Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Thursday, November 15, 2007

தீபாவளி?

தீபாவளி?

புத்தாடை இன்றி
நடைப் பயிற்சிக்கு
போனேன்.

எதிர்ப்பட்ட நண்பர்கேட்டார்;
'என்ன இது?
தீபாவளிகொண்டாடவில்லையா?'

பட்டாசு சுட
நான்பையன் இல்லை;

பலகாரம் விரும்பி ரசிக்க
நான்பால்யமும் இல்லை;

பழைய உடையே
நிறைய இருக்கையில்
புதிதுக்கு அவசியம் நேரவில்லை;

பத்திரிகை மலர்களை மேய
நான்போஸ்டரை ருசித்து அசைபோடும்
பசுமாடும் இல்லை;

பிறகு என்ன இருக்கிறது
தீபாவளியில்?

Sunday, November 11, 2007

பந்த்

பந்த்

இரண்டு நாளாய்
இடியும், மின்னலும்,
காற்றும் மழையும்-

இதனிடையே
வெற்றிகரமாய் ஒரு 'பந்த்'!

கரைவேட்டிக்காரர் யாரும்
கதவடைக்கச் சொல்லவில்லை;
பாமாகாவும்
பாதை மறியல் செய்யவில்லை;

குட்டித் தொண்டர்களின்
குறிபார்த்தக் கல்வீச்சில்
பஸ் நிறுத்தம் ஏதுமில்லை;

சாலை நடுவே
வீழ்ந்த மரங்களுக்கு
சாதிக்கட்சிகள் பொறுப்பில்லை;

மின்கம்பிகளும்
தொலைபேசிகளும்
துண்டிக்கப் பட்டதற்கு
சமூக விரோதிகள் காரணமில்லை;

அத்யாவசிய சேவைகளுக்கு
அரசு தரும் சலுகையும் இல்லை;

பொது ஜனங்களும்
புகார் ஏதும் செய்யவில்லை
போலீசுக்கும் வேலை இல்லை;

எந்தக் கட்சியின் ஆதரவும் இன்றி
வெற்றிகரமாய் நடந்தது 'ப்ந்த்'!

எதிர்க்க யாரும் இல்லை
என்பதால் அல்ல -
எதிர்க்கத் திராணி
யாருக்கும் இல்லை
என்பதால்தான்!

இயற்கை நடத்திய
'பந்த்' துக்கு
இமாலய வெற்றி!