Wednesday, March 30, 2005

களஞ்சியம் - 18

எனது களஞ்சியத்திலிருந்து - 18

விவேகசிந்தாமணி விருந்து - 7

புரட்சிக் கவிஞர் போற்றிய பாடல்

விவேகசிந்தாமணியின் பாடல்களில் அதிகமும் பட்டியலிடுவதாகத் தோன்றுபவை. பயனற்ற ஏழு, பகைக்கக் கூடாத பன்னிருவர், விரைவில் அழிந்து போகக் கூடியவை, மற்றவர்க்குச் சொல்லத்தகாதவை, பெண் கொடுக்கத் தக்கவர், பெண் கொடுக்கத் தகாதவர் என்று நீதிகளைப் பட்டியல் இட்டே மனதில் பதியும்படி சொல்கிற பாடல்களே அதிகம். நீதியை மட்டுமல்ல சில நினைவூட்டல்களையும் பட்டியல்
இடும் பாடலும் உண்டு.

அடிக்கடி பயணம் செய்பவர் பயணத்திற்கான பொருள்களை, கடைசி நேரத்தில் தேடும் சிரமத்தைத் தவிர்க்க பட்டியல் தயாரித்து வைப்பார்கள் அல்லவா? அது போன்றவொரு பட்டியலை ஒரு பாடலில் பார்க்கலாம். இது பழைய காலத்தில், இன்று போல போக்குவரத்து வசதியில்லாமல் கூண்டு வண்டி கட்டிக் கொண்டு நெடும்பயணம் செய்கையில் வழியில் சமைத்துச் சாப்பிட அதற்கான பொருள்களுடன் செல்பவர்க்கான நினைவுப் பட்டியலாக உள்ளது.

'தண்டுலம் மிளகின்தூள் புளி உப்பு
தாளிதப் பொருள்கள் பாத்திரங்கள்
தாம்பு நீர்தேற்றும் ஊன்றுகோல் ஆடை
சக்கிமுக்கியுடன் கைவிளக்கு
கண்டகம் முகுரம் பூசை வஸ்துக்கள்
கழல் குடை அடிமை சிற்றுண்டி
கம்பளி ஊசி நூல் அடைக்காய்ப் பை
கரண்டகம் கண்டம் நல் உப்பில்
துண்டம் ஊறிய காய் கரண்டி நல்லெண்ணெய்
துட்டுடன் பூட்டு கைக்கத்தி
சொல்லிய இவைகள் குறைவரத் திருத்தித்
தொகுத்து வேற்று ஊர் செலும் மனிதன்
பெண்டுகள் துணையோடு எய்தும் வாகனனாய்ப்
பெருநிலை நீர்நிழல் விறகு
பின்னும் வேண்டுவ சேர் இடம் சமைத்துண்டு
புறப்படல் யாத்திரைக்கு அழகே.

(தண்டுலம் -அரிசி; நீர் தேற்றும் ஊன்றுகோல் - நீரின் ஆழத்தை அளவிடும் அளவுகோல்; கண்டகம் -அரிவாள்; முகுரம் - கண்ணாடி; கழல் - செருப்பு; அடைக்காய்ப் பை - வெற்றிலைப் பாக்குப் பை; கரண்டகம் - சுண்ணாம்புக் கரண்டகம்.)

'அயல் ஊருக்குப் பயணம் போகும் ஒருவன், அரிசி, மிளகுத் தூள், புளி, உப்பு, தாள்¢த்தற்குரியவை, பாத்திரங்கள், கயிறு, நீரின் ஆழத்தைக் காட்டும் ஊன்றுகோல், ஆடைகள், தீ உண்டாக்கும் சக்கிமுக்கிக்கல், கைவிளக்கு, அரிவாள், கண்ணாடி, பூசைக்குரிய பொருள்கள், செருப்பு, குடை, பணியாள், சிற்றுண்டிகள், கம்பளம், ஊசி நூல், வெற்றிலைப்பை, சுண்ணாம்புக் குப்பி, எழுத்தாணி, உப்பில் ஊறிய காய், கரண்டி, நல்லெண்ணெய், காசுகள், பூட்டு, கைக்கத்தி, என்று இவற்றைக் குறைவில்லா மல் திருத்தம் செய்து சேர்த்துக் கொண்டு பெண்களின் துணையுடன், பொருந்திய ஊர்தியுடன் புறப்பட்டு, இடையில் நீர்நிலை, நிழல், சமைப்பதற்குரிய விறகு, மற்றும் விரும்பத் தக்கவை ஆகியவை உள்ள இடங்களில் இறங்கித் தங்கிச் சமையல் செய்து உண்டு, பிறகு புறப்பட்டு கருதிய இடத்துக்குச் செல்லுதல் சிறப்பாகும்.'

எவ்வளவு தீர்க்க தரிசனமான முஸ்தீபு! ஆனால் இன்றைய காலகட்டத்தில் இதைப் பின் பற்ற யாருக்கு அவசியம் ஏற்படப் போகிறது? இதை உத்தேசித்துத்தானோ என்னவோ இந்தப் பாடலைப் பின்பற்றி இன்றைய தேவைக்கேற்ப ஒரு பட்டியல் கொண்ட பாடலை எழுதியுள்ளார்
பாவேந்தர் பாரதிதாசன்.

'சீப்புக் கண்ணாடி ஆடை சிறுகத்தி கூந்தல் எண்ணெய்
சோப்புப் பாட்டரி விளக்குத் தூக்குக் கூஜா தாள் பென்சில்
தீப்பெட்டிக் கவிகை சால்வை செருப்புக் கோவணம் படுக்கை
காப்பிட்ட பெட்டி ரூபாய் கைக்கொள்க யாத்திரைக்கே.'

( கவிகை - குடை; காப்பிட்ட - பாதுகாப்பான )

விவேகசிந்தாமணி பட்டியலில் உள்ளவற்றில் காலத்திற் கேற்றபடி தேர்வு செய்த பட்டியலை புரட்சிக் கவிஞர் அளித்துள்ளார்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்

Saturday, March 26, 2005

உவமைகள் வர்ணனைகள் - 37

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 37

பாரதியார் கதைகளிலிருந்து:


1. கந்தர்வ லோகத்துக்குப் போய்ச் சேர்ந்தவுடனே என்னையறியாமல் ஓர் ஆனந்தம் உண்டாயிற்று. அதி ரமணீயமான சங்கீதத் தொனி கேட்டது. அவ்வொலி பொன்னாற் செய்யப்பட்ட தொண்டையினையுடைய பெண் வண்டுகளின் ரீங்காரம் போலிருந்தது. அன்று, அது சரியான உவமையாக மாட்டாது. உயிருக்குள்ளே இன்னிசை மழையை வீசிக்கொண்டேயிருந்தது போலத் தோன்றிய அவ்வொலிக்கு இன்ன உவமை சொல்வது என்று எனக்குத் தெரியவில்லை.

- 'ஞானரதம்'.

2. குழந்தை சந்திரிகைக்கு இப்போது வயது மூன்றுதானாயிற்று. எனினும், அது சிறி தேனும் கொச்சைச் சொற்களும், மழலைச் சொற்களும் இல்லாமல் அழுத்தம் திருத்தமாக வார்த்தை சொல்லும். அந்தக் குழந்தையின் குரல் சிறிய தங்கப்புல்லாங்குழலின் ஓசையைப்போன்றது. குழந்தையின் அழகோ வருணிக்குந் தரமன்று; தெய்வீக ரூபம்; வனப்பின் இலக்கியம்.

- 'சந்திரிகையின் கதை'.

3. மழை முழங்குகிறது. மின்னல் சூறையடிக்கிறது. சுருள் மின்னல், வெட்டு மின்னல், வட்ட மின்னல், ஆற்று மின்னல்..........

மின்னல் வீச்சிலே கண் கொள்ளை போகிறது. இடி என்றால் இடியா? நம்முடைய சினேகிதர் பிரமராய அய்யருக்குத் தொண்டை, இடிபோல கர்ஜனை செய்வதையொட்டி, அவர் மாலைதோறும் பேசுகிற திண்ணைக்கு இடிப் பள்ளிக் கூடம் என்று பெயர் சொல்வார்கள். அவரெல்லாம் இந்த நிஜ இடியைக் கண்டு கலங்கிப் போய் விட்டார்.

- 'மழை'.

4. வேதபுரத்தில் ஒரு புது மாதிரிக் குடுகுடுப்பைக்காரன் புறப்பட்டிருகிறான். உடுக்கை தட்டுவதிலே முப்பத்தைந்து தாளபேதங்களும், அவற்றிலே பல வித்தியாசங்களூம் காட்டுகிறான். தாள விஷயத்தில் மகா கெட்டிக்காரன். உடம்பு மேலே துணிமூட்டை சுமந்து கொண்டு போவதில்லை. நல்ல வெள்ளை வேஷ்டி உடுத்தி, வெள்ளைசட்டை போட்டுக் கொண்டிருக்கிறான். தலையிலே சிவப்புத் துணியால் வளைந்து வளைந்து பெரிய பாகை கட்டியிருக்கிறான். பாகையைப் பார்த்தால் நெல்லூர் அரிசி மூட்டையிலே பாதி மூட்டையைப் போலிருக்கிறது. நெற்றியிலெ பெரிய குங்குமப் பொட்டு; மீசையும் கிருதாவுமாக மிகவும் விரிந்த பெரிய முகத்துக்கும் அவனுடைய சிவப்பு நிறத்துக்கும் அந்தக் குங்குமப் பொட்டு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. ஆள் நெட்டை; தடியன். காலிலே ஹைதராபாத் ஜோடு மாட்டியிருக்கிறான். நேற்றுக்
காலையிலே, இவன் நம்முடைய வீதி வழியாக வந்தான். உடுக்கையிலே தாள விஸ்தாரம் நடக்கிறது. பெரிய மிருதங்கக்காரன் வேலை செய்வதுபோல செய்கிறான்.

- ' புதிய கோணங்கி'.

5. ரவீந்திரநாத டாகூர் சொல்வது போல் இவளுடைய தலைமயிர் முக்காற் பங்கு பழமாகவும், காற்பங்கு காயாகவும் இருந்தது. அதாவது , முக்காற் பங்கு நரை; பாக்கி நரையில்லை.

- 'குழந்தைக் கதை'.

6. சில சமயங்களில் ஜமீந்தார் ஏறு குதிரை சவாரி செய்வார். இவருக்கென்று தனியாக ஒரு சின்னக் குதிரை மட்டம். - ஆட்டைக் காட்டிலும் கொஞ்சம் பெரிது- தயார் செய்து கொண்டு வருவார்கள். அதன் மேல் இவர் ஏறி உட்கார்ந்தவுடனே அதற்கு முக்கால்வாசி மூச்சு நின்று போகும். பிரச்சினை கொஞ்சம்தான் மிஞ்சியிருக்கும்.எனினும் இவருக்குப் பயம் தெளியாது. இவருடைய பயத்தை உத்தேசித்தும்
குதிரையை எப்படியாவது நகர்த்த வேண்டும் மென்பதை உத்தேசித்தும் முன்னும் பின்னும் பக்கங்களிலுமாக ஏழெட்டு மறவர்கள் நின்று அதைத் தள்ளிக் கொண்டு போவார்கள். ஜமீந்தார் கடிவாளத்தை ஒரு கையிலும் பிராணனை மற்றொரு கையிலும் பிடித்துக் கொண்டு பவனி வருவார்.

- 'சின்னச் சங்கரன் கதை'.

7. தாய் தந்தையர் வைத்த பெயர் கோவிந்தராஜுலு. அவன் தானாக வைத்துக் கொண்ட பெயர் கலியுக கடோற்கசன். அவன் உயரம் ஐந்தேகால் அடியிருக்கலாம். குண்டுருளை போலே வைரமான உடம்பு. இவன் மேலே மோட்டார் வண்டி ஓட்டலாம். மாட்டு வண்டி விடலாம். இவன் தலை ரோமத்தில் முந்நூறு ராத்தல் கல் தொங்கவிடலாம். இவன் தலையில் நாற்பது பேர் அடங்கிய பெரிய தொட்டிலை
நிறுத்தி வைக்கலாம். இவன் இரண்டு விரல்களைக் கொண்டு மகாபாரத புஸ்தகத் தைக் கிழித்துப் போடுவான். இவன் பல்லினால் கல்லைப் பேர்த்துப் போடுவான். இவன் நகத்தால் கதவைப் பிளப்பான்.

- 'கலியுக கடோற்கசன்'.

8. "கயிற்றினிடத்தில் பேசினால் அது மறுமொழி சொல்லுமா?"

பேசிப் பார். மறுமொழி கிடைக்கிறதா இல்லயா என்பதை.

ஆனால் அது சந்தோஷமாக இருக்கும் சமயம் பார்த்து வார்த்தை சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் முகத்தைத் தூக்கிக் கொண்டு சும்மா இருந்து விடும்; பெண்களைப் போல.

- 'காற்று'.

9. குள்ளச்சாமி நெடிய சாமி ஆகிவிட்டார். நாலே முக்கால் அடிபோல் தோன்றிய குள்ளச்சாமியார் ஏழே முக்கால் அடி உயரம் வளர்ந்து விட்டார். ஒரு கண்ணைப் பார்த்தால் சூரியனைப் போல் இருந்தது. மற்றொரு கண்ணைப் பார்த்தால் சந்திரனைப் போல் இருந்தது. முகத்தின் வலப்புறம் பார்த்தால் சிவன் போல் இருந்தது. இடப்புறம் பார்த்தால் பார்வதியைப்போல இருந்தது. குனிந்தால் பிள்ளை யார் போல் இருந்தது. நிமிர்ந்து பார்க்கும்போது மகாவிஷ்ணுவின் முகத்தைப்போலே தோன்றியது.

- 'சும்மா'.

10. சிறிது நேரத்துக்குள் புயல் காற்று நின்றது. அங்கே ஒரு தோணி வந்தது; தோணியின் அழகு சொல்லி முடியாது. மயில் முகப்பும், பொன் நிறமும் கொண்டதாய் அன்னம் நீந்தி வருவது போலே மெதுவாய் என்னருகே வந்த அத்தோணியிடையே ஒரு மறக்குமாரன் ஆசனமிட்டு வீற்றிருந்தான். அவன் முகத்தினொளி தீயொளியைப் போலே விளங்கிற்று.

- 'கடல்.

- தொடர்வேன்.

- அடுத்து இராஜேந்திரசோழன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

நினைவுத் தடங்கள் - 31

அப்போதெல்லாம் ஆண்டுக்கு ஒரு முறை பள்ளி ஆய்வாளர்கள் பள்ளிகளை ஆய்வும் தணிக்கையும் செய்வார்கள். அப்போது பள்ளிகள் குறைவு. அதனால் தவறாது நடக்கும். இப்போது பள்ளிகளின் அதீதப் பெருக்கத்தால் உயர்ந்¢லைப் பள்ளி, மேல் ந்¢லைப் பள்ளிகள் கூட 4,5 ஆண்டுகள் தொடர்ந்து தணிக்கை செய்யப்படுவதில்லை.

ஐயாவின் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளியாதலால், தணிக்கை தவறாது நடக்கும். ஆய்வும் உடன் சேர்ந்தே நடைபெறும். எல்லாநிலைப் பள்ளிகளிலுமே ஆய்வு என்பது திருவிழா மாதிரிதான். ஒரு வாரம் இருக்கவே பள்ள்¢க்கூடம் அமர்க்களப்படும். ஐயா மற்றவர்களை முடுக்கி விடுவதுடன் தானே அதற்கான ஆயத்தங்களில் ஈடுபடுவார். பொங்கலுக்கு ஒட்டடை அடித்து, வெள்ளையடித்து வீட்டுக்குப் புதுக்களை உண்டாக்குவது மாதிரி பள்ளிக்கும் புதுமெருகு ஏற்றப்படும். கலர் பேப்பர் வாங்கி சணல்¢ல் ஜண்டா ஒட்டி, பள்ளிக்கு உள்ளும் வெளியும் கட்டப் படும். இதிலெல்லாம்- பாடம் படிக்கும் வேலை இல்லை என்பதால் பிள்ளைகள் வெகு உற்சாகமாய் ஈடுபடுவார்கள். பள்ளிப் பரணில் வைக்கப்
பட்டிருக்கும் தேசப் படங்கள், பிராணிகள் மற்றும் கதைப் படங்களை எல்லாம் அப்போதுதான் பிள்ளைகள் பார்க்கும் வாய்ப்பு உண்டாகும்.

கட்டுகளைக் கீழிறக்கித் தூசி தட்டித் துடைத்து, உள் சுவரிலும் வெளிச் சுவரிலும் ஆசிரியர்கள் மாட்டுவார்கள். ஐயா அருமையான, அறிவு பூர்வமான படங்களைச் சேகரித்து வைத்திருந்தார். அவைதாம் எத்தனை வகை! ஒருகட்டு முழுதும் தேசப் படங்கள். சொந்த தாலுக்கா படத்திலிருந்து ஜில்லா, மாகாணம்(அப்போது சென்னை மாகாணம். தென் இந்தியா முழுதும் மொழிவழி பிரிக்கப்படாமல் ஒன்றாக இருந்த
காலம்) இந்தியா, கண்டங்கள், உலகம் என்று எல்லாப் படங்களும் உண்டு. இன்னொரு கட்டில் தாயும் சேயுமாய் வீட்டு விலங்குகள், காட்டு விலங்குகள், பறவைகள் என்று - அழகான இயற்கைப் பின்னணியில் பார்த்துப் பார்த்து ஐயா சேகரித்து வைத்திருந்தார். கதைப் படங்கள் - இப்போதைய காமிக்ஸ் புத்தங்களில் உள்ள மாதிரி படக் கதைகள்- 'நரியும் காக்கையும்', 'நரியும் திராட்சையும்' போன்ற கதைகளை விளக்கும் படங்கள் ஒரு கட்டு. அப்புறம், கணக்குக் கற்பிக்கும் மணிச் சட்டங்கள், சுழல் அட்டைகள், கன உருவ மாதிரிகள், பூகோள உருண்டைகள் என்று - கொலுவுக்கு வெளியே வரும் பொம்மைகள் மாதிரி வெளிப்படும். கொலு முடிந்ததும் பொம்மைகள் மீண்டும் பரண்
ஏறுவதைப் போல் பள்ளி ஆய்வாளர் வந்து போனதும் இவைகளும் பரண் ஏறிவிடும். அதனால் பிள்ளைகள் கண்காட்சி போல, இப்போதுதான் திகட்டத் திகட்ட அத்தனையையும் கண்ணகலப் பார்ப்பார்கள். அப்புறம் பார்க்க வேண்டுமானால் மேலும் ஒரு வருஷம் காத்திருக்க வேண்டுமே!

ஆய்வுக்கு வருகிறவர்களும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. 'எப்படி இவையெல்லாம் புதுக் கருக்கழியாமல், சிரஞ்சீவியாய் மார்க்கண்டேயன் மாதிரி இருக்கின்றன? உபயோகப் படுத்துவதே இல்லையோ?' என்று கேட்க மாட்டார்கள். அவர்களுக்கு இதெல்லாம் அவர்கள் வரும்போது தென்பட்டால் போதும். உள்ளூரில் வில்வண்டி வைத்திருப்பவரிடம் கேட்டு ஆசிரியர் ஒருவரை உடன் அனுப்பி ஐந்து மைலுக்கு அப்பால் இருக்கும் நகரிலிருந்து இன்ஸ்பெக்டரை அழைத்துவரவெண்டும். அப்போதெல்லாம் எங்கள் ஊருக்குப் பஸ் வரவில்லை. வண்டியில் புதுவெண்ணெய் - நாற்றமில்லாமல் ஐயாவே நேரில் பார்த்து வாங்கியது இரண்டு மூன்று சேர், புதிதாய்ப் பறித்த காய்கறிகள் ஒரு பை - போகும்.

இன்ஸ்பெக்டர் வண்டியை விட்டு இறங்கியதும் உள்ளே நுழையுமுன்பாக நகரிலி-ருந்து வண்டியிலேயே வாங்கி வந்திருக்கிற பூமாலையை வாங்கி, ஐயா வெகு மரியாதையோடு அவருக்கு அணிவிப்பார். முன்பே சொல்லிவைத்தபடி பிள்ளைகள் கனஜோராகக் கைத்தட்டுவார்கள். கடுமையாக இருக்க வேண்டும் என்று வந்தால் கூட இத்தகைய வரவேற்புக்குப் பின்னால் எப்படி இன்ஸ்பெக்டருக்கு சாத்யமாகும்? மனசு குளிர்ந்து புன்முறுவலுடன் உள்ளே நுழைவார். உட்கார்ந்ததும் தயாராய் சீவி வைத்தி ருக்கிற இளநீரை, இரவல் வாங்கி வைத்திருக்கிற வெள்ளித் தம்ளரில் ஊற்றி ஒரு ஆசிரியர் பவ்யமாக ந்£ட்டுவார். மதியம் ஊர்ப் பெரிய மனிதர் வீட்டில் சொல்லி கேரியரில் சாப்பாடு வரும். ஆய்வு நல்லபடி நடந்தேறும்.

உபசாரத்தினால் மட்டுமல்லாமல் ஐயாவின் நேர்மையான பணியை உத்தேசித்தும் இன்ஸ்பெக்டர்கள் ஐயாவிடம் கடுமை காட்டுவதில்லை. பொதுவாக ஐயாவைப் பற்றி அதிகாரிகளுக்கு எப்போதுமே நல்ல அபிப்பிராயம் உண்டு. ஐயா மாதிரி யார் பள்ளிக் கூடமே கதியென்று ஞாயிற்றுக் கிழமைகளில்கூட பிள்ளைகளைக் கட்டி மேய்க்கிறார்கள்? ஐயாவின் 50 ஆண்டு சர்வீசில் ஒரே ஒரு இன்ஸ்பெக்டர்தான் அவரிடம் முரண்டு பண்ணித் தகராறு செய்தவர். அதன் பலனாய் அவமரியாதை அடைந்தும் திரும்பியவர். நாங்கள் படிக்கும்போது அது பற்றிப் பெரியவர்கள் கதை போலச் சொல்லுவார்கள். நாட்டுவக்கீல் என்று காரணப் பெயரால் அழைக்கப் பட்ட ஒருவர் - ஐயாவின் பழைய மாணவர்- எங்களுக்கு முன் தலைமுறைக்கு மூத்தவர், அடிக்கடி ஐயா அந்த இன்ஸ்பெக்டரிடம் சண்டை போட்ட வீரச் செயலைப் பற்றி தனக்கே உரிய ரசமான வருணனையோடு அலுக்காமல் சொல்லுவார். அது இன்னும் என் நினைவில் பசுமையாய் நிழலாடுகிறது.

"சாம்பமூர்த்தின்னு ஒரு இனிஸ்பெட்டர். ஜாதிலே அவுரு அய்யரு. அவுரு நாங்க படிக்கிறப்போ பரிட்சை பண்ண வந்தாரு. அந்தாளு கொஞ்சம் முசுடு. அவுருக்கு நம்ம வாத்தியாரு மேலே என்னாக் கோபமோ தெரியிலே. அந்தாளு கைக்கு வாங்கற வராட்டம் இருக்கு. இவுருதான் அதுலே கரெக்டாச்சே! ஏதோ வெண்ணெய், காய் கறின்னு இவுராப் பிரியப்பட்டுக் குடுத்தாத்தான். காசு வாங்கி ருசி கண்டவனுக்கு காய்கறியும் வெண்ணையும் எப்பிடிப் போதும்? சாடைமாடையாக் கேட்டும் இவுரு கண்டுக்கலை போல்ருக்கு. அந்தக் கோபம்
இனிஸ்பெட்டருக்கு. வரும்போதே ஒரண்டு கட்டிக்கிட்டு வந்தாரு. முன்கூட்டியே சொல்லிவச்சு வண்டி போய் அழச்சாறதுதான் வழக்கம். ஆனா இவுரு வாத்தியாருக்குச் சொல்லாமெக் கொள்ளாமே திடீருண்ணு குதுர வண்டியிலே வந்து எறங்குனாரு. அப்ப ஐயா மட்டும்தான் வாத்தியாரு. அவுருக்கு என்ன பண்றதுன்னே புரியலே. "வாங்க வாங்க! சொல்லியிருந்தா வண்டி அனுப்பிச்சிருப்பனே" ண்ணு பணிவாத்தான் சொன்னாரு. "ஏன் உம்மக் கிட்டே சொல்லிட்டுத் தான் வரணுமோ?" - அப்படீண்ணு முறைச்சாரு இனிஸ்பெட்டரு. "திடீருண்னு வந்தாத்தான் உம்ம வண்டவாளமெல்லாம் தெரியும்"ணு வேறே சொன்னாரு. சீண்டி விட்ட நல்ல பாம்பு மாதிரி வாத்தியாருக்கு 'புர்ரு'ண்ணு கோபம் வந்துடிச்சி. 'ஆஹா! பேஷாப் பாருமேன்! என் வண்டவாளத்த நீரு எடுத்துக் காட்டாமேப் போனீரு- அப்பறம் தெரியும் சேதி" ண்ணு ஒரு சீறு சீறுனாரு.

இனிஸ்பெட்டரு விடுவிடுண்ணு உள்ள போயி தானே நாக்காலிலே உக்காந்தாரு. அப்புறம் அரை நாழி 'தீவாளி'க் கேப்பு வெடிக்கிற மாதிரி 'சடபுடா'ன்னிட்டு அந்த ரிஜிஸ்டரக் கொண்டா, இந்த நோட்டக் கொண்டாண்ணு அதிகாரம் பண்ணி ஆர்ப் பாட்டம் பண்ணுனாரு. வாத்தியாரும் அப்பப்போ பதிலுக்கு எதிர்வாணம் மாதிரிச் சீறிக் கிட்டு அவுரு கேட்டத எல்லாம் எடுத்துக் காமிச்சாரு. பசங்களையும் வாய்ப்பாடு, மனக்கணக்கு, டிக்டேஷண்ணு பெரட்டி எடுத்தாரு. ஒண்ணுலியாவுது குத்தம் கண்டு புடிக்கணுமே! ஊகூம், நடக்குலே! எல்ல கஜகர்ணமும் போட்டுப் பாத்துட்டு, 'விசிட்' புஸ்தகத்த வாங்கி என்னுமோ விறுவிறுண்ணு கிறுக்குனாரு. வாத்தியாரு பேசாமப் பாத்துக் கிட்டே இருந்தாரு.
விசிட் புஸ்கத்தை எழுதி முடிச்சி மேசமேலே விட்டெ றிஞ்சாரு. வாத்தியாரு அத எடுத்துப் படிச்சுப் பாத்தாரு. படிக்கப் படிக்க மூஞ்சி பயங்கரமா செவசெவத்து உக்கிரமாயிடுச்சு! 'சர்'னு நோட்ட ரெண்டாக் கிழிச்சி இனிஸ்பெட்டரு தலமேல வச்சு, 'படக்'குண்ணு அவரோட பூணூல இழுத்துக் கையில புடிச்சிக்கிட்டு, "ஓய் சாம்பமுர்த்தி அய்யிரே! நெசந்தான் - இந்தப் பள்ளிக்கூடத்துல சுகாதார வசதியில்லே, கட்டடமில்ல, மரத்தடியிலதான் நடக்குது - அது இதுண்ணு 'கிராண்ட' வெட்டறதுக்குத் தோதா எழுதிப்புட்டீரு - சரி! - ஆனா அம்மாம் சத்திய வந்தரான உம்ம ஒண்ணு கேக்கிறேன் - உம்மப் பூணுலு மேலெ சத்தியமாச் சொல்லும்! இண்ணைக்குத் தேதி என்னா? முந்தா நாளுத் தேதிய போட்டுருக்கியே- அண்ணிக்குத் தான் இந்த 'ஸ்கூலை" விசிட் பண்ணியா நீ? உனக்குப் 'படி' கெடைக்குறத்துக்காக
அப்பிடி எழுதலேண்ணு சத்தியம் பண்ணு!" ண்ணு வாத்தியார் ஆங்காரமாக் கத்தவும் பயந்து பூட்டாரு இனிஸ்பெட்டரு. இரணியனக் கொடலப் புடுங்கி மாலையாப் போட்டுக்கிட்ட நரசிம்ம மூர்த்தி மாதிரி இருக்கு வாத்தியாரப் பாத்தா. அவுரு அலண்டு போயி எந்திருச்சி, 'சரி சரி! என்னே விடும்' ணு வெளியே பாய்ஞ்சி குதுர வண்டியிலே தாவி ஏறிப் பறந்துட்டாரு! பாவம், ஒரு வாய் காப்பிகூடக் கெடைக்கல அந்த மனுஷனுக்கு. எல்லாம் இருக்கிறபடி இருந்தால்ல? தம்பேர்லத் தப்பு இல்லேண்ணா, வாத்தியாரு லேசுலே உட்றமாட்டாரே!" என்று நாடகம் மாதிரி, அப்படியே நடிச்சுக் காட்டினார் நாட்டு வக்கீல் ஒரு தடவை எங்களுக்கு.

நேர்மையற்ற அதிகாரிகளுக்கு ஐயாவிடம் பயந்தான். நல்ல அதிகாரிகள் வந்து பார்த்து விசிட் புத்தகத்தில் ஐயாபற்றியும் அவரது போதனை பற்றியும் பாராட்டியே எழுதிப் போவார்கள். மக்களும் பிள்ளைகளும் அவரிடம் மதிப்பும் மரியாதையுமே கொண்டிருந்தார்கள். இப்படி மூன்று தலைமுறைகளுக்குக் கல்வி கற்பித்த அவர் கடைசி நாட்களில் நலிவடைந்து நாதியற்று பக்கத்து நகரில் பசியால் மயங்கி விழுந்து மரணமடைந்தது பெரும் சோகம். ஊருக்குப் பஞ்சாயத்து வந்தபோது அவர் இருந்த பொதுச் சாவடியைப் புதுப்பித்து அலுவலகம் ஆக்கினார்கள். அந்தக் கட்டடத்துக்கு ஐயாவின் நினைவாக அவர் பெயரை இட நானும் என் சகோதரர்களும் எவ்வளவோ முயன்றோம். ஆனால்
அவரது அருமையை அறியாத அடுத்த தலைமுறை அதை உதாசீனப் படுத்திவிட்டது. அது வெகு நாட்களாக என் மனதை உறுத்திக் கொண்டி ருந்தது. பிறகு 20 ஆண்டுகள் கழித்து, அவருக்கு நினைவுச் சின்னம் போல அவரது வாழ்வை மையப்படுத்தி என் முதல் நாவலை எழுதி அவருக்கு அர்ப்பணித்தேன். என் முதல் கதையின் நாயகனான அவரே என் முதல் நாவலின் நாயகனாகவும் அமைந்ததும் அந்த நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 1994ஆம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான 10000 ரூ. பரிசு பெற்றதும் நான் எதிர்பாராதது. எனக்கு எண்ணையும் எழுத்தையும் கசடறக் கற்பித்ததோடு என்னை எழுத்தாளனாக அங்கீகாரம் பெறவும் செய்த ஐயா என்றும் என் நினைவில் நிற்பவர்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Friday, March 11, 2005

களஞ்சியம் - 17

எனது களஞ்சியத்திலிருந்து -17: விவேகசிந்தாமணி விருந்து - 6

அற்பர் இயல்பு:

நம்மைச் சுற்றி நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்திறார்கள். அவர்களை இனம் காணுவதெப்படி? அவர்களது இயல்புகளையும், அவர்களோடு சேர்வதால் ஏற்படும் பயன்களையும் பற்றி விவேகசிந்தாமணியில் அனேக பாடல்கள் உள்ளன.

அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:

கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.

மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.

இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.

நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.

நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.

இப்படிப் பட்டவர் கல்வி கற்றாலாவது நல்லவராக மாற மாட்டார்களா என்ற கேள்விக்குப் பதில் இன்னொரு பாட்டில் இருக்கிறது.

தூம்பினில் புதைத்த கல்லும்
துகள் இன்றிச் சுடர் கொடாது;
பாம்புக்குப் பால் வார்த்து என்றும்
பழகினும் நன்மை தாரா;
வேம்புக்குத் தேன் வார்த்தாலும்
வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலும்
துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.

( தூம்பு - வீட்டு வாயில்; துகள் - புழுதி, தூசி; துர்ச்சனர் - தீயவர், கீழானவர் )

என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப்பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில் லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர். இதைச் சுட்டுகிறது ஒரு பாடல்.

கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக்
கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப்
பொருந்தக் காட்டும்;
சொற்பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே
சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக
நடக்கும்தானே.

( கமழ்நீர் - வாசனை நீர்; கத்தூரி - கஸ்தூரி; பொற்பு - அழகு; போதம் - அறிவு )

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, March 01, 2005

உவமைகள்-வர்ணனைகள்-36

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 36

வ.ரா வின் படைப்புகளிலிருந்து:

1. நாணுவய்யரின் கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அவரது வலது கைவிரல்களை அவருடைய கையிலே காண வேண்டுமென்பதில்லை. பையன்களுடைய கன்னங்களில் ஐந்து விரல்களையும், ரேகைகள் உட்பட, விளக்கமாகக் காணலாம். இவ்வளவு திறமையுடன் கையை உபயோகிக்கும் நாணுவய்யருக்குப் பட்டாளத்துச் சிப்பாயின் சம்பளத்துக்குக் கொஞ்சம் குறைவு. இருபது ரூபாய்க்குள் அடக்கம்.

- 'வாத்தியார் நாணுவய்யர்'.

2. மலைநாட்டு வாசிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சதா 'ஏறி இறங்கும் திருமேனி'களாய் வாழ வேண்டிஇருப்பதால் உயரமாய் வளர்வதில்லை'. எப்போதும் உணவுக்கு வேலை செய்து கொண்டு இருக்க வேண்டுமாகையால், உட்கார்ந்து உயரமாய் வளர்வதுக்கு நேரம் இல்லையோ என்னவோ! உயரம் என்ற விஷயத்தில் அவர்கள் மோசம் போனார்களே ஒழிய, கனத்தில் அவர்கள் மோசம் போகவில்லை.
அவர்கள் 'கட்டைக் குட்டை'. தேகம் குண்டுக் கல். ஆனால் தூக்கிப் போட்டால் உடைந்து போக மாட்டார்கள்.

- 'மைக் குறத்தி'.

3. வார நாட்கள், வாரத்துக்கு ஒரு தரம் திரும்பித் திரும்பி வருவதனால் கொஞ்சம் தேய்ந்து போனாலும் போயிருக்கும். சூரியன் சதா உருண்டு கொண்டே இருப்பதனால் (சம்பிரதாயப் பொய். சூரியன் உருளுவதில்லை என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்) ஒரு பக்கம் மூளியாய்ப் போனாலும் போகலாம். ஆனால் இராப்பகலாய், சலிக்காமல், முப்பது வருஷ காலமாக எங்கள் வீட்டில் வேலை செய்து வரும்
அம்மாக்கண்ணுவின் உடம்பு ஏன் தேய்ந்து போகவே இல்லை?

- 'வேலைக்காரி அம்மாக்கண்ணு'.

4. சின்னப் பையன்களுடைய பாடப் புஸ்தகங்களில் மயில் தோகை குட்டி போடும். ரொக்கப் பணமும் 'பிள்ளைத்தாச்சி போல" வட்டிக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கும். ரொக்க லேவாதேவிப் பணம் மலடுமல்ல; அதற்குக் காய்த்து பழுத்து, அலுத்துப் போகிற காலமும் கிடையாது.

- 'செருப்புக்கு அடி அட்டையா?'.

5. குப்பண்ணாவை நீங்கள் பார்த்தால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்று உங்களாலே சொல்ல முடியாது. ரொம்பவும் 'டாப்பு சிறப்பாக' இருப்பார். உயர்ந்த ரகமான துணியைத்தான் அவர் உடுத்துவார். தேகத்தில் சட்டை இராது. தெரு வழியாக அவர் சமஸ்கிருத சுலோகம் சொல்லிக் கொண்டு போகும்போது, அவர் எதையோ பாராயணம் செய்து கொண்டு, அலுவலகத்துக்குக்ப் போவதாகத் தோன்றும். தெருப் பிச்சை எடுப்பவர் குப்பண்ணா என்று நீங்கள் சந்தேகிக்க முடியாது.

- 'வாழ்க்கை விநோதங்கள்'.

6. பொம்மையும், பள்ளிக் கூடமும் தான் தெரியும். பாடப்புத்தகம் தெரியும்; சொல்லிக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யத் தெரியும்; வெளித் தோற்றதையே கண்டு மயங்குகிற வயது. பிறந்த சத்தத்துக்கெல்லாம் காது கொடுக்கிற வயது; பொய்த் தூக்கமில்லாத வயது;
கிழிந்த மயிலிறகு குட்டி போடும் வயது. இந்த வயதிலே சுந்தரி விதவை ஆனாள். விதவை என்ற வார்த்தைக்கு இந்தியாவிலே கொடுக்கிற
முழு அர்த்தமும் அவளுக்குத் தெரியுமோ?

- 'சுந்தரி' நாவலில்.

7. கிருருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே விநோதமாய் இருக்கிறது. யாரை அவர் கேலி செய்கிறாரோ, அவரும் சேர்ந்து சிரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். நான் சிரிக்க மாட்டேன் என்பது போல, வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டிருப்பவர்களையும், கோட்டை வாசல் திறந்தது போல வாயைத் திறந்து பார்த்துக் கொண்டே இருக்கும் படியாகக் கிருஷ்ணன் செய்து விடுகிறார்.

- 'தமிழ்ப் பெரியார்கள்' - என்.எஸ்.கிருஷ்ணன்.

8. பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப்போல் படீர் என்று வெடிக்கும் சிரிப்பல்ல; அமர்ந்த சிரிப்புமல்ல. வஞ்சகத்தை உள்ளே வைத்துக் கொண்டு வாயை மட்டும் திறந்து, பல்லைக் காட்டி, சிரிப்பைப் பழிக்கும் சிரிப்பல்ல; புன்னகையைப் புஸ்தகத்திலே பாடிக்கலாம்; ஆனால், பாரதியாரின் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது; சங்கீதச் சிரிப்பைத்தான் காண முடியும்.

- 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து.

9. பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும். கண்ணைக் குத்தும் கெய்சர் மீசை அல்ல; கத்தரிக் கோல் பட்ட 'தருக்கு' மீசை அல்ல. தானாக வளர்ந்து பக்குவப் பட்டு., அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை. அவரது வலக்கை, எழுதாத நேரங்களில் எல்லாம் அனேகமாக மீசையில் இருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது; மீசைக்கு 'டிரில்' பழகிக் கொடுப்பது
போலத் தோன்றும்.

- 'மகாகவி பாரதியார்'.

10. சுமங்கிலியைக் கண்டிக்க ஒரு மாமியாரும், ஒரு மாமனரும் தான். ஆனால் பால்ய விதவைக்கோ உலகம் முழுதும் மாமனாரும், மாமியாரும்.

-'விஜயம்' நாவலில்.

- தொடர்வேன்.

- அடுத்து பாரதியார் கதைகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.