Thursday, April 14, 2005

வருணனைகள் - உவமைகள் - 38

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 38:

இராசேந்திரசோழன்(அஸ்வகோஷ்) படைப்புகளிலிருந்து:

1. பொழுது போகிறது. இருள் வருகிறது. தெருவிளக்கு வெளிச்சம் ஒருக்களித்த கதவு வழியாக ஏதோ துயரச் செய்தியைத் தாங்கி வந்தது மாதிரி செல்வதா வேண்டாமா என்பதுபோல எட்டிப்பார்க்கிறது.

- 'உளைச்சல்' கதையில்.

2. சணல் நெசவுக்குள் அடங்காத பாயின் கோரைகள் துஷ்டப் பிள்ளைகள் போல வெளியே தலை நீட்டிக் கொண்டிருந்தன.

- 'பகல் தூக்கம்'.

3. இன்ஸ்பெக்டர் இன்னும் அங்கேதான் நின்று பேசிக் கொண்டிருந்தார். வீலில் சிக்குகிற அளவுக்கு நீளமாக ரெட்டைக்கரைத் துண்டு போட்ட நகரக் கவுன்சிலர் ஒருவர் இன்ஸ்பெக்டரைப் பார்த்ததும், சைக்கிளில் போனவாறே "நமஸ்காரங்க" என்று
கையை உயர்த்திக் காட்டியபடி மிதப்போடு சென்றார் - விளக்கில்லாமல்தான்.....

- 'பக்க வாத்தியம்'.

4. வருத்தத்துடன் வழி தெரியாமல் தத்தளித்தான். பட்டணத்தில் ஜனசந்தடி அதிகம் என்று சொல்வார்கள்..... இந்தத் தெருவைப் பார்த்தால் திருடன் தெருவாட்டம் தெரிகிறதே......! இந்தத் தெருவில் மந்திரிகள் அல்லவா குடி இருப்பதாகச் சொன்னார்கள்......!

- 'மதறாசும்....மன்னார்சாமியும்.....'.

5. யாரோ ஏழெட்டுப் பேர் குந்தியிருக்கிறார்கள். எல்லாம் துண்டைக் கோவணமாகக் கட்டி, பெரிய சோமனை தோளில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இங்கத்திப் ·பேஷன் இதுதான். பார்த்தீங்களா ஆட்களை. எப்படியிருக்கிறார்கள்....கரடு பாய்ந்த முகமும் மீசையும்....கண்களில் ஏதாவது சுத்தமிருக்கிறதா...! கொடூரமாய் ரத்தம் தெறிக்க.....எல்லாம் அவர்கள்தான். பக்கத்தில் ஒருத்தன் உட்கார்ந்து கொண்டிருக்கிறானே, காடா பனியன் போட்டுக் கொண்டு சொட்டை விழுந்த நரைத்த தலையுடன் மெல்லீசாய் வீங்கி மாதிரி. அவன்தான் ஊருக்குக் கணக்கப்பிள்ளை. விஷமம் ஜாஸ்தி. எப்படியிருக்கிறான் பாருங்களேன், யாரை முழுங்கலாம் என்று.

- 'கொஞ்சம் இருட்டுக்குள் வந்து பாருங்கள்'.

6. இளவயசுக்காரி. மாஞ்செவுலு. கொசகொசவென்று மலிவான விலையில் உடம்பைச் சுற்றிய நைலக்ஸ் புடவை. வாயில் ரவிக்கை. ஆ·ப்வாயில். கைக்கு நாலு கண்ணாடி வளையல்கள். சின்ன நெற்றியில் காபி கலர் குங்குமப் பொட்டு. எதிலும் திருப்தி கொள்ளாத கொஞ்சம்
அலைச்சலான கரிய சிறுத்த கண்கள். புருவ மேட்டுக்குக் கீழே எப்போதும் எதையோ விழுங்கி விடுவதைப் போலப் பார்த்துக் கொண்டிருக்கும். மனசிலிருப்பதே குறியாய் சில சமயம் செய்கிற காரியமே மறந்துபோய் அதுபாட்டுக்கு எங்காவது லயிக்கும்.
- 'கைக்கிளை'.

7. பர்மாக்கார வீட்டம்மா வயது ஐம்பதைத் தாண்டியவள், ஒன்பது பிள்ளைகள் பெற்றவள் என்றாலும் உறுதி குலையாத கட்டை குட்டையான கனத்த சரீரம். அதற்கேற்ற நல்ல சாரீரமும். வாயைத் திறந்தாளானால் தெருக் கோடிவரை கேட்கும். எங்கே எந்த இடத்தில் சண்டை நடந்தாலும் பாய் வீட்டம்மா இதில் சம்பந்தப்பட்டிருக்கிறாளா இல்லையா என்பதை காத தூரத்தில் இருந்தாலும் குரலை வைத்தே
சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு வளமான குரல்.

- 'விதிகள்!......விதிகள்!'.

8. கொடுக்கல் வாங்கல் இல்லாமல் இந்த உலகத்தில்வாழ முடியாது என்பது வாஸ்தவந்தான். ஆனால் கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் ஒரு அந்தஸ்து வசதி வேண்டியிருக்கிறதே. ஆனால் அந்த அந்தஸ்து தெரியாமல் கடன் கொடுத்து அவதிப்பட்டுக் கொண்டிருந்தான் அவன்.

- 'கசிவு'.

9. பூவரச மரத்தின்கீழே இலைகள் பழுத்து உதிர்ந்து கிடந்தன. பசங்கள் பீப்பி செய்து ஊதுவது அனாதைக் குழந்தைகளின் கேவலைப் போலக் கேட்டது.

- 'தற்செயல்'.

10.என்னைப் பொறுத்தவரைக்கும் படைப்பு என்பது நன்றாகக் காய்ந்து நெறுநெறுக்கும் சுள்ளிகளையும் சருகுகளையும் போட்டுக் கொளுத்தினால் குப்பென்று தீப்பிடித்து சடசடத்து எரியுமே,திகுதிகுவென எரியும் தீயில் கொதிப்பேறிய திரவம் பாத்திரத்தைக் கடந்து பொங்கி வெளிவந்து பிரவாகமெடுத்து வழியுமே அந்த மாதிரி. அந்த மாதிரி மனநிலையில்தான் எனது படைப்புகள் பிரசவம் கொண்டிருக்கின்றன.

- 'இராசேந்திரசோழன் கதைகள்' பின்னுரையில்.

- மேலும் சொல்வேன்.

- அடுத்து சி.சு.செல்லப்பாவின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.