Thursday, December 30, 2004

உவமைகள் வர்ணனைகள் - 33

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 33: ஜெயந்தன் படைப்புகளிலிருந்து:

1. சுப்ரமணியம் உறக்கத்திலிருந்தார். அது நிம்மதியான தூக்கம். சந்தோஷமான தூக்கம். இத்தனை நாள் இல்லாத ஒரு மன அமைதியும் கவலை விடுதலையும் நேற்று மாலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக இந்த வரன் அமைந்த மாதிரிதான். இரவு ஒன்றிரண்டு முறை விழிப்பு வந்தபோதுகூட தான் இந்த சந்தோஷத்துடனேயே தூங்கிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது. நீண்ட நாள் ஒழுகும் வீட்டிலிருந்தே கஷ்டப்பட்டு பழகிய ஒருவன் ஒருநாள் அந்தக் கூரை வேயப்பட்ட பிறகு, அதன் மீது மழை கொட்டித் தீர்க்கும்போது அவன் உள்ளிருந்து அடைகிற சந்தோஷத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்- தூக்க நிலையிலும்.

- 'முறிவு' நாவலில்.

2. வனஜா அவனது அருமைக் காதலி. ஒரு காலத்தில் இவனது கையில் இருந்த ஐஸ் கட்டி. அது கரைவதற்கு முன்பே, தட்டிப் போன ஒன்று. அதனால் என்றுமே கரையாத ரூபத்தில் இவன் நினைவில் இருப்பவள். இன்னும் இவன் நினைவாகவே இருப்பாள் என்று இவனால் நம்பப்படுபவள்.

- 'பச்சை' சிறுகதையில்.

3. அவனுக்கு இப்படித்தான் தோன்றியது. சில கவிஞர்கள் கவிதை என்றால் என்னவென்று தெரியாமலே நல்ல கவிதைகளை எழுதி விடுவதைப் போலவே, இவர்களும் வியாபாரம் என்றால் என்னவென்று தெரியாமலே வியாபாரத்தில் நிலைத்து நின்று நின்று கொண்டிருக்கிறார்கள்.

- 'வாணிகம்'.

4. யோசிக்கிறது நாய் வளக்குற மாதிரி. நாயோட சங்கிலி நம்ம கையிலே இருக்கணும். நம்ம பிடியிலே இருக்கணும். அது நம்ம கால்ல மாட்டிக்கிட்டு அது பின்னாலே நாம ஓடக்கூடாது.

- 'சங்கிலி'.

5. - ஆமாம். மனுஷக் குரங்குக்கு எந்தப் பூமாலையும் ஒன்றுதான். புத்தனிலிருந்து மார்க்ஸ் வரை எல்லாப் பூமாலைகளையும் இது பிய்த்துத்தான் போட்டிருக்கிறது.

- '542'.

6. நீ குயவன் பானை வனையும்போது பார்த்திருக்கிறாயா? பாற்கடலிலிருந்து அமுதம் வந்தமாதிரி அந்த மாய விரல்களை வணங்கிக் கொண்டே வெறும் களி மண்ணிலிருந்து பானை வரும்.

- 'பட்டம்'.

7. -அது ஒரு பெரிய சாவு. இறந்து போன காளியப்பக் கவுண்டருக்கு வயது 72. இந்தப் பெரிய சாவுகளில் ஒரு பெரிய முரண்பாடு. இதில் அநேகமாக எந்தத் துக்கமும் இருக்காது. 'பெரிய சாவுடா, போய்ட்டு வந்துடு'.

- வீடு வழிந்து, வாசல் வழிந்து, கூட்டம் ஜே ஜே என்று இருந்தது.

- ஆண்களிடம் ஒரு social gathering- கிற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பெண்கள் உள்ளே, ஒப்பாரிப் போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களைப்போல ஆவேசம் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.

- 'துக்கம்'.

8. அவளுக்கு அவளது உடம்பின் பரிமாணத்திற்கு எதிரிடையான சிறிய இடுங்கிய கண்கள். அவை ஆண்களில் யாரைப் பார்த்தாலும் இவன் நமது இரையா என்று ஒளியைப் பாய்ச்சும். இல்லையென்று அறிகிற போது தாட்சண்யமற்ற ஒரு குரோதத்தை வீசும்.

- 'சம்மதங்கள்'.

9. நல்ல ஆஜானுபாகுவான உருவம். வயது ஐம்பத்திரண்டு இருக்கலாம். ஆனால் முப்பதின் முறுக்கு உடலில் தெரிந்தது. இப்போதும் தனி ஆளாய் நின்று இவரால் நான்கு பேரைச் சமாளிக்க முடியும் என்கிற தோற்றம். அந்த் உடல் பலமே சதைத்திமிராகி, அவரது ஆகாத செயல்களுக்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்படியான திரண்டு முறுகிய உடல் அமைப்பு.

- 'துப்பாக்கி நாய்க்கர்'.

10. எந்த மிருகமும் தான் தின்பதற்கு மேல் தன் இரையை எந்தக் கேவலமும் செய்வதில்லை. மனிதன் மிருகத்திடமிருந்து பரிணாமம் பெற்றவன் என்பதை விடக் கேவலமான பொய் இருக்க முடியாது என்று மனம் குமைகிறது.

- 'மாரம்மா'.

- தொடர்வேன்.

- அடுத்து எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

No comments: