட்டால் மாலை இருட்டும் வேளைக்கு 6 மணியளவில் போய்ச் சேர முடியும். மேல் படிப்புக்குப் போன மூத்த இரு சகோதரர்கள் தவிர அப்போதைக்கு இருந்த 5,6 பிள்ளைகளுடன் கட்டுசாதம் கட்டிக்கொண்டு அப்பா அம்மாவுடன் கிளம்புவோம். வண்டி மெதுவாகத்தான் போகும். வேகமாகப் போக சாலையும் அனுமதிக்காது. ஏறக்குறைய 12 மணிக்கு மேலாக பயணம் செய்தாலும் எங்களுக்கு அலுத்ததில்லை. பள்ளிக்கூடச் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை, வீட்டுக்கு வெளி¢யே புதிய இடங்களின் ஈர்ப்பு என பயணம் உற்சாகமாய் இருக்கும். இடையில் பத்து மைலுக்கு ஒரு தடவை சாலையோரம் தென்படும் பெரிய குளத்தருகே வண்டியை அவிழ்த்து நிறுத்தி கட்டுச்சோறு சாப்பிடுவோம். அது ஒரு ரசமான அனுபவம்.

மாமா வீட்டின் பின் பகுதியில் பெரிய மொட்டை மாடியுடன், உள்ளே விசால மான காலரி ஹால் போன்ற கூடம். அதில் உயரமான சுவரில் எங்கள் தாத்தா காலத்திலிருந்தே மாட்டப் பட்டிருந்த 3அடி உயரமான பெரிய பிரேம் போட்ட ரவிவர்மா ஓவியங்கள் இன்றும் இன்றும் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்முன்னே அப்படியே நிற்கிறது. பகீரதன் தவம், தமயந்தி அன்னத்தைத் தூது அனுப்புதல், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் என கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஓவியங்கள் என் கலைரசனைக்கு அந்தச் சின்ன வயதில் தூண்டுகோலாக இருந்தன. அதற்காகவே நான் அடிக்கடி அன்கே போக ஆசைப்படுவேன். இன்று அறுபது ஆண்டுகளுக்குப் பின் அங்கே ஒருமுறை போனபோது வீடு கைமாறி உருவம் மாறி பழைய அடையாளத்தை இழந்து எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. மாமாக்களி¢ன் வாரிசுகளும் இப்போது அங்கில்லை.

பெரிய இடத்திலிருந்து நிறைய நகைகளுடன் வந்த எங்கள் அம்மாவுக்கு ஊரில் மிகுந்த மரியாதை. எங்களது வளர்ச்சியில் அப்பாவுக்கு மிகவும் ஒத்துழைத்து, பெரியப்பா சுமத்திய பெரிய கடன் பங்கை அடைக்க தன் நகைகளை முகம் சுளிக்காமல் தந்துதவிய அம்மாவின் தியாகத்தை அப்பா நினவுகூர்வதுண்டு. ஆனால் அம்மா அதனைப் பெரிதாகச் சொல்லிக் காட்டாவிட்டாலும் அந்கக் காலத்தில் மிகக் கௌரவமாய்க் கருதப் பட்ட காசுமாலையைக் கொடுத்ததை ஆதங்கத்தோடு குறிப்பிடுவதுண்டு. பின்னாளில் மீண்டும் காசுமாலை வாங்கிவிட வேண்டும் என்ற அம்மாவின் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை. ஏனென்றால் எங்கள் பத்து பேரையும் ஆளாக்கி, திருமணம் செய்வித்துக் கரையேருவதற்குள் அம்மாவுக்கு அதற்கு நேரமோ வாய்ப்போ கிட்டவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் குறைதான்.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

Friday, July 08, 2005

நினைவுத் தடங்கள் - 34

எங்கள் பெரியப்பாவுக்கு நேர் எதிரிடையான குண இயல்புடையவர் எங்கள் அப்பா. அவர் முரடர் என்றால் இவர் சாந்த சொரூபி. எங்கள் அப்பாவுக்குக் கோபம் வந்து பார்த்ததாக எங்களுக்கு நினைவில்லை. எனக்கு வினவு தெரிந்து எங்களில் யாரையும் அடித்ததில்லை. கண்டிப்பு உண்டே தவிர தண்டனை தருவதில்லை. வேலையாட்களைக் கூட பெரியப்பா போல நாக்கில் நரம்பின்றித் திட்டியதில்லை. அதிக பட்சம் 'மடையா', 'முட்டாள்' என்பதுதான் அவர்களது திட்டலாக இருக்கும். அதனால் பொது மக்களிடம் எங்கள் அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஒப்பிட்டுப் பார்க்க பெரியப்பாவின் குணம் அதற்குத் துணை புரிந்தது. இன்றும் நாங்கள் கிராமத்துக்குச் சென்றால் எங்கள் அப்பாவுக்குக் கிடைத்த அதே மரியாதை எங்களுக்குக் கிடைக்கும். எங்கள் அப்பா காலமான பிறகு என் சகோதரர்கள் அனைவரும் தங்கள் பங்கு நிலத்தை விற்றுவிட்டு சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் வீடு கட்டி இடம் பெயர்ந்த போது, நான் ஊருக்கு அருகில் உள்ள நகரில் வசித்ததால் மூத்தவர்கள் பலர் எங்கள் அப்பாவின் நினைவாக நானாவது நிலத்தை விற்காமல் பிறந்த மண்ணுடன் என்றும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதால் நான் விற்க வில்லை. அந்த அளவுக்கு எங்கள் தந்தையார் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எங்கள் அப்பாவின் தர்ம சிந்தையும் தயாள குணமும் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. எங்கள் எல்லோரையும் படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது போலவே எங்கள் ஊரில் உள்ள எல்லாப் பிள்ளைகளும் படித்து வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்கள். இரவில் சாப்பாடு முடிந்ததும் அண்டை அயலில் உள்ள பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்பிப்பதை வேடிக்கை பார்க்கவே இரவில் கூட்டம் கூடும். ஏனெனில் அப்போது ஆங்கிலம் பேசுவது ஒரு அதிசயம் மக்கள் மத்தியில். தங்கள் பிள்ளைகளும் அப்படிப் பேச எஙகள் தந்தை முயற்சி எடுப்பதில் அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. அப்படி அன்று எங்கள் தந்தையார் தூண்டியதே இன்று எங்கள் ஊரில் நிறைய பேர் - பெண்கள் உட்பட- படித்து முன்னேறி இருப்பதற்கு ஒரளவு காரணம் எனலாம்.

எல்லோரும் கல்வி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது போலவே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டினார்கள். அப்போதெல்லாம் காலரா போன்ற கொள்ளை நோய் வந்தால் மருத்துவ உதவி பெற எந்த வசதியும் வாய்ப்பும் மக்களுக்குக் கிடையாது. எங்கள் தந்தையார் காலரா மருந்தை தபாலில் வரவழைத்து கிராமத்தில் - குறிப்பாக சேரியில் காலரா வரும் போது, மிகுந்த பரிவோடு கொடுத்து எவ்வளவோ பேரைக் காப்பாற்றி யிருக்கிறார்கள். பெரியவர்களானால் சர்க்கரையிலும், குழந்தைகளானால் தேனிலும் காலரா மருந்தை வயதுக்கேற்றபடி சொட்டுகள் விட்டுத் தானே குழைத்து மணிக் கொரு தரம் உள்ளுக்குக் கொடுத்து கடுமையான பத்தியம் சொல்லி பேணிஉள்ளார்கள். சாவின் விளிம்புக்குப் போய் காப்பாற்றப் பட்டவர்கள் மிகுந்த விசுவாசத்துடன் வெகுநாள் வரை பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

அதே போல பாம்புக்கடிக்கும் ஒரு அற்புத மூலிகையைக் கொண்டு பலரது உயிர்களை எங்கள் சுற்று வட்டாரத்தில் காப்பாற்றி இருக்கிறார்கள். பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கட்டிலில் கிடத்தி தூக்கி வரப்பட்ட பலர் இந்த பச்சிலை வைத்தியத்தால் பிழைத்து எழுந்து நடந்து போன அதிசயத்தை இன்றும் எங்கள் ஊரில் நினைவு கூர்வதுண்டு. எங்கள் தந்தையாரைப் போலவே எங்கள் தாயாரும் குழந்தை வைத்தியத்தில் அக்கறை கொண்டு தஞ்சாவூர் மாத்திரை, கோரோசனை போன்ற மருந்துகளை வாங்கி வைத்துக் கொண்டு இரவு பகல் பாராது கொடுத்து உதவி இருக்கிறார்கள். எங்கள் தந்தையார் இப்படிப் பல உயிர்களைக் காப்பாற்றிய புண்ணியத்தால்தான் நாங்கள் பத்து பிள்ளைகளும் அமோகமாக வாழ்வதாக ஊரின் மூத்த குடிகள் இன்றும் சொல்லி எங்களை வாழ்த்துவார்கள்.

எங்கள் தந்தையார் தீவிரமான சிவபக்தரும் கூட. தினமும் அதிகாலையில் வயற்காட்டுக்குச் சென்று பயிர்களைப் பார்த்துவிட்டுப் பத்து மணி அளவில் திரும்பிய பிறகு அவர்களே கிணற்றில் நீரிறைத்து ஆசாரமாய்க் குள்¢த்துவிட்டு சிவபூஜை செய்த பிறகுதான் ஒரே வேளையாக மதிய உணவை உட்கொள்வார்கள். தினமும் புற்று மண்ணால் சிவலிங்கம் செய்து சந்தனமும் பூவும் சாத்த்¢, தேவாரமும் திருவாசகமும் பாடி ஒரு மணி நேரத்துக்கு மேலாக பூசை செய்வார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு எங்கள் எல்லோருக்கும் அவை பாடமாகி விட்டன. அதன் தாக்கமே என் இலக்கிய ஈடுபாட்டிற்கு அடிப்படை என எண்ணுகிறேன். இரவில் அனுஷ்டானம் செய்து சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து வந்த பிறகுதான் இரவு உணவு. இந்த நியதியை அவர்கள் உடல் தளர்ந்து, விழும் வரை கடைப்பிடித்தார்கள். அவர்கள் செய்த பூஜாபலன்தான் நாங்கள் இன்று குறைவின்றி வாழ்வதற்குக் காரணம் என்று எல்லோரும் சொல்வார்கள். அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்ச்சி நடந்ததை இங்கே சொல்ல வேண்டும்.

லால்குடியில் வாழ்ந்த என் மூத்த சகோதரி ஒருமுறை குழந்தைகளுடன் பஸ்ஸில் எங்கள் ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார்கள். அப்போது திருச்சியிலிருந்து எங்களூர் வரை பஸ் ஓடவில்லை. மூன்று மைலுக்கு அப்பால் உள்ள ஊரோடு பஸ் வந்து திரும்பிவிடும். ஊருக்கு வரவேண்டுமானால் அப்பாவுக்குக் கடிதம் போட்டு வண்டியை பஸ் நிற்கும் ஊருக்கு வரச்செய்துதான் வீட்டுக்கு வர முடியும். அப்படி அக்கா கடிதம் முன்னதாகப் போட்டிருந்தும் அன்று வரை அது கிடைக்காததால் வண்டி அனுப்பப் படவில்லை. பஸ் வந்த நேரம் அந்தி மயங்கும் வேளை. இடமோ எட்டியவரையில் அத்துவானக் காடு. திருடர்களும் குடிகாரர்களும் இருட்டிய பிறகு புழங்கும் இடம். வண்டியைக் காணோம் என்றறிந்ததும் என் சகோதரிக்கு அழுகையே வந்துவிட்டது. சின்னஞ் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கழுத்திலும் கையிலும் நகைகளுடன் எப்படி ஊர் போய்ச் சேரப்போகிறோம் என்று திகைத்து நிற்கையில் தெய்வமே இரக்கப்பட்டு அனுப்பியதுபோல் ஒரு கட்டை வண்டி விறகேற்றிச் சென்று விற்று விட்டுத் திரும்பியது - இருட்டில் யாரோ குழந்தைகளுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்து நின்றது. "யாரம்மா இந்த வேளையில் தனியாக ..?" என்று வண்டி யோட்டி அனுதாபத்துடன் கேட்க, என் சகோதரி வண்டி வராததைச் சொல்லித் தேம்பி இருக்கிறார்.

வெகு பாமரனான அந்த வண்டியோட்டி இறங்கி வந்து யார் எவர் என்று விசாரித்தார். சகோதரி எங்கள் ஊரையும் எங்கள் அப்பாவின் பெயரையும் சொல்ல அந்த ஆள் 'ஆ' என்று அதிர்ந்தவராய் "அம்மா அந்தப் புண்ணியவான் பொண்ணா நீங்க? அவுரு போட்ட பிச்சையிலே தான் நான் இன்னும் உசுரோட இருக்கேன். நல்ல பாம்பு கடிச்சி கட்டையா நீட்டி விட்டவன பச்சிலை குடுத்துக் காப்பாத்துன புண்ணியவான் அம்மா உங்க அய்யா! அவுரு பண்ண தருமம் தான் இந்த நேரத்திலே என்ன இங்க அனுப்பியிருக்கு. நீ பயப்படாதே. ஏறு வண்டியிலே. நா கொண்டு போய் அப்பா கிட்டே விடுறேன்" என்று அபயம் கொடுத்தார். பெற்றோர் செய்யும் புண்ணியம் பிள்ளைகளைக் காக்கும் என்பதை மெய்யாக்கியது போல நடந்தது இது. இப்படி எங்கள் தந்தையார் செய்த தர்மமும் சிவபூஜையும் எங்களைக் காத்ததே தவிர அவர்களைக் காக்கவில்லை என்பது பெரிய சோகம். அறுபது வயதில் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் கண்ணருகே அடிபட்டு அப்போது அது பாதிப்பை உண்டாக்காமல் பின்னாளில் சிறுகச் சிறுக கண் பார்வையை இழக்கும்படி ஆனது.அது அவர்களது நித்திய நியமங்களையும் பரோபகாரச் செயல்களையும் பாதித்தது. கடைசி இருபது ஆண்டுகள் இருட்டில் வாழ்வது போன்ற அந்தக வாழ்க்கை வாழ்ந்த கொடுமையைச் சொல்லி உருகாதவர் இல்லை. அவரிடமே சிலர் கேட்பார்கள்: " இவ்வளவு தர்மமும் சிவபூஜையும் செய்தீர்களே, உங்களுக்கு ஏன் இந்தக் கொடுமை?" என்று கேட்பவர்கள்¢டம், "நான் இந்த ஜென்மத்தில் ஏதும் பாவம் செய்ததில்லை. இது போன ஜென்மத்தின் கர்ம வினை" என்று அவர்களைத் தேற்றுவார்கள். ஜென்மம், பாவ புண்ணியம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவரையும் எங்கள் தந்தையாரது வாழ்க்கை சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, June 21, 2005

நினைவுத் தடங்கள் - 33

எங்கள் பெரியப்பா முரடர். மனைவி, பிள்ளை யாரும் எதிரில் நின்று பேச முடியாது. வாயில் வண்டைச்சொல்தான் திட்டுவதற்கு வரும். ஆட்களையெல்லாம் வசவுகளால் தான் அழைப்பார். அவர் முசுடு என்பதால் ஊரிலும் யாரும் கிட்டே நெருங்குவதில்லை. பேசவே முடியாது என்றால் அவருக்குப் புத்திமதி சொல்ல முடியுமா? அவரைவிட மூத்த, அடுத்த தெரு சொந்தம் ஒருவர்தான் - அவரை ஒருமையிலும், 'டா' போட்டும் பேசக்கூடியவர். மனைவி மக்களுக்கு முக்கியத் தேவை என்றால் கூட அவர்தான் வந்து சொல்ல வேண்டும். ஊர்ப்பரம்பரை பெரிய மனிதர் என்ற கர்வம் நிறைய. அதனால் தெருவில் நடக்கும்போது எங்கோ வெகு தூரத்தில் பார்வை- அரிமா பார்வை போல - பார்த்தபடி
நடப்பாரே தவிர, பக்க வாட்டில் யாரையும், யார் வீட்டையும் பார்க்க மாட்டார். யாரிடமும் வழியில் நின்று பேசமாட்டார். யார் வீட்டுத் திண்ணையிலும் உட்கார மாட்டார். ஊர் `உஷார் கமிட்டி'த் தலைவர் என்பதால் பஞ்சாயத்து எதுவும் அவரிடம் தான் வர வேண்டும்.

எங்கள் வீட்டெதிரில் ஒரு கல் -விளக்குத் தூண் வெகு நாட்கள் நின்றது இப்போதும் நினைவில் நிற்கிறது. அதற்குக் காரணம் அந்தத் தூணின் முக்கியத்துவம் தான். ஊரில் ஏதும் திருட்டு நடந்து ஆள் பிடி பட்டால் அந்தத் தூணில் கொண்டு வந்து கட்டி விடுவார்கள். மந்தைப் புளிய மரத்திலிருந்து ஒருபாகம் அளவிலான மிலார் கள் பத்துக்குக் குறையாமல் வெட்டிக் கொண்டு வந்து, திருட்டுக்கொடுத்தவர் எங்கள் குறட்டில் வைத்து விடுவார். பெரியப்பா உள்ளே இருப்பார். தெரு நிறைய, வேடிக்கை பார்க்க ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாய் ஒரு பெரிய பயங்கரக் காட்சியைப் பார்க்கப்போகிற படபடப்பில் இடித்துக் கொண்டு நிற்கும். பெரியப்பா வெளியே வருவதை கண்கொட்டாது அத்தனை பேரும் எதிர் பார்த்திருப்பார்கள். உள்ளே தகவல் போய் வெகு நேரம் ஜனங்களைக் காக்க வைத்த பின்னரே, இடுப்பு நாலுமுழ வேட்டியை நெஞ்சுவரை உயர்த்திக் கட்டியபடி தொண்டையைக் காறியபடி வருவார். அவருக்கு ஆஸ்த்துமா தொந்தரவு உண்டு. அதனால் எப்போதும் தொண்டையைக் காறியபடியே இருப்பார். கச்சலான உடம்பு. அதில் பலம் ஏதும் இருக்குமா என்று சந்தேகம் ஏற்படும்.

அவர் தலை தெரிந்ததும் 'கப்'பென்று கூட்டம் சப்தமெழுப்பாமல் அடங்கி புலிக் கூண்டிலிருந்து வரும் புலியைப் பார்க்கிற அச்சத்தோடு பார்க்கும். பெரியப்பா தலை உயர்த்தி கல் கம்பத்தில் கட்டப்பட்டிருப்பவனைத் தீர்க்கமாகப் பார்ப்பார். பூனை எலியைப் பார்க்கிற மாதிரி இருக்கும். அதிலேயே அவனுக்குப் பாதி உயிர் போய்விடும்.

'ஹ¥ம்......' என்றொரு ஹ¥ங்காரம் எழும். ''என்ன ?'' என்பது போல புகார் சொன்னவனைப் பார்ப்பார். அவன் தன் களத்தில் அல்லது வீட்டுக்குள் ராத்திரி நெல் திருடியதைச் சொல்லவும், நிமிர்ந்து குற்றம் சாட்டப்பட்டவனைப் பார்த்து, ''டலே! நெஜமா?" என்று கர்ஜிப்பார். எவ்வாளவு நெஞ்சழுத்தும் உடையவனாலும் அவர் முன்னே பொய் சொல்ல முடியாது. நடுங்கியபடி, 'சாமி! இனிமே செய்யமாட்டேன் சாமி!'' என்று பயத்தோடு அலறுவான்.

அவ்வளதுதான்! 'வீச்'சென்று பாய்ந்து அடுக்கி வைக்கப் பட்டிருக்கும் புளிய மிலாரை அள்ளிக் கொண்டு அவனெதிரில் போய், கண் மூக்குப் பாராமல் சரமாரியாக விளாசுவார். ஏதோ சாமியாடியின் ஆவேசம் போல வெறித் தாக்குதலாக அது இருக்கும். பரிதாபத்துக்குரிய அந்த மனிதனில் ஓலம் தெருவே எதிரொலிக்கும். குழந்தைகள் அக் குரூரத்தைப் பார்த்து வாய் விட்டு அழாமல் தேம்புவார்கள். அதிகபேருக்கு
அது பார்த்துப் பார்த்து மரத்துப் போன காட்சி. சிலை போல- பாரதி எழுதியபடி 'நெட்டை மரங்களாய்' நின்று பார்த்திருப்பார்கள். கை ஓய்கிறவரை, அல்லது மிலாறுகள் தீர்கிர வரை இந்தச் சித்திரவதை நடக்கும். யாரும் தட்டிக் கேட்பதில்லை; கேட்கவும் முடியாது. அவர்தான் நீதிபதி. அவர் தருவதுதான் தண்டனை. கிரேக்க அரசர்கள் அடிமைகளைப் புலியுடன் மோதவிட்டு அந்தக் குரூரத்தை ரசித்த அந்தக் காலத்து மாக்களைப் போலத்தான் இந்த இருபதாம் நூற்றாண்டுத் துவக்கத்திலும் மக்கள் மாக்களாக இருந்தார்கள். போலீஸ் எல்லாம்
இப்படிபட்ட கிராமங்களில் நுழைந்து தலையிடுவதில்லை. இது போல ஊர்ப் பெரிய மனிதர் வைத்ததுதான் சட்டம்.

இதனால் எங்கள் பெரியப்பாவின் வம்சத்தையே ஊர் மறைவாகத் தங்களுக்குள்ளே கரித்துக் கொட்டும். அதற்காகப் பெரியப்பா ஒரு நாளும் கவலைப் பட்டதில்லை. ஆனால் அவரது வாரிசுகள் பின்னாளில் கவலைப்பட நேர்ந்ததுதான் காலத்தின் கட்டாயம். ஆனல் அந்தக் கொடூரத்துக்குச் சாட்சியாய் நின்ற கல்க் கம்பம் இன்றும் மக்கள் நாவில் புழக்கத்தில் இருப்பது தான் வரலாற்றின் நிதர்சனம். பஞ்சாயத்து, போலீஸ், நீதிமன்றம் என்று வந்துவிட்ட இந்த நாளிலும், வழக்கு என்று வந்து வாய்ப் பேச்சில் ஒருவன் கட்டடையாத தருணங்களில் அவர்களை அற்¢யாமலே, மனதில் பதிந்து விட்ட வாசகமாய், '' எலேய்! எதாவது மறுத்துப் பேசுனே- நடுத்தெருப்பிள்ளை வீட்டுக் கல்த்தூணுலே
புடிச்சுக் கட்டிடுவேன்!" என்றுதான் வரும். (எங்கள் தெருதான் நடுத்தெரு; நடுத்தெருப்பிள்ளை வீடு என்பது எங்கள் வீட்டைக் குறிக்கிறது) ஆனால் சொன்னபடிக் கட்டிவைக்க அந்தத் தூண் தான் இப்போது அங்கு இல்லை!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, May 31, 2005

நினைவுத் தடங்கள் - 32

எனது குண இயல்புகளையும், இலக்கிய ஈடுபாட்டையும், நிர்வாகத்திறன்களையும் உருவாக்கியதில் எங்கள் ஆசான் 'ஐயா'வின் பங்குக்கு ஈடானது என் தந்தையாரின் பங்கும். அவருடைய கல்வி எங்களை உருவாக்கப் பெரிதும் காரணமாக இருந்தது. அவர்கள் அந்தக் காலத்து (1914) மெட்ரிகுலேஷன். அவருக்கு முன்னால் எங்கள் வம்சாவளியில், அதிகம் படித்தவர்கள் யாரும் இல்லை. எங்கள் வட்டாரத்தில் கூட இல்லை. அதனால் அவருக்கு நிறைய மக்களிடம் மரியாதை இருந்தது. அந்த வட்டாரத்தில் யாருக்காவது தந்தி வந்தாலும் நீதிமன்றத் தீர்ப்பு கிடைத்தாலும் அவற்றைத் தமிழில் படித்துச் சொல்ல எங்கள் தந்தையைத்தான் தேடி வந்தார்கள். அதோடு எங்கள் ஊரில் எங்கள் வீட்டில் மட்டுமே மணியடிக்கும் சுவர்க் கடிகாரம் இருந்தது. 1932ல் எங்கள் தந்தையாரால் வாங்கப்பட்ட அந்தக் கடிகாரம் அவர் காலமான பிறகும்கூட 50 ஆண்டுகளுக்கும் மேலாக உழைத்தது. யார் வீட்டிலாவது பிரசவம் என்றால் குழந்தை பிறந்த நேரம் அறிய எங்கள் வீட்டுக்குத்தான் மணி கேட்டு ஆள் வரும். மணியையும் பார்த்து எங்கள் அப்பாதான் சொல்ல வேண்டும். அவர்கள் ஊரில் இல்லாத போது சொல்ல வேண்டும் என்பதற்காக அப்பா எங்கள் வீட்டு மூத்த பிள்ளைகளுக்கும், அண்டை அயல் பிள்ளைகளுக்கும் மணி பார்ப்பது எப்படி என்று கற்றுக் கொடுத்திருந்தார்கள். இதிலொரு வேடிக்கை என்னவென்றால் மணி பார்க்க வருபவர்கள் பிள்ளை பிறந்ததும் அவர்கள் வீட்டிலிருந்து வந்து பார்ப்பதற்குள் ஆகியுள்ள நேரமும் கணக்கில் சேர்ந்துவிடும். அதன் அடிப்படையில் எழுதப்படும் ஜாதகங்கள் எந்த அளவுக்கு முழுமையான பலன்களைச் சொன்னதோ தெரியவில்லை.

படிக்கும் காலத்திலேயே தந்தையார் சுவாமி வேதாச்சலம் - மறைமலை அடிகள், திரு.வி.க, கடலூர் ஞானியாரடிகள் ஆகியவர்களின் தமிழுணர்வால் ஈர்க்கப்பட்டு தமிழு ணர்வும் சைவமத ஈடுபாடும் கொண்டவர்களாக இருந்தார்கள். அதனால் சைவ சித்தாந்த நூல்களையும் பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் ஆகியவற்றையும் தானே முயன்று படித்துத் தேர்ந்தார்கள். அதன் காரணமாய் சிவதீட்சையும் பெற்று தினமும் சிவபூஜை செய்த பின்பே சாப்பிடும் வழக்கத்தையும் இறுதிவரை கொண்டிருந்தார்கள்.

அவர்கள் இளைஞராக இருந்தபோது செல்வாக்காக இருந்த ஜஸ்டிஸ் கட்சியால் ஈர்க்கப்பட்டு தனது திருமணத்தை அய்யர் இல்லாத தமிழ்த் திருமணமாக - ஓதுவாரைக் கொண்டு தமிழில் மந்திரங்களைச் சொல்லச்செய்து, பலரது எதிர்ப்பையும் மீறி செய்து கொண்டார்கள். இருபதுகளில் அது பெரிய புரட்சியாகக் கருதப் பட்டிருக்கிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஓராண்டில் தலைப்பிரசவத்தில் மனைவி இறந்துவிட அய்யர் வைக்காமல் திருமணம் செய்ததால்தான் அப்படி நேர்ந்தது என்று எல்லோரும் பேசினார்கள். அதனால் அடுத்த
திருமணத்துக்கு அய்யர் வைத்தால்தான் பெண் தரமுடியும் என்று மறுப்புக் கிளம்பவே எங்கள் தந்தையார் தன் பகுத்தறிவுக் கொள்கையைப் பலி கொடுக்க வேண்டியதாயிற்று. அதன்படி அய்யர் வைத்த திருமணமாய் எங்கள் தாயாரை மணந்தார்கள்.

தான் படித்திருந்ததால், தன் பிள்ளைகளான எங்கள் ஐவரையும் உயர்படிப்பு படிக்க வைத்ததும் உயர் அரசுப்பணிகளில் ஈடுபடுத்தியதும் அந்தக் காலகட்டத்தில் புதுமையாக வியந்து பேசப்பட்டது. உண்மையில் அந்த வட்டாரத்தில் நாங்கள்தான் முதல் பட்ட தாரிக் குடும்பமும் ஆகும். சின்ன வயதிலிருந்தே எங்களுக்குப் புராணக் கதைகளைச் சொல்லி இறையுணர்வும் அறவுணர்வும் கொண்டவர்களாக வளர்த்தார்கள். அவர்கள் காலப்பிரக்ஞை மிக்கவர்கள். எதையும் நேரம் தவறாது செய்ததுடன் எங்களையும் அப்படியே பழக்கியதால் எங்கள் பணியில் சிறப்பாகப் பெயர் பெற அது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அது மட்டுமல்லாமல் நாணயம் தவறாத வாழ்க்கை அவர்களுடையது. எங்களையும் அந்த நெறியுடனே வளர்த்ததால் நாங்கள் எங்கள் பணிக்காலத்தில், கையூட்டுக்கு ஆசைப் படாத நாணயம் மிக்கவர்களாக வெற்றிகரமாக ஓய்வுபெற முடிந்தது. அதனால் இன்றும் ஊருக்குச் சென்றால் தந்தையாருக்குக் கிடைத்த அதே மரியாதை மக்களிடம் எங்களுக்கும் கிடைக்கிறது.

எங்களைப் படிக்க வைத்தது மட்டுமல்லாமல் எங்கள் ஊரில் மற்ற பிள்ளை களையும் உயர் படிப்புக்கு அனுப்பத் தூண்டினார்கள். இருந்தும் பொருள் வசதியில்லா ததால் யாரும் அப்போது எங்களைப் பின் பற்ற முடியவில்லை. அப்போது இப்போது போல ஊருக்கு ஊர் அஞ்சல் ந்¢லையம் இல்லை. எங்கள் ஊருக்கு, பத்து கல் தொலைவில் உள்ள திருமுட்டம் என்கிற ஊரிலிருந்துதான் வாரம் இருமுறை அஞ்சல்கள் வரும். எங்கள் அப்பா தினமணியும், ஜஸ்டிஸ் கட்சிப் பத்திரிகை ஒன்றும் சந்தாக் கட்டி வரவழைத்தார்கள். மூன்றுநாள் பேப்பர் சேந்து வரும். அண்டை அயலில் உள்ளவர்களையும் வழியோடு போகிறவர்களையும் கூட்டிவைத்துக் கொண்டு அப்பா தினமணியைப் படித்துச் சொல்வார்கள். அப்போது இரண்டாம் உலகப்போர் (1936-45)நடந்து கொண்டிருந்த நேரம். போர்ச் செய்திக¨ளையும் நாட்டுநடப்புகளையும் ஒரு கடமை உணர்வுடன் அப்பா படித்துச் சொல்வதை எங்கள் தெரு நடையில் அமர்ந்து ஒர் கூட்டம் ஆர்வமாய்க் கேட்கும்.

நிலம் நிறைய இருந்தும் அதைப் பின்னாளில் பார்த்துக் கொள்ள யாருமில்லாத படி பிள்ளைகள் எல்லோரையும் படித்து உத்தியோகத்துக்கு அனுப்பிவிட்டால் நிலத்தை யார் பார்ப்பார்கள் என்று சிலர் கேட்பார்கள். அதற்கு அப்பா ருஷ்யாவிலும் சீனாவிலும் நடைபெற்று வந்த பொதுவுடைமைப் புரட்சிகளை எடுத்துச் சொல்லி, 'இன்னும் இருபது முப்பது ஆண்டுகளில் இந்தியாவிலும் கம்யூனிசம் ஆட்சிக்கு வந்து விடும். அப்போது நிலம் உழுகிறவனுக்கே சொந்தமாகிவிடும். அப்போது என் பிள்ளைகள் ஏரோட்டவேண்டி வரும். அதனால்தான் படிக்க வைக்கிறேன். எல்லோரும் உங்கள் பிள்ளைகளையும் படிக்க வைக்க வேண்டியது அவசியம்' என்று சொல்வார்கள். இப்படி எங்களுக்கு மட்டுமல்லாமல் எங்கள் ஊருக்கே வழிகாட்டியாக இருந்தார்கள்.

அப்போதெல்லாம் கிராமப் பஞ்சாயத்துகள் ஏற்பட்டிருக்கவில்லை. 'உஷார் கமிட்டி' என்ற ஒரு அமைப்பு இருந்தது. ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர்தான் அதன் தலைவராக இருப்பார். வழக்கு, நல்லது கெட்டது எல்லாவற்றிற்கும் அவரது தீர்ப்புதான் முடிவு. அப்போது எங்கள் பெரியப்பாதான் தலைவர். அவர் எங்கள் அப்பாவைப்போல் மக்களிடையில் மதிப்புக்குரியவராக இருக்கவில்லை. ஏனெனில் அவர் எல்லாவகையிலும் எங்கள் அப்பாவிடமிருந்து மாறுபட்டவர்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Saturday, March 26, 2005

நினைவுத் தடங்கள் - 31

அப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிகளை ஆய்வும் தணிக்கையும் செய்வார்கள். அப்போது பள்ளிகள் குறைவு. அதனால் தவறாது நடக்கும். இப்போது பள்ளிகளின் அதீதப் பெருக்கத்தால் உயர்ந்¢லைப் பள்ளி, மேல் ந்¢லைப் பள்ளிகள் கூட 4,5 ஆண்டுகள் தொடர்ந்து தணிக்கை செய்யப்படுவதில்லை.

ஐயாவின் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாதலால், தணிக்கை தவறாது நடக்கும். ஆய்வும் உடன் சேர்ந்தே நடைபெறும். எல்லாநிலைப் பள்ளிகளிலுமே ஆய்வு என்பது திருவிழா மாதிரிதான். ஒரு வாரம் இருக்கவே பள்ள்¢க்கூடம் அமர்க்களப்படும். ஐயா மற்றவர்களை முடுக்கி விடுவதுடன் தானே அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவார். பொங்கலுக்கு ஒட்டடை அடித்து, வெள்ளையடித்து வீட்டுக்குப் புதுக்களை உண்டாக்குவது மாதிரி பள்ளிக்கும் புதுமெருகு ஏற்றப்படும். கலர் பேப்பர் வாங்கி சணல்¢ல் ஜண்டா ஒட்டி, பள்ளிக்கு உள்ளும் வெளியும் கட்டப் படும். இதிலெல்லாம்- பாடம் படிக்கும் வேலை இல்லை என்பதால் பிள்ளைகள் வெகு உற்சாகமாய் ஈடுபடுவார்கள். பள்ளிப் பரணில் வைக்கப்
பட்டிருக்கும் தேசப் படங்கள், பிராணிகள் மற்றும் கதைப் படங்களை எல்லாம் அப்போதுதான் பிள்ளைகள் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

கட்டுகளைக் கீழிறக்கித் தூசி தட்டித் துடைத்து, உள் சுவரிலும் வெளிச் சுவரிலும் ஆசிரியர்கள் மாட்டுவார்கள். ஐயா அருமையான, அறிவு பூர்வமான படங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவைதாம் எத்தனை வகை! ஒருகட்டு முழுதும் தேசப் படங்கள். சொந்த தாலுக்கா படத்திலிருந்து ஜில்லா, மாகாணம்(அப்போது சென்னை மாகாணம். தென் இந்தியா முழுதும் மொழிவழி பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்த
காலம்) இந்தியா, கண்டங்கள், உலகம் என்று எல்லாப் படங்களும் உண்டு. இன்னொரு கட்டில் தாயும் சேயுமாய் வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பறவைகள் என்று - அழகான இயற்கைப் பின்னணியில் பார்த்துப் பார்த்து ஐயா சேகரித்து வைத்திருந்தார். கதைப் படங்கள் - இப்போதைய காமிக்ஸ் புத்தங்களில் உள்ள மாதிரி படக் கதைகள்- 'நரியும் காக்கையும்', 'நரியும் திராட்சையும்' போன்ற கதைகளை விளக்கும் படங்கள் ஒரு கட்டு. அப்புறம், கணக்குக் கற்பிக்கும் மணிச் சட்டங்கள், சுழல் அட்டைகள், கன உருவ மாதிரிகள், பூகோள உருண்டைகள் என்று - கொலுவுக்கு வெளியே வரும் பொம்மைகள் மாதிரி வெளிப்படும். கொலு முடிந்ததும் பொம்மைகள் மீண்டும் பரண்
ஏறுவதைப் போல் பள்ளி ஆய்வாளர் வந்து போனதும் இவைகளும் பரண் ஏறிவிடும். அதனால் பிள்ளைகள் கண்காட்சி போல, இப்போதுதான் திகட்டத் திகட்ட அத்தனையையும் கண்ணகலப் பார்ப்பார்கள். அப்புறம் பார்க்க வேண்டுமானால் மேலும் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டுமே!

ஆய்வுக்கு வருகிறவர்களும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. 'எப்படி இவையெல்லாம் புதுக் கருக்கழியாமல், சிரஞ்சீவியாய் மார்க்கண்டேயன் மாதிரி இருக்கின்றன? உபயோகப் படுத்துவதே இல்லையோ?' என்று கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு இதெல்லாம் அவர்கள் வரும்போது தென்பட்டால் போதும். உள்ளூரில் வில்வண்டி வைத்திருப்பவரிடம் கேட்டு ஆசிரியர் ஒருவரை உடன் அனுப்பி ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் நகரிலிருந்து இன்ஸ்பெக்டரை அழைத்துவரவெண்டும். அப்போதெல்லாம் எங்கள் ஊருக்குப் பஸ் வரவில்லை. வண்டியில் புதுவெண்ணெய் - நாற்றமில்லாமல் ஐயாவே நேரில் பார்த்து வாங்கியது இரண்டு மூன்று சேர், புதிதாய்ப் பறித்த காய்கறிகள் ஒரு பை - போகும்.

இன்ஸ்பெக்டர் வண்டியை விட்டு இறங்கியதும் உள்ளே நுழையுமுன்பாக நகரிலி-ருந்து வண்டியிலேயே வாங்கி வந்திருக்கிற பூமாலையை வாங்கி, ஐயா வெகு மரியாதையோடு அவருக்கு அணிவிப்பார். முன்பே சொல்லிவைத்தபடி பிள்ளைகள் கனஜோராகக் கைத்தட்டுவார்கள். கடுமையாக இருக்க வேண்டும் என்று வந்தால் கூட இத்தகைய வரவேற்புக்குப் பின்னால் எப்படி இன்ஸ்பெக்டருக்கு சாத்யமாகும்? மனசு குளிர்ந்து புன்முறுவலுடன் உள்ளே நுழைவார். உட்கார்ந்ததும் தயாராய் சீவி வைத்தி ருக்கிற இளநீரை, இரவல் வாங்கி வைத்திருக்கிற வெள்ளித் தம்ளரில் ஊற்றி ஒரு ஆசிரியர் பவ்யமாக ந்£ட்டுவார். மதியம் ஊர்ப் பெரிய மனிதர் வீட்டில் சொல்லி கேரியரில் சாப்பாடு வரும். ஆய்வு நல்லபடி நடந்தேறும்.

உபசாரத்தினால் மட்டுமல்லாமல் ஐயாவின் நேர்மையான பணியை உத்தேசித்தும் இன்ஸ்பெக்டர்கள் ஐயாவிடம் கடுமை காட்டுவதில்லை. பொதுவாக ஐயாவைப் பற்றி அதிகாரிகளுக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் உண்டு. ஐயா மாதிரி யார் பள்ளிக் கூடமே கதியென்று ஞாயிற்றுக் கிழமைகளில்கூட பிள்ளைகளைக் கட்டி மேய்க்கிறார்கள்? ஐயாவின் 50 ஆண்டு சர்வீசில் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர்தான் அவரிடம் முரண்டு பண்ணித் தகராறு செய்தவர். அதன் பலனாய் அவமரியாதை அடைந்தும் திரும்பியவர். நாங்கள் படிக்கும்போது அது பற்றிப் பெரியவர்கள் கதை போலச் சொல்லுவார்கள். நாட்டுவக்கீல் என்று காரணப் பெயரால் அழைக்கப் பட்ட ஒருவர் - ஐயாவின் பழைய மாணவர்- எங்களுக்கு முன் தலைமுறைக்கு மூத்தவர், அடிக்கடி ஐயா அந்த இன்ஸ்பெக்டரிடம் சண்டை போட்ட வீரச் செயலைப் பற்றி தனக்கே உரிய ரசமான வருணனையோடு அலுக்காமல் சொல்லுவார். அது இன்னும் என் நினைவில் பசுமையாய் நிழலாடுகிறது.

"சாம்பமூர்த்தின்னு ஒரு இனிஸ்பெட்டர். ஜாதிலே அவுரு அய்யரு. அவுரு நாங்க படிக்கிறப்போ பரிட்சை பண்ண வந்தாரு. அந்தாளு கொஞ்சம் முசுடு. அவுருக்கு நம்ம வாத்தியாரு மேலே என்னாக் கோபமோ தெரியிலே. அந்தாளு கைக்கு வாங்கற வராட்டம் இருக்கு. இவுருதான் அதுலே கரெக்டாச்சே! ஏதோ வெண்ணெய், காய் கறின்னு இவுராப் பிரியப்பட்டுக் குடுத்தாத்தான். காசு வாங்கி ருசி கண்டவனுக்கு காய்கறியும் வெண்ணையும் எப்பிடிப் போதும்? சாடைமாடையாக் கேட்டும் இவுரு கண்டுக்கலை போல்ருக்கு. அந்தக் கோபம்
இனிஸ்பெட்டருக்கு. வரும்போதே ஒரண்டு கட்டிக்கிட்டு வந்தாரு. முன்கூட்டியே சொல்லிவச்சு வண்டி போய் அழச்சாறதுதான் வழக்கம். ஆனா இவுரு வாத்தியாருக்குச் சொல்லாமெக் கொள்ளாமே திடீருண்ணு குதுர வண்டியிலே வந்து எறங்குனாரு. அப்ப ஐயா மட்டும்தான் வாத்தியாரு. அவுருக்கு என்ன பண்றதுன்னே புரியலே. "வாங்க வாங்க! சொல்லியிருந்தா வண்டி அனுப்பிச்சிருப்பனே" ண்ணு பணிவாத்தான் சொன்னாரு. "ஏன் உம்மக் கிட்டே சொல்லிட்டுத் தான் வரணுமோ?" - அப்படீண்ணு முறைச்சாரு இனிஸ்பெட்டரு. "திடீருண்னு வந்தாத்தான் உம்ம வண்டவாளமெல்லாம் தெரியும்"ணு வேறே சொன்னாரு. சீண்டி விட்ட நல்ல பாம்பு மாதிரி வாத்தியாருக்கு 'புர்ரு'ண்ணு கோபம் வந்துடிச்சி. 'ஆஹா! பேஷாப் பாருமேன்! என் வண்டவாளத்த நீரு எடுத்துக் காட்டாமேப் போனீரு- அப்பறம் தெரியும் சேதி" ண்ணு ஒரு சீறு சீறுனாரு.

இனிஸ்பெட்டரு விடுவிடுண்ணு உள்ள போயி தானே நாக்காலிலே உக்காந்தாரு. அப்புறம் அரை நாழி 'தீவாளி'க் கேப்பு வெடிக்கிற மாதிரி 'சடபுடா'ன்னிட்டு அந்த ரிஜிஸ்டரக் கொண்டா, இந்த நோட்டக் கொண்டாண்ணு அதிகாரம் பண்ணி ஆர்ப் பாட்டம் பண்ணுனாரு. வாத்தியாரும் அப்பப்போ பதிலுக்கு எதிர்வாணம் மாதிரிச் சீறிக் கிட்டு அவுரு கேட்டத எல்லாம் எடுத்துக் காமிச்சாரு. பசங்களையும் வாய்ப்பாடு, மனக்கணக்கு, டிக்டேஷண்ணு பெரட்டி எடுத்தாரு. ஒண்ணுலியாவுது குத்தம் கண்டு புடிக்கணுமே! ஊகூம், நடக்குலே! எல்ல கஜகர்ணமும் போட்டுப் பாத்துட்டு, 'விசிட்' புஸ்தகத்த வாங்கி என்னுமோ விறுவிறுண்ணு கிறுக்குனாரு. வாத்தியாரு பேசாமப் பாத்துக் கிட்டே இருந்தாரு.
விசிட் புஸ்கத்தை எழுதி முடிச்சி மேசமேலே விட்டெ றிஞ்சாரு. வாத்தியாரு அத எடுத்துப் படிச்சுப் பாத்தாரு. படிக்கப் படிக்க மூஞ்சி பயங்கரமா செவசெவத்து உக்கிரமாயிடுச்சு! 'சர்'னு நோட்ட ரெண்டாக் கிழிச்சி இனிஸ்பெட்டரு தலமேல வச்சு, 'படக்'குண்ணு அவரோட பூணூல இழுத்துக் கையில புடிச்சிக்கிட்டு, "ஓய் சாம்பமுர்த்தி அய்யிரே! நெசந்தான் - இந்தப் பள்ளிக்கூடத்துல சுகாதார வசதியில்லே, கட்டடமில்ல, மரத்தடியிலதான் நடக்குது - அது இதுண்ணு 'கிராண்ட' வெட்டறதுக்குத் தோதா எழுதிப்புட்டீரு - சரி! - ஆனா அம்மாம் சத்திய வந்தரான உம்ம ஒண்ணு கேக்கிறேன் - உம்மப் பூணுலு மேலெ சத்தியமாச் சொல்லும்! இண்ணைக்குத் தேதி என்னா? முந்தா நாளுத் தேதிய போட்டுருக்கியே- அண்ணிக்குத் தான் இந்த 'ஸ்கூலை" விசிட் பண்ணியா நீ? உனக்குப் 'படி' கெடைக்குறத்துக்காக
அப்பிடி எழுதலேண்ணு சத்தியம் பண்ணு!" ண்ணு வாத்தியார் ஆங்காரமாக் கத்தவும் பயந்து பூட்டாரு இனிஸ்பெட்டரு. இரணியனக் கொடலப் புடுங்கி மாலையாப் போட்டுக்கிட்ட நரசிம்ம மூர்த்தி மாதிரி இருக்கு வாத்தியாரப் பாத்தா. அவுரு அலண்டு போயி எந்திருச்சி, 'சரி சரி! என்னே விடும்' ணு வெளியே பாய்ஞ்சி குதுர வண்டியிலே தாவி ஏறிப் பறந்துட்டாரு! பாவம், ஒரு வாய் காப்பிகூடக் கெடைக்கல அந்த மனுஷனுக்கு. எல்லாம் இருக்கிறபடி இருந்தால்ல? தம்பேர்லத் தப்பு இல்லேண்ணா, வாத்தியாரு லேசுலே உட்றமாட்டாரே!" என்று நாடகம் மாதிரி, அப்படியே நடிச்சுக் காட்டினார் நாட்டு வக்கீல் ஒரு தடவை எங்களுக்கு.

நேர்மையற்ற அதிகாரிகளுக்கு ஐயாவிடம் பயந்தான். நல்ல அதிகாரிகள் வந்து பார்த்து விசிட் புத்தகத்தில் ஐயாபற்றியும் அவரது போதனை பற்றியும் பாராட்டியே எழுதிப் போவார்கள். மக்களும் பிள்ளைகளும் அவரிடம் மதிப்பும் மரியாதையுமே கொண்டிருந்தார்கள். இப்படி மூன்று தலைமுறைகளுக்குக் கல்வி கற்பித்த அவர் கடைசி நாட்களில் நலிவடைந்து நாதியற்று பக்கத்து நகரில் பசியால் மயங்கி விழுந்து மரணமடைந்தது பெரும் சோகம். ஊருக்குப் பஞ்சாயத்து வந்தபோது அவர் இருந்த பொதுச் சாவடியைப் புதுப்பித்து அலுவலகம் ஆக்கினார்கள். அந்தக் கட்டடத்துக்கு ஐயாவின் நினைவாக அவர் பெயரை இட நானும் என் சகோதரர்களும் எவ்வளவோ முயன்றோம். ஆனால்
அவரது அருமையை அறியாத அடுத்த தலைமுறை அதை உதாசீனப் படுத்திவிட்டது. அது வெகு நாட்களாக என் மனதை உறுத்திக் கொண்டி ருந்தது. பிறகு 20 ஆண்டுகள் கழித்து, அவருக்கு நினைவுச் சின்னம் போல அவரது வாழ்வை மையப்படுத்தி என் முதல் நாவலை எழுதி அவருக்கு அர்ப்பணித்தேன். என் முதல் கதையின் நாயகனான அவரே என் முதல் நாவலின் நாயகனாகவும் அமைந்ததும் அந்த நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 1994ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான 10000 ரூ. பரிசு பெற்றதும் நான் எதிர்பாராதது. எனக்கு எண்ணையும் எழுத்தையும் கசடறக் கற்பித்ததோடு என்னை எழுத்தாளனாக அங்கீகாரம் பெறவும் செய்த ஐயா என்றும் என் நினைவில் நிற்பவர்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Thursday, February 24, 2005

நினைவுத் தடங்கள் - 30

எங்கள் ஐயா சாமினாத ஐயர் பிள்ளைகளுக்கு, படிப்பில் சிம்ம சொப்பனந்தான் என்றாலும் அவரிடம் கலைநெஞ்சம் இருந்தது. வெறும் எண்ணையும் எழுத்தையும் மட்டும் அவர் கற்பிக்கவில்லை. கோலாட்டம், நாடகம் போன்ற கலைகளையும் அவர் கற்பித்தார். சதா கடுகடுப்பும் ஒரு சின்னத் தப்பு செய்துவிட்டால் கூடப்பொறுக்காத முன்கோபமும் அவரிடம் இருந்ததை, ஊர்மக்கள் ஒரு குறை போலவும் அதுவே அவரது பெருமை போலவும் பேசினார்கள். 'பிரம்மச்சாரிதானே? பிள்ளை குட்டி பெற்றிருந்தால் தானே பிள்ளைங்க அருமை தெரியும்?' என்றும் 'இப்படியும் கண்டிப்பு இல்லேண்ணா படிப்பு எப்படி வரும்?' என்றும் பேசுவார்கள். படிப்புக்கிடையே அவர் விஜய தசமியை ஒட்டி பிள்ளைகளுக்ககு கோலாட்டம் கற்பிப்பதை மன இறுக்கத்து ஒரு வடிகால் என்று எண்ணி சிலாகிப்பார்கள். இந்த கடின நெந்சுக்குள்ளே எப்படி இத்தனை கலைப்பிரேமை என்று வியக்கத்தோன்றும். அன்றைய கால கட்டத்தில் அனேகமாக அவரைப் போன்ற திண்ணைப் பள்ளிக்கூட ஆசி¢ரியர்கள் எல்லோருமே இப்படி படிப்பின் நடுவே கோலாட்டம் போன்ற கிராமீயக் கலைகளையும் கற்பித்தே வந்திருக்கிறார்கள்.

ஆவணியில் - அதாவது செப்டம்பர் மாதத்தில் - தசரா விடுமுறை ஏதும் ஐயா விடுவதில்லை. தசராவுக்குப் பதில் இந்தக் கோலாட்டம்தான் பிள்ளைகளுக்கு மகிழ்ச்சி தரும் காலம். விநாயகர் சதுர்த்தியை ஐயா விமர்சையாகவே பள்ளியில் கொண்டாடு வார். விநாயகர் சதுர்த்தி வருகிறதென்றால், அன்றிலிருந்து ஒரு மாதத்துக்குத் தினமும் சாயங்காலம் பிள்ளைகளுக்குக் குஷிதான். வாய்ப்பாடு, சதகம் ஒப்பிக்கிற பிடுங்கல் இருக்காது. கோலாட்டப் பயிற்சி, அன்று தொடங்கி சரஸ்வதி பூஜை வரை மாலையில் நடக்கும். அப்புறம் விஜயதசமி அன்று
எல்லோருடைய கோலாட்டக் கழிகளையும் கொலுவில் வைத்துப் படைத்து, அன்று முதல் வீடுவீடாய்ப் போய் கோலாட்டம் அடித்து, பிள்ளைகளுக்குப் பொரிகடலை, மிட்டாய், பழம் எல்லாம் தினமும் கிடைக்கும். ஐயாவுக்கு ஒவ்வொரு பிள்ளைக்கும் ஒருரூபாய் வீதம் காணிக்கை கிடைக்கும்.

பதினெட்டாம் பெருக்கு, விநாயகர்சதுர்த்தி போன்ற விசேஷங்களுக்கு பிள்ளைகள் ஒவ்வொருவரும் ஒரு அணாவோ இரண்டணாவோ ஐயா கேட்கிறபடி தர வேண்டும். அந்தப்பணத்தைக் கொண்டு ஐயா பூஜை சாமான்கள் வாங்கிப் படைப்பார். பதினெட் டாம் பெருக்கன்று ஐயா பிள்ளைகளை அருகில் ஓடும் வெள்ளாற்றுக்கு அழைத்துப் போவார். பிள்ளைகள் விநாயகர் அகவலை உரத்துப் பாடியபடி வரிசையாய்ப் போக வேண்டும். அப்போதெல்லாம் வெள்ளாற்றில் வற்றாத நீர் இருக்கும். நீர் ஓட்டத்தை ஒட்டி மணலில் பிள்ளையார் பிடித்து வைத்து காதோலை கருகமணி மஞ்சள்குங்கும் சார்த்தி பொரிகடலை, காப்பரிசி நைவேத்யம் வைத்து ஐயா படைப்பார். பூஜைமுடிந்து, எல்லொருக்கும் நைவேத்யம் வழங்கியதும் பழையபடி விநாயகர் அகவலைப் பாடியபடி பள்ளி திரும்ப வேண்டும்.

விநாயகர் சதுர்த்தியில் பிள்ளைகள் கொடுத்த காசில், ஐயா கொண்டைக் கடலை வாங்கி சுண்டல் செய்து நைவேத்யம் ஆனதும் எல்லோருக்கும் வினியோகிப்பார். பூஜையில் புதிய கோலாட்டக் கழிகளுக்கு மஞ்சள் மசேலென்று மஞ்சள் பூசி அவரவர் கழிகளுக்குத் தனி அடையாளமிட்டு விநாயகருக்கு முன்னே வைத்துப் படைப்பார்கள். பிறகு ஐயாவே தன் கையால் ஒவ்வொருவரது கோலாட்டக்கழிகளையும் அவரவர் அடையாளத்திற்கேற்ப எடுத்து வழங்குவார். உடனே முதல் அப்பியாசம் தொடங்கும். ஐயாவே பாட்டுப் பாடி, ஜால்ரா சப்திக்கத் தொடங்கி வைப்பார். அன்று முதல் தினமும் மாலையில் கோலாட்டப் பயிற்சி தொடங்கும். ஐயா தான் பயிற்சி தருவார். மற்ற ஆசிரியர்களுக்கு இதில் வேலையில்லை.

பலவித கோலாட்டங்கள்- பின்னல் கோலாட்டம், கப்பல் கோலாட்டம் என்று கால்ஜதியுடன் சொல்லித் தருவார். அருட்பா, அருணசலக்கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதியாரின் நந்தன் நாடகக் கீர்த்தனைகள் என்று ஜதிக் கேற்றபடி ஐயா பாட, பிள்ளைகள் உடன் பாடி கோலாட்டக் கழிகளை அடித்து ஆட வேண்டும். கோலாட்டப் பயிற்சியில் தப்பு செய்தால் ஐயாவுக்குப் பயங்கர கோபம் வரும். தாளம் தப்பினாலும் கால்ஜதி மாறினாலும் அவரால் பொறுக்க முடியாது. தப்புச் செய்தவனது கோலாட்டக் கழியையே ஆயுதமாக்கி, ஒரு கழியை அவன் தலைமீது வைத்து மற்றக்கழியால் அதன்மீது அடிப்பார். 'விண்'ணென்று தலை நோவும். சமயத்தில் தன் கையிலிருக்கும் வெண்கல ஜால்ராவால் தப்புவதும் உண்டு. 'ணங் ணங்' கென்று மோதி அதுவும் வலி உயிர் போகும். ஆனால் பிள்ளைகளுக்கு சாதாரண நாளில் கிடைக்கிற தண்டனையை விட கோலாட்டத் தண்டனைப் பயிற்சி பெரிதாகப் படுவதில்லை. தொடர்கிற கோலாட்டமும் பாட்டும் அதை மறக்கச் செய்து விடும்.

தினசரி கோலாட்டப் பயிற்சி முடிந்ததும், 'வாழிப்பாடல்கள்' என்று எல்லோரும் மனப் படம் செய்ய வேண்டும். பிள்ளைகளின் வீடுவீடாகப் போய் கோலாட்டம் அடிக்குமுன் உள்ளூரில் உள்ள எல்லாக் கோயில்களுக்கும் போய் அடிக்க வேண்டும். முடித்ததும் அந்தந்த தெய்வத்துக்கும் என்று உள்ள வாழிப்பாடலைப் பாட வேண்டும். ஐயாவே ஒவ்வொரு கோயிலுக்கும் ஒருவர் என்று குறிப்பிட்டு எழுதிக் கொடுத்து மனப்பாடம் செய்யச் செய்வார். வீடுகளில் அடிக்கும்போது அந்தந்த வீட்டுப் பிள்ளைகள் பாட, பொதுவான வாழிப்பாடல் உண்டு. தினமும் எல்லோரும் சேர்ந்து பாடி, பயிற்சி நடைபெறும்.

விநாயகசதுர்த்தி போலவே சரஸ்வதி பூஜைக்கும் பிள்ளைகளிடம் காசு வசூலித்துப் பூஜை நடைபெறும். சரஸ்வதி படம் கீழிறக்கப்பட்டு அதன்முன்னே பள்ளிக்கூட ரிஜிஸ்தர் கள், மைக்கூடு, பேனா, ரூல்தடி, தேசப்படங்கள் எல்லாம் சந்தனம் தெளிக்கப்பட்டு கொலுவில் வைக்கப்படும். எல்லோருடய கோலாட்டக் கழிகளும் கழுவி மஞ்சள்பூசப்பட்டு கொலுவில் வைக்கப்பட்டு பூஜை நடத்தப்படும். மறுநாள் விஜயதசமி அன்றும் பூஜை செய்த பிறகு கொலு பிரிக்கப்பட்டு முதலில் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள பிள்ளை யார் கோயிலில் கோலாட்டம் தொடங்கும். எல்லாப் பிள்ளைகளும் புதிய வண்ண உடைகளில் அந்த நாட்களில் ஜொலிப்பார்கள். மறுநாளிலிருந்து வேளைக்கு ஒரு
கோயிலாக தினமும் கோலாட்டம் நடைபெறும். சிவன், பெருமாள் கோயிலுடன் மாரியம்மன், செல்லியம்மன், துரௌபதை அம்மன், ஐயனார் என்று எல்லா நத்த தேவதை கோயில்களும் அடித்து முடிக்க நாலு நாளாகும்.

பிறகு ஊர்ப்புரோகிதர் வீட்டில் - அந்த வீட்டுப் பிள்ளைகள் படித்தாலும் சரி, இல்லாவிட்டலும் சரி - முதலில் அடித்து விட்டுத் தான் மற்ற வீடுகளுக்கு, யார் பணம், தின்பண்டத்துடன் தயராக இருக்கிறார்களோ அவர்கள் வீடுகளுக்குப் போய் அடிப்பார்கள். வீட்டின் அந்தஸ்துக்கு ஏற்றபடி, கூடுதலாகவோ, குறைவாகவோ, அதிக அயிட்டங்களுடனோ நிகழ்ச்சிகள் இருக்கும். அதற்கேற்றாற் போல் சன்மானமும் ஐயாவுக்குக் கூடுதலாகக் கிடைக்கும். ஒருவீட்டில் அடித்து முடிந்ததும் அந்த வீட்டுப் பையன் அல்லது பெண் வாழி பாட, நிகழ்ச்சி முடிவுறும். பிறகு அந்த வீட்டுப் பையன் திண்ணையில் தயாராய் வைத்திருக்கிற - பழம், வெற்றிலைப் பாக்குடன் ஒருரூபாய் நாணயமும் கொண்ட தட்டை ஏந்தி வந்து ஐயாவிடம் நீட்டி வணங்குவான். ஐயா முகத்தில் மகிழ்ச்சி விகசிக்க, அவனை வாழ்த்தி ஆசி வழங்குவார். பிறகு எல்லோருக்கும் தின்பண்டம் வழங்கப்படும். தங்கள் வீட்டில் வித்தியாசமாகத் தரவேண்டும் என்பதில் எல்லாப் பிள்ளைகளும் ஆர்வம் காட்டுவார்கள். அதனால் ஒவ்வொரு வீட்டிலும் வேறு வேறு தின்பண்டங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்கும். வீடுகள் குறையக்குறைய ஐயோ முடியப்போகிறதே என்று பிள்ளைகளுக்குக் கிலேசம் உண்டாகும். கடைசி வீடு முடிந்ததும் எல்லோரும் கனத்த இதயத்தோடு பள்ளி திரும்பு வார்கள். மறுநாள் முதல் வழக்கமான சிறை வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டுமே!

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Friday, January 28, 2005

நினைவுத் தடங்கள் - 29

ஒரு பையனைப் பள்ளியில் புதிதாகச் சேர்க்கிறார்கள் என்றால் பிள்ளைகளைப் பொறுத்தவரை அது மிகவும் ரசமான விஷயம்! முதலாவது அன்று காலை அரைவேளப் படிப்புக் கிடையாது. இரண்டாவது 'ஐயா'வின் சிடுசிடுப்பும் கெடுபிடியும் அன்று மதியம் வரை சுத்தமாக இராது.
மாறாக ஐயாஅன்று மட்டும் சுமுகமாக அனைவரிடமும் பேசுவார்; யாரிடமும் கடுமை காட்டமாட்டார். முகத்தில் அபூர்வ மென்மையும் மலர்ச்சியும் இருக்கும். புதிதாகச் சேருகிற பையனை, சேருகிறபோதே மிரளச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும் அன்றைய வரும்படியை உத்தேசித்தும் அப்படி இருக்கக் கூடும்.

வரும்படி குடும்பத்தைப் பொறுத்தது. வசதியான குடும்பம் என்றால் ஒரு ஜதை வேட்டி, துண்டு ஐயாவுக்குக் கிடைக்கும். தட்சணையாக ஒரு ரூபாயும் - குறுணி நெல், பழம், தேங்காய், அரிசி எல்லாம் உண்டு. சாதாரண குடும்பமென்றால் வேட்டி, துண்டு நீங்கலாக மற்றவை நிச்சயம் கிடைக்கும். மற்ற ஆசிரியர்களுக்கு இதில் பங்கில்லை. வெறும் கால் ரூபாயும், தாம்பூலமும் மட்டும்தான். 'அட்சராப்பியாசம்' செய்து வைப்பவர் ஐயாதானே? அதனால் முழு வரும்படியும் அவருக்கு மட்டும்தான். ஊர்க்காரர்கள் ஐயா- வைத் தவிர வேறு யாரும் அட்சராப்பியாசம் செய்துவைப்பதையும் விரும்ப மாட்டார்கள். ஆயிரம் குறை சொன்னாலும் ஐயாவின் ஆகி வந்த கையால், குழந்தையின் கையைப் பிடித்து, பரப்பிய நெல்லின் மீது 'அரியே நம' என்று ஐயா எழுதிக் கொடுத்தால்தான் படிப்பு வரும் என்பது அங்கு மூன்று தலைமுறையாய் இருந்து வருகிற நம்பிக்கை!

எப்போதும் அடைத்திருக்கிற சாவடியின் சட்டக்கதவுகள் பரக்கத் திறந்துவைக்கப் பட்டு கூட்டி மெழுகப்பட்டு பளிச் சென்று அன்று காட்சிதரும். சுவற்றடியில் சரஸ்வதி படம் மலர்மாலை அணிவிக்கபட்டு பக்கத்தில் மரத்தண்டு விளக்கும் முன்னால் பசுஞ்சாணிப் பிள்ளையாரும் அருகம்புல்லுடன் இருக்கும். ஐயா அதிகாலையிலேயே சுவடி தயாரித்து வைத்திருப்பார். பசுமைமாறி மஞ்சள் ஏறிய புதிய பனையோலை நறுக்குகள் நாலைந்தை இடது ஓரம் துளையிடப்பட்டு மட்டை நரம்பினால் கட்டி, எழுத்தாணியால் ஐயாவே 'அரிநமோத்து சிந்தம்; அரியே நம' என்று தொடங்கி 'அ' முதல் '·' வரை எழுதி வைத்திருப்பார்.

நல்ல நேரம் தொடங்கியதும் சட்டாம்பிள்ளை தலமையில் வரிசை வரிசையாகப் பிள்ளைகள் கிளம்பி புதிதாகச் சேரவுள்ள குழந்தையின் வீட்டுக்குப் போவார்கள். வசதியான பெரிய இடம் என்றால் மேள தாளத்துடன் குழந்தையை ஊர்வலம்போல் அழைத்து வருவார்கள். காப்பரிசி, பொரிகடலை, பழம் ஆகியவற்றைத் தட்டுக்களில் பெரிய பிள்ளைகள் சிலர் எடுத்துக் கொள்ள, தகப்பனார் மற்றும் உறவினர் உடன்வர பள்ளிக்கு வருவார்கள். வரும்போது சட்டாம்பிள்ளை 'சீதக்களபச் செந்தாமரைப்பூ.. ' என்று தொடங்கும் விநாயகர் அகவலையும் சரஸ்வதி துதியையும் உரக்கப் பாட எல்லாப் பிள்ளைகளும் கோரஸாகப் பாடி வருவார்கள். பள்ளிக்குள் வந்ததும், சேரவுள்ள குழந்தயை ஐயா 'வாங்க' என்று சிரித்த முகத்தோடு அழைத்துப்போய் உள்ளே கூடத்தில் பிள்ளையார் முன்னே போடப்பட்டுள்ள சின்ன மணையின்மீது உட்கார வைப்பார். பிறகு தேங்காய் உடைத்து நைவேத்யம் காட்டி, சரஸ்வதிக்கும் பிள்ளையா- ருக்கும் தீபம் காட்டி, குழந்தையை முன்னால் விழுந்து நமஸ்கரிக்க வைத்தபின் ஐயா அருகில் அமர்ந்து அட்சராப்பியாசம் தொடங்குவார். மஞ்சள்கொம்பையும் ரூபாய் நாணயத்தையும் குழந்தையில் கையில் கொடுத்து முன்னால் பரப்பியுள்ள நெல்லின்மீது ஐயா கையைப் பிடித்து 'அரி..... அரி.....' என்று உரத்துச் சொன்னபடி எழுதவைப்பார். குழந்தையும் கூடவே சொல்ல வேண்டும். இப்படி 'அ' தொடங்கி அக்கன்னா வரை எழுதி முடித்ததும், ஓலைச் சுவடியை எடுத்துப் பிரித்துப் படிக்கச் சொல்லித்தருவார். பிறகு குழந்தையை எழுப்பி ஐயாவுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும், தகப்பனார் மற்றும் வந்துள்ள பெரியவர்களுக்கும் நமஸ்கரிக்கச் செய்வார். எல்லோரும் திருந்£று பூச்¢ குழந்தையை ஆசசிர்வதிப்பார்கள். அய்யாவுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் தக்க மரியாதை செய்தபின் பிள்ளைகளுக்கு அவர்கள் வெகுநேரமாய் ஆவலோடு காத்திருக்கிற பொரிகடலையும், காப்பரிசியும் வழங்கப்படும்.

'சரி, கொண்டுபோய் விட்டுட்டு வாங்க! பையா, போய்ட்டு நாளைக்கு வந்துடணும்' என்று புதுப் பையனிடம் சிரித்தபடி ஐயா சொல்லுவார். பையனும் ஐயாவின் சிரிப்பை நிஜமென்று நம்பி, சிரித்தபடி தலையாட்டுவான். 'அதுதான் அவனிடம் ஐயா சிரிக்கிற கடைசி சிரிப்பு' என்று அவனுக்குத் தெரியாது பாவம்! அவனை அழைத்துக் கொண்டு பிள்ளைகள், முன்பு கிளம்பியது போலவே வரிசையாக, பாடியபடி அவன் வீட்டுக்குப் போவார்கள். வீட்டில் அவனை விட்டுவிட்டு, அனைவரும் உரத்தகுரலில்,

"ஓடாதே!
ஒளியாதே!
இட்டதே சோறும்
பெற்றதே கறியும்
உண்டு தூங்கிப்
பூசை முடித்து,
வெள்ளி முளைக்கப்
பள்ளிக்கு வாரும்!"

என்று மறுநாளைக்குப் பள்ளிக்கு வரச் சொல்லிவிட்டுத் திரும்புவார்கள்.

மறுநாள் புதுப்பையன் முதல் நாளைய ஐயாவின் சிரித்த முகத்தை நிஜமென்று நம்பி பள்ளிக்கு உற்சாகத்தோடு வருவான். ஐயாவின் மலர்ந்த முகம் மறைந்து போய் கடுகடுப்பும், மிரட்டலும் கொண்ட முகத்தை பார்த்ததும் அரண்டு போவான். மறுநாள் பள்ளிக்கு வரச் சிணுங்குவான். ஐயாவுக்குத் தகவல் தெரிந்ததும் சட்டாம்பிள்ளையும் இரண்டு பெரிய பையன்களும் அனுப்பப்படுவார்கள். அவர்கள் போய் அவனைத் 'தரதர' வென்று கதறக் கதறப் பள்ளிக்கு இழுத்து வருவார்கள். தொடர்ந்து அந்தப் பையன் மக்கர் செய்தால் ஐயா இரக்கமின்றி, இதற்கென்று வைத்திருக்கிற சின்ன விலங்குக் கட்டையைக் காலில் பிணைத்துப் பூட்டுப் போட்டுவிடுவார். ஒருநாள் முழுக்க அழுது, அடங்கிப் போய்விடுவான். காட்டிலிருந்து பிடித்து வந்த யானையைப் பழக்குகிற மாதிரிதான்! அந்தக் காலத்துப் பெற்றவர்கள் ஐயாவின் இந்த நடைமுறையை ஆட்சேப்¢ப்பதில்லை. ஐயா பிள்ளைகளின் நல்லதுக்குத்தான் எதையும் செய்வார் என்று பூரணமாக நம்பினார்கள். அதனால் ஐயாவின் ஆளுமையில் பிள்ளைகள் ஆரோக்கியமாய் உருப் பெற்று வெளியே வந்தார்கள்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Thursday, December 23, 2004

நினைவுத்தடங்கள் - 28

ஐயாவின் பள்ளியில் விடுமுறை கிடையாது. சனிக்கிழமை மதியம் அரை நாளும் ஞாயிறும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் விடுமுறை. அதற்காகப் பெற்றோர்கள் ஏதும் குறை சொல்வதில்லை. மாதத்தில் ஒரு சனிக்கிழமை ஆசிரியர் சங்கக் கூட்டத்துக்கு பக்கத்து நகரத்துக்கு எல்லோரும் கட்டாயம் போக வேண்டும் என்பதால் மாதம் ஒரு நாள் மட்டும் மாணவர்களுக்கும் விடுமுறை கிட்டும். அன்று தெருக்கள் திமிலோகப்படும். ஏரி, குளம் தூள் கிளம்பும். அப்போது சிலர் மட்டும் 'எங்கே போய்த் தொலைஞ்சார் செதம்பரத்து வாத்தி? ஏ அப்பாடி! அவுரு இல்லேன்னாலும் இதுகளை மேய்க்க முடியாது!' என்று அலுத்துக் கொள்வார்கள். ஐயாவும் கூட இவர்களைக் கட்டி மேய்க்க அலுத்துக் கொள்ளாது போனாலும் சமயங்களில் 5 வயதுக்குள்ளான பிள்ளைகளையும், பெற்றோர்கள் வீட்டில் அவர்களைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்பும்போது, 'ஏன் வயத்துக்குள்ளே இருக்கிற பிள்ளைங்களையும் எறக்கி அழச்சிக் கிட்டு வந்துடுங்களேன்! அதான் இங்கே செதம்பரத்து வாத்தி ஒருத்தி இருக்கானே- அவனுக்கு வேறே என்ன வேலை?' என்று சீறுவார்.

சனி பிற்பகலும் ஞாயிறும் பள்ளி உண்டே தவிர அந்நாட்களில் பாடம் கிடையாது. சனி மதியம் வந்ததும் தோட்ட வேலை செய்ய விட்டு விடுவார். பள்ளிக்கூடம் ஒரு பரந்த ஆல மரத்தடியில் நடந்தது. ஐயா தங்கியிருந்த சாவடியை ஒட்டிய பகுதியை வளைத்து சாவடிக்கு முன்னால் 'ப' வடிவில் பாத்திகள் அமைத்து பூச்செடிகள், குரோட்டன்கள் எல்லாம் வைத்திருந்தார். பாத்திகளின் நடுவில் பன்னீர் மரமும் பவழமல்லிகையும் வளர்த்திருந்தார். விடிகாலை 'வேத்தாஞ் சீட்டு'க்கு வரும் போது 'கம்' மென்று, பன்னீர்ப் பூவும் பவழமல்லிகையும் கிழே சிதறிக் கிடந்து நாசிக்கும் மனதுக்கும் சுகந்தத்தையும் புத்துணைர்வையும் ஊட்டும். ஆண்பிள்ளைகள் பாத்திகளுக்கிடையே சருகு பொறுக்கி, களை நீக்கி வேலை செய்கையில் பெண் பிள்ளைகள் வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் கொண்டு வந்திருக்கிற சின்னச் சொம்புகளால் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள ஏரியிருந்து நீர் மொண்டு வந்து செடி மரங்களுக்கு ஊற்றுவார்கள். இந்த வேலை என்றால் பிள்ளைகளுக்குப் படு குஷி. இப்போது அவர்களது கூச்சல், கும்மாளங்களை ஐயா கண்டுகொள்ள மாட்டார். வேலை முடிந்ததும் பொழுதிருக்கவே வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை. மாதம் ஒரு முறை ஆண் பிள்ளைகள் எல்லாம் கூப்பிடு தொலைவில் ஓடும் ஆற்றுக்குப் போய் ஆற்று மணலை சின்னக் கூடைகளில் அள்ளி வந்து பாத்திகள் போக முன்னால் உள்ள உட்காரும் இடத்தில் கொட்டிப் பரப்பி எழுதிப் பழகவும் உட்காரவும் சமப்படுத்துவார்கள். அதிகாலையே எல்லாப் பையன்களும் கையில் சின்னக் கூடையுடன் வந்துவிட வேண்டும். ஐயா மேற்பார்வையில் வரிசையாய் ஆற்றுக்குப் போய், மணலை அள்ளி தலையில் சுமந்தபடி வரிசையாய் வரவேண்டும்.

அன்று கொஞ்சம் தாமதமாக 10 மணிக்குப் பள்ளி தொடங்கும். அன்று பொது அறிவு, மற்றும் நடைமுறைக்குப் பயனுள்ள படிப்பாக அமையும். பிராமிசரி நோட்டு எழுத, குடக்கூலி-போக்கிய பத்திரம் எழுத அன்று ஐயா கற்பிப்பார். இதுதான் பள்ளிப்படிப்பைத் தொடராமல் ஊரோடு நிறுத்திக் கொள்கிறவர்களுக்குப் பின்னாளில் கை கொடுக்கக் கூடியதாக இருந்தது. அதோடு பஞ்சாங்கம் பார்ப்பது, நாள் பார்ப்பது எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அதற்காக தமிழ் வருஷங்கள், திதிகள், நட்சத்திரங்கள் எல்லாம் மனப் பாடம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அதனைச் சோதிக் கவும் பயிற்சி கொடுக்கவும் ஐயா பயன் படுத்தினார். மாலையில் விளையாட அனுமதிப் பார். பெண் பிள்ளைகள் எல்லைக் குள்ளேயும், பிள்ளைகள் பாத்திகளுக்கு வெளியே தெருவிலும் விளையாடலாம். அவரவர்க்கு ஏற்றபடி- பெண்களானால் கும்மி, கிளித் தட்டு பையன்களானால் சடு குடு, சரணா என்று ஐயாவே பிரித்துக் கொடுத்து ஆடச் செய்வார். 5 மணி ஆனதும் "போதும்
விளையாடுனது! வீட்டுக்குக்குக் கிளம்புங்க!" என்று அனுப்பி வைப்பார். அந்த இரண்டு நாட்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மூச்சு விடக்கூடிய நாட்களாக அமையும்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, December 08, 2004

நினைவுத் தடங்கள் -27

மதியப் பள்ளி 2 மணிக்குத்தான் என்றாலும், பிள்ளைகள்- அனேகமாக எல்லோரும் போன உடனே சாப்பிட்டுவிட்டு வந்து விடுவார்கள். ஐயா அதற்குள் தானே சமைத்த சாதத்தைச் சாப்பிட உட்காருவார். சாதம் மட்டும் தான் அவர் சமைப்பது. பிள்ளை களை அனுப்பி வசதியான வீடுகளிலிருந்து குழம்போ ரசமோ வாங்கி வரச் சொல்லிபோட்டுச் சாப்பிடுவார். 'அய்யோ பாவம்! தனி ஆம்பிள்ளை எப்படிக் குழம்பெல்லாம் வைப்பார்' என்று அனுதாபப்பட்டுத் தாய்மார்கள் முகம் சுளிக்காமல் தாராள மனதுடன் தருவார்கள். சாப்பிட்ட பின் ஐயா கூடத்தில் பாய்விரித்து சிரமபரிகாரம் செய்து கொள்ளுவார். அப்போது இரண்டு பையன்கள் உள்ளே அழைக்கப் படுவார்கள்- ஒருத்தன் கால் அழுத்தவும் இன்னொருத்தன் விசிறி கொண்டு விசிறவும். சற்று நேரத் தில் ஐயாவின் லேசான குறட்டை கேட்டதும் எழுந்து வெளியே வருவார்கள். அப்புறம் தான் எல்லோருக்கும் நிம்மதியாய் மூச்சு விடவும் பேசிக்கொள்ளவும் முடியும்.

மற்ற ஆசிரியர்கள் 2 மணிக்குத்தான் வருவார்கள். அதுவரை சட்டாம் பிள்ளைதான் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வான். அப்போது அவனது அதிகாரம் தூள்பறக்கும். ஐயாவின் கெடுபிடியே தேவலை என்கிற மாதிரி இருக்கும். பிள்ளைகள் சிலரிடம், மதியம் சாப்பிட்டு வரும்போது ஏதாவது தின்பண்டம் எடுத்து வரும்படி சொல்லுவான். கொடுக்காப்புளி, இலந்தை, வெல்லம் என்று அவரவர்க்குக் கிடைத்ததைக் கொண்டு வருவார்கள். சமயங்களில் சில பிள்ளைகளால் கொண்டு வரமுடியாது போய்விடும். அதை மனதில் வைத்துக் கொண்டு, ஏதாவது கோள் மூட்டி, பேசியதாக எழுதி வைத்து, கோமணம் கட்டாத போது காட்டிக் கொடுத்து - ஐயாவிடம் 'கொலை அடி' வாங்கிவைத்து விடுவான். ஒரு தடவை புரோகிதர் விட்டுப் பெண்ணுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான். அன்றும் கொண்டு போகாவிட்டால் அவன் என்ன செய்வானோ என்ற பயத்தில் அகப்பட்டதைக் கொண்டு வந்து விட்டாள். "என்ன இன்னிக்காச்சும் எதுனாகொணாந்தியா?" என்று அவன் கேட்கவும் அவள் பயத்துடன் தலையசைத்தாள். "எடு சீகிரம்'' என்று அவன் அவசரப்படுத்தவும், அவள் மிரட்சியுடன் சுற்று முற்றும் பார்த்தபடி இடது கையைப் பின்னால் முதுகுப் பக்கம் கொண்டுபோய் பாவாடை நாடாவின் அடியில் செருகி சுருட்டி வைத்திருந்ததை விடுவித்து கையை மூடியபடி அவனது கையில் வைத்து மூடினாள். அவன் ஆவலோடு திறந்து பார்த்தால் - அதில் இருந்தது ஒரு சாம்பார் முருங்கைக்காய்த் துண்டு! 'அடச் சீ!' என்று கையை உதறி வெளியே விட்டெறிந்தான். எல்லோரும் சத்தம் போடாமல் நமுட்டுச் சிரிப்பு சிரித்தோம். அதற்குப் பிறகு அவன் அந்தப் பெண்ணை எதுவும் கொண்டு வரக் கேட்பதில்லை.

மணி இரண்டானதும் மற்ற ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்த இடைநிலை ஆசிரியர். அவர்தான் விருப்பப்பட்டவர்க்கு மட்டும் மூன்றாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் சொல்லித் தருவார். மணி நாலரை வரை அவர்கள் பாடம் நடத்தி விட்டுக் கிளம்புவார்கள். பள்ளி நேரம் முடிவதை அறிவிக்க மணியெல்லாம் அடிப்பதில்லை. அவர்கள் கிளம்பினால் பள்ளி நேரம் முடிவதாகக் கொள்ளவேண்டும். அவர்கள் போனால் பிள்ளைகளும் போய்விட முடியாது. அப்புறம் ஐயா பிடித்துக் கொள்வார் ஆறு மணி வரை.

அதற்குப் பிறகு ஐயா எல்லா வகுப்புகளுக்கும் சோதனையில் இறங்குவார். காலையில் முறை போட்ட வாய்ப்பாடு, எழுத்து எல்லாம் சோதிக்கப்படும். அரிச்சுவடிப் பையன்கள் கேட்ட எழுத்தை மணலில் எழுதிக்காட்ட வேண்டும். வாய்ப்பாடுகள் கெட்டி எண்சுவடியில் உள்ளபடி தமிழ் எண்கள், நெடுங்கணக்கில் மாகாணி, அரைக்கால், கால், அரை, முக்கால் வாய்ப்பாடு என்று எதைக் கேட்டாலும் திக்காமல் திணறாமல் சொல்ல வேண்டும். பாடங்களின் தலைப்பு வரிசைகள்- பாட எண் சொன்னால் தலைப்பு, தலைப்பு சொன்னால் வரிசை எண்- இப்படி எப்படி மடக்கினாலும் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிடில் தொலைந்தது. ஐயா எப்போதும் கக்கத்தில் வைத்திருக்கும் மணிப் பிரம்பு இரக்கமின்றி உடல் மீது விளையாடும். ஆக, எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் அத்துப்படி ஆவது இந்த நேரத்தில் தான். பெரிய வகுப்புப் பையன்கள் சதகம், விவேக சிந்தாமணி போன்ற நீதிநூல்களை மனப் பாடம் செய்ததை ஒப்பிக்கக் கேட்பதும் இப்போதுதான்.

ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு மத ஆசாரப்படி ஒரு சதகத்தைத் தேர்ந்து, அதை மனப்பாடம் செய்ய வேண்டும். சைவக் குடும்பமானால் 'அறப்பளீசுரர் சதகம்', 'குமரேச சதகம்' - வைஷ்ணவக் குடும்பமானால் 'திருவேங்கட சதகம்' - இப்படி ஒன்றை ஐயாவே அவரவர் குடும்பத்திற்கேற்ப வகைப்படுத்திக் கொடுத்து விடுவார். ஒன்றாம் வகுப்புக்கு 'உலகநீதி, இரண்டாம் வகுப்புக்கு 'ஆத்திசூடி', மூன்றாம் வகுப்புக்கு
'கொன்றைவேந்தன்' நான்காம் வகுப்புக்கு 'வெற்றிவேற்கை', ஐந்தாம் வகுப்புக்கு 'விவேக சிந்தாமணி' - நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு சதகம் பாடம். சதகம் ஒப்பிக்கிற வேளை பலருக்குக் கண்டம்தான்! வார்த்தைகளைச் சந்தி பிரித்துப் சொல்லத் தெரியாமல் திணறினால், ஐயாவிடம் அடிவாங்காமல் முடியாது. இப்படித்தான் நான் ஐந்து வகுப்புக்குள் எண்ணும் எழுத்தும் கசடறக் கற்றேன். அறப்பளீசுரர் சதகமும், விவேக சிந்தாமணியும் மனப் பாடம் செய்தேன். இன்று அவை எனக்கு உதவுகின்றன.

லேசாகப் பொழுது மங்கத் தொடங்கியதும் ஐயா, "ம்ம்.. போயி வெளக்கு முன்னாலே ஒக்காந்து படிக்கணும். நா வந்து பாப்பேன்" என்று மிரட்டலாகச் சொல்லி அனுப்பி வைப்பார். சொன்னபடி இரவு வீட்டுக்கு வருவார் என்பதும் உண்மைதான்; ஆனால் வராமல் போகிற அதிர்ஷ்டமும் சிலருக்குக் கிட்டுவதுண்டு.

எங்களுக்கு முன் தலைமுறையில் மாலைப் பள்ளி முடிந்து கீழ்க்கண்ட பாடலை பிள்ளைகள் அனைவரும் ஒரே குரலில் பாடி விடை பெறுவதுண்டு.

"அந்திக்குப் போறோம் நாங்கள்
அகத்திலே விளையாடாமல்
சுந்தர விளக்கிகன் முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்தது வாராதெல்லாம்
வகையுடன் படித்துக் கட்டி
இந்திரன் சேவல் கூவ
எழுந்திருந்து வாரோமையா
திருப்தியாய் அனுப்புமையா
திருவடி சரணம் தானே"

பின்னொட்டு:-

இதற்கு முன் கட்டுரையில், நெற்றிக்கு இட்டுக் கொண்டு வராத மாணவனின் நெற்றியில் சட்டாம் பிள்ளை சாணத்தைப் பூசி விடுவான் என்று எழுதியிருந்தேன். அதை இணையத்தில் படித்த என் தம்பி அது தொடர்பான ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளார். ஒரு தடவை எங்களூரில் இருந்த ஒரே முஸ்லிம் குடும்பத்துப் பையன் அவனது மத முறைப்படி நெற்றிக்கு இடாமல் வந்திருந்தான். அப்போதைய சட்டாம் பிள்ளைக்கு முஸ்லிம்கள் நெற்றிக்கு இடமாட்டார்கள் என்பது தெரியாமல் அவனது நெற்றியிலும் பட்டையாய் சாணத்தைப் பூசி விட்டான். அந்தப் பையன் அழுது கொண்டே வீட்டுக்குப் போய் அவன் அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பாக்காரர் கோபாவேசமாக வந்து ஐயாவிடம் சத்தம் போட்டு மகனை நிறுத்திவிடப் போவதாகச் சொன்னார். ஐயா யாருக்கும் பணிகிறவர் அல்ல. ஆனாலும், பெற்றவரின் உணர்வை மதித்து மன்னிப்புக் கேட்காத குறையாக சமாதானப் படுத்தி அனுப்பினார். அவர் போன பிறகு சட்டாம்பிள்ளைக்குக் கிடைத்த மண்டகப்படி அவனது ஜென்மத்துக்கும் மறக்காது! அத்தோடு அவனது சட்டாம்பிள்ளை பதவியும் பறிக்கப் பட்டது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Monday, November 29, 2004

நினைவுத் தடங்கள் - 26

காலை 9 மணிக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வந்த பின் தான் முறைப்படி காலைப்பள்ளி துவங்கும் என்றாலும், அய்யாவின் எதிர் பார்ப்பின்படி எல்லா பிள்ளகளும் 8 மணிக்கே வந்துவிட வேண்டும். ஆசிரியர்கள் வருவதற்குள் காலைப் பிரார்த்தனை, முறைபோட்டு எழுதுதல், காப்பி எழுதுதல் எல்லாம் அய்யா பார்வையில் நிகழும்.

எல்லொரும் காலையில் குளித்து நெற்றியில் அவரவர்க்குரிய மதச் சின்னங்களை இட்டுக் கொண்டு கையில் விறகோ வரட்டியோ அய்யாவின் சமையலுக்காகக் கொண்டு வருவது கட்டாயம். சம்பளம் என்பது வெறும் எட்டணா தான். அதுவும் பெண்களுக்கும் ஹரிஜனங்களுக்கும் கிடையாது என்பதால் பெற்றோர் இந்த விறகு விஷயத்திற்குச் சுணங்குவதில்லை. விறகைக் கொண்டு வந்து அய்யா தங்கும் கூடத்திற்கு வெளியே வெயிலில் போட்டு விட்டுப் போய் உட்கார்ந்ததும், சட்டாம் பிள்ளை ஆண்கள் ஒவ்வொருவரையும் பின் பக்கம் தடவிப் பார்த்துக் கோவணம் கட்டியிருக்கிறார்களா என்று சோதிப்பான். யாராவது கோவணம் கட்டாது வந்தால், அய்யாவிடம் அவன் கொண்டு போகப் படுவான். அய்யா அவனது துண்டை உருவி அம்மணமாக்கி வீட்டுக்குத் துரத்தி விடுவார். அப்படியே வீட்டுக்கு ஓடி கோமணம் கட்டிக்கொண்டு வந்தால் தான் ஆயிற்று. சிலர் மறதியாலோ கோவணத்துக்குத் துணி கிடைக்காமலோ கட்டாது வரும்போது சட்டாம்பிளையிடமிருந்து தப்பிக்க பின்புறம் அரணாக் கயிற்றில் பேப்பரைச் சுருட்டிச் செருகி முட்டாகக் காட்டுவது உண்டு. சட்டாம்பிள்ளைக்கு அவ்வப்போது ஏதாவது தின்பண்டம் கொண்டு வந்து கொடுத்தால் காட்டிக் கொடுக்க மாட்டான். இல்லாவிடில் அய்யாவிடம் மாட்ட வைத்துவிடுவான். துணியை உருவி துரத்துவதுடன், ஏமாற்றுவேலையில் ஈடுபட்டதற்காக கடுமையாய்ப் பிரம்படியும் கிடைக்கும்.

பிரார்த்தனை ஆரம்பிக்கு முன் அய்யா எல்லோருடைய நெற்றியையும் சுற்றி வந்து பார்ப்பார். யாராவது நெற்ற்¢க்கு இட்டுக் கொண்டு வராதிருந்தால் அய்யா உடனே சட்டம் பிள்ளைக்குக் கையைக் காட்டுவார். அவன் வெளியே போய், தெருவில் கிடக்கும் சாணியை எடுத்துவந்து நெற்றிக்கு இடாதவன் நெற்றியில் மூன்று வரிகளாக விபூதிப் பட்டை மாதிரிப் பூசி விட்டுவிடுவான். நாழியாக ஆக, சாணி காய்ந்து வறவற வென்று இழுக்கும். அப்புறம் அவன் நெற்றிக்கு இட ஒரு நாளும் மறக்க மாட்டான்.

அடுத்து அய்யா "கடவுள் வணக்கம் பாடுங்க" என்றதும் எல்லோரும் எழுந்து நின்று கைகூப்பியபடி உரத்த குரலில் ஒரே இரைச்சலாய்ப் பாட ஆரம்பிப்பார்கள். குரு வணக்கத்தில் தொடங்கி, விநாயகர், சரஸ்வதி என்று, ஒரு கடவுளுக்கு ஒரு பாடல் வீதம் வள்ளலார், அருணகிரியார் பாடல்களைப் பாடுவார்கள். எல்லோருடைய வாய்களும் அசைகின்றனவா என்று அய்யா கவனமாகப் பார்ப்பார். மற்றபடி இரைச்சலை அவர் கண்டு கொள்வதில்லை.

கடவுள் வணக்கம் முடிந்ததும் முறைபோட்டு மணலில் எழுதுவதும் காப்பி எழுதுவதும் தொடங்கும். மூன்றாம் வகுப்புக்கு மேல்தான் காப்பிநோட்டு. அரிச்சுவடி வகுப்பும், ஒன்று, இரண்டாம் வகுப்புகளும் மணலில் ஒருவன் உரத்து ராகமாய்ச் சொல்லிக் கொண்டே எழுத மற்றவர்கள் பின்பற்றி உரத்துச் சொல்லியபடி எழுதவேண்டும். மாற்றி மாற்றி முறை போட்டுக் கொண்டு தொடர வேண்டும். இப்படி 'அ' தொடங்கி 'ன்' வரை 247 எழுத்துக்களையும் வாய்ப்பாடுகளையும் தினமும் எழுதியாக வேண்டும். இதனால் எழுத்துப் படிவதோடு மனப்பாடமும் ஆகிவிடும். ஒரு பக்கம், அய்யா மேசை மீது அடுக்கி வைக்கப் பட்டிருக்கு காப்பி நோட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்துத் தன் கைப்பட எதாவது வாசகங்களை எழுதிப் பொடுவார். அவற்றை எடுத்து எல்லோரும் அவரவர் நோட்டுகளில் அய்யா எழுதி இருப்பது போலவே அச்சு அச்சாய்க் காப்பி எழுதுவர். அடுத்து எல்லோரும் தலைக்கு எண்ணெய் தடவி தலைவாரி இருக்கிறார்களா, சட்டைப் பொத்தான்களைச் சரியாகப்
போட்டிருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பார். அது முடிந்ததும் அய்யா வருகைப் பதிவேட்டை எடுத்து வகுப்புவாரியாகப் பெயர்க¨ளை அவர்களது சாதியுடன் பதிவு செய்துள்ளபடி, வாசிப்பார். பெயரோடு சாதியையும் சேர்த்து எழுதுவதும் அழைப்பதும்தான் அய்யாவின் வழக்கம். புதுப் புத்தகத்தில் பெயர் எழுதிக் கொடுக்கும்பொதும் அப்படித்தான். அதை யாரும் அப்போது ஆட்சேபிப்பதில்லை. விட்டுவிட்டால் தான் ஆட்சேபணை எழுமே தவிர சேர்ப்பதில் புகார் வராது.

இதற்குள் மணி ஒன்பது ஆகிவிடும். மற்ற ஆசிரியர்களும் வந்துவிடுவர். அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அய்யா தன் கூடத்துக்கு சமையல் செய்யப் பொய்விடுவார். மணி பனிரெண்டு வரை பாடத்திட்டப்படி பாடங்கள் நடக்கும். காலை வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் சாப்பிடப் போய் விடுவார்கள். அவர்கள் போனாலும் பிள்ளைகள் உடனே போய்விட முடியாது. அய்யா வெளியே வந்து ஒரு அரைமணி நேரம் மனக்கணக்குகளை எல்லோருக்கும் போட்டுச் சரி பார்ப்பார். பிறகு "சரி, போய்ச் சாப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க" என்று அனுப்பி வைப்பார். எங்களுக்கு முன் தலைமுறைவரை அதிகாலை பாடியது போல இப்போதும் மதியச் சாப்ப்பாட்டுக்குப் போகும்போதும் ஒரு பாட்டுப் பாடுவது உண்டு.

"சட்டம் சரவை தானெழுதி
சரவா இலக்கத் தொகை ஏற்றி
இட்ட கணக்கும் வாசகமும்
எல்லாக் கணக்கும் பார்த்துவிட்டோம்
வட்டமான சூரியனும்
மதியம் திரும்பி மேற்காச்சு
திட்டம் பண்ணி அனுப்புமையா
திருவடிசரணம் தானே!" - என்று ஒரே குரலில் பாடி விடைபெறுவதுண்டு.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

Tuesday, November 16, 2004

நினைவுத் தடங்கள் - 25

எனது ஆரம்பக் கல்வி அரசு உதவி பெற்ற துவக்கப் பள்ளியில்தான் என்றாலும் அது பழைய திண்ணைப் பள்ளிக்கூட பாணியில் தான் நடைபெற்றது. அதன் நிர்வாகியான லிங்காயத் இன சிதம்பரம் சாமிநாத அய்யர், பள்ளிப் பாடத் திட்டத்துக்கு அப்பாற் பட்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைதான் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவரை நாங்கள் 'அய்யா' என்றுதான் சொல்லுவோம். அப்படித்தான் சொல்ல வேண்டும். 'சார்' என்றெல்லாம் சொல்லக் கூடாது. 'சாராவது, மோராவது' என்று அவர் கண்டிப்பார்.

அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரில்லை. பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை என்றால் அதற்கு முன்னும் பின்னும், எல்லா வகுப்புகளையும் அவரே பார்த்துக் கொள்வார். பள்ளி நேரத்தில் மற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வர்கள். அய்யா பார்த்துக் கொள்ளும் நேரம் தான் உருப்படியானது, கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்டது. பிள்ளகள் பயந்து அமைதி காக்கும் நேரமும் அதுதான்.

அய்யாவின் நேரம் அதிகாலையிலேயே தொடங்கி விடும். எல்லோரும் பொழுது புலருமுன்னே எழுந்து, கைகால் சுத்தம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு, புத்தகம் எதுவுமில்லாமல் சிலேட்டு மட்டும் எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு வந்து விட வேண்டும். முதலில் வருபவன் 'வேத்தான் சீட்டு' என்கிற வரிசைப் பட்டியலை, சிலேட்டில் பதிவு செய்வான். முதலில் வந்தவன் 'வேத்து' - அடுத்து வருபவன் 'ஒன்று' எனப் பதிவாகும். எல்லோரும் கையெழுத்து தெரியுமுன்னரே வந்து சேர்வார்கள். அய்யா குடும்பம் இல்லாதவர் என்பதால் பள்ளியிலேயே - ஊர் மக்கள் கொடுத்த பொதுச் சாவடி- தங்கி இருப்பவர், சரியாக ஆறு மணிக்கு எழுந்து வெளியில் வருவார் - அக்குளில் மணிப்பிரம்புடன். அதுவரை மூச்சு விடுவதுகூடக் கேட்காதபடி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். முதலில் வந்த 'வேத்து'- பட்டியலை வாசிப்பான். வேத்துக்கு அடி கிடையாது. அதனால் முதலில் வரப் போட்டி போடுவோம். பிறகு, வந்த வரிசைப்படி நீட்டும் கரங்களில் வரிசை எண்படி பிரம்படி விழும். பிரம்படி என்றால் பலமாக இராது. கடைசி அடிக்கு முன் வரை லேசாகப் பிரம்பு ஆடி உள்ளங்கையைத் தட்டும். கடைசி அடி சற்றுப் பலமாக விழும். 'உஸ்' என்று கையை உதறி வாயால் ஊதிக் கொள்கிற மாதிரி இருக்கும். அடி வாங்குபவரது முகத்தையோ அது காட்டும் வேதனையையோ அய்யா கவனிப்பதில்லை. முதலாக வந்தவனைப் பாராட்டுவதோ, கடைசியாக வந்தவனைக் கண்டிப்பதோ இல்லை. இது பிள்ளைகள் விடியற்காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும் அமைதியாக இருக்கவுமான பயிற்சியே தவிர வேறு கண்டிப்பு கிடையாது.

'வேத்தடி' முடிந்ததும் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான். திரும்பு முன் எல்லோ ரும் உரத்த குரலில் ராகம் போட்டு ஒரு பாட்டு எங்களுக்கு முன் தலைமுறைகளில் பாடுவது உண்டு.

'காலமே எழுந்திருந்து
கைகால் சுத்தம் செய்து
கோலமாய் நீறும் பூசி
குழந்தைகள் பசியும் ஆற,
பாடமும் சொல்லிக் கொண்டோம்
'படியடி' ஏந்திக் கொண்டோம்
சீலமாய் அனுப்புமையா
திருவடி சரணம்"

- என்று தண்டமிட்டு சிலேட்டுடன் வீடு திரும்புவார்கள். பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி நிகழ்ச்சிகள் நடக்க வேண்டுமென்பதில்லை. விடியற்காலைப் பள்ளி முடிந்ததும் பாடியாக வேண்டிய சம்பிரதாயம் அது. போய்க் குளித்து. சாப்பிட்டு, சீக்கிரம் புத்தகங் களுடன் திரும்பவேண்டும். ஆனால் இதற்கு 'வேத்தடி' கிடையாதாகையால் ஓடிவர வேண்டியதில்லை. நிதானமாக வரலாம். ஆனால் ஒன்பது மணிக்குள் வரவேண்டும். அப்புறம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பொறுப்பு. அய்யா மாலைப் பள்ளி நேரம் முடிகிற வரை தலையிட மாட்டார். பிள்ளைகளுக்கு சுதந்திரமான நேரம் அது.

-மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.