Sunday, May 04, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 20 - அசோகமித்திரன்

1. நல்ல கலை வெளிப்பாடு, மனிதன் மீது அக்கறை மனிதனின் தவிர்க்கக்கூடிய மற்றும் தவிர்க்க இயலாத தவிப்புகளையும் பிரதிபலித்தே ஆகவேண்டும்'

2. ஒவ்வொரு கணமும் அனைத்து மனிதர்களுக்கும் ஏராளமான அனுபவங்க¨ளைத் தந்து விட்டுத்தான் போகிறது. ஆனால், இவற்றில் மிக மிகச் சிறிய பகுதியே மனம் கவனம் கொள்கிறது. இந்தக் கவனத்தை விசாலப் படுத்துதல் ஒரு சிறுகதாசிரியனுக்கு
மிகவும் அவசியம்.

3. ஒரு சிறுகதையில் உரையாடல் பகுதி எவ்வளவு இருக்க வேண்டும்? முதலில் கதையில் எப்பகுதி உரையாடல் மூலம் வெளிப்படுத்தப்பட வேண்டும்? இது மிகத் தேர்ந்த எழுத்தாளர்களிடையே கூடக் குழப்பம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.
சிறுகதையில் வசனத்தை விரயம் செய்வது கதையில் மிகுந்த சேதத்தை விளைவிக்கக் கூடியது.

4. நல்ல சிறுகதை ஆசிரியனுக்குப்பேச்சு வழக்கு உரையாடலை எந்த அளவுக்கு ஒரு படைப்பில் பயன்படுத்தினால் எதார்த்தச் சித்தரிப்பும் குறைவு படாமல் கதையும் வாசகருக்குப் பூரணமாகப் புரிவதாகவும் அமையும் என்ற பாகுபாடு தெரிய வேண்டும்.

5. கதைக்குச் சம்பந்தம் இருந்தாலும் இல்லாது போனாலும் தனக்குத் தெரிந்தது அனைத்தையும் ஒரு படைப்பில் புகுத்தி விடுவது நல்ல சிறுகதையை அமைக்காது. ஒரு நல்ல சிறுகதையில் அதிலுள்ள பேச்சு வழக்கோ தகவல்களோ தனித்து நிற்காமல் கதைப் போக்கோடு இணைந்து இருக்கும்படிச் செய்வதுதான் பக்குவமான படைப்பாற்றலுக்கு அடையாளம்.

6. சிறுகதைக்குரிய தொழில் நுட்பங்களை ஒருவர் அறிந்து கொள்வதில் தவறில்லை.
அது அவருடய மனித இன அக்கறையோடு இணைகையில் சிறந்த சிறுகதைகளுகு வழி செய்கிறது. இந்த அக்கறை இல்லையெனின், தொழில் நுணுக்கத் தேர்ச்சி முறையான அமைப்பு உள்ள கதையை படைக்க உதவும். ஆனால், அந்தப் படைப்பில் ஜீவன் இருக்காது