Sunday, January 31, 2010

கள்ளர் சரித்திரம் - ஒரு அறிமுகம்

'கள்ளர்' என்ற சொல் பொதுவாக 'களவுத்தொழில் புரிபவர்' என்ற பொருளிலேயே வழங்கக் காண்கிறோம். ஆனால் அதற்கொரு விரிவான சரித்திரம் இருப்பதை 'எனி இந்தியன் பதிப்பகம்' வெளியிட்டுள்ள நாவலர், பண்டித ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்கள் எழுதியுள்ள 'கள்ளர் சரித்திரம்' என்ற நூலைப்படித்த பின்னர்தான் தெரிந்தது. வேளாளர்களில் தம்மை மேம்பட்டவராகக் கருதும் 'கார்காத்த வேளாளர்கள்' காலப்போக்கில் இன்று எல்லோருமே தம்மையும் வேளாளர்கள் என்று சொல்லிக் கொள்வதாக, "கள்ளர் மறவர், கனத்த அகம்படியர் மெள்ள மெள்ள வெள்ளாழர் ஆனார்'' என்பதைச் சொல்லிக் குறைப்படுவதுண்டு. ஆனால் கள்ளர் குலத்தவர், நாம் நினைப்பது போல தாழ்ந்தவர்கள் அல்லர், அவர்கள் அரசாண்ட இனத்தவர், அவர்களும் அவர்கள் இனத்தைச் சேர்ந்த மறவர், தேவர், அரையர் ஆகியோரும் தமிழகத்தில் தொன்றுதொட்டு கோலோச்சியவர்கள் என்று இந்நூல் மூலம் தெரியவருகிறது. இந்த இனத்தவர் நாளடைவில் நலிவடைந்து, பெருமை குன்றி பின்னாட்களில் திருட்டு போன்ற செயல்களில் ஈடுபட்டதால் நமக்கு அவர்களது பெருமை தெரியவில்லை. இன்று அவ்வினத்தவர் மீண்டெழுந்து சமூகத்தில் பல உயரிய பதவிகளிலும் அரசியலிலும் முன்னணிக்கு வந்துவிட்டாலும் இன்னும் அவர்களில் பலர் ஏழ்மையில் இருப்பதும், குற்றப்பரம்பரையினராகவே எண்ணப்படுவதும் குறித்து வேங்கடசாமி நாட்டார் அவர்கள் தன் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த இனத்தைச் சேர்ந்த தொண்டைமான் பரம்பரையினர், நாம் அறிய புதுக்கோட்டை மன்னர்ர்களாக இருந்ததையும், இராமநாதபுரம் சேதுபதி மன்னர் பரம்பரையினர் மறவர் எனவும், கள்ளர் இனத்தவரான சோழ மன்னர்களில் பலர் ஆண்ட நாடுகள் 'கள்ளர் நாடு' என்றே வழங்கப் பட்டிருப்பதையும், முத்தரையர் இனத்தவர் பல்லவ மன்னர்களாக இருந்ததையும், அரையர் என்பார் சோழ பாண்டிய நாடுகளில் தன்னாட்சி புரிந்திருப்பதையும், நாயன்மார்கள், ஆழ்வார்களிலும் இவ்வகுப்பினர் புகழ் பெற்றிருந்ததையும் - சங்க இலக்கியங்களையும், கல்வெட்டுகளையும், அரசாங்க கெசட்டீர்களையும் சான்று காட்டி நாட்டார் அவர்கள் 'கள்ளர்'களின் பெருமையை நிறுவுகிறார்.

இந்நூல் 1932ல் முதன் முதல் வெளியானது. இதன் முன்னுரையில் ஆசிரியர், கள்ளர் இனத்தவர்களான ஜமீன்தார்களும், பாளையக்காரர்களும் சமீபகாலம் வரை செல்வமும் செல்வாக்கும் உடையவர்களாக வாழ்ந்திருப்பதை 'இவ்வகுப்பினரைக் குறித்து எழுதினோர் யாரும் சிறிதும் ஓர்ந்தவரெனக் காணப்படவில்லை' என்னும் காரணத்தாலேயே இந்நூல் எழுதப்பட்டதாகக் குறிப்பிடுகிறார்.மேலும், இன்று கள்ளர் வகுப்பினர் சிற்சில இடங்களில் செல்வம், கல்வி முதலியவற்றிலும், பழக்க வழக்கங்களிலும் மிகவும் கீழ்நிலை அடைந்தவர்களாய்க்கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள் என்ற உண்மையால் அத்தகையோர் சிறிதேனும் நன்மையடையத் துணை புரிதலே இதனை எழுதியதன் முதல் நோக்கம் என்றும் குறிப்பிடுகிறார்.

தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிகமும் காணப்படும் கள்ளர் எனப்படும் பெருங்குழுவினரின் முன்னோர்கள் - பழைய நாளில் எவ்விடத்தில் எந்நிலையில் இருந்தனர், இடைக்காலத்தில் அவரது நிலைமை யாது, இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பன போன்றவை இந்நூலில் விரிவாக ஆராயப்பட்டிருக்கிறது.

முன்னதாக மிகப் பழைய நாளில் இந்தியா முழுதும் பரவி இருந்த நாகர் என்ற ஒரு வகையினர் பற்றிய வரலாறு கூறப்படுகிறது. முதல் அத்தியாயத்தில், அவர்கள் வாழ்ந்த நாகநாடு பற்றியும், அங்கு வாழ்ந்த நாகர்கள், அதன் பின் நிகழ்ந்த - தமிழ்நாட்டுக்கு திராவிடர், ஆரியர் வருகை, நால்வகை வருணப் பாகுபாடு எழுந்த சூழ்நிலை பற்றியெல்லாம் விரிவாக ஆதாரங்களுடன் ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

இரண்டாம் அத்தியாயத்தில், நாக பல்லவ சோழர் மற்றும் கள்ளர் பற்றிய செய்திகளை, சங்ககாலம் முதற்கொண்டு அகநானூறு, புறநானூறு போன்ற பழம்பெரும் நூல்களில் பதிவாகியுள்ளவற்றை எடுத்துக்காட்டி கள்ளர் இனத்தவரின் பல்வேறு பிரிவினரான பல்லவர், சோழர், பாண்டியர் நாடாண்ட பகுதிகள், மற்றும் அவர்களின் இனத்தவரான மறவர், தேவர், அரையர் பற்றிய விவரங்களுடன் ஆசிரியர் கவனப்படுத்துகிறார்.

இவர்களின் பொதுப் பெயரான 'அரையர்'களின் முற்கால நிலமை மூன்றாம் அத்தியாயத்தில் சொல்லப்படுகிறது. கள்ளர் அல்லது அரையர் என்பார் பல்லவரும் சோழரும் கலந்த வகுப்பினர் என்று வலியுறுத்திய பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்ட பல்வேறு பெயர்களைப் பட்டியலிடுகிறார் ஆசிரியர். இராஜராஜன், இராஜேந்திரன் முதலான சோழமன்னர்களின் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்ட கல்வெட்டுகளிலிருந்து அறியப்படும் அப்பெயர்களாவன: கச்சிராயன், காடவராயன், காடுவெட்டி, காளிங்கராயன், சீனத்தரையன், சேதிராயன், சோழகங்கன், சோழகோன், தொண்டைமான், நந்திராயன், நாடாள்வான், பல்லவராயன், மழவராயன், மேல்கொண்டான், வாண்டராயன், வில்லவராயன். இவ்வாறே வேறு சில பெயர்களும் கல்வெட்டுகளில் காணப்படுவதையும் குறிப்பிடுகிறார். நூலின் இறுதியில் 348 பட்டப் பெயர்கள் கொண்ட பட்டியல் பின்னிணைப்பாக்கத் தரப்பட்டுள்ளது.

12வது நூற்றாண்டி எழுந்த தமிழ் நூல்களில் இருந்தும் இன்னோரின் உயர்ந்த நிலை வெளிப் படுவதை, முதற் குலோத்துங்கனுடைய முதலமைச்சராக இருந்த கருணாகரத் தொண்டைமானை உதாரணமாகக் காட்டி நிறுவுகிறார். இனி, கள்ளர் சிற்றரசர்களாய் இருந்த காலத்தில் பல இடங்களில் அரண்கள் கட்டியதையும் பட்டியலிடுகிறார்.

நான்காம் அத்தியாயம் இக்குலத்தாரில், அரசரும் குறுநில மன்னருமாய் உள்ளாரின் வரலாறு காட்டப்படுகிறது. இவற்றில் 1686 முதல் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான்களின் பரம்பரையினரின் விவரங்கள் தரப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரை யாராலும் வெளிவராத பல அரிய செய்திகள், 'நாடு, நாட்டுக்கூட்டம்,நாடுகாவல்' என்னும் ஐந்தாம் அதிகாரத்தில் இடம் பெற்றுள்ளன. தமிழரது நாடு தமிழ்நாடு என வழங்கி வருவது போன்று, தமிழரில் கள்ளர் வகுப்பினர் மிகுந்துள்ள நாடு கள்ளர்நாடு, எனவும் கள்ளகம் எனவும் வழங்கப் பட்டுள்ளது. சோழ நாடு, தொண்டை நாடு, திருமுனைப்பாடிநாடு, கொங்கு நாடுகள் ஆகியவை பல மண்டலங்களாகவும், கோட்டங்களாகவும் பிரிக்கப்பட்டு ஆளப்பட்டிருக்கின்றன. மதுரைக் கள்ளர்நாடுகள் என பத்து நாடுகள் சொல்லப்பட்டுள்ளன. கள்ளர் நாடுகளில் கிராம பஞ்சாயத்து வழக்கமாக இருந்ததை அவர்களது ஆட்சிமுறை பற்றிய தஞ்சை மாவட்ட கெசட்டை ஆதாரம் காட்டி ஆசிரியர் விளக்குகிறார். அடுத்து கள்ளர்
களின் நாடுகாவலின் சிறப்பை எடுத்துச் சொல்கிறார்.

ஆறாம் அத்தியாயமான கடைசிப்பகுதி, கள்ளர் குலத்தில் புகழ் பெற்றிருந்த பக்தர்கள், ஞானிகள், புலவர்கள், வள்ளல்கள் பற்றி பல அரிய தகவல்களைத் தருகிறது. பெரிய புராணத்தில் கூறப்பட்ட திருத்தொண்டர்களில் கூற்றுவர், நரசிங்கமுனையரையர், ஐயடிகள் காடவர்கோன், மெய்ப்பொருளார் ஆகிய ஐவரும் இக்குலத்துக் குறுநிலமன்னராவர். திருமால் அடியவரான திருமங்கை ஆழ்வாரும் இவ்வகுப்பினர் தான். புலவர்கள் பலராலும் புகழ்ந்தேற்றப்பட்ட வள்ளல் அரித்துவாரமங்கலம் கோபாலசாமி ரகுநாத ராசாளியாரும் தமிழ்ப்புலமை வாய்ந்த பெண்மணிகள் சிலரும் இவ்வகுப்பினரின் பெருமைக்குக் காரணமாவர்.

இவ்வினத்து ஜமீன்தார்களும் பெருந்தனக்காரர்களும் பண்டுதொட்டுச் செய்த அறச் செயல்கள் பலவாகும்.கோயில்களுக்குத் திருப்பணி செய்தும், அன்ன சத்திரங்கள், தண்ணீர்ப் பந்தல்கள் அமைத்தும், குளங்கள் வெட்டியும், தரும வைத்தியசாலை அமைத்தும் போற்றுதலுக்கு உரியவராக இருந்துள்ளனர். போர் புரிதலிலும் இவ்வகுபினர் விருப்பமுடையோராய் இருந்து வீரச்செயல்கள் பல புரிந்துள்ளனர்.

இவ்வளவு சிறப்பும் புகழும் பெற்று வாழ்ந்தவர்களின் இன்றைய நிலை குறித்து, இவ்வினத்தைச் சேர்ந்தவரான நூலாசிரியர் நாட்டார் அவர்கள் கவலையும் வருத்தமும் தெரிவிக்கிறார். கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்களாகவும், காவல் மற்றும் நீதித் துறைகளில் உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களாகவும் பலர் இருந்தபோதும், இவ்வினத்தவரில் நூற்றுக்கு எழுபத்தைந்து பேர், பொருளிழந்து வாழ்க்கையை நடத்த முடியாதபடி தத்தளிப்ப வராய் இருப்பதையும். ஆடம்பர வாழ்க்கையாலும், மதுவுக்கும் தீயபழக்ககங்களுக்கும் அடிமையாகி சீரழிந்திருப் பதையும் வேதனையோடு குறிப்பிடுகிறார். இவர்கள் மீண்டும் பழைய உன்னத நிலைபெற சில யோசனைகளை தன் அவாவாகவும் சொல்கிறார்.

1932ன் வெளியான இந்நூலின் மறுபிரசுரத்தின் பதிப்பாளரான திரு.கோ.ராஜாராம் அவர்கள் தனது பதிப்புரையில் 'ஒரு சமூகத்தின் உபக்குழுக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாக சாதியைக் காணும் முயற்சியை இந்த மறுவெளியீடு தொடங்கி வைக்கும் என்று நம்புகிறோம். இந்தியச் சமூகத்தில் மட்டுமல்லாமல், ஜப்பான், ஆப்பிரிக்கா போன்ற சாதி அமைப்பைப் பற்றியும், கீழைநாடுகளின் சமூக அமைப்பு பற்றியும் மேலும் ஆய்வுகள் வளர இந்நூல் ஒரு புதிய தொடக்கமாய் அமையும் என நம்புகிறோம்' என்கிறார். நூலை வாசித்து முடித்த
பின்னர் நமக்கும் அந்த நம்பிக்கை ஏற்படவே செய்யும். 0


நூல்: கள்ளர் சரித்திரம்
ஆசிரியர்: நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார்
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.

Thursday, January 07, 2010

வண்ணநிலவனின் நாவல் - 'ரெயினீஸ் ஐயர் தெரு'

வண்ணநிலவனின் நாவல்களில் அதிகமும் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையைப் பின்னணியாகக் கொண்டதாய் இருக்கும். அவர் கிறிஸ்துவர் இல்லை என்றாலும் அவர்களோடு நெருக்கமான பழக்கம் இருந்ததாலும், கிறிஸ்துவ சூழ்நிலையில் வசிக்க நேர்ந்ததாலும் அவர்களது வாழ்வை ஈடுபாட்டோடு அவர் எழுதநேர்ந்திருக்கலாம். 'கடல்புரத்தில்' நாவலில் கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கை அசலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது. இந்த 'ரெயினீஸ் ஐயர் தெரு' நாவலும் கிறிஸ்தவர்கள் வாழும் தெருவில் உள்ள மக்களைப் பற்றியதாகும். 'ரெயினீஸ் ஐயர்' என்பவரது கல்லறையை ஒட்டிய, அவர் பெயரால் வழங்கும் ஒரு சின்னத் தெருவில் உள்ள - இரு புறமும்
எதிரெதிரே அமைந்துள்ள ஆறே வீடுக¨ளைக் களமாகக் கொண்ட நாவல் இது. இவ்வீடுகளில் வாழும் எளிய மனிதர்களைப் பாத்திரங்களாக்கி பிரமிப்பைத் தரும் படைப்பை உருவாகியுள்ளார் வண்ணநிலவன்.

ரெயினீஸ் ஐயர் தெரு பலவற்றிலும் புரிந்து கொள்ள வியலாத வினோதத் தோற்றம் கொண்டது. தெரு மிகவும் சின்னது. இரண்டே எட்டில் எதிர் வரிசை வீட்டின் வாசல்படிக் கல்லை மிதித்துவிடலாம். அதில் வாழும் மக்கள் அனைவரும் அன்புக்காக ஏங்குபவர்கள். எல்லோரும் எல்லோரையும் நேசிப்பவர்கள். அவரவர்கள்போக்கில் ஒருவரை ஒருவர் வெறுக்கவும் செய்பவர்கள். அதே சமயம் பிரியத்தையும் காட்டுபவர்கள். இவ்வாறான - சாதாரண மக்களின் யதார்த்தமான மனநிலையை வண்ணநிலவன் அற்புதமாய் இந்நாவலில் படம் பிடித்துக் காட்டுகிறார்.

டாரதி என்னும் சிறுமியின் சிந்தனை ஓட்டமாக நாவல் தொடங்குகிறது. முதல் வீடு அவளுடையது. முன் வாசலில் தெரு நடையில் அமர்ந்து தெருவை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறாள். எதிர் வீட்டு இருதயத்து டீச்சர் வீட்டுக் கோழிக் குஞ்சுகள் தெரு முனையில் குனிந்து இரை பொறுக்கிக் கொண்டிருப் பதைப் பார்க்கிறாள். ஏதோ காரணத்தால் தாய்க் கோழியைப் பிரிந்திருக்கிற அக்குஞ்சுகளின் அநாதரவான நிலைமை அவளுக்கு வருத்தத்தை உண்டாக்குகிறது. அந்த வருத்தம் தாயில்லாமல் பெரியம்மா வீட்டில் தங்கிஇருக்கிற தன்னுடைய நிலைமையை எண்ண வைக்கிறது. தொடர்ந்து சிறுமியின் நினைவோட்டம், வெகு இயல்பான - நாமே அருகிருந்து பார்க்கிற மாதிரி எளிமையாய், நினைவோடை உக்தியில் சொல்லப்படுகிறது.

இரண்டாவது வீடு இருதயத்து டீச்சரின் நாழி ஒடு போட்ட வீடு. டீச்சரின் புருஷன் சேசய்யா பனிரெண்டு வருஷமாய் தொண்டைப் புகைச்சலில் கிடந்து உழன்று கொண்டிருப்பவன். ஒவ்வொரு வருஷமும் மழைக் காலத்தில் 'இந்தா போயிருவான், அந்தா போயிருவான்' என்று மூச்சு இழுத்துக் கொண்டிருக்கும். பிறகு பிழைத்துக் கொள்வான். அவன் இரும ஆரம்பித்தால் இருதயம் கைவேலையைப் போட்டுவிட்டு ஓடி வந்து அவனை மார்பில் சாய்த்துக் கொள்ளுவாள். கல்யாணமான புதிதில் தெருவாசிகள் கண் பட்டுவிடும்படி எவ்வளவோ சந்தோஷமாய் இருந்த அவளுடைய வாழ்வு இப்போது சீரழிந்து போய்விட்டிருக்கிறது.

மூன்றாவது வீடு ஹென்றி மருதநாயகம் பிள்ளை வீடு. அவரது மகள் - டாரதி போன்ற சிறுமி - அற்புத மேரியிடம் எதிர் வீட்டு இருதயம் டீச்சர் அவள் வீட்டுப் படியேறி வந்து பள்ளிக்கு விடுப்புக் கடிததத்தைக் கொடுத்து விட்டுப் போனதில் அவளுக்கு மிகவும் பெருமை. அவள் வீட்டு குளிர்ச்சி மிகுந்த நடைக் கல்லில் உட்கார்ந்து தெருவில் நிறைந்து கிடக்கிற, நேரத்துக்கு ஒரு வாசனை தரும் வாகைப் பூக்களைப் பார்த்தபடி டாரதி போல சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறாள். அவள் வீட்டில் யாருமே சரியில்லை. அவள் அப்பா மறைமுகமாகப் பல காரியங்களைச் செய்வதாக எல்லோரும் சொல்கிறார்கள். அவள் அண்ணன் சாம்ஸன் ஒருதடவை மோசமான செய்கை ஒன்றைச் செய்வதை அவள் நேரில் பார்த்து விட்டாள். அவன் எஸ்தர் சித்தியுடன் மாடியறையில் ஒரே படுக்கை விரிப்பில் விசித்திரமாய்க் கிடந்ததைப் பார்த்து வியர்த்துப் போய்விட்டாள். அதனால்தான் அவனையும் எல்லோரும் மோசமென்று எல்லோரும் சொல்கிறார்கள் என்று தோன்றியது.

நான்காவது வீடு ஆசீர்வாதம் பிள்ளையினுடையது. தெருவிலெயே வெகுவாகப் பாழ்பட்ட வீடாக அது இருந்தது. ஆசீர்வாதம் பிள்ளையும் அவருடைய மனைவி ரெபக்காள் மட்டுமே அதில் இருந்தனர். அந்தத் தெருவிலேயே முதன்முதலாக் மேஜை அடுப்புப் போட்டது அந்த வீட்டில்தான். மாதத்தில் ஏழு தேதியிலிருந்து பத்து தேதிக்குள் அவருக்கு மணியார்டர் கொண்டுவரும் தபால்காரரைத் தவிர வேறு யாரும் அந்த வீட்டுக்கு வருவதில்லை. ஒவ்வொரு மழையின் போதும் வீட்டில் ஒரு அறை இடிந்து விழுந்து கொண்டிருந்தது. இப்போது மீத மிருப்பதுதான் அடுப்படியாகப் பயன் பட்டு வந்தது. கூரையெல்லாம் ஓடுகள் விழுந்து சரிந்து தொங்கின. கஷ்டமும் துயரமும் நிரம்பிய அந்தத் தம்பதியரின் கடைசி நாட்களில் ஆஸ்பஸ்திரிக்குக் கூட்டிப் போக அவர்களுக்கு யாரும் உதவுவதில்லை. அவர்களுக்கு உதவக்கூடாது என்பதில்லை; அவரவர் வீட்டிலும் ஏதாவது ஒரு கஷ்டம். ஒரே ஒருவன் - குடிகாரன் என்று யாரும் கண்டுகொள்ளாத தியோடர் மட்டும் அவ்வப்போது வந்து அவர்களுக்கு உதவுவான். அவர்களை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிச் செல்ல்லும்போது மட்டும் அவன் குடிக்க மாட்டான். அவர்களுக்கு உதவுவதில் அவனுக்கு ஒரு சந்தோஷம் இருந்தது. அடுத்த கன மழையில் அவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தபோதும் தியோடர் தான் அவர்களுக்கு உதவி செய்தான்.

தெரு பிரிந்து வருகிற இடத்தில் இரு புறங்களிலும் திருவனந்தபுரம் ரோட்டைப் பார்க்க இரு பெரிய வீடுகள் இருந்தன. ஒரு புறத்து வீட்டில் காளிமார்க் கம்பனி இருந்தது. மறுபுறத்து வீடு அடிக்கடி ஆட்கள் வசிக்காமல் காலியாகக் கிடக்கும். இந்த வீடு ஜாஸ்மின் பிள்ளையினுடைய குடும்பத்தாருக்குச் சொந்தமானது.ஜாஸ்மின் பிள்ளை இப்போது இல்லை. அவர் இறந்து போய் கொஞ்சகாலம் ஆகி இருந்தது. அவருக்கு வெள்ளைக்காரர்கள் மீது அளவற்ற மதிப்பு இருந்தது. அவர் இறந்தபோது தியோடர் தான் வந்திருந்து எல்லா காரியங்களையும் செய்தான்.

- இப்படி ஆறு வீடுகளுக்கும் நம்மைக் கையைப் பிடித்துக் கொண்டு போவதுபோல, வீடுவீடாய்ச் சித்தரித்தும், அங்கு வாழும் மனிதர்களது வாழ்க்கை பற்றி விவரித்தும் நம் கண்முன்னே அவர்கள் தெரிவது போல் வண்ணநிலவன் படம் பிடித்திருப்பதைப் படிக்க நமக்கு ஆயாசமே ஏற்படவில்லை. இச்சித்தரிப்புகளில் கிறிஸ்துவ மக்களின் கலாச்சாரம் பண்பாடு, எளிமை, பழக்கவழக்கம் எல்லாம் சொல்லப் படுகிறது. அதோடு பருவகால மாற்றத்தின்போது ரெயினீஸ் ஐயர் தெருவாசிகளின் மன நிலைமையும் ரசமாக வருணிக்கப் படுகிறது.

'வேன காலம் புழுக்கமாக இருந்தாலும், ரெயினீஸ் ஐயர் தெருவிலும், தெருக்காரர்களுக்கும் வேன காலமே அற்புதமான காலம். வேன காலத்தை ருசித்துப் பார்க்கவே வருஷத்தின் பன்னிரெண்டு மாதங்களில் மற்ற பத்து மாதங்களும் வாழ்ந்தார்கள். வேன காலத்துக்காக ஏக்கத்துடன் காத்திருந்து வருஷா வருஷம் வாழ்கிறார்கள்.' இதே போல்தான் மழைக்காலம் பற்றியும் சொல்லப்படுகிறது. 'ரெயினீஸ் ஐயர் தெரு மனுஷர்கள்எல்லாருமே மழையின் அடிமைகள். மழை பெரும் துக்கத்தை அளிப்பது. ஆனாலும் மழையை விரும்பாமல் போய்விடவில்லை. மழைக் காலத்தில் பயத்தோடும் ஆனந்தத்தோடும் வீடுகளுக்குள்ளிருந்து வேடிக்கை பார்த்தார்கள்.

வண்ணநிலவன் வருணனைகள் கலாரசனை மிக்கவை. நான்காவது வீடான ஆசீர்வாதம் பிள்ளையின் வீட்டை மிகவும் ரசித்து வருணிப்பார். அங்கிருந்த அறைகளின் வாசற்படிகளில் அமைக்கப்பட்டிருந்த கல்படிகளின் வருணனை அத்தகையது. 'நல்ல இரண்டு ஜாண் அகலமுடையதாக அக் கல்படிகள் ஒவ்வொன்றும் அமைந்திருந்தன. அப்படிகளில் கல்தச்சன் சில தாமரைப் பூக்களைச் செதுக்கி இருந்தான். அப்பூக்களைச் செதுக்கியிருந்த கல்தச்சன், ரசனை மிகுந்தவன். அக் கல்படிகளில் பிருஷ்டம் அழுந்த யார் உட்கார்ந்தாலும் அதை மறக்க முடியாது. கல் பூவின் அழுந்தல், உட்கார்ந்த இடத்தில் குளிர்ச்சியோடு படிந்து போகும். எத்தனை காலத்துக்கும் பின்னே அந்தக் கல்படி ஞாபகம் வந்தாலும், அக்குளிர்ச்சி நிரம்பிய, கல் தாமரைப் பூக்களிலிருந்து அப்போதுதான் உட்கார்ந்து எழுந்தது போல இருக்கும். வெறும்கல்லில் இத்தனை பெரிய காரியம் பண்ணி வைத்திருந்தான் கல் தச்சன்'.

பாத்திரப் படைப்புகளும் அப்படியே கண்ணில் நிற்பவை. இருதயம் டீச்சரின் அத்தையம்மாளும் சேசய்யாவின் தாயாருமான இடிந்தகரையாளின் தோற்றமும் செயல்களும் பற்றி இப்படி எழுதுகிறார்: 'இடிந்தகரையாளுக்கு அவளது நிஜப் பெயர் என்னவென்று அவளுக்கே கூட மறந்து போயிருக்கும். அவளுக்கு இடிந்தகரையாள் என்றுதான் அங்கே பேர் வழங்கி வருகிறது. இந்திய சர்க்காரின் சென்சஸ் குறிப்புகள், வோட்டர் ஜாபிதாக்களில் கூட அந்தப் பெயர்தான் எப்படியோ இடம் பெற்று விட்டது. அதனால் என்ன? அவள் ஒரு இந்தியப் பெண் பிரஜை என்பது போதாதா என்ன? அவளது கருத்த தோல் இனியும் சுருங்க வழியே கிடையாது. அவளது மார்பெல்லாம் கருத்த கருப்பட்டிப் புகையிலைத் துண்டு தொங்குகிற மாதிரி சுருங்கித் தொங்க ஆரம்பித்துப் பலகாலமாகி விட்டது. இடிந்தகரையாளுக்கு சதாவும் காதில் கோழி இறகை வைத்துத் திரித்துக் குடைந்துகொண்டே இருக்க வேண்டும். பெரிய சேவலுடைய இறகு, சின்னக் குஞ்சுகளுடைய இறகு, நன்கு விளைந்த கோழிகளுடைய இறகு என்று எல்லா தினுசு இறகுகளையும் தினுசு தினுசாகப் பிரித்துக் கட்டி வைத்திருப்பாள். அந்த இறகுக் கட்டுகள் அவளுடைய படுக்கைத் தலைமாட்டிலேயே பத்திரமாக இருக்கும். நன்றாக விளைந்து போன ஏழு எட்டு வயது சேவல்களுடைய இறகுகளின் பேரில் அவளுக்குத் தனிப் பிரியம் உண்டு. வயசான சேவல் யார் வீட்டில் செத்தாலும் அந்த இறகுகளை அந்த வீட்டுக் குழந்தைகள் கட்டாகக் கட்டிக் கொண்டு வந்து இடிந்தகரையாளிடம் கொடுத்து விடுவார்கள். அந்த இறகுகளைப் பார்த்து அவள் சந்தோஷப்படுகிறது போல யாராலும் அவ்வளவு சந்தோஷப்பட முடியாது. உலகமே தன்னுடைய கைக்குள் கோழி இறகாக ஆகிவிட்ட களிப்பு அவளுடைய சுருக்கம் விழுந்து போன முகத்தில் தெரியும்'. இப்படித்தான் எல்லா பாத்திரங்களும், கொஞ்சம் கூட மிகையாகத் தெரியாமல் அசலாக நாமே நேரில் கண்டு அனுபவிக்கிற மாதிரி சித்தரிக்கப் பட்டுள்ளன.

நடை ஒரு கூடுதல் கொடை வண்ணநிலவனுக்கு. அசோகமித்திரனின் நடை போல முன்னுதாரணம் காட்ட முடியாத, அவருக்கேயான - இதமான வாசிப்பு சுகம் தரும் எளிய நடை. அலட்டல், சாமர்த்தியம் காட்டல், அநாவசியமான அலங்காரம், வாசிப்பைத் தடைசெய்யும் சிடுக்கு-எதுவும் இல்லாத, வெகு எளிமையாய் சாதாரண நாலு முழ வேட்டியும், அரைக்கைச் சட்டையும் உடுத்துக்கொண்டு நம் கண்முன்னே அமைதியாய் நடந்து போகும் ஒரு சாமானியனைப் பார்ப்பது போன்று, எரிச்சலோ ஆயாசமோ தராத நடையானதால், வாசிப்பு இதமாக இருக்கிறது. ஒரே வாசிப்பில், கீழே வைத்து விட இடம் தராத ஓட்டமும், விறுவிறுப்பும் கொண்ட எழுத்து.

கதை என்று பார்க்கப் போனால், கேட்பவருக்கு எடுத்துச் சொல்கிற மாதிரியான - எடுப்பு, தொடுப்பு, முடிவு என்று இல்லைதான். ஒரு தனிப்பட்ட கதாநாயனோ, கதாநாயகியோ அவர்கªது சாகசங்களோ கொண்டதில்லைதான். ஆனால், ஒரு வாழ்க்கைமுறையை உள்ளது உள்ளபடியே மிகையின்றி யதார்த்தமாகக் காட்சிப்படுத்தி இருப்பதுதான் இப்படைப்பின் சுவாரஸ்யத்துக்குக் காரணம். அளவில் சிறியதாக இருந்தாலும் இந்நாவல் வண்ணநிலவனின் படைப்புத் திறனுக்கு மேலும் ஒரு சான்றாக அமைந்துள்ளது எனலாம். 0


நூல்: ரெயினீஸ் ஐயர் தெரு.
ஆசிரியர்: வண்ணநிலவன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை.
விலை: ரூ.70/-