Showing posts with label நான் கண்ட சிஷல்ஸ். Show all posts
Showing posts with label நான் கண்ட சிஷல்ஸ். Show all posts

Tuesday, April 11, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 15

15. சிஷெல்ஸ் விநாயகர் கோயில்

சிஷெல்ஸில் தமிழர்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்திருந்தும், அவர்களில் பெரும்பாலோர்- ஏறத்தாழ 4000 பேர் இந்துக்களாக இருந்தும் அவர்களுக்கென்று ஒரு வழிபாட்டுத் தலம் இல்லாமலிருந்தது. 1980 களில் தமக்கென்று ஒரு கோயில் வேண்டுமென்ற ஏக்கம் இங்குள்ள இளைஞர் சிலருக்கு எழுந்தும் தக்க ஆதரவோ, உற்சாகமோ கிடைக்காததால் அது செயல் வடிவம் பெற இயலவில்லை. 1984ல் ஈழத்தமிழரான மறவன்புலவு கி.சச்சிதானந்தம் அவர்கள் ஐக்கிய நாடுகள் உணவு வேளாண்மைத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டு வந்ததும் ஒரு உந்துதல் கிடைத்தது. அவரது முயற்சியால் சிஷெல்ஸ் இந்து கோயில் சங்கம் உருவாக்கப் பட்டது. திரு.கே.டி.பிள்ளை அவர்களை இச்சங்கத்துக்குத் தலைவராக்கினார்கள்.

கோயிலுக்கு நிலம் வாங்குவதிலும் நிதி எழுப்புவதிலும் திரு.சிவசண்முகம் பிள்ளை அவர்கள் தலைவருக்குப் பெரும் துணையாக இருந்தார்கள். வங்கி மூலமும், தமிழ்நாட்டு நடிகர் காலஞ் சென்ற திரு.ஜெய்சங்கர், அந்நாள் அறந்¤லைய அமைச்சர் திரு. ராஜாராம் போன்றோரின் உதவியாலும் மக்கள் நன்கொடையாலும் கோயிலுக்கு நிலம் வாங்கி கணபதி ஸ்பதியைக் கொண்டு வரைபடம் தயாரித்து 1990ல் அடிக்கல் நாட்டினார்கள். ஞானபூமி ஆசிரியர் திரு.மணியன் அடிக்கல் நாட்டினார்.

ஆரம்பத்தில் 'குயின்சி சூப்பர் மார்க்கட்' மேல் மாடியை வாகைக்கு அமர்த்தி கோயில் மாதிரி அமைத்து பிரார்த்தனை மண்டபம் உருவாக்கப் பட்டது.

சுவாமி படத்தை வைத்து வழிபாட்டைத் தொடங்கியுள்ளனர். பின்னர் தமிழ் நாட்டிலிருந்து விநாயகரின் வெண்கலச் சிலை ஒன்றைக் கொணர்ந்து, ஞாயிறு தோறும் பஜனை, பூஜை நடத்தினர். 1988ல் தொடங்கிய ஆலயப்பணி 1990ல் முடிவடைந்தது. ஆறாயிரம் சதுர அடியில் ஆலயம் எழும்பியது. விநாயகர், துர்க்கை, நடராஜர், முருகன், திருமால் ஆகிய தெய்வங்களை ஆலயத்தில் நிறுவி சைவ, வைணவ இரு சமயத்தாரும் ஏற்கும் படி ஆலயம் அமைந்தது.

'அருள்மிகு நவசக்தி விநாயகர் திருக்கோயில்' என்று அழைக்கப்படும் இத் திருத்தலத்தின் ஆலய மகாகும்பாபிஷேகம் 6.5.1992ல் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து திரு. ராஜாராம் அவர்களும், மொரீஷியசிலிருந்து கல்வி அமைச்சர் திரு.ஆறுமுக பரசுராமன் அவர்களும், சிஷெல்ஸின் எல்லா அமைச்சர்களும் பங்கு பெற்ற இக் கும்பாபிஷேக நிகழ்ச்சி தமிழர்களுக்கு ஒரு பொன்னாளாக அமைந்தது. இந்த ஆலயம் எழும்பிய பின்னர்தான், இந்துமதம் பற்றி முழுமையாக சிஷெல்ஸ் மக்களும், ஆட்சியாளர்களும் அறிந்தனர். அவர்களுக்கும் இந்த ஆலயம் பிடித்துப் போய் நிதி உதவியும் பிற உதவிகளும் செய்திருக்கிறார்கள். இப்பொது சிஷெல்ஸ் நாட்டில் அடையாளம் சொல்லக் கூடிய இடமாக இந்த ஆன்மீகத் தலம் அமைந்து விட்டது. சீஷெல்ஸ் வரும் சுற்றுலாப் பயணிகளும் ஆலயத்துக்குத் தவறாமல் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.

கோயிலில் தினசரி மூன்று கால பூஜை நடக்கிறது. இரண்டு அர்ச்சகர்களும், மேள வாத்தியக்காரர்களும் ஒரு ஓதுவாரும் தமிழகத்திலிருந்து அழைத்துச் செல்லப் பட்டு அவர்கள் நிரந்தரமாகத் தங்க வீட்டு வசதியும் கணிசமான ஊதியமும் இந்து கோயில் சங்கத்தால் வழங்கப் படுகிறது.

ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா ஆண்டுதோறும் மிகச் சிறப்பாகக் கொண்டா டப்படுகிறது. அன்று பக்தர்கள் முருகனுக்குக் காவடி எடுத்து வேண்டுதலை நிறை வேற்றுகிறார்கள். சீஷெல்ஸ் அரசாங்கம் தைப்பூசத்தன்று அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அன்று இந்து வர்த்தகர்களும் வர்த்தக நிறுவனங்களையும் மூடி விடுகிறார்கள். விநாயகர்சதுர்த்தி, புத்தாண்டுப் பிறப்பு, நவராத்திரி போன்ற விசேஷ நாட்களில் கோயிலில் பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. அர்ச்சகருக்கு தாராளமாக தட்சணையும் உண்டியில் மனநிறைவோடு நிறைய காணிக்கையும் செலுத்தி மகிழ்கிறார்கள். பக்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டு வருமானமும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. கோயில் பணியும் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது ராஜ கோபுரம் எழுப்பும் வேலை தொடங்கப் பட்டு முடியும் தருவாயில் இருக்கிறது.

திரு.கே.டி.பிள்ளை அவர்கள் தலமையில் தொடங்கப்பட்ட இந்து கோயில் சங்கப் பணிகளில் திரு.சிவசண்முகம் பிள்ளை, திரு.சிவசுப்ரமணியன், திரு.பழனி, திரு பாலசுந்தரம் ஆகியோரது அயராத முயற்சிகளும் பெரிதும் பேசப்படுகின்றன. மகளிரும்- திருமதிகள்.சரோஜினி சிவசுப்ரமணியன், வாசுகி, சித்ரா, வசந்தி, ஜெயா பாலசுந்தரம், சாந்தா நாயர், ரேணு, கலா, மங்களநாயகி ஆகியோர் தொடர்ந்து ஆலய சேவையில் ஆர்வமும் அர்ப்பணிப்பும் செலுத்தி வருவதும் நினைவு கூரத் தக்கது.

இந்துகோயில் சங்க நிகழ்வுகள் பெருக வளர்ந்து இந்நாட்டின் வரலாற்றுப் பதிவாக அமைந்துள்ளது. இந்த வளர்ச்சியின் விளைவாக இந்நாட்டு இந்துக்களுக்கும் தமிழர்களுக்கும் வலுவான கலாச்சார அடித்தளம் அமைந்திருப்பது போற்றுதலுக்கு உரியதாகும். அடிக்கடி தமிழகத்திலிருந்தும் யாழ்ப்பாணத்திலிருந்தும் ஆன்மீகச் சொற்பொழிவாளர்கஆளையும் இசை, நாட்டிய வல்லுனர்கஆளையும் அழைத்து வந்து ஆன்மீக உணர்வைப் பெருக்கி வருகிறார்கள். மொத்தத்தில், என் பார்வையில் அங்கு வாழும் தமிழர்கள் அயல் நாட்டில் இருக்கிறோம் என்கிற உணர்வின்றி தாய்நாட்டில் இருப்பது போன்ற மன நிறைவுடன் ஆனால் தாய் நாட்டை விட மிக வசதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
உலகில் எப்பகுதிக்குச் சென்றாலும் தமிழர்கள் தங்கள் தனிமுத்திரையைப் பதிப்பவர்கள் என்பதை சீஷெல்ஸ் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். எனக்கு- மகளும் மாப்பிள்ளையும் நம்மை விட்டு வெகு தொலைவில் உடனே வந்து அடிக்கடி பார்க்க முடியாதபடி இருக்கிறார்களே, இந்நிலையில் நிரந்தரக் குடியுரிமை பெற்றுத் தங்கிவிட முடிவு செய்து விட்டார்களே என்றகிற கவலை அங்கு போய்ப் பார்க்கும்வரை இருந்தது. அங்கு சென்று 70 நாட்கள் தங்கி அங்குள்ள தமிழர்களின் நிறவான வாழ்வினைப் பார்த்தபிறகு "நீங்கள் இங்கேயே நிறைவாக, நிம்மதியாக வாழுங்கள். காலமும் தூரமும் இந்த அறிவியல் உலகில் சுருங்கி விட்ட நிலையில் சந்திப்பது அப்படி ஒன்றும் சிரமமானது அல்ல; நம்மூரில் இத்தகைய வளமான வாழ்வும் கௌரவுமும் இன்றைய தமிழக அரசியல் சூழ்நிலையில் வாய்க்காது" என்று வாழ்த்தி விடைபெற்றோம்.

நாங்கள் திரும்பிய 17-9-2005 அன்று அந்த அதிகாலையிலும் என் மகள் மற்றும் மாப்பிள்ளையின் நண்பர்களும் எனக்கு அங்கே ஏற்பட்ட நண்பர்களும் குடும்பத்துடன் வந்து வழியனுப்பி வைத்தது என்றும் என்னால் மறக்க முடியாத ஒன்றாகும்.
வே.சபாநாயகம்

- நிறைகிறது.

- வே.சபாநாயகம்

நான் கண்ட சிஷெல்ஸ் - 14

சிஷெல்ஸில் தமிழர்கள்

ஆதார பூர்வமாகப் பார்த்தால் சிஷெல்ஸ¤க்குத் தமிழர்கள் வந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளன. 1770ல் பதிவான முதல் குடியேற்றத்தின் போது ஐந்து தமிழர்கள் மாகே தீவுக்கு வந்தனர். அவர்கள் வழித்தோன்றல்களே தற்போதைய சிஷெல்ஸ் தமிழர்கள் என்பது வரலாறு.

புதுச்சேரியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவர் அரசு ஆலோசகராக வந்தார். அரசு அன்பளிப்பாகக் கிடைத்த பெரும் பரப்பளவு நிலங்களுக்குச் சொந்தக்காரர் ஆனார். 1864ல் நாயக்கனும், 1874ல் கந்தசாமி செட்டியும் தமிழகத்திலிருந்து வந்து வியாபாரம் செய்திருக்கிறார்கள். இப்போதும் பல வியாபார நிறுவனங்கள் இப்பெயர்களுடன் இயங்குவதைப் பார்க்கலாம்.

முதலில் குடியேறிய தமிழர்களில் பலர் இங்கு கலப்புமணம் செய்து கொண்டு மதம் மாறியுள்ளனர். 1901ல் 300க்கு மேற்பட்ட சைவக் குடும்பங்கள் இருந்துள்ளன.

இவர்கள் தங்கள் தமிழ்மரபு, கலாச்சாரங்களை விடாது பேணி வந்துள்ளனர். இங்கு நிலவும் மக்கள் பெயர்களில் பிள்ளை, செட்டி, நாயுடு, படையாச்சி, வேலு, கந்தசாமி, கோவிந்தன், வடிவேலு ஆகியவை அதிகம். 1944ல் இங்கு நீதிபதியாக யாழ்ப்பாணத் தமிழர் ஹோமர் வன்னியசிங்கம் என்பவர் இருந்திருக்கிறார்.

தமிழத்தின் காவேரிப் படுகையிலிருந்து தமிழ் வர்த்தகர்கள் இந்நாட்டுக்குத் தேவையான நுகர்பொருட்களை மரக்கலங்களில் கொண்டு வந்து விற்று, இங்கிருந்து கப்பல் கட்டுமானத்திற்கான பெரிய பெரிய மரங்களை ஏற்றிச் சென்றுள்ளனர். அப்படி வந்து போனவர்ளில் சிலர் இங்கேயே தங்கி, திருமணம் செய்து கொண்டு பெரும் வர்த்தகங்களில் இங்கேயே ஈடுபட்டு வந்திருக்கிறார்கள். இவர்களின் வாரிசுகளில் பலர் தமது மொழி, மதம் ஆகியவற்றைத் துறந்து இந்நாட்டு மொழி, மதம் ஆகியவற்றை ஏற்று வாழ்க்கை நடத்துவதும் வழக்கமாயிற்று.

இந்நாட்டில் புழக்கத்தில் உள்ள கிரியோல்சொற்களில் பல தமிழ்ச் சொற்களாய் இருப்பது தமிழர் குடியேற்றத்துக்கு ஆதாரமாய்க் காட்டப் படுகிறது. எடுத்துக்காட்டாக கீழ்கண்ட சொற்களைப் பார்க்கலாம்.

தமிழ்ச் சொற்கள் - கிரியோல் சொற்கள்

முறுக்கு - முலுக்
கறையான் - கறையார்
கள்ளு - காளு
கறிவேப்பிலை - கறிப்பிலை
பீர்க்கங்காய் - பிப்பங்கா
பூசனிக்காய் - பூசனிக்கா
கொத்தமல்லி - கொத்துமல்ல
அம்மா - மம்மா
அப்பா - பப்பா
ஐயையோ - அய்யோயோ
பாதாம் - பாதாமியே

இப்படி ஏராளமான தமிழ்ச் சொற்கள் இங்கு மருவி புழக்கத்தில் உள்ளன.

1971ல் இங்கு பன்னாட்டு விமானநிலையம் செயல்படத் தொடங்கிய பிறகு தமிழர்களின் வரவும் ஈடுபாடும் அதிகரித்தது. இங்குள்ள தமிழரில் பலர் தமிழ் நாட்டில் மணம் புரிவதும், தமிழ்ப் பெண்கள் இப்போது அதிகம் இங்கு வாழ்வதும் அதிகரித் துள்ளது.

சிஷெல்ஸ¤க்கு, தந்தையின் கடையை மூடிவிட்டு ஊர்திரும்ப எண்ணி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு.தீனதயாளு பிள்ளை அவர்கள் எப்படி அங்கேயே தங்கி வர்த்தகம் செய்து இன்று பிரபல தொழிலதிபராக ஆனார் என்பதைப் பார்த்தோம். அவரை வழிகாட்டியாகக் கொண்டு தஞ்சை மாவட்டம் மற்றும் புதுவைப் பகுதிகளிலிருந்து நிறையத் தமிழர்கள் இங்கு வந்து, வர்த்தகம், மற்றும் ஆடிட்டர், மருத்துவர், வழக்கறிகர், ஆசிரியர் என்று பல பணிகளில் ஈடுபட்டுச் செல்வத்திலும் செல்வாக்கிலும் வளர்ந்து, இன்று அவர்களில் பலர் குடும்பத்துடன் குடியுரிமை பெற்றுக் கொண்டு, மனை வாங்கி வீடு கட்டி அங்கேயே நிரந்தரமாகத் தங்கி விட்டார்கள்.

இவர்களில் தீனதயாளு பிள்ளை அவர்களுக்கு அடுத்தபடியாக இப்படி இங்கே கால் ஊன்றி பல வர்த்தக நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர் ஆகி தமிழர்களில் முதலிடத்தில் நிற்கும் டாக்டர் ராமதாஸ் அவர்களைப் பற்றியும் முன்பே கண்டோம். இப்போது அவரது வெற்றி மணிமுடியில் மேலும் ஒரு வண்ணச் சிறகாய் சமீபத்தில் இந்திய ஜனாதிபதி திரு. அப்துல்கலாம் அவர்கள் கையால் ஜனவரி 9, 2006 அன்று 'ஓவர்சீஸ் இந்தியன் அவார்ட்' (PRAVESI BHARATHIYA SAMMAN) என்கிற விருதும் கிடைத்திருப்பது தமிழர்களுக்குப் பெருமை சேர்ப்பதாகும். உலகம் முழுதுக்குமான 538 பேர் அடங்கிய இறுதிப் பட்டியலிலிருந்து முடிவாக விருதுக்குத் தேர்வு செய்யப்பட்ட 12 பேரில் டாக்டர் ராமதாஸ¤ம் ஒருவர் என்பது இன்று சீஷெல்ஸ் தமிழரிடையே பெருமையாய்ப் பேசப்படும் செய்தி.

இந்தியாவிலிருந்து பல பகுதிகளிலிருந்தும் வந்து பலவித தொழில்செய்து புகழ் பெற்றவர்களில் ஆடிட்டர்கள் முதலிடம் வகிக்கிறார்கள். இவர்களில் முதலில் வந்தவர் 35 ஆண்டுகளுக்கு முன் 1970ல் கேரளாவிலிருந்து வந்த திரு. டி.எஸ்.கே நாயர் அவர்களாவார். இவர் இலண்டன் ACCOUNT INSTITUTE ல் முறையாகப் பதிவு செய்து கொண்டவர். இவரது மனைவி திருமதி. சாந்தா நாயர் சீஷெல்ஸ் இந்துக்களிடையே மிகவும் பிரபலமான தெய்வ பக்தை. இவர்களது மகள் சீஷெல்ஸ் அரசில் மிக உயர்ந்த பதவியில் -'PRINCIPAL SECRETARY' ஆக இருக்கிறார். இவர்களது மாப்பிள்ளை திரு.நந்தகுமார் நாயரும் ஆடிட்டரே. இவர்களது இரண்டு மகன்களில் ஒருவர் தனியார் நிறுவனத்திலும் மற்றவர் சிஷெல்ஸ் விமானப் பணியில் விமானியாகவும் பணியாற்றுகிறார்கள். இவர்கள் அனைவருமே சிஷெல்ஸ் குடியுரிமை பெற்று அங்கேயே வீடு, மனை என்று தங்கி விட்டவர்கள். தமிழ்ச் சமுதாயத்துடன் கலந்து பாசத்துடனும் நட்புடனும் வாழும் குடும்பம் இவர்களுடையது.

1980ல் இங்குவந்து தற்போது சிஷெல்ஸ் குடியுரிமை பெற்றுள்ள திரு.என்.ரமணி அவர்களும் ஆடிட்டர்தான். இங்குள்ள தமிழ் வர்த்தக நிறுவனங்களில் 75 சதவீதம் இவரது வாடிக்கையாளர்கள். பழகுவதற்கு இனிமையும் எளிமையும் மிக்க திரு.ரமணி அவர்கள் இலக்கிய மற்றும் இசை ரனை மிக்கவர். எப்போதும் நகைச்சுவையுடன் மலர்ந்த முகத்துடன் பேசக் கூடியவர். இவரது துணைவியார் திருமதி.யோகாம்பாள் நல்ல குடும்பத் தலைவி.

இன்னொரு ஆடிட்டர் திரு.பழனி என்பவரும் 1980ல் இங்கு வந்து தன் நிறைவான அனுபவத்தால் பல நிறுவனங்களுக்கு நிதி கட்டுப்பாட்டு அலுவலராகப் பணியாற்றி வருபவர். இவர் சீஷெல்ஸில் பரவலாக அறியப்பட்ட தமிழ்க் கவிஞர். பல தொகுப்புகள் போடும் அளவுக்கு ஏராளமான கவிதைகள் எழுதி வைத்திருக்கிறார்.சிறந்த பேச்சாளரும் கூட. தமிழகத்திலிருந்து பிரமுகர்கள் யார் வந்தாலும் மேடையிலேயே அவர்களுக்குப் பாராட்டிதழ் கவிதையில் வாசித்தளிப்பவர். தினமும் அங்குள்ள நவசக்தி விநாயகரைத் தரிசிக்கத் தவறாத தீவிர பக்தர். இவரது மனைவி திருமதி.வசந்தி அவர்களும் தீவிர தெய்வபக்தி உள்ள குடும்பத் தலைவி. இருவருமே சாயிபாபா பக்தர்கள். பொறியியல் பட்டதாரியான இவரது மகள் செல்வி.லாவண்யா சீஷெல்ஸ் அரசின் செய்தி அமைச்சகத்தில் பணி புரிகிறார். இவர் தமிழ்ப் பள்ளியில் ஞாயிற்றுக் கிழமைகளில் பரதநாட்டியம் கற்பித்து வருகிறார். மகன் இலண்டனில் ஆடிட்டருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.

வழக்கறிஞர் திரு.ராஜசுந்தரம் அவர்களின்ன் சகோதரரான திரு.சோ.பாலசுந்தரம் அவர்களும்1983ல் இங்கு வந்து 1992 வரை MASONS TRAVEL என்கிற நிறுவனத்தின் நிதிக்கட்டுப்பட்டு அலுவலராக இருந்தவர். சிஷெல்ஸின் மிகத் திறமையான நிதிக்கட்டுப்பாட்டு அலுவலர் எனப் புகழ் பெற்றவர். நிதிக் கட்டுப்பாட்டில் கடுமையான ஒழுங்கை அனுசரிக்கும் இவர், ஒருமுறை தனது நிறுவன உரிமையாளரின் சகோதரி மீதே நிதி ஒழுங்கின்மைக்காக நடவடிக்கை எடுத்தவர். இவரும் இவரது மனைவி திருமதி ஜெயா அவர்களும் சீஷெல்ஸில் விநாயகர் கோவில் எழுப்புவதில் அயராது உழைத்தவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள். தற்போது சிங்கப்பூரில் அங்கு படிக்கும் மகனுடன் குடியுரிமை பெற்று ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறவர்கள்.

சிஷெல்ஸ் அரசின் சுற்றுச் சூழல் அமைச்சகத்தில் பணியாற்றும் திரு.ரவீந்திரன் அவர்களின் பூர்வீகம் தமிழ்நாடு. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே யாழ்ப்பாணத்தில் குடியேறி 1990ல் சிஷெல்ஸ¤க்கு வந்தவர். சிறந்த பாடகர். 'சிஷெல்ஸ் எஸ்பி பாலசுப்ரமண்யம்' என்று நண்பர்களால் அழைக்கப் படுவர். இந்தியக் கலாச்சார நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் தவறாது பங்கேற்பவர். இந்து கவுன்சிலின் செயலாளரா கவும், தமிழ்ப் பள்ளியின் முதல்வராகவும் உள்ளார். சிஷெல்ஸ் தமிழ் சமுதாயத்தின் நலன்களுக்காக அர்ப்பனிப்புடன் பாடுபடுபவர். மதுரைக் காரரான இவரது துணைவியார் சிஷெல்ஸ் அரசுப்பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றுபர். இவர்கள் குடும்பமும் சீஷெல்ஸ் குடியுரிமை பெற்றவர்கள்.

யாழ்ப்பாணத்தில் ஒரு கலாசலை முதல்வராக இருந்து ஓய்வுபெற்ற திரு.சிவசுப்பிரமணியன் அவர்கள் மிக முக்கியத் தமிழ்ப் பிரமுகர். இவர் சென்னை 'காந்தளக' உரிமையாளர் திரு மறவன்புலவு கி.சச்சிதானந்தம் அவர்களின் மைத்துனர். திரு சச்சிதானந்தம் சிசெல்ஸில் இலங்கை அரசுத் தூதராக இருந்தபோது அவருடன் இணைந்து அங்கு தமிழ் சமுதாயத்துக்கு இந்து ஆலயம் ஒன்றை உருவாக்குவதில் முன்னோடியாகப் பனியாற்றியவர். சிஷெல்சஸின் 'நேஷன்' பத்திரிகையின் பத்தி எழுத்தாளரும், 'சிஷெல்ஸ் அலை ஓசை" இதழின் ஆசிரியக் குழுவின் தலைவரும் ஆவார். 70 வயதாகியும் அயராது கலை, கலாச்சார, கல்வி வளர்ச்சியிலும் தமிழ் சமுதாய முன்னேற்றத்திலும் அயாராது உழைக்கும் இவர், சிஷெல்ஸ் இளைஞர் களுக்கு தக்க முன் மாதிரியாகத் திகழ்பவர். இவரது துணைவியார் திருமதி. சரோஜினி அவர்கள் சிறந்த தமிழ்க் கவிஞர். சிஷெல்ஸின் நவசக்தி விநாயகர் மீது பாமாலை இயற்றி வௌ¤யிடுள்ளார். இவர்களது மகன் திரு.சிற்சபேசன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் சிறந்த தமிழ் அறிஞராகவும் அரசியல் பத்திரிகையாளராகவும் பிரபலமாக இருப்பவர்.

திரு.கே.டி.பிள்ளை அவர்களின் அக்காள் மகனும் மனைவியின் சகோதரருமான திரு.ஜி.சிவசண்முகம் பிள்ளை மிகவும் குறிப்பிடத்தக்க தொழிலதிபரும் பிரமுகரும் ஆவார். எல்லோருடனும் இனிமையாகப் பழகும் இவரை அன்பர்கள் 'சிவா' என்ற செல்லப் பெயரில் அழைக்கிறார்கள். பரபரப்பான 'குயின்சி'தெருவில் உள்ள 'குயின்சி சூப்பர் மார்க்கட்டை' சிறப்பாக நடத்தி வருபவர். தமிழ் மக்களது மளிகை மற்றும் இந்திய வகை உணவுப் பொருள்களை தருவித்துத் தருபவர். இதில் இவரது துணைவியார் திருமதி.சித்ரா (கே.டி.பிள்ளையின் அண்ணன் மகள்) அவர்களின் பணி அதிகம். இவரும் தீவிர சாயிபாபா பக்தை. திரு.சிவா மாமாவுடன் சிறு பிராயத்திலேயே இங்கு வந்து இங்கேயே பயின்றவர் என்பதால் இந்நாட்டின் தாய் மொழியான கிரியோலில் நன்கு பேச வல்லவர். இதனால் சிஷெல்வாக்கள்¤ன் அன்புக்கும் பாத்திரமானவர். தன் ஓய்வற்ற வர்த்தகப் பணிக் கடுமைக்கு இடையேயும் தமிழ்க் கலாச்சார வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும், தமிழ்ப் பள்ளியின் பொறுப்பாள ராகவும் அயராது உழைப்பவர். இவரது மூத்த மகள் டெல்லியில் மருத்துவம் பயில்கிறார். இவரது மற்ற இரு மகள்களும் புதுவையில் படிக்கிறார்கள்.

திரு.ஜோதிநாதன் கே.நாயுடு என்பவர் இன்னொரு முக்க்¤யத் தொழில் அதிபர். இவரது தந்தை பல ஆண்டுகளுக்கு முன்பே மயிலாடுதுறையிலிருந்து இங்கு வந்து துணி சோப் தயாரிக்கும் தொழிற்சாலையைத் தொடங்கியவர். திரு.ஜோதிநாதனும் அவரது இரு சகோதரர்களும் இங்குதான் பிறந்து வளர்ந்தவர்கள். திரு.ஜோதிநாதன் நாயுடு தந்தையைப் பின்பற்றி, 'BLUE LAGGON' என்ற பெயரில் தயாரிக்கும் வாஷிங் சோப், வாஷிங் பௌடர் ஆகியவை இங்கு மக்களிடையே பிரபமானவை. திரு. ஜோதிநாதன் பழகுவதற்கு மிகவும் எளிமையும் இனிமையும் மிக்கவர். அவரது மழலை ஆங்கிலம் கேட்க மிக இனிமையாயிருக்கும். அவரது துணைவி திருமதி.பாரதி நாயுடு என் மகளின் நெருங்கிய தோழி. மிக இனிமமையான பண்பாளர். ஓவியக் கலையிலும் கைவேலைக் கலையிலும் வல்லவர். என் மகளுடன் சேர்ந்து பல ஓவிய மற்றும் கைவினைப் பொருள் தயாரிப்புப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். இவரும் தீவிர சாயிபாபா பக்தை. இவர்களின் ஒரே மகள் செல்வி.ஷிவானி - சென்னையில் கல்வி கற்றவர்- 'ஏர் சிஷெல்ஸி'ல் ASST MARKETING MANAGER ஆகப் பனிபுரிகிறார். ஒரே மகன் துபாயில் விமானமோட்டிக்கான பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறார்.

இன்னொரு இளம் ஆடிட்டர் சென்னையை சேர்ந்தவர். திரு.வெ.சீனிவாசன் என்கிற இவர் 1995ல் சிஷெல்ஸ¤க்கு வந்தவர். தற்போது 'CORNIVA' என்கிற மருந்துகள் தயாரிக்கும் தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கிறார். இவரது தந்தையினால் ஆர்வம் பெற்று, மிகுந்த இலக்கிய ரசனையும், சமீபத்திய இலக்கியப் படைப்புகள் பற்றி இணைய தளத்தின் மூலம் வாசிப்பும் மிக்கவர். என்னுடைடைய இலக்கிய ரசிகர். எனது இந்தத் தொடரின் வண்ணப்படங்களை அனுப்பி உதவியவர்.

நான் சிஷெல்ஸ் செல்லுமுன்பே மின்னஞ்சல் மூலம் என்னோடு தொடர்பு கொண்டி ருப்பவர். அனேகமாக எனது எல்லாப் படைப்புகளையும் படித்து ரசித்தவர். சுவாமி விவேகானந்தரின் தீவிர விசுவாசி. அதனால் தன் மகனுக்கு 'நரேன்' என்றும் மகளுக்கு

'ஸ்வரூப் ராணி' என்றும் பெயர் சூட்டி இருப்பவர். இவரது துணைவி திருமதி.கலா சிஷெல்ஸில் உள்ள அரசு தொழிற் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி புரிகிறார். இவரும் இலக்கிய ரசனையும் தீவிர வாசிப்பு ஆர்வமும் கொண்டவர்.

மயிலாடுதுறையிலிருந்து வந்து இங்கு கடை வைத்திருக்கும் திரு.கண்ணன் நாயுடு என்பவர் சிறுவயதிலேயே தெய்வபக்தியில் பற்றுக் கொண்டு சுத்த சைவமும் ஆசார அனுஷ்டானமுமாய் வாழ்பவர். இவரது மனைவி திருமதி.நர்மதா நல்ல கலைரசனை மிக்கவர். என்மகள் மங்களநாயகியுடன் இணைந்து அங்கு நடக்கும் எல்லா கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் குழந்தைகளை நாட்டியம், ஓரங்க நாடகம் மாற்றுடைப் போட்டி ஆகியவற்றில் பயிற்றுவித்து மேடை ஏற்றுபவர்.

இப்படி அங்குள்ள எல்லாத் தமிழர்களும் தாய் நாட்டில் பெற முடியாத பெருமைகளைப் பெற்று சிறப்பாக வாழ்கிறார்கள். தங்களுக்குள் மிகவும் நட்பும், உறவும் மிக்கவர்களாய் ஒருவர்க் கொருவர் அனுசரனையாய் வாழ்கிறார்கள். அடிக்கடி பிறந்த நாள், திருமணநாள் மற்றும் எங்களைப் போல விருந்தினராக வந்திருப்பவர் களைக் கௌரவிக்க என்று அடிக்கடி விருந்தளித்து மகிழ்கிறார்கள். தாராளமாக விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை வழங்கிக் கௌரவிக்கிறார்கள். நாங்கள் அங்கே தங்கியிருந்த 70 நாட்களில், 20 பேர் வீடுகளிலாவது விருந்தும் பரிசும் வழங்கப்பட்டு கௌரவிக்கப் பட்டிருப்போம். தாய் நாட்டிலிருந்து வெகு தொலைவிலிருக்கிறோம் என்ற ஏக்கமே இல்லாமல் அங்கு தமிழர்கள் மகிழ்ச்சியாகவே வாழ்கிறார்கள்.

தொடரும்

- V. Sabanayagam

நான் கண்ட சிஷெல்ஸ் - 13

சிஷெல்சில் பெண்கள் வாழ்க்கை

சிஷெல்ஸ் பெண்களுக்கு அதிக சுதந்திரம் தரும் நாடு. அங்கு எல்லா இடங்களிலும் - அரசு அலுவலகங்களிலாகட்டும், தனியார் அலுவகங்களிலாகட்டும், மற்றும் கடைகள் என்று எல்லாப் பணிகளிலும் பெண்களே அதிகம் தென்படுகிறார்கள்.

இதற்கு - அவர்களது பணி விவேகமாகவும், சிறப்பாகவும் இருப்பதுதான் காரணம் என்றார்கள்.

திருமணம் அங்கு ஒரு பிரச்சினையே இல்லை. பெண்கள் திருமணம் செய்து கொண்டும் வாழ்கிறார்கள் - திருமணம் செய்துகொள்ளாமலே 'பாய் ·பிரண்ட்' உடன் வாழ்நாள் முழுதும் சேர்ந்தும் வாழ்கிறார்கள். இடையில் மனம் வேறு பட்டால் வேறு ஆணோடு சேர்ந்தும் கொள்வார்கள். திருமணமாகாமலே குழந்தை பெற்றுக் கொள்ளும் பெண்களும் இருக்கிறார்கள். அப்படிப் பெற்றுக் கொண்ட பிறகு இருவருக்கும் பிரிவு வந்து விட்டால் குழந்தை யார் பக்கம் செல்வது என்பது அங்கு பெரிய பிரச்சினை இல்லை. பெண்கள் குழந்தைகளைத் தங்களுடன் வைத்துக் கொள்கிறார்கள். ஆண்கள் பொதுவாகப் பிள்ளைகளைக் கோருவதில்லை. அதற்காகப் பெண்கள் நம் நாடு போல 'ஐயோ என் பிள்ளைகளுக்கு என்ன வழி? இனி நான் எப்படி வாழ்வேன்?' என்றெல்லாம் மல்லுக்கு நிற்பதில்லை. பெற்ற தகப்பன் பிள்ளைகளூக்காக மாதா மாதம் செலவுக்குத் தொகை கொடுத்தால் போதும். ஆண்களும் இயல்பாக அதை ஏற்றுக் கொண்டு அதன்படி ஒழுங்காகக் கொடுத்து வருகிறார்கள். இதில் பிரச்சினை எழுந்தால் இறுதி முடிவெடுப்பது தேவாலயங்கள் தாம். அங்கு மக்களின் பல்வேறு வாழ்க்கை முறைகளுக்கு 'பெல்', பிரேக்' என்கிற இரு 'சர்ச்'கள் தாம் தீர்வு காண்கின்றன. அவற்றின் தீர்ப்புக்கு அனைவரும் கட்டுப் படுகிறார்கள். நம் நாட்டைப் போல பிரிவு அங்கு வலிமிக்கதன்று. சேருவதும் இயல்பானது; பிரிவதும் இயல்பானது. பிரிந்த பிறகு குரோதத்துடன் செயல்பட மாட்டார்கள். நண்பர்களாகவே பழகுவார்கள்.

வெளிநாட்டினரை விரும்பி அப்பெண்கள் ஏற்கிறார்கள். ஆனால் முன்பே திருமணமாகி அங்கே சம்பாதிக்கச் செல்லும் பலர், அங்கு குடும்பத்தை அழைத்துச் செல்ல முடியாத நிலையில், அங்குள்ள பெண்களை சேர்த்துக் கொண்டு வாழ்கிறார்கள். பிடிக்காமல் விலகினால் அவர்களுக்கு அந்நாட்டு ஆண்கள் போல மாதாமாதம் செலவுக்குக் கொடுத்து விட்டால் பிரச்சினை இல்லை. இல்லாவிடில் நாட்டில் எங்கே போனாலும் விடமாட்டார்கள். அதற்காக நாட்டை விட்டே சொல்லாமல் போய் விடுகிறவர்களும் உண்டு.

தகப்பனை விட்டுப் பிரிந்து தாயுடன் வாழும் குழந்தைகள் தாயின் இனிஷியலோடு அங்கீகாரம் பெறுகிறார்கள். வெவ்வேறு கணவர்களுக்கு - சீனர், இந்தியர் என வேறு வேறு இனக் கணவர்களுக்குப் பிறந்த குழந்தைகளாக இருந்தாலும் - மூன்று தேசத்துப் பாரம்பரியம் என்றாலும் வேறுபாடின்றி, அண்ணன் தம்பி பாசத்துடன் சேர்ந்தே வளர்கிறார்கள். இந்த மாதிரி அபூர்வத்தை சிஷெல்ஸில் மட்டுமே காண முடியுமாம். அனேகமாக இக் குழந்தைகள் தாத்தா பாட்டி பராமரிப்பிலே வாழ்வதுண்டு.

சிஷெல்ஸ் பெண்களின் வாழ்க்கை திறந்த வாழ்க்கை. நமது பெண்களைப் போல மனதுக்கும் நடைமுறைக்கும் பிடிக்கா விட்டாலும் ஊருக்காகவும் உறவினர்க்காகவும் ஒன்றாக வாழ்வதாக நடிக்கும் போலி வாழ்க்கையை அவர்கள் வாழ்வதில்லை. எல்லாம் வௌ¤ப்படையான வாழ்க்கை. பிடித்தால் ஒன்றாக இருக்கலாம்; பிடிக்கா விட்டால் பிரிந்து போய்விடலாம். மற்றவர்களுக்காக வாழ்வதில்லை என்பதோடு மற்றவர்களும் அதைப் பொருட்படுத்துவதில்லை.

பெண்களின் வாழ்க்கை - திருமணம் செய்து கொண்டாலும், திருமணம் செய்துகொள்ளா விட்டாலும் - 18 வயதிலேயே தொடங்கி விடுகிறது. வாழ்க்கையைத் தொடங்க ஆசைப்படும் போது காலம் தாழ்த்தாமல் தொடங்கி விடுகிறார்கள். ஜோடியைப் பிடித்து விட்டால், முதலில் நட்பு, பிறகு காதல் , அடுத்து திருமணம். திருமணம் என்றால் அங்கே காதல் திருமணம்தான்.

அவர்களது திருமண நிகழ்ச்சியும், திருமண விருந்தும் வித்யாசமானவை. திருமணத்தை விட அதிக நேரம் பிடிப்பது விருந்துதான். திருமணம் சிறிய சடங்குதான். அதற்குச் செலவிடும் நேரம் குறைவுதான். மணமக்கள் தங்களது பாரம்பரிய கலாச்சார உடையில் தேவாலயத்துக்கு வருவார்கள். திருமண விழாவில் கலந்து கொள்கிற ஆண்கள் எல்லோரும் கோட்சூட் அணிந்திருப்பார்கள். பெண்களும் ஒரே மாதிரியான மேனாட்டுக் கலாச்சார உடையுடன் வருவார்கள்.

திருமணச் சடங்கு முடிந்ததும் நடக்கும் விருந்தில் பலவையான மது, பலவித அசைவ உணவுகள் இருக்கும். மதுவகைகளின் தரமும் அளவும், திருமணம் செய்யும் குடும்பத்தினரின் அந்தஸ்துக்கு அளவு கோல்களாக இருக்கும். மாலையில் நடக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி 'டிஸ்கோ' நடனத்துடன் தொடங்கும். மணமக்களுடன் மற்ற விருந்தினர்களும் ஆடுவார்கள். நடுநிசிவரைக்கும் நடக்கும். அதற்குமேல் மற்றவர்களை ஆட விட்டுவிட்டு மணமக்கள் முதலிரவைக் கொண்டாடப் போய்விடுவார்கள்.

முன்பெல்லாம் பெண்கள் மக்கள் தொகைப் பெருக்கத்திற்காக 12, 14 குழந்தைகள் கூடப் பெற்றெடுத்தார்களாம். இப்போது விழிப்புணர்வு வந்து விட்டது. அளவோடு 2,3 குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். சிஷெல்ஸ் பெண்கள் உடல் ஆரோக்கியத்தைக் கவனமாகப் பேணுகிறார்கள். முன்பெல்லாம் வீட்டிலேயே பச்சிலைகளை வளர்த்துத் தாமே வைத்தியம் பார்த்துக் கொண்டார்கள். இப்போது சின்ன அசௌகரியம் என்றாலும் மருத்துவ மனைக்குப் போய்விடுகிறார்கள். சிஷெல்ஸ்வாசி களுக்கு மரணம் என்பது மருத்துவ மனையில்தான். அங்கு எல்லா இறப்பையும் அதிகாரபூர்வமாக்க வேண்டுமாம். மாரடைப்பு நோயாளி மருத்துவ மனைக்குக் கொண்டு செல்கையில் வழியில் இறந்தால் கூட மருத்துவரைக் கொண்டு பிரேத பரிசோதனை செய்து சான்றிதழ் பெற்ற பிறகே அடக்கம் செய்ய முடியுமாம். பிறப்பிலும் பதிவு செய்வதில் கட்டாயம் உண்டு. பிறந்து 16 நாட்களுக்குள் பெயருடன் பதிவு செய்துவிடவேண்டும். இல்லாவிடில் அபராத்தில் இருந்து தப்ப முடியாதாம்.

அந்நாட்டில், பெண்களுக்கு நம் நாட்டில் இருக்கும் வரதட்சினைக் கொடுமைகள் இல்லை. காதலர்களே தாங்கள் குடித்தனம் நடத்தத் தேவையானவற்றைப் பட்டியலிட்டு இருவரும் சேர்ந்தே தம் உழைப்பிலிருந்து வாங்கிக் கொள்கிறார்கள் எல்லாவற்றிலும் அங்கு ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமே. எல்லவற்றையும் வாங்கித் தயார் செய்து விட்டு திருமணம் முடிந்த மறுநாளே தனிக் குடித்தனம் போய்விடுகிறார்கள். இதனால் அங்கு மாமியார் மருமகள் பிரச்சினை எழுவதில்லை.

அங்கு பெண்தான் அதிகம் சம்பாதிப்பவள். பெண்கள் தம் சொந்தக் காலில் நிற்கும் அளவுக்குக் உழைப்பால் உயர்ந்து நிற்கிறார்கள். சேமிப்பிலும் கவனம் செலுத்துகிறார்கள். அதனால் அவர்கள் சுதந்திரமாக வாழ்க்கையை அமைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்கிறார்கள். இப்போதெல்லாம் திருமண வாழ்க்கையில் பிடிப்பு வந்து விட்டதாம். அதனால் அதற்கேற்ப மாற்றங்கள் சிஷெல்ஸில் உருவாகிக் கொண்டிருக்கின்றனவாம்.

தொடரும்.

நான் கண்ட சிஷெல்ஸ் - 12

நான் கண்ட சிஷெல்ஸ் - 12

மக்கள் வாழ்க்கையும் - கலாச்சாரமும்

ஒரு இனத்தின், மக்களின் அடையாளங்கள் கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவையாகும். சகிப்புத் தன்மை, நிதானம், பணிவு, இனப் புரிந்துணர்வு, சமாதானம் ஆகியவற்றை வளர்த்துக் கொண்டு சிஷெல்ஸ் மக்கள் தமக்கே உரித்தான அமைதியும், ஆறுதலும் கூடிய வாழ்க்கை முறையை அமைக்துக் கொண்டுள்ளனர். அமைதியும், நிம்மதியும், மகிழ்வும் நிறைந்தவர்களாகவே அவர்கள் எப்பொழுதும் காணப்படுகிறார்கள்.

அசலான சிஷெல்ஸ்வாசியை காட்சிப் படுத்துவது இயலாதகாரியம். அவர்களது முன்னோர்கள் பலதரப்பட்டவர்கள். பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் கடலோடிகள், விடுவிக்கப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள், இந்திய சீன வியாபாரிகள் என்று பலருடைய வழிதோன்றல்கள் அவர்கள். அவர்களது நிறங்களும் பலவகையானவை. ஆப்பிரிக்காவை ஒட்டியிருப்பாதால் நீக்ரோக்களின் சாயலில் குட்டையான சுருள் முடியுடன் இருந்தாலும் எல்லோருமே கருப்பு இல்லை. இனக்கலப்பால், சாம்பல் கருப்பு, மாநிறம், நல்ல சிவப்பு எனப் பலநிறங்களில் இருக்கிறார்கள் கருப்பு, செம்பட்டைத் தலைமுடி- நீலம், பழுப்புக் கண்கள்- என்று எல்லா வகையிலும் இருக்கிறார்கள். எல்லோரும் மென்மையான, இனி மையான, எப்போதும் மகிழ்ச்சியான குணவியல்பு கொண்டவர்கள்.

அவர்களது பண்பாடு மனதுக்கு நிறைவளிப்பது. அவர்களது நாட்டைப் போலவே இதமான, வரவேற்கத் தக்க இயல்புள்ளவர்கள் அவர்கள். நாங்கள் சிஷெல்ஸ் சென்ற மறுநாள் காலை 7 மணிக்கு வௌ¤யே நடைப்பயிற்சிக்குச் சென்றபோது எதிரேயும் பக்கவாட்டிலும் சுறுசுறுப்பான எறும்புகள் போல ஆண்களும் பெண்களும் வேலைக்கு விரைந்து கொண்டிருந்தார்கள். எங்கஆளைப் பார்த்ததும் சிறு புன்முறுவலுடன் அதிக சப்தமெழுப்பாமல் லேசாக உதடுகளை அசைத்து 'போன்ஸ¤' என்பது போல எதுவோ சொன்னார்கள். ஒருவர் பாக்கி இல்லாமல், முன்னதாகத் தெரியாதிருந்தும் நம்மிடமிருந்து பதிலை எதிர்பாராமலே, சொல்லியபடி நடந்து கொண்டிருந்தார்கள். முதலில் புரியாது போனாலும் ஏதோ அவர்கள் மொழியில் காலை வணக்கம் சொல்கிறார்கள்

என்று புரியவே, நாங்களும் பதிலுக்கு புன்னகையுடன் 'குட்மார்னிங்' என்றபடி நடந்தோம். வீட்டுக்குத் திரும்பியதும் மகளிடம் கேட்டபோது அது அவர்களது பண்பாடு என்றும் ஆண்கள் பெண்கள் அனைவரும்- தெரிந்தவர், தெரியாதவர் யாரைக் கண்டாலும் தங்கள் மொழியில் வணக்கம் சொல்வார்கள் என்றும் தெரிந்தது. 'போன்ஷ¤' என்றால் காலை வணக்கம் என்றும் 'போன்ஷ்வா' என்றால் மாலை வணக்கம் என்று அறிந்து கொண்டதும் நாங்களும் மறுநாள் முதல் யாரைக் கண்டாலும் அவர்கஆளைப் போலவே புன்முறுவலுடன் 'போன்ஷ¤' சொல்ல ஆரம்பித்தோம். அது முதல் அங்கிருந்த இரண்டு மாதங்களும் தினமும் எங்கள் வழியில் பணிக்குச் செல்கிறவர்கள் எல்லோரும் மனத்தளவில் நட்புப் பூண்டவர்களாக ஆனார்கள். வாய் திறந்து பேசாது போனாலும் அவர்களது அந்த ஆரோக்கியமான பண்பு மனதில் பதிந்து போனது. யாராவது அப்படி வணக்கம் சொல்லாமல் அலுப்பான முகத்துடன் சென்றால் அவர்கள் அந்நாட்டு மக்கள் இல்லை என்பது நிதர்சனம்.

வீட்டு வேலைக்கு வருபவர்களும் - எல்லோரும் சமம், ஏற்றத்தாழ்வு இல்லை என்ற நிலையில் உள்ளவர்கள் என்பதால் - மரியாதையை எதிர்பார்ப்பார்கள். அவர்களை 'போன்ஷ¤' சொல்லி வரவேற்கவேண்டும். இல்லாவிடில் அவமதிப்பாக நினைப்பார்கள். வேலைக்கு வரும் பெண்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள். நம்பி, வீட்டு சாவியைக் கொடுத்து விட்டுப் போகலாம். சம்பளம் கொஞ்சம் அதிகம்தான். தினமும் இரண்டுமணி நேரம் வந்து எல்லா வேலைகளையும் - டாய்லெட் சுத்தம் செய்வது உட்பட, சலவை எந்திரத்தில் துணியைப்போட்டு எடுத்து அவற்றைப் பெட்டி போட்டு உங்கள் அறைக்குள்ளே வைப்பது வரை முகம் சுளிக்காமல் செய்கிறார்கள். சிஷெல்ஸ் ஆண்களும் பெண்களும் உழைப்புக்குச் சளைக்காதவர்கள். ஆண்கள் கூலிவேலைக்குச் சென்றால் தினமும் சீஷெல்ஸ் பணத்தில் 100ரூ ஊதியம் பெறுகிறார்கள். மாதவேலை செய்யும் பெண்கள் 1500ரூ போலப் பெறுகிறார்கள்.

நம்பிக்கைக்கு உரியவர்கள் என்பதுமட்டுமல்ல பாசத்துக்குக்கும் விசுவாசத்துக்கும் பெயர் போனவர்கள் அந்த நாட்டுப் பெண்கள். மரியாள் என்றொரு மூதாட்டி என் மகள் வீட்டில் அவள் அங்கு போன நாளாய், பத்து ஆண்டுகளுக்கு மேலாய் வேலை செய்து வந்தார். கணவன் மனைவி இருவரும் காலை 7 1/2 மணிக்கே பணிக்குப் புறப்பட்டு விடுவதால் மரியாள், காலை அவர்கள் கிளம்பு முன்பே வந்து மகள் பள்ளி முடிந்து மதியம் 3 மணிக்குத் திரும்பும்வரை கைக்குழந்தையைப் பார்த்துக் கொண்டு வீட்டு வேலைகளையும் முடித்து வைத்திருப்பார். சொந்த மனிதர்கள் கூட அவ்வளவு பொறுப்பாய் இருப்பார்களா என்பது சந்தேகமே. திரும்பும் போது தினமும் என் மகளுக்கு முத்தம் கொடுத்தே விடை பெறுவார். இப்போது வயது 70க்கு மேல் ஆகிவிட்டதால் ஓய்வு பெற்றுவிட்டார்.

சிஷெல்வாக்கள் எப்போதும் அவசரப்படுவதே இல்லை. நிதானம், பொறுமை, பதற்றமின்மை அவர்கள் இயல்பு. அலுக்காது பேசவும் எப்போதும் சிரிப்பும் கலகலப்புமாய் இருக்கவும் அவர்களுக்கு அவகாசம் கிடைக்கிறது. அவர்களது வாழ்வு முறையே இதமான, எதையும் லகுவாக எடுத்துக் கொள்ளுகிற, வௌ¤நாட்டாரின் பழக்கத்தால் தம் இயல்பை மாற்றிக் கொள்ளாத குணச்சித்திரம் கொண்டது. இந்தியப் பெரு நகரங்களில் காணப்படுவது போல எந்தப் பரபரப்பையும் அங்கு காணமுடியாது.

அவர்களது உணவுப் பழக்கம் மிக எளிமையானது. காலையில் காபி அல்லது டீ குடித்துவிட்டுச் செல்பவர்கள் இடையில் எதுவும் எடுத்துக் கொள்வதில்லை. மதியம் சமூசா போல ஏதாவது ஸ்நாக்ஸ். இரவுதான் சமையல். ஏனெனில் காலை 7 மணிக் கெல்லாம் கிளம்பிவிட வேண்டும், மதியம் இடைவேள அரைமணிதான். எனவே சாப்பிட நேரமில்லை. இரவு உணவில் மீன் நிச்சயம் இடம் பெறும். பாசுமதி அரிசிதான் சமைக்கிறார்கள். அங்கு பசு மாடுகள் இல்லாததால் பௌடர் பால்தான் காபி, டீ, தயிர் எல்லாவற்றிற்கும்.

உலகம் முழுக்க மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை என்பது ஒரு ஓய்வு நாள், .அவ்வளவு தான். அன்று காலை அதிக நேரம் தூங்குவது, மதியம் விருப்பப்படி உண்பது என்பதுதான் நடைமுறை. ஆனால் சிசெல்ஸ் மக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை உற்சாகமான நாள்.

அன்றைய காலையை 'ஹேப்பி அவர்ஸ்' என்று நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடுகிறார்கள். சிஷெல்ஸ் மக்களில் அனைவரும் மது அருந்துபவர்கள். மது அருந்துவது அவர்கள் நாட்டுக் கலாச்சாரம். எல்லா வீடுகளிலும் ஓட்கா, பிராந்தி, விஸ்கி, ஜின் போன்றவை இருக்கும். ஏழையாக இருந்தால் பீர் பாட்டிலாவது வைத்திருப்பார். நமக்குத் தண்ணீர் போல அவர்களுக்கு பீர். அதுதான் தேசீய பானம். உலகில் பீர் அதிகம் குடிக்கும் 10 நாடுகளில் இது ஒன்பதாவது. ஜெர்மனி முதலாவது. இங்கு நம்மூரில் யாராவது வீட்டுக்கு வந்தால் 'காபி சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்பது போல அங்கே "பிராந்தி சாப்பிடுகிறீர்களா?" என்று கேட்பார்கள். இங்கு காபி, டீக்கு உள்ள மரியாதை அங்கு பிராந்திக்கு. நம் வீட்டுக்கு அவர்கள் வரும்போது இந்தியா ஞாபகத்தில் 'காபி சாப்பிடுகிறீர்களா?' என்று கேட்டு விட்டால் வேண்டாம் என்று மறுத்து விட்டுப் பிறகு நம் வீட்டுக்கு வரமாட்டார்களாம். அதனால் நம் வீட்டிலும் மதுவகைகள் வருபவர்களுக்காக வைத்திருக்க வேண்டும்.

சிஷெல்ஸில் விழா என்றாலே மது தான். இப்படி மது கலாச்சாரம் சிஷெல்ஸின் எல்லா இடங்களிலும் பரவி இருந்தாலும் இதற்கு விதி விலக்கும் உண்டு. 'செவன்த்டே அட்வாண்டிஸ்' போன்ற ஒரு சில குறிப்பிட்ட கிறிஸ்தவ அமைப்பினர் மது அருந்துவதில்லை. அவர்களது விழாக்களிலும் மது தலை காட்டுவதில்லை.

சீஷெல்ஸ் மக்கள் மதநம்பிக்கை அதிகம் உடையவர்கள். அது கிறிஸ்துவ நாடு. 95 சதவீதம் கிறிஸ்து மதத்தவர். ரோமன் கத்தோலிகர்களே அதிகம். முஸ்லிம்கள் 3 சதம். இந்துக்கள் சிறுபான்மையினர். 2 சதம். சிஷெல்ஸ் கிறிஸ்துவர்கள் குழந்தைகளுடன் ஞாயிற்றுக் கிழமைகளில் வண்ணவண்ண உடைகளில் அணிஅணியாய்த் தேவாலயத்துக்குச் செல்வதைப் பார்க்க முடிந்தது. அவர்களது ஆன்மீகம் பல நூற்றாண்டுகளாகத் தொடரும் மந்திர, தாந்திரிக நம்பிக்கை முதல் - மக்களிடம் செல்வாக்கு மிக்க ரோமன் கத்தோலிக் சர்ச்சின் மீதுள்ள நம்பிக்கை என இணையாகத் தொடர்கிறது.

சிஷெல்வாக்களின் கலப்பினக் கூறுகள் அவர்களது உணவு, கலாச்சாராம், கலை அனைத்திலும் பிரதிபலிகிறது. மேனாட்டுக் களியாட்டங்களான டிஸ்கொதே நடனங்களும் இசையும் அவர்களது வாரவிடுமுறை நாட்களில் காணப்படும். டிஸ்கோ க்ளப்கள் ஆங்காங்கே உள்ளன. மேனாட்டு இசை அங்கு குடியேறிய ஐரோப்பியர்களால் அத்

தீவுக்கு இறக்குமதியானது. வயலின், சிதார், கிடார் ஆகியவை டிரம், மற்றும் முழவு இசைகளின் பின்னணியில் இசைக்கப் படுகின்றன. பாரம்பரிய பழங்குடி நடனங்களும் உயிர்ப்புடன் உள்ளன.

வெளிநாட்டவர் பல்வேறு பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறார்கள். கட்டுமானப் பணிகளில் அதிகமும் சீனர்களே ஈடுபட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள். மேற்பார்வையாளர் அவசியமில்லை. இடையில் நம்மூர் போல டீ குடிக்க, சிகரெட் புகைக்க என்று வெளியே போய் நேரம் கடத்துவதை அவர்களிடம் பார்க்க முடியாது.

டீ தேவைப் பட்டால் வேலை செய்யும் இடத்தில் அவர்களே போட்டுக் கொள்ளுகிறார்கள். புல்டோசர் போல கனரக எந்திரங்களைக் கையாளுவதில் குஜராத்திகள் திறமையாக இருக்கிறார்கள். கான்ட்ராக்ட் வேலையிலும் அவர்களே திறமையாய்ச் செயல் படுகிறார்கள். கூலிகள் அனைவரும் உள்ளூர் இன ஆண்கள்தாம்.

அவர்களது வீடுகளும் வித்யாசமானவை. பல அடுக்கு மாடிக்கட்டடங்கள் இல்லை. அதிகமும் ஒரு மாடி உடையவைதாம். மேல்மாடி கேரள பாணியில் கூரை வடிவில்தான் அமைந்துள்ளன. திறந்த மொட்டைமாடி இல்லை. ஏனெனில் சுற்றிலும் கடற்பிரதேசம் என்பதால் ஈரக்காற்றால் திறந்தமாடித் தளங்களின் உள்ளிருக்கும் இரும்புக் கம்பிகள் சீக்கிரம் துருப்பிடித்து பலமிழந்து விடுகின்றன. அதனால் நெளிநெளியான ஸ்டீல் தகடுகளால் கூரைகள் வேயப்படுகின்றன. வெப்பம் தாக்காதிருக்க உள்ளே மரப்பலகைகளாலான தளங்கள் அமைக்கப் படுகின்றன.

வாரவிடுமுறை நாட்களில் கடைவீதிகள் மக்களால் நிரம்பிவழிகின்றன. அன்று கடைகளுக்கு நல்ல வியாபாரம். மக்கள் எல்லோரும் நம்மூர் சந்தைகளைப் போல எதையாவது வாங்கித் தின்றுகொண்டோ எதையாவது குடித்துக் கொண்டோ கூட்ட நெரிசலுக்கிடையே புகுந்து வெளிவருகிறார்கள். விக்டோரியா நகர் மைத்தில் ஒரு பெரிய அங்காடி உள்ளது. அதில் எல்லாப் பொருள்களும் கிடைக்கின்றன. காய்கறி, மளிகை, மீன் விற்பனைப் பகுதிகளில் கூட்டம் அதிகம். காய்கறிகள் புதிதாக வாங்க அதிகாலையே வந்துவிடவேண்டும். அந்நாட்டுக் கைவினைப்பொருள்களும் அந்நாட்டு அடையாளம் காட்டும் நினைவுப் பொருள்களும் அங்கே குவிந்து கிடக்கின்றன.

சிஷெல்ஸ் மக்கள் துக்கம், சோகம் ஆகியவற்ரை அதிகம் வௌ¤க் காட்டிக் கொள்வ தில்லை. மனதுக்குள்ளே கட்டுப் பாடாய் வைத்துக் கொள்வார்கள். 'இறப்பு கொடுமை யானதுதான். ஆனால் தவிர்க்க முடியாதது. அதனால் அழுது புலம்புவதால் ஆவது ஏதுமில்லை' என்ற மனநிலை உடையவர்கள். ஒரு சிலர் கண்ணீர் வடிக்கலாம். ஆனால் இறப்பு வீடும் இறப்பு ஊர்வலமும் முழு அமைதியுடன் இருக்கும். ஆண்கள் அனைவரும் கருப்பு சூட், கருப்பு டை அணிந்து இருப்பார்கள். பெண்கள் கருப்பு கலந்த உடை உடுத்தி இருப்பார்கள். அனைவரும் ஒரே மாதிரியான உடையணிந்து, ஒரே மாதிரியான நடையுடன் பிணத்தின் பின்னே நடந்து போவார்கள். இறுதிக் காரியம் முடியும் வரை அதே அமைதி தொடரும். பிறகு துக்கத்தை மறக்க அளவொடு குடிப்பார்கள். இறந்து போனவர்களின் நெருங்கிய உறவினர்கள் என்றால் ஒர் ஆண்டு வீட்டில் எந்த நல்ல காரியமும் செய்ய மாட்டார்கள். கல்யாண நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும் அங்கு விருந்துண்ண மாட்டார்கள். நடனம் ஆட மாட்டார்கள். அப்படி அவர்கள் சோகத்தைக் கடைப்பிடிப்பார்கள்.

சிஷெல்ஸ் குடிமகன் நாஆளையைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. இன்றய பொழுதுதான் அவன் கையில் இருக்கும். அதை மட்டுமே அவன் நினைத்துச் செயல்படுவான். கிடைத்ததை வைத்து அனுபவித்துக் கொண்டிருப்பான். கிடைப்பதைச் சேர்த்து வைக்கும் மகிழ்ச்சியைவிடக் கிடைப்பதைச் செலவு செய்யும்போதுதான் அவனுக்கு அதிக மகிழ்ச்சி. ஏனெனில் நான் முன்பே குறிப்பிட்டது போல் 'பணம் சம்பாதிப்பது மட்டுமே வாழ்க்கையல்ல' என்பது அவர்களது திடமான அபிப்பிராயம். திருடர்கள், பிச்சைக்காரர்கள் அந்நாட்டில் இல்லை என்பது போல துப்பாக்கிகளும் அங்கு இல்லை என்பதும் அவர்களது நிம்மதியான வாழ்வுக்கு ஒரு காரணம்.

-தொடரும்.

Wednesday, February 22, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 11

சிஷெல்ஸின் சில முக்கிய தீவுகள்

மொத்தம் 116 தீவுகளின் கூட்டமான சிஷெல்ஸின் பிரதான - பெரிய தீவு மாஹே. உலகில் நிச்சயம் குறிப்பிடத் தக்கதும் மிகவும் அழகானதுமான இத்தீவின் 76 கடற் கரைகள் ஒவ்வொன்றும் வித்யாசமான இயல்புடையவை. இவைகளின் பின்னணியில் அமைந்துள்ள மலைகளின் அமைப்பு ஒரு நாடகத் தன்மை வாய்ந்தது. இக் கடற்கரைகளில் அமைந்துள்ள உணவு விடுதிகளின் சிற்பக் கட்டமைப்புக்கு அழகான பின்னணியாக இம்மலை அமைப்புகள் உள்ளன. ஏறக்குறைய 150 சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள இத்தீவின் உட்பகுதிகள் மலைப்பகுதிகளும், அபூர்வத்தாவரங்களும் நிரம்பி சிறு அதிசயமாய் விளங்கும் இத்தீவின் அசல் பெயர் 'ILE D' ABONDANCE' ஆகும்.

இதன் மிக உயரமான மலைச்சிகரமான 'MORNE SEYCHELLOIS' கடல் மட்டத்திலிருந்து 900 மீட்டர் மேலே உள்ளது. மலையின் உயரமான பகுதிகளில் கூட சாலைகள் மிக நன்றாக இருக்கும். வளைந்து வளைந்து மேலேறும் இதன் பாதைகள், மிக அருகில் நெருங்கி வித்யாசமான தாவரங்கஆளையும் பிராணிகளையும் பார்க்க வசதியாய் அமைந்துள்ளன.

சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா சமப்படுத்தப்பட்டுள்ள பகுதியில் அமைக்கப் பட்டுள்ளது. விமான நிலையமும், துறைமுகமும் இதில்தான் உள்ளன. நகரின் மத்தியில் அமைந்துள்ள கடிகாரக் கோபுரம் இலண்டனில் விக்டோரியா தெருவும் வாக்சால் பால சாலையும் சந்திக்க்¤ற மையப்பகுதியில் உள்ள கடிகாரக் கோபுரத்தின் நகலாகும்.

விக்டோரியா மஹாராணியின் நினைவாக 1903ல் எழுப்பப் பட்ட இக்கோபுரம் அந்த ஆண்டில், சிஷெல்ஸ் பிரிட்டிஷ் காலனியானதின் அடையாளச் சின்னமாகவும் கருதப்படுகிறது.நகரின் மத்தியில் புகழ்பெற்ற சிற்பி 'LORANZO APPIANI' யால் உருவாக்கப்பட்டுள்ள மிகப் பெரிய சிற்பம், சீஷெல்ஸில் ஆதியில் குடியேறிய மக்களின் மூன்று கண்டங்களைக் குறிப்பதாகும். இங்குள்ள படகுத்துறை பல்வேறு இடங்களுக்கும் சுற்றுலாச் செல்கிறவர்கள் புறப்படும் இடமாகும். இயற்கை வரலாற்றுக் காட்சி சாலையும் , தேசீய வரலாற்றுக் காட்சி சாலையும் இங்குதான் உள்ளன. தேசீய நூலகமும், ஆவணக் காப்பகமும், தாவரவியல் பூங்காவும் தலைநரில்தான் உள்ளன. இதன் கடற்கரைகள் ஆழமில்லாமல் நீச்சல் விரும்பிகளுக்கு உகந்ததாக உள்ளன. இத்தீவின் கரை ஓரத்தில் ஒரு இடத்திலிருந்து கிழக்கு நோக்கிக் காரில் பயணம் செய்தால் ஒரு மணி நேரத்தில் திரும்பவும் கிளம்பிய இடத்துக்கே வந்து சேரலாம்.

அதற்கு அடுத்த இரண்டாவது பெரிய கிரானைட் தீவு பிராலன்(Praslin) ஆகும். இது ஒரு இரண்டாவது தலை நகரம் போல. இங்கு தலைநகரின் அலுவலகங்களின், மருத்துவ மனைகளின், நீதிமன்றத்தின் கிளைகள் உள்ளன. இதன் ஜனத்தொகை 5000. திருவோடு காய்க்கும் பனைமரங்கள் இங்குதான் அதிகம். அலுவலுக்காக மட்டுமன்றி, வார விடுமுறைகளில் வந்து தங்கி ஓய்வெடுக்கவும் சுற்றுலாப் பயணிகள் விரும்பி வந்து தங்கவுமான அருமையான ஓய்வுத் தலமாகவும் இத்தீவு விளங்குகிறது.

மாஹேயிலிருந்து 40கி.மீ தூரத்தில் உள்ள இத்தீவுக்கு வந்துபோக எந்திரப் படகுசேவை இருந்தாலும் 'AIR SEYCHELLESன் விமான சேவையும் இருக்கிறது. மினிபஸ்கள் போல இயங்கும் குட்டி விமானங்கள் - 18 பேர் ஏறலாம் - அரைமணிக்கு ஒன்று என ஒரு நாளைக்கு 20 தடவைகள் புறப்பட்டுப் போய்த் திரும்புகின்றன. பயணநேரம் 15 நிமிஷங்கள்தாம். எந்திரப் படகில் போனால் 2 1/2 மணி நேரம் பிடிக்கும். இதில் பயணம் செய்து பிராலன் போய் 3 நாட்கள் கடலோர விடுதி ஒன்றில் தங்கிப் பார்த்து வந்தோம். இங்கு தங்கி இருந்த விடுதியின் முன்னால் இருந்த மரம் ஒன்றில் பச்சைநிறப் பல்லிகளைப் பார்த்தேன். பச்சைப்பாம்பு வண்ணத்தில் இருந்த இப்பல்லிகள் இங்குமட்டுமே உள்ளனவாம். கறுப்புக் கிளிகளும் இங்கு மட்டுமே காணக்கூடியவை. 'BLACK PEAERLS' எனப்படும் கறுப்பு முத்துக்களும் இங்கே மட்டுமே கிடைக்கின்றன. இங்கு மிகச் சிறப்பான 'LAMURIA RESORT', 'PARADISE SUN', 'EMERALD GOLD' போன்ற உணவு விடுதிகளும் கேளிக்கை அரங்கங்களும் உள்ளன. வட இந்திய உணவு வகை கிடைக்கும் உணவு விடுதி ஒன்றிற்கும் சென்றோம். இங்குள்ள கடைகள் - டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ்' - எல்லாமும் மயிலாடுதுறைப் பகுதித் தமிழர்களுடையவை தாம். பல ஆண்டுகளுக்கு முன்பே வந்து தங்கள் ஜாதிப்பெயருடன் - படையாச்சி, நாயுடு - என்று நீடிப்பவர்கள். இங்கும் சர்ச்சும், வங்கியும் உள்ளன.

இங்கு மாஹேயின் மிக உயர்ந்த மலை போல இல்லை என்றாலும் மாஹேயைப் போலவே கிரானைட் பாறைகளும், பவழப்பாறைகளும், நீச்சலுக்கு ஏற்ற- பளிங்கு போல் நீர் உள்ள ஆழமற்ற கடற்கரைகளும் உள்ளன. சாலைகள் மிக நன்றாகப் பராமரிக்கப் படுகின்றன. பல்விதமான தாவர வகைகள், பாதைகளின் இருபுறமும் உள்ளன.

கார்கள் இங்கு குறைவு. ஆனால் வாடகைக்குக் கிடைக்கும். சுற்றுலா செல்பவர்கள் விமான நிலயத்திலிருந்தே போன் செய்தால் வாடகைக் கார்கள் தேடி வரும். சாவியை வாங்கிக் கொண்டு நீங்களே அங்கு தங்கும்வரை பயன் படுத்திக் கொள்ளலாம். திரும்பும் போது விமான நிலையத்திலேயே நிறுத்திவிட்டு வாடகையைச் செலுத்திவிட்டு சாவியைக் கொடுத்துவிடலாம். பேருந்து வசதியும் காலை 5-30 முதல் இரவு 7 மணி வரை உண்டு.

சைக்கிள்களும் வாடகைக்குக் கிடைக்கும். படகுகளும் கூட சில விடுதிகளில் வாடகைக்குக் கிடைக்கும். அருகில் உள்ள சிறு தீவுகளுக்கு படகுச் சுற்றுலாவும் ஏற்பாடு செய்து கொள்ளலாம். 'ST. PIERRE' என்கிற சிறிய பாறைத் தீவு பவழப் பாறைகளுக்குப் புகழ் பெற்றது. அது மட்டுமல்ல - இந்தப் பகுதி நீருக்கடியில் படம் எடுக்க (UNDER WATER PHOTOGRAPHY) - அனுகூலமானது.

மாஹேக்கு அருகிலேயே அரைநாள், ஒருநாள் சுற்றுலாவுக்கு ஏற்ற சுவாரஸ்யமான சின்னத்தீவுகள் - CERF, MOYENNE, ROUND, DENNIS, ST.ANNE போன்றவை உள்ளன. கடலின் அடியில் உள்ள பவழப் பாறைகளையும் பலவண்ண மீன் கூட்டங்களையும் கண்டு ரசிக்க ஒரே வழி, அடிப்பக்கம் கண்ணாடியாலான படகுகளில் பயணம் செய்வதுதான். அப்படி ஒருநாள் நண்பர் குடும்பங்களுடன் எந்திரப் படகில், 15 நிமிஷ பயணத் தொலைவிலுள்ள CERF தீவுக்குப் சென்றோம். அடிப்பகுதி பக்கச் சுவர்கள் கண்ணடியால் ஆனதாகவும், உட்கார வசதியான இருக்கைகளுடனும் இருந்தது. அதில் அமர்ந்து பவழப் பாறைகளையும் வண்ணவண்ண மீன் கூட்டங்களையும் கண்டு ரசித்தோம்.

1973ல் நிறுவப்பட்ட 'ST.ANNE MARINE NATIONAL PARK' இந்துமாக் கடலில் முதன் முதலாக அமைந்ததாகும். இங்கு 150 வகையான மீன் வகைகள் பராமரிக்கப் படுகின்றன. மீன்பிடித்தல் இப் பகுதியில் தடை செய்யப் பட்டுள்ளது. பவழங்களையும், கிளிஞ்சல்களையும் சேகரிக்க அனுமதியில்லை. அங்குள்ள தகவல் பலகையில் 'போட்டோக் களையும், நினைவுகளையும் தவிர வேறெதையும் இங்கிருந்து எடுத்துப் போக வேண்டாம்' என்று எழுதப் பட்டுள்ளது.

CERF தீவுக்கு அடுத்து உள்ள 'M0YENNE' என்னும் தீவு MR.BRENDON என்ற ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் ராஜதந்திரிக்குச் சொந்தமானது. 82 வயதான இவர் ஆப்பிரிக்கா கண்டத்தில் பணியாற்றியவர். தன் தந்தையின் சமாதி அமைந்துள்ள இத்தீவை 45 ஆண்டுகளுக்கு முன் விலைக்கு வாங்கி குடியேறியவர். அங்கு இவர் ஒரு பரந்த தோட்டத்தை அமைத்துத் தனியாக தன் செல்லப் பிராணிகளுடன் வாழ்கிறார். பிரதான தீவான மாஹேக்கு அடிக்கடி தன் சொந்த எந்திரப் படகில் வந்து செல்வார். இவர் ஒரு சுழற்சங்க (ROTARIAN) உறுப்பினர். தத்துவ சிந்தனைகள் கொண்டவர். 'A GRAIN OF SAND - THE STORY OF ONE MAN AND AN ISLAND' என்ற சுயசரிதையை எழுதியுள்ளார். இந்நூல் சிஷெல்ஸின் கடந்த அரை நூற்றாண்டின் வரலாற்றையும் உள்ளடக்கியது.

ROUND என்பது மாஹேயிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ள செழுமையான தாவரங்கள் கொண்ட சிறு தீவாகும். இந்த முழுத்தீவும் நீரடி ஆய்வுக்கானது (UNDER WATER EXPLORATION). ஷெல் மீன்களும் நட்சத்திர மீன்களும் மணற்பாங்கான கடற்கரை ஓரங்களில் அதிகம் காணப்படும். பல ஆண்டுகள் வரை - 1942 வரை - இத்தீவு தொழுநோயாளிகளின் காப்பகமாகமாகப் பயன்பட்டு வந்தது.

COUSIN என்கிற தீவு இயற்கைச் செல்வங்கள் பாதுகாகப்படும் தீவு. 1986ல் 'ROYAL SOCIETY FOR NATURE CONSERVATION' என்ற அமைப்பால் வாங்கப்பட்ட இத்தீவு பல்வேறு வகையான பறவைகளின் சொர்க்க பூமியாக உள்ளது. இது பறவை ஆய்வாளர்களுக்கு அர்ப்பணிக்கப் பட்டுள்ள இடம். எங்கு பார்த்தாலும் ஒரே பறவைக் கூட்டமாக உள்ள இத்தீவு சுற்றுலாப் பயணிகள், தவற விடாத இடமாகும். எங்கு கால் வைத்தாலும் பறவை முட்டைகள்தாம். அவ்வளவு நெருக்கமாகப் பறவைகள் சூழ்ந்துள்ள தீவு இது. சுற்றுலாப் பயணிகள் முட்டைகளை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. சுவாரஸ்யமான ஊர்வன மற்றும் ராட்சச ஆமைகளும் இங்கு காணப்படுகின்றன.

BIRD ISLAND என்பது இரண்டாவது பறவைக்காப்பகம் ஆகும். இதுவும் பறவை ஆய்வாளர்களுக்கு விருப்பமான தீவாகும். இங்கு வேடந்தாங்கல் போல பலதேசத்துப் பறவைகளும் வந்து தங்கிப் போகின்றன. இங்குதான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள 200 வயதான, உலகத்திலேயே மிகப் பெரிய, ESMERALDA என்கிற ராட்சச ஆண் ஆமை பாதுகாக்கப் படுகிறது.

DENIS என்கிற சிறு தீவு மிகுந்த மீன் வளமிக்கது. ஆண்டு முழுதும் மீன்பிடிக்க உகந்தது. நீச்சல் மற்றும் நீர் விளையாட்டுக்கு ஏற்ற இடம்.

ARIDE, LA DIGUE ஆகிய இரண்டும் கிரானைட் பாறைகள் அதிகம் உள்ள தீவுகள்.

FRE'GATE என்பது வெகு தொலைவில் தனித்திருக்கும் கிரானைட் தீவாகும். இது ஒரு புதையல் தீவாகும். இங்கு 17,18 வது நூற்றாண்டுகளில் கடற்கொள்ளைக்காரர்கள் வந்து தங்களது செல்வங்களைப் புதைத்து வைத்ததாகச் சொல்கிறார்கள். விலை மதிப்பற்ற அரிய மரங்கள் அடர்ந்த தீவு இது.

இன்னும் இவை போன்ற ஏராளமான சுவாரஸ்யமான குட்டித் தீவுகளும் சீஷெல்ஸின் பெருமையைப் பேசுவன.

-தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 10

சேவை அமைப்புகள்

சீஷெல்ஸில் பல நல்ல சேவை அமைப்புகள் உள்ளன. அவற்றில் முதலாவதாகக் குறிப்பிடத் தக்கது ISFA என்கிற 'INDO SEYCHELLES FRIENDSHIP ASSOCIATION'.

இது ஒரு பதிவு செய்யப்பட்ட அமைப்பாகும். இச்சங்கம் 25 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதில் 18 வயதுக்கு மேற்பட்ட எந்த இந்தியன் அல்லது சிஷெல்வாவும் உறுப்பினராகச் சேரலாம். இச்சங்கத்தின் அடிப்படை நோக்கம் 'இந்திய - சிஷெல்ஸ் நல்லுறவு, இரு நாட்டுக் கலாச்சாரம், சமூக வாழ்க்கை, கல்வி, அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றின் செயல்பாடுகளில் ஒத்துழைப்பது' ஆகும். இச் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் இந்தியக் குடியரசு தினத்தை சிறப்பாகக் கொண்டாடி வருகிறார்கள். இந்தியத் தூதரகமும் இந்திய சுதந்திரத் திருநாளையும் குடியரசுத் தினத்தையும் கொண்டாடுகிறார்கள். இவ்வாண்டு சுதந்திர தினத்தன்று 15-7-05ல் நானும் பார்வையாளனாகச் சென்றிருந்தேன். ஏராளமான இந்தியர்கள் தேசீயக் கொடியேற்றத்தைக் காண வந்திருந்தார்கள். இந்தியத் தூதர் தேசியக் கொடியினை ஏற்றி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியை அன்று இரவு தொலைக் காட்சியிலும் மறுநாள் தினசரிகளிலும் சிறப்பாக வௌ¤யிட்டார்கள் . இது போன்ற நமது விழாக்கள் மூலம் ஒரு ஆரோக்கியமான இந்திய ஒருமைப்பாடு நிலவுவதை அப்போது பார்த்தேன். இதை இன்னும் சிறப்பான முறையில் இந்தோ சிஷெல்ஸ் நல்லுறவுச் சங்கத்தார் வளர்த்து வருகிறார்கள். குடியரசு தினவிழா அன்று இரவு இந்தியக் குழந்தைகளும் உள்ளூர்க் கலைஞர்களும் அவரவர் சார்ந்த கலாச்சாரநிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். அப்படிப்பட்ட ஒரு அருமையான கலை நிகழ்ச்சியை இந்திய தூதரகத்தின் சார்பில் சுதந்திரதின விழா அன்று கண்ணைக் கவரும் வண்ண உடையிலும் வண்ண ஔ¤யமைப்பிலும் கண்டு வியந்தேன். இந்தியாவின் பல்வேறு இன மக்களது கலை நிகழ்ச்சிகளும் சிஷெல்வாக்களின் கலை நிகழ்ச்சிகளும் அந்தந்த இன மக்களின் கலாச்சாரத்தைப் பிரதிபலிப்பதாக இருந்தன. இச் சங்கத்தார் ஆண்டுதோறும் 'FOOD FAIR' என்றொரு விழாவினை நடத்துகிறார்கள். இதன் மூலம் இந்திய உணவு வகைகளின்மீது உள்ளூர்வாசிகளுக்கு ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தவும், அதேசமயம் இந்திய உணவுகளின் விற்பனை மூலம் சங்கத்துக்கு நிதி திரட்டவும் செய்கிறார்கள்.

இந்த ஆண்டு இந்த விழாவினை 2006 மே மாதம் நடத்தப் போகிறார்கள். இதற்குமுன் இச் சங்கத்தின் தலைவர்களாகத் திருவாளர்கள் கே.டி.பிள்ளை, வி.ஜே.பட்டீல், டி.எஸ்.கே.நாயர், ரமணி ஆகிய மூத்த இந்தியப் பிரமுகர்கள் சிறப்பாகப் பணி செய்திருக்கிறார்கள். இப்போது இதன் தலைவராகி இருப்பவர் இளைய தலைமுறையைச் சேர்ந்தவரான திரு.எஸ்.ராஜசுந்தரம் அவர்கள். 31 ஜூலை 2005ல் பவியேற்ற இவருடன் 11 பேர் செயற்குழு உறுப்பினர்களாகப் பொறுப்பேற்று இருக்கிறார்கள்.


திரு.ராஜசுந்தரம் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். 1983ல் சென்னை சட்டக் கல்லூரியில் வழக்கறிஞர் படிப்பை முடித்த இவர் 1990வரை சொந்த ஊரில் வழக்கறிஞர் பணி செய்து விட்டு 1990 அக்டோபரில் சீஷெல்ஸ் வந்தார். அங்கு SEYCHELLES HOUSIG DEVELOPMENT CORPORATIONன் சட்ட ஆலோசகராகச் சேர்ந்தார்.

1997ல் சிஷெல்ஸ் குடியுரிமை பெற்று இப்போது 2000 முதல் தனியாகத் தொழில் செய்கிறார். 'நோட்டரி பப்ளிக்' ஆகவும் உள்ள இவர் மூன்று உதவியாளர்களுடன் தனி அலுவலகம் வைத்துக் கொண்டு சிஷெல்ஸின் ஒரே இந்திய - தமிழ் வழக்கறிஞர் என்ற பெருமையுடன் தொழில் புரிவதோடு இந்தோ-சிஷெல்ஸ் நட்புறவுச் சங்கத்தின் புதிய தலைவராகப் புதிய திட்டங்களுடன் செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்.1990ல் கணவருடன் சீஷெல்ஸ் வந்த இவரது துணைவி திருமதி. மங்களநாயகியும் அந்நாட்டுப் பிரஜை ஆகி அங்குள்ள அரசுப் பள்ளியில் அறிவியல் ஆசிரியையாகப் பணி செய்கிறார். தனியார் பள்ளியில் பயிலும் இவர்களது இரு பிள்ளைகளும்கூட அந்நாட்டுப் பிரஜைகள் ஆகிவிட்டார்கள்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர்- காலஞ்சென்ற ராஜீவ்காந்தியின் பெயரில் இயங்கும் 'ராஜீவ் காந்தி பவுண்டேஷனி'ன் கிளை அமைப்பான 'ராஜீவ்காந்தி பவுண்டேஷன்- இந்தியன்ஓஷன் சாப்டர்' என்ற அமைப்பின் தலைவராக இருப்பவர்- திரு.கே.டி.பிள்ளை அவர்கள். கல்வி, சமூகம், கலாச்சாரம், சுகாதாரம் போன்ற அனைத்தையும் உள்ளடக்கியதாக இவ்வமைப்பின் பணி இருக்கிறது. இவ்வமைப்பின் ஒட்டு மொத்தச் சேவையையும் - சிஷெல்ஸ் மக்களுக்கும், இந்துமாக் கடலில் இருக்கும் தீவுக்கூட்டங்களில் வாழும் அனைத்து மக்களுக்கும் கொண்டு சேர்க்கும் மாபெரும் பணியில் பிள்ளை அவர்கள் தலைமை ஏற்று சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள். மொரீஷியசுக்கு வந்த திருமதி சோனியாகாந்தியை சிஷெல்ஸ¤க்கு அழைத்து வந்து இவ்வமைப்பின் பணிகளைக் காட்டி அவரது பாராட்டைப் பெற்றிருக்கிறார். இவ்வமைப்பின் சார்பில் பிள்ளை அவர்களின் பெரும் முயற்சியால்தான் 1970ல் இந்திராகாந்தி திறந்தவௌ¤ப் பல்கலைக் கழகத்தின் கல்வி மையம் இங்கு தொடங்கப் பட்டது.


இந்த அமைப்பு இன்னொரு குறிப்பிடத் தக்க சேவையையும் செய்கிறது. சிஷெல்ஸ் மக்களின் வாழ்க்கைமுறை மற்றும் வௌ¤நாட்டுப் பயணிகள் வருகையால், எயிட்ஸ் நோய் பாதிப்பு சீஷெல்ஸில் இருக்கவே செய்கிறது. 300 பேருக்கு மேல் எயிட்ஸ் நோயால் பாதிக்கப் பட்டிருகிறார்கள். சீஷெல்ஸின் மக்கள் தொகைக்கு இது ஓரளவு அதிகமான பாதிப்புதான். அதுமட்டுமின்றி சிஷெல்ஸின் பொருளாதாரம் வௌ¤நாட்டு சுற்றுலாப் பயணிகளை நம்பி இருப்பதால் 'எயிட்ஸை'க் கட்டுப் படுத்துவது அவசியமாகிறது. அதனால் தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ வல்லுனர்களை அழைத்து வந்து கருத்தரங்குகளைப் பிள்ளை நடத்தி இருக்கிறார். மக்களிடையே 'எயிட்ஸ் நோய் விழிப்புணர்வு' சேவையை இவ்வமைப்பு சிறப்பாகவே செய்து வருகிறது.

இதன்னியில் பிள்ளை அவர்கள் 'கே.டி.பிள்ளை அறக்கட்டளை' யின் சார்பில் சர்க்கரை நோய்த் தடுப்பு சங்கம் ஒன்றையும் 'DIABETIC SOCIETY OF SEYCHELLES' என்ற பெயரில் தொடங்கி சிறப்பான சேவை செய்து வருகிறார்கள்.

திரு.கே.டி. பிள்ளை என்கிற க.தீனதயாளு பிள்ளை அவர்கள்தான் மயிலாடுதுறை வட்டாரத்துக்கு வழி காட்டிய முதல் தமிழர். அதற்கு முன்பாகவே அவருடைய தந்தை திரு.கலியபெருமாள் பிள்ளை 1940களில் தொழில் நிமித்தமாய் சிஷெல்ஸ் வந்து வியாபாரம் செய்தவர். 50 ஆண்டுகளுக்கு முன் கே.டி.பிள்ளை தன் தந்தையைப் போல சிஷெல்ஸ் வந்தார். ஆரம்பத்தில் கடையில் எடுபிடியாய் வேலை செய்து பின்னர் அக் கடைக்கே உரிமையாளராகி படிப்படியாய் - ஆனால் நிதானமாய் முன்னேறி இன்று சிஷெல்ஸில் மிகப் பெரிய தொழிலதிபராய், உலகளாவிய செல்வாக்கும் புகழும் மிக்கவராக விளங்குகிறார். எந்த அளவுக்கு இவர் பிரபலம் என்றால், இவருக்கு உலகின் எந்த மூலையிலிருந்து

கடிதம் எழுதினாலும் முழு முகவரியை எழுதாமல், வெறுமனே 'கே.டி.பிள்ளை, சிஷெல்ஸ்' என்று எழுதினால் போதுமாம். சரியாக இவரைத் தேடி அக்கடிதம் வந்துவிடுமாம். கே.டி.பிள்ளை அவர்கள் அரசியலில் சேர விரும்பாதிருந்தும் அவருக்கு எல்லா அரசியல் தலைவர்களிடமும் நல்ல நட்பும் செல்வாக்கும் இருக்கிறது. இவரது ஒரே மகன் டாக்டர் விநாயமூர்த்தியும் இங்கு அரசு மருத்துவமனையில் பணிபுரிகிறார். தன்னுடய சகோதரர், சகோதரி பிள்ளைகளையும் இங்கு அழைத்து வந்து தன்னோடு வைத்துப் பயிற்சியளித்து அவர்கள் தனித்தனியே வியாபாரம் செய்யவும் உதவியிருக்கிறார். அதோடு நீதிபதி திரு.கருணாகரன் போன்ற தன் ஊர்க்காரர்களின் வளர்ச்சிக்கும் உயர்வுக்கும் பெரிதும் காணமாக இருந்திருக்கிறார்.

தமிழ் கலாச்சார வளர்ச்சி மையம் - 'TAMIL CULTURAL DEVELOPMENT CENTRE' என்றொரு அமைப்பும் இங்கு உள்ளது. இவ்வமமைப்பின் சார்பில் தமிழ்ப் பள்ளி ஒன்றை சிறப்பாக நடத்தி வருகிறார்கள். அங்கு வாழும் தமிழர்களின் குழந்தைகளுக்குப் பள்ளியில் தமிழ் படிக்க வாய்ப்பில்லாதால் தமிழ்நாடு பாட நூல் நிறுவனத்திடமிருந்து தமிழ்ப்பாட நூல்களை வாங்கி பயிற்றுவிக்கிறார்கள். மாதக்கட்டணம் 50ரூ. தான் என்றாலும் ஞாற்றுக் கிழமைகளை இதற்கென்று வீணாக்க விரும்பாத பெற்றோரின் அசிரத்தையால் மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தமிழ் கற்பிப்பது மட்டுமல்லாமல், நாட்டியம், கருவி இசை போன்ற இந்தியக் கலைகளையும் அங்குள்ள தமிழர்களைக் கொண்டே பயிற்றுவிக்கிறார்கள். இவ்வமைப்பின் சார்பில் அடிக்கடி தமிழ் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. உள்ளூர்த் தமிழ்க் குழந்தைகளின் நிகழ்ச்சிகளுடன் தமிழ் நாட்டிலிருந்து கலைஞர்களையும் தமிழ் அறிஞர்களையும் ஆன்மீகவாதிகளையும் இசை விற்பன்னர்களை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள். கடந்த காலங்களில் வாரியார் சுவாமிகள், பித்துக்குளி முருகதாஸ், டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம், சுகிசிவம், நடிகையும் பரதநாட்டியக் கலைஞருமன ஷோபனா போன்றோர் வந்திருக்கிறார்கள். நான் போயிருந்தபோது, இலங்கையிலிருந்து கம்பனிலும் பாரதியிலும் கரைகண்ட அற்புதப் பேச்சாளர் திரு.கம்பவாரிதி ஜெயராமன் அவர்களையும் கவிஞரும், பத்திரிகையாளரும், கல்லுரித் தமிழ் விரிவுரையாளருமான திரு. ஸ்ரீபிரசாந்த் அவர்களையும் 4 நாள் சொற்பொழிவுக்காக அழைத்திருந்தார்கள். அவர்களோடு நானும் ஒரு நாள் ஒரு பட்டி மன்றத்தில் அணித் தலைவராகக் கலந்து கொண்டேன். சிஷெல்ஸ் சென்றதில் திரு.கம்பவாரிதியின் அற்புதமான சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புக் கிட்டியதை எனக்குக் கிடத்த பெரும் பேறாகக் கருதுகிறேன். இந்த மன்றத்தை திரு.சிவசண்முகம் பிள்ளை என்கிற தொழிலதிபர் தலமையேற்று அயராது நடத்தி வருகிறார். இவருக்கு உறுதுணையாக முனைவர் புகழேந்தி என்பவரும் மற்ற தமிழ் ஆர்வலர்களும் சிறப்பாக ஒத்துழைப்பு நல்கி தமிழ்க் கலாச்சார வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறார்கள்.

'தமிழ் மன்றம்' என்று ஒரு அமைப்பும் உள்ளது. இதில் தமிழ் நாட்டிலிருந்து வரும் அதிதிப் பேச்சாளர்களைச் சொற்பொழிவாற்றச் செய்து இலக்கிய சேவை செய்கிறார்கள். இந்த அமைப்பின் சார்பில்தான் நான் ஒரு நாள் இலக்கியச் சொற்பொழிவாற்றினேன். 'சிஷெல்ஸ் இந்து ஆலோசனை சபை' - 'HINDU COUNCIL OF SEYCHELLES' என்றொரு அமைப்பு இங்கு உள்ளது. இது இங்குள்ள இந்துக்களிடையே இந்து மதத்தின் முக்கியத்துவத்தைப் பரப்புவதும், உயர்த்துவதும் ஆன சேவையை செய்து வருகிறது.

'SANSKRITI' என்கிற அமைப்பு முழுக்க முழுக்க இந்திய கலாச்சார வளர்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டது.

'சிஷெல்ஸ் இந்து கோவில் சங்கம்' என்கிற அமைப்பு ஆன்மீக சேவைகளைச் செய்து வருகிறது. இது இந்துக்களால் கட்டப்பட்டுள்ள 'நவசக்தி விநாயகர் கோவிலி'ன் நிர்வாகத்தைக் கவனித்துக் கொள்கிறது. இந்த விநாயகர் கோவில் பற்றி பின்னால் சிஷெல்ஸ்வாழ் தமிழர் பற்றி எழுதும்போது விரிவாக எழுதவுள்ளேன்.

- தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 9

ஊடகங்கள், காட்சி சாலைகள்

சிஷெல்ஸின் மக்கள் தொடர்பு சாதனங்கள் பத்திரிகைகளும் வானொலி மற்றும் தொலைக்காட்சியும் ஆகும்.

நாடு முழுதுக்குமான பத்திரிகைகள் மூன்று ஆகும். 'NATION' என்பது அரசாங்கம் நடத்தும் தினசரிப் பத்திரிகை. 'REGAR' எதிர்க் கட்சியான 'தேசீயக்கட்சி'யின் பத்திரிகை.

'PEOPLE' என்பது மக்கள் கட்சியின் பத்திரிகை. எல்லாமே ஆங்கிலம்தான். பக்கங்கள் குறைவுதான். அளவும் சிறியதுதான். ஞாயிற்றுக் கிழமைகளில் இங்கு பத்திரிகைகள் வௌ¤யாவதில்லை. எதிர்கட்சிப் பத்திரிகைகள் ஆரோக்கியமான முறையிலேயே ஆளும் கட்சியை விமர்சிக்கின்றன.

சிஷெல்ஸ் கலாச்சார மையம் தமிழர்களுக்காக 'சிஷெல்ஸ் அலை ஓசை' என்றொரு தமிழ் சிற்றிதழை நடத்துகிறது. இது காலாண்டிதழ். சென்ற ஆண்டில் தொடங்கப் பெற்ற இப் பத்திரிகை இதுவரை நான்கு சிறப்பான இதழ்களை வௌ¤யிட்டுள்ளது.படுத்து தமிழ்ப் புத்தாண்டுச் சிறப்பிதழாஅ வர இருக்கிறது.தமிழ் கலாச்சார மையத்தின் சார்பில் அவ்வப்போது நடத்தப்பெறும் இலக்கிய விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், தமிழர் பற்றிய செய்திகள் முழுதுமாக இடம் பெறுகின்றன. கதை, கவிதை,கட்டுரை, தாயகத்திலிருந்து வரும் தமிழரறிஞர்களின் பேட்டி, குழந்தைகள் வரையும் ஓவியங்கள், நிகழ்ச்சிகளின் வண்ணப் படங்கள் என்று இதழ்தோறும் 'அலை ஓசை' அங்குள்ள தமிழர்களின் மன ஓசையாக ஆர்ப்பரிக்கிறது. வழுவழுப்பான வௌ¢ளைத் தாளில் பல வண்ணங்களில் சீரான தரத்தைத் தொடர்ந்து பேணி வருகிறார்கள். இதன் ஆசிரியக் குழு, ஈழத்தில் ஒரு கலாசாலை முதல்வராயிருந்து ஓய்வு பெற்ற தமிழறிஞர் பேராசிரியர் வே.சிவசுப்பிரமணியம் அவர்கள். மற்ற குழு உறுப்பினர்கள் திருமதி.மங்களநாயகி, திருமதி.கிரிஜாபாபு, திருமதி.மேனகா கண்ணன் ஆகியோர். தமிழர்களி¤ன் கலாச்சாரம், படைப்புத்திறன், கலைத்திறனுக்கு ஊக்கம் தருவதாகவும் அவற்றை வெளியிடும் சாதனமாகவும் 'அலை ஓசை' சிறப்பாகச் செயல் படுகிறது.

ஒலி, ஒளிபரப்பு அரசு அமைப்பான 'SEYCHELLES BROADCASTINTING CORPORATION' மூலம் செயல்படுகின்றன. தேசீய மொழிகளான, க்ரியோல், ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மூன்றிலும் செய்தி மற்றும் நிகழ்ச்சிகள் ஒலி, ஔ¤ பரப்பப்படுகின்றன.

உள்ளுர் தொலைக்காட்சி தவிர அனேக வெளிநாட்டு விளையாட்டுச் சேனல்களும் தமிழ் நாட்டு ஜெயா தொலைக்காட்சியும் தெரிகின்றன. தமிழ்நாட்டு அரசியலையும், வௌ¢ளம் மற்றும் விபரீதங்களையும், அழவைக்கும் மெகா தொடர்களையும் ரசிக்க தமிழர்களுக்கு ஜெயா தொலைக் காட்சியை விட்டால் வேறு வழியில்லை. எவ்வளவோ முயன்றும் வேறு தமிழ் சானல்களைப் பெற அனுமதி கிடைக்கவில்லையாம். முன்பே சொன்னபடி சிஷெல்ஸ் அரசும், மக்களும் விளையாட்டுகளில் அதிகம் ஆர்வம் காட்டுவதால் அதிகமும் விளையாட்டுச் சேனல்களே உள்ளன. பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் பிள்ளைகள் விளையாட்டுச் சேனல்களைப் பார்க்க உட்கார்ந்து விடுகிறார்கள்.

மிகப்பெரிய நூலகம் ஒன்றும் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது. மிகப்பெரிய கண்கவர் கட்டடத்தில் அமைந்துள்ள இந் நூலகம் பார்த்தாலே உள்ளே நுழைந்து பார்க்கும் ஆவலை ஏற்படுத்துகிறது. ஆங்கிலம் மற்றும் பிரஞ்ச் மொழி நூல்களே அதிகம் உள்ளன.

மிகப் பெரிய அரசு ஆவணக் காப்பகமும் தலைநகரில் உள்ளது. இதில் சிஷெல்சின் வரலாறு தொடக்கமுதல் புள்ளி விவரங்களுடன் சேமிக்கப் பட்டிருக்கிறது.

சிறந்த அருங்காட்சியகமும் இங்கு இருக்கிறது. நூலகம், ஆவணக்காப்பகம், அருங்காட்சியகம் மூன்றுக்கும் போய்ப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிட்டவில்லை. அதனால் விரிவாக அவை பற்றிய சித்திரங்களைத் தர முடியவில்லை.

மிருக காட்சி சாலை என்று தனியாக இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் அரசு பராமரிக்கும் ஒரு பெரிய தாவர இயல் தோட்டத்தைப் (BOTANICAL GARDEN) பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அங்கே அந்த நாட்டின் தனித்தன்மை மிக்க தாவரங்கள் அனைத்தும் வளர்க்கப் படுவதுடன் ஏராளமான ஊழியர்களைக் கொண்டு சிறப்பாகப் பராமரிக்கவும் செய்கிறார்கள். அந்த நாட்டில் மட்டுமே விளைகிற திருவோடு காய்க்கும் பனை மரங்களை அங்கே பார்க்கலாம். பலவகைப் பழ மரங்களும் விளக்கப் பலகைகளுடன் காட்சிக்குரியனவாகப் பேணப் படுகின்றன. அங்கு நான் ஒரு விசித்திரமான, நமக்குப் பார்க்கக் கிடைக்காத நட்சத்திரப் பழம் (STAR FRUIT) காய்க்கும் மரத்தைப் பார்த்தேன். சடை சடையாய் அவை எட்டிப் பறிக்கும் உயரத்தில் தொங்குகின்றன. அந்தப் பழத்தை வில்லை வில்லையாக நறுக்கி விருந்துகளிலும் உணவு விடுதிகளிலும் வைக்கிறார்கள்.

ஒவ்வொறு வில்லையும் ஒரு நடத்திரம் போலத் தோற்றமளிக்கிறது. புளிப்புச் சுவையுடன் கூடிய இதனை மக்கள் விரும்பிச் சாப்பிடுகிறார்கள்.

மிருக காட்சி சாலை இல்லாத குறையை இத் தோட்டதில் உள்ள ஆமைகள் காட்சி சாலை ஓரளவு போக்குகிறது எனலாம். இங்கு உள்ள ஆமைகள் மிகப் பிரம்மாண்ட மானவை, ஒரு ஆள் உட்கார்ந்து கொள்ளக் கூடிய அளவில் அகலமும் வலுவான ஓடுகளும் கொண்டவை. பெரிய பெரிய கால்களுடன் மிகச் சாதுவாய் சுற்றிவருகின்றன. குழந்தைகள் அச்சமின்றி அவற்றின் மீது அமர்ந்து சவாரி செய்கின்றனர். பெரியவர்கள் அவற்றின்மீது அமர்ந்து படம் எடுத்துக் கொள்கிறார்கள். மனிதர்களைக் கண்டதும் அவை கால்களையும் தலையையும் உள்ள்¤ழுத்துக் கேகொள்வதில்லை. பார்வையாளர்கள் நீட்டும் இலை தழைகளை தலையை நீட்டிக் கவ்வித் தின்கின்றன. இவை தரையில் மட்டும் வாழ்கிற TORTOISE இனத்தைச் சேர்ந்தவை. ஒரு வீட்டில் பெண் பிறந்தால் இது போன்ற ஆமை ஒன்றை வளர்த்து அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகும்போது வெட்டி கல்யாண விருந்தில் விசேஷமாய்ப் பர்¤மாறி வந்திருக்கிறார்கள் இங்குள்ள பூர்வ குடிகள். இப்போது இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இந்த வகை ஆமைகளை வளர்க்கவும் வேட்டை யாடவும் தடை செய்யப்பட்டு மீறுகிறவர்கள் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப் படுகிறார்கள். இந்த ஆமைகள் நீண்ட நாட்கள் வாழ்பவை. கின்னஸில் இடம் பெற்றுள்ள 150 வயதுடைய ஒரு மிகப் பெரிய ஆமை ஒரு தீவில் வைத்துப் பாதுகாக்கப் படுகிறது. உலக முழுதிருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்க்கத் தவறுவதில்லை.

TURTLE எனப்படும் நீர்வாழ் ஆமைகள் கடலில் அதிகம் தென்படுகின்றன. இவை இந்தியாவில் காணப்படும் ஆமைகள் போல அளவில் சிறியவை.

- தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 8

நீதித் துறையும் மற்றவையும்

சிறிய நாடு என்றாலும், சிஷெல்ஸின் நீதித் துறை குறிப்பிடும்படியான சிறப்புக்கள் கொண்டது. நீதிமன்றங்கள் இரண்டு அடுக்கு கொண்டவை. குற்றவியல் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்ற இரண்டே நிலைதான். நீதிபதிகளில் நான்கு பதவிகள். மாஜிஸ்டிரேட், சீனியர் மாஜிஸ்டிரேட், ஜட்ஜ், சீ·ப் ஜட்ஜ் என்று பதவிகள் உயரும். உச்ச நீதிமன்றத்திற்கு நான்கு நீதிபதிகள். தலைமை நீதிபதி மொரீஷியஸில் பிறந்தவர். இங்கு குடியேறி இந்நாட்டுப் பிரஜையாக ஆனவர். மற்ற மூன்று நீதிபதிகளில் ஒருவர் மண்ணின் மைந்தர். இன்னொருவர் இலங்கையைச் சேர்ந்தவர். நாலாமவர் தமிழர். நீதித் துறையும் நடுவர்களும் இந்தியா போலவே அரசியலாக்கப் படுகின்றனர். தற்போதுள்ள தலைமை நீதிபதி எதிர்க்கட்சி அனுதாபி என்பதால், அரசியல் நிர்ப்பந்தம் காரணமாய் பதவி இறங்கப் போகிறார் என்றார்கள். தலைமை நீதிபதிக்கும் மற்ற நீதிபதிகளுக்கும் சம்பளத்தில் வேறுபாடு இல்லை.

நான் சென்றபோது உச்ச நீதிமன்றத்துக்கு விடுமுறை. விடுமூறை முடிந்து மீண்டும் உச்ச நீதிமன்றம் துவங்குவதைப் பெரிய கோலாகலமான விழாவாகக் கொண்டாடினார் கள். 15-9-05 காலை 9 மணிக்கு கிறிஸ்துவ தேவாலயத்தில் தலைமை பிஷப் தலைமையில் பிரார்த்தனை நடைபெற்றது. சிஷெல்ஸ் கிறிஸ்துவ நாடானதால் அங்கு எல்லாமே தேவாலய வழிபாடுடனேயே துவக்கப் படுகிறது. தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் தமக்குரிய இடங்களில் அமர்ந்திருக்க, முறையான பிரார்த்தனைப் பாடல்களுடன் நிகழ்ச்சி துவங்கியது. பொதுமக்களும் அனுமதிக்கப் படுவதால் நானும் அந்நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்தேன். பொதுமக்கள் அதிகம் வந்திருந்தார்கள். பிரார்த்தனை முடிந்ததும் தலைமை பிஷப் பிரார்த்தனைச் சொற்பொழிவு நிகழ்த்தினார். பின்னர் கிறிஸ்துவ மற்றும் இதர மதங்களின் வேதங்களிலிருந்து பகுதிகள் வாசிக்கப் பட்டன. இந்து மதத்துக்கு தமிழ் வழக்கறிஞரான திரு. ராஜசுந்தரம் அவர்களுக்கு பகவத்கீதையிலிருந்து சில பகுதிகளைப் படிக்கும் வாய்ப்பு தரப்பட்டது.

இந்த நிகழ்ச்சி முடிந்ததும் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் போலீஸ் படையும் பேண்டு கோஷ்டியும் அணிவகுத்து முன்னே நடக்க, ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள உச்சி நீதிமன்றத்துக்கு ஊர்வலமாகச் சென்றார்கள். அது ஒரு பரவசமான காட்சியாக இருந்தது. உச்ச நீதிமன்றத்தில் ராணுவ அணிவகுப்பு நடை பெற்றது. ராணுவ மரியாதையை ஏற்ற தலைமை நீதிபதி எல்லா வழக்கறிஞர்களையும் தனித்தனியே கைகுலுக்கி வாழ்த்துச் சொன்னார். பிறகு உச்சநீதிமன்ற அறையில் தலைமை நீதிபதியின் உரைக்குப் பின் வௌ¤யே வந்து வழக்கறிஞர்களுடன் நீதிபதிகள் புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். பின்னர் வந்திருந்த பொதுமக்கள் உட்பட அனைவருக்கும் தேனீர் விருந்தளிக்கப் பட்டது. விடுமுறைக்குப்பின் மீண்டும் நீதிமன்றம் தொடங்குவதை இவ்வளவு கோலாகமாய்க் கொண்டாடுவதை இங்குதான் பார்த்தேன்.

இங்குள்ள மொத்த வழக்கறிஞர்களின் எண்ணிக்கை வெறும் 40 தான். அதிலும் ஒழுங்காகத் தொழில் செய்பவர்கள் 20 பேர்தானாம். அவர்களில் ஒரே தமிழ் வழக்கறிஞர் திரு.ராஜசுந்தரம் அவர்கள் தான். அங்குள்ள மக்களுக்கு இந்திய வழக்கறிஞர்களிடம் மிகுந்த நம்பிக்கையும் நல்ல மரியாதையும் இருக்கிறது.


நீதிபதிகளில் ஒருவரான திரு.கருணாகரன் அவர்கள் தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்ந்தவர். இங்குள்ள தமிழர்களில் 50 சதவீதம் பேர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர்கள்தாம். இவரது தந்தை மயிலாடுதுறையில் பெயர் பெற்ற காங்கிரஸ்காரர். ஆனால் திரு.கருணாகரன் படிக்கும் போதே திராவிடச் சிந்தனைகளில் ஊறியவர். கல்லூரி நாட்களில் சிறந்த பேச்சாளராகத் திகழ்ந்தவர். புரட்சிகரமான சிந்தனையும் செயல்பாடும் உடையவர் என்பதால் இவரது தந்தை இங்கிருந்தால் தன்னைப் போல் அரசியல்வாதி ஆகிவிடக்கூடும் என்று பயந்து தனது நண்பரும் சிஷெல்ஸின் பிரபல தொழிலதிபருமான திரு.கே.டி.பிள்ளை என்பவரிடம் ஒப்படைத்து சீஷெல்ஸ¤க்கு அழைத்துப் போகச் செய்தார். அப்படியே கே.டி.பிள்ளையால் சிஷெல்ஸ் வந்து காலூன்றியவர் முதலில் கே.டி.பிள்ளையின் நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக சிறிது காலம் பணி செய்தார். பின்னர் அவரது திறமை காரணமாக மாஜிஸ்டிரேட் ஆக நியமனம் பெற்றார். பின்னர் சீனியர் மாஜிஸ்டிரேட் ஆகி, தற்போது உச்ச நீதிமன்றத்து நான்கு நீதிபதிகளில் ஒருவராகத் திகழ்கிறார். பெரிய பதவியில் இருந்தாலும் தான் இந்நிலையை அடைய அஸ்திவாரமிட்ட திரு.கே.டி.பிள்ளையிடம் விசுவாசமிக்கவராகவும் தன்னுடைய சட்டக் கல்லூரித் தோழரும் அவரது நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணி செய்பவருமான என் மாப்பிள்ளை திரு.ராஜசுந்தரம் அவர்களிடம் அதே நட்பு மாறாமல் இருப்பதுமான உயரிய பண்பினைக் கொண்டவர். ஒருமுறை எனது இலக்கியக் கூட்டத்தில் என்னை அறிமுகப் படுத்திப் பேசியபோது - திரு.கே.டி பிள்ளையின் ஆரம்ப கால உதவிகளையும் ஆதரவையும் அவர் மனம் திறந்து நன்றியுடன் நினைவு கூர்ந்தது, கே.டி.பிள்ளை அவர்களையும் பார்வையாளர் களையும் நெகிழ வைத்தது. ஆனால் தொழில் வேறு நட்பு வேறு என்ற கொள்கையால் தனது தொழில் நெறிக்கு மாறாக சலுகையோ தயவோ காட்டாத நேர்மையாளர் என்று என் மாப்பிள்ளை சொன்னார். பரந்துபட்ட இலக்கிய அறிவும் ரசனையும் மிக்கவர். பலமுறை எனது நேரடி சந்திப்பிலும், இலக்கியக் கூட்டங்களிலும் அவர் காட்டிய தமிழுணர்வு என்னை வியக்க வைத்தது. எனது இலக்கியக் கூட்டங்களில் எப்போதும் முன்வரிசையிலிருந்து அவர் ரசித்தது எனக்கு உற்சாகமும் கௌரவமும் தருவதாக இருந்தது. அவரது இந்த முகம் அங்கிருக்கும் தமிழர்களில் பலருக்கும் தெரியவில்லை என்றே தோன்றியது. அதற்கு உச்ச நீதிமன்ற நீதிபதி அந்தஸ்து காரணமாய் அவர் சமுதாயத்தில் கலந்து பழகவியலாத சூழ்நிலையும் காரணமாய் இருக்கக் கூடும். அவருடைய மனைவி திருமதி.செல்வி அங்குள்ள அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை ஆகப் பணிபுரிகிறார். அவர் சிறந்த இசை ரசிகர் மற்றும் நல்ல ஓவியரும் கூட. நீதிபதி தம்பதிகள், என்னையும் என் மனைவியையும் கௌரவிக்க அவர்களது வீட்டில், நெருங்கிய சில நண்பர்களுடன் ஒரு நல்ல விருந்தளித்தது இன்றும் என் மனதில் பசுமையாய் நிற்கிறது.

தலைநகரான விக்டோரியாவில்தான் குற்றவியல் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உள்ளன. மாஹேக்கு அடுத்த பெரிய தீவான பிராலினில் ஒரு குற்றவியல் நீதிமன்றமும் உள்ளது.

சிஷெல்ஸின் காவல்துறை, இந்தியக் காவல்துறையுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் ஏக்கத்தை தருவதாக உள்ளது. 'உங்கள் நண்பன்' என்று தமிழ்நாட்டில் படமெல்லாம் எடுத்துப் பொதுமக்களுக்குக் காவல்துஆறை மீது நல்ல அபிப்பிராயம் ஏற்படுத்த எவ்வளவோ முன்றார்கள், இன்றும் அவ்வகையில் பலவித முயற்சி¤களில் ஈடுபட்டும் வருகிறார்கள். ஆனால் அரசியல்வாதிகளையும் குற்றவாளிகளையும் தவிர மற்ற அனைவருக்கும் காவல்துறை என்றால் அச்சம் எழுவது மாறவில்லை. ஆனால் சிஷெல்ஸில் அது சாத்யமாகி இருக்கிறது. அங்கு காவல்துறை ஒன்று இருப்பதாகவே தெரியாது. தாங்கள் மக்களின் சேவகர்கள் என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். மக்களும் காவல் துறை என்றால் அஞ்சி நடுங்குவதில்லை. நான் அங்கிருந்த இரண்டு மாதத்திற்கும் மேலான நாட்களில், உச்ச நீ¦திமன்ற ஊர்வலத்தின்போது போக்குவரத்தைக் கண்காணிக்கும் காவலரை மட்டுமே பார்த்தேன். வேறு எங்கும் என் கண்ணில் காவலர்கள் தென்பட்டதில்லை.

காவல்துறை நிலையங்களும் அச்சமூட்டும் இரத்த வண்ணத்தில் இல்லை. தமிழ்நாட்டுக் கிராமப் பஞ்சாயத்து சாவடிபோல மிக எளிமையாய்ப் பயமுறுத்தாமல் உள்ளன. தலைநகரில் மட்டும் பிரம்மாண்டமான கட்டடத்தில் தலைமைக் காவல் அலுவலகம் நவீன சாதனங்களுடன் அமைந்திருக்கிறது. அங்குதான் நான் பல காவலர்கஆளைக் கண்டேன்.

இப்படிப் பரபரப்பில்லாமல் மக்களுக்கு அச்சமளிக்காமல் எப்படி இங்கு காவல்துறை இருக்கிறது என்று கேட்டேன். அற்குக் கிடைத்த பதில் நம்ப முடியாதபடி இருந்தது. ஆனால் அதுதான் உண்மை! அங்கே திருட்டே நடைபெறுவதில்லை. கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி அபூர்வம். குடிகாரர்கள் எல்லை மீறினால் தான் உண்டு. பின் அங்கே காவல்துறைக்கு அங்கே என்ன அவசியம்? நான் அங்கிருந்த நாட்களில் என் மகள் வீட்டிலும் இன்னும் பல வீடுகளிலும் விலையதிகமான பொருட்கள் வீட்டு வராந்தாக்களிலும், கார்ஷெட்களிலும் கேட்பாரற்றுக் கிடந்ததைப் பார்த்திருக்கிறேன். கணவனும், மனைவியும், பிள்ளைகளும் பணிக்கும் பள்ளிக்கூடத்திற்கும் காலை 7 மணிக்குப் போய் மாலைதான் திரும்புகிறார்கள். ஆனால் பொருட்கள் போட்டது போட்டபடி கிடக்கின்றன. ஆரம்ப காலங்களில் மக்கள் வீட்டைப் பூட்டுவதே இல்லை என்று ஒருவர் சொன்னார். நம்பலாம் என்றே தோன்றியது.

அஞ்சல் துறையும் ஆரோக்கியமான அமைப்பாகவே உள்ளது. அஞ்சல் பட்டுவாடா செய்பவர்களில் பெண்களே அதிகம். வீட்டுக்கு வீடு சென்று தர அதிகம் தேவை இல்லாதபடி அங்கு அநேகமாக எல்லோரும் தனி அஞ்சல் பெட்டிகளை அஞ்சலகங்களில் வைத்திருக்கிறார்கள்.

விளையாட்டுத் துறை மிகவும் விறுவிறுப்புடன் இயங்குகிறது. அவர்களது தேசீய விளையாட்டு டென்னிஸ்தான். சிறுவர்களுக்கு - ஆண், பெண் இருபாலாருக்கும் அரசே டென்னிஸ் விளையாட பயிற்சி தர ஏற்பாடு செய்திருக்கிறது. ஆண்டு முழுதும் உலகின் பலநாடுகளுக்கும் போட்டிகளில் பங்குபெற, பயிற்சி தரப்பட்டவர்கள் அனுப்பி வைக்கப் படுகிறார்கள். மிகப்பெரிய ஸ்டேடியம் தலைநகர் விக்டோரியாவில் உள்ளது. பிள்ளைகள் தொலைக்காட்சிகளில்- படிப்பு நேரம் போக விளயாட்டுச் சேனல்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

- தொடரும்

நான் கண்ட சிஷெல்ஸ் - 7

7. அத்யாவசியத் தேவைகளும் அரசும்

சிஷெல்ஸில் மக்களின் அத்யாவசியத் தேவைகளை அரசு மிகுந்த அக்கறையுடன் பேணுகிறது. மிக அத்யாவசியத் தேவைகளான குடிநீர், மின்சாரம் போன்றவற்றிற்கு இங்கு நாம் படும் அவஸ்தைகள் நினைவுக்கு வந்தன. அங்குள்ளவர்களுக்கு நம் பிரச்சினைகள் இல்லை.

அங்கு தண்ணீருக்குப் பஞ்சமே இல்லை. மலைப் பிரதேசம் என்பதால் மலையருவி நீர் எப்போதும் குறைவின்றிக் கிடைக்கிறது. முன்பே சொன்னது போல் நீங்கள் எங்கு சென்றாலும் பக்கவாட்டில் ஒர் மலையருவி சிலுசிலுத்தபடி உடன் ஓடி வருவதைப் பார்க்கலாம். என் மகள் வீட்டின் பின்புறத்தில், மயிலாடுதுறையில் அவர்கள் வீட்டின் கொல்லைப்புறம் ஓடும் சிற்றோடை போல இங்கும் ஒரு சிறு அருவி சலசலத்தபடி ஓடிக் கொண்டிருக்கிறது. அதைப் பயன் படுத்தவேண்டிய அவசியமில்லாமல் அரசு குடிந்¦ர் வழங்குதுறையால் இடையறாமல் அபரிமிதமாய் குழாய்மூலம் நீர் வழங்கப் படுகிறது. குடிநீருக்குத் தனியாகவும், மற்ற உபயோகங்களுக்குத் தனியாகவும் வேறு வேறு குழாய்களில் தண்ணீர் வருகிறது. குடிநீர் சுத்திகரிக்கபட்டு அனுப்பப்படுகிறது. நம்மூர் நெய்வேலி போல 24 மணி நேரமும் தண்ணீர் வருவதால் குடிநீர் லாரிக்காக சென்னைவாசிகள் போலக் கண்விழித்துக் காத்திருக்கிற அவலம் இல்லை. அருவிநீர் மிகச் சுவையானது. "கோவை சிறுவாணித் தண்ணீ¦ர் போலச் சுவையாக இருக்கும். சிங்கப்பூர்போல் சாக்கடை நீரை மறுசுழற்சி செய்தளிக்கும் அவசியம் இங்கு இல்லை. சிங்கப்பூர்க்காரன் என்னதான் குபேரபுரி என்று பீற்றிக் கொண்டாலும் சாக்கடைக் கழிவுநீரைத்தானே குடிக்கிறான்? அந்த அவலம் எங்களுக்கு இல்லை" என்றார் டாக்டர் ஜவஹர்.

மின்சாரத்துறையும் இங்கே சிறப்பாகச் செயல்படுகிறது. இங்கு மின்தடை ஒரு நாளும் இல்லை என்று என் மாப்பிள்ளை சொன்னார். அது உண்மை என்பதை அனுபவத்தில் பார்த்தேன். அங்கிருந்த 70 நாட்களில் ஒரு நாள் கூட மின்சாரம் நிற்காதது எனக்கு வியப்பாக இருந்தது. ஆனால் ஒரு நாள் இரவு நான் அங்கு ஒரு இலக்கியக் கூட்டத்தில் சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தபோது சுவாரஸ்யமான கட்டத்தில் திடீரென்று மின்சாரம் நின்று, பேச்சு தடைப் பட்டது. என்னைவிட அங்கு கூடி இருந்தவர்கள் மிகவும் பதற்றமடைந்தார்கள். அங்கும் இங்கும் ஓடி ஏதோ செய்தார்கள். 10 நிமிஷம் கூட இல்லை- மின்சாரம் திரும்ப வந்துவிட்டது. நான்

தொடர்ந்து பேசும்போது குறிப்பிட்டேன். "நான் வந்தபோது என் மாப்பிள்ளை சொன்னார்கள் 'இங்கு நம் ஊர் போல இல்லை. தண்ணீர் போல 24 மணி நேரமும் மின்சாரமும் தடைப்படாது கிடைக்கிறது' என்று. நான் அதை என் குறிப்பேட்டில் எங்கள் ஊரில் போய்ச் சொல்லக் குறித்துக் கொண்டேன். இப்போது அதை மாற்றி எழுத வேண்டும்". இதைக்கேட்டு எல்லோரும் சிரித்தார்கள். என் மாப்பிள்ளை எழுந்து, "மன்னிக்கவேண்டும். மின்சாரம் போனது இந்தக் கட்டடத்தில் மட்டும்தான். வௌ¤யே போகவில்லை. புதிதாக இன்று இந்த அறையில் அமைக்கப் பட்டுள்ள ஏ.சி எந்திரத்தில்

ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாய் இங்கு மட்டும் ப்யூஸ் போயிருக்கிறது. மற்றபடி நாட்டில் எப்போதும் மின்சாரம் தடைப்பட்டதில்லை" என்று விளக்கம் சொன்னார். நம்மூரில் மின்சாரம் எப்போது போகும் எப்போது திரும்ப வரும் என்று நிச்சயமற்று நாம் அவஸ்தைப்படுகிற நிலையில் இது அதிசயமாக இருந்தது. அதற்குக் காரணம் இங்கு மின்சாரம் ஜெனரேட்டர் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீர் மின்நிலையமோ, அனல் மின்நிலையமோ இங்கு இல்லை. மொத்த நாட்டுக்கும், தலைநகர் விக்டோரியாவில் அமைந்துள்ள சக்திவாய்ந்த ஜெனரேட்டர்கள் மூலமே மின்சாரம் பெறப்பட்டு வினியோகிக்கப் படுகிறது. மிக விழிப்புடன் மின்தடை ஏற்படாதபடி பராமரிக்கிறார்கள்.

அது மட்டுமல்ல. நான் நடைப் பயிற்சிக்கு வௌ¤யே செல்லும் போதெல்லாம் நம்மூரைவிட இங்கே என்ன வித்யாசமாய் இருக்கிறது என்று கவனிப்பேன். அப்படி, சாலை ஓரத்தில் இருந்த மின்கம்பங்களைப் பார்த்தேன். மேலே செல்லும் மின் கம்பிகள் முழுதும் நெடுக்க உறையிடப்பட்டதாய் (insulated) இருந்தன. நகரத்தின் பல இடங்களுக்கும் சென்றபோது எங்கும் அவ்வாறே மின்கம்பிகள் உறையிடப்பெற்றே இருந்ததைப் பார்த்தேன். நம்மூரில் உறையிடப்படாத மின் கம்பிகளில் சாலையை ஒட்டியுள்ள மரங்கள் உரசியும், தாழ்வாக உள்ள மின்கம்பிகளில் உயரமாய் கரும்பு ஏற்றிவரும் லாரி, டிராக்டர்கள் இடித்து விபத்து நேர்வதும் நினைவுக்கு வந்தது. இதை நம் நாட்டிலும் அமுல் படுத்தினால் நிறைய விபத்துக்களைத் தடுக்க முடியுமே என்று எண்ணினேன்.

அடுத்து பாராட்டவேண்டியது போக்குவரத்து ஏற்பாடு. இங்கு தனியார் பேருந்து சேவை செய்ய முடியாது. அரசு போக்குவரத்துத் துறை நடத்தும் SPTC என்கிற Sechelles Public Transport Corporation பேருந்துகள் நிறைய நாடு முழுதும் ஓடுகின்றன. அதிக நேரம் காத்திருக்க வேண்டியதில்லை. 10 நிமிஷத்துக்கு ஒரு பேருந்து, தொடராக வந்து கொண்டிருக்கிறது. எல்லாப் பேருந்துகளும் குளிர்சாதனம் பொருத்தப் பட்டவை.

சிங்கப்பூரைப்போலவே கண்டக்டர் என்று தனியாக யாரும் இல்லை. ஓட்டுனர்தான் பயணச்சீட்டையும் வழங்குகிறார். பேருந்து, நிறுத்தத்தில் நின்றதும் முன் பக்கத்துக் கதவு தானாகவே திறக்கிறது. பேருந்து நிறுத்தங்கள் பேருந்தின் படிக்குச் சமமாய் இருப்பதால் பயணிகள் நம்மூர்போல மலையேறுவதுபோலச் சிரமப்படவோ, இறங்கும்போது உயரத்தி லிருந்து குதிக்கவோ தேவை இல்லை. முதியவர்கள் சிரமமின்றி ஏறவோ இறங்கவோ எளிதாக இருக்கிறது. பயணிகள் ஏறியதும் கட்டணத்தை ஓட்டுனரிடம் தருகிறார்கள். எங்கு செல்லவும் ஒரே கட்டணம்தான். மூன்று ரூபாய்தான். கட்டணம் தெரிந்திருப்பதால் சரியான சில்லறையே தருகிறார்கள். ஓட்டுனர் பணத்தை வாங்கிக் கொண்டு அவர் முன்னே உள்ள ஒரு பொத்தானை அழுத்துகிறார். பயணச்சீட்டு வௌ¤யே வருகிறது. பயணிகள் எடுத்துக் கொள்கிறார்கள். எல்லோரும் ஏறியதும் கதவு தானாகவே மூடிக் கொள்கிறது. ஒலிப்பானின் ஓலத்தை எங்குமே - குண்டூசி வளைவுகளிலும் கூடக் கேட்க முடிவதில்லை. NO HORN அறிவிப்பை எங்குமே காண முடியவில்லை. அங்கு நான் பார்த்த பேருந்துகள் எல்லாமே இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப் பட்டனவாக இருந்தன. அவற்றின் பின்புறம், TATA, ASHOK LEYLEND சின்னங்கள் தென்பட்டன.

டாக்சிகள் நிறைய உள்ளன. ஏனெனில் சாலைகளிலிருந்து உள்ளே இருக்கும் பகுதிகளில் உள்ளவர்கள் சொந்தக் கார் இருந்தால்தான் அங்கிருந்து வௌ¤யே செல்ல முடியும். அதனால் கால் டாக்ச்¤களை செல்பேசியில் அழைக்கிறார்கள். அடுத்த சில நிமிஷங்களில் டாக்ஸி வந்து விடுகிறது. இங்கு எங்குமே ஆட்டோக்கள் இல்லை. சைக்கிள்கூட அரிதாக ஒன்றிரண்டுதான் தென்படுகிறது. மாட்டு வண்டிகளைப் பார்க்கவே முடியாது. சில தீவுகளில் ஒற்றை எருது பூட்டிய சிறு பார வண்டிகள், சுமை ஏற்றிச் செல்ல பயன்படுத்தப் படுகின்றன. எல்லோருமே அனேகமாய் கார் வைத்திருக்கிறார்கள். கார் இல்லாவிட்டால் காலை ஏழுமணிக்குக் கிளம்பி அலுவகத்துக்குச் செல்ல முடியாது. மாலை ஆறரை மணியுடன் பேருந்து ஓட்டம் நின்று விடும். அலுவலகங்கள் 4 மணிக்கே முடிந்தாலும் கடைக்கோ, கோயிலுக்கோ, களியாட்டங்களுக்கோ சென்று இரவு திரும்ப, சொந்தக் கார் இருந்தால்தான் முடியும். கார் இல்லாதவர்கள் சாலையில் செல்லும் திறந்த மினி லாரிகளைக் கைகாட்டி ஏறிக் கொள்கிறார்கள். தனியார் கார்களிலும் இடமிருந்தால் யார் என்று பாராமல் முகம் சுளிக்காமல் ஏற்றிச் செல்கிறார்கள். ஸ்கூட்டர்கள் கூட ஒன்றிரண்டையே அரிதாகப் பார்த்தேன்.


50 ஆண்டுகளுக்கு முன் விமானப் போக்குவரத்து இல்லை. கப்பல்தான். இந்தியாவிலிருந்து இங்கு வர ஆறு மாதங்கள் பிடிக்கும். இப்போது விமானப் பயணம் 8 மணி நேரந்தான். தினமும் துபாய்க்கு விமானங்கள் பறக்கின்றன. சிங்கப்பூருக்கு செவ்வாய் தோறும் வாரம் ஒருமுறைதான் விமான சேவை. அங்கிருந்து வியாழக்கிழமையன்று விமானம் வருகிறது. அதனால் வியாபாரிகள் செவ்வாய்க்கிழமைகளில் சிங்கப்பூர் சென்று ஒரே நாளில் தங்களது வர்த்தகங்கஆளை முடித்துக் கொண்டு வியாழன் திரும்பி விடுகிறார்கள். இது அவர்களுக்கு மிகவும் சௌகர்யமாக இருக்கிறது.

- தொடரும்.

Wednesday, January 18, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 6

நான் கண்ட சிஷெல்ஸ் - 6: கல்வி - மருத்துவம் எல்லாம் இலவசம்.

விக்டோரியா 25000 மக்களைக் கொண்ட தலைநகரமும், துறைமுகமும் ஆகும்.

ஆண்டு நிதி ஒதுக்கீட்டில் ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்குத் தொகை கல்வி, சுகாதாரம் போன்ற துறைகட்கே ஒதுக்கப் படுகிறது. இதனால் மக்களிடையே 80 விழுக்காடுக்கும் அதிகமாக எழுத்தறிவு வளர்ச்சியும், உடல் நலச் செம்மையும் காணப்படுகிறது.

சிஷெல்ஸில் கிரியோல் (Creole), ஆங்கிலம், பிரஞ்ச் ஆகிய மூன்று மொழிகளை ஆட்சிமொழிகளாக அங்கீகரித்துள்ளார்கள். எல்லா மக்களாலும் பேசப்படும் கிரியோல் மிகப் பழைமையான மொழி. ஆப்பிரிக்க மற்றும் பிரஞ்ச் மொழிகளைக் கலப்பாகக் கொண்டது. தேசீயமொழியான கிரியோலில்தான் மக்கள் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள்.

கல்வி இங்கு எல்லோருக்கும் இலவசம். இப்பொதுதான் நம் நாட்டில் அமுலில் இருக்கிற - எல்லா வகுப்புகளுக்கும் இலவச பாட மற்றும் நோட்டுப் புத்தகங்கள் திட்டம் - எழுதுபொருட்கள் உட்பட, அங்கு வெகு நாட்களாகவே செயல் பட்டு வருகிறது. அத்துடன் இலவச பேருந்து பயண வசதியும் எல்லா பிள்ளைகளுக்கும் அங்கே தரப்படுகிறது. கல்விமொழி ஆங்கிலமும் பிரஞ்சும். அரசுப் பள்ளிகளின் தரம் நமது நராட்சிப் பள்ளிகளில் உள்ளபடிதான். இந்தப் பள்ளிகளில்தான் வசதியற்ற மக்களின் பிள்ளைகள் படிக்கிறார்கள். இவர்களில் அதிகமும், கலப்பின மக்களான உள்ளுர்வாசிகள் தாம். பிள்ளைகளில் அதிகம் பேர் பள்ளி வயதைக் கடந்தவர்களாக இருக்கிறார்கள். ஆசிரியர்களைவிட ஆகிருதி மிக்கவர்களாகத் தோற்றம் தருபவர்கள். ஆசிரியர்களைப் பெயர் சொல்லியே அழைப்பவர்கள். என் மகள் மங்களநாயகி இத்தகைய அரசுப் பள்ளியில்தான் அறிவியல் பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறாள். தலைக்குமேல் உயரமான அவள் வகுப்பு மாணவர்கள் 'மிஸஸ் மங்ளா' என்றே அழைப்பார்கள். கட்டுப்படுத்த முடியாதபடியும் படிப்பில் அக்கறை அற்றவர்களாயும் இருப்பதால் ஆசிரியர்கள் என்னதான் முன்றாலும் அவர்களிடம் வேலை வாங்க முடியவில்லையாம். எல்லாம் இலவசம் என்பதால் பெற்றோருக்கும் தம் மக்களின் படிப்பில் அக்கறை இல்லை. மேலதிகாரிகளும் ஆசிரியர்களது இந்தக் குறைபாட்டுக்கு செவி சாய்ப்பதில்லை. அதனால் உண்மையாக உழைக்க விரும்பினாலும் பலனில்லை.


மாறாக நம் நகரங்களில் உள்ளது போலவே தரமான தனியார் பள்ளிகள் உள்ளன. ஆனால் அங்கு கல்விக்கட்டணம் நமது தனியார் தொழிற்கல்லூரிகள் போல மிக அதிகம். ஆண்டுக்கு 2-3 லட்சம் போல உயர்நிலைப் பள்ளிக்கே ஆகிறது. அதனால் வசதியுள்ளவர்கள் பிள்ளைகளே இங்கு பயில்கிறார்கள். பிரைமரி என்பது 1-5 வகுப்பு வரையிலானது. அடுத்து செகண்டரி. இதை A leval என்கிறார்கள். இது 6 முதல் 10 வரை. அடுத்து O level. நம் பிளஸ் 2 போல. இதில் 'பிரகாசமான வெற்றி' பெறும் மாணவர்களை அரசாங்கமே உதவித் தொகை கொடுத்து வௌ¤நாடுகளுக்கு மேற்கல்வி பயில அனுப்புகிறது. தங்கள் நாட்டின் அறிவுஜீவிகஆளை மேம்படுத்த அரசின் கொள்கை இது. செகண்டரிக்குப் பின் தொழிற்கல்வி பயில விரும்புகிறவர் களுக்கு பாலிடெக்னிக் பள்ளிகளும் (Vocatinal schools) உள்ளன. கம்யூட்டர் சயின்ஸ் நம் நாட்டைப் போலவே அதிகமான மாணவர்களை ஈர்க்கிறது. பெண்கள் அதிகமும் நர்சிங் படிப்பில் சேர்கிறார்கள். நர்சிங் படிப்பில் சேர பெரும் போட்டி. ஏனென்றால் இங்குள்ள அரசு மருத்துவ மனைகளில் உடனே வேலை கிடைத்து விடுகிறது.

4 வயதில் Maternity school என்ற படிப்பில் சேர்க்கலாம். இது நம் Pre-Primary போல. இது முடிந்து - 5 வயதில் தான் Piraimary முதல் வகுப்பு. 1997ல் நம் இந்திராகாந்தி திறந்தவௌ¤ப் பல்கலைக் கழகம் தன் கிளை ஒன்றை இங்கே திறந்துள்ளது. இதில் கலை, வணிகவியல் பட்டப் படிப்பும் சட்டப்படிப்பும் கற்பிக்கப் படுகின்றன.

இங்கு எல்லா அலுவலங்களும் பள்ளிகள் உட்பட- காலை 8 மணிக்கே துவங்கி விடுகின்றன. பள்ளிக்கூடங்கள் மாலை 3 மணிக்கும் மற்ற அலுவலகங்கள் - தனியார் நிறுவனமானாலும் மாலை 4 மணியுடனும் முடிவடைய வேண்டும். தொழிலாளர் நலம் பேணும் பொதுவுடமைச் சித்தாந்த நாடு ஆதலால் இந்த வேலை நேரக் கணக்கில் கடுமையாக இருக்கிறார்கள். ஓவர்டைம், கதவைப் பாதி சார்த்திக் கொண்டு வேலை செய்தல் என்பதெல்லாம் கூடாது. கட்டாயமாக மாலை 4 மணிக்கு அலுவல்கஆளை முடித்துக் கொண்டு மூடி விடவேண்டும். அதே போல சனி, ஞாயிறு எல்லோருக்கும் கட்டாய விடுமுறை. அந்த இரண்டு நாளும் கீழ்மட்ட மக்கள் 5 நாளில் சம்பாதித்ததை நாள் முழுதும் குடித்துக் கழிக்கிறார்கள். 'அலுவலகங்களில், அறிவாளிக்குத் தனிச் சலுகை ஏதும் இல்லை. அறிவாளிக்கும் முட்டாளுக்கும் ஒரே சம்பளம்தான்.உங்கள் திறமையைக் காட்டவேண்டும் என்று யாரும் எதிர் பார்ப்பதில்லை' என்பது நம் நாட்டுத் திறமைசாலி களின் மனக்குறை. சம்பளமும் பிரசிடென்ட் வரை ஒன்றும் அதீத வித்யாசமில்லை. ஆனால் கடைசி தொழிலாளிக்கும் கூட ஏறத்தாழ ரூ.5000 (நம் பணத்தில் ரூ. 40,000) ஊதியம் கிடைக்கிறது. அதனால் வாழ்க்கை மோசமில்லை.

பொதுச் சுகாதாரம் இங்கு நன்கு பேணப்படுகிறது. சிங்கப்பூர் போல நூறு சதவீத சுத்தம் இல்லை என்றாலும் நாள் முழுதும் மினி வேன்களில் துப்புரவுத் தொழிலாளர்கள்- அதிமும் பெண்கள்- கைகளில் நீண்ட பெருக்குகிற படல்களும் தோளில் பெரிய பிளாஸ்டிக் பையுமாகச் சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களான பீச் போன்ற இடங்களில் குப்பை சேராமல் பார்த்துக் கொள்கிறார்கள். நம் ஊர்களில் உள்ளது போல குப்பைத் தொட்டிகள் தெருவுக்குத் தெரு இல்லை. ஒரு பகுதியின் முடிவில் நடமாட்டம் மிகுந்த சாலையருகில் பெரிய பெரிய பிளாஸ்டிக் குப்பைத்தொட்டிகள் 4,5 வைக்கப் பட்டுள்ளன. மக்கள் காலை 7 1/2 மணிக்கு அலுவலுக்குச் செல்லும் போது வீடுகளில் நாள் முழுதும் சேர்ந்திருக்கிற குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் கொண்டு வந்து இந்தத் தொட்டிகளில் போட்டு விட்டுப் போகிறார்கள். இது விஷயத்தில் மக்களது பொறுப்புணர்ச்சி பாராட்டும்படி உள்ளது. நம்மூர்போல குப்பையை வௌ¤யே தெருவில் எறிவதோ பொதுஇடத்தில் கொட்டுவதோ இல்லை. காரில் செல்பவர்களும் டிக்கியில் குப்பைப் பைகளை வைத்துக் கொணர்ந்து நிறுத்தி பொதுத் தொட்டிகளில் போட்டு விட்டுப் போகிறார்கள். அதனால் எங்கேயும் குப்பை மேடுகளைப் பார்க்க முடியாது. இந்தத் தொட்டிகளில் சேரும் குப்பைகளை அடிக்கடி லாரிகளில் ஏற்றிக் கொண்டு செல்கிறார்கள்.

தலை நகர் விக்டோரியாவில் பெரிய பொதுமருத்துவ மனை உள்ளது. மற்ற - மக்கள் அதிகம் உள்ள பிராலன் போன்று 3 தீவுகளிலும் பொது மருத்துவமனைகள் உள்ளன. இந்த நாட்டுக் குடிமக்கள் எல்லோருக்கும் மருத்துவ வசதி இலவசம். பெரிய அறுவைசிகிச்சை ஆனாலும், எக்ஸ்ரே, ஸ்கேன் எதுவானாலும் கட்டணமில்லை. மக்களது உடல்நலம் பற்றி அரசு காட்டும் அக்கறையால் இங்கு இறப்பு விகிதம் குறைவு. சராசரி வயது 72.7.

முன்பே குறிப்பிட்டபடி, இங்கு பணியாற்றும் டாக்டர்கள் மக்களிடம் ஜாக்கிரதை யாக இருக்க வேண்டும். அவர்கள் விரும்புகிறபடிதான் வைத்தியம் செய்யவேண்டும்.

எல்லாவற்றிற்கும் ஊசிதான்; எக்ஸ்ரேதான்! அவசியமில்லை என்று சொன்னால் உடனே பிரெசிடெண்டுக்குப் புகார்தான்! அதோடு இங்கு டாக்டர்கள் பிரைவேட் பிராக்டீஸ் செய்ய அனுமதியில்லை.

இங்கு தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர்கள் நிறையபேர் அரசுப் பணியில் உள்ளார்கள். இவர்களில் 1980லேயே இங்கு வந்து எல்லோருக்கும் முன்னோடியாக இருப்பவர், மயிலாடுதுறையை அடுத்த செம்பனார்கோயிலைச் சேர்ந்தவரான டாக்டர் வி.ராமதாஸ். இங்கு மிகவும் பிரபலமாகப் பேசப்படுகிற அவரை - நான் போயிருந்த போது அவர் சென்னைக்கு வந்திருந்ததால்- சந்திக்க முடியாது போனதில் எனக்கு வருத்தமே. தொழில் முறையில் 'எலும்பியல் அறுவை சிகிச்சை' நிபுணரான (Orthopaedic Surgeon) அவர் 1980ல் சிஷெல்ஸ் ராணுவத்தில் மருத்துவப் பணியில் சேர்ந்தார். பின்னர் பிரசிடென்டின் பிரத்தியேக மருத்துவரானார்.


இன்று டாக்டர் ராமதாஸ் சிஷெல்சின் மிகப் பெரிய தொழிலதிபர். சில ரெஸ்டாரெண்ட்கள், உணவு விடுதிகள், மாஹேயிலும் பிராலன் தீவிலும் கேளிக்கை அரங்கங்கள் என பலவகைத் தொழில்களில் வெற்றி கரமாக இயங்கிக் கொண்டி ருப்பவர். விக்டோரியாவில் உள்ள இவரது 'Pirates Arms' என்ற ரெஸ்டாரெண்ட் உள்ளூர் மற்றும் வௌ¤நாட்டுப் பயணிகளை மிகமும் ஈர்க்கிற புகழ் வாய்ந்தது. மக்களால் மிகவும் விரும்பப்படும் 'Beau Vaalan' என்கிற கடற்கரையின் அருகில் அமைந்துள்ள இவரது உணவுவிடுதியான 'Cocod'Or' எப்போதும் உல்லாசப் பயணிகளால் ஆக்ரமிக்கப் பட்டிருக்கும். இந்த விடுதியில் நான் வியந்தது தரைவிரிப்பு முதல் உச்சிக் கூரைவரை இந்திய அடயாளங்களைக் காட்டுவதாக அமைந்திருப்பது. தென்னையின் எல்லாப் பகுதிகளுமே பயன் படுத்தக் கூடியது என்பார்கள். இவர் தஞ்சை மாவட்டக்காரர் என்பதால் தென்னையின் எல்லா உறுப்புகளும் இந்த விடுதியில் வித்யாசமான முறையில் பயன்படுத்தப் பட்டிருப்பதைக் கண்டு வியந்தேன். தென்னைக் குருத்தோலைகள் நம்மூர் போலத் தோரணங்களாகத் தொங்குகின்றன. மட்டைஓலைகள் அழகான விசிறிகள் போன்று விரித்து எங்கும் நடப்பட்டுள்ளன. மேலே கூரையில் தென்னங்கீற்றுகள் அலங்காரமான முறையில் வேயப்பட்டுள்ளன. கொட்டாங்கச்சி ஆஷ்ட்ரேயாக மாற்றப் பட்டிருக்கிறது. அடிமட்டைகள் ஆங்காங்கே துப்பாக்கிகளை மூன்று மூன்றாய் முக்காலி வடிவில் நிறுத்தி வைப்பது போல நிற்க வைக்கப் பட்டிருக்கின்றன. பருத்த அடிமரங்கஆளை நட்டு அதன் மீது பெரிய அடி மரங்களைக் குறுக்குவாட்டில் வில்லையாக நறுக்கியது போன்ற அமைப்பில் வைத்து மேஜையாக்கி இருக்கிறார்கள். நம்மூரில் என்றால் இது வியப்பளிக்காது. ஆனால் அங்கு இது வித்யாசமான அலங்காரமாய் மனங்கவர்கிறது. இதே போலவே அவரது எல்லா நிறுவனங்களிலும் இந்திய அடையாளம் தெரியும். இந்த நிறுவனங்களுக் கெல்லாம் எங்கள் மாப்பிள்ளை திரு. ராஜசுந்தரம் தான் சட்ட ஆலோசகர். டாக்டரின் இரு சகோதரர்களும் அவருக்கு உதவியாய் நிறுவனங்களைக் கவனித்துக் கொள்கிறார்கள்.

டாக்டர் ராமதாஸ் பழுத்த முருக பக்தர். ஆனால் சர்ச்சுகளுக்கும் ஈடுபாட்டுடன் செல்பவர். நம்மூர் வேளாங்கண்ணி தேவாலயத்திலிருந்து 'புனித வேளாங்கண்ணி மாதா'வின் விக்கிரகம் ஒன்றைக் கொண்டுவந்து இங்குள்ள ரோமன் கத்தோலிக சர்ச் ஒன்றில் நிறுவியுள்ளார். அதோடு அன்னை வேளாங்ககண்ணிக்கு ஆண்டுதோறும் உற்சவம் ஒன்றையும் கோலாகலமாய் நடத்தி வருகிறார். இவர் இந்நாட்டுக் குடியுரிமை பெற்று சிஷெல்ஸின் பிரஜை ஆகி விட்டவர். இந்நாட்டுக் குடியுரிமை உடையவரே இங்கும் நிலம், வீடு வாங்கமுடியும்.

தற்போது பிரசிடெண்டின் தனிமருத்துவராக இருப்பவரும் தமிழர்தான். டாக்டர் செல்வம் என்று அழைக்கப்படும் டாக்டர் பன்னீர்செல்வம் தஞ்சையைச் சேர்ந்தவர்., மருத்துவப் பணிக்கான அர்ப்பணிப்பும் அன்பு நெஞ்சமும் கொண்டவர். எப்போதும் சிரித்தமுகம். அலுத்துக் கொள்ளாத, நோயாளிகளுக்கு நோயின் கடுமை தெரியாமல்

நம்பிக்கையூட்டி மருத்துவம் செய்பவர். இராசியானவர் என்று மக்களிடையே பெயர் பெற்றவர். எனக்கு அங்கிருந்தபோது ஒரு நாள் நள்ளிரவில் லேசாச நெஞ்சில் வலியும் படபடப்பும் ஏற்பட்டபோது, என் மாப்பிள்ளை அவரது நெருங்கிய நண்பரான டாக்டர் செல்வத்துக்குப் போன் செய்தபோது, 'நீங்கள் வரவேண்டாம், நானே இதோ வருகிறேன்' என்று சொல்லி அந்த அர்த்த ராத்திரியில் 8 கி.மீ தொலைவிலிருந்து வந்து என்னை சோதித்து, 'ஒன்றும் பயமில்லை. இது சாதா வலிதான். மாத்திரை தருகிறேன். தூங்கினால் சரியாகி விடும்' என்று தைர்யமளித்துத் திரும்பிய அந்த அன்புள்ளம் என்னை நெகிழ்த்தியது. நம்மூரில் அத்தனை எளிதில் இப்படி மருத்துவரின் உதவி கிடைக்குமா என்று மனம் எண்ணிப் பார்த்தது. இவரும் இந்த நாட்டுக் குடியுரிமை பெற்றவர்தான்.

'இவர் டாக்டர் ஷேக்ஸ்பியர் - நம்மூர்க்காரர் தான்' என்று டாக்டர் செல்வம் ஒருவரை அறிமுகப் படுத்தியபோது வித்யாசமான பெயரால் புருவம் உயர்த்தினேன்.

அவரது தந்தை ஆங்கிலப் பேராசிரியர் என்பதால் தனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞரின் பெயரை வைத்தாராம். ஆனால் அந்தப் பெயருக்கு ஏற்றவாறு தனக்கு ஆங்கில இலக்கியத்தில் ஈடுபாடோ கவியெழுதும் ஆற்றலோ இல்லை என்று குறைப் பட்ட அவர் தன் மகளுக்கு ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற பாத்திரங்களில் ஒன்றான ஜூலியட்டின் பெயரை வைத்திருப்பதாகவும் அவர் தாத்தாவைப் போலவே ஆங்கிலத்தில் புலமைம் கவிதை எழுதும் திறமும் பெற்றவர் என்று சொன்னார். இதுவரை 1000க்கும் மேற்பட்ட ஆங்கிலக் கவிதைகளை தன் மகள் எழுதி இருப்பதாகவும் சொன்னார். இவர் கலை ரசனையும் நடிப்பார்வமும் மிக்கவர். தமிழ் சினிமாவில் நம்மூரில் ஒரு படத்தில் உப பாத்திரம் ஒன்றில் நடித்திருப்பதை டாக்டர் செல்வம் குறிப்பிட்டார்.

டாக்டர் ஜவஹர் கிருஷ்ணமூர்த்தி தூத்துக்குடிக்காரர். அங்குள்ள பிரபல தொழிலதிபர் திரு பி.எஸ்.கிருஷ்ணமுர்த்தி நாடாரின் மகன். அவர் சிறந்த மேடைப் பேச்சாளரும் கூட. இங்கு சிஷெல்ஸ¤க்கு வந்து சொற்பொழிவுகள் ஆற்றி இ¤ருக்கிறார். 1990ல் சுகாதார அமைச்சகத்தில் பணியில் சேர்ந்த டாக்டர் ஜவஹர்

தற்போது Sychelles Marketting Board என்கிற வர்த்தக நிறுவனத்தில் மருத்துவ அரிகாரியாக உள்ளார். மிக எளிமையானவர். சன்னக் குரலில் - ஆனால் அழுத்தமாக எதிலும் தன் கருத்தை வலியுறுத்தும் தன்மையர். பகவான் இராமகிருஷ்ணரிடம் பெரிதும் ஈடுபாடு மிக்கவர். சீஷெல்ஸ் பற்றி நிறையத் தவகல்களை எனக்குத் தந்தவர். இவரது மனைவி திருமதி சுந்தரி ஜவஹர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். சமூக அறிவியல் பட்டதாரியான இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். ஒரே ஊர், ஒரே தொழில் என்பதால் என் மகள் மங்களநாயகின் நெருங்கிய தோழி. சாயிபாபா பக்தை. சனிக்கிழமை தோறும் மாலை 4.30 - 6 மணி வரை சக பாபா பக்தைகளுடன் சேர்ந்து உள்ளூர் வினாயகர் கோயிலில் சாய்பாபா பஜனை செய்து வருகிறார்.

டாக்டர் பாலா என்கிற பாலகுருநாதன் சிதம்பரத்தைச் சேர்ந்தவர். இவரது பெற்றொர் இருவருமே தமிழ் ஆசிரியர்கள் என்பதால், நல்ல தமிழறிவும் பற்றும் மிக்கவர். அங்கு நான் இலக்கியச் சொற்பொழிவு செய்தபோது மிகவும் ரசித்து அதன்மூலம் என்னிடம் பற்றுக் கொண்டவர். நாங்கள் நாடு திரும்பியபோது அவரும் சென்னையில் வேறு பணியாக உடன் வந்தவர்- சென்னை விமான நிலையத்தில் அதிகாலை 3 மணிக்கு கால் டாக்சி பிடித்து ஏற்றிவிட்டு எங்களை வழியனுப்பி வைத்த அன்பினையும் உதவியையும் மறக்க முடியவில்லை. இவர் 1990ல் இங்கு வந்து, 13 ஆண்டுகள் அறுவை சிகிச்சை நிபுணராக (M.S) பணிசெய்தவர். தற்போது சீஷெல்ஸில் தனி மருத்துவ மனையை நடத்தி வருகிறார். இவரும் சிஷெல்ஸ் குடியுரிமை பெற்றவரே.

இப்படி நிறையத் தமிழர்கள் கல்வித் துறையிலும் மருத்துவத் துறையிலும் சிறப்பாகப் பணி புரிந்து செல்வாக்குடன் வாழ்கிறார்கள்.

-தொடரும்.

நான் கண்ட சிஷெல்ஸ் - 5

நான் கண்ட சிஷெல்ஸ் - 5 - பொருளாதாரமும், வளங்களும்

சிஷெல்ஸ் தீவுக்கூட்டங்கள் பூமத்யரேகையை அண்மித்து இருப்பதால் சில சிறப்பான வசதிகளைக் கொண்டுள்ளன. எந்தவிதமான சூறாவளிக் காற்று, மற்றும் இயற்கை அழிவுகள் இல்லாத சூழல். சென்ற ஆண்டில் உலகையே அச்சுறுத்திய சுனாமியால் இங்கு பாதிப்பு ஏதும் இல்லை. இங்குள்ள மக்கள் உலகின் சலசலப்பான வாழ்க்கை முறையிலிருந்து ஒதுங்கி, அமைதியான சூழலில் வாழ்கின்றனர்.

சுற்றுலாத் துறையும், மீன் வளமும் முக்கிய பொருளாதார அடிப்படைகள். இங்கு வரும் உல்லாசப் பயணிகளில் எண்பது சதவீதம் ஐரோப்பியர்கள். இந்த நாட்டின் அரசியல் அமைதி, சிறந்த வௌ¢ளை மணல் கடலோரங்கள், பவளப் பாறைகள், இயற்கை எழில் மற்றும் செடி, கொடி, பச்சிலைகள், மீன்வளம், அபூர்வ பறவைகள் போன்ற இயற்கை வளங்கள், உல்லாசப் பயணிகளின் சொர்க்கமாய்ப் பலரையும் ஈர்க்கின்றன.

தீவைச் சுற்றிலும் அழகிய ஆழமற்ற கடல். சுமார் ஒரு மைல் தூரத்திலேயே பவழப் பாறைகள் கடல் அலைகளைத் தடுத்து நிறுத்தி விடுகின்றன. எங்கு பார்த்தாலும் நீலக்கடல். இதன் இயற்கையழகில் மயங்கித்தான் இதனை 'ஈடன் தோட்டம்' என்கிறார்கள்.

ஆண்டுக்கு 130,000 பயணிகள் வருகிறார்களாம். அனுமன் சிரஞ்சீவி மலையைச் சுமந்து செல்கையில் சிதறி விழுந்த துண்டுகளால் இத் தீவுக்கூட்டங்கள் அமைந்ததாய் ஒரு ஐதீகம் இங்குள்ளது. அதனால் இப் பிரதேசத்தில் விஷ ஜந்துக்கள் என்றுமே காணப் படுவதில்லையாம். பாம்பு, தேளை இங்கு யாரும் கண்டதில்லையாம்.

` தேங்காய் உற்பத்தியும் மீன் பிடித்தலுமே முக்கியத் தொழில் என்றாலும் முன்பே சொன்னபடி சுற்றுலாப்பயணிகளின் வருகை மூலமே இந்நாடு பெரும் வருவாய் ஈட்டுகிறது. இங்கு கிடைக்கும் 'டியூனா' என்கிற ருசியான மீன் இந்நாட்டின் கடல் செல்வம் எனலாம். இது அந்நாட்டின் பொருளாதாரத்துக்கு வலுவூட்டுகிறது. இந்த மீனைப் பிடிப்பதற்காக, சிஷெல்ஸ் நாட்டுடன் ஐரோப்பிய நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

சிஷெல்ஸின் மற்றொரு இயற்கை தந்த சீதனம் - தீவு முழுதும் உள்ள தென்னை மரங்கள். ஏறக்குறைய 2500 டன் கொப்பரைத் தேங்காய் இங்கு உற்பத்தி செய்யப் படுகிறது. அத்தொடு லவங்கப் பட்டை, சிறிதளவு தேயிலை முதலியனவும் கிடைக்கின்றன. லவங்கப் பட்டையும் பிரிஞ்சு இலைகளும் CINNAMAN என்ற மரத்திலிருந்து கிடைக்கின்றன. இது எல்லா வீடுகளிலும் தானாகவே நம்மூர் புளியமரங்கள் போல தென்படுகின்றன. இது தென்னைக்கு அடுத்த படியான இரண்டாவது பணப் பயிராகும்.

அடுத்து, உலகத்தில் வேறு எங்கும் காணக் கிடைக்காத COCO-DE-MER என்கிற திருவோடு காய்க்கும் பனைமரங்கள் பிராலின் என்கிற இரண்டாவது பெரிய தீவில் 4000 ஆயிரத்துக்கும் அதிகமாக விளைகின்றன. மற்ற தீவுகளிலும் வீடுகளில் கூட இவை தானாக வளர்ந்தாலும் இது நம் சந்தன மரங்கள் போல பொது உபயோகத்துக்குத் தடை செய்யப்பட்டுள்ளது. இது முழுதும் அரசுக்குக்கே உரிமை உடையவை. தனிஉடமை அல்ல. உங்கள் வீட்டில் வளர்ந்ததாலும் அரசின் அனுமதி பெற வேண்டும். மிகப் பெரிய யாழ்ப்பாணத் தேங்காய் அளவில் - மிகப் பெரிய பனம்பழம் போன்ற இதன் காயிலிருந்துதான் திருவோடு தயாராகிறது. இதனால் இதனைத் 'திருவோடு காய்க்கும் திருநாடு' என்று தமிழர்கள் பெருமிதத்துடன் அழைக்கிறார்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழ் வர்த்தகர்களால் காய்ந்த திருவோடுகள் மலிவு விலையில் ஏற்றுமதி செய்யப் பட்டிருக்கிறது. தற்போது அரசுக் கண்காணிப்பில் ஏற்றுமதித் தடைப்பொருளாகப் பாதுகாக்கப் படுவதோடு, அனுமதியுடன் பெறுவதாயின், திருவோட்டுக் காய் ஒன்று ஏறக்குறைய 100 அமெரிக்க டாலர் விலையாகும்.

இங்குள்ள நாணயம் 'சிஷெல்ஸ் ருப்பி' என்று அழைக்கப்படுகிறது. அந்நாட்டு ஒரு ரூபாய் நமது நாட்டின் எட்டு ரூபாய்க்குச் சமம். ஆகவே நமது நாட்டைப் போல எட்டு மடங்கு பொருளாதாரத்தில் அவர்கள் உயர்ந்து நிற்கிறார்கள். விலைவாசி மிக அதிகம். ஆனால் நம் நாட்டுடன் ஒப்பிடுகையில் அது ஒன்றும் அதிகமல்ல. உதாரணத்துக்கு அங்கு ஐந்து ரூபாய்க்கு மூன்று முருங்கைக்காய் என்றால் நம் பணத்தில் ஒரு காய் எட்டு ரூபாய் ஆகிறது. ஆனால் அப்படி நம் பணத்துக்கு மாற்றிப் பார்க்கக் கூடாது என்று எங்கள் மாப்பிள்ளை, நான் அடிக்கடி அப்படிக் கணக்கிட்டு 'அம்மாடி! அவ்வளவு விலையா?' என்று வாய் பிளக்கும் போது சொல்லுவார். 'அது சரிதான். நம்மூரிலும் ஐந்து ரூபாய்க்கு மூன்று முருங்கைக் காய்கள் தானே?' என்று நினைப்பேன். அதனால் அங்கு விலைவாசி அதிகம் என்று சொல்வதும் சரியல்லதான். அங்கு நிறைய சம்பாதிக்கிறார்கள். அதே போல நிறைய- மிகத் தாராளமாகச் செலவும் செய்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் உண்டு. அங்கு சம்பாதிக்கும் பணத்தை டாலராகவோ யூரோவாகவோ தனிப்பட்டவர் மாற்ற முடியாது. சில குறிப்பிட்ட அனுமதிக்கப்படும் செலவினங்களுக்கு மட்டும் சொற்ப அளவில் மட்டும் ஒரு டாலருக்கு சிஷெல்ஸ் ருப்பி ஆறு வீதம் அரசு வங்கி முலம் அனுமதிக்கப் படுகிறது. இல்லையெனில் இரு மடங்கு விலையில் - அதாவது ஒரு டாலருக்கு 13 ரூபாய் கொடுத்து கருப்புச் சந்தையில் வாங்க வேண்டியதுதான். அது எல்லோருக்கும் சாத்யமில்லாததால் தாராளமாகச் செலவிடுவதில் அவர்கள் கவலை கொள்வதில்லை. ஆனால் உலகிலேயே மிக அதிக வாழ்க்கைச் செலவு பிடிக்கும் நாடு என்று சொல்லப்படுகிற இலண்டன் நகரை விட அந்த நாட்டு வாழ்க்கை செலவு அதிகம் என்று அங்குள்ள சிலர் சொல்கிறார்கள்.

-(தொடரும்)

Thursday, January 05, 2006

நான் கண்ட சிஷெல்ஸ் - 4 - அரசியலும் ஆட்சியும்

தமிழ் நாட்டு அரசியலையும் அரசியல்வாதிகளையும் பார்த்து வெறுத்துப் போயிருந்த எனக்கு சிஷெல்ஸின் அரசியல்வாதிகளைப் பார்க்கும் வாய்ப்பும் அங்குள்ள அரசியல் பற்றி அறியவும் நேர்ந்தபோது வியப்பாக இருந்தது.

அங்கு சென்ற மறுநாள் நான் எங்கள் மாப்பிள்ளை திரு ராஜசுந்தரம் அவர்களுடன் கடைவீதியில் சென்று கொண்டிருந்தபோது எதிர்ப்பட்ட ஒருவர், நின்று அவரிடம் நலம் விசாரித்தார். அவர் பெர்முடா கால்சட்டையும் டீ ஷர்ட்டும் கையில் பழம் மற்றும் சில பொருள்கள் கொண்ட பையுடன் மிக எளிமையாக இருந்தார். அவர் எங்களைக் கடந்ததும் மாப்பிள்ளை சொன்னார், "மாமா, இவர் யார் தெரியுமா? இவர் முன்னாள் அமைச்சர். இங்கு நம் ஊர் மாதிரி அரசியல்வாதிகள் பந்தாவெல்லாம் செய்ய மாட்டார்கள். தாங்களே நேரில் சென்று மக்களோடு மக்களாகக் கலந்து நின்று கடைகளில் பொருட்களை வாங்குவார்கள். மக்களிடம் நலம் விசாரிப்பார்கள். ஜனாதிபதி உட்பட எல்லா அமைச்சர்களும் யார் அழைத்தாலும் விருந்துக்குச் சென்று கௌரவிப்பார்கள். அவ்வளவு எளிமை. அது மட்டுமல்ல. இவர்கள்- ஜனாதிபதி உட்பட, தன் காரைத் தானே ஓட்டி வருவார்கள். முன் பின்னாக கார்கள் பவனி வருவதையோ, ஜனாதிபதி வருவதற்காக போக்குவரத்தைத் தடை செய்வதையோ பார்க்கமுடியாது. சிவப்புச் சுழல்விளக்கு, சைரன்ஒலி எல்லாம் அரசு நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது மட்டும்தான். மற்ற வேளைகளில் ஜனாதிபதி போவதே தெரியாது" என்றார்.

"பாதுகாப்புப் பிரச்சினை இல்லையா?" என்று நான் கேட்டேன்.

"இங்கு ஜனாதிபதிக்கு மட்டும்தான் பாதுகாப்பு. நம்மூர் போல யாரோ பொம்மைத் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினான் என்பதற்காக சகட்டு மேனிக்கு யாருக்கு வேண்டு மானாலும் இசர்ட் பிரிவு பாதுகாப்பு தருவது போல இங்கு கிடையாது" என்றார்.

நம்மூரில் சாதாரண வட்டம், ஒன்றியம் தலைவர்களே செய்கிற பந்தா, படாடோபம், ஆர்ப்பாட்டம் எல்லாம் நினைவுக்கு வந்து மனதுக்குள் அலுத்துக் கொண்டேன்.

"அதோடு இங்கு ஜனாதிபதியையே 'மிஸ்டர் பிரசிடென்ட்' என்று நேரில் விளித்துப் பேச முடியும்" என்றார். நம்மூரில் அம்மாவையோ அய்யாவையோ பெயர் சொல்லிக் கூட்டத்திலாவது பேசிவிட முடியுமா? ரத்தத்தின் ரத்தங்களும் உடன்பிறப்புகளும் கிழித்துவிடமாட்டார்களா? சிஷெல்சில் அரசியல்வாதிகளுக்கு ஜால்ரா போடுபவர் இல்லை. சின்ன நாடாக இருந்தாலும் அவர்கள் அரசியல்வாதிகளைத் தெய்வம் ஆக்குகிற அளவுக்கு சுயசிந்தனை அற்றவர்கள் அல்ல.

ஊழல் உலகமயமாகி எல்லா நாடுகளிலும் வியாபித்திருப்பதும் ஊழலை ஆண்டவனே வந்தாலும் இனி எங்கும் தடை செய்ய முடியாது என்பதும் நிதர்சனமாக உள்ள நிலைலையில் இங்கு ஒரு நடிகர் ஊழலை ஒழிப்பேன் என்று ஆட்சி கோருகிற பிள்ளை விளையாட்டை இங்குதான் பார்க்கிறோம். ஊழல் இல்லாத உடோப்பிய கனவு சாத்யமா என்று நாம் விதிர்க்கையில் சாத்யமே என்பதை சிஷெல்ஸில் அறிந்தேன்.

சிஷெல்ஸ் நாட்டு அரசியலும் அரசியல்வாதிகளும் நேர்மைக்கு எடுத்துக்காட்டாக அமைந்திருப்பவர்கள் என்று சொன்னார்கள். அங்கு ஊழலே இல்லையாம். அதற்கு அவர்கள் சொன்ன காரணம் சிந்திக்க வைத்தது. மந்திரிகள், அதிகாரிகள் அனைவருக்கும் பணத்தேவை குறைவு. பந்தா, பகட்டு இல்லை. அவர்களது தேவைக்கு அரசாங்கமே கொடுத்துவிடுகிறது. பணம் மட்டுமே வாழ்க்கையில்லை என்பதை அந்நாட்டில் அனைவருமே உணர்ந்திருப்பதுதான் ஊழல் இல்லாததற்குக் காரணம் என்கிறார்கள். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வெறி அங்கு இல்லை. சிறிய நாடு. பணப்புழக்கம் அதிகம் இல்லை.

அரசியல்வாதிகள் எங்கேயாவது 'கை' வைத்தாலும் உடனே தெரிந்துவிடும். அங்குள்ள மக்களும் நமக்கென்ன என்று இருப்பவர்கள் அல்ல. மந்திரிகள், அதிகாரிகள் யார் மீது சந்தேகம் எழுந்தாலும் பொது இடத்தில் வைத்தே நேருக்குநேர் கேட்டுவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது. மக்களது இந்தக் குண இயல்பும் ஊழலுக்கு எதிரான கொள்கையை உருவாக்கி இருக்கிறது.

மந்திரிகளையும் அதிகாரிகளையும் எந்தப் பிரச்சினை என்றாலும் எளிதாக அணுகலாம். உடனடியாகத் தீர்வு கிடைத்துவிடும். "உங்கள் வீட்டுக் குழாயில் தண்ணீர் வரவில்லை என்று ஜனாதிபதிக்குப் போன் செய்தால் போதும். உடனே அவர் குடிநீர் வழங்கும் துறையின் தலைவருக்குப் போன் செய்து உடனே கவனிக்க ஆணையிடுவார்" என்றார் அங்கு அரசுமருத்துவராகப் பணிபுரியும் தூத்துக்குடியைச் சேர்ந்த டாக்டர் ஜவஹர். 'இது அடிப்படையில் கம்யூனிசச் சார்புள்ள நாடு. எல்லோரும் சமம் என்கிற சோஷலிசக் கோட்பாடு உண்மையிலேயே செயல் படுத்தப்படும் நாடு. இங்கு பாரபட்சமில்லை. எல்லோருக்கும் ஒரே மாதிரியான நடவடிக்கைதான்" என்றார் அவர்.

தஞ்சாவூரைச் சேர்ந்த டாக்டர் செல்வம் என்பவர் ஜனாதிபதியின் பிரத்தியேக மருத்துவர். அவர் சொன்னார், "முன்பெல்லாம் - ஜனநாயக ஆட்சி ஏற்படும் வரை மக்களுக்கு அவ்வளவாக விழிப்புணர்வு இல்லை. எல்லோரது வீட்டிலும் பச்சிலைகள் வளர்ப்பார்கள். தலைவலி, ஜுரம் என்றால் கைவைத்தியம்தான். எல்லாவற்றிற்கும் பச்சிலைதான். வேலை செய்துவிட்டு மாலை வீடு திரும்பினால் வெந்நீரில் ஒரு பச்சிலையைப் போட்டு ஊறவிட்டுக் குளி¤ப்பார்கள். உடம்பு வலி போய்விடும். இப்போது அப்படி இல்லை. பொது மருத்துவ மனைகள் ஏற்பட்டு எல்லோருக்கும் இலவச வைத்தியம் என்றானதும் தலைவலி என்றால் கூட மருத்துவ மனைக்கு வந்து விடுவார்கள். நம்மைப் போல மருந்துக் கடையில் மாத்திரை வாங்கிப் போட்டுக் கொள்ள மாட்டார்கள். எதற்கெடுத்தாலும் ஊசி போடச்சொல்வார்கள். அது தலைவலியாக இருந்தாலும்! டாக்டர்கள் 'இதற்கெல்லாம் ஊசி வேண்டாம்' என்று சொல்லிவிட முடியாது. நேரே ஜனாதிபதியிடம் போய்விடுவார்கள்" என்றார்.

எக்ஸ்ரே மற்றும் ஸ்கேன் மையத்தில் பணியாற்றும் நிபுணரான மயிலாடுதுறையைச் சேர்ந்த திரு பாபு என்பவர் "எங்கள் யூனிட் எப்போதும் பரபரப்புடன் பணியாற்றும் அவசரகாலப் பிரிவாகும். எல்லோருக்கும் எக்ஸ்ரேயும் ஸ்கேனும் இங்கு இலவசம். மருத்துவர்கள் சொல்ல வேண்டுமென்பதில்லை. நோயாளிகளே மருத்துவரிடம் சொல்லி சோதனை செய்து கொள்ள வருவார்கள். தவிர்க்கமுடியாது" என்றுசொன்னார்.

"மக்களுக்கு அவ்வளவு வசதியும் உரிமையும் இங்கே உள்ளது".

சோஷலிச உணர்வு எல்லோருக்கும் இருப்பதுடன் மக்களுக்குப் பொறுப்புணர்ச்சியும் அதிகம். இங்கே வேலை நிறுத்தம் கதவடைப்பெல்லாம் கிடையாதாம். கற்பழிப்பும் எங்கும் இல்லை. மரணதண்டனையும் இந்த நாட்டில் கிடையாது.

ஆரம்பத்தில் ராணுவ ஆட்சி, பிறகு பலகட்சி ஆட்சி முறை என்று இருந்தாலும் 1977 முதல் அமெரிக்கப் பாராளுமன்ற முறையிலான ஜனநாயக ஆட்சி ஏற்பட்ட பின் முறையான தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். ஐந்தாண்டுக்கு ஒருமுறை தேர்தல். ஜனாதிபதி நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப் படுகிறார். அவர் பிரதமரையும் மந்திரிகளையும் நியமிப்பார். ஆனால் அதற்குப் பார்லிமெண்டின் ஒப்புதலைப் பெற்றாக வேண்டும். இலங்கையில் சென்றமுறை நடந்தது போல ஜனாதிபதி ஒரு கட்சியும் பிரதமர் ஒருகட்சி அமைந்து விடவும் இதனால் நேர்வதுண்டு. மாற்றுக் கட்சி உறுப்பினர்கள் மெஜாரிட்டியாக இருந்து விட்டால் இப்படி அமைந்துவிடும்.

சிஷெல்ஸில் மூன்று அரசியல் கட்சிகள் உள்ளன. ஜனநாயகக் கட்சி (Democratic party), மக்கள் கட்சி (Seychelles People's progrssive front), தேசீயக்கட்சி (Seychelles National party) ஆகியவை அவை. இப்போது ஆளும் கட்சியாக இருப்பது SPPF என்னும் மக்கள் கட்சி. எதிர்க் கட்சியாக இருப்பது SNP என்னும் தேசீயக் கட்சி. இங்கு தன் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள அதிமுக கடும் போட்டியைச் சமாளிக்க வேண்டியிருப்பது போல அங்கே ஆளும் கட்சி, நம் திமுக போல கடும் போட்டியில் இருக்கும் எதிர்க்கட்சியான தேசீயக் கட்சியுடன் கடுமையாக மோதவேண்டிய நிலையில் உள்ளது. இம்முறை ஜெயிக்க முடியாது போனால் இன்னும்15 ஆண்டுகளுக்கு ஆட்சியைப் பிடிக்கமுடியாது போய்விடும் என்கிற நெருக்கடியில் மக்கள் கட்சி உள்ளது. இதன் தலைவர் ரெனே என்பவர்தான் இராணுவப் புரட்சி செய்து முன்பு ஆட்சியைப் பிடித்தவர். இப்போது மீள்வாரா என்பது சீஷெல்சில் பரபரப்பாகப் பேசப்படும் விஷயம். ஏனெனில் சமீபத்தில் அங்கு தேர்தல் வருகிறது.

(தொடரும்)

நான் கண்ட சிஷெல்ஸ் - 3 - வரலாறு

கி.பி. 1770ஆம் ஆண்டுவரை இத்தீவை மனிதர்கள் மிதித்ததில்லை. ஆங்கிலேயர்கள் கண்ணில் படாத பூமி ஏதாவது உண்டா? இந்தியாவைப் போலவே காலனி ஆதிக்கத்திற்கு அடிமைப்பட்டுக் கிடந்திருக்கிறது சிஷெல்ஸ். சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் புதுச்சேரிக்கும் இந்தத் தீவுக்கூட்டத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கிறது.

பிரஞ்சுக்காரர்கள் புதுவையில் கப்பல் கட்டும் தொழிலை ஆரம்பித்து விட்டு, அதற்கான மரங்களைத் தேடி சிஷெல்ஸ் வந்திருக்கிறார்கள். அங்கிருந்து மரங்களைக்அ கொண்டு வந்த வேலையைச் செய்தவர்களில் தமிழர்களும் உண்டு. முதலில் தொழில்ரீதியாக வந்துபோன தமிழர்கள் 1770ஆம் ஆண்டில்தான் முதன்முறையாக அங்கு குடியேறி இருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வந்த முதல் கப்பலில், எந்த ஆண்டு, யார் யார் எந்த ஊரிலிருந்து வந்தார்கள் என்ற தகவலை நாட்டின் ஆவணக்காப்பகத்தில் பார்க்கலாம்.

இந்நாடு முதலில் பிரஞ்சுக் கட்டுப்பாட்டிலும் பின்னர் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டிலும் இருந்தது. ஒரு சிலகாலம் மொரீஷியஸ¤டன் இணைந்த ஆட்சியிலிருந்து, 1903ல் ஆங்கிலேயரின் நேரடி ஆட்சியின் கீழ் வந்தது. 1976ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது.

1977ஆம் ஆண்டு ஜேம்ஸ் மான்கம் என்பவர் முதல் அதிபரானார். 1977ல் அவர் வௌ¤நாடு சென்றிருந்தபோது அவரின் கீழ் பொறுப்பில் இருந்த ஆல்பர்ட் ரெனே என்பவர் பாகிஸ்தான் முஷாரப் போல அதிரடிப் புரட்சி செய்து ஆட்சியைப் பிடித்தார். அதுமுதல் தனிக்கட்சி ஆட்சி நாடாக இருந்தது - 1993ல் பலகட்சி நாடாக மாறி, மக்கள் கருத்துக் கணிப்பின்படி புதிய அரசியல் சட்டம் வகுக்கப்பட்டு பொதுத் தேர்தலுக்குப் பின் மக்களாட்சி அமுலுக்கு வந்திருக்கிறது.

போர்ச்சுகல் நாட்டுக் கடலோடிகளே முதலில் இத் தீவுக்கூட்டத்தைக் கண்டறிந்தார்களாம். கேரள மாநிலத்தின் குஞ்சலியும் கடலாடிகளும் இந்துமாக் கடலில் ஐரோப்பியப் படைகளையும் கடற்கொள்ளையரையும் தாக்கியபோது, கடற்கொள்ளையர் இங்கு வந்து தமது விலையுயர்ந்த பொருட்களைப் புதைத்தமை அண்மைக்கால அகழ்வாராய்ச்சிகள் மூலம் தெரிகிறது.

1770ல் பதிவான முதற் குடியேற்றத்தின் போது 15 வௌ¢ளையர்கள், 7 கருப்பின அடிமைகள், 5 தமிழர்கள் மாஹே தீவுக்கு வந்தனர். அவர்களின் வழித்தொன்றல்களே தற்போதைய 'சிஷெல்வா' என்றழைக்கப்படும் சிஷெல்ஸ் குடிமக்கள்.

இரண்டு கோடி ஆண்டுகளுக்கு முன் 'கோண்டுவானா' என்ற கண்டம் இருந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இக்கண்டம் ஆப்பிரிக்காவிலிருந்து பெர்சியா, இந்தியா, கீழே ஆஸ்திரேலியா உள்ளடக்கியதாக இந்தியப் பெருங்கடல் முழுதுமாகப் பரந்திருந்திருக்கிறது. பின்னர் அவை துண்டு துண்டாக உடைந்து பிரிந்து இன்றுள்ள நிலையில் அமைந்தன. 10000 ஆண்டுகளுக்கு முன் சிஷெல்ஸ் தீவுகள் இந்தியா, ஆப்ரிக்கா விலிருந்து துண்டுகளாகி ஒரு கூட்டமாய் அமைந்தன. இது- இந்தியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாட்களில் காணப்படும் தாவரங்கள் கிரானைட், மற்றும் பவழப் பாறைகள், சில விலங்குகள், பறவைகள் சீஷெல்ஸிலும் இன்று காணப் படுவதிலிருந்து நிரூபணமாகிறது. நான் சீஷெல்ஸ் வந்த மறுநாளே நடைப் பயிற்சிக்காக மகள் வீட்டிலிருந்து காலையில் அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்றபோது வழியில் தென்பட்ட தாவரங்கள், நாய்கள், பூனைகள், சேவல்கள், மணிபுறாக்காள், தேன்சிட்டுகள் தமிழ் நாட்டில் இருப்பதே போன்ற உணர்வை ஏற்படுத்தின. அதிகாலை கொக்கரக்கோ என உரத்துக் கூவி எழுப்பிய சேவலும், வீட்டுக்கு வௌ¤யே தத்திப் பறந்து இரை பொறுக்கிய மணிப் புறாக்களும், பூச்செடிகளில் தேன் உறிஞ்சிய தேன் சிட்டுகளும் வேற்று நாட்டுக்கு வந்திருக்கிறோம் என்பதை நம்பவிடாதபடி செய்தன. இங்கு என் வீட்டில் உள்ள அத்தனை குரோட்டன்களும். செம்பருத்திச் செடிகளும், கரிசிலாங் கண்ணி, கீழானெல்லி, அம்மாம்பச்சரிசிப் பச்சிலை - எல்லாம் பாதையின் இரண்டு பக்கமும் தென்பட்டன. சாலை ஓரம் வேப்ப மரங்களும் கொய்யா மற்றும் மாமரங்களும் இங்குள்ளவை போலவே இருந்தது வியப்பளித்தது. வழியில் மண்ணில் புதைந்து துருத்திக் கொண்டிருந்த நத்தை ஓடுகளும் கிளிஞ்சல்களும் கூட இங்குள்ளவை போலவே இருந்தன.

300 ஆண்டுகளுக்குமுன் கண்டறியப்பட்டு, 180 ஆண்டுகளுக்கு முன்தான் மனிதக் குடியேற்றம் நிகழ்ந்திரூக்கிறதே - ஏன் இத்தனை தாமதம்? ஏன் இன்னும் முன்னதாகவே இத்தீவுகள் கண்டுபிடிக்கப் படவில்லை? ஏனென்றால் அருகே 1000 மைல்களுக்கு நிலம் ஏதுமில்லாததும் அதிவேக எந்திரப் படகும் ஆப்ரிக்காவிலிருந்து அங்கு போக 3 நாட்கள் பிடிக்கும் என்பதாலும் அவ்வளவு தொலைவிலிருந்தவை கண்களில் படவில்லை.

இத்தீவுகள் பிரிட்டிஷாரின் வசம் இருந்தபோது பதினான்காம் லூயி காலத்தில் பிரிட்டனின் நிதிமந்திரியாக இருந்தவர் Viscount Jeen Moreen de Seychelles என்பவர். அவரை கௌரவிப்பதற்காக அவரது பெயரை இத் தீவுகளுக்கு வைத்தார்களாம்.

(தொடரும்)

நான் கண்ட சீஷெல்ஸ் - 2 - மாஹே

சென்னையிலிருந்து எங்களுடன் எங்கள் மாப்பிள்ளை-சீஷெல்ஸில் வழக்கறிஞராக இருப்பவர் உடன் வந்ததால் சென்னையிலும் துபாயிலும் கஸ்டம்ஸ் சோதனை மற்றும் இதர சடங்குகள் எல்லாவற்றையும் அவர் பார்த்துக் கொண்டதால் எங்களூக்கு முதன்முறை பயணம் செய்வது போன்ற பதற்றமோ தடுமாற்றமோ இல்லை. சீஷெல்ஸ் விமான நிலையம் மிகச் சிறியது. சுத்தம் சூழ்நிலை கூட நம்மூர் ரயில்வே நிலையம் போல் பராமரிப்பு சுமாராகத்தான் உள்ளது. என்றாலும் கெடுபிடியெல்லாம் எங்கும் ஒரே மாதிரிதான். கஸ்டம்ஸ் சோதனை முடிந்து தற்காலிக விசாவுக்கு மனுச்செய்து 15 நாட்களுக்கு அனுமதி பெற்றோம். சீஷெல்ஸ் தீவுக்கு யார் வேண்டுமானாலும் பாஸ்போர்ட் இருந்தால் போகலாம். எங்கள் விஷயத்தில் 'யாராவது உறவினர் அழைப்பின் பேரில் வந்தால் முன்னதாகவே விசாவுக்கு மனுச் செய்யாமல் இறங்கியதும் மனுச் செய்து பெற்றுக் கொள்ளலாம்', என்ற விதிப்படி பெற்றோம். 15 நாட்களுக்குப் பின் மீண்டும் புதுப்பிக்க மனுச்செய்தால் 3 மாதங்களுக்கு நீட்டிப்பார்கள்.

விமான நிலையத்துக்கு என் மகள் - அங்குள்ள அரசு கல்வி நிறுவனத்தில் ஆசிரியராகப் பணி புரிபவர் - காருடன் வரவேற்கக் காத்திருந்தார். ஆனல் அவருக்கு முன் மழை எங்களை வரவேற்றது. வௌ¤யில் வந்ததும் நம்முர் யூனிபாரம் போடாத போர்ட்டர் போல் - அரைக் கால்சட்டையும், டி ஷர்ட்டும் ஹவாய் செருப்புமாய் மிகச் சாதாரணமாய்க் காட்சி தந்த ஒருவரை, பெரிய தொழிலதிபர் என்று அறிமுகப்படுத்தினார்கள். ஒரு பெரிய தொழில் அதிபருக்கான பந்தா, படாடோபம் சிறிதுமற்ற அந்த எளிமையை என்னால் நம்ப முடியவில்லை. பிறகு காரில் ஏறிய பின்தான் விளக்கினார்கள் - அதுதான் சீஷெல்சின் தேசீய உடை என்றும் பிரசிடெண்ட் முதல் சாதாரணத் தொழிலாளிவரை அந்தப் பெர்முடா காற்சட்டையும் டி ஷர்ட்டும் அலுவலகத்திலும் அணிவார்கள் என்று. கொஞ்ச தொலைவு போனதும் மழை பெய்த சுவடே இல்லை.

அதற்கும் விளக்கம் சொன்னார்கள். அதுதான் சீஷெல்ஸின் சீதோஷ்ண நிலையாம்.

எப்போது வேண்டுமானாலும் மழை தூறும். அடித்துப் பெய்வதில்லை. குளிராது. எப்போதும் வெம்மையாய் இருக்கும் என்பதைப் பிறகு அனுபவத்தில் கண்டேன். ஏற்றமும் இறக்கமுமான கொண்டை ஊசிவளைவுகள் அதிகம் கொண்ட மலைப் பாதையில் எதிரே சீறிவரும் வாகனங்களில் மோதாமல் ஒலிப்பானை எழுப்பாமலே லாகவமாய் வளைந்து போக்குவரத்து வரத்து விதிகளை சற்றும் மீறாமல் அநாசயசமாய் அங்கு கார் ஓட்டுவதைக் கண்டு வியந்தேன்.

விமான நிலையத்திலிருந்து 15கி.மீ பயணம் செய்து மகள் வீட்டை அடைந்தோம். சீஷெல்ஸ் முழுவதுமே மலைப்பகுதிகள் தான். நமது ஊட்டி கொடைக்கானல் போல மஞ்சு தவழும் மலைகள். எங்கும் பசுமை. கண்ணுக்கு இதமான இயற்கைக் காட்சிகள்.

எங்கு போனாலும் கூடவே சலசலத்து ஓடி வரும் மலையருவி என்று முதல் நோக்கிலேயே அந்தத் தீவு மனதை மயக்கியது. வந்திறங்கியது முதல் இரவு வரை மகள், மாப்பிள்ளையின் நண்பர்கள் குடும்பம் குடும்பமாய் வந்து எங்களை வரவேற்றதும் நலம் விசாரித்ததும், ஒரு நாள் தங்கள் வீட்டுக்கு விருந்துண்ண வரவேண்டும் என்று அழைத்ததுமான அந்த நாட்டுப் பண்பு கண்டு நெகிழ்ந்தோம்.

சீஷெல்ஸ் என்பது 116 சிறுசிறு தீவுகள் கொண்ட தீவுக்கூட்டம். 130 லட்சம் சதுர கி.மீ பரப்பில் அமைந்துள்ள இத்தீவுக் கூட்டத்தில் 30 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாசம் செய்கிறார்கள். இதில் மிகப்பெரிய தீவு மாஹே என்பதாகும். இது 27 கி.மீ நீளமும் 11 கி.மீ அகலமும் உடையது. சீஷெல்ஸின் தலைநகரான விக்டோரியா இதில்தான் உள்ளது. துறைமுகமும், விமான நிலையமும் தலைநகரில்தான் உள்ளன. சீஷெல்ஸின் மொத்த நிலப்பரப்பே 455 சதுர கி.மீ தான். இதில் 49 சதவீதம் பாதுகாக்கப்பட்ட அல்லது தேசீய பூங்கா. கணக்கில் அடங்கா தாவரங்கள் மற்றும் ஜீவராசிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன. மொத்த மக்கள் தொகை 85 ஆயிரம்.

இதில் 72 ஆயிரம் பேர் மாஹே தீவில் வசிக்கின்றனர். இதில் இந்தியர் 8000 பேர். அதில் தமிழர்கள் சரிபாதி. இவர்களில் 800பேர் மயிலாடுதுறை மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து வந்திருப்பவர்கள். முதன் முதலில் அங்கு வேலைக்காகவோ, வியாபாரம் செய்யவோ சென்றவர்கள் பின்னர் தங்கள் உறவினர்கள் வேண்டியவர்கள் என்று அழைத்து வந்து பெருகி விட்டவர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்வரை மனிதசஞ்சார மற்றிருந்த

இங்கு முதலில் மனிதர்கள் வந்ததெப்படி? அதற்கு சீஷெல்ஸின் வரலாற்றை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும்.

(தொடரும்)