Monday, September 27, 2010

இவர்களது எழுத்துமுறை - 8 கி.ராஜநாராயணன்

1. நான் என் கதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதுவதில்லை. கதையில் சொல்லாததையா முன்னுரையில் சொல்லிவிட முடியும்?

2. கதை எழுதுவதற்கு முன்பு நான் கடிதங்கள்தான் எழுதிக் கொண்டிருப்பேன். பத்துப் பக்கம் இருபது பக்கம்கூட எழுதுவேன். ஒரே நாளில் எழுத மாட்டேன். தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுவேன். பின்னாளில் என் எழுத்துக்களுக்கு ஒரு ஸ்டைல் உருவானதென்றால் அதற்கு இந்தக் கடிதங்களே காரணம்.

3. கோபல்ல கிராமம் எழுத உங்களைத் தூண்டியது எது?

ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறி ஒரு கிராமத்தையே அமைத்த கம்மா நாயுடுகளைப் பற்றி எழுதத் திட்டமிட்டிருந்தேன். அவர்கள் அங்கே குடியேறியதைப் பற்றி ஒரு கதை வைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ஜாதிக்காரர்களிடமும் ஒரு கதை இருக்கு. ஒவ்வொரு தொழில்காரர்களிடமும் ஒரு கநை இருக்கு. கோபல்ல கிராமத்தை எழுதி முடிக்க ஏழு வருஷங்கள் ஆயின. தொடர்ச்சியாக அல்ல விட்டு...விட்டுத்தான் எழுதினேன். எழுதி முடிச்சி கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி செழுமைப் படுத்தினேன். கயத்தாறு ஆசாரி வண்டி
செய்யற மாதிரி நிதானமா செய்தேன்.

4. போராட்டக்காரரான உங்கள் எழுத்தில் மென்மையும் - வருத்தமும் மேலோங்கி இருக்கிறதே?

சில சில எழுத்தாளர்களுக்கு சில சில இயல்பு. அதன்படித்தான் அவர்களது எழுத்துக்கள் இருக்கின்றன. சிலர் கண்டிப்பதே கூட மென்மையாய் இருக்கும். பாராட்டுவதும் அப்படியே. அந்தோன் செகாவ் ரொம்ப மென்மையா, ரொம்ப சுகமா கதை சொல்வார். ஒரு வேளை அந்த பாதிப்பு என் கதையில் இருக்கலாம். ரோம்ப டாம்-டூமு-ன்னு நான் எழுதறதில்லே.

5. நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது உங்கள் கதைகளில் இருந்த பிரச்சினைகளின் தீவிரம், கூர்மை வீச்சு எல்லாம் பின்னளில் வெறும் லயிப்பில் ஆழ்ந்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு...?

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஒரு தீவிரம் இருந்தது. அது எழுத்தையும் பாதித்தது. அப்புறம் மனிதனுடைய வயது ஆக... ஆக... அவன் பகுவப் படறான். அனுபவப் படறான். பழம் பழுக்கிற மாதிரி. அப்ப அந்த மாறுதல் எழுத்தில் வரத்தானே செய்யும்! பத்தொன்பத வயதில் ஒரு கண்டக்டர் உங்களைத் திட்டினால் உங்களுக்குக் கோபம் வரும். நாற்பது வயதில் சரிதான் போ என்ற சகிப்புத் தன்மை வந்துவிடும். இதைப் பக்குவம் என்று வைத்துக் கொண்டாலும் சரி, மழு மாறிப்போச்சு என்றாலும் சரி.

6. செக்ஸ் கதைகளை எழுதுவதனால்உங்கள் இமேஜ் கெட்டுவிடாதா?

இமேஜ் என்பது நான் எழுதிய விஷயத்திற்காக வந்தது. அது அப்படியே நிற்கும். இந்தக்கதைகள் சரி என்றால் காலம் பாராட்டும்.

7.. எழுதுவது போராட்டமா?

சிலர் தண்ணீர் குடிக்கிற மாதிரி சுலபமா எழுதிடறாங்க. நாட்டியம் ஆடறவ சந்தோஷமா ஆடறா. பாடறவன் சந்தோஷமா பாடறான். எழுத்து மட்டும் ஏன் பிரசவ வலியா இருக்கு? எழுத்து மாதிரி கஷ்டமான கலை எதுமில்லை. 0

Monday, September 20, 2010

இவர்களது எழுத்துமுறை - 7 வண்ணதாசன்

1. லா.ச.ராவுக்குப்பின் தமிழ் இலக்கியத்தில் உங்கள் மொழிநடை(style) மிகவும் தனித்துவமானது என்பது பற்றி?

என்னோட 'ஸ்டைல்' எனக்குத் தடையா இருக்குன்னுதான் நெனக்கிறேன். என்னை அது கட்டிப் போடுது. இது யாருக்கும் நடக்கக்கூடாதுன்னு நெனக்கிறேன். எந்த ஒரு எழுத்தாளனின் ஸ்டைலும் அவனைக் கட்டிப் போடக் கூடாது. நானே ஒரு பிரத்தியேக பாஷையை உருவாக்கி, அதற்குள் சிக்கிக் கொண்டேன்னுதான் சொல்லணும். நானே அதிலிருந்து விடுபட முயற்சித்தும் முடியல. இது யாரும் எழுத முடியாத ஸ்டைல், நாமஎழுதறோம் அப்படின்னல்லாம் ஒண்ணுமே கெடையாது. ரொம்ப ரொம்ப எளிமையான பாஷை எதுவோ, அதுதான் நல்ல பாஷைன்னு இப்பல்லாம் எனக்குத் தோணுது. ஜி.நாகராஜன் எழுதின 'குறத்திமுடுக்கு' மாதிரித்தான் எளிமையா எழுதணும்னு தோணுது.

2. உங்கள் சிறுகதைகள் உங்களுள் கருத்தரித்த விதத்தை விளக்க முடியுமா?

என் சிறுகதைகள் எல்லாமே என்னைச் சுற்றி நடந்த விஷயங்களை வைத்தே எழுதியிருக்கேன். 99 சதவீதம் உண்மைக் கதைகள். சில சமயம் நிஜப்பேரு போடாமே, சில சமயம் போட்டு எழுதியிருக்கேன்.எப்படி நிகழ்ச்சியை தேர்ந்தெடுகிறேன்னு தெரியல. இதை எழுதிட வேண்டியதுதான்னு டக்குன்னு படுது.

3. யதார்த்தபாணியில்தான் உங்கள் கதைகள் அமைந்துள்ளன. இனி எதார்த்தவாத எழுத்துக்களுக்கு எதிர் காலமில்லை என்பது பற்றி...?

கடைசிவரைக்கும் நான் எதார்த்தவகை எழுத்துக்களையே எழுதுவேன். இலக்கியமே எதார்த்தம்தான்.கடைசிவரை எதார்த்தமே நிலைக்கும். மற்றவகைகளெல்லாம் வரும் போகும்.

4. கவிதையிலே மிக எளிமையான சொற்களாலே புஷ்பம் தொடுக்கிறமாதிரி இயல்பா கவிதை எழுதறீங்க. இந்த எளிமை நீங்க திட்டமிட்டு செய்வதா?

கவிதை இப்படித்தான் எழுகணும்னு மனசுலே எதுவும் வச்சுக்கல. திட்டமிட்டு நான் எதுவுமே பண்ணலே. இதைத்தான் எழுதணும், இந்த விஷயத்தை எழுதக்கூடாது, இந்த யுக்தியிலே எழுதணும், எழுதக் கூடாதுன்னு, தமிழல்லாத வார்த்தை போடக்கூடாது, English வராமப் பார்த்துக்கணும் அப்படியெல்லாம் நான் திட்டமிடுதலே கிடையாது. சரியா சொல்லணும்னா என் கதைகளைவிட கவிதைகள்தான் சரியான பாதையிலே போகுதுன்னு நெனக்கிறேன். எளிமைதான் என்னோட மொழியா இருக்கணும்னு நெனைக்கிறேன்.

5. இன்றைய உங்கள் இலக்கிய வாழ்வு எப்படி இருக்கிறது?

என்னுடைய கதைகளையும் சரி, கவிதைகளையும் சரி, அந்தத் துறைகளில் ஒரு அலையெழுப்புகிற தாகவோ, வலிமைமிக்க ஒரு உந்து சக்தியாகவோ, சுவடுகளை பதித்துச் செல்ல வேண்டிய அவசியமுடையவை என்றோ நான் கருதியதில்லை. அப்படியெல்லாம் கருதாமலும், அப்படியெல்லாம் பிறர் கருதுவதற்கு எந்த அடையாளமும் இல்லாமலுமே என் படைப்புகளை எழுதிக்கிட்டு வர்ரேன். வாழ்வு குறித்தும், வாழ்வின் அர்த்தங்கள் குறித்தும், எந்தத் தீவிரமான கேள்விகளும் எழுப்பாமல் அதே சமயம் சிறுமைகளுடனும் சமரசம்
செஞ்சுக்காம, எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறேனோ, அப்படியே என் எழுத்துக்கள் எழுதப்படுகின்றன. நான் எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜம், நான் எவ்வளவு பொய்யோ அவ்வளவு பொய் என் எழுத்துக்கள். 0

Wednesday, September 15, 2010

இவர்களது எழுத்துமுறை - பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)

1. எந்த நேரத்தில் எழுதுவீர்கள்?

குறிப்பிட்ட நேரம் ஒன்றுமில்லை. இரவோ பகலோ எப்பொழுது வேண்டுமானாலும் எழுதலாம். பெரும்பாலும் விடியற்காலையில் எழுதுவதுண்டு. மத்தியான நேரத்தில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போதும் எழுதிக்கொண்டிருப்பதுண்டு. மத்தியானத்துக்குப் பின் எழுதுவதில்லை. இரவில் கொஞ்ச நேரம் எழுதுவது பின் படிப்பதுதான் வேலை.

2. எப்படி எழுதுவீர்கள்?

தொடங்கும்போது முன்பு எழுதியவைகளை ரசித்துப் படிப்பேன். அப்போது கற்பனை வளரச் சூழ்நிலையைத் தயாராக்குவேன். சில சிறிய திருத்தங்களைச் செய்வேன். அப்போது நிறுத்தியதிலிருந்து தொடர்ந்து வேறொன்று கிடைக்கும். கொஞ்சம் அதிகம் எழுதினால் படிக்க முடியாதல்லவா? எப்படியும் நான்கு பக்கமாவது படிப்பதுண்டு. எழுதிக்கொண்டிருக்கும் போது எங்கேயாவது கற்பனை நின்று விடுவதுண்டு. சில நேரங்களில் வாக்கிய அமைப்புக்காக நிறுத்தப்படும். அது கிடைத்து விட்டால் மறுபடியும் தொடருவேன்.

3. எழுத்தைப் பற்றிய நியமம், குறிக்கோள் ஏதேனும் உண்டா?

உதிரியான காகிதங்களில் எழுதுவது எனக்குப் பிரியமில்லை. முழுநீளமுள்ள புத்தகங்களில் எழுதுவதுதான் பழக்கம்.

4. ஒரு நாளைக்கு எத்தனை பக்கங்கள் எழுதுவீர்கள்?

நல்ல சூழ்நிலையில் மூன்று பக்கங்கள் எழுதுவேன். மோசமன நாட்களில் கால் அல்லது அரைப் பக்கம் தான் எழுதுவேன். ஒன்றும் எழுத முடியாத நாளும் உண்டு.

5. எழுதும் போது தனிமை தேவையா?

எழுதும் போது தனிமை தேவைதான். நன்றாக எழுதும் தினத்தில் அசதியும் உண்டாகும். என்னுடைய சக்தி எங்கேயோ குறைந்து போனதுபோன்று தென்படும் அப்போது தனிமையே பயங்கரமாகத் தோன்றும். நான்என் மகளைச் சத்தமிட்டு அழைப்பேன். அவளுடைய குரல் கேட்டால் மீண்டும் நிம்மதி அடைவேன். அதனால் நான் தனிமையில் இல்லை என்பது நிச்சயமாகுமல்லவா?

6. எழுதுவது சுலபமா?

பொறுக்க முடியாத வேதனையைத் தருவதாகும். 0

Sunday, September 05, 2010

ஒரு திரைப்பட இயக்குனரின் சுயசரிதம்

சிறந்த சமூக சிந்தனையாளரும் படைப்பாளியுமான திரு.சங்கமித்ரா அவர்களோடு
ஒருதடவை பேசிக்கொண்டிருந்தபோது, ''உங்கள் சுயசரிதையை எழுதி விட்டீர்களா?'' என்று கேட்டார். ''சுயசரிதை எழுதுமளவிற்கு நான் என்ன பெரிய ஆளா? காந்தி நேரு போல என் வாழ்க்கை என்ன பிறருக்கு வழிகாட்ட வல்லதா?'' என்றேன். ''அப்படியல்ல. பெரிய ஆளாய் இருந்தால்தான் எழுத வேண்டுமா? ஒரு புழு கூட தன் வரலாற்றை எழுதலாம். அதிலிருந்து நாம் பல புதிய செய்திகளைத் தெரிந்து கொள்ள முடியும்!'' என்றார் சங்கமித்ரா. அது உண்மைதான் என்று தோன்றுகிறது. தன் வரலாறுகள் நமக்குத் தெரியாத பல தகவல்களைத் தருகின்றன. ஆனால் ஒரு விஷயம். அது சுவாரஸ்யமாய் - நாமக்கல் கவிஞரின் 'என் கதை' போல, உ.வே.சாவின் 'என் சரித்திரம்' போல - சொல்லப் பட்டிருக்க வேண்டும்.


ஸ்பெயின் நாட்டவரான லூயி' பனுவல் ஒருபுகழ் பெற்ற திரைப்பட இயக்குனர். அவர் ஃபிரிட்ஸ் லாங் என்னும் திரைப்பட இயக்குனரை ஆதர்ஸமாய்க் கொண்டிருந்தவர். 'The milky way', 'The Discreet charm of the Bourgeoise', 'The Phantom of Liberty' என்கிற மிகச் சிறந்த திரைப்படங் களை உருவாக்கியவர். அவர் தனது திரைப்பட அனுபவங்களையும், தனது இயக்குனர் நண்பர்களான டாலி பிரெட்டன், மேக்ஸ் எர்னெஸ்ட், பால் எலுவர்ட் ஆகியோரின் ஆளுமைகளையும் விவரிக்கும் சுய வரலாற்றினை 'இறுதி சுவாசம்' என்றதலைப்பில் எழுதியுள்ளார். 77வது வயதில் தன் இறுதிப் படத்தை எடுத்த அவர் தனது உருவாக்கங்களில் தான் கண்டறிந்ததையும், சிலவற்றைக் கைவிட்டு விடுவதன் அவசியத்தையும் இந்நூலில் வற்புறுத்துகிறார். புரட்சிகரமானதும் கவிதாபூர்வமானதுமான
இந்நூலை திரு.சா.தேவதாஸ் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.


'மொழிபெயர்ப்பு நூல்களைத் திறனாய்வு செய்வது சற்று சிக்கலான வேலை: ஏனெனில் திறனாயப்படுவது மொழிபெயர்ப்பா அல்லது மூல நூலா என்பதைத் திறனாய்வில் தெளிவு படுத்துவது சற்று அசாத்தியம். மூல நூலின் மொழி திறனாய்வாளனுக்குத் தெரியாவிட்டால்? அல்லது அந்த மூல நூல் திறனாய்வாளனுக்குக் கிடைக்காவிட்டால்? அத்தருணங்களில் திறனாய்வாளனால் உருப்படியாக ஒன்றும் செய்ய இயலாது' என்று தேவக்கோட்டை வா.மூர்த்தி தனது திறனாய்வு ஓன்றில் சொல்லி இருப்பதைப்போல் இந்நூலைத் திறனாய்வு செய்வதில் எனக்குள்ள பிரச்சினை இதன் மூல நூல் எந்த
மொழியில் எழுதப்பட்டது, திரு.தேவதாஸ் அம் மொழியிலிருந்து நேரடியாக இதனை மொழிபெயர்த்தாரா அல்லது மூல மொழியின் ஆங்கில வழி மொழிபெயர்ப்பா என்பதற்கான குறிப்பு ஏதுமில்லாததால் மொழிபெயர்ப்பை விமர்சிப்பது இங்கு தேவையற்றதாகிறது. எனவே மூல நூலை மட்டும் விமர்சிக்க நேருகிறது.


தன் தாயாரின் நினைவுகளுடன் தன் சரிதையைத் தொடங்குகிறார் புனுவல். தனது ஆயுளின் கடைசி பத்தாண்டுகளில் தன் தாயார் படிப்படியாகத் தன் நினைவுகளை இழந்ததையும் தன் பிள்ளை களில் எவரையும் அவருக்கு அடையாளம் காண முடியாது போனதையும் குறிப்பிட்டு, தனக்கும் அத்தகைய ஞாபக மறதி தனது எழுபதாவது வயதில் ஏற்பட்டதையும் சொல்கிறார். இதனால் இச் சரிதத்தில், விஷயத்திலிருந்து அடிக்கடி விலகித் திரிவது நேர்ந்திருக்கிறது என்று குறிப்பிடுகிறார்.


எட்டு அத்தியாயங்கள் வரை இடைக்காலங்களில் இருந்ததான நினைவுகள் சொல்லப்
பட்டிருக்கின்றன. தனது பிறந்த கிராமமான காலந்தா இடைக்காலங்கள் முதல் உலகப்போர் வரை நீடித்த சூழ்நிலை பற்றி விரிவாகச் சொல்வது சற்று அலுப்பூட்டினாலும் அவரது இளமைக்காலம் பற்றிய அந்நினைவுகள் கத்தோலிக்கப் பிரிவின் சில முரண்பாடுகளைக் கோடிட்டுக் காட்டுகிறது. அக்கால கட்டத்தில் நிலவிய வர்க்க, இன வேறுபாடுகள், நினைத்துப் பார்க்க முடியாத சொர்க்கம் நரகம் பற்றிய மத நம்பிக்கைகள் ஆகியவற்றால் தனது இளமைக்காலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைப் பதிவு செய்துள்ளார்.


தனது எட்டாவது வயதுக் காலகட்டத்தில் தான் பார்த்த திரைப்படங்கள் பற்றிச் சொல்லும் போது ஒவ்வொரு அரங்கமும் ஒருகதை சொல்லியை வைத்திருந்ததையும், அவர் திரையருகே நின்று பார்வையாளருக்கு காட்சிகளை விளக்கியது பற்றியும் சுவாஸ்யமாகச் சொல்கிறார். 'இன்றைக்கு இதனைக் கற்பிதம் செய்வது கடினம். ஆனால் திரைப்படம் குழந்தைப் பருவத்தில் இருந்தபோது, புதியதும் வழக்கத்துக்கு மாறான எடுத்துரைப்பு வடிவமும் கொண்டிருந்ததால், என்ன நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைப் புரிந்து கொள்வதில் பார்வையாளருக்குச் சிரமம் இருந்தது. இப்போது திரைப்பட மொழி, படத்தொகுப்பு அம்சங்கள் ஒரே நேரத்தில் மற்றும் அடுத்தடுத்து நிகழும் நடவடிக்கை மலரும் நினைவுகள் ஆகியன நமக்கு மிகவும் பழகிப் போயுள்ளதால், நமது புரிந்து கொள்ளுதல் தன்னிச்சையாக உள்ளது; ஆனால் ஆரம்ப ஆண்டுகளில் புதிய காட்சி இலக்கணத்தை விடுவித்துக் கொள்வது மக்களுக்குக் கடினமானதாயிருந்தது. காட்சிக்குக் காட்சி தம்மை வழிகாட்டிச் செல்ல அவர்களுக்கு விளக்கம் சொல்பவர் தேவைப்பட்டார்' என்று அதற்கு விளக்கம் சொல்கிறார்.
தொடர்ந்து தன் சகோதரி கொன்சிடாவின் நினைவுகள், தனது மதுவிடுதி அனுபவங்கள்
போன்ற மண்ணுலகச் சந்தோஷங்கள், டெநோயெல்ஸ், டாலி போன்ற இயக்குனர்களுடனான
தொடர்புகள் மற்றும் அது தொடர்பான அனுபவங்களைச் சொல்லிச் செல்கிறார். தனது அமெரிக்க அனுபவங்களைச் சொல்லும் எட்டாவது அத்தியாயத்திலிருந்து சுவாரஸ்யமாகச் செல்கிறது. இது முதல் திரைப்படங்களை அவர் இயக்கிய அனுபவங்களை ரசிக்க முடிகிறது. இயக்குனராக விரும்புகிறவர் களுக்குப் பயனுள்ள பதிவுகள்.


லூயி பனுவலின் திரைப்பட இயக்க அனுபவங்கள் மட்டுமின்றி அவரது அரசியல்

அனுபவங்களும், நம்மூரைப் போன்றே நடிகர்களின் அரசியல் தொடர்பு ஆகியவையும் இடையிடையே சொல்லப்பட்டுள்ளன. இதன் பின்னர் அவரது காதல் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பின்னர் அவரது இலக்கிய நண்பர்களுடனான தொடர்புகள், இங்கே நம்மூர் போலவே இலக்கியவாதி களுக்கிடையே நிகழ்ந்த கைகலப்புகள் பற்றிய பதிவுகள் சுவாரஸ்யமாக உள்ளன.


அமெரிக்க அனுபவங்களைத் தொடந்து அவரது பாரிஸ், ஸ்பெயின், மெக்ஸிகோ அனுபவங் களும் அவரது கனவுகள், மிகையதார்த்தவாதம் பற்றிய கருத்துக்களும் ரசனைக்குரியவை. இறுதிப் பகுதியில் முதுமைக்காலம் பற்றிய சிந்தனைகள், மரணம் பற்றிய எண்ண வோட்டங்கள் என வாசிப்பவர்க்கு நிறைய ஆன்மீகத் தகவல்கள் உள்ளன. நமக்குத்தொடர்பில்லா திருந்தாலும் எந்தவொரு தன் வரலாறும் எதாவது ஒரு வகையில் பயன் தரும் எனபதற்கு லூயி பனுவலின் 'இறுதி சுவாசம்' என்கிற இச்சுயசரிதை ஒரு சான்று. 0



நூல்: இறுதி சுவாசம்

ஆசிரியர்: லூயி பனுவல்.

தமிழில்: சா.தேவதாஸ்

வெளியீடு: வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.