Wednesday, April 21, 2004

நினைவுத் தடங்கள் -15

இளமை முதலே தமிழில் ஆர்வம் அதிகமாகவே இருந்ததால் கல்லூரியில் அப்போது இருந்த தமிழ் ஆனர்சில் சேர்ந்து படித்து கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவே ஆசைப் பட்டேன். பள்ள்¢ இறுதித் தேர்வில் தமிழில்
நல்ல மதிப்பெண் பெற்றதோடு, மயிலை சிவமுத்து அவர்கள் நடத்திய 'மாணவர் மன்ற'த் தேர்வில் முதல் வகுப்பும் பள்ளியில் தமிழில் முதன்மையாக வந்ததும் தமிழ் படிக்கும் ஆசைக்கு உரமிட்டன. அதோடு எழுத்தாளனாக விரும்பியதால் தமிழ் படிப்பது உபயோகமாக இருக்கும் என்று கருதினேன். ஆனால் என் தந்தையார், தமிழ் படித்தால் வேலை கிடைக்காது என்று கூறி அதிக வாய்ப்புள்ள கணித குரூப்பில் சேரும்படி செய்து விட்டார்கள். இண்டரில் அப்போது 'டி' குரூப் என்று ஒரு பிரிவு- முழுதும் தமிழ்- ஆங்கிலம் 2 தாள் மட்டும் உள்ளது - அண்ணாமலையில் இருந்தது. தமிழ் ஆனர்ஸ் படிக்க விரும்பு பவர்கள் அந்த குரூப்பில் சேர்ந்தார்கள். வேறு குரூப் எடுத்தாலும் தமிழ் ஆனர்ஸில் சேர முடியும்
என்றாலும் இரண்டு ஆண்டு அதிகம் தமிழ் படிப்பது வலுவான அடிப்படை அமைய உதவும்.

இண்டர் முடித்ததும் பழையபடி தமிழ் ஆனர்ஸ் ஆசை எழுந்தது. ஆனாலும் அப்போதும் தந்தையின் வற்புறுத்தலால் அதில் சேர முடியாமல் பி.எஸ்.சி கணிதப் படிப்பில் சேர்ந்தேன். பட்டப் படிப்பு முடித்ததும் அடி மனதில் ஆசிரியர் பணி பதிந்திருந்ததால், ஆசிரியர் பயிற்சியில் சேர விரும்பினேன். ஆனால் என் தந்தையும், சகோதரர்களும் மற்ற உறவினர்களும் வழக்கறிஞராக யோசனை சொன்னார்கள். அதற்கு இரண்டு காரணங்களைச் சொன்னார்கள். முதலாவது- என் மூத்த சகோதரர்கள் இருவரும் பதவி உயர்வு வாய்ப்புள்ள- பொறியியல், வேளாண்மை தொழிற் கல்வி பயின்று வேலையில் இருந்தார்கள். என் தம்பி கால்நடை அறிவியல் படிப்பில் சேர்ந்திருந்தான். அதனால் பதவியுயர்வோ அந்தஸ்தோ இல்லாத ஆசிரியர் தொழிலுக்குப் போக வேண்டாம் என்று
அறிவுறுத்தினார்கள். அதோடு அப்போது எங்கள் பகுதியில் - வருமானம் இல்லா விட்டாலும்- 'வக்கீல் பிள்ளை' என்பது அந்தஸ்தாகக் கருதப் பட்டது. இதை அதிகம் வற்புறுத்தியவர் அரியலூரில் பிரபல வழக்கறிஞராக வெற்றிகரமாகத் தொழில் நடத்தி வந்த என் தாய் மாமன் அவர்கள். தனக்குப் பின் தன் வரிசாக என்னை ஆக்கிக் கொள்ளும் நோக்கமும் இருந்ததால், தானே வக்கீல் படிப்புச் செலவை ஏற்பதாகவும் ஆசை காட்டினார். நான் பிடிவாதமாக ஆசிரியராகத் தான் ஆவேன் என்று வக்கீல் படிப்பில் சேர மறுத்தேன். என் மாமாவுக்குக் கோபம் வந்து விட்டது. "டானா டாவன்னா உத்யோகமெல்லாம் ஒரு உத்தியோகமா? என்ன சம்பளம் வரும்?' என்றார் எகத்தாளமாக. அப்போது -1956ல் பட்டதாரி ஆசிரியருக்கு பஞ்சப்படி உட்பட 121ரூ. தான் சம்பளம். "அது எப்படி குடும்பம் நடத்தப் போதும்? இப்போது இள ரத்தத் திமிர்லே பேசறே- கல்யாணம் ஆகி ரெண்டு புள்ள பொறந்துதுண்ணா அதுக்கு படிப்பு, வைத்தியம்னு செலவாகும் போது நெனச்சிப் பார்ப்பே!" என்று அதைரியப் படுத்தினார். அவர் பயமுறுத்த வில்லை - அதுதான் யதார்த்தம் என்றாலும் ஆசிரிராக வேண்டும் என்ற இளமை முதலாக ஏற்பட்டிருந்த லட்சியப் பிடிப்பால் பிடிவாதமாக அனைவரது யோசனையையும் மீறி ஆசிரியரானேன். பின்னாளில் பொருளாதார நோக்கிலும், உறவினரிடையே மற்ற சகோதர்களூக்குச் சமமான மரியாதை கிட்டாத போதும், பிள்ளைகளுக்குத் தரமான கல்வியைத் தர வசதியில்லாத நிலை ஏற்பட்ட போதும் என் மாமாவின் அறிவுரை நினைவுக்கு வரும். ஆனால் அது கண நேரந்தான். மற்ற தொழிலில் கிட்டாத மதிப்பும் பக்தியும் என் மாணவரிடமும் பெற்றோரிடமும் கிடைத்திருப்பதை எண்ணி மனம் பெருமிதம் கொள்ளும். அதற்கு நான் என் தொழிலில் காட்டிய அர்ப்பணிப்பும் பாரபட்சமற்ற சேவையும் தான் காரணம்.

ஆசிரியர் பணி 'புனிதமான தொழில்-மோசமான வியாபாரம்' ( Noblest of all professions - sorriest of all trades) என்பார்கள். நான் ஆசிரியத் தொழிலை புனிதமான தொழிலாகத்தான் பார்த்தேன். வியாபாரமாக அல்ல. அதனால் நான் ஆசிரியத் தொழிலை ஒரு சவாலாக ஏற்று, ஒரு வெற்றிகரமான
ஆசிரியராக, வெற்றிகரமான தலைமை ஆசிரியராக ஆனேன். ஆசிரியத் தொழிலுக்கு ஒரு கௌரத்தை ஏற்படுத்தினேன். ஆனால் அந்த சவாலில் வெற்றி பெற நான் சந்தித்த எள்ளல்கள், ஏளனம், சிரமம் ஏராளம். குறிப்பாக - 'ஞமலி போல் வாழேல்' என்ற பாரதியின் புதிய ஆத்திச்சூடியை மெய்ப்பிப்பது போல- சக ஆசிரியர்களின் எள்ளல், பொறாமைகளிலிருந்து மீண்டது ஒரு சாதனைதான்.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

Thursday, April 08, 2004

நினைவுத்தடங்கள் - (14)

1956ல் அண்ணாமலையில் நான் பி.எஸ்.சி கணிதம் முடித்ததும் அங்கேயே ஆசிரியர் பயிற்சி பட்டப் படிப்பில்- பி.எட் ல் சேர்ந்தேன். சென்னை நகரில் ஒரு ஆண்டாவது படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டேன். முதன் முதலில் கல்லூரியில் சேர்ந்த போது, அனுபவமின்மையாலும் சிதம்பரத்தைவிடத் தொலைவு என்பதாலும் என் தகப்பனார் அப்போது சென்னையில் சேர அனுமதிக்கவில்லை. பட்டப் படிப்பு முடிந்ததும் சென்னையில் சைதாப்பேட்டை ஆசிரியர் கல்லூரியில் சேர்ந்தால், பெரு நகர அனுபவம் கிட்டும் என்பதாலும், எழுத்துத் துறையில் பிரசுர வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் என்பதாலும், இலக்கியக் கூட்டங்கள்- படைப்பாளிகள் பலரது அறிமுகம் கிடைக்கும் என்பதாலும் அங்கே சேர விரும்பினேன். ஆனால் என் துரதிஷ்டம் மனுசெய்ய மதிப்பெண் பட்டியல், மற்றும் சான்றிதழ் கிடைப்பதில் ஒரு சிக்கல் ஏற்பட்டது. எங்கள் குடும்பத்திற்கு வேண்டியவரும்- பல்கலைக்கழகத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தவருமான பேராசிரியர் ராமானுஜாச்சாரி அவர்களிடம் போய் சான்றிதழ்கள் பெறத் தாமதமாவதால் சென்னைக்கு மனுசெய்ய காலக்கெடுவுக்குள் முடியாமை பற்றிச் சொன்னேன். அவர் தத்துவத் துறையின் தலைவராக இருந்ததுடன், புதிதாகத் தொடங்கப் பட்ட ஆசிரியக் கல்லூரிக்கும் முதல்வராக இருந்தார். அதனால், காலக்கெடு தாண்டினாலும் இங்கேயே உனக்கு இடம் தருகிறேன் என்று சொல்லி அதன்படி என்னை ஆசிரியர் பயிற்சியில் சேர்த்து விட்டார். அதனால் எனது சென்னை ஆசை நிறைவேறாது போயிற்று.

இந்த சமயத்தில் திரு ராமானுஜாச்சாரி பற்றிக் கொஞ்சம் சொல்லியாக வேண்டும். தென்னாட்டின் அப்போதைய சிறந்த தத்துவப் பேராசிரியர்களில் அவர் ஒருவர் என்பதோடு அண்ணாமலையின் மூளை என்று வெகுவாக அறியப்பட்டவர். 1970வரை அங்கு பயின்ற எவரும் அவரை மறந்திருக்க முடியாது. ந்¢னைவாற்றலில் அதிசயிக்கத்தக்க ஆற்றல் பெற்றிருந்தவர். உணவு விடுதியின் காப்பாளராகப் பலமுறை இருந்தவர். தொடர்ந்து பல்கலைக் கழகத்தின் செனட், சிண்டிகேட் ஆகியவற்றில் நிர்வாகத்தின் நியமன உறுப்பினராக இருந்து வந்தவர். அவர் வார்டனாக இருந்த காலத்தில் கலாட்டா செய்யவோ கட்டுப்பாட்டை மீறவோ முரட்டு மாணவர்கள் கூடப் பயந்தனர். எதாவது குறைபாட்டினைப் புகார் செய்ய அவரிடம் சென்றால், "வாப்பா சபாநாயகம்! திருவள்ளுவர் பிளாக் 108ஆம் நம்பர் ரூம் தானே? என்ன- மேல் ஜன்னல் கதவு ஒடஞ்சு தொங்குதா? சொல்லியாச்சு! நாளைக்கு கார்ப்பெண்டர் வருவார்" என்று நாம் எதிர்பாராதபடி ஏதோ யட்க்ஷ¢ணி வந்து அவரிடம் சொல்லிய மாதிரி, ஆயிரம் பேருக்கிடையே நம்மை நினைவுகூர்ந்து பெயர், பிளாக், அறை எண், அங்கு முதல் நாள் இரவு அவர் வலம் வந்த போது அவர் கவனித்த- நாம் புகார் செய்ய வந்திருக்கிற- குறைபாட்டினைக் குறிப்பிட்டுக் கேட்கும்போது நமக்கு சிலிர்ப்பு ஏற்படும். அவரது அத்தகைய ஆற்றலால் யாரும் அவர் முன்னிலையில் தவறு செய்ய அஞ்சுவார்கள். ஒருமுறை பார்த்த முகத்தை, கேட்ட பெயரை அவர் மறக்க மாட்டார். அதனால் 1950ல் துணைவேந்தர் மணவாள ராமாநுஜம் அவர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் முன்னணியில் இருந்த அனைவரையும் அவர் அடையாளம் சொல்லி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது நிர்வாகத்துக்குச் சாத்தியமாக இருந்தது. இதனால் அவர் நிர்வாகத்தின் மிகப் பெரிய சொத்தாகக் கருதப்பட்டார். அப்படிப்பட்டவரின் நிர்வாகத்தின் கீழ் ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்தது- சென்னையில் படிக்க முடியாத என் குறையை ஈடு செய்தது.

அப்போதுதான் தொடங்கி இரண்டாம் ஆண்டு என்பதால் இப்போது போலக் கூட்டம் இல்லை. நாங்கள் 75 பேர் தான் அந்த ஆண்டில் பயிற்சி பெற்றோம். அப்போது என் உடன் பயின்றவர் சமீபத்தில் விளக்கு விருது பெற்ற கவிஞர் சி.மணி என்கிற சி.பழனிச்சாமி அவர்கள். அவர் படிப்பு முடிந்து பெரியநாய்க்கன் பாளையம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளரானார். நானும் முப்பதுக்கும் மேற்பட்ட என் சகாக்களும் எங்களது தென்னார்க்காடு மாவட்டக் கழக- பழைய ஜில்லாபோர்டு- உயர்நிலைப் பள்ளிகளிகளில் பட்டதாரி ஆசிரியர்களாகச் சேர்ந்தோம். அப்போது கல்வித் துறையில் மட்டும் வேலையில்லாத் திண்டாட்டமில்லை. இப்போது போல எம்.எஸ்.சி முதல் வகுப்பில் தேறியும் ஆண்டுக் கணக்கில் காத்திருக்க நேர்ந்ததில்லை. சொல்லப் போனால் ஆசிரியர் பற்றாக் குறையால், ஆசிரியர் பயிற்சியில் தோல்வியுற்றவர்- ஏன் பயிற்சியில்லாத பட்டதாரிகள் கூடத் தற்காலிக நியமனம் பெற்றார்கள். அவர்களில் விரும்பியவர்க்கு மறு ஆண்டு ஜில்லா போர்டு உதவித்தொகை கூட, பயிற்சியில் சேர்ந்து படித்து மீண்டும் நியமனம் பெறக் கிடைத்தது. அதிலும் கணித, அறிவியல் பட்டாதாரிகளுக்குக் கிராக்கி அதிகம். அதிகமும் வரலாறு, சமூகவியல் படித்தவர்கள் தான் கிடைத்தார்கள். அதனால் மனு செய்த கணித, அறிவியல் ஆசிரியர்களுக்குக் கேட்ட இடத்துக்கு நியமனம் கிடைத்தது. அப்படித்தான் நானும் முதலில் போட்ட, தூரமான இடத்துக்குப் போக மறுத்து என் கிராமத்துக்கு அருகில் இருந்த விருத்தாசலத்திற்குப் போட்டால் சேருவேன் என்று நிபந்தனை விதித்து அப்படியே பெற்றேன். இப்போது சொன்னால் நம்பவியலாது. அது ஒரு காலம்!

(-தொடர்வேன்...)