Friday, March 11, 2005

களஞ்சியம் - 17

எனது களஞ்சியத்திலிருந்து -17: விவேகசிந்தாமணி விருந்து - 6

அற்பர் இயல்பு:

நம்மைச் சுற்றி நல்லவர்களும் கெட்டவர்களும் நிறைந்திறார்கள். அவர்களை இனம் காணுவதெப்படி? அவர்களது இயல்புகளையும், அவர்களோடு சேர்வதால் ஏற்படும் பயன்களையும் பற்றி விவேகசிந்தாமணியில் அனேக பாடல்கள் உள்ளன.

அற்பரின் இயல்பு பற்றி ஒரு பாடல்:

கதிர்பெறு செந்நெல் வாடக்
கார்குலம் கண்டு சென்று
கொதிதிரைக் கடலில் பெய்யும்
கொள்கைபோல், குவலயத்தே
மதிதனம் படைத்த பேர்கள்
வாடினோர் முகத்தைப் பாரார்;
நிதிமிகப் படைத்தோர்க்கு ஈவார்;
நிலை இலார்க்கு ஈயமாட்டார்.

மேகக் கூட்டம் நெற்பயிர்கள் வாடுவதைக் கண்டும் அப்பயிரிடையே மழையைப் பொழியாமல், அலைகள் வீசும் சமுத்திரத்தில் சென்று பெய்யும். அது போல நிறைந்த செல்வம் படைத்த செல்வந்தர், வறுமையால் வாடுபவர் முகத்தைப் பார்த்தும் அவருக்கு உதவமாட்டார். மிகுதியாகச் செல்வம் படைத்தவர்க்கே அளிப்பார்கள். இது அற்பர் இயல்பு.

இப்படிப் பட்டவரை மாற்றுவது சாத்யமா? இவர்க்கு எடுத்துச் சொன்னால் கேட்டுத் த்¢ருந்துவாரா? மாட்டார். திருத்த முடியாத ஈன ஜென்மங்கள் அவர்கள்.

நாய்வாலை அளவெடுத்து பெருக்கித் தீட்டின்
நற்றமிழை எழுத எழுத்தாணியாமோ?
பேய்வாழும் சுடுகாட்டைப் பெருக்கித் தள்ளிப்
பெரிய விளக்கேற்றி வைத்தால் வீடதாமோ?
தாய்வார்த்தை கேளாத சகசண்டிக்கு என்
சாற்ற்¢டினும் உலுத்தகுணம் தவிர மட்டான்;
ஈவாரை ஈயவொட்டான் இவனும் ஈயான்;
எழுபிறப்பினும் கடையனாம் இவன் பிறப்பே.

நாய்¢னது வாலை எழுத்தாணிக்குரிய இலக்கணப்படி அளந்து நீட்டித் தீட்டினாலும் நல்ல தமிழை எழுதவல்ல எழுத்தாணியாக ஆகுமோ? பேய்கள் வாழும் சுடுகாட்டைப் பெருக்கிச் சுத்தப் படுத்தி, அங்கு பெரிய விளக்கொன்றினை ஏற்றி வைத்தாலும் அது வாழ்வதற்குரிய வீடாகி விடுமோ? தாயின் சொல்லைக் கேளாத சண்டிக் குணம் படைத்தவனுக்கு எத்தனை முறை சொன்னாலும் தன் உலோப குணத்தைக் கைவிட
மாட்டான்; தானும் கொடுக்க மாட்டான்; கொடுக்கும் குணம் உடையவரையும் கொடுக்க விடமாட்டான். இவனது பிறப்பு எழுவகைப் பிறப்புகளிலும் கீழானது என்று சாடுகிறது பாடல்.

இப்படிப் பட்டவர் கல்வி கற்றாலாவது நல்லவராக மாற மாட்டார்களா என்ற கேள்விக்குப் பதில் இன்னொரு பாட்டில் இருக்கிறது.

தூம்பினில் புதைத்த கல்லும்
துகள் இன்றிச் சுடர் கொடாது;
பாம்புக்குப் பால் வார்த்து என்றும்
பழகினும் நன்மை தாரா;
வேம்புக்குத் தேன் வார்த்தாலும்
வேப்பிலை கசப்பு மாறா
தாம்பல நூல் கற்றாலும்
துர்ச்சனர் தக்கோர் ஆகார்.

வழியில் பலபேர் மிதிக்கும்படி புதைக்கப் பட்ட கல் தேய்ந்தாலும், தூசு இன்றி பிரகாசமாக ஒளிவிடாது. பாம்புக்குப் பால் வார்த்துத் தினந்தோறும் அதனுடன் பழகி வந்தாலும் நன்மையைத் தராது. வேப்ப மரத்துக்குத் தேன் ஊற்றி வந்தாலும் வேப்பிலை யின் கசப்பு மாறாது. அதுபோல, கீழானவர் பல நூல்களைக் கற்றாலும் நல்லவர் ஆக மாட்டார்.

( தூம்பு - வீட்டு வாயில்; துகள் - புழுதி, தூசி; துர்ச்சனர் - தீயவர், கீழானவர் )

என்ன செய்தாலும் அற்பர் குணம் மாறாது. கற்பூரத்தால் வரப்புகளிட்டு, கஸ்தூரியை எருவாக இட்டு, வாசனை நீரையே பாய்ச்சி, அழகுண்டாக உள்ளிப்பூண்டை அதில் நட்டு வைத்தாலும், அப் பூண்டு தன் கெட்ட மணத்தையே காட்டும். அதுபோல அறிவில் லாத பேதையர்க்கு அறிவு உண்டாகும் என்று எண்ணி எத்துணை அறிவுரைகளைச் சொன்னாலும், அவர் தீய குணத்தையே காட்டுவர். இதைச் சுட்டுகிறது ஒரு பாடல்.

கற்பூரப் பாத்தி கட்டிக் கத்தூரி எருப்போட்டுக்
கமழ்நீர் பாய்ச்சிப்
பொற்பூர உள்ளியினை விதைத்தாலும் அதன் குணத்தைப்
பொருந்தக் காட்டும்;
சொற்பேதையருக்கு அறிவு இங்கு இனிதாக வரும் எனவே
சொல்லினாலும்
நற்போதம் வாராது அங்கு அவர் குணமே மேலாக
நடக்கும்தானே.

( கமழ்நீர் - வாசனை நீர்; கத்தூரி - கஸ்தூரி; பொற்பு - அழகு; போதம் - அறிவு )

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: