Showing posts with label எனது இலக்கிய அனுபவங்கள். Show all posts
Showing posts with label எனது இலக்கிய அனுபவங்கள். Show all posts

Monday, March 12, 2012

எனது இலக்கிய அனுபவங்கள் - 21- எழுத்தாளர் சந்திப்பு - 8. தி.சு.சதாசிவம்

மார்ச்'12 - 'அம்ருதா' இதழில், திரு.பாவண்ணன், சமீபத்தில் மறைந்த சிறந்த மொழிபெயர்ப்பாளரும் எழுத்தாளரும், நடிகருமான திரு.தி.சு.சதாசிவம் அவர்களைப் பற்றி உருக்கமாக எழுதியிருந்த கட்டுரையைப் படித்ததும் எனக்கும் அவரோடான சந்திப்புகள் நினைவுக்கு வந்து மனம் கனத்தது. கடந்த ஒரு வாரமாக அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளன.

அவரைச் சந்திக்கும் முன்னராகவே, பல ஆண்டுகளுக்கு முன்பே அவரது மொழி பெயர்ப்பு நாவல்கள் இரண்டினைப் படித்து அவரைப் பற்றிய நல்ல அபிப்பிராயம் உருவாகி இருந்தது. பிரபல கன்னட நாவலாசிரியர் அனந்தமூர்த்தி அவர்களது 'சமஸ்காரா' நாவல், பழைய புத்தகக்கடை ஒன்றில் அதிர்ஷ்டவசமாய்க் கிடைத்தது. அந்த அற்புதமான நாவல், மொழிபெயர்ப்பு என்ற உணர முடியாதவாறு என்னை வெகுவாய்க் கவர்ந்தது. படித்த முடித்தபின்தான் மொழிபெயர்த்தவர் தி.சு.சதாசிவம் என்று அறிந்தேன். இப்படி படிக்கும் போதே மொழிபெயர்த்த வர் நினைவுக்கு வந்து உறுத்தாத சுகமான அனுபவம் - எனக்கு சுந்தரராமசாமி அவர்களது 'செம்மீனை'ப் படித்த போதும், கா.ஸ்ரீ.ஸ்ரீ யின் காண்டேகர் நாவல் மொழிபெயர்ப்புகளிலுமே கிடைத்திருக்கின்றன. பின்னர் அவரது மொழிபெயர்ப்பில் வந்த, இன்னொரு பிரபல கன்னட நாவலாசிரியர் சாராஅபுபக்கரின் 'சந்திரகிரி ஆற்றங்கரையில்' நாவலுக்கு சிறந்த மொழிபெயர்ப்பாளுக்கான 'சாகித்ய அகாதமி' விருது அவருக்குக் கிடைத்த போது அவர் மீது எனக்கிருந்த மதிப்பை மேலும் உயர்ந்தது. ஆனால் விரைவில் அவரைச் சந்திக்கும் வாய்ப்பு வரும் என்று அப்போது நினைக்கவில்லை.

'ஆயிஷா இ.ரா.நடராசன்' அவர்கள் தனது 'குரல்' அமைப்பின் சார்பில் அவரது மொழிபெயர்ப்பு நாவல் வெளியீட்டை கடலூரில் ஒரு மாலைப் பொழுதில் நிகழ்த்திய போது, அவருடனான சந்திப்பபு எதிர்பாராமல் நிகழ்ந்தது. விழாவுக்கு நான் தலைமை ஏற்றிருந்தேன். நூலை திரு. சதாசிவம் வெளியிட, சிறந்த விமர்சகரும் கவிஞருமான திருமதி.லதா ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டு விமர்சனம் செய்தார். திருவாளர்கள் குறிஞ்சிவேலன், கவிஞர் பழமலய், எஸ்ஸாசி, வளவதுரையன் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.

இரவு திரு நடராசன் ஏற்பாட்டின்படி நான், கவிஞர் பழமலை, சதாசிவம் மூவரும் ஒரு லாட்ஜில் தங்க நேர்ந்தபோது அவருடன் நெருக்கமாகப் பழகவும் பேசவும் நேர்ந்தது. மிக எளிமையான தோற்றமும் தீர்க்கமான முகமும் இனிமையாய்ப் பழகும் குணமும் உடையவராக இருந்தார். இரவு முழுவதும், முன்னரே பழக்கமற்ற எங்கள் இருவருடனும் பலநாட்கள் பழகியவர் மாதிரி மிகுந்த நட்புடனும் பாசத்துடனும் பேசிக்கொண்டிருந்தார். அவரது மொழிபெயர்ப்பு அனுபவங்களையும், பிரசுரிக்க - தக்க பிரசுரகர்த்தர் கிடைக்காமல் கைவசம் தேங்கியுள்ள சில நல்ல மொழிபெயர்ப்புகள் பற்றியும் பேசினார். மறுநாள் காலையில் விடை பெற்றோம்.

பிறகு அவர் ஓய்வு பெற்று சில நாட்கள் கழித்து, சென்னையில் தற்செயலாக இராயப்பேட்டையில் 'இராயப்பேட்டை 'பெனிபிட் ஃபண்ட்' வாசலில் சந்திக்க நேர்த்தது. நான் உள்ளே நுழைகையில் அவர் உள்ளிருந்தது வெளிப்பட்டார். எதிர்பாராத சந்திப்பில் இருவருமே நெகிழ்ந்து கடலூர் சந்திப்பை நினைவு கூர்ந்தோம். பிறகு ''இங்கே எப்படி நீங்கள்....?'' என்று நான் கேட்டபோது மிகுந்த சோகத்துடன் அந்த இழப்பைச் சொன்னார். நம்பி முதலீடு செய்ய உகந்ததாய் பிரபலமாக இருந்த இராயப்பேட்டை பெனிபிட்ஃபண்ட் அந்த சமயத்தில், அது போன்ற எல்லா நிறுவனங்களையும் போல நொடித்துப் போயிருந்தது. சதாசிவம் தனது ஒய்வூதியக்கொடை மற்றும் சேமிப்பு முழுவதையிம் - ஏறக்குறைய ஐந்து லட்சம் போல அதில் முதலீடு செய்திருந்தார். அந்தப்பணம் தான் அவரது ஜீவாதாரம். இப்போது அது திரும்பக் கிடைக்குமா என்ற ஏக்கத்துடன் பேசினார். அந்த சோகமான முகம் இப்போதும் என மனத்திரையில் ஒடுகிறது. எனக்கு அவருக்கு ஆறுதல் சொல்லத் தெரியவில்லை. பிறகு அவரைச் சந்திக்கவில்லை. ஆனால் தொலைக்காட்சியில் அவர் நடித்தபோது பலதடவை பார்த்துண்டு.

அவர் முதலீடு செய்த நிறுவனத்தால் முழு தொகையையும் தன் முதலீட்டாளர்களுக்கு திருப்பித் தர முடியவில்லை. அரசின் தலையீட்டால் 1000. 2000 என்று தவணைகளால் பல ஆண்டுகளாக இன்னும் தந்து கொண்டிருப்பதாகத் தகவல். திரு.சதாசிவம் தன் வாழ்நாளுக்குள் பாதியையாவது திரும்பப் பெற்றிருப்பாரா என்று தெரியவில்லை. அவரது மரணம் பற்றி அறிந்ததும் இந்த நினைவுதான் என்னை வருத்தியது. அவரை நினைக்கும் போதெல்லாம் எழுத்தாளரை வஞ்சிக்கிற பலரோடு இது போன்ற நிறுவனங்களும் சேர்ந்திருப்பதை எண்ணி வருந்துவதைத் தவிர வேறு தெரியவில்லை. 0

Wednesday, October 19, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 20.எழுத்தாளர் சந்திப்பு - 7. சுரதா

அக்டோபர் 1968ல், கவிஞர் சி.மணியின் 'நடை' முதல் இதழில் கண்ணன் என்பவர் 'அகவன் மகளும் அகவும் மயிலும்' என்றொரு கட்டுரை எழுதி
இருந்தார். கவிஞர் சுரதாவின் 'தேன்மழை' என்னும் கவிதைத் தொகுப்பில்
'மயில்' என்னும் கவிதையின் முதல் வரியான, 'அகவும் மயிலே! அகவும் மயிலே!' என்பதை குறுந்தொகையில் வரும் ஒளவையாரின் கவிதையின்
முதல் வரியான'அகவன் மகளே! அகவன் மகளே!' என்பதுடன் ஒப்பிட்டு எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரை அது. அதில் ஒளவையின் கவிதையால் தூண்டுதல் பெற்ற சுரதாவின் கவிதை அந்தத் தரத்தை எடடியிருக்கிறதா என்பதுதான் விமர்சனத்தின் மையம்.

அப்போது நான் சென்னை சென்றிருந்தேன். வழக்கம்போல இலக்கிய
அன்பர்ஒய்ஆர்.கே சர்மா அவர்களைச் சந்தித்து, இருவருமாய் வாலாஜா
சாலை வழியாக திருவல்லிக்கேணியில் இருந்த கவிஞர் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்று கொண்டிருந்தோம். அப்போது எதிரே அதே சாலையில் - ஜிப்பாவுடனும் தோளில்
சால்வையுடனும் வந்து கொண்டிருந்த ஒருவரைக் காடடி, "அதோ சுரதா வருகிறார். வாருங்கள் அறிமுகப்படுத்துகிறேன்" என்று அழைத்தார். நாங்கள் சாலையில் இறங்கி அவரைச் சந்தித்தோம். சர்மாவை முன்பே அறிந்திருந்த
சுரதா எங்களது வணக்கத்துக்குப் பதில் வணக்கம் செய்து விட்டு "என்ன செய்தி?" என்றார். சர்மா என்னை அறிமுகம் செய்து வைத்தார். சுரதா தலையை மட்டும் அசைத்தாரே தவிர என்னை அதிகம் கண்டு கொள்ளவில்லை. சர்மா 'நடை'யில் வந்துள்ள அவரைப் பற்றிய விமர்சனத்தைச் சொன்னார். "என்ன எழுதியிருக்கான்?" என்றார் ஒருமையில். 'அமுதும் தேனும் எதற்கு?',
'ஆடி அடங்கும் வாழ்க்கையடா' என்பன போன்ற அற்புதமான பாடல்களை
எழுதியவரைச் சந்தித்த மகிழ்ச்சியில் இருந்த எனக்கு, சற்று அதிர்ச்சியாக இருந்தது. சர்மா அவரிடம் மேற்கொண்டு பேசியதில் எனக்கு சுவாரஸ்யம் ஏற்படவில்லை. சுரதாவிடம் விடை பெற்றுக் கொஞ்ச தூரம் நடந்ததும், "என்ன இப்படி ஒருமையில் பேசுகிறார்?" என்றேன். "அவர் அப்படித்தான்! அதையெல்லாம் பொருட்டுத்த வேண்டாம்" என்றார் சர்மா

பிறகு 18 ஆண்டுகளுக்குப் பின், மதுரையில் நடந்த ஐந்தாவது உலகத் தமிழ்
மகாநாட்டின் போது, மீண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அந்த மகாநாட்டுக்கு
கல்வித் துறையிலிருந்து ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு மேல்நிலைப்
பள்ளித் தலைமை ஆசிரியரும் ஒரு தமிழாசிரியரும் அழைக்கப்பட்டிருந்தார்கள்.
அதன்படி விருத்தாசலம மாவட்டத்தின் பிரதிநிதியாக நான் அழைக்கப்
பட்டிருந்தேன். விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த கள்ளக்குரிச்சி மேல்நிலைப்பள்ளித் தமிழாசிரியர் 'கவிஞர் செ.வ'என்று அறியப்பட்டிருந்த புலவர் செ.வரதராசன் அவர்களை மாநாட்டில் சந்தித்தேன். அவர் ஒத்த இலக்கிய ரசனை காரணமாக என்னோடு நீண்ட நாட்களாக நட்புக் கொண்டவர்; கவிஞர் சுரதாவின் அன்பர். அன்று மாலை, தான் கவிஞர் சுரதாவை அவர் தங்கி இருக்கும் விடுதியில் சந்திக்க இருப்பதாகவும் என்னையும் அழைத்துப் போய் அறிமுகப்படுத்துவதாகவும் அழைத்தார். சுரதா அவர்களைப் பல ஆண்டுகளுக்கு
முனபே சந்தித்திருந்ததையும் அப்போது அவர் என்னைக் கவனிக்கவில்லை என்றும் சொல்லி, அன்றிரவு அவரைச் சந்திக்க ஒப்புக் கொண்டேன்.

அதன்படி அன்றிரவு 8 மணியளவில் இருவரும் சுரதா அவர்கள் தங்கி இருந்த
விடுதிக்குச் சென்றோம். அவரது அறைக்குள் நுழையுமுன் செ.வ அவர்கள்
என்னிடம் "கவிஞரைப் பார்க்கும்போது அவரது நூல் ஒன்றை வாங்கினால் மகிழ்ச்சி அடைவார்" என்றார். எனக்கு அதில் விருப்பமில்லை என்பதை என் முகமாற்றத்திலிருந்து உணர்ந்து, "உங்களுக்கும் சேர்த்து நானே தந்து விடுகிறேன். நீங்கள் அவரிடமிருந்து புத்தகத்தை மட்டும் வாங்கிக்கொண்டால் போதும்" என்றார்.

உள்ளே நுழைந்து வணக்கம் தெரிவித்த பின், கவிஞரிடம் என்னைப் பற்றிச் சொல்லி அறிமுகப்படுத்தினார் செ.வ. என்னை முன்பே பார்தத நினைவு அவரிடம் இருப்பதாகத் தெரியவில்லை. நானும் அது பற்றிச் சொல்லவில்லை. எடுத்தவுடனேயே, "நீங்க என்ன ஜாதி?" என்று கேட்டார் சுரதா. எனக்குக் கொஞ்சம் கசப்பாக இருந்தது. அதிருப்தியுடன் செ.வ வைப் பார்த்தேன். ஜாதியைச் சொல்வதில் எனக்குக் கூச்சம் ஏதும் இல்லைஎன்றாலும் அந்தக் கேள்வி, சாதிமறுப்புச் சிந்தனையாளர் புரட்சிக்கவிஞரின் தாசனான ('சுப்புரத்தினதாசனா'ன) சுரதாவிடமிருந்து வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. செ.வ என் தயக்கத்தை உணர்ந்து எனக்குப் பதிலாக அவரே பதில் சொன்னார். அத்தோடு விடவில்லை கவிஞர்! "அங்க எட்மாஸ்டர் ஒருத்தன் - செவிடன் - உடையான் ஒருத்தன் இல்லே.....?" என்று ஒருமையிலும் நாகரீகமற்றும் கேட்டார். எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. அவர் விசாரித்தவர் என் சக தலைமை ஆசிரியர்; சற்று செவிப்புலன் குறையுளவர். ஜாதியைக் குறிப்பிட்டதுடன் ஒருவரது ஊனத்தைச் சொல்லிக் கேட்பது அநாகரீகத்தின் உச்சம் என்று பட்டது. இதற்கும் செ.வ வே பதில் சொன்னார். அதற்கு மேல் அங்கு இருக்க எனக்கு விருப்பமில்லை. எழுந்து போக முயற்சித்தேன். ஆனால் செ.வ என் கையைத் தொட்டு, கண்களால் பொறுத்துக் கொள்ள ஜாடை காட்டினார். ஆனால் கவிஞர் என் முக மாற்றம், அதில் தென்பட்ட அதிருப்தி எதையும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மேற்கொண்டு அவர் செ.வ வுடன் பேசிய எதையும் நான் கவனிக்கவில்லை. பின்னர் அவரிடம் எனக்கும் என்று சொல்லிப் பணம் கொடுத்த இரண்டு புத்தகங்களை வாங்கிக் கொண்டு விடை பெற்றார் செ.வ..வெளியே வந்ததும் அவரது பண்பாடற்ற பேச்சு பற்றிய என் அதிருப்தியை செ.வ விடம் தெரிவித்தேன். "அவர் அப்படித்தான். அதைப்பொருட்படுத்த வேண்டாம். எல்லா மேதைகளிடமும் இப்படி ஏதாவது ஒரு குறைபாடு இருக்கவே செய்கிறது" என்று சர்மாவைப் போலவே சொல்லி என்னைச் சமாதானபடுத்தினார்.

அடுத்த சந்திப்பு பிறகு சில ஆண்டுகள கழித்து கள்ளகுறிச்சியில கவிஞர் ஆராவமுதன்அவர்களது பாராட்டு விழாவில் நடந்தது. அவ்விழாவிற்குத் தலைமை தாங்க வந்திருந்தார் சுரதா. விழா தொடங்கு முன்னரே வந்து மேடையின் எதிரே அமர்ந்திருந்தவரின் அருகில், ஆராவமுதன் என்னை வரவேற்று அமரச் செய்து அவருக்கு என்னை அறிமுகம் செய்தார்.
இப்போதும் கவிஞருக்கு என்னை முன்பே பார்த்த ஞாபகம் இல்லை போலும்! தலைஅசைப்பு மட்டுமே செய்தார். உடனே தன் கைப்பையைத் திறந்து ஒரு ரசீது புத்தகத்தை எடுத்து அதில் ஏதோ எழுதிக் கிழித்து என்னிடம் கொடுத்தார் - விசிட்டிங் கார்டைக் கொடுப்பது போல. அந்த ரசீதைப் பார்த்தேன். அது அவரது மணிவிழாவிற்கான நன்கொடைக்கானது. என் பெயர் கூட அதில் இல்லை. தொகை மட்டும் ரூ.25 என்று எழுதப் பட்டிருந்தது. 'இது என்ன நாகரீகம்' என்பது போல நிமிர்ந்து அவரைப் பார்த்தேன். அதற்குள் அவர் வேறு யாருக்கோ ரசீது எழுதிக் கொண்டிருந்தார். நான் ஏதும் பேசாமல் எரிச்சலோடு ரசீதைக் கையில் வைத்தபடி இருந்தேன். அரைமணி சென்ற பிறகு அவரை மேடைக்கு அழைத்தார்கள். அவர் என் பக்கம் திரும்பி கை நீட்டினார். நான் ரசீதை அவரிடம் திருப்பி நீட்டினேன். அதை எதிர் பார்க்காத அவர் "பணம்?" என்றார். "எனக்கு வேண்டாம். நான் கேட்கலியே?" என்றேன் - அவர் மீது எனக்கிருந்த எல்லா எரிச்சல்களுக்கும் பழிவாங்குகிற மாதிரி! எதுவும் பேசாமல் கோபத்துடன் ரசீதைப் பிடுங்கிக் கொண்டு மேடைக்குப் போனார். பெயர் போடாததால் அந்த ரசீதை இன்னொருவருக்குக் கொடுத்து விடலாம்! பிறகுதான் கேள்விப்பட்டேன் -
அது அவரது ஆத்மார்த்த சீடர்கள் நிரம்பிய ஊர். அவரது இத்தகைய செயல்கள் எல்லாம் அவர்களுக்குத் திருவிளையாடல்கள் போல - யாரும் அச்செயல்களுக்கு முகம் சுளிப்பதிலை என்று.

அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில் அவரைச் சந்திக்கும் சந்தர்ப்பங்கள் நேர்ந்ததுண்டு. ஆனால் மறுபடியும் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்து விட்டேன். 0

Tuesday, October 11, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 19. எழுத்தாளர் சந்திப்பு - 6. 'சிற்பி'பாலசுப்பிரமணியன்.

அண்மையில் பவள விழாக் கண்ட கவிஞர்.சிற்பி பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னுடைய கல்லூரித் தோழர். அண்ணாமலைப் பல்கலையில் 1954ல் அவர் தமிழ் ஆனர்ஸ் படித்த அதே காலத்தில் நான் பி.எஸ்.சி கணிதம் பயின்றேன். ஒரே விடுதியில் வெவ்வேறு சிறகுகளில் தங்கிப் படித்தோம். அவருடைய வகுப்புத் தோழரும் எங்கள் வட்டாரத்துக்காரருமான 'மருதூர் இளங்கண்ணன்'
(பாலகிருஷ்ணன்) என்ற நண்பர் மூலம் தான் எனக்கு சிற்பியின் அறிமுகம்
கிட்டியது. அப்போது 'சிற்பி' என்ற பெயரில் தான் கவிதைகள் எழுதி வந்தார்.
'சிற்பி' என்ற பெயரில் இலங்கையில் ஒருவர் எழுதியதால் பின்னர் 'சிற்பி'
பாலசுப்பிமணியன் என்று மாற்றிக் கொண்டார். 'முத்தமிழ்' என்ற கையெழுத்து இதழை அப்போது அவர் நடத்தினார். அவருடன் பயின்ற 'பதிப்புச் செம்மல்' மெய்யப்பன்(அப்போது அவர் பெயர் சத்தியமூர்த்தி) அவர்களையும் சிற்பியின் அறையில் தான் முதலில் சந்தித்தேன்.

சிற்பியினுடன் எனக்குத் தொடர்பு ஏற்பட்டது 'முத்தழிழ்' காரணமாகத்தான்.
இதழின் ஆசிரியராக அவரும் திருவாளர்கள் மெய்யப்பன், மருதூர் இளங்கண்ணன், வேல்முருகன் மற்றும் சில ஒத்த ரசனை உடைய நண்பர்களும் ஆசிரியக் குழுவில் இருந்தனர். இதழின் ஓவியராக என்னை ஏற்றுக்கொண்டார் சிற்பி. நான் ஓவியம் வரைவதை அறிந்திருந்த மருதூர் இளங்கண்ண்ன், அதற்காகாகத்தான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார்.

'முத்தமிழ்' காலாண்டு இதழாக, 'கல்கி' அளவில் வெளியிடப்பட்டது. அட்டைப்
படங்களையும் உள்ளே தலைப்பு மற்றும் சிறு சிறு ஓவியங்களையும் வரைய சிற்பி எனக்கு வாய்ப்பளித்தார். சங்க இலக்கியப் பாடல்களுக்கான ஓவியங்கள் தான் அட்டையில் வெளியாயின. அதற்கான விளக்கங்களை சிற்பி உள்ளே எழுதினார். சிற்யின் படைப்புகள் நிறைய வந்தன. சொல்லப் போனால் சிற்பி பின்னாட்களில் புகழ் பெற்ற கவிஞராவதற்கு 'முத்தமிழ்', பயிற்சிக் களமாக இருந்தது எனலாம். மெய்யப்பனும் இளங்கண்ணனும் இதர தமிழ் பயின்ற நண்பர்களும் சிறப்பான கவிதை, கட்டுரைகளை 'முத்தமிழி'ல் எழுதினார்கள். ஓராண்டு முடிந்ததும் 'முத்தமிழி'ன் ஆண்டு மலரை 1955ல் சிறப்பாகத் தயாரித்தார் சிற்பி.

கல்கி, அமுதசுரபி தீபாவளி மலர் அளவுக்கு பெரிய அளவில் பைண்டு செய்யப்பட்டு ஆர்டதாளில் ஜாக்கட் அட்டையுடன், அச்சு மலருக்கு இணையாக இருந்தது அம்மலர். சென்னிகிருஷ்ணன் என்ற என் வகுப்பு நண்பர் 'அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்' என்ற பாடலை நினைவூட்டும் - பாரிமகளிர் நிலவொளியில் அமர்ந்து ஏங்குவதைச் சித்தரிக்கும் காட்சியை அழகான வண்ணத்தில் வரைந்திருந்தார். நான் மலரின் உள்ளே பல ஓவியங்களையும், தலைப்புகளையும் வரைந்திருந்தேன். எனக்கும் கூட 'முத்தமிழ்' பயிற்சிக்களமாக இருந்தது என்றால் மிகை இல்லை.

ஆண்டு மலர் வெளியிட்டதும் 'முத்தமிழ்' இதழின் நினைவாக சிற்பி அவர்கள்
ஆசிரியக் குழுவினரையும் அதன் ஓவியர்களான எங்கள் இருவரையும் கொண்டதான ஒரு போட்டோ எடுக்கவும் ஏற்பாடு செய்தார். காலடியில் 'முத்தமிழ்' இதழ்களும் வைக்கப்பட்டிருந்த அந்தப் படம் 50 ஆண்டுகள் கடந்தும் என் வசம் இன்னும் உள்ளது.

20 ஆண்டுகளுக்கு முன் சிற்பி அவர்கள் பாரதியார் பலகலையில் தமிழ்த்துறைத்
தலைவராக இருந்தபோது என்னையும், நண்பர்கள் பூவண்ணன், புவனைகலைச்செழியன், தம்பிசீனிவாச்ன், பூவை அமுதன் போன்ற 16 குழந்தை இலக்கியப் படைப்பாளிகளை அழைத்து கோவையில் 'குழந்தை இலக்கியக் கருத்தரங்கு' நடத்திய போது, அவர் எங்களுக்கு அளித்த முக்கியத்துவத்தையும், விருந்தோம்பலையும் மறக்கவியலாது. தொடர்ந்து அவரிடம் தொடர்புக்கு வாய்ப்பு ஏற்படாதிருந்தும் இது போன்ற நிகழ்வுகளில் அவ்வப்போது சந்தித்திது வந்தேன்.

அதன் பின்னர் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் என்னை மறவாது அதே அன்புடன் இன்றும் நட்புப் பாராட்டும் அவருடைய இனிய பண்பில நான் மிகவும் நெகிழ்கிறேன். அண்மையில் நடைபெற்ற அவரது பவளவிழாவிற்கு எனக்கு அழைப்பு அனுப்பியதுடன் விழாஔ நினைவு மலருக்கு எனது கட்டுரையையும் கேட்டிருந்தார். உடல் நலிவு காரணமாய் என்னால் நேரில் சென்று விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை.வாழ்த்தும் கட்டுரையும் அனுப்பி வைத்தேன். உடன் முத்தமிழ் ஆண்டு மலரின் நினைவாக எடுக்கப்பட்ட போட்டோவின் நகலையும் அனுப்பி வைத்தேன். 0

Friday, October 07, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 18.எழுத்தாளர் சந்திப்பு - 5. சி.மணி

சென்னை சென்றபோதெல்லாம் நான் தவறாமல் சந்தித்த இலக்கிய நண்பர்-
திரு.ஒய்ஆர்.கே.சர்மா என்பவர். நண்பர் பி.ச.குப்புசாமி அவர்கள் மூலம்
அறிமுகமானவர். அவருக்கு எல்லா எழுத்தாளர்களிடமும் நெருக்கமான பழக்கம்
உண்டு. ஜெயகாந்தனின் அணுக்கக் குழுவினரில் ஒருவர். எல்லா இலக்கியப்
பத்திரிகைகளுடனும், 'தமிழ்ப் புத்தகாலயம்' போன்ற பதிப்பகங்களுடனும்
தொடர்பு உடையவர். சென்னையில் நடக்கும் எல்லா இலக்கியக் கூட்டங்களிலும்
அவரைப் பார்க்கலாம். சென்னை சென்றதும் முதலில் அவரைத்தான் பார்ப்பேன்.
அன்று சென்னையில் எங்கெங்கு, என்னென்ன இலக்கிய நிகழ்ச்சிகள் நடக்க
உள்ளன என்று தெரிவிப்பார். அங்கெல்லாம் என்னையும் அழைத்துப் போவார்.
அங்கு வரும் எழுத்தாளர்களை அறிமுப்படுத்துவார். இலக்கியச் சிற்றிதழலாளர்
களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

அப்படி அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் - 70களில் பரபரப்பை ஏற்படுத்திய
இலக்கிய இதழான் 'ஒரு வல்லின மாத ஏடு' என்று பிரகடனப்படுத்திக் கொண்ட
'கசடதபற'வின் ஆசிரியர் குழு, மற்றும் அதன் முக்கியப் படைப்பாளிகளான
திருவாளர்கள் ஞானக்கூத்தன், சா.கந்தசாமி, ந.முத்துசாமி ஆகியோர். திருவல்லிக்கேணியில் திரு.ஞானக்கூத்தன் அறை தான் 'கசடதபற'வின் அலுவலகம். அங்கு தான் அநேகமாக எல்லா நாட்களிலும் கசடதபற குழுவினர் மாலையில்சந்திப்பார்கள். சர்மாவின்அறிமுகத்தால் நான் சென்னையில் இருக்கும் நாட்களில்எல்லாம், அவருடன் சென்று அவர்களது உரையாடல்களில் கலந்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு சந்திப்பில் தான் திரு.ந.முத்துசாமியுடன் பரிச்சயம் ஏற்பட்டது.

அறிமுகம் ஆனபிறகு முத்துசாமி, என் ஊர், நான் படித்த கல்லூரி, படித்த ஆண்டு பற்றியெல்லாம் விசாரித்தர். நான் அண்ணாமலையில் 1956-57ல் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்ததைச் சொன்னதும், "அப்படியானால் உங்களுக்கு சி.மணியைத் தெரிந்திருக்க வேண்டுமே! அவரும் அந்த ஆண்டில் தான் அங்கு ஆசிரியர் பயிற்சி பெற்றார்", என்றார். அப்போது சி.மணி 'எழுத்து' பத்திரிகை மூலம் புதுக்கவிதைக் கவிஞராய் பிரபலமாகி இருந்தார். "அப்படி யாரும் என்னுடன் படித்ததாக நினைவில்லையே" என்றேன். "இல்லை, உங்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும். இன்று மாலை அவர் வருகிறார். பாருங்கள் தெரியும்" என்றார். எனக்கு வியப்பாகவும் புதிராகவும் இருந்தது. அப்போது அண்ணாமலையில் படித்து 15 ஆண்டுகள் ஆகி இருந்தபோதிலும் என்னுடன் படித்த 75 பேரையும் நன்றாக நினைவில் இருந்தது. எனவே பிரபல கவிஞரான சி.மணி என் வகுப்புத் தோழரா என்ற வியப்பில் அவரைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருந்தேன்.

மாலையில் ஞானக்கூத்தன் அறைக்குச் சென்ற போது, முத்துசாமி, அருகில்
அமர்ந்திருந்த ஒருவரைக் காட்டி, "இதோ, இவர் தான் சி.மணி" என்றார்.
"அடடே! நம்ம பழனிசாமி!" என்று நான் மகிழ்ச்சியில் கூவினேன். "ஆமாம், சி.மணி என்கிற பெயரில் எழுதுகிறவர் பழனிசாமி என்று நான் சொல்லத் தவறி விட்டேன்"என்றார் முத்துசாமி.

சி.மணி, பல ஆண்டுகளுக்குப் பின் சந்திக்கிற மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்."முத்துசாமி உங்கள் பெயரைச் சொன்னதும் புரிந்து கொண்டேன். 'கன்னாங்குளம் கேம்பி'ல் நீங்கள் வரைந்த பாரதி போர்ட்ரெயிட்டை மறக்க முடியுமா? எப்படி இருக்கிறீர்கள்?" என்று விசாரித்தார் மணி. இப்படித்தான் என் வகுப்புத் தோழரான சி.மணியுடன் எனக்கு மீண்டும் தொடர்பு ஏற்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு ஆங்கிலத்தில் முதுகலைப் பட்டம் பெற்று, குமாரபாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் அப்போது அவர் ஆங்கில விரிவுரையாளராக இருந்தார் என அறிந்தேன்.

பழனிசாமி எங்களுடன் பயின்றபோது மிகவும் அமைதியானவர். அதிர்ந்து
பேசாதவர். அவரது குரலே பலருக்குக் கேட்டிராது. மெலிந்த உருவம். தீர்க்கமான
கண்கள். எப்போதும் மெல்லிய பன்னகை. எல்லோராலும் விரும்பப்படுகிற அரிய
பண்பாளர். எங்களுடன் பயின்றபோது அவர் கவிதை எழுதுவார் என்று தெரியாது.
ஆனால், அப்போதே நான் பத்திரிகைகளில் கதைகள் எழுதி வந்ததை அவர் அறிவார்.

அதன் பிறகு, சென்னையில் கிடைத்தபோதெல்லாம் அவரைச் சந்தித்து வந்தேன்.ஒருமுறை, "சி.மணி, வே.மாலி என்ற பெயர்களில் நீங்கள எழுதிய கவிதைகளை 'எழுத்து'வில் படித்திருக்கிறேன் ஆனால் நீங்கள் தான் அவர் என்று அப்போது தெரியாது. தெரிந்த பிறகு மீண்டும் தேடிப் படித்தேன்" என்றேன். என் கவிதைகள் எப்படி உள்ளன என்று அவர் கேட்கவில்லை. நானாகச் சொன்னேன். "ஆனால் இப்போதும் உங்கள் கவிதைகள் எனக்குப் புரியவில்லை. புதுக்கவிதைகளை என்னால் ரசிக்க முடியவில்லை" என்றேன். அதற்காக அவரது முகம் வாடவில்லை. என்னிடம் விவாதிக்கவோ விளக்கவோ இல்லை. மென்னகை மட்டும் அவரது இதழ்களில் மலர்ந்தது. அவ்வளவு சாந்தசீலர் அவர். ஆனால் பின்னாளில் எனக்காகத்தானோ என்னவோ 'புததுக்கவிதை புரியவில்லை' என்ற தலைப்பில் 'நடை' இதழில் ஒருகட்டுரை எழுதினார்.

பிறகு அவரும் ந.முத்துசாமி போன்ற நண்பர்களும் சேர்ந்து 'நடை' என்றொரு
இலக்கிய இதழைத் தொடங்கியபோது, முதல் இதழைப் படித்து விட்டுப பாராட்டி
அவருக்குக் கடிதம் எழுதினேன். முதல் இதழில் சங்கக் கவிதைப் பாணியில்
சி.மணி என்ற பெயரில் கீழ்க்கண்ட கவிதையை எழுதி இருந்தார்.

'காதல் காதல் என்ப; காதல்
வெறியும் நோயும் அன்றே; நினைப்பின்,
இறக்கம் நோக்கிப் பாயும் நீராம்;
சாதல் கவிந்த வாழ்வில்
வானம் தந்த வாம நீராம்' .

- இந்தக் கவிதை எனக்குப் புரிகிற மாதிரி இருந்தது. அதையும் அவருக்கு எழுதி
இருந்தேன். கவிதை மட்டுமல்லாமல், 'செல்வம்' என்ற பெயரில் 'திரைப்படப் பாடல்' என்றவொரு ஆய்வுக் கட்டுரையும் எழுதியிருந்தார். 3வது இதழுடன் யாப்பிலக்கணம் பற்றி 'செல்வம்' என்ற பெயரில் எளிமையான, கவிதை எழுதுவோருக்குப் பாடப்புத்தகம் போன்ற ஒரு 28 பக்க இணைப்பையும் எழுதி வெளியிட்டார். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தும, ஒரு தமிழ்ப் பேராசிரியரையும் விடத் தெளிவுடன் எழுதி இருந்தது மிகுந்த பாராட்டுக்குள்ளாயிற்று .

அதே இதழில் 'வாழ்வு தந்த செல்வன்' என்ற, சி,.ஏ.பாலன்,மலையாளத்திலிருந்து
மொழிபெயர்த்திருந்த எம்.டி வாசுதேவன் நாயரின் சாகித்ய அகாதமி விருது பெற்ற
'நாலு கெட்டு' என்ற நாவலுக்கு சி.மணிகேட்டுக்கொண்டபடி, நான் விமர்சனம்
செய்திருந்தேன். அதுதான் நான் முதன் முதல் எழுதிய விமர்சனமும் ஆகும்.

தரமான படைப்புகளுடனும், புதிய சோதனை முயற்சிகளுடனும் சிறப்பாக
வெளிவந்து, தனக்கென ஒரு சிறப்பிடத்தை சிற்றிதழ் வரலாற்றில் பதித்த 'நடை'
8 இதழ்களுடன் நிறுத்தப்பட்டு விட்டது- இலக்கிய உலகுக்குப் பெரிய இழப்பு
என்றே சொல்ல வேண்டும். வழக்கமாக சிற்றிதழ்கள் நின்று போவதற்குப்
பொருளாதார நெருக்கடிதான் காரணமாய் இருந்திருக்கிறது. ஆனால் 'நடை'
அதனால் நின்று போய்விடவில்லை. நடையை நடத்தியவர்கள் அனைவரும்
வசதியான வருவாய் வரும் நல்ல வேலையிலதான் இருந்தார்கள். அதனால்
அவர்களுக்குப் பண நெருக்கடி இல்லை. ஒரு இலட்சியத்தோடு நடத்தியவர்கள்,
வெளியிடுவதற்குத் தரமான படைப்புகள் கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில்
தாமாகவே வெளியீடை நிறுத்தி அதிலும் ஒரு சாதனையைப் படைத்தார்கள்.

பின்னர் பல ஆண்டுகளாக அவருடனான எனது தொடர்பு விட்டுப்போயிற்று.
அவரும் பணி ஓய்வுக்குப்பின் எழுதுவதை நிறுத்திக் கொண்டதாகக் கேள்விப்
பட்டேன். உடல் நலிவு காரணமாக, இலக்கிய நிகழ்வுகளையும் தன்னைச் சந்திக்க வருபவர்களையும் தவிர்த்து வந்ததாகவும் அறிந்தேன்.

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் அவருடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பு
நேரிட்டது. அவருக்கு 'விளக்கு' பரிசு வழங்கப்பட்டுள்ளதாக செய்தித்தாள் மூலம்
அறிந்து அவருக்கு ஒரு பாராட்டுக் கடிதம் எழுதினேன். அவரும் நன்றி தெரிவித்து
அதற்குப் பதிலும் எழுதினார். பிறகு நான் விரும்பினாலும் அவருடன் தொடர்பு
கொள்ள முடியாதபடி 2009 ஏப்ரலில் அவரது மறைவுச் செய்தியையும், அடுதடுத்த
மாதங்களில் அவரது மறைவிற்கான அஞ்சலிக் கட்டுரைகளையும் இலக்கிய
ஏடுகளில் படிக்க நேர்ந்தது. இனிய நண்பரை நானும், ஒரு சிறந்த படைப்பாளியை
இலக்கிய உலகமும் இழந்த சோகத்தை, இன்னும் மனம் வலிக்க எண்ணிப்
பார்க்கிறேன். அவரது 'வரும் போகும்' கவிதைத் தொகுப்பு மட்டும் அவரை
நினைவூட்ட என்னிடம் இருக்கிறது. 0

Saturday, October 01, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 17. எழுத்தாளர் சந்திப்பு - 4. (மௌனி)

“நினைவுப்பாதை” முற்றிலும் ஒரு மாறுபட்ட வாசிப்பாகவே எனக்கு அமைந்தது. இப்பொழுது கூட அக்கதையில்(கதையா?) வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவிருக்கிறதே தவிர அவற்றின் தன்மைகள் விளங்கவில்லை எனக்கு. மேலும் பெரும்பாலான இடங்களில் வார்த்தை விளையாட்டு காணப்படுகிறது. அதுவே வேண்டுமென்றே திணிக்கப்பட்டது போல் தெரியவில்லை. அவர் எழுத்து நடையே அப்படிதானா? என்று எண்ணத் தோன்றுகிறது"

- நகுலனின் 'நினைவுப்பாதை' நூலை வாசித்த பிரவின் என்கிற வாசகரின்
விமர்சனம் இது. 'மணிக்கொடி' எழுத்தாளர் திரு.மௌனி அவர்களது சிறுகதைகளைப் படித்தபின் எனக்கும் இதே எண்ணம்தான் எழுந்தது. இன்னும் அதில் மாற்றமில்லை. புதுமைப்பித்தன் அவரை 'தமிழ்ச் சிறுகதையின் திருமூலர்' என்று விமர்சித்தது எதை உத்தேசித்து என்று எனக்கு இன்றளவும் புரியாத புதிர்தான். 'நிந்தாஸ்துதி' போல புகழ்வது போல கேலி செய்திருக்கிறாரோ என்று கூட நினைத்திருக்கிறேன்.ஜெயகாந்தன் அவரது 'மாறுதல்' கதைதான் தனக்குப் பிடித்த கதை என்று சொன்னதும் எனக்கு ஒத்துப் போகவில்லை. அந்தக் கதை மட்டுமல்ல அவரது மற்ற கதைகளும் என்னை ஈர்க்கவில்லை. 'எவற்றில் நடமாடும் நிழல்கள நாம்' என்பது போன்ற ஓரிரு வரிகள் ஒருவித மயக்கத்தைத் தருகின்றன என்ற அளவில் மட்டுமே அவரது எழுத்து என்னுள் நிற்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் 18-1-92 &19-1-92 தேதிகளில் நெய்வேலியில் 'வேர்கள் கலை இலக்கிய அமைப்பின் சார்பில் 'வேர்கள் ராமலிங்கம்' ஏற்பாடு செய்த 'மௌனி கதைகள்'என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கில், மௌனி கதைகளைப் பதிப்பித்தவரும் இன்றளவும மௌனியைத் தூக்கிப் பிடிப்பவருமான திரு.கி.சச்சிதானந்தம் அவர்களும் மற்றும் எம்.டி.முத்துக்குமார், 'லயம் சுப்பிரமணியம் ', சா.தேவதாஸ், எம்.வேதசகாயகுமார், பூர்ணசந்திரன், ஞானி, அ.மார்க்ஸ், தமிழவன் எனப் பலரும் மௌனியின் படைப்புகளை விதந்து விமர்சித்தர்கள். அதில் கலந்து கொண்ட எனக்கு அப்போதும் மௌனியிடம்
ஏதும் பிரமிப்பு ஏற்படவில்லை. எல்லோரும் பாராட்டுகிற எழுத்தைப் புரியவில்லை என்று சொல்வது எனது அஞ்ஞானத்தைக் காட்டுவதாக யாராவது நினைத்தால் அது என்னைச் சங்கடப் படுத்தாது. உண்மையில் அதிகம் பேர், 'புரியவில்லை' என்று சொல்லக் கூச்சப்பட்டே அப்படிப் பாராட்டி இருப்பார்கள் என்றே நான் நினைக்கிறேன்.

அதற்கு முன்பாகவே மௌனி அவர்களை நான் திட்டமிடாமலே சந்திக்கும் ஒரு
வாய்ப்பு ஏற்பட்டது. 1970ல் ஓருநாள் நான் அவர் வசித்த சிதம்பரத்துக்கு ஒரு
வேலையாகச் சென்றிருந்த போது அது நிகழ்ந்தது. தெற்கு ரத வீதியில், அவர் வசித்த சத்திரம் போன்ற வீட்டிற்கு அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் விருத்தாசலம் செல்லும் பேருந்துக்காகக் காத்திருந்த நேரத்தில், மௌனி இங்குதான் குடி இருக்கிறார் என்பதை முன்பே கேள்விப்பட்டிருந்தது நினைவுக்கு வரவே, அவரைப் போய் பார்த்தால் என்ன என்று திடீரென்று தோன்றவே உடனே பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு அவரது வீட்டை நோக்கி நடந்தேன்.

முன்புறம் ஒரு சின்ன திண்ணையும், மறுபுறம் விசாலமான நீண்ட திண்ணையும் இருந்தன. சின்ன திண்ணை மீது, கச்சலான கருப்பு உடம்புடன, சரியாகச் சீவப்படாமல் சிலும்பி நின்ற வெள்ளை முடியுடன், தீர்க்கமான பர்வையுடன் ஒரு முதியவர் அமர்ந்திருந்தார். 'மௌனி கதைகள்' பின்னட்டையில் பார்த்த உருவம் போல இருந்தது. அருகில் நெருங்கி வணக்கம் தெரிவித்தேன். அவர் நிமிர்ந்து உட்கார்ந்து "வாங்கோ, யாரப் பார்ககணும்" என்றார். "மௌனி அவர்கள்.........." என்று இழுத்தேன். "நாந்தான்! என்ன வேணும்?" என்றார். நான் என்னை பற்றியும், என் எழுத்து முயற்சி பற்றியும் சொல்லி ஒரு மூத்த எழுத்தாளர் என்ற முறையில் அவரைப் பார்க்க வந்ததாகச் சொன்னேன். "என்ன எழுதி இருக்கேள்?" என்று கேட்டார். எப்போதும் கைப்பையில் வைத்திருக்கிற அந்த ஆண்டில் வந்த என் முதல் சிறுகதைத் தொகுதியை எடுத்து
நீட்டினேன். அதை வாங்கிப் புரட்டியபடி, "என் கதைகளைப் படிச்சிருக்கேளா?" என்று கேட்டார். "படிச்சிருக்கிறேன்" என்றேன். பின் தயக்கத்தடன் "ஆனால் உங்கள் கதைகள் எனக்குப் புரியவில்லை" என்றேன். கையிலிருந்த என் புத்தகத்தைக் கீழே வைத்து விட்டு, "என்ன புரியவில்லை? எந்தக் கதை புரியவில்லை?" என்று கேட்டார். "எனக்குச் சொல்லத் தெரியவில்லை. எந்தக் கதையும் புரியவில்லை" என்றேன். அவர் என் பதிலால் ஏமாற்றமோ அதிருப்தியோ கொண்டமாதிரி தெரியவில்லை. "திரும்பவும் படிச்சுப் பாருங்கோ!" என்று மட்டும் சொன்னார்.

அப்போதுதான் பெரிய திண்ணையில் கடைசியில், ஒருவர் சம்மணமிட்டு
அமர்ந்திருந்ததைக் கவனித்தேன். அவரது முகம் எனக்குப் பரிச்சயமானது போல்
தோன்றியது. அவர் எங்கள் பக்கம் பார்காமல் எங்கோ வெறித்துப் பார்த்தபடி இருந்தார். அப்போது அவர் அணிந்திருந்த வெள்ளைப் பேன்ட், வெள்ளைச் சட்டையில் - அண்ணாமலையில் நான் பயின்ற கடைசிநாட்களில் புகுமுக வகுப்பில் பயின்ற கிரிக்கட் விளையாட்டுக்கார மாணவரை ஒத்து இருக்கவே, "அவர்......" என்று இழுத்தேன். "அவன் என் பையன்!" என்றார். "கல்லூரியில் பார்த்திருக்கிறேன்" என்றேன். "அவனுக்கு கொஞ்சம் சித்த சுவாதீனம் இல்லை" என்று எந்த முகமாற்றமும் இன்றிச் சொன்னபோது அதிர்ந்து போனேன். கொஞ்சமும் இங்கிதமின்றி, ஒரு தந்தையிடமே அப்படி ஒரு விசாரிப்பைக் கேட்டதற்காக மிகவும் வருந்தினேன். அதற்கு மேல் அவரிடம் பேச்சைத்
தொடர எனக்குச் சங்கடமாய் இருந்தது. நெருப்பில் கை வைத்துவிட்ட துடிப்புடன் எழுந்து விடை பெற்றேன். அவரும் மேற்கொண்டு பேசாமல் தலை அசைத்து விடை கொடுத்தார்.

பின்னாளில், அதற்கு முன்னதாக அவரது இன்னொரு மகன் இறந்து போனதை
அறிந்தேன். புத்திர சோகத்தில் அவர் இருந்ததை அறியாமல் அவர் கதை பற்றிய என் கசப்பான விமர்சனத்தை அவரிடமே பேசி விட்ட எனது இங்கிதமற்ற செயலை எண்ணி, அதன் பின் அவர் பெயரை உச்சரிக்கும் போதெல்லாம் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறேன். 0

Thursday, September 22, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 16 . எழுத்தாளர் சந்திப்பு - 3 (அசோகமித்திரன்)

'கணையாழி' தொடங்கிய 1965ஆம் ஆண்டின் இறுதியில், திரு. அசோமித்திரன்
அவர்களை சென்னை பெல்ஸ் ரோடில் இருந்த கணையாழி அலுவலகத்தில் தான்
முதன்முதலாகச் சந்தித்தேன். அப்போது அவர் கணையாழியின் சென்னை பொறுப்பாளராக இருந்தார். கணையாழியின் முதல் இதழ் முதல் பெற விரும்பி, என்னிடம் இல்லாத இதழ்களை வேண்டி அவரைச் சந்தித்தேன். கைவசம் இருந்த முன் இதழ்களைத் தந்து, விட்டுப்போனவற்றைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி அப்படியே பிறகு வாங்கியும் தந்த அவரது அன்பையும், கரிசனத்தையும் நான் என்றும் மறக்க முடியாது.

அன்று அவர் அதிகம் பிபலமாகி இருக்கவில்லை. அவரது இயற் பெயரான
ஜ.தியாகராஜன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தார். கலைமகள் நடத்திய
'வண்ணச் சிறுகதை'ப் போட்டி'யில் அவரது 'மஞ்சள் கயிறு' என்ற கதை
முதற் பரிசு பெற்ற பிறகுதான் அவர் கொஞ்சம் வெளியே தெரிய வந்தார். பிறகு
தான் 'அசோகமித்திரன்' என்ற பெயரில் எழுத ஆரம்பித்தார்.

கணையாழி இதழ்களுக்காகாக அவரைச் சந்தித்த பிறகு, சென்னை சென்ற
போதெல்லாம் தி.நகர் பேருந்து நிலையத்துக்கு எதிரே தாமோதர ரெட்டிதெருவில்
இருந்த அவரது வீட்டுக்குச் சென்று பலமுறை சந்தித்திருக்கிறேன்.

1967ல் திருச்சிக்கு, வானொலி நிலையத்தின் 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' பதவிக்கான
தேர்வு ஒன்றிற்காக நான் சென்றிருந்தபோது அதே தேர்வுக்கு அசோமித்திரனும்
வந்திருந்தார். அப்போது அவர் எங்கும் வேலையில் இல்லை. "இது வெறும்
கண்துடைப்பு! முன்பே ஆளைத் தேர்ந்து வைத்துக்கொண்டு நம்மை அழைத்திருக்
கிறார்கள். எனக்கு நம்பிக்கை இல்லை. வீணாக செலவு செய்து கொண்டு வந்தது
தான் மிச்சம்" என்று விரக்தியோடு பேசினார். முடிவு அவர் சொன்னபடியேதான்
ஆயிற்று. வானொலியில் முன்பே பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்
ஒருவருக்குத்தான் அந்த வேலை கிடைத்தது,

கஸ்தூரிரங்கன் சென்னைக்குத் திரும்பி, கணையாழி பொறுப்பை அவரே ஏற்றுக் கொண்ட பின், அசோகமித்திரன் அதிலிருந்து விலகிக்கொண்டார். ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு மேலாக கணையாழியின் வளர்ச்சிக்கு பலன் கருதாமல் உழைத்தவருக்கு சரியான அங்கீகாரம் கிடைக்காத ஆதங்கத்தில் அவர் விலகியதாகப் பேச்சு அடிபட்டது. அதற்குப் பிறகு அவர் கணையாழியில் எழுதவுமில்லை. தொடர்பும் இல்லை. தன்னைப் புறக்கணிப்பதாக அவருக்கு ஒரு வருத்தம் இருந்தது என்றார்கள். எனக்கு அது பற்றி அப்போது அதிகம் தெரிந்திருக்கவில்லை.

இந்நிலையில் கணையாழி தொடங்கி முப்பது ஆண்டுகள் 1995ல் ஆனதை ஒட்டி,கணையாழியின் கடந்த காலங்களை நினைவு படுத்தும் வகையில் ஒரு தொடர் எழுதுமாறு திரு.கி.க அவர்கள் என்னைக் கேட்டுக் கொண்டார். அதன்படி 19995 ஜூன் முதல் 'கணையாழியின் பரிணாம வளர்ச்சி' என்ற தலைப்பில், முதல் இதழ் முதல் மாதம் ஒரு இதழாக அதன் வளர்ச்சியை எழுதி வந்தேன். அத்தொடரில் அசோகமித்திரன் படைப்புகளை அவ்வப்போது குறிப்பிட்டும் அவரது பொறுப்பில் சென்னையிலிருந்து வெளியானது பற்றிக் குறிப்பிட்டும் வந்திருக்கிறேன். ஆனால் யாரோ அவரிடம் அத்தொடரில் அவரை இருட்டிப்பு செய்துள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். முன்பே வருத்தம் இருந்த நிலையில் கஸ்தூரிரங்கள் அவர்கள் சொல்லித்தான் நான் அவரைக் குறிப்பிடாது எழுதி வருவதாக எண்ணி இருக்கிறார்.

அந்நிலையில், ஒருமுறை அவரை நான் இலக்கிய சிந்தனை ஆண்டு விழாவில்
சந்தித்தபோது ஆர்வமுடன் பேச அணுகிய போது அவர் சுமுகம் காட்டவில்லை.
பின்னணி தெரியாமல், "நான் கணையாழியில் எழுதி வரும் தொடரைப் பார்க்கிறீர்களா?"என்று கேட்டதற்கு அவர் அசிரத்தையாய் "பார்த்து என்ன ஆகப் போகிறது? நீங்களும் அப்படித்தான்!" என்றார். பிறகு நான் அவரது அதிருப்தியின் காரணத்தை உணர்ந்து,"நீங்கள் படிக்கவில்லையா? கிடைத்தால் பாருங்கள். உங்களைப்பற்றி பல இதழ்களில் குறிப்பிட்டுள்ளேன். பார்க்காமல் யார் சொல்வதையாவது நம்பாதீர்கள்" என்று அவரைச் சமாதானப்படுத்த முயன்றேன். ஆனால் அவர் திருப்தியடைந்த மாதிரி அவரது முகத்தோற்றம் இல்லாதது எனக்கு வருத்தத்தை அளித்தது. பிறகு அவருடனான தொடர்பு விட்டுப் போயிற்று. 0

Saturday, September 17, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் – 15.எழுத்தாளர்கள் சந்திப்பு – 2.ஜெயகாந்தன்





எனது எழுத்தார்வத்துக்கு முதலில் தூண்டுதலாக இருந்தவர் திரு.அகிலன் என்றால், அதனைத் தீவிரப்படுத்தியவர் திரு.ஜெயகாந்தன் அவர்கள். 1957ல்தான் அவரது படைப்பை நான் ‘சரஸ்வதி’ இதழில் படித்தேன். பிறகு ‘ஆனந்தவிகடனி’ல் வந்த முத்திரைக் கதைகளும், குறுநாவல்களும், தொடர் நாவல்களும் என்னை அவரது தீவிர ரசிகனாக ஆக்கின. அதற்குப் பிறகு புதுமைப்பித்தனைப் படிக்க நேர்ந்த போது, ஜெயகாந்தன் அவரது வாரிசாகவும், அவரது இடத்தை நிரப்புகிற வராகவும் எனக்குத் தெரிந்தார்.

1962ல் அரியலூரில் நடைபெற்ற ‘கலை இலக்கியப் பெருமன்ற’ ஆண்டு விழாவில் ஜெயகாந்தன் அவர்கள் பேச வந்தபோது, மன்றத்தின் அப்போதைய செயலாளரும், என் உறவினருமான திரு.ஏ.ஆர்.சீனிவாசன் அவர்கள், நான் ஜெயகாந்தனின் ரசிகன் என்பதை அறிந்திருந்ததால், அவரை எனக்கு அறிமுகப்படுத்துவதற்காக என்னையும் அக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார். நானும் ஆர்வத்துடன் சென்றேன்.

திரு.சீனிவாசன் அவர்கள் என்னை ஜெயகாந்தன் அவர்களுக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் இன்னொரு அரிய வாய்ப்பினையும் எனக்கு நல்கினார். அன்றைய விழாவுக்குத் தலைமை தாங்க வேண்டியவர் வராத நிலையில், என்னைத் தலைமை தாங்கும்படி கேட்டுக் கொண்டார். ஜெயகாந்தன் அவர்களைப் பார்க்கவும், அவரது பேச்சைக் கேட்கவும் வந்த எனக்கு, அவரது கூட்டத்து்க்குத் தலைமை தாங்கும் வாய்ப்புக் கிட்டுமென்று நான் கனவு கூடக் கண்டதில்லை. அதனால், அவரது பிரம்மாண்டம் கருதி அதை ஏற்கத் தயங்கினேன். பேராசிரியர் எம்.எஸ்.நாடாரும் அவ்விழாவுக்கு வந்திருந்தார. அப்போது நான் ‘ஆனந்தபோதினி’, ‘பிரசண்ட விகடனை’த் தாண்டி, மெல்ல,’ஆனந்தவிகட’னில் எழுதும் வளர்ச்சி பெற்றிருந்தேன். அதனைச் சுட்டிக் காட்டி திரு.சீனிவாசன் அவர்கள்,” நீங்களும் எழுத்தாளர் – அதோடு அவரது தீவிர ரசிகர் என்பதால், நீங்கள் தலைமை ஏற்கத் தகுதியானவர்தாம் தயங்க வேண்டாம்” என்று சொல்லி, தலைமை ஏற்க வைத்தார்.

மேடையில் பக்கத்தில் அமர்ந்திருந்தாலும் ஜெயகாந்தன் என் பக்கம் திரும்பிப் பார்க்கவோ சுமுகம் காட்டவோ இல்லை. அப்போதைய அவரது மனநிலையில் என்னைப் போன்ற கற்றுக்குட்டி எழுத்தாளர்களோ ரசிகர்களோ அவருக்கு ஒரு பொருட்டாகத் தெரியாமல் இருந்திருக்கலாம். நெருக்கமற்ற எவரிடமும் அவர் அலட்சியமாகவே நடந்து கொள்கிறார் என்ற பேச்சு இருந்தது. எனவே அவரது உதாசீனத்தை நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரது கூட்டத்துக்குத் தலைமையேற்கும் வாய்ப்புக் கிடைத்த பூரிப்பில் அப்போது நான் இருந்தேன்.

எனது தலைமை உரையில், “திரு.ஜெயகாந்தன் அவர்கள் புதுமைப்பித்தனுக்குப் பிறகு நமக்குக் கிடைத்த அரிய எழுத்தாளர். புதுமைப்பித்தனைப்போலவே அற்புதமாக எழுதுகிறார்” என்றேன். ஜெயகாந்தன் அவர்கள் தனது உரையில், “திரு.சபாநாயகம் அவர்கள் நான் புதுமைப்பித்தனைப் போல எழுதுவதாகச் சொன்னார். இல்லை! நான் புதுமைப்பித்தனை விடவும் மேலாக எழுதுகிறேன். புதுமைப்பித்தனைப் போல எழுதுவதற்கு இன்னொருவர் எதற்கு? நான் ஜெயகாந்தனாக எழுதுகிறேன்” என்று வெட்டினார். அப்போது யார் என்ன பேசினாலும் வெட்டிப் பேசுவது அவரது பாணியாக இருந்தது.

கூட்டம் முடிந்து திரு.சீனிவான் வீட்டில் மதிய உணவுக்குப்பின் பேசிக் கொண்டிருந்தபோது, “நீங்கள் என்ன புத்தகம் படிப்பீர்கள்” என்று ஒரு வாசகனின் அசட்டு ஆர்வத்தோடு கேட்டேன். ” நான் எதுவும் படிப்பதில்லை” என்று மறுபடியும் என்னை வெட்டினார்.மேலும் அவருடன் பேச்சைத் தொடர முடியாதபடி எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

பின்னாளில் அவருடன் நெருக்கமாகப் பழகும் நிலை ஏற்பட்டபோது, ஒருமுறை நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் அவர் பல புத்தகங்களைக் குறிப்பிட்டார். உடனிருந்த நான் “என்ன ஜே.கே! உங்களை நான் முதன்முதல் சந்தித்தபோது, ‘நான் எதுவுமே படிப்பதிலை’ என்றீர்களே!” என்று கேட்டேன். “அதுவா? அப்போது நீங்கள் புதுசில்லையா? ஒரு மிரட்சிக்காக அப்படிச் சொல்லி வைத்தேன்!” என்று சிரித்தார். அப்போது அவருடன் ஒரு படமும் எடுத்துக் கொண்டேன்.

வேலூர் மாவட்டம் திருபபத்தூரில் அவருக்குப் பல நண்பர்கள உண்டு. அவர்களில் எனது நண்பரான திரு.பி.ச.குப்புசாமி அவருக்கு மிகவும் அணுக்கமானவர். சென்னையில் அவருக்கு அலுப்பு ஏற்படும்போதெல்லாம் திருப்பத்தூருக்கு வந்து விடுவார். அப்படி அவர் வரும் போதெல்லாம் குப்புசாமி எனக்கு எழுதி அங்கு என்னையும் அழைத்துக் கொள்ளுவார். இரண்டு மூன்று நாட்கள் இலக்கிய போதையோடு நண்பர் குழாம் மெய்ம்மறந்து நிற்கும்.

அப்படி ஒரு முறை, திருப்பத்தூருக்கு அருகில் உள்ள ஜம்னாமரத்தூர் என்கிற மலைகிராமத்தில் அங்குள்ள பயணியர் மாளிகையில் திரு.குப்புசாமியின் ஏற்பாட்டின் படி நண்பர்கள் புடைசூழ ஜெயகாந்தன் அவர்களுடன் கழித்த மூன்று நாட்கள் மறகக வியலாதவை. கூடத்தின் நடுவே, அவர் அக்கிராசனர் போல் கட்டிலில் அவர் சம்மணமிட்டு, நடராஜரின் சடாமுடி போல தலைமுடி விரிந்து பிடரியில் தொங்க, மீசையை முறுக்கிய படி, ஒரு சிம்மம் போல் அமர்ந்திருக்க, நாங்கள் கட்டிலைச் சுற்றி அமர்ந்திருப்போம். திரையுலக நண்பர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள மற்றம் அந்த மலைப் பிரதேசத்துப் பிரஜைகள் சிலரும் அதில் அடக்கம். பாரதியை தனது குருவாகக் கொண்ட அவரது பேச்சில், பாரதியின் கவிதை வரிகள் உணர்ச்சி பொங்க, வெள்ளமாய்க் கொட்டும். கர்நாடக சங்கீதத்தில் அவருக்கு நல்ல பயிற்சி இருந்ததால், ‘தாயே யசோதா உந்தன் ஆயர் குலத்துதித்த….’ போன்ற பாடல்களை இடையிடையே அவர் பாடும் போது, கேட்கச் சிலிர்ப்பாக இருக்கும். ‘கள்ளால் மயங்குவது போலே, கண்மூடி வாய் திறந்தே கேட்டிருப்போம்’ என்கிற பாரதியின் வரிகளைத்தான், அவரது பேச்சிலும் பாட்டிலும் கிறங்கி நின்ற எங்கள் நிலையைச் சொல்ல முடியும். ஒரு மேதையின் சந்நிதானத்தில் நிற்கிற ஒருவித பரவசத்தை நான் அப்போது அனுபவிதேன்.

திடீரென்று எழுந்து திறந்தவெளிக்கு வந்து, அவரது ‘ஆலமரம் ஆலமரம், பாலூத்தும் ஆலமரம்…’ என்கிற அற்புதமான பாடலைத் தனி ராகத்தில் பாடுவார். எல்லோரும் வெளியில் வந்து அதை ரசிப்போம். சிலரை அழைத்து அதைப் பாடச் செய்வார். உடனே காட்சி மாறும். அவரது ‘ஒருமனிதன், ஒரு வீடு ஒரு உலகம்’ நாவலில் ஹென்றி பாடுகவதாக வரும், ‘சோப்பெங்கப்பா……. சோப்பெங்கப்பா……’ சொல்லி விட்டு, குனிந்து நிமர்ந்து ‘சோப்பெங்கப்பா……. சோப்பெங்கப்பா……’ என்று சுற்றிச் சுற்றி வந்து நடன மிடுவார். அது முன்பே பரிச்சயமான குப்புசாமி போன்றவர்களும் உடன் அப்படியே பாடி ஆடியபடி, சுற்றி வருவர். ‘தீராத விளையாட்டுப் பிள்ளையாய் அப்போது அவர் தோன்றுவார்.

பிறகு உள்ளே சபை மறுபடியும் கூடும். கேள்வி நேரம் தொடங்கும். பலரும் பல்வித வினாக்களைத் தொடுப்பர். அவரும் அவருக்கே உரித்ததான சமத்காரத்துடன் பதில் அளிப்பார். அப்போது அங்கிருந்த திருப்பத்தூர் கல்லூரி மாணவர்களில் ஒருவர், “ஐயா, உங்களது சிறுகதைத் தலைப்புக்களைத் திருடி, தம் படங்களுக்கு, – உதாரணமாக ‘புதிய வார்ப்புகள்’ போன்று பெயரிடுகிறார்களே……”என்று இழுத்தார். அதற்கு ஜே.கே சற்று அதட்டலாக, “ஏம்’பா! அந்தக்கதைய நீ எழுதினியா?” என்று கேட்டார். மாணவர் மிரட்சியுடன் “இல்லை ஐயா, நீங்கதான் எழுதுனீங்க!” என்றார். “கதைய எழுதின நானே கவலைப்படலே, உனக்கென்ன? நல்ல விஷயங்கள் எங்கிருந்தாலும் எவரும் எடுத்தாளுவர். போ!” என்றார். அதுதான் ஜெயகாந்தன்!

70களில் நான் உளுந்தூர்பேட்டைக்கு அருகில், சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள ஆசனூர் என்னும் ஊரில் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நெடுஞ்சாலையை ஒட்டிய ஒரு வீட்டின்மாடியில் குடி இருந்தேன். ஒரு நாள் மாலை பொழுது சாயும் நேரத்தில், என் பகுதிக்கு வரும் மாடிப்படியில் “சாமியே சரணம் ஐயப்பா” என்று சத்தம் கேட்டது. அது எனக்குச் சம்பந்தமற்றதும் அந்த நேரத்துக்குப் பொருத்தமற்றதுமாக இருந்ததால், நான் அதிர்ந்து எழுந்து படிகளை நோக்கிப் போனேன். கருப்பு உடையில் கழுத்தில துளசிமணி மாலைகளுடன் நண்பர் பி.ச.குப்புசாமி படியேறி வந்து கொண்டிருந்தார். எனக்கு வியப்பு அதிகமாயிற்று. ‘இந்த நேரத்தில் இவர் எப்படி?’ என்று நான் புருவம் உயர்த்தியதும், அவர் மறுபடியும் ‘சாமியே சரணம் ஐயப்பா!’ என்று ராகம் இழுத்தபடி, “என்ன சபா! தெரியலியா?” என்றார். “அய்ய! இது என்ன வேஷம் குப்புசாமி?’ எனறு கேட்டேன். “சபரி மலைக்குப் போறோம் கீழே ஜே.கே காரில் இருக்கிறார்!” என்றார். “அப்படியா!” என்று பரபரத்தபடி கீழே ஓடினேன்.

வீட்டு வாசலில் அவரது வெள்ளைக் கார் நின்றிருந்தது. ஓட்டுனர் இருக்கையில் இருந்த ஜே.கே எனைக் கண்டதும், “சாமியே…. சரணம்!” என்றார். காரின் உள்ளிருந்து இரண்டு மூன்று குரல்கள் அதே சரணத்தை வழி மொழிந்தன. அவர்கள் – திருப்பத்தூர் வையவன், தண்டபாணி, வெள்ளக்குட்டை ஆறுமுகம் ஆகியோர். எல்லோரும் ஜே.கே உட்பட கருப்பு உடையில் கழுத்தில் துளசிமணி மாலைகளுடன் இருந்தனர். “வாங்க ஜே.கே! மேலே போகலாம்” என்று அழைத்தேன். ” நாங்க விரத்தத்துலே இருக்கோம். மலைக்குப் போய்த் திரும்பும் வரைககும் இல்லம் எல்லாம் விலக்கம்! உங்க பள்ளிக் கூடம் எங்கே இருக்கு? அங்கே போகலாம்” என்றார். “போகலாம், கொஞ்சம் இருங்க. ராத்திரி ஆகாரத்துக்கு ஏற்பாடு செஞ்சுட்டு வரேன்” என்றேன. ” அதெல்லாம் வேணாம்! எல்லாம் கொண்டு வந்திருக்கோம். பாலுக்கு மட்டும் சொல்லுங்க. ஏறுங்க போவோம்” என்றார். நான் மேலே ஓடி என் மனைவியிடம் பால் காய்ச்சி அனைவருக்கும் அனுப்பச் சொல்லிவிட்டு வந்து காரில் ஏறிக் கொண்டேன்.

பள்ளிக்கூடம் கூப்பிடு தொலைவில்தான் இருந்தது. விளையாட்டு மைதானத்தை ஒட்டிய திறந்த காற்றோட்டமான அறையில், கார் டிக்கியிலிருந்து அவர்களது மூட்டை முடிச்சுகள் – உணவுப்பண்டங்கள் அடங்கியவை – இறக்கப்பட்டன. வகுப்பு சாய்வு மேஜைகளை ஒரு ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு, வட்டமாக உட்கார சிமிண்ட்தரை விஸ்தாரமாக்கபட்டது. சற்று உட்கார்ந்து ஓய்வெடுத்த பின் பள்ளிக் கிணற்றில் அனைவரும் குளித்து, சந்தனப் பூச்சணிந்து அறைக்குத் திரும்பி, அய்யப்பப் பாடலகள் ஒலிக்கப் பூஜை நடத்தினார்கள். பிறகு மூட்டைகளைப் பிரித்து, கொண்டு வந்திருந்த கடலை, பொரி உருண்டைகள், அதிரசம், பழங்களை உண்டு பாலருந்தினார்கள். என்னையும் சாப்பிட வைத்தார்கள்.

பிறகு ஆரம்பித்தது சபை. வழக்கம் போல ஜே.கே சபை நடுவில் சம்மணமிட்டு அமர, நாங்கள் அனைவரும் சுற்றிலும் உடகர்ந்ததும பாரதி பாடம் ஆரம்பமாயிற்று. பின்னர் அவரது இனிய கர்நாடக இசைப்பாடலில் கிறங்கி நின்றோம். அப்போது நடுநிசியாகி இருந்தது. ” வாங்க நிலவொளிக்குப் போகலாம்” என்று ஜே.கே எழுந்நததும் நாங்களும் தொடரந்தோம். எதிரே இருந்த மைதானத்தில் வட்டமாகக் கூடினோம்.

நிலவு பளிச்சென்று பரவி இருந்தது. எல்லும் கருப்பு உடையில், நான் வெள்ளை உடையில். திடீரென்று ஜே.கே, “சிலும்பிப் போடடா!…..” என்றபடி கைகளை உயர்த்தி எம்பிக் குதித்தார். உடனே எல்லோரும் அவரைப் பின்பற்றி, “சிலும்பிப் போடடா…. சிலும்பிப் போடடா!…..” என்று கூவியபடி, வானத்துக்கும் பூமிக்குமாய் எம்பிக் குதித்துச் சுற்றி வந்தார்கள். எனக்கு அந்த விளயாட்டு பரிச்சயமில்லாததால் வட்டத்துக்கு நடுவில் நழுவினேன். நிலவு வெளிச்சப் பின்னணியில், கருப்பு உடையில் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து நடனமாடினர்கள். இந்த விளையாட்டு முடிந்ததும், “சோப்பெங்கப்பா போடுங்கப்பா” என்று ஜே.கே சொல்லி அவரே ஆட ஆரம்பித்ததும், என்னைத் தவிர எல்லோரும் “சோப்பெங்கப்பா…சோப்பெங்கப்பா……” நடனம் ஆடினார்கள். எனக்குக் கூச்சமாகிருந்ததுடன், அந்த ஊரில் தலைமை ஆசிரியராக இருக்கும் நான் அப்படிக் கூத்தாடுவதை ஊர்க்கார்ர்கள் யாராவது பார்த்துவிடப் போகிறார்களே என்ற பயமும் காரணமாய் நடுவில் நின்றபடி அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.

இப்படி பாட்டும் கூத்தும் பிரசங்கமுமாய்ப பொழு புலர்ந்தது. கையெழுத்து புலனாகு முன்பாக ஜே.கேயும் நண்பர்களும் ‘சாமியே சரணம் ஐயப்பா!’ என்று விளித்ததபடி காரில் ஏறி விடை பெற்றார்கள். அது அற்புதமான அனுபவம்! ஆண்டு பல கடந்தும் அந்த இனிய அனுபவம் இன்னும் நெஞ்சில் பசுமையாக நிலைத்திருக்கின்றது.

இப்படி எத்தனையோ சந்திப்புகள அவருடன் இந்த 50 ஆண்டுகளில்! அவர் எவ்வளவு நெருக்கமாக நம்மோடு பழகினாலும், அவரோடு சரிசமமாக வைத்து எண்ண முடியவில்லை. இந்த நூற்றாண்டின் மகத்தான இலக்கிய மேதையின் முன்னிலையில் உள்ளோம் என்பதும் அவரது நட்பு என்பது பெரும்பேறு என்பதுமே நினைவில் நிற்கிறது. 0

Thursday, September 08, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 14.எழுத்தாளர்கள் சந்திப்பு - 1 (அகிலன்)

சென்னை செல்லும்போதெல்லாம் இலக்கியப் பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய்
பத்திரிகை ஆசிரியர்களைச் சந்திப்பது போல, பிரபல எழுத்தாளர்களைச சந்திப்பதும்
ஆரம்ப காலத்தில் எனக்கு விருப்பமான ஒன்றாக இருந்தது. அத்தகைய சந்திப்புகள்
பிறகு நட்பாகவும் நெருக்கமாகவும் வளர்ந்து இன்று வரை தொடர்கிறது.

முதன்முதல் எனக்கு அமரர் - தமிழின் முதல் ஞானபீட விருதாளர் - திரு.அகிலனுடன்
ஏற்பட்ட சந்திப்பு தற்செயலானது. 1957 வாக்கில், என் உறவினர் ஒருவரின் திருமணம்
நடந்த ஒரு சிறு கிராமத்தில் வைத்து நிகழ்ந்தது அந்த சந்திப்பு.

அதற்கு முன்பே, 1951ல் நான் கல்லூரியில் சேர்ந்த காலத்திலிருந்தே, கலைமகளில்
வந்த அவரது கதைகளில் மனம் பறிகொடுத்து அவரது தீவிர ரசிகனாகி இருந்தேன்.
நானும் கதை எழுத வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டது அவரது எழுத்துக்களைப்
படித்த பிறகுதான். பின்னாளில் என் மகனுக்கு 'அகிலநாயகம்' என்றும், நான் கட்டிய
என் வீட்டுக்கு 'அகிலம்' என்றும் பெயரிடும் அளவுக்கு நான் அவரது அதீத ரசிகனாக
இருந்தேன்.

1950 களில், அவர் இளைஞர்களின் நெஞ்சைக் கவரும் இதமான, விரசம் சிறிதுமற்ற
காதல் கதைகளும் நாவலும் எழுதியவர். அவற்றில் 'காதல் பிறந்தது' என்ற சிறுகதையும்,
'நெஞ்சின் அலைகள்' என்ற கலைமகளில வந்த தொடர் நாவலும் இன்னும் என் நெஞ்சில்
நான் அசை போடும் படைப்புகள். அது போலவே பத்திரிகையில் தொடராக வராமல்
நேரடியாக நூலாக வந்து பல பதிப்புகள் கண்ட 'சினேகிதி' என்ற அற்புதமான காதல்
நவீனத்தைப் பத்து தடவைக்கு மேல் கல்லூரிக் காலத்தில் படித்ததும், பார்ப்பவரிடம்
எல்லாம் அதைப் படிக்கப் பரிந்துரைத்ததும் இப்போது நினைவுக்கு வருகிறது. பின்னாளில்
அந்த நாவலைப் பகடி செய்து, 'அமுதசுரபி'யில் அமரர் விந்தன் அவர்கள் 'அன்பு
அலறுகிறது' என்ற தலைப்பில் நாவல் எழுதிப் பரபரப்பு ஊட்டினார்.

'கலைமகள்' அவருக்குத் தாய் வீடு போல. கி.வா.ஐ பெரிதும் ஊக்கமளித்தார். மறக்க
முடியாத அற்புதமான சிறுகதைகளையும், நாவல்களையும் அவர் கலைமகளில எழுதி
புகழின் உச்சியில் அக்காலகட்டத்தில் இருந்தார். கலைமகள் நடத்திய முதல் நாவல்
போட்டியில் அவரது 'பெண்' எனும் நாவல் 1000ரூ. பரிசு பெற்றது. 50களில் அது பெரிய
தொகை. தொடர்ந்து பல பரிசுகளை - ராஜா அண்ணாமலை செட்டியார் 10000ரூ. பரிசு,
சாகித்யஅகாதமி விருது, ஞானபீடப் பரிசு என அவர் வாங்காத பரிசே இல்லை என்ற
நிலைக்கு உயர்ந்தார். அப்போது டாக்டர் மு.வ. அவர்களுக்கும், அகிலன் அவர்களுக்கும்
தான் ரசிகர்கள அதிகம். திருமணங்களில் அவர்களது நூல்களதான் அதிமும் பரிசாக
வழங்கப்பட்டன. ஐம்பதுகளின் மத்தியில் ஜெயகாந்தன் பிரபலமாகும் வரை அவரது
கவர்ச்சி இளைஞர் மத்தியில் மங்கவே இல்லை.

ஆரம்பத்தில் குறிப்பிட்ட நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டது தான், அவர்
பத்தாண்டுகளுக்கு மேலாக வெளி உலகுடன் தொடர்பு கொள்ளாமலும், தோனறாமலும்
இருந்ததை மாற்றி மக்கள் மத்தியில் தோன்றிப் பங்கேற்ற நிகழ்ச்சி எனலாம். அதுவரை
அவர் மிகப் பிரபலமாகி இருந்தாலும், அவரது போட்டோ கூட எந்தப் பத்திரிகையிலும்
வெளி வந்திருக்கவில்லை. எந்தப் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதில்லை.
தன்னை வெளிக் காட்டிக் கொளவதில்லை என்பதில் அவர் பிடிவாதமாக இருந்ததால்
அவரை யாரும் எங்கேயாவது பார்த்தாலும் அவர் தான் 'அகிலன்' என்று தெரியாமல்
இருந்தது. ஆனால் அந்த அஞ்ஞாதவாசத்தை உடைத்து அவர் வெளியே வரவேண்டிய
நிர்ப்பந்தம் ஒன்று பின்னர் ஏற்பட்டதால் தான், அவர் வெளிப்பட்டார். நண்பரின்
திருமணம் தான் அந்த முதல் நிகழ்ச்சி.

அவர் தன்னை வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்ததை ஒரு எத்தன் பயன் படுத்திக்
கொண்டான். அவரது தீவிர ரசிகர்களைத் தேடிச் சென்று, "நான் அகிலன். பயணத்தின்
போது பர்ஸ் தொலைந்து விட்டது. பஸ்ஸுகுப் பணம் வேண்டும். போய் அனுப்பி
வைக்கிறேன்" என்ற சொல்லிப் பலரிடம் கணிசமான தொகையை வாங்கி விட்டான்.
கண்மூடித்தனமான ரசிகர்களில் பலர் பதறிப்போய், போலி அகிலனுக்குப் பண உதவி
செய்துள்ளனர். பிறகு யாரோ ஒரு சித்திக்கப் பொறுமை இருந்த ரசிகர் சந்தேகப்பட்டு
அகிலனுக்குப் போன் செய்ய குட்டு வெளிப்பட்டது. பல நாள் திருடன் ஒருநாள்
பிடிபட்டு சிறைக்குப் போனான். அதன் பிறகு அகிலன் விழித்துக் கொண்டார். பொது
மேடைகளில் தோன்ற ஆரம்பித்தார். பத்திரிகைகளில் அவரது படத்துடன் அவரது
படைப்புகள் வெளி வரத் தொடங்கின.

இந்த நிலையில்தான் அவர் என் நண்பரின் திருமணத்தில் பேச வந்திருந்தார்.
அந்தநாட்களில் பெருந் தனவந்தர்களின் வீட்டுத் திருமணங்களில் இசைக்கச்சேரிக்கு
ஏற்பாடு செய்வது வழக்கம். இலக்கிய ஆர்வலர்கள் பிரபல பேச்சாளர்களை, திருமணத்தில்
வாழ்த்திப்பேச அழைப்பதும் வழக்கமாய் இருந்தது. அகிலன் அவர்கள் பேசும் நிகழ்ச்சிக்குத்
தலைமை ஏற்கும்படி நண்பர் என்னைக் கேட்டுக் கொண்டார். அப்போது நான் அதிகம்
பிரபலமாகி இருக்கவில்லை என்றாலும் அந்தக் குக்கிராமத்தின் அந்தக் கூட்டத்தில்
அகிலனைப் பற்றி அதிகமும் அறிந்து வைத்திருந்ததும் அவரது ரசிகனாகவும் நான்
மட்டுமே கிடைத்தேன். அகிலன் சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த பேச்சாளரும்
கூட என்று அப்போது அறிந்தேன். அது முதல் அகிலன் அவர்களுடன் நெருக்கமான
தொடர்பு ஏற்பட்டது.

அவரது கதைகளையும், நாவல்களையும் அவை வெளியானதும பாராட்டி எழுதுவேன்.
அவரும் தவறாமல் பதில் எழுதுவார். பிறகு ஒரு நாள் அவரது திரையுலகப் பிரவேசம்
நிகழ்ந்தது. கல்கியில் வெளியாகிப் பிரபலமாகி இருந்த 'பாவை விளக்கு' என்ற அவரது
நாவல் சிவாஜி கணேசன் நடித்துப் பிரபலமாகப் பேசப்பட்ட பின், அவரது இன்னொரு
நாவலான 'வாழ்வு எங்கே' 'குலமகள் ராதை' என்ற பெயரில் படமான போது தான்
அவர் தான் பார்த்து வந்த இரயில்வே சார்ட்டர் பணியை ராஜிநாமா செயது விட்டு,
திரைப்படத் துறையில் முழு நேரப் பணியாளராக நுழைந்தார் . அப்போது நான் அவருக்கு
ஒரு கடிதம் எழுதினேன்.

முன்பு கலைமகளில் 'மின்னுவதெல்லாம்' என்றொரு கதை எழுதி இருந்தார். திரை
உலகம் மின்னுகிற உலகம், அதில் சேர ஆசைப்பட்டு வாழ்வைப் பாழ்படுத்திக் கொள்ளக்
கூடாது என்று அப்படி வாழ்வை நாசமாக்கிக் கொண்ட ஒரு நடிகையைப் பாத்திரமாக்கி
அவர் எச்சரிக்கை விடுத்த கதை அது. அதை நினைவூட்டித்தான் நான் கடிதம் எழுதினேன்.
'திரை உலகத்தை மின்னுகிற உலகம் என்று எச்சரிக்கை விடுத்த நீங்களே அந்த
மின்னுகிற உலகத்தில் நுழையலாமா?' என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர், 'நம்மைப்
போன்ற படைப்பாளிகள் உள்ளே நுழைந்துதான் திருத்த வேண்டும். துணிந்து தான்
இறங்குகிறேன். என்னால் முடியும் என நம்புகிறேன்' என்று பதில் எழுதினார்.

ஆனால் 'நாய் வாலை நிமிர்த்த அதைப் படைத்தவனே முயன்றாலும் முடியாது'
என்பதை அவர் விரைவிலேயே கண்டு கொண்டார். படைப்பாளிகளுக்கு மரியாதையோ,
அவர்களது படைப்புக்குரிய அங்கீகாரமோ அங்கு கிடைக்காது என்பதை உணர்ந்து
அதை விட்டு வெளியேறினார். வெளியே வந்த பிறகுதான் தான் பார்த்துக் கொண்டிருந்த
நல்ல வேலை விட்டதன் கஷ்டம் பரிந்தது. கொஞ்ச நாட்கள் சிரமப் பட்ட பிறகு,
நண்பர்களின் உதவியால் சென்னை வானொலியில் நிகழ்ச்சி அமைப்பாளராகப் பணி
ஏற்று கடைசி வரை அதில் இருந்து ஓய்வு பெற்றார்.

அவர் சென்னை வானொலியில் பணியாற்றியபோது, நான் ஒரு விஷயமாயக அவரது
யோசனையைக் கேட்க, சென்னை சென்று அவரது வீட்டில் சந்தித்தேன். அது 1966. நான்
உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியராக அப்போது பணியாற்றிக் கொண்டிருந்தேன்.
ஆசிரியத் தொழிலை விரும்பித்தான் ஏற்றிருந்தேன் என்றாலும் எழுத்துத் துறையில் சேர
வேண்டும் என்னும் எனது வேட்கை - பத்து ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் மாணவ
திட்டத்தில் ஆசிரியர் குழுவில் சேர விரும்பி அது கிடைக்காமல் போன பிறகும் -
தீராமல், அகில இந்திய வானொலி புதிதாக அபப்போது கோவையில் தொடங்க இருந்த
கிளை நிலையத்துக்கு 'Script writer' பதவிக்கு மனுச்செய்து, ஒராயிரம் பேர்களில் தேர்வு
செய்யப்பட்ட 12 பேரில் ஒருவனாக, எழுத்துத் தெர்வுக்கு அழைககப் பட்டேன். என்னுடன்
தேர்வு செய்யப் பட்டவர்களில் திரு.அசோகமித்திரனும், கவிஞர் தெசிணி என்கிற
திரு.தெய்வசிகாமணியும் இருந்தனர். அந்தப் பணியில் சேர்வது விஷயமாகத்தான், அகிலன் அவர்களை அவர் வானொலியில் இருந்ததால் யோசனை கேட்கச் சென்றிருந்தேன்.

அவர் கேட்டார், "ஏன் இப்போது இருக்கிற பணியை விட்டு இதில் சேர விரும்புகறீர்கள்?"
என்று.

"வானொலியில் சேர்ந்தால் எழுத்துத் துறையில் வளர்ச்சி பெறலாம் என எண்ணுகிறேன்"
என்றேன்.

"அதுதான் இல்லை. வெளியே இருந்தால் பத்திரிகைகளில் சுதந்திரமாய் எழுதலாம். இங்கேஅந்த சுதந்திரம் உங்களுக்குக் கிடைக்காது. பண்ணைச் செயதிகளிலும் உழவர் நிகழ்ச்சிகளிலும் 'அவரை, துவரை' என்று பேசிக் கொண்டிருக்கத்தான் முடியும். மேலும் இதில் பதவி உயர்வுக்கு ஆசைப்பட முடியாது. இப்பொது நீங்கள் பார்க்கும் தலைமை ஆசிரியர் பணி சமூகத்தில் கௌரமான பதவி. அந்த கௌரவம், சமூக அங்கீகாரம் இங்கே உங்களுக்குக் கிடைக்காது.என்னைப் பார்த்தீர்கள் அல்லவா? இதற்கு முயற்சிக்க வேண்டாம். பேசாமல் கௌரவமான தற்போதைய பணியிலேயே தொடருங்கள்" என்று சொன்னார்.

ஆனால் எனக்கு எழுத்தாளர் பதவி ஆசை கண்ணை மறைத்தது. அவரிடம் அப்போது
ஏதும் மறுத்துச் சொல்லாமல் திருச்சிக்கு எழுத்துத் தேர்வுக்குச் சென்றேன். ஆனல் முன்பே
அவர்கள் தீர்மானித்து வைத்திருந்த அத்துறையின் மூத்த ஊழியருக்கு அப்பதவி கிடைத்தது.
எனது ஏமாற்றத்தை திரு.அகிலன் அவர்களுக்குச் சொல்லவில்லை. அதன் பிறகு அவருடன்
இருந்த தொடர்பும் விட்டுப் போயிற்றறு. 0

Saturday, September 03, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 13.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு - 5 (கி.கஸ்தூரிரங்கன்)




கணையாழி 1965ல் தொடங்கப்பட்டது. ஓராண்டுக்குப் பிறகுதான் எனக்கு
அது பார்க்கக் கிடைத்தது. உடனே சந்தா அனுப்பி வைத்தேன். அப்போது அதன்
விலை 40 பைசா தான். அதோடு, முதல் இதழிலிருந்தே வாங்கிச் சேகரிக்கும்
என் வழக்கப்படி, விட்டுப்போன இதழ்களைக் கேட்டு ஆசிரியர் கஸ்தூரிரங்கள்
அவர்களுக்கு எழுதினேன். சில இதழ்களே கிடைத்தன. எஞ்சியவற்றை அதன்
சென்னை அலுவலகத்தின் பொறுப்பாளரான திரு.அசோகமித்திரன் அவர்களிடம்
கேட்டு, அவரும் அன்போடு, விட்டுப் போனவற்றைத் தேடி வாங்கி அனுப்பினார்.

பிறகு சென்னைக்கு கஸ்தூரிரங்கன் அவர்கள் வந்த பிறகு, சென்னை சென்ற
போதெல்லாம் அவரைச் சந்தித்து வந்தேன். பந்தா எதுவும் காட்டாமல் புன்
முறுவலுடன் வரவேற்று அன்போடு பேசுவார். 1972ல் 'கணையாழி'யில் என்
முதல் பிரவேசமாய் 'வாருமையா வாசகரே' என்ற கவிதை வெளியானது.
அதற்கு ரூ.5 சன்மானமாக வந்தது. சிறு பத்திரிகைகளில் சன்மானமெல்லாம்
அப்போது (ஏன் இப்போதும் தான்) கிடையாது. பிறகு 1978ல் 'தி.ஜா நினைவுக்
குறுநாவல் போட்டி'யில் அந்த ஆண்டுக்கான 12 பரிசுக் குறுநாவல்களில்
என்னுடைய 'அசல் திரும்பவில்லை'யும் தேர்வாகிப் பிரசுரமானதில் புதிய
உற்சாகமும் படைப்பார்வமும் மிகுந்தது. அந்தப் பிரசுரத்துக்கு ரூ.200 சன்மானம்
வந்தது. சன்மானம் அப்போதைக்கு அதிகம் என்பதோடு கணையாழியின் அங்கீகாரம்
கிடைத்தது பெரிய வரமாக எனக்குப் பட்டது. தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில்
மேலும் 3 குறுநாவல்கள் - 'இனி ஒரு தடவை', 'யானை இளைத்தால்', 'மீட்பு'
ஆகியவை அதே திட்டத்தில் வெளியாயின. 'இனி ஒரு தடவை' குறு நாவலை
கஸ்தூரிரங்கள் அவர்களும், ஆசிரியர் குழுவில் ஒருவராக இருந்த திரு.இ.பா
அவர்களும் அடுத்து அவர்களைச் சந்தித்தபோது பாராட்டிப் பேசியது என் இலக்கிய
வாழ்வில் மறக்க முடியாதது.

பிறகு சந்தித்தபோதெல்லாம் 'கணையாழி விமர்சனத்'துக்கு வந்த நூல்களைக்
கொடுத்து விமர்சனம் எழுத வைத்தார். அது கணையாழியில் எழுத எனக்கு நிரந்தர
இடத்தைப் பெற உதவியது. பின்னர் 1995ல் 'கணையாழி' தொடங்கி 30 ஆண்டுகள்
நிறைவுற்றதை ஒட்டி புதிய அம்சங்களைச் சேர்த்த வகையில், என்னை 'கணையாழி'
யின் தொடக்கம் முதல் ஒவ்வோரு இதழாக 'தணையாழியின் பரிணாம வளர்ச்சி'
என்ற தலைப்பில் கணையாழியின் இலக்கியப் பணியை விமர்சித்து எழுத வைத்தார்.
2000 வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய அத்தொடருக்கு நல்ல வரவேற்பு
கிட்டியது. அதனால் எனக்கு இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் கிட்டியது.

ஒவ்வொரு இதழாக எழுதினால் அதிக காலம் பிடிக்குமே, அதற்குப் பதிலாக
ஒவ்வொரு ஆண்டாக எழுதலாமே என்று நான் கேட்டபோது 'அது பற்றிக் கவலை
வேண்டாம். ஒவ்வொரு இதழாகவே எழுதுங்கள்' என்றார் ஆசிரியர். இது பற்றி ஒரு
எள்ளலான விமர்சனம் 'தினமணி கதிரி'ல் வந்தது. அப்போது அதன் ஆசிரியராக இருந்த
திரு.மாலன் அவர்கள், 'படித்ததில் பிடித்தது','படித்ததில் இடித்தது' என்ற தலைப்பில்
வாரம் தோறும் எழுதி வந்தார். ஒரு வாரம் என் தொடரைப் பற்றிக் குறிப்பிட்டு,
'ஒவ்வொரு மாதமாக எழுதினால் 30 ஆண்டுகளை எழுதி முடிக்க 30 ஆண்டுகள்
ஆகுமே அது சாத்யமா?' என்று இடித்திருந்தார்.

பிறகு 'கணையாழி' தசராவில் பொறுப்பில் வந்த பிறகு சில மாதங்கள் கழித்து,
'புதிய அமசங்களைப் புகுத்த இருப்பதால் இத் தொடரைத் தற்காலிகமாக நிறுத்தி
வைக்கலாமா?' என்று அப்போதைய ஆசிரியரிடமிருந்து எனக்குக் கடிதம் வந்தது.
'சரி' என்பதைத் தவிர வேறு நான் என்ன எழுத முடியும்? அதை ஒட்டி, செவியாறலாக
எனக்குக் கிடைத்த தகவல் என் மீது கி.க அவர்கள் கொண்டிருந்த அபிமானத்தை
உறுதிப் படுத்தியது. இட நெருக்கடியால் எனது தொடர் நிறுத்தப்பட உள்ளதாகக்
கேள்விப்பட்ட கி.க அவர்கள், 'இட நெருக்கடிதான் காரணமென்றால் நான் எழுதி
வரும் கடைசிப் பக்கங்களை நிறுத்தி, அதைத் தொடருங்கள்' என்று சொன்னதாகக்
கேள்விப்பட்டேன். அதற்கு என் மீது அவர் கொண்ட அபிமானம் என்பதை விட,
கணையாழியின் இலக்கியப்பணி பற்றி அடுத்த தலைமுறை அறிந்து கொள்ளும்
வாய்ப்பு போகிறதே என்ற ஆதங்கமே காரணம் என்று நான் நினைத்தேன். 2005 உடன்
அத்தொடர் முழுமை பெறாது நிறுத்தப்பட்டது.

பிறகு, 'கலைஞன் பதிப்பக' உரிமையாளர் திரு.மா.நந்தன் அவர்கள் கணையாழி இதழ்
தொகுப்பினை வெளியிட விரும்பி கி.க அவர்களை அணுகியபோது, என்னைத் தொடர்பு
கொண்டு எழுத ஏற்பாடு செய்தார். முதல் பத்தாண்டு இதழ்களைத் தொகுத்து 'கணையாழி
களஞ்சியம்' என்ற தலைப்பில் முதல் தொகுதி என் தயாரிப்பில் வெளியாயிற்று.
இதற்கிடையில் 'கணையாழியின் 30 ஆண்டு இதழ்களையும் இணையத்தில் ஏற்ற
திரு.அரவிந்தன்(கனிமொழியின் தற்போதைய கணவர்) உதவியில் முயன்றபோது, கி.க
அவர்கள் தங்களிடம் கூட இல்லாது என்னிடம் மட்டுமே அத்தனை இதழ்களும் இருந்ததால்,
அவற்றை அனுப்பித் தருமாறும், இணையத்தில் ஏற்றியதும் திருப்பி அனுப்பி வைப்பதாகவும்
என்னைக் கேட்டுக் கொண்டார். பொக்கிஷம் போல பழைய இதழ்களைப் பைன்ட் செய்து
வைத்துப் பாதுகாத்து வந்த எனக்கு, திரும்பக் கிடைக்கும் நம்பிக்கை இல்லாத்தால்
யாரையும் நம்பி அனுப்பி இழக்க மனமில்லை. ஆனால் என் மதிப்பிற்குரிய ஆசிரியரின்
வேண்டுகோளை மறுக்கத் தயங்கிய போது, 'பயப்படாதீர்கள்! நிச்சயம் பத்திரமாய்த்
திருப்பித் தந்து விடுகிறேன்' என்று கி.க அவர்கள் தொலைபேசியில் உறுதி அளித்ததின்
பேரில் அரை மனதுடன் லாரி சர்வீஸ் மூலம் 30 ஆண்டு கணையாழியின் பைன்ட்
வால்யூம்களையும் அவருக்கு அனுப்பி வைத்தேன். அதனால் 'கணையாழி களஞ்சியத்'தின்
அடுத்தடுத்த தொகுப்புகளை என்னால் தயாரிக்க முடியவில்லை. கி.க அவர்கள் திரு இ.பா,
மற்றும் என்.எஸ்.ஜகந்நாதன் ஆகியோரைக் கொண்டு மீதி 3 தொகுதிகளையும் தயாரிக்கச்
செய்தார்.

இதனிடையே அரவிந்தன் அவர்கள் மூலம் இணையத்தில் 'கணையாழி'யை ஏற்றச் செய்த முயற்சி ஆரம்பத்திலேயே ஏதோ காரணங்களால் தொடர முடியாது போய் விட்டது. அதை அறிந்த நான் கி.க அவர்களுக்குப் போன் செய்து, எனது கணையாழி வால்யூம்களைத் திருப்பித் தருமாறு கேட்டேன். அதற்கு கி.க வெகு சாதாரணமாக சொன்ன பதில் என் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தது. 'சாரி சபாநாயகம். தொகுப்புக்காக பைன்டுகள் பிரிக்கபட்டதால் அவை சிதைத்து போய்விட்டன!' என்று கொஞ்சமும் தன் உறுதி மொழியின் உறுத்தலின்றி அவர் சொன்ன போது, கொஞ்ச நேரம் கொஞ்சிவிட்டுத் தருவதாக நம் குழந்தையை அழைத்துப் போன ஒருவர் திருப்பிக் கேட்கையில், 'சாரி குழந்தை இறந்து போய் விட்டது!' என்று சொன்னால் நம் மனம் என்ன பாடுபடுமோ அத்தகைய வேதனையை அப்போது நான் அனுபவித்தேன். அதன் பிறகு சூடு கண்டபூனையாய், பல நெருங்கிய நண்பர்கள் என் இதர தொகுப்புகளைக் கேட்டு என்ன உறுதி மொழி கொடுத்தாலும் கொடுப்பதில்லை. 0

Tuesday, August 23, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 12. பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு - 4 (தி.க.சி)



சாகித்ய அகாதமி விருது பெற்ற, சிறந்த திறனாய்வாளர் திரு.சிவசங்கரன்
அவர்களுடன் 'தாமரை' இதழின் ஆசிரியராக அவர் இருந்த போது எனக்கு
ஏற்பட்ட தொடர்பு இன்று வரை கடிதம் மூலம் தொடர்கிறது. அவரும் அவரது
குருநாதரான அமரர் வல்லிக்கண்ணன் அவர்களும் தங்களுக்கு வரும் கடிதங்களுக்கு
உடனுக்குடன் முத்து முத்தான கையெழுத்தில் தாமே தம் கைப்பட பதில் எழுதும்
பண்பிற்காக பெரிதும் பாராட்டிப் பேசப்பட்டவர்கள். இன்று முதுமையினாலும் உடல்
நலிவினாலும் தி.க.சி அவர்களால் முன்பு போல எல்லோருக்கும் பதில் போட
முடியாதிருப்பினும் 'தினமணி'யிலும், அநேகமாக எல்லா இலக்கிய இதழ்களிலும்
அயராமல் அவர் விமர்சனக் கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பது இளைஞர்களைப்
புருவம் உயர்த்த வைப்பதாகும்.

அவர் ஆசிரியராக ஆன பிறகு 'தாமரை'யின் இலக்கிய அந்தஸ்து வெகுவாக
உயர்ந்தது. அநேகமாக இன்றைய புகழ் பெற்ற படைப்பாளிகளில் பலரும் அவரால்
இனங்காணப்பட்டு ஊக்குவிக்கப் பட்டவர்கள் தாம். இன்று நான் ஒரு இலக்கிய
விமர்சகனாகவும் இருப்பதற்கு அவர் தான் காரணம். தாமரைக்கு நான் நேரடியாக
அனுப்பாதிருந்தும், பக்தனைத் தேடி வந்து அருள்பாலிக்கும கடவுளைப் போல,
'தீபம்' பத்திரிகைக்கு நான் அனுப்பிய எனது முதல் விமர்சனக் கட்டுரையை
அவரே விரும்பி வாங்கி தாமரையில் வெளியிட்டு என்னை ஊக்குவித்தார்.

அப்போது நான் இலக்கிய இதழ்களில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை. 'தீபம்'
இதழில் வாசகர்களை 'நான் ரசித்த புத்தகம்' என்ற தலைப்பில் எழுதும்படி ஆசிரியர்
நா.பா கேட்டிருந்தார். அதற்காக அப்போது நான் மிகவும் லயித்துப் படித்திருந்த
'நித்தியகன்னி' என்கிற எம்.வி.வெங்கட்ராமின் அற்புதமான நாவலைப் பற்றி ஒரு
விமர்சனம் எழுதி அனுப்பி இருந்தேன். அனுப்பி மூன்று மாதங்கள் ஆகியும் தீபம்
இதழில் அது வரவில்லை. திடீரென்று ஒரு நாள் தாமரை இதழ் ஒன்று எனக்குத்
தபாலில் வந்தது. நான் சந்தா எதுவும் கட்டாத நிலையில் இது எப்படி என்று
புரியாமல் பிரித்துப் பார்த்தேன். அதில் எனது 'நித்தியகன்னி' விமர்சனம் வெளியாகி
இருந்தது. தீபத்துக்கு அனுப்பியது எப்படி தாமரையில் வெளியாகி இருக்கிறது
என்பது எனக்குப் புரியாத புதிராக இருந்தது. ஆனாலும் ஆசிரியர் தி.க.சி
அவர்களுக்கு உடனே நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினேன்.

வெகு நாட்களுக்குப் பின்னர் தான் அந்தப் புதிரை, தீபம் அலுவலகத்துக்குச்
சென்ற போது திரு.எஸ்.திருமலை விடுவித்தார். பக்க அளவு காரணமாய் தீபத்தில்
வெளியிட இயலாமல் எனக்குத் திருப்பி அனுப்ப இருந்த எனது கட்டுரை, அங்கு
வந்த தி.க.சி அவர்களது கண்ணில் பட்டிருக்கிறது. படித்துப் பார்த்த அவர், தீபத்தில்
பிரசுரிக்க இயலாவிடில் தாமரையில் தான் பிரசுரிப்பதாக வாங்கிப்போய்
வெளியிட்டிருக்கிறார் என்று அறிந்து, சிலிர்த்துப் போனேன்.

பிறகு சில ஆண்டுகள் கழித்து சென்னையில் 'இலக்கிய சிந்தனை' ஆண்டுவிழா
ஒன்றின் போது தி.க.சி அவர்களை நேரில் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்த போது
அருகில் சென்று வணங்கி என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். பெயரைச்
சொன்னதும், "அடடே! நித்யகன்னி சபாநாயகமா?" என்று வாத்ஸல்யததுடன்
தட்டிக் கொடுத்தார். அவரது நினைவாற்றலும் மனித நேயமும் என்னை நெகிழ
வைத்தன. அன்று தொடங்கி இன்று வரை அந்தப் பெருந்தகையுடன் கடிதங்கள்
மூலம் தொடர்பு கொண்டிருப்பதையும் அவரது கடிதங்களில் தென்படும் பாசமும்
நேசமும் மிக்க அக்கறையையும் என் பாக்கியமாகக் கருதுகிறேன். 0


Thursday, August 11, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 11. .பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு - 3 (ஆர்வி)



'ஆர்வி' என்கிற - 1950 -80 களில் பிரபலமாக விளங்கிய திரு ஆர்.வெங்கட்ராமன்
என்கிற எழுத்தாளரை இன்றைய தலைமுறையினரில் பலர் அறிந்திருக்க மாட்டார்கள்.
'கலைமகள்' ஆசிரியர் குழுவில் முக்கிய உறுப்பினரான அவர் அற்புதமான 'கதை
சொல்லி'. 'சுதேசமித்திரன் வார இதழி'ல் அவர் எழுதிய 'கனவு மயக்கம்' தொடர்
நாவலையும், தனி நூலாக வந்த திரை உலகப் பின்னணியில் அமைந்த 'திரைக்குப்பின்',
'யுவதி' மற்றும் வரலாற்று நாவலான 'ஆதித்தன் காதல்' போன்ற ரசமான படைப்பு
களையும் என்னைப் போன்ற அன்றைய வாசகர்கள் ஐம்பது ஆண்டுகள் ஆகியும்
இன்னும் மறவாமல் அசைபோடுவதே அவரது எழுத்தின் பெருமைக்குச் சான்றாகும்.
அவரது நாவல்களைப் போலவே அவரது குறுநாவல்களும் சிறுகதைகளும் திகட்டாதவை.

கலைமகள் நிறுவனம் 1950ல் துவங்கிய 'கண்ணன்' என்கிற சிறுவர் பத்திரிகையின்
ஆசிரியராகப் பொறுப்பேற்று, இருபதாண்டுகளுக்கு மேலாகப் பல சாதனைகளை
நிகழ்த்தியவர் ஆர்வி. இன்று பிரபலமாக விளங்கும் 'அம்பை', ஜோதிர்லதா கிரிஜா,
ஜே.எம்.சாலி, 'ரேவதி' என்கிற ஹரிஹரன், லெமன், காலம் சென்ற புவனை கலைச்
செழியன் போன்றவர்கள் அவரால் உருவானவர்கள்தாம். 70களில் எனது சிறுகதை
களையும், நான் எடுத்த புகைப்படங்களையும் 'கண்ணனி'ல் வெளியிட்டு, குழந்தை
எழுத்தாளராகவும் என்னை உற்சாகப்படுத்தியவர். அதன் மூலமாகத்தான் ஆர்வியுடன்
எனக்குப் பரிச்சயம் ஏற்பட்டது.

நான் சென்னை செல்லும் போதெல்லாம் தவறாமல் சந்திப்பவர்களில் அவரும்
ஒருவர். சந்திக்கும் போதெல்லாம் ஆரம்ப எழுத்தாளர் என்று அலட்சியப்படுத்தாமல்
பாசத்துடன் வரவேற்றுப் பேசுவார். என் நண்பரும் சக தலைமை ஆசிரியருமான
திரு.புவனை கலைச்செழியன் எனது மாவட்டக்காரர் என்பதால் அவரைப்பற்றி
ஒவ்வொரு தடவையும் அக்கறையுடன் விசாரிப்பார். அதே போல என் நண்பரைப்
பார்க்கும் போதும் என்னைப் பற்றி விசாரிப்பார். அந்த அளவுக்கு குடும்ப உறுப்பினர்
போன்று இளம் எழுத்தாளர்களிடம் பாசம் காட்டிய பத்திரிகை ஆசிரியர் வேறு
யாரையும் நான் கண்டதில்லை.

பின்னாளில், 20 ஆண்டுகளுக்கு மேலாக 'கண்ணனை' வளர்த்த அவர், நிறுவனத்துடன்
ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதிலிருந்த் விலகினார். அவருடன் 'கண்ணனு'ம் நின்று
போயிற்று. குழந்தை இலக்கியத்தின் ஒரு மறக்க இயலாத சகாப்தமாய் இன்றும்
நினைவில் இருக்கும் 'கண்ணன்' நின்று போனது குழந்தைகளுக்கும், குழந்தை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பெரும் இழப்பு என்றே சொல்ல வேண்டும்.

'கண்ணனி'லிருந்து விலகிய பின் அவர் எழுதுவதைக் குறைத்துக் கொண்டார்.
மேற்கு மாம்பலத்தில் உள்ள அவரது சொந்த வீட்டில் பிறகு ஒரு முறை சந்தித்தேன்.
1993ல் நான் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு நானும் சென்னை செல்வது குறைந்து
போனதால் அவரது தொடர்பு விட்டுப் போயிற்று.

சில ஆண்டுகளுக்குப் பிறகு அவருடன் தொடர் கொள்ள, 'கலகி' பத்திரிகை மூலம்
ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. 'பாலம்' என்கிற அறிவிப்பின் மூலம் வாரந்தோறும் பலரும்
தம் விருப்பங்களைத் தெரிவித்து, சம்பந்தப்படடவர்கள் பதிலளிக்கும் ஒரு நல்ல
ஏற்பாட்டை'கல்கி' செய்து வந்தது. அதில் ஒரு வாரம் ஆர்வி அவர்கள, பல ஆண்டு
களுக்கு முன் 'வானதி பதிப்பகம்' வெளியிட்ட தனது 'ஆதித்தன் காதல்' நாவலை மறு
பிரசுரம் செய்ய, அதன் பிரதி தன்னிடமோ பதிப்பகத்தாரிடமோ இல்லாததால் அதனை
தனது ரசிகர்கள் யாரேனும் வைத்திருந்தால் கொடுத்து உதவுமாறு வேண்டுகோள்
விடுத்திருந்தார். அதிர்ஷ்டவசமாக என்னிடம் அந்த நாவல் இருந்தது. ஆர்விக்கு நன்றிக்
கடனாக நாம் என்ன செய்ய முடியும் என்று எண்ணி இருந்த எனக்கு, இது ஒரு நல்ல
வாய்ப்பாக அமைந்தது. உடனே ஆர்வி அவர்களுக்கு எழுதினேன். அவருக்கு மிகுந்த
மகிழ்ச்சி. பிரதி கிடைக்கும் என்ற நம்பிக்கையற்று இருந்த நிலையில் அது கிடைத்து
இருப்பதோடு அதுவும் அவரது அன்பர்களில் ஒருவனான என் மூலம் சாத்தியமாகி
இருப்பதைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து, பிரதியை அனுப்பித் தருமாறும், மறுபிரசுர
மானதும் புதிய பிரதி ஒன்றினை எனக்கு அனுப்பி வைப்பதாகவும் எழுதினார். நானும்
உடனே அனுப்பினேன். சில மாதங்களுக்குப் பிறகு 'வானதி பதிப்பகம்' மறுபிரசுரமான
'ஆதித்தன் காதல்' நாவலின் பதிய பிரதி ஒன்றினை அனுப்பி வைத்தது. அதன் பிறகு
ஆர்வியிடம் தொடர்பில்லை.

வெகு நாட்களுக்குப் பிறகு, நண்பர் 'ரேவதி' மூலம் எண்பதாண்டு நிறைவுக்குப்பின்
ஆர்வி அவர்கள் இயற்கை எய்தியதை அறிந்து மனம் கனக்க அவருடன் துக்கத்தைப்
பகிர்ந்து கொண்டேன். 0








.



எனது இலக்கிய அனுபவங்கள் - 10.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (2. கி.வா.ஜ)



1951ல் நான் கல்லூரியில் சேர்ந்தது முதல் 'கலைமகள்' பத்திரிகை எனக்குப் பிடித்த
இலக்கியப் பத்திரிகையாக இருந்தது. பள்ளிப் படிப்பு வரை 'அணில்'. 'கண்ணன்',
'பாப்பா' போன்ற குழந்தைப் பத்திரிகைகளையே விரும்பி வாங்கிப் படித்து வந்த நான்
வாங்கிய முதல் இலக்கியப் பத்திரிகை 'கலைமகள்'. அதன் ஆசிரியர் வாகீச கலாநிதி
கி.வா ஜகந்நாதன் அவர்கள் தனது குருநாதர் உ.வே.சாவிறகுப் பிறகு அவரது பரிந்துரை
யால் கலைமகளின் ஆசிரியராகி 50 ஆண்டுகளுக்கு மேலாக அவர் மறையும் வரை
பணியாற்றியவர். அவர் எனக்குப் பிரமிப்பூட்டிய பத்திரிகை ஆசிரியர். அவர் தோற்றத்தில்
பழமைவாதியாக இருந்தாலும் எண்ணத்தில் புதுமை விரும்பியாக இருந்தார்.

கலைமகள் மிகவும் ஆசாரமான பத்திரிகை என்று சொல்லப்பட்டாலும், அதில்தான்
புதுமைப்பித்தனின் - ராஜாஜி முகம் சுளித்த - சர்ச்சைக்குள்ளான 'சாபவிமோசனம்'
என்கிற கதை பிரசுரமானது. 'பு.பி' யைப் போலவே பல மணிக்கொடி எழுத்தாளர்களை
கலைமகளில் எழுத வைத்த சாதனையாளர் கி.வா.ஜ அவர்கள். லா.சரா, தி.ஜானகிராமன்,
ஆர்வி, மாயாவி, அகிலன் போன்றவர்களைக் கொண்டு, 'கொட்டுமேளம்' போன்ற ஒரே
தலைப்பில் இரண்டு எழுத்தாளர்களை எழுத வைத்தும், 'கதவைப் படீரென்று சாத்தினாள்'
என்பது போன்ற துவக்க வரியைக் கொடுத்து கதையைத் தொடரச் செய்தும், கதையின்
முடிவு வரியைத் தந்து கதை எழுதச் செய்தும், 'மலரும் சருகும்' போன்ற எதிரெதிர்
தலைப்பில் எழுத வைத்தும், 'இரட்டைமணி மாலை'. 'வண்ணக் கதைகள்' என்று புதிய
புதிய சோதனைகளை மேற்கொண்டும், புதுப் புது அம்சங்களைப் புகுத்தியும் இலக்கிய
ரசிகர்களுக்குத் திகட்டத் திகட்ட விருந்தளித்தவர் அவர். அடுத்த இதழ் எப்போது வரும்
என்கிற ஆவலை ஏற்படுத்திய காலகட்டம் அவருடையது.

அவரைச் சந்திக்க வேண்டும் என்ற எனது நெடுநாளைய ஆசை 1966ல் தான் பூர்த்தி
ஆயிற்று. விருத்தாசலம் உயர்நிலைப் பள்ளியில் நான் பணியாற்றிய காலத்தில் பள்ளி
இலக்கிய மன்றத்தில் 1960ல் சொற்பொழிவாற்ற வந்திருந்த் போது அவரைப் பார்த்திருக்
கிறேன். எனது வழக்கப்படி, அவர் பேசிக்கொண்டிக்கையில் அவரைப் பார்த்து வரைந்த
அவரது ஓவியத்தை, கூட்டம் முடிந்ததும் அவரிடம் காட்டினேன். அதன் தத்ரூபத்தைப்
பாராட்டி, ஓவியத்தின் கீழே 'கலையால் காலத்தைக் கொல்லலாம்' என்று எழுதி
கையொப்பம் இட்டுத் தந்ததை இன்னும் வைத்திருக்கிறேன். பிறகு தலைமை
ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில்தான் அவரது அலுவலகத்தில் தனிப்பட்ட
முறையில் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

1966ல் நான புதிதாக ஒரு டேப் ரெகார்டர் வாங்கினேன். இப்போதுள்ள 'காசட் டைப்'
ரெகார்டர்கள் வராத காலம். வானொலி நிலையங்களில் இருப்பது போன்ற 'ஸ்பூல் டைப்'
ரெகார்டர் அது. கைப்பெட்டிக்குள் அடங்கும் அந்தப் பதிவுக் கருவியுடன் ஒரு தடவை
சென்னை சென்ற போது, கி.வா.ஜ அவர்களைச் சந்தித்து பேட்டி கண்டு பதிவு செய்யும்
எண்ணத்துடன், 'கலைமகள்' காரியாலயம் சென்றேன். அதே இடத்தில் இருந்த
'கண்ணன்'பத்திரிகையின் ஆசிரியரான திரு.'ஆர்வி' அவர்களை - அதில் நான்
எழுதியதால் முன்பே அறிந்திருந்ததால் - அவருடைய உதவியால் கி.வா.ஜ அவர்களைச்
சந்திக்க முடிந்தது.

அவரிடம் ஆர்வி அவர்கள் என் பணி, எழுத்து முயற்சி எல்லாம் சொல்லி அறிமுகம்
செய்த போது, நான் 1960ல் அவர் விருத்தாசலம் பள்ளிக்கு வந்த போது அவரை நேரில்
பார்த்து வரைந்து அவரிடம் கையொப்பம் பெற்றதை நினைவூட்டினேன். முகமலர்ச்சியுடன்
பேட்டி அளித்தார். பல்வேறு கேள்விகளுக்கு இடையில், கலைமகளில் என்னைப் போன்ற
இளம் எழுத்தாளர்களுக்கு வாய்ப்புக் கிடைக்காததைக் குறையாக்க் குறிப்பிட்டேன்.
அதற்கு அவர்," நாங்கள் இளம் எழுத்தாளர், மூத்த எழுத்தாளர் என்றெல்லாம் பேதம்
காட்டுவதில்லை. படைப்பைத்தான் பார்க்கிறோம், படைப்பாளி யார் என்று பார்ப்பதில்லை.
இன்றும் பிரபல எழுத்தாளர் அகிலன் அவர்களது கதையையும் எங்களுக்கு ஏற்றதாக
இல்லாவிடில் திருப்ப அனுப்பவே செய்கிறோம். எனவே விடாது எழுதி அனுப்பிக் கொண்டே
இருங்கள். உங்கள் கதையும் ஒருநாள் பிரசுரமாகும்!" என்று வாழ்த்தி விடை கொடுத்தார்.
'காந்தமலை' என்பது அவரது வீட்டின் பெயர். அவரே காந்தமலைதான் என்று அவரது இனிய பேச்சையும் பண்பையும் வியந்தபடி திரும்பினேன். 0







Wednesday, August 03, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 9.பத்திரிகை ஆசிரியர்கள் சந்திப்பு (1.வாசன்)

திரைப்பட ரசிகர்களுக்குத் தம் அபிமான நடிகர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பதைப்
போல, வாசகர்களுக்கும் தம் அபிமான எழுத்தாளர்களைச் சந்திப்பதில் ஆர்வம் இருப்பது
இயல்பு தான். அது போன்ற ஆர்வம் எனக்கும் வாசகனாகவும் எழுத்தாளனாகவும் ஆரம்ப
நாட்களில் இருந்தது. எனவே அப்போதெல்லாம் சென்னை சென்ற நாட்களில் பல
எழுத்தாளர்களைச் சந்தித்திருக்கிறேன். பத்திரிகை அலுவலகங்களுக்குப் போய் பத்திரிகை
ஆசிரியர்களையும் சந்திப்பதுண்டு.

'குமுதம்' அலுவலகம் சென்றால் ஆசிரியர் எஸ்.ஏ.பி யைச் சந்திக்கவே முடியாது.
யாராவது உதவி ஆசிரியர் தான் வெளியே இருக்கும் 'காத்திருப்போர் அறை'யில் வந்து
விசாரிப்பார். விகடனிலும் அப்படித்தான். இப்போது நினைத்துப் பார்த்தால் என் பேதமை
குறித்து வெட்கமாக இருக்கிறது. ஒரு பிரபல பத்திரிகையின் ஆசிரியர் தனது அவசர,
அவசிய வேலைகளைப் போட்டு விட்டு எல்லோரையும் சந்திக்க முடியாது தான். என்
கதைகளையும் நான் எடுத்த போட்டோக்களையும் பிரசுரத்துக்குக் கொடுக்கத்தான் நான்
அந்த அவலுவலகங்களுக்குச் சென்றிருக்கிறேனே அல்லாமல் ஆசிரியரகளைத்
தரிசிப்பதற்காகச் சென்றதில்லை. அதனால் எனக்கு ஏதும் ஏமாற்றமில்லை. ஆனால்
அவர்களால் அழைக்கப்பட்டு ஆசிரியர்களைச் சந்திக்க நேர்ந்ததுண்டு. அப்படி ஒரு தடவை
ஆனந்த விகடன் ஆசிரியர் திரு.எஸ.எஸ் வாசன் அவர்களை, அழைப்பின் பேரில் நேரில்
சந்திக்கிற வாய்ப்பு நேர்ந்தது.

திரு.வாசன் அவர்கள் தான் இன்றைய விகடனின் 'மாணவர் திட்டத்'தை 1956ல்
உருவாக்கியவர். அது இன்றைய மாணவ நிருபர் போன்றது அல்ல. அது 'மாணவ
எழுத்தாளர்' திட்டம். வாரம் ஒரு மாணவரது படைப்பை வெளியிட்டு, ஒரு ஆண்டு
முடிந்ததும் அதுவரை அறிமுகமான 52 வார மாணவப் படைப்பாளிகளில் இருவரைத்
தேர்வு செயது உதவி ஆசிரியர் பணிக்கு அமர்த்துவதான திட்டம். அப்படி 1956 -57ல்
வெளியான 52 படைப்புகளை எழுதிய மாணவர்களுக்கு, வழக்கமான சன்மானத்துடன்
ஆண்டிறுதியில் 'ஆனந்தவிகடன்' என்று பெயர் பொறித்த 'பைலட்' பேனா ஒன்றும்
அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அந்த 52 பேரில் நானும் ஒருவன்.

அப்போது நான் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் பயிற்சிக்
கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் அனுப்பிய 'குழந்தைததெய்வம்'
என்ற எனது சிறுகதை நான் படிப்பை முடிக்கும் போது, 1957 மே மாதம் பிரசுரமாயிற்று.
அதுதான் 'ஆனந்த விகடனி'ல் வெளிவந்த எனது முதல் கதை. எனது போட்டோவுடன்
என்னைப் பற்றிய குறிப்புகளோடு கதை பிரசுரமான போது பெரிதும் கிளர்ச்சியுற்றேன்.
அடுத்து, ஜூலையில் நான் பட்டதாரி ஆசிரியராகப் பணி ஏற்ற சுருக்கில், எனக்கு
ஆனந்தவிகடன் மாணவர் திட்டத்தின்படி, உதவி ஆசிரியருக்கான நேர்காணலுக்கு
அழைப்பு வரும் என்று நான் எதிர் பார்க்கவில்லை. 52 மாணவப் படைப்பாளிகளில்
பத்து பேரைத் தேர்வு செய்து நேர்காணலுக்கு அழைத்திருந்தார்கள். போக வர பயணப்
படியும் அனுப்பி இருந்தார்கள். ஆசிரியர் வாசன் அவர்களே அந்தப் பத்து பேரையும்
அவரது அலுவலக அறையில் வைத்து நேர்காணல் நடத்தினார்கள்.

எனது முறை வந்த போது, ஜெமினி எஸ்.எஸ்.வாசன் என்கிற பிரம்மாண்ட சாதனை
யாளரைச் சந்திக்கப் போகிறோம் என்கிற படபடப்போடு அவரது அறையில் நுழைந்தேன்.
பெரிய நீண்ட மேஜையின் பின்னனால், பளீரென்ற தூய வெள்ளைக் கதருடையில்
இன்முகத்துடன் தலையை அசைத்து வரவேற்றார். எதிரில் மேஜை மீது எங்களது கதைகள்
வந்த விகடன் இதழ்கள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அவரது கையில் என் கதை வந்த
இதழ் பிரித்து வைக்கப் பட்டிருந்தது. எதிரே அமரும்படி சொல்லி விட்டு, "இப்போது என்ன
செய்கிறீர்கள்?" என்று விசாரித்தார். உயர் நிலைப்பள்ளிக்கு அபோது தன் நியமனம் ஆகி
பணியில் சேர்ந்திருப்பதைச் சொன்னேன். "ஆசிரியராக இருப்பதால் தான் குழந்தைகளின்
உளவியலை வைத்து எழுதி உள்ளீர்கள். கதை நன்றாக உள்ளது. ஆனால் நம் திட்டத்தின்
நோக்கம் உங்களுக்குத் தெரியுமல்லவா? வேலை இல்லாதவருக்கு வேலை கொடுப்பது
தான் நமது நோககம். உங்களுக்குதான் வேலை கிடைத்து விட்டதே - வேலை இல்லாத
ஒருவருக்கு இதைத் தரலாமல்லவா?" என்றார்.

எனக்குள் ஏமாற்றம் பரவியது. முகத்தில் அதைக் காட்டாமல், "சரி!" என்றேன் குரல்
இறங்கி. வேறு என்ன சொல்ல முடியும்?

"விகடனுக்குத் தொடர்ந்து எழுதுங்கள்" என்று கை கூப்பி விடை கொடுத்தார். படி இறங்கி
வரும் போது நடை கனத்தது. ஆனந்தவிகடனில் உதவி ஆசியராகப் போகிறோம் என்ற
கனவோடு வந்தவனுக்கு அது கிடைக்காதது ஏமாற்றமாக இருந்தாலும், "சரி, போய்
வாருங்கள். முடிவைப் பிறகு தெரியப்படுத்துகிறோம்" என்று சொல்லாமல் உண்மை
நிலைமையை மறைக்காது உடனே தெரிவித்த வாசன் அவர்களது நேர்மையை மனதுக்குள்
பாராட்டியபடி திரும்பினேன்.

பிறகு அந்த இரண்டு இடங்களுக்கும் ஆம்பூர் கோ.கேசவன் அவர்களும், பின்னாளில்
முகுந்தன் என்ற பெயரில் சிறந்த நகைச்சுவை எழுத்தளராய்ப் புகழ் பெற்று மறைந்த
எஸ்.வரதராஜன் அவர்களும் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப் பட்டார்கள். ஆனால் அந்த
இருவரும் அதிக நாட்கள் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றவில்லை. ஆம்பூர் கேசவன்
வெகு சீக்கிரமே மரணமடைந்தார். வரதராஐன் சுதந்திர எழுத்தாளராக ஓரிரு ஆண்டுகளில்
விகடனிலிருந்து விலகினார். அத்துடன் அந்தத் திட்டமும் முடிந்து போனது.

வாசன் அவர்களைச் சந்திக்கும் முன்பாக பத்திரிகைத் துறையில் அனுபவம் கொண்டிருந்த
என் உறவினர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் "பத்திரிகையில் சேர்ந்து நீ ஒன்றும் எழுதி
விட முடியாது. பள்ளிக்கூடத்தில் நோட்டுத் திருத்துவதறகுப் பதில் இங்கு வரும் கதை
களைத் திருத்தப் போகிறாய். வெளிப் பத்திரிகையில் எழுத அனுமதிக்க மாட்டார்கள்.
சம்பளமும் இப்போது உள்ள வேலையில் கிடைப்பதை விட அதிகம் கிடைத்து விடாது.
உத்தியோக உயர்வெல்லாம் கிடையாது" என்றார். பின்னாளில் அத உண்மையும் ஆயிற்று.
கல்வித் துறையில் பதவி உயர்வுகளும் கணிசமான ஊதியமும் பெற்றுத் திருப்தியாக
இருந்ததுடன், விகடனிலும் பிற பத்திரிகைகளிலும் நிறைய எழுதி ஓரளவு சாதிக்கவும்
முடிந்தது. ஆனால் இன்றளவும், வாசன் அவர்களைச் சந்தித்தது இனிய நினைவாகவே
இருந்து வருகிறது. 0

Wednesday, July 27, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 8.கம்பாசிட்டர் கவிதை

1970 களில் புதுக்கவிதை பற்றிய வாதப் பிரதிவாதம் உச்சத்தில் இருந்த
காலகட்டத்தில், நான் ஒரு சின்ன ஊரின் உயர்நிலைப் பள்ளியில் தலைமை
ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தேன். பாடம் தவிர்த்த 'நல்லொழுக்கக்
கல்வி' போன்ற வகுப்புகளில் மாணவர்களுக்கு நான் நவீன இலக்கியப் படைப்பு
களையும், படைப்பாளிகளையும், சிற்றிதழ்களையும் அறிமுகப்படுத்தி வந்தேன்.

அப்போது 'எழுத்து'வில் சி.சு.செல்லப்பா அவர்கள், 'புதுக்கவிதை' அறிமுகத்தை
ஒரு வேள்வி போலச் செய்து வந்தார். புதிய சோதனை முயற்சிகளையும், புதிய
படைப்பாளிகளையும் 'எழுத்து'வில் அறிமுகப்படுத்தி வந்தார். அவரது புதுக்
கவிதைப் பிரச்சாரத்துக்கு ஆதரவும், கண்டனமும் நிறைய எழுந்தன. அவரது
முயற்சிகளைக் கேலி செய்தும் மலினப்படுத்தியும் பலர் பேசியும், எழுதியும்
வந்தனர். சி.சு.செ வின் முயற்சி அசலானதுதான் என்றாலும், கவிதை எழுத
முடியாதவர்கள் அவர் காட்டிய பாதை என்று சொல்லி 'புதுக்கவிதை' என்ற
பெயரில் அந்த இயக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும்படி, புற்றீசல்களாய்ப்
பெருகி வாராந்திரிகளிலும், திடீர்ச் சிற்றிதழ்களிலும் எழுதினார்கள். பொருளோ
கவிநயமோ இல்லாத சக்கைகளாக, வெற்று வார்த்தைகளை ஒன்றன் பின்
ஒன்றாக எழுதியும், வார்த்தைகளைக் கூட கால், அரையாக ஒடித்து அடுக்கியும்
புதுக்கவிதை என்று சொல்லி எரிச்சலூட்டினார்கள். இதை 'சோ' கேலி செய்து
'கம்பாசிட்டர் கவிதை' என்று 'துக்ளக்'கில் எழுதினார்.

எனது பள்ளி இறுதி வகுப்பு மாணவன் ஒருவன் வகுப்பில் இது பற்றிக்
கேட்டான். 'கம்பாசிட்டர் கவிதை' என்றால் என்ன என்று கேட்டான். உடனே
நான் மாணவர்கள் ஒவ்வொருவரையும், வாய்க்கு வந்த ஏதாவது ஒரு
வார்த்தையைச் சிந்திக்காமல் உடனடியாகச் சொல்லும்படி சொன்னேன்.

ஒருவன் 'நள்ளிரவு' என்றான். அதனைக் கரும்பலகையில் எழுதினேன்.
அடுத்தவன் 'பச்சரிசி' என்றான். முதல் வார்த்தைக்கு அடியில் அதை எழுதினேன்.
அடுத்தடுத்து சொல்லப்பட்ட 'வெள்ளிக்கிழமை', 'ஓடினான்', 'வயிற்றுவலி',
'பரப்பு', 'முழு நிலவு', 'போயேபோச்சு', என்பனவற்றைத் தொடர்ந்து எழுதி,
'போதும்! அடுத்தவன் ஒரு தலைப்பு சொல்லு' என்றேன். 'ஓடாதே' என்று
ஒருவன் சொன்னான். அதைத் தலைப்பாக எழுதினேன். அது இப்படி அமைந்தது;

ஓடாதே!
--------

நள்ளிரவு
பச்சரிசி
வெள்ளிக்கிழமை
ஓடினான்
வயிற்று வலி
பரப்பு
முழுநிலவு
போயேபோச்சு.

"இதுதான் கம்பாசிட்டர் கவிதை! இப்போது நீங்கள் எல்லோருமே கவிஞர்கள்!"
என்றேன். மாணவர்கள் சிரித்தார்கள்.

"சிரிக்கிற விஷயமல்ல இது! இப்படி - சி.சு.செல்லப்பா அவர்களின்
புதுக்கவிதை முயற்சியைச் சீரழிக்கிற கேவலத்தைத்தான் 'சோ' கேலி செய்து
எழுதினார். அவர் வேறு ஒரு சூழ்நிலையில் இத்தகைய முயற்சிகளை இப்படிச் சாடினார்.'மக்களே போல்வர் கயவர்' என்று வள்ளுவர் சொன்னபடி, இந்தப்
போலிகள் நல்ல கவிதைப் பயிருக்குக் களை போன்றவர்கள். இவர்களை
இனம் கண்டு ஒதுக்க வேண்டும்" என்று சொல்லி சி.சு.செ பற்றியும் அவருடைய
'எழுத்து' பத்திரிகை பற்றியும், புதுக்கவிதை படைப்பாளிகள் சிலரையும், அவர்களது
கவிதைகளையும் அறிமுகப்படுத்திப் பேசினேன்.


வீட்டுக்கு வந்த பின், ஒரு நல்ல காரியம் செய்த திருப்திக்கிடையே ஒரு குரூர
ஆசையும் எழுந்தது. நான் தலைமை ஆசிரியராகுமுன் 20 ஆண்டுகளுக்கு முன்பு
பட்டதாரி ஆசிரியராக எனது ஊரில் பணியாற்றிய போது, இதுபோல் என்னால்
இலக்கிய அறிமுகம் பெற்ற மாணவர்களில் சிலர் இப்போது ஆசிரியர்களாக,
இலக்கியப் பிரக்ஞை மிக்கவர்களாக உயர்ந்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு
பேர் மேற் சொன்ன புரியாத போலிக் கவிதைகளைப் புரிந்ததாகப் பம்மாத்து
பண்ணி, 'கடவுளைக் காண மூக்கை அறிந்து கொண்டவன் கதை'யாய், 'புரிய
வில்லை' என்று சொன்னவர்களைப் புழுவைப் போல நோக்கி 'ஞானசூன்யங்களா'ய்க்
கருதுகிறவர்கள். தீட்டிய மரத்தில் கூர் பார்ப்பது போல என்னிடமே என் கவிதைப்
புரிதலைப் பற்றி, மதிப்பீடு செய்பவர்கள். அவர்களிடம் இந்தக் கவிதையைக் காட்டி
சீண்டிப் பார்க்க வேண்டும் என்று ஆவல் ஏற்பட்டது.

அடுத்தமுறை ஊருக்குப் போன போது அவர்கள் இருவருமே தனித்தனியாக
எனக்கு எதிர்ப்பட்டாரகள். முதலில் சந்தித்தவரிடம் இந்தக் கவிதையைக் காட்டி
கருத்துக் கேட்டேன். அவர் கவிதையை வாங்கி ஜாதகக் குறிப்பைப் பார்க்கிற
மாதிரி சற்று எட்ட வைத்துப் பார்த்து, தலையை அசைத்தபடி, "படிமம் பிரமாதம்
சார்! உள்ளடக்கம், உருவம் நல்லா வந்திருக்கு. தலைப்பு பிரமாதம்! யார் எழுதினது
சார் இது? நீங்கதான் கவிதை எழுத மாட்டீங்களே!" என்றார். "உன்னைப்போல என்
மாணவன் தான். பள்ளி இறுதி வகுப்பு" என்றேன். "அட்டே! பள்ளி இறுதி வகுப்பு
மாணவனா? அதற்குள் இவ்வளவு முதிர்ச்சியா?" என்று அவர் புருவம் உயர்த்தினார்.
"ஒரு மாணவன் இல்லையப்பா - ஒன்பது மாணவர்!" என்று குறும்பாய்ச் சிரித்தேன்.
"என்ன சொல்றீங்க? ஒம்பது மாணவர்களா இதை எழுதினாங்க?" என்று வியப்புக்
காட்டினார். "ஆமாம்" என்று அந்த கவிதை பிறந்த கதையைச் சொல்லி, அவரது
பாராட்டை இடித்துக்கூறி "இதுதான் உங்களுடைய புரிதலின் லட்சணம்!" என்றேன்.
அசடு வழிந்தபடியே அவர் விடை பெற்றார்.

அடுத்து அன்று மாலையே எதிர்ப்பட்ட மற்றவரிடமும் கவிதையைக் காட்டிக்
கருத்துக் கேட்டேன். அவரும் அசடு வழிந்ததை ரசித்தேன்.

எல்லோரிடமும் இந்த விளையாட்டு பலித்து விடவில்லை. சென்னையில்
ஒரு தடவை மார்க்ஸ் முல்லர் பவனில் நடந்த புதுக்கவிதை பற்றிய கூட்டத்தில்
கவிஞர் ஞானக்கூத்தன் பேசிய போது சென்றிருந்தேன். அவர் என் நெடு நாளைய
நண்பர். அவரது பேச்சு முடிந்து கலந்துரையாடலின் போது, இந்தக் கவிதையைக்
காட்டிக் கருத்துக் கேட்டேன். வாங்கிப் பார்த்த அவரது முகம் சுருங்கியது. "வேண்டாம்
சபா! வேண்டாம் இந்த சோதனை விளையாட்டு! தயவு செய்து கேலி செய்ய வேண்டாம்"
என்று கவிதையைத் திருப்பித் தந்தார். அவர் அசலான கவிஞர் எனபதால் போலியைப்
பார்த்ததுமே இனம் கண்டு விட்டார.

கூட்டம் முடிந்ததும் அவரை அணுகி அந்தக் கவிதையின் பின்னணியைச் சொல்லி,
அவரைப் புண்படுத்தி இருந்தால் பொறுத்தருள வேண்டினேன். பெருந்தன்மையுடன்
அவர் அதைப் பெரிது படுத்தாமல், "இபடித்தான் போலிகள் எங்கும் புகுந்து நம்
முயற்சிகளைப் பாழ் படுத்துகிறார்கள். ஆனால் கால ஓட்டத்தில் போலிகள்
காணாமல் போய்விடுவார்கள். அசல் நிற்கும்" என்றார்.

அது இன்று உண்மையாகி விட்டது. புதுக்கவிதைக்கு இன்று அந்தஸ்து கிடைத்து
விட்டது. 0

Wednesday, July 20, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் – 7 எழுத்தாளரும் புத்தக வெளியீடும்

இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவில் இப்போது புத்தகப் பதிப்புகள் புற்றீசல் போல் புறப்பட்டு வாசகர்களைத் திணற அடிக்கின்றன. பரம்பரை வணிக வெளியீட்டாளர்களுக்குச் சவால் விடுவதைப் போன்று இன்றைய புதிய பதிப்பாளர்கள் அச்சு நேர்த்தியிலும் கட்டமைப்பிலும் ஆங்கில நூல்களுக்கு இணையாகப் பதிப்பித்து சாதனை புரிந்து வருகிறார்கள். அவர்கள் போக, கணினிப் பயன்பாடு வசப்பட்டதனால் கிராமங்களில் கூட, அரும்பு விடும் படைப்பாளிகள் தாங்கள் எழுதிப் பார்த்த கன்னிப் படைப்புகளை – அதிகமும் கவிதைகளே – 40, 50 சேர்ந்தவுடன் தம் சொந்தச் செலவில், இணையத்திலிருந்து பதிவிறக்கிய அழகான படங்களை அட்டையில் தாங்கி புத்தகங்களை அச்சிட்டு, கையோடு வெளியீட்டு விழாவும் அரசியல்வாதிகள் போல் வெளிச்சம் போட்டு நடத்துவதும் அதிகரித்து வருகிறது. இதில் நூறு விழுக்காடு பேர்களும் சிறு பத்திரிகையாளர்களைப் போல் கையைச் சுட்டுக் கொண்டு பரதவிப்பதையும் பார்க்க முடிகிறது.

முன்பெல்லாம் பத்திரிகைகளில் நிறைய எழுதிப் புகழ் பெற்ற பிரபல எழுத்தாளர்கள் கூட ஒரு புத்தகம் கூட வெளியிடமுடியாத நிலை இருந்தது. எழுத்தாளர் ‘தேவன்’ அதற்கு உதாரணம். விகடனில் தான் அவரது படைப்புகள் எல்லாம் வெளியாயின. அவரது ஆயுட்காலம் வரை அவற்றின் உரிமை விகடனிடமே இருந்து, அவர் காலமான பின்னரே உரிமையைப் பெற முடிந்தது. அவர் தன்னுடைய எழுத்து நூலானதைப் பார்க்காமலே இறந்து போனது பெரிய சோகம். பத்திரிகைகளில் எழுதியவற்றின் உரிமை படைப்பாளிகளுக்கு இல்லா திருந்ததும், தமது புதிய படைப்பை பத்திரிகையில் வெளியிடாமல் நேரிடையாக தாமே தம் செலவில் பிரசுரிக்க வசதியற்றிருந்ததும், விஷப்பரீட்சையில் இறங்கப் பயந்ததும் காரணங்களாகும். டாக்டர் மு.வ அவர்கள்தான் துணிந்து எந்தப் பத்திரிகையிலும் எழுதாமல் நேரடியாகத் தன் நூல்களை வெளியிட்டுப் பிரபலமானவர். பிரபலமானாரே தவிர தன் புத்தகங்களால் அவர் பொருளீட்டியதாகச் சொல்ல முடியாது. ஏனெனில் தம் எழுத்துக்களைப் பிரசுரகர்த்தகர்களிடம் ‘அவுட்ரைட்’டாக சொற்ப தொகைக்கு விற்று விடும் சூழ்நிலையே அப்போது இருந்தது. டாக்டர் மு.வ அவர்கள் இலட்சக்கணக்கில் விற்ற தனது ‘திருக்குறள் தெளிவுரை’யை அப்படி அவுட்ரைட் ஆக, பிரபலமாகாத ஆரம்ப காலத்தில் விற்று விட்டதால் இன்று வரை அமோக லாபம் பெற்று வருவது அதை வெளியிட்ட ‘சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்’ தான்.

அப்போதெல்லாம் கை எடை பார்த்து, குத்து மதிப்பாக அரிய நூல்களை எல்லாம் நூறுக்கும் இருநூறுக்கும் வாங்கிக் கொண்டு, படைப்பாளிகளின் உரிமையைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளை நடைபெற்று வந்தது. அகிலன், ஜெயகாந்தன் போல மக்களிடம் அமோக வரவேற்பைப் பெற்ற எழுத்தாளர்கள் தலையெடுத்த பின் தான், ‘ராயல்டி’ என்கிற படைப்பாளிக்கு ஓரளவு நியாயம் செய்கிற முறை வந்தது. அதாவது, நூல் விற்பனையில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை படைப்பாளிக்குத் தருவது. அதிலும் சில கெட்டிக்காரப் பதிப்பாளர்கள் விற்பனையைக் குறைத்துச் சொல்லி ஏமாற்றுவதும் உண்டு. ஜெயகாந்தன் போல கிராக்கி அதிகம் இருந்தாலொழிய, ‘உங்கள் நூல் விற்கவே இல்லை’ என்று நாமம் போடுவதும் உண்டு. இது பற்றி அகிலன் அவர்கள் ஒருமுறை, ‘வெள்ளைத்தாள் வியாபாரிகள், ஓவியர்கள், அச்சகத்தார் போன்ற வர்களிடமெல்லாம் இவர்களது ஏமாற்று வேலை நடக்காது. காசு கொடுத்தால் தான் அவர்களிடம் காரியம் நடக்கும். ஆனால் யாரால் பிழைப்பு நடக்கிறதோ அந்த எழுத்தாளர்களிடம் மட்டும் பேரம் பேசவும், கடன் சொல்லவும், ஏமாற்றவும் அவர்களுக்கு முடிகிறது’ என்று அப்போதே புத்தக வெளியீட்டில் எழுத்தாளர்களின் அவல நிலை பற்றி எழுதினார். புத்தகம் வெளியானால் போதும் என்ற ஏக்கத்தால் அந்தக் கொடுமைக்கெல்லாம் படைப்பாளிகள் தெரிந்தே உடன்பட்டார்கள். சில பதிப்பகத்தத்தார் ‘அவுட்ரைட்’டாக வாங்கிய நூல்களை ஆசிரியர் பெயர் போடாமல், தங்கள் பதிப்பக ஆசிரியர் குழு என்று போட்டு அதிலும் படைப்பாளிகளை வஞ்சித்ததும் உண்டு. இப்போது பதிப் புரிமைச் சட்டம் வந்த பிறகு படைப்பாளிகளின் உரிமை பாதுகாக்கப்படுகிறது.
ராயல்டி முறை இல்லாமல், பாரத்துக்கு( 16 பக்கம்) இவ்வளவு என்று பேசிக்கொண்டு ‘உரிமை ஆசிரியருக்கே’ என்று அச்சிட்டு ஒரு பதிப்போடு நிறுத்திக் கொள்வதும் நடக்கிறது. இதிலும் கூட முதல் பதிப்பை மட்டும் சொல்லி விட்டு, அடுத்தடுத்த பதிப்புகள் பற்றி மூச்சுக் காட்டாமல் ஏமாற்று பவர்களும் உண்டு. தெரிந்து படைப்பாளி கேட்டால் ஏதோ கொஞ்சம் கொடுத்துத் தப்பித்துக் கொள்வார்கள். எப்போதும் இழப்பவர் படைப்பாளி யாகவே இருக்கிறார்.

இப்போதெல்லாம் இளம் படைப்பாளிகள் எழுதத் தொடங்கியதுமே – தம் எழுத்தை பத்திரிகைகளில் பார்க்கும் வாய்ப்பு இல்லாததால் – தாமே வெளியிட அவசரப்பட்டு, ஆயிரம் பிரதிகள் அச்சிட்டு இலவசமாக 200 பிரதிகளை வழங்கிவிட்டு மீதியை வீட்டில் அடுக்கி வைத்து கறையானுக்கு இரையாக்கு வதும், வைக்க இடமில்லாதவர்கள் எடைக்குப் போடுவதுமான சோகமும் நடக்கிறது.

என் நண்பர் ஒருவர் – நிறைய பத்திரிகைகளில் எழுதி பிரசுரமும் கண்டவர் – தன் படைப்புகளை நூலாக வெளியிட எந்தப் பதிப்பகமும் கிடைக்காமல் விற்பனை சிரமம் தெரிந்தும், மனைவியின் வளையல்களை அடகு வைத்துப் பணம் புரட்டி புத்தகம் போட்டார். மேலே சொன்னபடி இலவசப் பிரதிகள் தான் செலவாயின. நூற்றுக்கணக்கில், வைக்க இடமில்லாமல் வாடகை வீட்டில் பிரதிகள் சீரழிவதில் எரிச்சலுற்ற அவரது மனைவி ‘பேசாமல் மணிமுத்தாநதியில் கொண்டு போய்ப் போடுங்கள்’ என்றார். அதை என்னிடம் சொல்லி நண்பர் வருத்தப் பட்டபோது, நான் சொன்னேன்: ‘அதுவும் கூட சாத்தியமில்லை. மணிமுத்தாநதி வறண்டு கிடக்கிறது!’. ஒராண்டிற்குப் பின் எங்கள் மணிமுத்தாநதியில் வெள்ளம் வந்தபோது நான் நண்பரிடம் மனைவியின் யோசனையை நினைவூட்டினேன். அவர் ‘அதற்கு அவசியமில்லாமல் நான் வேறோரு நதியில் போட்டு விட்டேன்’ என்றார். விவரம் கேட்டபோது, ஒரு பிரபல விற்பனையாளரிடம் நூல்கள் தேங்கிக் கிடப்பதைப் பற்றி புலம்பியபோது, அவர் ‘இங்கேகொண்டு வந்து போடுங்கள். நான் தள்ளி விடுகிறேன்’ என்று சொன்னதை நம்பி மூட்டை கட்டி அவரது கடைக்கு லாரி சர்வீஸ் மூலம் அனுப்பி வைக்க, அவரும்சொன்னபடி தள்ளி(!) விட்டிருக்கிறார். அதாவது தன் கடைக்கு வந்தவர் போனவருக்கெல்லாம் சினிமா நோட்டீஸ் போல இலவசமாக வாரி வழங்கி விட்டார்! லாரி செலவும் சேர்ந்ததுதான் மிச்சம்.

இன்னொரு நண்பர் – குழந்தை இலக்கியப் படைப்பாளி. நிறைய கண்ணன், கோகுலம் போன்ற இதழ்களில் எழுதிப் பிரபலமானவர் – என் எச்சரிக்கையையும் மீறி சொந்தமாக அவரது நூல்களை வெளியிட்டார். அவரது தைரியத்துக்குக் காரணம் விற்பனை செய்ய அவருக்கு வாய்ப்பிருந்தது தான். அவர் ஒரு உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர். அதனால் தன் சக தலைமை ஆசிரியர்கள் மூலம் அவர்களது பள்ளி நூலகங்களுக்குக் கொஞ்சம் பிரதிகளை விற்க முடிந்தது. எவ்வளவு தான் அப்படி விற்று விட முடியும்? அப்பாவியான அவர் தன்னிடம் பவ்யமாய் நடந்து கொண்ட ஆசிரியர்களை நம்பி, அவர்களது வகுப்பு மாணவர்களிடம் கொஞ்சம் பிரதிகளை விற்கக் கொடுத்தார். பிரதியாக – தாமதமாக வருதல் போன்ற சலுகைகளை உத்தேசித்து, சிலர் விற்றுக் கொடுத்தார்கள். பண நெருக்கடி உள்ள சிலர், இதைப் பணம் கிடைக்கும் ஒரு வழியாக் கருதி விற்று எடுத்துக் கொண்டு ‘இன்னும் பையன்களிடமிருந்து பணம் வரவில்லை’ என்று டபாய்த்தார்கள். விஷயமறிந்து இவர் கடிந்து கொண்ட போது, மேலிடத்துக்கு ‘தன் புத்தகங்களை விற்கச் சொல்லி தொந்தரவு செய்கிறார்’ என்று புகார் எழுதி விட்டார்கள். அதிலிருந்து மீள அவருக்குப் பெரியபாடாகி விட்டது. இந்தச் சிரமங்களை எல்லாம் நன்கு அறிந்திருந்ததால், சொந்தமாக நூல் வெளியிடும் விஷப் பரீட்சையில் நான் இறங்கவே இல்லை.

எவ்வளவோ துர்அதிஷ்டங்களுக்கு இடையே ஏதிர் பாராத அதிர்ஷ்டங்களும் எனக்கு நேர்வதுண்டு. அதில் இந்த நூல் வெளியீடும் ஒன்று. எழுதிப் பத்து ஆண்டுகள் ஆகியும் பிரசுரம் காணாத என் முதல் நாவலில் அக்கறை கொண்டு, என் நண்பர் குறிஞ்சிவேலன் அவர்கள், தன் நண்பரும் உறவினருமான குறிஞ்சிப்பாடி மணியம் பதிப்பக உரிமையாளரிடம் சொல்லி வெளியிட வைத்தார். அவரும் தன் நண்பருக்காகத் தட்ட முடியாமல் அரை மனதுடன் வெளியிட்டார். என் அதிர்ஷ்டம் 1994ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் நாவலுக்கான கோவை ‘கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளை’ யின் 10 ஆயிரம் ரூபாய் பரிசு அந்த நாவலுக்கும், பதிப்பாளருக்கு 2500 ரூபாயும் கிடைக்கவே என் எழுத்தின் மீது அவருக்கு நம்பிக்கை பிறந்து தொடர்ந்து என் நூல்களை இன்று வரை அவர் வெளியிட்டு வருகிறார். பிறகு இன்னும் சில பதிப்பகங்களும் என் நூல்களை வெளியிட வாய்ப்பு கிடைக்க, நான் மட்டும் இந்த பதிப்புப் பிரச்சினையிலிருந்து தப்பித்திருக்கிறேன்.

எல்லோருக்கும் இப்படி நேர்வதில்லை தான். இன்று சில புதிய பிரசுரகர்த்தர்கள் புதிய எழுத்தாளர் என்று உதாசீனப் படுத்தாமல் தரம் பார்த்து வெளியிட்டு ஊக்குவிப்பது, பிரசுரம் காணாத தரமான படைப்பாளிகளுக்கு நம்பிக்கை தரும் விஷயமாகும். பிரசவம் எவ்வளவு கஷ்டமானது என்று தெரிந்திருந்தும் பிள்ளை பெற்றுக் கொள்ள ஆசைப்படுவது போல, எல்லா எழுத்தாளர்களும் சிரமம் இருந்தும் தமது நூல்களை வெளியிட விரும்புவதில் ஒரு ரகசியம் இருக்கிறது. நீங்கள் எவ்வளவு பெரிய எழுத்தாளராக இருந்தாலும், புகழ் பெற்றவராக இருந்தாலும், உங்கள் எழுத்து அச்சாகி நூலாக வந்தால்தான் போட்டிகளுக்கு அனுப்பி அது தேர்வு செய்யப்படும் வாய்ப்பு கிட்டும். அதன் மூலம் பரிசோ பிரபலமோ அப்போது தான் சாத்தியமாகும். 0

Tuesday, July 05, 2011

எனது இலக்கிய அனுபவங்கள் - 5.விமர்சனமும் எதிர் வினையும்

விமர்சனம் ஒரு கலை. விமர்சனம் என்றதும் முதலில் நினைவுக்கு வருபவர்கள் -
விமர்சனத்துக்காக அதிகமும் கண்டனக் கல்லடி பட்ட திரு.க.நா.சு அவர்களும்
திரு. வெங்கட்சாமிநாதன் அவர்களும் தான். ஆரோக்கியமான அனுசரணை மிக்க
விமர்சனங்கள் என்றால் நினைவில் நிற்பவர்கள் திரு.வல்லிக்கண்ணன் அவர்களும்
திரு.திக.சி அவர்களும்.கறாரான, தாட்சண்யம் கருதாத விமர்சனம், முன்னவர்
இருவருடையதும். 'கடிதோச்சி மெல்ல எறிக' என்ற பண்பு கொண்டவர்கள் மற்ற
இருவரும். இளம் படைப்பாளிகள் தங்கள் விமர்சனத்தால் முளையிலேயே கருகி
விடக்கூடாது என்கிற தாய் உள்ளத்துடன், பாராட்டுக்குரியவற்றை மட்டும் எடுத்துக்
காட்டி உற்சாகப்படுத்தி எழுதியதால் அவர்கள் ஏச்சு, கண்டனக் கல்லடிக்கு
ஆட்படாதவர்கள்.

எனக்கும் விமர்சனம் செய்வதில் அப்படிப்பட்ட அனுபவங்கள் உண்டு.
கணையாழி, புதிய பார்வை இதழ்களில் வந்த எனது விமர்சனங்களால் மு.முருகேஷ்,
சூர்யகாந்தன, விழி.பா.இதயவேந்தன் போன்றோரது பாராட்டும், நட்பும் கிடைத்தன.
அதே சமயம் ஏச்சும், கண்டனமும், நட்பு இழப்பும் கூட ஏற்பட்டன.

அரசுப் பணியில் உயர்ந்த பதவியில் உள்ள ஒரு எழுத்தாளரின் முதல்
சிறுகதைத் தொகுப்புக்கு ஒரு முறை விமர்சனம் எழுத நேர்ந்தது. அந்த நூலை
வெளியிட்ட பதிப்பாளர் தன் உரையில், 'நூலாசிரியர் கவிஞர் என்பதால் அவரது
கதைகளில் கவித்துவம் தெரிகிறது' என்று குறிப்பிட்டிருந்தார். கதைகளின் வருணனை
களில் வாசிப்புக்குத் தடையாக அதீத சொல் அலங்காரமும், எதுகை மோனைகளு
மாய் பொறுமையைச் சோதிப்பதாக இருந்ததால் எனக்கு எரிச்சல் ஏற்பட்டது. நான்
எனது விமர்சனத்தில், 'அதுதான் பிரச்சினையே! பொதுவாக கவிஞர்கள் கதை
எழுதினால் ஒரு மயக்கமும், வாசிப்பைத் தடை செய்யும் பின்னலும் இருக்கும்.
கண்ணதாசன் முதல் மு.மேத்தா, வைரமுத்து வரை இந்தக் குறை இருக்கும். அவ்வாறே
இவரது கதைகளும் இவரது கவிதைகளைப் போலவே குழப்பமாகவும் தொடர்ந்து
படிக்க முடியாமல் காலைப் பிடித்து இழுப்பதான நடை கொண்டதாகவும் உள்ளன'
என்று எழுதினேன்.

இந்த விமர்சனம் சம்மந்தப்பட்ட எழுத்தாளரைக் கோபமூட்டியதோ இல்லையோ
தெரியவில்லை. ஆனால் அவரது அதிகாரத்துக்கு உட்பட்ட, அவரது தாட்சண்யம்
தேவைப்பட்ட ஒரு பதிப்பகத்தைச் சேர்ந்தவர்களுக்குக் கோபம் வந்து விட்டது.
அவரைத் திருப்திப் படுத்த வேண்டி, நேரடியாக என் விமர்சனத்தை அடிக்க
முடியாமல், எனது வேறொரு விமர்சனத்தைச் சாக்கிட்டு அவர்களது இயக்கப்
பத்திரிகையில் 'எல்லாம் தெரிந்த எழுத்தாளர்' என்று தலைப்பிட்டு, சாடி
இருந்தார்கள். அந்த மாதம் வெளியாகி இருந்த ஹைஐகூ கவிஞர் மு.முருகேஷ்
தொகுத்து அளித்திருந்த 'ஒரு கோப்பை நிறைய கவிதை' என்ற நூலுக்கு எழுதிய
எனதுவிமர்சனத்தில், 'இந்த வகையில் இதுதான் முதல் முயற்சி எனலாம்' என்று
எழுதி இருந்தேன். 'பலரது ஹைகூக்களைத் தொகுத்திருக்கிற முதல் முயற்சி' என்று
நான்குறிப்பிட்டதை 'ஹைகூத்தொகுப்பே இதுதான் முதல்' என்று நான் குறிப்பிட்டதாக -
தெரியாமல் (அல்லது) தெரிந்தே கற்பித்துக் கொண்டு, 'எல்லாம் தெரிந்த இந்த
விமர்சகருக்கு இதற்கு முன் மித்ரா, அறிவுமதி போன்றவர்களின் ஹைகூத்தொகுப்புகள்
வந்திருப்பது தெரியாது போலும்!' என்று இடித்திருந்தார்கள்.

அதோடு அப்போது நான் கணையாழியில் எழுதி இருந்த 'மீட்பு' என்ற
குறுநாவலைக் குறிப்பிட்டும் எழுதி இருந்தார்கள். அந்தக் கதையிலு ஒரு புரோகிதரை
உதவி செய்வது போல் ஏமாற்றி, ஒரு முஸ்லிம் அவருடைய டி.வி.எஸ் 50 வண்டியை
அடித்துக் கொண்டு போனதைச் சித்தரித்திருந்தேன். உண்மையில் எங்கள் புரோகிதருக்கு
நேர்ந்த அனுபவம் அது! வழியில் நின்றுபோய் பரதவித்த புரோகிதருக்கு உதவுதாய்
அந்த வழியே போன ஒரு முஸ்லிம் சொல்லி, வண்டியை எடுத்துப் போனவன்
திரும்பவே இல்லை என்ற அவரது வாய்மொழியை அப்படியே கதையில் எழுதி
இருந்தேன். வர்க்கப் பார்வை கொண்ட அந்தப் பத்திரிகை, ஏமாற்றியவன் முஸ்லிம்
ஆகத்தான் இருக்க வேண்டுமா என்று அதற்கு மதச்சாயம் அடித்து என்னைக்
கண்டித்திருந்தார்கள். என் விமர்சனம் இப்படிக் கற்பிதங்களைத் தேடி எழுத
வைத்திருந்தது!

விமர்சனத்தால் நட்பை இழந்ததும் உண்டு. ஒரு இலக்கிய நண்பர். அருமையான
சிறுகதை எழுத்தாளர். நானும் அவரும் தீபம், கணையாழி இதழ்களில் ஒரே கால
கட்டத்தில் எழுதியபோது நட்பு ஏற்பட்டது. தரமான அவரது சிறுகதைகளை நான்
அவ்வப்போது வெகுவாக மனந்திறந்து பாராட்டி எழுதுவேன். நண்பர் என்னைப் போல
ஊதாரி அல்லர். கதைகளில் கையாள வேண்டிய சொல் சிக்கனத்தை அவரது விமர்சனத்
திலும் கைக் கொள்பவர். என் கதைகள் பிரசுரம் ஆகும் போது, ' உங்கள் கதையைப்
படித்தேன், பார்த்தேன்' என்ற வகையில் எழுதுவார். ஆனால் எனக்கு அதில் வருத்தம்
ஏற்பட்டதில்லை. ஆனால் ஒரே ஒரு தடவை அவரது பரிசு பெற்ற நாவலின் தொடக்கம்
பற்றி சற்று அதிருப்தியாக விமர்சித்து அவருக்கு நான் எழுதிய போது அவர் வெகுண்டு
எழுந்தார்.

ஒரு பழம் பெரும் இலக்கியப் பத்திரிகையில் ஆண்டு தோறும் நடக்கும் நாவல்
போட்டியில் ஒரு முறையேனும் பரிசு பெற வேண்டும் என்ற அவரது நீண்டநாளைய
லட்சியம் பல தோல்விகளுக்குப் பின் ஒரு தடவை நிறைவேறிற்று. அவர் முதல் பரிசு
பெற்ற செய்தியை பத்திரிகையில் பார்த்ததும், உடனே தந்தி அடித்துப பாராட்டுத்
தெரிவித்தேன். வழக்கம் போல அது அவரை மகிழ்வித்திருக்கும். ஆனால் அந்த நாவல்
பத்திரிகையில் வந்த போது முதல் அத்தியாயத்தைப் படித்து விட்டு நான் எழுதிய
அபிப்பிராயம் அவருக்குக் கசப்பை ஏற்படுத்தி விட்டது. மெகா பரிசு பெற்ற
ஒரு நாவல் முதல் அத்தியாயத்திலேயே அதன் பரிசுக்கான தகுதியை வாசகர்க்குத்
திருப்தி ஏற்படுகிற மாதிரி இருக்க வேண்டும் என நினைப்பவன் நான். கவி ஷெல்லி,
'ஒரு கவிதை தன் தொடக்க வரியிலேயே ஒரு பந்தயக் குதிரை வேடிச்சத்தம் கேட்டதும்
பாய்ந்தோடுகிறமாதிரி வாசிப்பவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருக்க வேண்டும். முதல்
பாய்ச்சலில் தொய்வு இருந்தால் வெற்றியை அது பாதிக்கும்' என்பார். நான் அதைக்
குறிப்பிட்டு, நண்பரின் நாவலின் முதல் அத்தியாயம் வேகமாக இல்லை, நாவலின்
தலைப்பைப் போலவே மந்த கதியில் நடக்கிறது என்று எழுதினேன். மறு தபாலில்
சீறிக்கொண்டு வந்தது நண்பரின் கடிதம். 'நீங்கள் எதைக் குறை என்று குறிப்பிட்
டிருக்கிறீர்களோ அதையே நாவலின் சிறப்பு என்று பலர் எழுதியுள்ளார்கள். நாவல்
மந்தமாக நடக்கிறது என்று எழுதியுள்ளீர்கள். இனியும் அபடித்தான் இருக்கும்'
என்று கோபப்பட்டிருந்தார். நான் பதில் எழுதினேன்: 'ஒரு வாசகனாக நான்
உண்மையில் உணர்ந்த என் அபிப்பிராயத்தை எழுதினேன். அது உங்களுக்குப்
பிடிக்கவில்லை. இனியும் இப்படித்தான் இருக்கும் என்று பயமுறுத்தி இருக்கிறீர்கள்.
எனக்கு ஆட்சேபணை இல்லை.'

பதினைந்து ஆண்டுகளாய் பாராட்டியே எழுதி வந்ததை விரும்பி ஏற்றவர் ஒரு
சின்ன வாசக அபிப்பிராயத்தை ஏற்காமல் அவரது அத்தனை ஆண்டு நட்பையும்
துறந்து விட்டார். பிறகு தொடர்பு விட்டுப் போயிற்று. 0

Thursday, June 30, 2011

எனது இலக்கிய அனுவங்கள் - 4.ஆசிரியர் உரிமை (3)

'எடிட்டிங்' என்கிற 'பிரதியைச் செப்பனிடுதல்' பத்திரிகை ஆசிரியரின்
தலையாய உரிமை ஆகும். அது தேவையானதும் ஆகும். மேலை நாடுகளில்
பதிப்பாளர்கள் அதில் அதிகமும் கவனம் காட்டுகிறார்கள். இதற்கென்றே
ஒவ்வொரு பதிப்பகமும் தனித்திறமை மிக்க எடிட்டர்களை வைத்திருப்பார்கள்.
எவ்வளவு பெரிய எழுத்தாளரானாலும் இவர்களது கண்டிப்புக்குத் தப்ப முடியாது.
தமது வெளியீடு தரமாக அமைய வேண்டும் என்பதில் அவர்கள் காட்டும்
அக்கறை பிரமிப்பானது. தமிழ்ப் பதிப்பாளர்களில் 'க்ரியா' இதில் தனிக் கவனம்
செலுத்துவதாக அறிகிறேன். தங்களுக்குத் திருப்தி ஏற்படுகிறவரை எழுத்தாளரைத்
திரும்பத் திரும்ப எழுத வைக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இப்போது
'தமிழினி' அப்படிக் கவனம் காட்டுவதாக அறிகிறேன்.

இலக்கியச் சிற்றிதழ்களில் பக்கக் கட்டுப்பாடு காரணமாக வெட்டுகள் நிகழலாம்.
அது தவிர்க்க முடியாது தான். அப்படி வெட்டும் போது 'தீபம் திருமலை', வெட்டியது
தெரியாமல் செப்பம் செய்வதில் வல்லவர். வணிக இதழ்களில் இது ஆசிரியரின்
தனியுரிமை. குமுதத்தில் கேட்கவே முடியாது. பெரிய கதையை சின்னஞ் சிறுகதையாய்
வெட்டி, ஒரு பக்கக் கதை, அரைப்பக்க கதை, ஏன் துணுக்காகவும் கூட வெளியிடுவது
உண்டு. முன்பெல்லாம் அப்படி படைப்பாளியைப் பதற வைக்கிற மாதிரி செப்பம்
செய்வதில்லை. அதில் வெளியான என் ஒரே சிறுகதையைக் கூட தலைப்பில் தான்
மாற்றம் செய்தார்களே தவிர கதையில் கை வைக்கவே இல்லை. நான் எழுதி
அனுப்பியபடியே தான் வெளியானது!

விகடனில் வெளியான பத்துக்கு மேற்பட்ட என் கதைகளில் இரண்டு கதைகள்
தான் - ஒன்றில் தலைப்பு மட்டும், மற்றதில் தலைப்பு மாற்றத்துடன் வெட்டும்
நிகழ்ந்தது. தலைப்பு மட்டும் மாற்றப்பட்ட கதைக்கு நான் ஆட்சேபம் ஏதும்
தெரிவிக்கவில்லை. ஆனால் வெட்டுகள் அதிகம் நிகழ்ந்த கதைக்கு, அனுபவ
மின்மையால் ஆத்திரத்துடன் ஆசிரியருக்கு ஒரு ஆட்சேபக் கடிதம் எழுதினேன்.
ஏனெனில் வெட்டப்பட்ட பகுதிகள் அவசியமானவை என்று கருதினேன். அதோடு
கதையின் சில பாராக்கள் முன் பின்னாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தன. சில
வார்த்தைகளும் பாத்திரப் பெயர்களும் கூட வெட்டப்பட்டிருந்தன. தலைப்புகூட
நான் தந்திருந்த மாதிரி காத்திரமாக இல்லை என்றும் கருதினேன். என் ஆத்திரமான
கடிதத்தை ஆசிரியர் பொருட்படுத்தி இருக்கவேண்டியதில்லை. இப்படி வருகிற
கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதி அவர்களுக்குக் கட்டுப்படியாகாதுதான்.
ஆனால் அப்போதைய விகடன் ஆசிரியர் திரு. பாலசுப்பிரமணியன் அவர்கள் -
அவரும் எழுத்தாளர் என்பதால், என் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பரிவுடன்
பதில் எழுதி விகடனின் பெருமையை உயர்த்தினார்.

கதைக்கு நான் வைத்த தலைப்பு 'ஜெயஸ்தம்பம்'. அது 'வெற்றிக் கம்பம்'
என மாற்றப்பட்டிருந்தது. வடமொழி வார்த்தை என்பதால் அதை மாற்றினீர்களா?'
என்றும், மாசிலாமாணிக்கம் பிள்ளை என்ற ஒரு கிராமத்துப் பாத்திரப் பெயரை
வெறும் 'மாணிக்கம்' என்று வெட்டியது ஏன் என்றும், சில ரசமான கிராமத்து
வர்ணனைகளை வெட்டியுள்ளீர்கள் என்றும், கதையின் நீளத்தையும் வெகுவாகக்
குறைத்து விட்டீர்கள், இது எழுத்தாளரது உரிமயைப் பறிப்பதாக ஆகாதா என்றும்
கேட்டிருந்தேன். அதற்கு ஆசிரியர் பொறுமையாக, பரிவோடு இப்படி பதிலெழுதினார்;

'அன்புடையீர்,

வணக்கம். 27-1-90 தேதியிட்ட தங்கள் கடிதம் பெற்றேன். விகடனில்
அண்மையில் வெளியான தங்களுடைய 'வெற்றிக் கம்பம்' சிறுகதைக்கு வாசகர்களின்
ஒரு மனதான பாராட்டுக் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்
கொள்கிறேன். தங்கள் கதையின் தலைப்பை தாங்கள் கூறியுள்ளபடி அது வடமோழியில்
அமைந்திருந்த காரணத்தால் தான் 'வெற்றிக் கம்பம்' என்று மாற்றினோம்.
'ஜெயஸ்தம்பம்' என்று கதைக்குத் தலைப்பு கொடுத்து விட்ட காரணத்தால் கதையின்
முடிவுப் பகுதிகளில் இந்த வார்த்தையை நிறைய இடங்களில் பயன் படுத்தி
இருக்கிறீர்கள். அதுவே 'வெற்றிக் கம்பம்' என்று மாற்றி விட்ட பிறகு கதையினுள்
அதைப் பயன்படுத்த இயலவில்லை. தவிர ஏற்கெனவே 'த்வஜெஸ்தம்பம்' என்ற
சொல் பிரபலமாக இருப்பதால் 'ஜெயஸ்தம்பம்' என்ற வார்த்தை தவறாகப் புரிந்து
கொள்ளப்படும்.

தவிர, இயன்ற வரையில் கதைகளின் தலைப்புகள் தமிழில் இருப்பதையே நாங்கள்
விரும்புகிறோம். கதையின் தலைப்பு மாற்றப்பட்டதாலேயே அதன் சிறப்பு குறைந்து
விட்டது என்று தாங்கள் கூறுவது முழுதும் ஒப்புக் கொள்ளக் கூடியதாக இல்லை.
'மாசிலாமாணிக்கம் பிள்ளை' என்ற கதையில் வரும் பாத்திரத்தின் பெயர் படிக்கும்
போது எங்களுக்கு நெருடியது. இருவருடைய பெயர் ஒன்று சேர்ந்து விட்டது போன்ற
பிரமை ஏற்படுத்தியது.

'சதைப்பற்றும் அழகு அமைப்பும் கொண்ட குழந்தையை வெறும் எலும்புக்
கூடாக்கி அனுப்பியது போல.....' என்று கதையின் நீளத்தை குறைத்ததற்காக
வருத்தப் பட்டிருக்கிறீர்கள். எந்தக் கதையையுமே சேதப்படுத்தி வெளியிட வேண்டும்
என்பது எங்கள் எண்ணமாக இருக்கமுடியாது என்பதைத் தாங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

தங்கள் கதையின் தொடக்கத்தில் காலைக்கடன் பற்றிய விளக்கம் நீக்கப்
பட்டிருக்கிறது. காரணம், கதையைப் படிக்கத் தொடங்கியவுடன் முகம் சுளிக்க
வைக்கும் வர்ணனையாக அது சிலருக்கு அமையலாம். கதைக்கோ, அது
சொல்லப்படும் சூழ்நிலைக்கோ தேவையற்றதாக நாங்கள் கருதியதால் கூலி
கொடுப்பதில் தாமதம் ஏற்படுவது பற்றிய விவரம் நீக்கப்பட்டது. 'பாப்பாரத் தெரு'
என்பது போன்ற சாதி சொற்பிரயோகத்தை கூடிய வரையில் நாங்கள் தவிர்க்க
விரும்புகிறோம். அதனாலேயே பாப்பாரத் தெரு பற்றிய விவரத்தை நீக்கினோம்.

கருப்பன் கால்காணி பூமி அதிகம் உள்ளவன் என்று சொல்லிவிட்டு, ஊர்ப்
பெரியவர்களிடம் அவன் காட்டும் அதிகமான பவ்யம், இந்தத் தொழில்புரிபவர்களை
அடிமைகளாகக் காட்டும் தொழில் ஏளனம்' என சிலருக்கு எரிச்சல் ஏற்படக்கூடும்.
அந்தவகையில் தான் 'சவரம்' என்ற வார்த்தையைக் கூட தவிர்த்தோம். கதை
எழுதப்பட்ட முழுவடிவமும் உங்களுக்குத் தெரிந்திருப்பதால் வெளியான கதை
எலும்புக்கூடு என்று தாங்கள் சொல்லலாம். ஆனால், அச்சான கதையை மட்டும்
படிக்கும் எந்த வாசகருக்கும் இந்த உணர்வு ஏற்படாது.

கதை எடிட் செய்யப்பட்டிருப்பதில் தங்கள் மனம் புண்பட்டிருக்கிறது என்பது
புரிகிறது. 'கதையின் இந்தப் பகுதிகளெல்லாம் நீக்கி வெளியிடப்படும்' என்று
முன் கூட்டியே நாங்கள் சொல்லியிருந்தால் தங்களுக்கு இப்போது இந்த அதிர்ச்சி
ஏற்பட்டிருக்காது. அப்படி செயல்படாததற்காக நாங்கள் வருந்துகிறோம். நன்றி.

இப்படிக்கு,

...................

எனது அயர்ச்சி தரும் நீண்ட கடித்துக்கு இப்படிப் பொறுமையாய்ப் படித்து
என் ஒவ்வொரு புகாருக்கும் விளக்கம் சொல்லி 3 பக்க அளவில் நீண்ட
கடிதத்தை ஆசிரியர் எழுத வேண்டும் என்கிற நிர்ப்பந்தம் ஏதுமில்லை தான்.
இப்படி எல்லா பத்திரிகை ஆசிரியர்களும் இந்தளவு பொறுப்பும் பொறுமையும்
கொண்டிருக்க முடியுமா என்ற வியப்பு ஏற்பட்டது. ஆனால் அது ஆனந்தவிகடனின்
பாரம்பரியமான நேர்மை, பெருமை என்பதை சமீபத்தில் 'ஆனந்தவிகடனும் நானும்'
என்ற தலைப்பில் ஒளி இயக்குனர் தங்கர் பச்சான் அவர்களின் இது போன்றதொரு
அனுபவத்தைப் படித்தபோது தெரிந்தது. அதோடு எடிட்டிங் பற்றிய மரியாதையும்
என்னுள் கூடியது. 0

Thursday, June 23, 2011

எனது இலக்கிய அனுவங்கள் - 3. ஆசிரியர் உரிமை (2)

எழுத்தாளர் அனுப்பும் கதை அல்லது கட்டுரையின் தலைப்பை, தனது
ரசனைக்கு அல்லது வாசகரது ரசனைக்கு ஏற்றது என ஆசிரியர் கருதுவதற்கு
ஏற்ப மாற்றுவது ஆசிரியரின் இன்னொரு உரிமையாகும். சில சமயம் மாற்றப்படும்
தலைப்பு எழுத்தாளருக்கு உவப்பானதாகவும் அமைந்து விடுவதுண்டு. அநேகமாக
எழுத்தாளர் முகம் சுளிப்பதாகவே மாற்றம் அமைவதுதான் யதார்த்தம். அதே
சமயம் வாசகருக்கும் உவந்ததாகவும் அமைந்து விடலாம். ஆனால் படைப்பாளி
முகம் சுளிப்பதில் பயனில்லை. அடுத்து அவருக்கு வாய்ப்பு இல்லமால் போகக்
கூடும். எல்லா பத்திரிகைக்கும் இது பொதுவானதுதான் என்றாலும் 'குமுதம்'
பத்திரிகைக்கு தலைப்பை மாற்றுவது என்பது அத்தியாவசியமான செயல்
போலிருக்கிறது. மாற்றினால்தான் அது சரியான 'எடிட்டிங்'!

என் கதை ஒன்றிற்கு 'குமுதத்தி'ல் இப்படி நேர்ந்திருக்கிறது. நான் 'அண்ணா
மலைப் பல்கலை'யில் ஆசிரியர் பயிற்சி பட்டப்படிப்பு படிக்கும் போதுதான் 1956ல்
ஆனந்தவிகடனில் முதல் 'மாணவர் திட்டம்', வாசன் அவர்களால் தொடங்கப்
பட்டது. வாரம் தோறும் மாணவர் ஒருவரது படைப்பு தேர்வாகி பிரசுரமாகி வந்தது.
'குழந்தைத்தெய்வம்' என்கிற என்னுடைய கதையும் அப்போது 1957ல் வெளியானது.
அதற்குப் பிறகு சில கதைகள் விகடனில் வெனியான நிலையில் 'குமுதத்'தில் கதை
வெளியானால் தான் ஜென்மம் சாபல்யமாகும் என்ற அற்ப ஆசையால் அதற்கும்
முயன்றேன். 1963ல் அந்த ஆசை 'கொஞ்சம் குறைகிறது' என்ற கதை மூலம்
நிறைவேறியது. 'குமுதத்'தில் கதை வெளியான பூரிப்பை முழுமையாக அனுபவிக்க
முடியாதபடி கதையின் தலைப்பு உறுத்தியது. நான் கொடுத்திருந்த தலைப்பு
'மனிதனுக்கு மனிதன்' என்பதுதான் பொருத்தமானது என்ற என் கருத்துக்கு மாறாக
சம்பந்தமில்லாமல் 'கொஞ்சம் குறைகிறது' என்று மாற்றிவிட்டார்களே என்ற
ஆதங்கத்தை அவர்களுக்கு எழுத முடியுமா? கதை வெளியானதே பெரிய
விஷயம்! அதோடு சன்மானமும் அந்தக் காலகட்டத்திற்கு கணிசமானதாக
ரூ.60 வேறு கிடைத்திருந்தது. எனவே எதிர்காலப் பிரசுரம் கருதி கசப்பை
விழுங்கிக் கொண்டேன்.

கதையைக் கோடிகாட்டினால் தான் என் ஆதங்கம் புரியும்.

ஒரு முன்னிரவு நேரத்தில் ஒரு தொழிலாளி, மனைவியுடன் பேருந்தில் பயணம்
செய்கையில் பயணச்சீட்டுக்கு காசு கொஞ்சம் குறைகிறது. முன் இருக்கையில்
இருக்கிற தான் வேலை பார்க்கும் முதலாளியிடம் கெஞ்சிக் கேட்டும் அவர்
தரவில்லை. நடத்துநர் தாட்சண்யம் காட்டாது அவர்களை பேருந்திலிருந்து இறக்க
முயல்கையில் முதலாளிக்கு அருகில் அமர்ந்திருக்கும் ஒரு சாமியார் இரக்கப்பட்டு,
குறைகிற காசைக் கொடுத்து அவர்கள் தொடர்ந்த பயணிக்கு உதவுகிறார். முதலாளி
'அவன் வேஷம் போடுகிறான் அவனுக்கெல்லாம் உதவ வேண்டியதில்லை' என்கிறார்
சாமியாரிடம். அவர் 'இருக்கட்டும், ஏதோ மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டியதுதான்!'
என்கிறார். உடனேயே முதலாளி பயணச் சீட்டுக்குப் பணம் தர வேண்டிய போது அவரது
பணப்பை காணாமால் போயிருப்பது தெரிகிறது. 'ஊர் போய்ச் சேர்ந்ததும் தருவதாக
முதலாளி சொல்ல, நடத்துனர் மறுத்து 'பணம் இல்லாவிடில் இறங்கி விடுங்கள்'
என்கிறார். முதலாளி, சாமியரிடமே உதவி கேட்கிறார். அவர் தன்னிடம் இனி பணம்
இல்லை என்று சொல்ல, 'மனிதனுக்கு மனிதன் இது கூடச் செய்யக் கூடாதா?' என்று
அவரிடமே அவரது பாடத்தைப் படிக்கிறார். 'அது சரிதான்! மனிதனுக்கு,
முன்பே நான்செய்து விட்டேன்' என்கிறார்சாமியார். நடத்துனர் தாட்சண்யம் காட்டாது
கும்மிருட்டில் முதலாளியை இறக்கி விட்டுவிட, பேருந்து நகர்கிறது.

அடுத்த வார 'குமுதத்தி'ல் என் கதைக்குப் பாராட்டும் கண்டனமும் வந்திருந்தன.
நான் ஆதங்கப்பட்ட தலைப்பு மாற்றத்தைப் பாராட்டி இரண்டு பேர் எழுதி
இருந்தார்கள். 'சில்லரை கொஞ்சும் குறைகிறது என்பதைத் தலைப்பு சுட்டுவது
பொருத்தமாக உள்ளது' என்று ஒருவரும், 'பண்பாடு கொஞ்சம் குறைகிறது என்பதை
கதை நாசூக்காய்சுட்டுகிறது' என்று மற்றொருவரும் பாராட்டி இருந்தார்கள். கண்டனம்
தெரிவித்தவர் 'கதை யதர்த்தமாக இல்லை. முக்கியஸ்தராக அப்பகுதியில் இருக்கிற
முதலாளி ஒருவரை இப்படி எல்லாம் எந்த நடத்துனரும் இறக்கி விட்டுவிட மாட்டார்'
என்று எழுதி இருந்தார். இதற்குப் பதிலாக, அடுத்த வாரம் ஒருவர், 'இப்படி இறக்கி
விட்டு விடுவாரா என்பதல்ல கதை; இப்படிப் பட்டவர்களை இரக்கமின்றி இறக்கி விட
வேண்டும் என்பதுதான் கதை!' என்று எனக்காகப் பரிந்து எழுதினார். வாசகர் பல விதம்!
அதுதான் பத்திரிகை ஆசிரியரின் பலம். ஆனால் ஒரு திருப்தி! என் கதை ஒரு
வார்த்தை கூட வெட்டுப் பெறாமல் நான் அனுப்பியபடியே முழுமையாக வெளியாகி
இருந்தது!

பிறகு வந்த என் கதைத் தொகுப்பில் நான் வைத்த தலைப்பிலேயை கதை
வெளியானது. 0