Tuesday, March 01, 2005

உவமைகள்-வர்ணனைகள்-36

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 36

வ.ரா வின் படைப்புகளிலிருந்து:

1. நாணுவய்யரின் கையைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.அவரது வலது கைவிரல்களை அவருடைய கையிலே காண வேண்டுமென்பதில்லை. பையன்களுடைய கன்னங்களில் ஐந்து விரல்களையும், ரேகைகள் உட்பட, விளக்கமாகக் காணலாம். இவ்வளவு திறமையுடன் கையை உபயோகிக்கும் நாணுவய்யருக்குப் பட்டாளத்துச் சிப்பாயின் சம்பளத்துக்குக் கொஞ்சம் குறைவு. இருபது ரூபாய்க்குள் அடக்கம்.

- 'வாத்தியார் நாணுவய்யர்'.

2. மலைநாட்டு வாசிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவர்கள் சதா 'ஏறி இறங்கும் திருமேனி'களாய் வாழ வேண்டிஇருப்பதால் உயரமாய் வளர்வதில்லை'. எப்போதும் உணவுக்கு வேலை செய்து கொண்டு இருக்க வேண்டுமாகையால், உட்கார்ந்து உயரமாய் வளர்வதுக்கு நேரம் இல்லையோ என்னவோ! உயரம் என்ற விஷயத்தில் அவர்கள் மோசம் போனார்களே ஒழிய, கனத்தில் அவர்கள் மோசம் போகவில்லை.
அவர்கள் 'கட்டைக் குட்டை'. தேகம் குண்டுக் கல். ஆனால் தூக்கிப் போட்டால் உடைந்து போக மாட்டார்கள்.

- 'மைக் குறத்தி'.

3. வார நாட்கள், வாரத்துக்கு ஒரு தரம் திரும்பித் திரும்பி வருவதனால் கொஞ்சம் தேய்ந்து போனாலும் போயிருக்கும். சூரியன் சதா உருண்டு கொண்டே இருப்பதனால் (சம்பிரதாயப் பொய். சூரியன் உருளுவதில்லை என்று நிபுணர்கள் சொல்லுகிறார்கள்) ஒரு பக்கம் மூளியாய்ப் போனாலும் போகலாம். ஆனால் இராப்பகலாய், சலிக்காமல், முப்பது வருஷ காலமாக எங்கள் வீட்டில் வேலை செய்து வரும்
அம்மாக்கண்ணுவின் உடம்பு ஏன் தேய்ந்து போகவே இல்லை?

- 'வேலைக்காரி அம்மாக்கண்ணு'.

4. சின்னப் பையன்களுடைய பாடப் புஸ்தகங்களில் மயில் தோகை குட்டி போடும். ரொக்கப் பணமும் 'பிள்ளைத்தாச்சி போல" வட்டிக் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டேயிருக்கும். ரொக்க லேவாதேவிப் பணம் மலடுமல்ல; அதற்குக் காய்த்து பழுத்து, அலுத்துப் போகிற காலமும் கிடையாது.

- 'செருப்புக்கு அடி அட்டையா?'.

5. குப்பண்ணாவை நீங்கள் பார்த்தால் அவர் என்ன தொழில் செய்கிறார் என்று உங்களாலே சொல்ல முடியாது. ரொம்பவும் 'டாப்பு சிறப்பாக' இருப்பார். உயர்ந்த ரகமான துணியைத்தான் அவர் உடுத்துவார். தேகத்தில் சட்டை இராது. தெரு வழியாக அவர் சமஸ்கிருத சுலோகம் சொல்லிக் கொண்டு போகும்போது, அவர் எதையோ பாராயணம் செய்து கொண்டு, அலுவலகத்துக்குக்ப் போவதாகத் தோன்றும். தெருப் பிச்சை எடுப்பவர் குப்பண்ணா என்று நீங்கள் சந்தேகிக்க முடியாது.

- 'வாழ்க்கை விநோதங்கள்'.

6. பொம்மையும், பள்ளிக் கூடமும் தான் தெரியும். பாடப்புத்தகம் தெரியும்; சொல்லிக் கொடுத்தவற்றை மனப்பாடம் செய்யத் தெரியும்; வெளித் தோற்றதையே கண்டு மயங்குகிற வயது. பிறந்த சத்தத்துக்கெல்லாம் காது கொடுக்கிற வயது; பொய்த் தூக்கமில்லாத வயது;
கிழிந்த மயிலிறகு குட்டி போடும் வயது. இந்த வயதிலே சுந்தரி விதவை ஆனாள். விதவை என்ற வார்த்தைக்கு இந்தியாவிலே கொடுக்கிற
முழு அர்த்தமும் அவளுக்குத் தெரியுமோ?

- 'சுந்தரி' நாவலில்.

7. கிருருஷ்ணன் பிறரைக் கேலி செய்யும் விதமே விநோதமாய் இருக்கிறது. யாரை அவர் கேலி செய்கிறாரோ, அவரும் சேர்ந்து சிரிக்கும்படியான விதத்தில் கிருஷ்ணன் கேலி செய்கிறார். நான் சிரிக்க மாட்டேன் என்பது போல, வாயைக் கெட்டியாக மூடிக் கொண்டிருப்பவர்களையும், கோட்டை வாசல் திறந்தது போல வாயைத் திறந்து பார்த்துக் கொண்டே இருக்கும் படியாகக் கிருஷ்ணன் செய்து விடுகிறார்.

- 'தமிழ்ப் பெரியார்கள்' - என்.எஸ்.கிருஷ்ணன்.

8. பாரதியாரின் சிரிப்பு, சங்கீதத்தில் ரவை புரளுவது போன்ற சிரிப்பு. அதிர் வேட்டைப்போல் படீர் என்று வெடிக்கும் சிரிப்பல்ல; அமர்ந்த சிரிப்புமல்ல. வஞ்சகத்தை உள்ளே வைத்துக் கொண்டு வாயை மட்டும் திறந்து, பல்லைக் காட்டி, சிரிப்பைப் பழிக்கும் சிரிப்பல்ல; புன்னகையைப் புஸ்தகத்திலே பாடிக்கலாம்; ஆனால், பாரதியாரின் புன்சிரிப்பைப் பார்க்க முடியாது; சங்கீதச் சிரிப்பைத்தான் காண முடியும்.

- 'மகாகவி பாரதியார்' நூலிலிருந்து.

9. பாரதியாருக்கு மீசை உண்டு. அது பார்க்க ரொம்ப நேர்த்தியாகவிருக்கும். கண்ணைக் குத்தும் கெய்சர் மீசை அல்ல; கத்தரிக் கோல் பட்ட 'தருக்கு' மீசை அல்ல. தானாக வளர்ந்து பக்குவப் பட்டு., அழகும் அட்டஹாசமும் செய்யும் மீசை. அவரது வலக்கை, எழுதாத நேரங்களில் எல்லாம் அனேகமாக மீசையில் இருக்கும். மீசையை முறுக்குவதாகத் தோன்றாது; மீசைக்கு 'டிரில்' பழகிக் கொடுப்பது
போலத் தோன்றும்.

- 'மகாகவி பாரதியார்'.

10. சுமங்கிலியைக் கண்டிக்க ஒரு மாமியாரும், ஒரு மாமனரும் தான். ஆனால் பால்ய விதவைக்கோ உலகம் முழுதும் மாமனாரும், மாமியாரும்.

-'விஜயம்' நாவலில்.

- தொடர்வேன்.

- அடுத்து பாரதியார் கதைகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: