Wednesday, April 20, 2011

'இவர்களது எழுத்துமுறை' - 34.வாசவன்

1. நான் எழுத்துலகில் வந்து சிக்கிக்கொண்டவன். இந்த உலகத்தின் சௌக்கியங்கள்
என் பிறப்பின் காரணமாக என் காலடியில் கொட்டிக் கிடந்தபோது அவற்றை எட்டி
உதைத்துவிட்டு, தீக்குளிப்பதற்காகவே நஞ்சு நிறைந்த எழுத்தை அள்ளிப் போட்டுக்
கொண்டு இலக்கிய உலகத்துக்கு வந்த நான், இப்போது தீயைக் கண்டு அஞ்சவில்லை.
தீமையைக் கண்டே அஞ்சி அலறுகிறேன். இதனலேயே சிக்கிக்கொண்ட தவிப்பொடு,
மீள வழி இருந்தாலும் கூட மீளப்பிடிக்காமல் அலறுகிறேன்.

2. 'நான் சிக்கிக்கொண்டேன்' என்று நான் குறிப்பிட்டதற்கு, இதைவிட்டு ஓடிவிட
நினைக்கிறேன் என்று பொருள் அல்ல. நான் மீள்வதற்காகச் சிக்கிக் கொள்ள
வில்லை. உயிரின் பந்தத்தால் சிக்கிக் கொண்டிருக்கிறேன். இந்த எழுத்தில்
கிடைக்கும் ஊதியத்தைத் தவிர வேறு எந்த ஊதியத்தையும் நான் பிச்சையாகக்
கருதுகிறேன். இந்த நேர்மையில் பாதிநாள் சோறு வேகும். மீதிநாள் நெஞ்சு வேகும்.

3. எழுத்தையும் என்னையும் நான் எப்போதும் வேறாக்கிக் கொண்டதில்லை. எழுத்து
புல் நுனியில் மின்னும் பனித்துளியே. அதைக் கையில் எடுத்துப் பார்க்க ஆசைப்
பட்டால், அது 'டப்'பென்று உடைந்து போகும். இதைப் புரிந்து வைத்துக் கொண்டி
ருக்கிற பல எழுத்தாளர்கள் பிழைப்புக்கு ஓர் இடத்தில் காலை ஊன்றிக் கொண்டு,
எழுத்தின் முட்கள் வாழ்க்கையில் குத்தாமல் பார்த்துக் கொள்கிறார்கள். பலபேர்
களுக்குப் பிழைப்பைக் கொடுக்கிற ஒரு குடும்பத்தில் பிறந்த நான், என்பிழைப்பில்
மண்ணை அடித்துக் கொண்டு வந்த பிறகு, முட்களுக்குப் பயந்தால் முடியுமா? நான் பயப்படாததற்காக முட்கள் குத்தாமல் இருக்குமா? இன்றுவரை குத்திக் கொண்டே இருக்கின்றன.

4. எழுத்து எனக்கும் என் குடும்பத்துக்கும் சோற்றுப்பானை. என்னுடைய
சிருஷ்டிகளில் நான் எதைக் கொண்டு வருகிறேன் என்பதில் அரிசியும் கலந்து
இருந்தது. இதற்காகநான் எத்தனையொ பத்திரிகைகளில் எப்படி எல்லாமோ
ஒத்துப் போனேன் என்பதை வேதனையோடு சொல்லிக் கொள்கிறேன். திருக்குறளுக்கு
உரை எழுதினேன். துப்பறியும் கதை எழுதினேன். விழுந்து விழுந்து ப(பி)டிக்கக்
கூடிய காதல் கதை எழுதினேன். வெங்காய சாம்பார்க்கதை எழுதினேன். கொலு
பொம்மைக்கதை எழுதினேன். இப்படி எல்லாம் 'இன்னார்க்கு இன்னபடி' என்று
எழுதிதான் வளர்ந்தேன். என் வருமானம் மட்டும் வளரவில்லை.

5. எனக்கு ஒரு கொள்கை அல்ல; இரண்டு கொள்கைகள் இருந்தன. ஒன்று: எதை
எழுதினாலும் 'இது வாசவன்' என்று முத்திரை விழ வேண்டும். இரண்டு: எழுத்துதான்
எனக்கு ஜீவன்; ஜீவனம். இத்தனை ஆண்டு காலமாக இந்த இரண்டு கொள்கைகளையும்
நான் கண்டிப்பாகக் கடைப்பிடித்து வருகிறேன்.

6. நான் அந்தக் காலத்தில் செய்த புதுமைகளும் புரட்சிகளும் ஒரு வகையில்
தீமையானவை.சமூகத்தின் உண்மைகளை, மறைவிடங்களை ஒரு வேட்டை நாயைப்
போல துரத்தும்போது, அந்த வெறியில் உணமையான மனித உணர்ச்சிகளை, எனக்குத்
தெரியாமல் எங்கெங்கோ சிதறிக் கிடந்த மனிதத் தன்மைகளை நான் காட்டத் தவறி
விட்டேன். ஆவேசம் பிடித்த எழுத்தாளனால் நேர்கிற தீமை இது. அவசரத்தில்
கண்ணை மூடிக்கொள்கிற குருட்டுத்தனம் இது. எழுத்தாளன் பொய் சாட்சி சொல்வது
தீமை.

7. பிறகு நான் நான் புரட்சியைச் செய்ததில்லை. என்னை உயரமாகக் காட்டுவதற்கு
நான் கழைக்கூத்து ஆடுவதில்லை. கவடி பாய்வதில்லை. கூச்சல் போடுவதில்லை.
கூட்டம் சேர்ப்பதில்லை. இப்பொழுது கங்கையின் அமைதியைத் தேடுவது என் எழுத்தின்
நோக்கம். ஆயிரம் புயல்கள் அழிந்து போயின. ஆனால் கங்கை இன்னும் இருக்கிறது.
நாளைக்கும் இருக்கும்.

8. ஒரு காலத்தில் நான் நிறைய எழுதினேன். பத்திரிகைகளுக்குத் தீனி கொடுத்துக்
கொடுத்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. இப்பொழுதெல்லாம் குறைவாகவே
எழுதுகிறேன். ஆனால் நிறைய எழுத வேண்டும் என்ற தவிப்பில் ஒவ்வொரு சொல்லாக
ஊற்றுக் கண்ணைத் திறந்து எடுக்கிறேன். 0

No comments: