Tuesday, November 22, 2005

நினைவுத் தடங்கள் - 36

எனது கலை ரசனைக்கு சிறுவயதில் நான் பார்த்த தெருக்கூத்து மற்றும் நாடகங்களும் காரணம். அந்த வயதில் நான் நாடகங்களைக் காணும் வாய்ப்பு எங்கள் எதிர் வீட்டில் இருந்த 'தொந்தி மாமா'வால் நேர்ந்தது. கனத்த பாரியான உடம்பு; ஒரு சின்னக் குதிர்போல இருப்பார். பெருத்த தொந்தி; தலையில் சின்ன மடக்கைக் கவிழ்த்தது போல வட்டமாய் நரை கலந்த முடி; மூக்கினடியில் காய்ந்து கருமஞ்சளில் காட்சி தரும் பொடி; எப்போதும், 'சவரம் செய்து கொண்டு ஒரு வாரம் ஆகியிருக்கும்' என்று எண்ண வைக்கும் முகவாய்; பெருத்த தொந்தி வயிற்றில் தொற்றிக் கொண்டு முழங்காலுக்குக்குச் சற்று கீழே தொங்கும் நாலு முழ வேட்டி; இடது தோளி¢ல் மூன்று முழத்துண்டு. இதுதான் தொந்தி மாமா. அவரது வித்தியாசமான பெரிய தொந்தியை உத்தேசித்தே எல்லோரும் அவரை 'தொந்திப் பிள்ளை' என்று அழைத்தார்கள். வயது அப்போதே அறுபதுக்கு மேலிருக்கும்.

அவருக்குக் குழந்தைள் கிடையாது. வெகு தாமதத் திருமணம் என்று எங்கள் அம்மா சொல்வார்கள். அவரது மனைவி அம்மாவுக்கு நெருங்கிய தோழி. அவர்களுக்கு நாங்கள்தான் குழந்தைகள். அம்மா கைவேலையாய் இருக்கும்போது எங்களை அவர்களிடம்தான் கொண்டு விட்டுவிடுவார்கள். மாமாவுக்கு நானும் என் தம்பியும் செல்லம். சிறு குழந்தைகளாய் இருக்கையில் எங்கள் இருவரையும் - என் தம்பியைத் தோளிலும் என்னை இடுப்பிலுமாகச் சுமந்து திரிவார். அவர் மடியில் எப்போதும் வறுத்த பாசிப் பயறோ வெவித்த மொச்சையோ எங்களுக்காக இருக்கும்.

கொஞ்சம் வளர்ந்து நடக்கிற வயதில் அவர் எங்களைப் பக்கத்து ஊரில் நடக்கும் தெருக்கூத்துகளுக்கும் நாடகங்களுக்கும் அழைத்துப் போவார். அப்படி அவர் ஒரு முறை அழைத்துப் போனது அரிச்சந்திரன் நாடகத்துக்கு. அப்பா எங்களை அப்படியெல்லாம் இரவில் அனுப்ப மாட்டார்கள். ஆனால் மாமாவின் பாதுகாப்பில் நம்பிக்கை கொண்டு அனுப்புவது உண்டு. நாடகம் கிராமங்களில் இரவு பத்து மணிக்கு மேல்தான் துவங்கும். வேலைக்குப் போனவர்கள் எல்லாம் வீடு திரும்பி ராத்திரி சாப்பாடு முடிந்து சாவகாசமாய்த்தான் நாடகம் ஆரம்பிக்கும். அப்போது அரிச்சந்திரன் வேஷத்துக்குப் புகழ் பெற்றிருந்தவர் சோழமாதேவி என்ற ஊரைச் சேர்ந்த நடேசன் என்பவர். மதனத்தூர் குண்டு என்பவர் பபூன் வேஷக்காரர். ராஜபார்ட் - சோழமாதேவி நடேசன், பபூன் - மதனத்துர் குண்டு வருகிறார்கள் என்றால் நாலா பக்கத்துக் கிராமங்களிலிருந்தும் ஜனக்கூட்டம் நெரியும். மேடைக்கு அருகில் இடம் பிடிக்க இரவு ஏழு மணிக்கே போட்டியாக இருக்கும்.

சோழமாதேவி நடேசனுக்கு அற்புதமான குரல் வளம். ஆளும் உயரமாய் கனத்த கட்டுமஸ்தான உடல் கொண்டவர். ராஜபார்ட்டுக்கு ஏற்ற உடல் அமைப்பு. ஜிகினா உடையும், பின்தோளில் முதுகின் பின்னே தொங்கும் நீண்ட வண்ணச் சால்வையும் பெட்ரோமாக்ஸ் ஒளியில் தங்கமாய் ஜொலிக்கும் கிரீடமும் வளைந்த காலணியுமாய் அவர் எட்டுக் கட்டை சுதியில் பாடிக் கொண்டே மேடையில் பிரவேசிப்பது கண் கொள்ளாக் காட்சியாகும். கே.பி.சுந்தராம்பாளைப் போல கம்பீரமான கனத்த குரல். கம்பீரமான ரிஷபம் ஒன்று ஹ¥ங்காரம் செய்கிற மாதிரி இருக்கும் அவர் மேடையில் பாடும்போது. அரிச்சந்திர நாடகம் மூன்று நாட்கள் விடியவிடிய நடக்கும். அவர் மயான காண்டத்தில், சுடலை காப்பவனாகத் தோன்றி சந்திரமதியை நோக்கி கேதாரகௌளையில் 'யாரடி கள்ளி நீலீ......' என்று எட்டுக் கட்டையில் முழங்குவது ஒரு பர்லாங்கு தொலைவுக்குக் கேட்கும். சுருதி சுத்தமான அந்த சங்கீதம் என்னை அந்தச் சின்ன வயதிலேயே உருக்கி சங்கீதத்தில் ரசனையை ஏற்படுத்தியது. அந்தக் காம்பீர்யம் மிக்க குரல் இதை எழுதும்போதும் - ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்குப் பின்னேயும் காதில் ரீங்காரமிடுகிறது.

இப்படி பத்து வயதுக்குள் பல தடவை தொந்தி மாமா எங்களை அழைத்துப் போனது எனக்கு நாடகத்திலும் இசையிலும் ஆர்வத்தை உண்டாக்கியது. பின்னாளில் கல்லூரியில் படிக்கும்போது விடுதிவிழாவுக்கு நாடகம் எழுதித்தரவும் கோடைவிடு முறையில் சிறுவர்களைக் கொண்டு ஓரங்க நாடகங்கள் தயாரித்து உள்ளூரில் நடைபெறும் நாடகங்களுக்கிடையே நடத்தவும் சிறுவயதில் பார்த்த நாடக ரசனையே காரணமாக இருந்தது. இதற்கு வாய்ப்புண்டாக்கித் தந்த தொந்தி மாமா நினைவில் என்றும் இருப்பார்.

நாடகத்துக்கு மட்டுமில்லாமல் பக்கத்து ஊர் கோயில் திருவிழாக்களுக்கும் எங்களை அவர் அழைத்துச் சென்றிருக்கிறார். எங்கள் ஊரிலிருந்து மூன்று மைல் தூரத்தில் ஒரு பாடல் பெற்ற ஸ்தலம் உள்ளது. இன்று இராஜேந்திரப் பட்டணம் என்று அழைக்கப்படும் திருஎருக்கத்தம்புலியூர் தேவாரப்பாடல்களுக்குப் பண் அமைத்த ஒரு தாழ்ந்த குலத்துப் பெண் பிறந்த ஊர். அங்கு ஆண்டு தோறும் மாசிமாதத்தில் பத்து நாட்கள் - கொடியேற்றம் நடந்து தேரும் தீர்த்தவாரியும் எங்களூரில் ஓடும் ஸ்வேத நதி என்கிற வெள்ளாற்றில் நடைபெறும். அந்தப் பத்து நாளும் மாமா எங்களை - ஐந்து வயதும் மூன்று வயதுமாய் இருந்த என்னையும் என் தம்பியையும் மூன்று மைலும் இடுப்பிலும் தோளிலும் சுமந்து அழைத்துப் போய்க் காட்டி நள்ளிரவில் பத்திரமாய் அவர் அழைத்து வந்ததை இப்போது நினைத்தாலும் மனம் நெகிழ்கிறது.

சொந்தமாகத் தனக்கென்று பிள்ளை இல்லாத குறையை இப்படியுமா தீர்த்துக் கொள்ள முடியும் என்று மனம் உருகுகிறது. என்னுடைய ரசனைக்கு படிப்பறிவில்லாத தொந்திமாமாவும் காரணமாய் இருந்தார் என்பதை என் நினைவுத் தடங்களிலிருந்து எண்ணிப் பார்க்கிறேன். நான் படித்து வேலைக்கு வந்து அவருக்கு ஏதாவது செய்து அவரது பாசத்துக்கும் என்னுள் ரசனையை அவரையும் அறியாமல் ஏற்படுத்தியமைக்கும் நன்றிக் கடன் செலுத்தமுடியாது போனது உறுத்தலாக உள்ளது. பின்னாளில் நான் எழுத்தாளனாய் ஆன நிலையில் அந்தக் கடனை என் நாவலில் ஒரு முக்கிய பாத்திரமாய் அவரை உலவ விட்டும், 'தமிழரசி' மாத இதழில் 'தொந்தி மாமா சொன்ன கதைகள்' என்ற தலைப்பில் தொடராக எழுதிப் பிறகு அது நூலாக வந்தபோது அந்நூலை அவருக்கு சமர்ப்பணம் செய்தும் ஒரளவு தீர்த்தேன். ஆனால் அவர் இறந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த எனக்குத் தகவல் கிடக்காது போன சோகம் மட்டும் இன்னும் தீராது தங்கியுள்ளது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, November 09, 2005

உவமைகள் - வர்ணனைகள் 45

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 45:

மாலன் படைப்புகளிலிருந்து:

1. ராஜசேகர் முகத்தில் லட்சங்களைச் சுவாசிக்கிற களை தெரிந்தது. ஒழுங்காக வாரி இருந்தான். கண்களில் பணம் பண்ணும் சாமர்த்தியம் சிகப்பாக ஒளிர்ந்தது. இவனை ஒரு துரும்பைப் பார்க்கிற மாதிரி பார்த்தான்.

- 'bait' கதையில்.

2. நிமிர்ந்து பார்த்தான். முதலில் என்னைப் பார் என்னும் மூக்கு. சிரிப்பதற்கில்லை இது சாப்பிட மட்டும்தான் என்பது போல் சிறிதாய்க் கீறின உதடுகள். மரத்தில் செதுக்கினாற்போல் இறுகிய முகம். முகத்தில்தான் எத்தனை வகை! உழுது பாத்தி கட்டின மாதிரி; திருஷ்டிப் பூசனி மாதிரி; தோய்த்து உலர்த்தின மாதிரி; எண்ணெயில் பொறித்த மாதிரி; செடியில் பூத்த மாதிரி. ஆனால் இவை ஒவ்வொன்றிற்கும் பின்னும், எல்லோருக்குள்ளேயும் ஒரு முகம் இருக்கிறது. கோபமாய்; அன்பாய்; சிலருக்குத் திமிராய்.......

- 'அக்னி நட்சத்திரம்'.

3. ஜனனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தேன் கூட்டில் கல் எறிவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது சரம் சரமாய்க் கேள்வி கிளம்பும்.

- 'தப்புக் கணக்கு'.

4. இவன் கண் திறந்த போது எல்லாமே முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன. அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புக்களை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.

- 'கல்கி'.

5. அப்பா லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தது எங்கோ தொலைவில் தொடுவானத்துக்கு அருகே இருந்து ஒலிப்பது போல் கேட்டது. இந்த ஆயிரம் பேரைச் சொல்லும் புண்ணியத்துக்காக அப்பா சமஸ்கிருதத்தைக் கடித்துத் துப்ப வேண்டாம். இவருக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ் லிபியில் அச்சான புத்தகத்தை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.தமிழும் இல்லாத சமஸ்கிருதமும் இல்லாத இந்தப் புதிய பாஷை லெட்சுமிக்குப் புரியவில்லையோ என்னவோ? இல்லாவிட்டால் இப்படித் தினமும் மழையோ, பனியோ ஐந்து மணிக்கு எழுந்து தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சின்சியாரிட்டிக்காகவேனும் அவர் கேட்டதைக் கொடுத்திருக்கலாம்.

- 'என் வீடு'.

6. "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"

பாடல் கேட்கப் பரவசமாய் இருந்தது. வெதுவெதுவென்று உஷ்ணமாய் உடல் சூடேறியது. 'ஆயுதம்' என்ற குரல் உச்சத்தில் போய் நின்றது. சடாரென்று அந்த நேரத்தில் கவிதையின் முழு அர்த்தமும் புரிந்தது. ஆயுதம்னா கத்தி கபடாவா? பாரதி சொல்லுக்கு எழுதுவதும் நம் ஆயுதம்(writing is our weapon) என்றல்லவா அர்த்தம்? சுரண்டறவன் வயித்தில் சொருகுகிற கத்தி மாதிரி நியூஸ்பேப்பர் வந்து விழவேண்டும். நசுக்கி வைத்திருகிறவர்கள் போல், ஆட்டம் பாம் போல் எழுச்சியூட்டும் கட்டுரைகள் வந்து விழவேண்டும்.மெஷின்கன் சுடுவது மாதிரி படபடவென்று கவிதை தெறித்துக் கொண்டு வரவேண்டும் என்றல்லவா அர்த்தம்? அர்த்தம் புரிந்து போனதில் மனசு பொங்கிற்று.

- 'ஆயுதம்'.

7. மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டிய மாதிரி லேசான பழுப்பில் நிலா முழுசாய் மிதந்து கொண்டிருந்தது. கையால் அள்ளித்தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மனம் இன்னும் சூடேறிப் போகவில்லை. எங்கேயோ ஒருசிறு குயில். தம்பூர்த் தந்தியைச் சுண்டி விட்டமாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எங்கே போனாலும், எதைத் தொட்டாலும் துரத்தித் துரத்தி வந்து ஊசியாய்க் குத்துகிற நினைப்பைத்தான் விரட்ட முடியவில்லை.

- 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்'.

8. மார்ச்சு மாதத்து மத்தியானத்து வெயில். சுகமான விடுமுறைச் சோம்பல். உடம்பைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் ஞயிற்றுக் கிழமையின் நல்ல தூக்கம் முறிந்து விழுந்தது. எனக்குள் சின்னதாய் ஒரு விஸ்வாமித்திரன். எதிரே என் சின்னத்தங்கை. கையிலே
ஒரு தந்தி. பார்த்தேன். உடம்பின் செல்களில் மெலிதாய் ஒரு மின்சாரம். நிறைய வியர்த்தேன். மனதுள் சோடாக் குமிழ் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே ஒரு சின்ன பயம்.

- 'சூரிய தேசம்' கட்டுரையில்.

9. யோசித்துப் பார்த்தால் இப்படித்தான் எல்லோரும் குளவி போல் வாயில் ஒரு பிரச்சினையைக் கவ்விக் கொண்டு இறக்கி வைக்க இடம் தேடி சுற்றிச்சுற்றி வருகிறார்கள் அலைச்சலும் இரைச்சலுமாய்.

- 'கோட்டை' கதையில்.

10. காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை மாதிரி ஒரு வதை. ஒரு சந்தோஷமான இம்சை. இன்னதென்று தெளிவாய் உருவம் புலப்படாமல் ஒரு கற்பனை.வாசிக்க வயலினை எடுத்தால் வழிதப்பிப் போகிறது. விதம் விதமாய் வில்லை ஓட்டிப் பார்த்தாயிற்று. நழுவி நழுவிச் சறுக்குகிறதே ஒழியப் பிடிகிடைக்கிற வழியாய் இல்லை. வெறுத்துப்போய் வில்லை வீசி விட்டு தோட்டத்தில் உலாவ வந்த நிமிஷத்தில் சட்டென்று பொறி தட்டிற்று. உற்சாகக் குருவி உள்ளே கூவிற்று. திடுமென ஒரு அலை பொங்கி அதில் தான் நுரைப் பூவாய் அலம்பி அலம்பிப் போகிற மாதிரி மிதப்பாய் இருந்தது. அவசரமாய் உள்ளே திரும்பி வயலினை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். வில்லை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் வாசல் பக்கம் தொந்தரவு. ரிஷபத்தை நீளக்கூவித் தெருக் கதவு திறந்தது. கற்பனை கலைந்து ரௌத்திரம் பொங்கக் கண்ணைத் திறந்து பார்த்தார்.

- 'வித்வான்'.

- மேலும் வரும்.

-வே.சபாநாயகம்.

Tuesday, November 08, 2005

நினைவுத் தடங்கள் - 35

எங்கள் வட்டாரத்தில் அப்போது எங்கள் குடும்பம்தான் எல்லா வகையிலும் முன்னணியில் இருந்தது. பொருளாதார நிலையிலாகட்டும், கல்வியிலாகட்டும், குடும்ப நபர்களின் எண்ணிக்கையிலாகட்டும் நாங்கள் தான் முதல். நாங்கள் எங்கள் பெற்றோருக்குப் பத்துப் பிள்ளைகள். ஐந்து பிள்ளைகள் ஐந்து பெண்கள். இப்போது போல அப்போது குடும்பக்கட்டுப்பாடு இல்லை. அதற்கு அவசியமும் இருக்கவில்லை.

அனேகமாக எல்லா வீட்டிலும் சராசரியாக ஆறு முதல் எட்டுப் பிள்ளைகள். அப்போதெல்லாம் பிள்ளைகள் அதிகம் பெற்றுக் கொள்வதை குறைவாக எண்ணுவ தில்லை. 'மாறாக மக்களைப் பெற்ற மகராசி' என்றே மதித்தார்கள். பின்னாளில் எங்களது அடுத்த கிராமத்தில் ஒரு பெற்றோருக்குப் பதினாறு பிள்ளைகள். 'பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ' வாழ்த்துவது பிள்ளைகள் எண்ணிக்கையில் என்ற அர்த்தத்தில் கொள்வதானால் அவர்கள் அதை நிரூபித்தார்கள். பெருவாழ்வு என்பதை செல்வச் செழிப்பில் என்று கொள்ளாமல் மன நிறைவான வாழ்வு என்று கொண்டால் அதை அவர்கள் வாழ்ந்து காட்டினார்கள். பல குடும்பங்களில் பத்துக் குழந்தைகள் போலப் பெற்றிருந்தாலும் இப்போது போல மருத்துவ வசதியில்லாததால் நிறையக் குழந்தைகள் மொட்டிலேயே உதிர்ந்து போனார்கள். பொருளாதார வசதி மற்றும் சுகாதார விழிப்புணர்வு காரணமாய் எங்கள் பெற்றோர்கள் எங்களை பாதிப்பு இன்றி வளர்த்து ஆளாக்கினர்கள். எங்களை எல்லா வகையிலும் ஆரோக்கியமாக உருவாக்கி இன்றளவும் எல்லோரும் நிறைவான வாழ்க்கை வாழ்வதில் எங்கள் அப்பாவைப் போல் எங்கள் அம்மாவுக்கும் பெரும் பங்கு உண்டு.

பின்னாளில் நான் தலை எடுத்து பணிக்கு வந்த பிறகு 1966ல் அப்போதுதான் பிரபலமாகிக் கொண்டிருந்த டேப் ரெகார்டர் கருவி ஒன்றை வாங்கினேன். அதில் முதல் பதிவாக என் தாயாரையே பேட்டி கண்டு பதிவு செய்தேன். அறுபதுகளில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாகி இருந்த நேரம். "இப்போது பிள்ளைகள் அதிகம் வேண்டாம் என்று அரசாங்கமே தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெற்றுக் கொள்வதை எல்லோரும் குறைவாக எண்ணுகிற நிலைமை இருக்கிறதே- நீங்கள் பத்துப் பிள்ளைகள் பெற்றுக் கொண்டது பற்றிக் கூச்சமாக இல்லையா?" என்று பேட்டியின் போது கேட்டேன். "இதுலே என்ன கூச்சம்? வீடு நிறையப் பிள்ளைகள் இருப்பது ஒரு அழகுதான்! 'ஒரு மரம் தோப்பாகுமா? ஒரு பிள்ளையும் பிள்ளையாகுமா?' ண்ணுதான் அப்போ நெனச்சாங்க. இப்போ மாதிரி ரெண்டு போதும்னு நாங்க நெனைக்கலே" என்று என் தாயார் பதில் சொன்னார்கள்.

"ந்¢றையப் பிள்ளைகள் இருப்பது அழகாக இருக்கலாம். ஆனால் அத்தனை பிள்ளைகளையும் வளர்த்து ஆளாக்கி நல்ல நிலைமைக்குக் கொண்டு வரணும்னா இப்போது முடியுமா?'' என்று கேட்டேன். "வசதி உள்ளவங்களுக்கே முடியலையே?"

"இப்போ கஷ்டம்தான். அப்போ உங்களுக்கு காலையிலே பாலைக் கொடுத்து கையிலே ப்¢ஸ்கோத்து ஒண்ணக் கொடுத்து ஒரு ஓரமா ஒக்கார வச்சா நீங்க பதுவிசா ஒக்காந்திருப்பீங்களெ இப்போ அப்பிடியா? நாட்டுக் கைத்தறித் துண்டு ஒண்ணை- அப்போ நாலணா- இடுப்புலே கட்டினா சமத்தா பிள்ளைங்க அடம் புடிக்காம இருக்குமே இப்போ அப்படியா? டெரிலின்லே சட்டை, கால்சட்டை கேக்குதே! அப்போல்லாம் இந்த ஹார்லிக்சும், பால் பவுடரும் ஏது? அதெல்லாம் செலவுதான் ஆகும். கொடிக்குக் காய் பாரமா என்ன? உங்களாட்டமா எடுத்த துக்கெல்லாம் டாக்டருக்கிட்டே போனோம்? எல்லாம் கை வைத்தியம்தான்" என்று பெருமிதத்துடன் சொன்னார்கள்.

வீட்டில் எப்போதும் கோரோசனையும் தஞ்சாவூர் மாத்திரைகளும் இருக்கும். எங்களுக்கு என்று இல்லை - ஊரில் எல்லோர் வீட்டுக் குழந்தைகளுக்கும் மாத்த்¢ரையும் மருந்தும் தந்து உதவுவார்கள். குழந்தை வைத்தியத்துக்காக என்று இல்லை -தங்கள் வீட்டில் நல்லது கெட்டது எதற்கும் அம்மாவையே 'ஆகிவந்த கை' என்று யோசனையும் உதவியும் கேட்பார்கள். எங்கள் தாயாரும் முகம் சுளிக்காமல் யார் கேட்டாலும் உதவுவார்கள். 95 வயது வரை வாழ்ந்து இப்போது 2001ல் தான் காலமானார்கள். கடைசி ஐந்து ஆண்டுகள் நினைவுப் பகுதி செயலிழந்து எங்களைக் கூட யார் என்று தெரிந்து கொள்ள முடியாமல் இருந்தது தவிர எனக்குத் தெரிந்து நோய் என்று எப்போதும் படுத்ததில்லை. 90 வயதிலும் கண்ணாடி போடாமல் படிக்கவும் எழுதவும் அவர்களுக்கு முடிந்தது. வீட்டின் நிர்வாகம் அப்பாதான் என்றாலும் வரவுசெலவுக் கணக்கை தவறாமல் எழுதி வந்தது எங்கள் அம்மாதான். இன்றும் நான் கடந்த 50 வருடங்களாக வரவுசெலவுக் கணக்கை விடாது எழுதி வருவது அம்மாவிடமிருந்து கற்றதுதான். கடைசிவரை ஒரு பல் கூட எங்கள் தந்தையைப் போலவே அவர்களுக்கு விழவில்லை. அப்படிப் பட்ட உடல் நலமும் மன நலமும் உடையவர்களாக - அப்போதெல்லாம் நமது சராசரி வயது 28 ஆக இருந்தும் - எப்படி இருக்க முடிந்தது என்று நினைத்துப் பார்த்தால் வியப்பாக உள்ளது.

குழந்தை வளர்ப்பிலும் அப்படி ஒன்றும் தனிப்பட்ட விசேஷம் எதுவும் இருந்த தில்லை. இப்போதுபோல் காபியும் டீயும் இல்லை. காலையில் இட்டிலி , தோசை தொடர்ச்சியாக இல்லை. பழையதும் தயிரும் பழங்குழம்பும்தான். இருந்தும் நாங்கள் அதிகமும் நோய் வாய்ப்பட்டதில்லை. மாதம் ஒருமுறை கட்டாயமாக விளக்கெண்ணெய் புகட்டுவார்கள். சனிதோறும் எண்ணெய்க் குளியல். தின்பதற்கு ஏதாவது எப்போது கிடைக்கும். வீட்டில் செய்யும் பலகாரங்கள் தவிர தெருவோடு போகும் இலந்தை, மா, பலா, பாலப்பழம் என்று எது விற்றாலும் மாற்றாக நெல் போட்டு வாங்கித் தருவார்கள். படிப்பு விஷயத்தில் அவர்கள் பங்கு எதுவும் இல்லயே தவிர, நாங்கள் எல்லொரும் படித்து உத்தியோகத்துக்கு வந்தது தன் அண்ணன்கள் வீட்டைப் பார்த்துதான் என்று பெருமையாகச் சொல்வார்கள். உண்மையில் எங்கள் தகப்பானார் 1914லிலேயே மெட்றிகுலேஷன் படித்தவர்கள். எங்கள் வட்டாரத்தில் அப்போது மெட்றிகுலேஷன் வரை படித்தவர்கள் வேறு யாரும் இருக்கவில்லை. அதனால் முன் யோசனையோடு அப்போதே எங்கள் அனைவரையும் கல்லூரிப் படிப்பு வரை அனுப்பினார்கள்.

அம்மா அப்படித் தன் பிறந்த வீட்டுப் பெருமையைப் பேசக் காரணம் உண்டு. எங்கள் தாய் மாமா ஒருவர் எங்கள் தந்தை படித்த காலத்திலே கல்லுரியில் படித்து வழக்கறிஞர் தொழிலில் அமோகமாய் சம்பாதித்து, அரசியலிலும் மூன்று முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆக - பக்தவத்சலத்தின் பார்லிமெண்ட்ரி செயலராக இருந்தவர். அவர் எங்கள் அப்பா போல தன் பிள்ளைக¨ளையும் தன் சகோதரர்கள் பிள்ளைகளையும் தானே படிக்க வைத்தவர். அதைப் பார்த்துத்தான் எங்கள் அப்பா எங்களையும் படிக்க வைத்ததாக எங்கள் தாயார் சொல்வது வழக்கம். எங்கள் தாயார் தன் பிறந்தகத்தைப் பற்றிப் பெருமைப்பட வேறொரு காரணமும் உண்டு.

எங்கள் தாயாரின் தந்தை ஜமீன் ஒழிப்புக்கு முன் ஒரு சின்ன கிராமத்துக்கு 'ஜாகிர்தார்' ஆக இருந்தவர். உடையார்பாளையம் ஜமீனுக்கு உட்பட்ட அம்மாகுளம் என்கிற கிராமத்தின் வரிவசூல் மற்றும் பாராமரிப்பு உரிமை பெற்ற குட்டி ஜமீன். எங்கள் மாமாக்களில் ஒருவர் உடையார்பாளையம் ஜமீனில் பேஷ்கார் (நிதிப் பொறுப்பு) ஆக இருந்தவர். இதிலெல்லாம் எங்கள் அம்மாவுக்குப் பெருமை. ஜமீன் ஒழிப்பு நேர்ந்த போது ரு.60000 போல அரசாங்கத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையாக எங்கள் மாமாக்களுக்குக் கிடைத்தது.

அம்மாவின் பிறந்த ஊருக்கு ஆண்டுக்கு ஒருமுறை எல்லோரும் போய் ஒருமாதம் போல டேரா அடித்துவிட்டு வருவோம். அப்போது - 50 ஆண்டுகளுக்கு முன்வரை அந்தப் பக்கம் பேருந்தெல்லாம் இல்லை. ஓரிரு தனியார்கள் - டி.வி.எஸ் போல -நடத்தியவை பெரிய முக்கிய வழித்தடங்களில் மிகக் குறைந்த அளவில் இருந்தன. அதனால் எங்கும் மாட்டு வண்டிப் பயணம்தான். எங்கள் ஊரிலிருந்து ஏறக்குறைய 25 மைல் தூரம் அம்மா பிறந்த ஊரான வாணதிரையன் பட்டணம் . இப்போதைய ஜெயங்கொண்டம் திருச்சி சாலையில் செல்லவேண்டும். நீளமான கூண்டு வண்டியில் விடியற்காலை 4 மணிக்குப் புறப்பட்டால் மாலை இருட்டும் வேளைக்கு 6 மணியளவில் போய்ச் சேர முடியும். மேல் படிப்புக்குப் போன மூத்த இரு சகோதரர்கள் தவிர அப்போதைக்கு இருந்த 5,6 பிள்ளைகளுடன் கட்டுசாதம் கட்டிக்கொண்டு அப்பா அம்மாவுடன் கிளம்புவோம். வண்டி மெதுவாகத்தான் போகும். வேகமாகப் போக சாலையும் அனுமதிக்காது. ஏறக்குறைய 12 மணிக்கு மேலாக பயணம் செய்தாலும் எங்களுக்கு அலுத்ததில்லை. பள்ளிக்கூடச் சிறையிலிருந்து தற்காலிக விடுதலை, வீட்டுக்கு வெளி¢யே புதிய இடங்களின் ஈர்ப்பு என பயணம் உற்சாகமாய் இருக்கும். இடையில் பத்து மைலுக்கு ஒரு தடவை சாலையோரம் தென்படும் பெரிய குளத்தருகே வண்டியை அவிழ்த்து நிறுத்தி கட்டுச்சோறு சாப்பிடுவோம். அது ஒரு ரசமான அனுபவம்.

மாமா வீட்டின் பின் பகுதியில் பெரிய மொட்டை மாடியுடன், உள்ளே விசால மான காலரி ஹால் போன்ற கூடம். அதில் உயரமான சுவரில் எங்கள் தாத்தா காலத்திலிருந்தே மாட்டப் பட்டிருந்த 3அடி உயரமான பெரிய பிரேம் போட்ட ரவிவர்மா ஓவியங்கள் இன்றும் இன்றும் 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கண்முன்னே அப்படியே நிற்கிறது. பகீரதன் தவம், தமயந்தி அன்னத்தைத் தூது அனுப்புதல், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் என கண்ணையும் கருத்தையும் கவர்ந்த ஓவியங்கள் என் கலைரசனைக்கு அந்தச் சின்ன வயதில் தூண்டுகோலாக இருந்தன. அதற்காகவே நான் அடிக்கடி அன்கே போக ஆசைப்படுவேன். இன்று அறுபது ஆண்டுகளுக்குப் பின் அங்கே ஒருமுறை போனபோது வீடு கைமாறி உருவம் மாறி பழைய அடையாளத்தை இழந்து எனக்குப் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. மாமாக்களி¢ன் வாரிசுகளும் இப்போது அங்கில்லை.

பெரிய இடத்திலிருந்து நிறைய நகைகளுடன் வந்த எங்கள் அம்மாவுக்கு ஊரில் மிகுந்த மரியாதை. எங்களது வளர்ச்சியில் அப்பாவுக்கு மிகவும் ஒத்துழைத்து, பெரியப்பா சுமத்திய பெரிய கடன் பங்கை அடைக்க தன் நகைகளை முகம் சுளிக்காமல் தந்துதவிய அம்மாவின் தியாகத்தை அப்பா நினவுகூர்வதுண்டு. ஆனால் அம்மா அதனைப் பெரிதாகச் சொல்லிக் காட்டாவிட்டாலும் அந்கக் காலத்தில் மிகக் கௌரவமாய்க் கருதப் பட்ட காசுமாலையைக் கொடுத்ததை ஆதங்கத்தோடு குறிப்பிடுவதுண்டு. பின்னாளில் மீண்டும் காசுமாலை வாங்கிவிட வேண்டும் என்ற அம்மாவின் ஆசை கடைசிவரை நிறைவேறவே இல்லை. ஏனென்றால் எங்கள் பத்து பேரையும் ஆளாக்கி, திருமணம் செய்வித்துக் கரையேருவதற்குள் அம்மாவுக்கு அதற்கு நேரமோ வாய்ப்போ கிட்டவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமல்ல எங்களுக்கும் குறைதான்.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.