Thursday, December 23, 2004

நினைவுத்தடங்கள் - 28

ஐயாவின் பள்ளியில் விடுமுறை கிடையாது. சனிக்கிழமை மதியம் அரை நாளும் ஞாயிறும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் விடுமுறை. அதற்காகப் பெற்றோர்கள் ஏதும் குறை சொல்வதில்லை. மாதத்தில் ஒரு சனிக்கிழமை ஆசிரியர் சங்கக் கூட்டத்துக்கு பக்கத்து நகரத்துக்கு எல்லோரும் கட்டாயம் போக வேண்டும் என்பதால் மாதம் ஒரு நாள் மட்டும் மாணவர்களுக்கும் விடுமுறை கிட்டும். அன்று தெருக்கள் திமிலோகப்படும். ஏரி, குளம் தூள் கிளம்பும். அப்போது சிலர் மட்டும் 'எங்கே போய்த் தொலைஞ்சார் செதம்பரத்து வாத்தி? ஏ அப்பாடி! அவுரு இல்லேன்னாலும் இதுகளை மேய்க்க முடியாது!' என்று அலுத்துக் கொள்வார்கள். ஐயாவும் கூட இவர்களைக் கட்டி மேய்க்க அலுத்துக் கொள்ளாது போனாலும் சமயங்களில் 5 வயதுக்குள்ளான பிள்ளைகளையும், பெற்றோர்கள் வீட்டில் அவர்களைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்பும்போது, 'ஏன் வயத்துக்குள்ளே இருக்கிற பிள்ளைங்களையும் எறக்கி அழச்சிக் கிட்டு வந்துடுங்களேன்! அதான் இங்கே செதம்பரத்து வாத்தி ஒருத்தி இருக்கானே- அவனுக்கு வேறே என்ன வேலை?' என்று சீறுவார்.

சனி பிற்பகலும் ஞாயிறும் பள்ளி உண்டே தவிர அந்நாட்களில் பாடம் கிடையாது. சனி மதியம் வந்ததும் தோட்ட வேலை செய்ய விட்டு விடுவார். பள்ளிக்கூடம் ஒரு பரந்த ஆல மரத்தடியில் நடந்தது. ஐயா தங்கியிருந்த சாவடியை ஒட்டிய பகுதியை வளைத்து சாவடிக்கு முன்னால் 'ப' வடிவில் பாத்திகள் அமைத்து பூச்செடிகள், குரோட்டன்கள் எல்லாம் வைத்திருந்தார். பாத்திகளின் நடுவில் பன்னீர் மரமும் பவழமல்லிகையும் வளர்த்திருந்தார். விடிகாலை 'வேத்தாஞ் சீட்டு'க்கு வரும் போது 'கம்' மென்று, பன்னீர்ப் பூவும் பவழமல்லிகையும் கிழே சிதறிக் கிடந்து நாசிக்கும் மனதுக்கும் சுகந்தத்தையும் புத்துணைர்வையும் ஊட்டும். ஆண்பிள்ளைகள் பாத்திகளுக்கிடையே சருகு பொறுக்கி, களை நீக்கி வேலை செய்கையில் பெண் பிள்ளைகள் வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் கொண்டு வந்திருக்கிற சின்னச் சொம்புகளால் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள ஏரியிருந்து நீர் மொண்டு வந்து செடி மரங்களுக்கு ஊற்றுவார்கள். இந்த வேலை என்றால் பிள்ளைகளுக்குப் படு குஷி. இப்போது அவர்களது கூச்சல், கும்மாளங்களை ஐயா கண்டுகொள்ள மாட்டார். வேலை முடிந்ததும் பொழுதிருக்கவே வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை. மாதம் ஒரு முறை ஆண் பிள்ளைகள் எல்லாம் கூப்பிடு தொலைவில் ஓடும் ஆற்றுக்குப் போய் ஆற்று மணலை சின்னக் கூடைகளில் அள்ளி வந்து பாத்திகள் போக முன்னால் உள்ள உட்காரும் இடத்தில் கொட்டிப் பரப்பி எழுதிப் பழகவும் உட்காரவும் சமப்படுத்துவார்கள். அதிகாலையே எல்லாப் பையன்களும் கையில் சின்னக் கூடையுடன் வந்துவிட வேண்டும். ஐயா மேற்பார்வையில் வரிசையாய் ஆற்றுக்குப் போய், மணலை அள்ளி தலையில் சுமந்தபடி வரிசையாய் வரவேண்டும்.

அன்று கொஞ்சம் தாமதமாக 10 மணிக்குப் பள்ளி தொடங்கும். அன்று பொது அறிவு, மற்றும் நடைமுறைக்குப் பயனுள்ள படிப்பாக அமையும். பிராமிசரி நோட்டு எழுத, குடக்கூலி-போக்கிய பத்திரம் எழுத அன்று ஐயா கற்பிப்பார். இதுதான் பள்ளிப்படிப்பைத் தொடராமல் ஊரோடு நிறுத்திக் கொள்கிறவர்களுக்குப் பின்னாளில் கை கொடுக்கக் கூடியதாக இருந்தது. அதோடு பஞ்சாங்கம் பார்ப்பது, நாள் பார்ப்பது எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அதற்காக தமிழ் வருஷங்கள், திதிகள், நட்சத்திரங்கள் எல்லாம் மனப் பாடம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அதனைச் சோதிக் கவும் பயிற்சி கொடுக்கவும் ஐயா பயன் படுத்தினார். மாலையில் விளையாட அனுமதிப் பார். பெண் பிள்ளைகள் எல்லைக் குள்ளேயும், பிள்ளைகள் பாத்திகளுக்கு வெளியே தெருவிலும் விளையாடலாம். அவரவர்க்கு ஏற்றபடி- பெண்களானால் கும்மி, கிளித் தட்டு பையன்களானால் சடு குடு, சரணா என்று ஐயாவே பிரித்துக் கொடுத்து ஆடச் செய்வார். 5 மணி ஆனதும் "போதும்
விளையாடுனது! வீட்டுக்குக்குக் கிளம்புங்க!" என்று அனுப்பி வைப்பார். அந்த இரண்டு நாட்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மூச்சு விடக்கூடிய நாட்களாக அமையும்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: