Thursday, February 12, 2004

நினைவுத்தடங்கள் - (13)

அண்ணாமலைப் பல்கலையில் பயின்றவர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளக்கூடிய விஷயம் கல்வி மட்டுமல்லாமல், கலை, இசை, தமிழுணர்வு, அரசியல் என்று பல்கலைகளையும் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்புக் கிட்டியதைச் சொல்லவேண்டும். கலை, அறிவியல், பொறியியல், கல்வியியல், தமிழ் மற்றும் சமஸ்கிருத பண்டிதப் படிப்பு இவற்றுடன் இசை, ஓவியம் போன்ற நுண்கலைகள் பயிலவும் தனித் தனிக் கல்லூரிகள் இருந்தன. இப்போது மருத்துவக் கல்லூரி, மற்றும் பல் மருத்துவம் ஆகியவையும் சேர்ந்துள்ளன. எல்லாம் ஒரே வளாகத்தினுள் இருந்ததால் நாம் படிக்கும் படிப்புடன் மற்றவை பற்றியும் அறியும் வாய்ப்பும் கிட்டியது.

நான் படித்த கால கட்டத்தில் ( 1951-1957 ) மணவாள ராமானுஜம், சர்.சி.பி. ராமசாமி அய்யர், சர்.ஆர்.கே.ஷண்முகம் செட்டியார் போன்ற பிரபலங்கள் துணைவேந்தர்களாகவும் தண்டபாணி தேசிகர், சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை, மதுரை சோமசுந்தரம் போன்ற பல சங்கீத வித்வான்கள் இசைக் கல்லூரிப் பேராசிரியர்களாகவும், முதல்வர்களாகவும் பணியாற்றியதைப் பார்க்கும் பேறு கிட்டியது. பிரபல இசை வல்லுனர்கள் இசைக் கல்லூரியில் சிறப்புக் கச்சேரிகள் செய்ததையும் டாக்டர் மு.வ, பாவேந்தர் பாரதிதாசன் போன்ற மேதைகளின் சொற்பொழிவுகள் இலக்கியமன்றங்களில் ஆற்றியதையும் கேட்கும் பாக்கியமும் கிட்டின.

ஆங்கிலத்துக்கு பேராசிரியர் துரைசாமி, ஜிப்பா சீத்தாராமன் போன்ற ஜீனியஸ்களிடமும், தமிழுக்கு டாக்டர் ஏ.சி.செட்டியார், வித்வான் மு.அருணாசலம் பிள்ளை போன்றவர்களிடமும் நான் பட்டப்படிப்பில் பாடம் கேட்டிருக்கிறேன். ஏ.சி.செட்டியார் அப்போது மாணவர்களூக்கு கவர்ச்சியானவர். அந்தக் காலத்தில் கோடம்பாக்கம் மேம்பாலம் கட்டாதபோது சினிமா நடிகர்களைக் காணக் கூட்டம் நிற்கும் என்பார்களே அது போன்று, அவர் கல்லூரி வளாகத்துக்குள் இருந்த அவரது வீட்டிலிருந்து காலை ஒன்பதரை மணிக்குக் கிளம்பி பெரிய பூங்காவின் குறுக்காக வரும் அழகைப் பார்க்க மாணவர் கூட்டம் சாலையில் காத்திருக்கும். நெடிய அழகான சிவந்த தோற்றம், வலப்பக்கம் வகிடெடுத்த சுருள்முடி பளீரென்ற மேனாட்டு உடை இவற்றுடன் அவரைப் பார்க்கப்பரவசமாக புதிய மாணவர்களூக்கு இருக்கும். ஆனால் என்னளவில் அவரது போதனை என்னை ஈர்க்கவில்லை. பின்னாளில் 'சரஸ்வதி'யில் 'உதிரிப் பூக்கள்' என்ற தலைப்பில் 'வனா கனா' என்ற பெயரில் வல்லிகண்ணன் அவரைப் பற்றி எழுதியது மிகப் பொருத்தமாகவே இருந்ததை ரசித்தேன். 'ஏ.சி.செட்டியார் தமிழ் பேசினால் ஆங்கிலம் போல இருக்கும்; ஆங்கிலம் பேசினால் தமிழ்போல இருக்கும்' என்று அவரது மொழிவெளிப்பாட்டைக் குறிப்பிட்டது அவரது வகுப்பில் பாடம் கேட்ட என் போன்றவர்க்கு அனுபவபூர்வமானது. மாறாக வித்வான் மு.அருணாசலம் பிள்ளை அந்தக் காலத்துத் தமிழ்ப் பண்டிதருக்கு அசலான எடுத்துக் காட்டாக மூலக்கச்சம் வைத்துக்கட்டிய மல் வேட்டி, டை இல்லாத ஓப்பன் கோட்டு, தலையில் டர்பன், நெற்றியில் பட்டையாய் திருநீற்றுப் பூச்சு, காலில் சாதா தோல் செருப்பு என மாணவர்களின் கேலிப் பொருளாகக் காட்சி தருவார். வகுப்பில் மாணவர்களை அடக்க மற்ற பண்டிதர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். வகுப்பு தொடங்கும் போது ஒரே கூச்சலாக இருக்கும். ஆனால் பிள்ளை அவர்கள் கம்பராமாயணத்திலிருந்து 'ஆழி சூழ் உலகம் எல்லாம் பரதனே ஆள நீ போய்.....' என்று கேதாரகௌளையில் உரத்த குரலில் இசையோடு பாடத்தைத் தொடங்கியதும் 'கப்' பென்று இரைச்சல் அடங்கி ஒரு அதீத அமைதி ஏற்படும் பாருங்கள்- அது சிலிர்ப்பான அனுபவம். இசையின் வலிமையை அப்போதுதான் நான் உணர்ந்தேன்.

இன்னொரு ரசமான அனுபவம்- பல மாவட்டம், பல மாந்¢லம், பல நாடுகளிலிருந்தெல்லாம் மாணவர்களை அங்கு காண முடிந்தது. கேரளத்திலிருந்தும் ஈழத்திலிருந்தும்(குறிப்பாக இசைக்கல்லூரியில் படிக்க ஈழத்திலிருந்து நிறைய பெண்கள்) வந்து பயின்றது அவர்களது கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை அறியும் அனுபவத்தை அளித்தது.

அரசியல் விரும்பாமலே உங்களை ஈடுபட வைக்கிற சூழ்நிலை அங்கு இருந்தது. அநேகமாக தினமும் ஒரு அரசியல் கூட்டம் பல்கலைக் கழக வளாகத்தை ஒட்டியிருந்த திருவேட்களத்தில் நடைபெற்றது. வேறு பொழுது போக்க இடம் இல்லாததால் அனைவரும் அந்தக் கூட்டங்களுக்குச் செல்லுகிற வழக்கம் எல்லோருக்கும் அமைந்தது. பெரியார், அண்ணா, இளந்தாடி நெடுஞ்செழியன் என அழைக்கப்பட்ட நாவலர் , மதியழகன், கலைஞர் கருணாநிதி ஆகிய திராவிடத்தலைவர்களும் பாலதண்டாயுதம், பார்வதி கிருஷ்ணன் போன்ற கம்யூனிசத் தலைவர்களும் அடிக்கடி கூட்டம் போட்டுப் பேசுவார்கள். அதனால் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அரசியல் நாற்றங்காலாக அப்போது விளங்கியது. எந்தப் போராட்டம் என்றாலும் அங்கே பிரதிபலிப்பும் பங்கேற்பும் நிச்சயம் இருக்கும். குறிப்பாகத் திராவிடக் கட்சிகள் மாணவர்களை வெகுவாகத் தம் பேச்சுத் திறமையால் கட்டி இழுத்தனர். '53 வாக்கில் தேவிகுளம் பீர்மேடுக்காக ஒரு போராட்டம் நடந்த போது அண்ணாமலையில் ஒரு பிரமாண்டமான மாணவ ஊர்வலம் சிதம்பரம் நகரையே கிடுகிடுக்க வைத்தது.. எந்த மாணவனும் விடுதி அறையில் நின்று விடாதபடி அறை அறையாய்ப் போய் விரட்டிக்கொண்டுவந்து ஊர்வலத்தில் நிறுத்தினர். வர மறுத்தவர் தாக்கப்பட்டனர். இப்படி விரும்பாமல் போனாலும் அரசியலில் ஈடுபடும் நிர்பந்தம் இருந்தது. அதனால் முன்னணியில் நிறுத்தப்பட்ட அப்பாவி மாணவர்கள் பாதிப்புக்கு உள்ளானதும் நிகழ்ந்தது. கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட போதும், 65ல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போதும் உதயகுமார், ராஜேந்திரன் என்ற மாணவர்கள் உயிரிழக்க நேரிட்டதும் இப்படித்தான். அண்ணாமலை சர்வ கலாட்டா சாலை என்ற அவப் பெயர் உண்டாக இவ்வகையான அரசியலே காரணமாகி பெற்றோர் அங்கு தம் பிள்ளைகளைச் சேர்க்கவே அஞ்சுகிற நிலை ஏற்பட்டது. வேறு வழியின்றியே தென்னார்க்காடு மற்றும் தஞ்சை மாவட்ட மாணவர்கள் அங்கு சேர்கிற நிலை இருந்ததை மறுக்க முடியாது.

- தொடர்வேன்..

Wednesday, February 04, 2004

நினைவுத் தடங்கள் - 12

எத்தனை பேர் அறிவுறுத்தினாலும், 'இருப்பதைவிட்டுப் பறப்பதைப் பிடிக்கிற' சபலம் எழுத்தைப் பொறுத்தவரை எனக்கு இருந்தே வந்தது. நிலையான ஆசிரியர் தொழிலை விட்டு விட்டு, பத்திரிகையில் சேர விரும்பியது நடக்காமல் போனதை, நல்லதுதான் என்று அப்போதைக்கு நினைத்தேன் என்றாலும் அடுத்து அதே போல ஒரு வாய்ப்பு வந்தபோது இருக்கிற வேலையை விட்டுவிட்டு அதற்குத் தாவவே மனம் சபலப்பட்டது.

1970 வாக்கில்- ஆண்டு சரியாக ஞாபகமில்லை- கோவை வானொலி தொடங்கிய சமயம். 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' பதவிக்கு அழைத்து விளம்பரம் வந்தது. அப்போது நான் பதவி உயர்வு பெற்று உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியராகி இருந்தேன். 1957ல் பட்டதாரி ஆசிரியராகப் பணியேற்ற நான் 1963லேயே - காமராஜர் தயவால் 'இடறி விழுந்தால் ஒரு இடைநிலைப் பள்ளி, ஓடி விழுந்தால் ஒரு உயர்நிலைப்பள்ளி' என்று ஏராளமான உயர்நிலைப் பள்ளிகள் தமிழ் நாட்டில் அப்போது திறக்கப் பட்டதால் ஆறே ஆண்டில் நானும் என் சகாக்களும் பதவி உயர்வு பெற்றோம். அப்போது எனக்கு வயது 28 தான். எங்களுக்கு முன்னும் பின்னும் அப்படி ஒரு 'Mass promotion' கல்வித் துறையில் நிகழ்ந்ததில்லை. 20-25 ஆண்டுகள் ஆசிரியராக உழன்று சலித்துப் போன பின் தலைமை ஆசிரியரானவர்களே அதிகம்.

இளம் வயதிலேயே பதவி உயர்வு பெற்று விட்டதால் உற்சாகத்தோடு பணியாற்றினேன். 7 ஆண்டுகளுக்குப் பின் பதவி காயம் ஆனபின்தான் இந்த 'இருப்பதை விட்டு........' ஆசை வந்தது. நானும் அகில இந்திய வானொலிக்கு 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' பதவிக்கு மனுச் செய்தேன். 1200 மனுக்களில் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு 'நேர்முகத் தேர்வு'க்கு அழைக்கப் பட்டவர்- களில் நானும் ஒருவன். கிடைத்தால் அதை ஏற்க மனம் சபலப் பட்டாலும் யாரையாவது- அது தொடர்பானவர்களை யோசனை கேட்க விரும்பினேன். அப்போது அகிலன் சென்னை வானொலியில் 'ஸ்கிரிப்ட் ரைட்டரா'கப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவரோடு அப்போது எனக்கு நல்ல பழக்கம் இருந்தது. எனவே அவரிடம் கேட்கலாம் என்று முடிவு செய்தேன்.

அகிலனோடு எனக்கு ஏற்பட்ட பழக்கத்தை முதலில் சொல்ல வேண்டும். கலைமகளில் அகிலன் நிறைய எழுதிய போது அவரது கதைகள் என்னை வெகுவாக ஈர்த்தன. கலைமகள் நாவல் போட்டியில் முதல் ஆண்டிலேயே 'பெண்' என்ற நாவலுக்காக 1000 ரூபாய் பரிசு பெற்றிருந்தார் அவர். அது முதல் கலைமகளி?ன் ஆஸ்தான எழுத்தாளர் போல ஆகிவிட்டார். நிறையத் தொடர்கதைகள் எழுதி இளைஞர்களைக் கவர்ந்தார். அப்படி கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன். நான் அவரது தீவிர ரசிகனானேன். அவ்வப்போது பாராட்டுக் கடிதங்கள் எழுதியதால் அவரோடு நெருக்கம் ஏற்பட்டது. எழுதுவதற்கு முதலில் அவர்தான் எனக்கு ஆதர்சம். புதிதாகக் கட்டிய என் வீட்டிற்கு 'அகிலம்' என்றே பெயரிட்டேன். என் மகனுக்கு அகிலநாயகம் என்று பெயர் வைத்தேன். அந்த அளவுக்கு அவரது எழுத்தின் மீது அப்போது எனக்குப் பிரேமை. கடிதம் மூலமே தொடர்பு கொண்டிருந்த எனக்கு அவரை நேரில் சந்தித்துப் பழகும் வாய்ப்பு ஒரு திருமணத்தில் கிட்டியது. என்னைப் போலவே அவரது தீவிர ரசிகரான அந்த நண்பரின் திருமணத்தில், பேசுவதற்காக அகிலன் ஒரு குக்கிராமத்துக்கு வந்திருந்தார். அப்போது திருமணங்களில் புத்தகங்களைப் பரிசளிப்பதுபோலவே நல்ல பேச்சாளர்களை, இசைக்கச்சேரிகளை ஏற்பாடு செய்வதுபோல அழைப்பதுண்டு. அப்போது அகிலன் பிரபல எழுத்தாளர் என்பதால் அழைக்கப்பட்டிருந்தார். அவர் அதுவரை தன்னைப் பொது இடங்களில் வெளிப்படுத்திக் கொண்டதில்லை. எந்தக் கூட்டத்திலும் கலந்து கொள்வதில்லை. தன் புகைப்படத்தைப் பிரசுரிக்க அனுமதித்தில்லை. அவரது பெயர் மட்டும் தான் தெரியும். இதைப் பயன்படுத்தி ஒரு எத்தன் பல இடங்களில் 'நான் தான் அகிலன். பர்ஸ் திருடுபோய்விட்டது'என்று சொல்லி அவரது ரசிகர்களிடம் பணம் பறித்து விட்டான். தொடர்ந்து இப்படி நிறையப் புகார்கள் வந்த பிறகே தன்னை வெளிக் காட்டாதிருந்த தவறை உணர்ந்து கலைமகளில் தன் வாசகர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார். அதை வைத்து ஒரு சிறுகதையும் எழுதினார்.அதன் பிறகே கூட்டங்களில் கலந்து கொள்ளவும் திருமணங்களில் பேசவும் தொடங்கினார். அப்படித்தான் நண்பரின் திரும- ணத்திற்கும் பேசவந்திருந்தார். அந்த குக்கிராமத்தில் அவரது பேச்சுக்குத் தலைமை ஏற்க யாரும் இல்லாததால் நானே தலைமை ஏற்கும்படி ஆயிற்று. அப்போது நெருங்கிப் பழக வாய்ப்புக் கிட்டியது. அதுவரை அகிலன் ரயில்வேயில் 'தபால் சார்ட்டர்' ஆகப் பணி புரிந்து கொண்டிருந்தார். அவரது 'பாவை விளக்கு' படமானபோது மத்திய அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு திரைத் துறையில் புகுந்தார். 'திரையுலகம் மின்னுகிற உலகம்; அது நிஜமல்ல' என்று அவரே தன் கதைகளில் பலமுறை குறிப்பிட்டு எச்சரிக்கை செய்திருப்பதை எடுத்துக் காட்டி அவர் மின்னுகிற திரை உலகிற்குச் செல்வதற்குக் கவலை தெரிவித்து நான் ஒரு கடிதம் எழுதினேன். எழுத்தாளர்கள் உள்ளே புகுந்து அந்த பயத்தை உடைக்க வேண்டும் என்றுதான் தான் அதில் ஈடுபடுவதாகவும் அப்போது அவர் எனக்குப் பதில் எழுதினார். ஆனால் அவர் நினைத்தபடி மின்னுகிற உலகத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாமல் தோல்வியுற்று அதை விட்டு வெளியே வந்தார். நல்ல வேலையை அவசரப் பட்டு விட்டு விட்டதற்காகப் பெரிதும் வருந்தினார். பிறகு எப்படியோ அவர்மீது அக்கறை கொண்டவர்களின் உதவியால் சென்னை வானொலியில் 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' ஆனார். அவரைக் கேட்டுவிட்டு 'ஸ்கிரிப்ட் ரைட்டர்' நேர்முகத் தேர்வுக்குச் செல்ல எண்ணி நான் சென்னை சென்று அவரைச் சந்தித்தேன். விகடனுக்குப் போகுமுன் யோசனை கேட்ட என் உறவினரைப் போலவே அகிலனும் அந்த என் முயற்சியை ஆதரிக்க வில்லை. 'இப்போது நீங்கள் ஒரு நல்ல கௌரவமான உத்தியோகத்தில் இருக்க்?றீர்கள். தலைமை ஆசிரியர்- சமூகத்தில் மதிப்பான ஒரு பதவி. அதை வ்?ட்டுவிட்டு இதற்கு ஏன் வரவேண்டும்? மேலும் நீங்கள் நினைப்பது போல வானொலியில் இலக்க்?ய சேவை எதுவும் செய்து விடமுடியாது. 'வயலும் வாழ்வும்' போன்றவற றில் 'அவரை-துவரை' என்று எதாவது தான் பேசிக்கொண்டிருக்க முடியும். வீணாக என்னைப் போல எதிர்காலத்தை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என்று அக்கறையோடு அறிவுரை சொன்னார். அவரிடம் சரி என்று சொல்லிவிட்டு வந்தாலும் சபலம் விடவில்லை. திருச்சி வானொலி நிலையத்தில் நடைபெற்ற நேர்முகத்தேர்வுக்குச் சென்றேன். அங்கே என்னைப் போலவே அந்த நேர்முகத் தேர்வுக்கு அசோகமித்திரனும் வந்திருந்தார். அவரை நான் முன்பே சென்னையில் சிலமுறை அவரது வீட்டில் சந்தித்திருந்ததால் நட்புடன் பேசினார். அப்போது அவர் எந்த வேலையிலும் இல்லை. சிரமதசையில் இருந்தார். இந்த நேர்முகமே கண்துடைப்பு என்றும் முன்பே வானொலியில் பணியாற்றும் ஒருவரை அப் பதவிக்குத் தீர்மானித்து விட்டதாக கேள்விப்பட்டதாகவும், நம்பிக்கை- யில்லாமலே பணக்கஷ்டமான வேளையில் செலவு செய்து வந்திருப்பதாகவும் கவலையோடு சொன்னார். முடிவு அப்படித்தான் ஆயிற்று. வானொலியில் பணியாற்றிக் கொண்டிருந்த- எங்களோடு நேர்முகத்துக்கு வந்திருந்த பத்துபேர்?ல் ஒருவரான-நபருக்குத்தான்அந்த பதவி முன்பே தீர்மானிக்கப்பட்டபடி கிடைத்தது.

- தொடர்வேன்.