Tuesday, November 15, 2011

இதம் தரும் இனிய வங்கக்கதைகள்

1940களில் மொழிபெயர்ப்புப் படைப்புகளுக்கு திடீரென்று ஒரு மவுசு ஏற்பட்டது. ஆனந்தவிகடன், கல்கி போன்றவை இந்தி, வங்காளி, மராத்தி மொழிக் கதைகளை போட்டி போட்டுக் கொண்டு மொழி பெயர்த்து வெளியிட்டன. அம்மொழி நாவல்களும் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பைப் பெற்றன. அதற்கு முன்பே க.நா.சு ஜர்மனி, ஸ்வீடிஷ் போன்ற மேலை நாட்டு மொழி நாவல்களை, அநேகமாக அனைத்து உலக நாவல்களையும் அசுர வேகத்தில் மொழி பெயர்த்துத் தள்ளினார். 60களில் தீபம், கலைமகள் போன்ற இலக்கிய இதழ்களில் நம் சகோதர மொழிகளான மலையாளம, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளின் படைப்புகள்
வெளியாயின.

நாற்பதுகளின் எழுச்சி, 'மொழிபெயர்ப்பின் பொற்கால'மாக அமைந்தது எனலாம். த.நா.குமாரசாமி, த.நா.சேனாபதி, ஆர்.சண்முகசுந்தரம், அ.கி.கோபாலன், அ.கி.ஜயராமன் ஆகியோரது மொழிபெயர்ப்பில் வங்க நாவலாசிரியர்களான கவிஞர் தாகூர், பக்கிங்சந்திரர், சரத்சந்திரர் ஆகியோரது புகழ் பெற்ற நாவல்களான புயல், தேவதாஸ், ஆனந்தமடம் போன்றவை மக்களை மகிழ்வித்தன. பின்னர் 'தீபம்' இலக்கிய இதழ் மூலம் வங்கச் சிறுகதைகளையும் நாவல்களையும் திரு.சு.கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுப் பிரபலமானார். தன் வங்க மொழிபெயர்ப்பு முன்னோடிகளினும் இன்று வங்கப் படைப்புகளை நினைத்ததும் வாசகரது நெஞ்சில் பசுமையாக இருப்பவர் அவரே. அவர் 'அண்மைகால வங்காளச் சிறுகதைகள்' என்ற தலைப்பில் 15 இனிய கதைகளை 'அம்ருதா' மூலம்
வெளிட்டுள்ளார்.

வங்கப் படைப்புகளில் அழகுணர்ச்சியும் ரசனையும் மென்மையான மன உணர்வுகளுமே மிகுந்திருக்கும். வன்முறை, கொலை, கொள்ளை, பரபரப்பு, திடீர்த்திருப்பம் போன்றவை வெகு அபூர்வம். ஆரவாரமின்றி மென்மையாய் சிலுசிலுத்து ஓடும் சிற்றோடையின் நளினமும் அழகும் வங்கக்கதைகளின் பொதுத்தன்மை. அப்படிப்பட்ட வாசிப்புக்கு இதமான கதைகள் இத்தொகுப்பில் உள்ளவை. படைப்பாளில் அனைவருமே புதியவர்கள். 1961க்குப் பிறகு பிறந்தவர்கள். நடைமுறை வங்காள வாழ்வை, அதன் பெருமை சிறுமைகளை அசலாகப் பதிவு செய்திருப்பவர்கள்.

உஜ்வல் சக்கரவர்த்தி என்பவரின் 'மண்' என்கிற சிறுகதை அரசியல் காரணங்களால் சொந்த மண்ணிலிருந்து விரட்டப்படுவோரின் சோகத்தை உருக்கமாகச் சித்தரிக்கிறது. இத்தொகுப்பில் உள்ள சிறப்பான கதைகளில் ஒன்று இது. வங்கப் பிரிவினையின் போது பிரிந்த குடும்பங்கள் பின்னாட்களில் திருமணம் போன்ற உற்றார் வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ள எதிர் கொள்ளும் சங்கடங்களை, மனவெழுச்சிகளை, கொல்கத்தாவிலிருந்து பங்களாதேஷுக்குச் சென்று திரும்பும் ஒரு பாத்திரத்ததின் அனுபவமாகச் சித்தரித்துள்ளார்.

சுகந்த கங்கோபாத்தயாய் என்பவரது கதையான 'மண்ணுக்கு ராஜா' என்கிற கதை கொல்கத்தாவின் நடைபாதைக் குடும்பம் ஒன்றின் பிரச்சினையைப் பேசுகிறது. இரவானதும் ஷட்டர்கள் மூடப்பட்ட போட்டோக்கடை வாசலில் படுத்து அங்கேயே தாம்பத்யம் நடத்தும் ஜூகியாவுக்கு மூன்று குழந்தைகள். இப்போது அவன் மனைவி பிரசவிக்க இருக்கிறாள். மேலும் குழந்தை பெற்றால், பாவம் கார்ப்பரேஷன் கட்டடத்துக்கு முன்னே ஷூ பாலீஷ் போட்டு பிழைக்கும் அவன் எப்படி சமாளிப்பான் என்கிற நல்லெண்ணத்தில் கடைக்காரர்கள் நூறு ரூபாய் சேர்த்துக் கொடுத்து அவனை குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ள அனுப்புகிறார்கள். ஆனால் குடிகாரனான ஜூகியா வாங்கிய பணத்தில் குடித்து விட்டு, அவனுக்கு அடுத்துப் பிறக்கும் ஆண்குழந்தை ராஜா ஆகப் போகிறான் என்று கிளி ஜோஸ்யன் ஒருவன் சொன்னதை நம்பி கடைக்காரர்கள் யோசனையை ஏற்காமல் குடித்துச் சீரழிகிறான் என்பதை அவன் வாழும் நடைபாதையும், சாட்சியாக இருக்கும் நிலவும், கிளி ஜோஸ்யக்காரனின்
கிளியும் சொல்வதாக அமைந்த கதை. போட்டோப் பிடித்தது போன்ற நேரடிக் காட்சித் தன்மையில் அழகாகக் கதை சொல்லப்பட்டுள்ளது.

'உறக்கத்தைக் கெடுப்பவள்' எனும் அமிதாப் தேவ் சௌதுரியின் கதை இத்தொகுப்பின் சிறந்த கதை எனலாம். இதுவும் நாட்டுப் பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் கதைதான். புலம் பெயர்ந்ததால் சித்தம் பேதலித்த 'சித்தி' என்று அழைக்கப்படுகிற ஒருத்தி, தான் இரு தேசங்களாலும் 'ரத்து செய்யப்பட்ட மனுஷி'என்பதை உணராமல் மீண்டும் பிறந்த மண்ணுக்குப் போகத் துடிக்கிறவள், திருட்டுத்தனமாய்ப் போகப் பல தடவை முயன்று திருப்பி அனுப்படுகிறவள் - தன்னைப்பொலவே புலம்பெயர்ந்த ஆனால் திரும்பும் நம்பிக்கையற்றுப் போன கதை சொல்லியைத் தினமும் அதிகாலை எழுப்பித் தன்னை அக்கரைக்கு அனுப்பக் கேட்டு உறக்கத்தைக் கெடுப்பவளின் தவிப்பு உருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது. கதையைப் படிப்பவரின் உறக்கத்தையும் கெடுக்கும் படைப்பு.

மலைப்பிரதேசங்களை, பழங்குடியினரின் வாழ்விடங்களை வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு மேற்குவங்க அரசு தத்தம் செய்வதால் இடம் பெயர நேர்கிற, மக்களின் சமகாலப் பிரச்சினையைப் பேசுகிற 'பிந்த்திக்கிழவி, மரஞ்செடிகள், சன்காடிமலை மற்றும்......' என்னும் கதையிள் முடிவு வித்தியாசமானது. பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களின் எதிர்ப்பை வேறோரு கோணத்தில் கதாசிரியர் ஜாமுர் பாண்டே காட்டுகிறார். சன்காடி மலையை லீஸுக்கு எடுத்துள்ள கம்பனி டைனமைட் வைத்துத் தகர்க்கப்போவதாகவும் அதனால் உடனே மூட்டை கட்டிக்
கொண்டு எல்லோரும் கிளம்ப வேண்டும் என்று கேள்விப்படுகிற பிந்த்தி என்கிற கிழவி வெடிக்கிறாள்; ''அப்போ இந்த மலையிலே இருக்கிற மனுசங்க எங்கே போவாங்க? இவ்வளவு மரஞ்செடிகள், புலி, மான், முள்ளம்பன்றி இதெல்லாம் என்ன ஆகும்'' என்று மனிதர்களோடு மரஞ்செடிகளுக்காகவும், மலையில் வாழும் பிற உயிரினங்களுக்காகவும் கவலைப்பட்டு, ''நான் எங்கேயும் போகமாட்டென்'' என்று தீர்மானமாக மறுத்து தன் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து விடுகிறாள்.

புஷ்பல் முகோபாத்யாய் எழுதியுள்ள 'சிறு பிராயத்து நண்பன்' வாசிப்பு சுகமளிக்கும் ஒரு நல்ல கதை. ஓட்டமான நடை. மொழிபெயர்ப்பு என நினைவு படுத்தாத மொழியாக்கம்.

'ரசிக் சாரின் குதிரை' எனும் ஜயந்த தே யின் கதையும் நெஞ்சைத் தொடும் கதை. வகுப்பில் ஏழை மாணவன் என்பதால் ஆசிரியரால் மிகவு அவமானப் படுத்தப்படும் ஒரு மாணவன் பின்னாளில் பெரிய எழுத்தாளன் ஆகிறான். முதுமையில் அநாதரவான நிலையில் உள்ள அதே ஆசிரியரை ஒரு நாள் சந்திக்கும் போது அவர் மனதளவில் அவமானமுறும் வகையில் அடக்கமாக தன் வளர்ச்சியை உணர வைக்கிறான்.

'ஐயோமனுஷா' ஒரு அற்புதமான மனித நேயக்கதை. இந்திரா காந்தி கொலையை ஒட்டி தில்லியில் அப்பாவி சீக்கியர்கள் வேட்டையாடப்பட்ட சூழ்நிலையில் இன, மத வேறுபாடின்றி - ரயிலில் பிரசவித்த ஒரு
பெண்ணுக்குப் பிரசவம் பார்த்த ஒரு சீக்கிய மருத்துவ மாணவனின் மனித நேயச்செயலை சிலிர்ப்பாகச் சித்தரித்துள்ளார் சியாமல் பட்டாச்சார்யா என்கிற எழுத்தாளர். இதில் பிரதிபலனை எதிர் பாராமல் உதவும் நிகில் என்கிற ஆட்டோ ஓட்டி மறக்க முடியாத பாத்திரம். வாசிப்பை ஓட்டமாய் நடத்திச் செல்கிற பரபரப்பான கதை நிகழ்வுகள், படித்தே முழுமையாய் ரசிக்க முடிபவை.

விற்பனைப் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை ரசமாகச் சொல்லுகிறது சத்யஜித் தத்தா எழுதி இருக்கும் 'மனிதன் மனிதன் மற்றும் ஒரு ஞாயிற்றுக்
சிழமை' என்கிற கதை. வருமானத்தைப் பெருக்கவோ, பொழுது போக்குக்காகவோ, நானும் சம்பாதிக்க முடியும் என்கிற வீம்பிற்காகாவோ வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பனை செய்யும் பெண்களுக்கு நேரும் பாலியல் தொல்லை பற்றிய சாதாரணமான நமக்குப் பரிச்சயமான பிரச்சினைதான். ஆனால் அலுப்புத் தட்டாமல் வாசிக்கவும் ரசிக்கவும் முடிகிற கதை.

இத்தொகுப்பின் மூலம் மாறிக்கொண்டே இருக்கும் நவீன வங்கத்து சமகால வாழ்க்கையையும், அம்மக்களின் சுக துக்கங்களையும், அவர்களது மனிதநேயப் பண்பு மற்றும் ரசனை உணர்வினையும், அம் மண்சார்ந்த சடங்கு சம்பிரதாயங்களையும் நாம் அறிந்து கொள்ள முடிகிறது. வங்காளம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் வல்லவர் ஆனதால் திரு.கிருஷ்ணமூர்த்தி வங்க மரபிற்கேற்றபடி தமிழ்ப்படுத்தி இருக்கும் நேர்த்தி தடையற்ற வாசிப்புக்கு உதவுகிறது. 0


நூல்: அண்மைக்கால வங்காளச் சிறுகதைகள்.

தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி.

வெளியீடு: அம்ருதா.

Monday, November 07, 2011

காக்கிச் சட்டைக்குள் ஒரு கவிமனம்

காவல்துறை அதிகாரிகளில் படைப்பாளிகள் அறியப்படுவது புதிதல்லதான். ஆனால் அவர்களில் எத்தனைபேர் இலக்கியவாதிகளால், வாசகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இயல்பிலேயே படைப்புத்திறன் அமைந்தவர்களைவிட பதவி காரணமாய் எழுத்தாளர்களாக ஆக்கப்பட்டவர்களே அதிகம். புதுமைப்பித்தனின் மேதமையை வெகு சீக்கிரமே
உணர்ந்து, விவாதத்திற்குள்ளான அவரது 'சாபவிமோசனம்' போன்ற கதைகளை வெளியிட்டு புதுமைப்பித்தன் வரலாற்றில் இடம் பெற்ற 'கலைமகள்' தான், பின்னாளில் கவைக்குதவாத, சில காவல்துறை அதிகாரிகளின் பிதற்றல்களை அவர்களது பதவிகாரணமாய் வெளியிட்டு சேறு பூசிக் கொண்டது. இன்றும் புதுமைப்பித்தன் பேசப்படுவதும் பதவி காரணமாய் தூக்கி நிறுத்தப்பட்டவர்கள்
காணாமல் போயிருப்பதும்தான் யதார்த்தம். இதில் பரிதாபம் என்னவெனில் புதுமைப்பித்தனை இனம் கண்டு வெளிச்சமிட்ட சிறந்த இலக்கியவாதியும் தரமான பதிரிகையாசிரியருமான மதிப்பிற்குரிய வாகீசகலாநிதி கி.வா.ஜகந்நாதன் அவர்களே இப்பழிக்கு ஆளாகி இருப்பதுதான்!

காக்கிச்சட்டை போட நேர்ந்ததாலேயே கல்லாக மனதை மாற்றிக் கொள்ள நேர்ந்தாலும், கலை நெஞ்சம் இயல்பிலேயே அமையப் பெற்றவர்கள், பாலைவனத்து நீரூற்று போல தமது இறுக்கமான பணிக்கிடையே இலக்கிய ஈடுபாட்டை பேணிக்காத்தே வந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட அபூர்வ
காக்கிச் சட்டைக்காரரர் கவிஞர் பேனா மனோகரன் அவர்கள்.

இலங்கையில் பிறந்து வளர்ந்த இந்தியக் குடிமகனான அவர், ஈழத்தின் கல்லூரிக் காலத்திலேயே கவிஞராக அறியப்பட்டவர். தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்தபோதும் கவிதை வாசிப்பும், கவிதையாக்கமும் தொடர்ந்திருக்கின்றன. ஆனால் பிழைப்புக்காக ஏற்கநேர்ந்த காவல்துறை பணி காரணமாய் முடக்கப்பட்ட கவிதைமை- பணியிலிருந்த விட்டு விடுதலையான பின்னர் மீட்டெடுக்கப்பட்டதை பெருமிதத்தோடு இப்படி எக்காளமிடுகிறார்:

''பள்ளியில் பாரதியைப் படித்தேன்
வெள்ளைச் சட்டை போட்டிருந்தேன்

கல்லூரியில் காரல் மார்க்ஸ் படித்தேன்
சிவப்புச் சட்டை போட்டிருந்தேன்

காலம் என்மீது காக்கிச் சட்டை போர்த்தியது.
விட்டு விடுதலையாகினேன்.

மறுபடியும்

எனக்குப்பிடித்தமான கவிதைச் சட்டையோடு
காலமெல்லாம் உங்களோடு நான்
காலாற நடந்திடுவேன்".


பேனா.மனோகரன் அவர்கள் பணிக்காலத்தில் அவ்வப்போது எழுதிய கவிதைகளில் 35 கவிதைகளைத் தேர்ந்து 'கற்றறிந்த காக்கைகள்' என்ற தலைப்பில் ஒரு தொகுப்பை இப்போது வெளியிட்டிருக்கிறார். இக்கவிதைகள் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் மனநிறைவைத் தருவன. கவிதைகளின் பாராட்டுக்குரிய முதல் அம்சம் அத்தனையும் புரிகின்றன! இன்றைய நவீன கவிதைக்காரர்கள் போல வாசிப்பவனுக்குப் புரிந்துவிடக்கூடாது என்கிற வறட்டுப் பிடிவாதமில்லாமல், தன் படைப்பு வாசகனைச் சென்றடைய வேண்டும்
என்ற கவனத்துடனும், பொறுப்புடனும் கவிஞர் செயல்பட்டிருப்பதே அவரது வெற்றிக்குக் காரணம் எனலாம். பூடகமில்லாத, படிமம் பின்நவீனத்துவம் போன்ற மர்மங்களற்ற, இறுக்கமும் சிடுக்குமில்லாத, நெஞ்சை ஈர்க்கும் இனிய எளிய, கவிதைகள் இவை. இவரது பாடுபொருள் சிக்கல் இல்லாத, அன்றாடம் அனைவருக்கும் தென்படுகிற யதார்த்த காட்சிகள் என்பதால் வாசகருக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன. யாப்புடைத்த முயற்சிகள் என்றாலும் மரபுக் கவிதைகளின் சந்தநயமும் உறுத்தாத எதுகை மோனை அணி அழகும் விரவி வாசிப்புக்கு ஆர்வமூட்டுவன.

முதல் கவிதையான 'அற்றைத் திங்கள்', செ.கணேசலிங்கம் அவர்களின் 'நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே' போல கடந்த நாட்களின் நினைவை உருக்கமாகச் சொல்கிறது. தொகுப்பின் தலைப்புக் கவிதையான 'கற்றறிந்த காக்கைகள்' மென்னகை பூக்க வைக்கும் ஒரு ரசமான கவிதை காலத்துக்கீர்ர்ர்றபடி காக்கைகளும் தங்கள் நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் மாற்றிக்கொண்டு 'கமண்டலத்தைக் கவிழ்த்த காக்கைகளாக்கும் நாங்கள்' என்று கலகம் செய்யக் கற்றுக் கொண்டிருப்பதாகக் கூறுவது ரசமான கற்பனை.

புலம் பெயர்ந்த வலியை 'அணில்' என்னும் சின்னக் கவிதையில் பதிவு செய்திருக்கிறார் கவிஞர். 'புலம் பெயர்ந்த புங்கை மரம்', 'அகதி அணில்' என்னும் பதிவுகள் புலம் பெயர்ந்த அகதி வாழ்வின் உருக்கமான குறியீடுகள்.

புதிதாகக் கட்டிய வீட்டின் முன் புறத்து புங்கைமரம் வெட்டப்பட்ட போது அதில் கூடுகட்டி வாழும் பறவைகளுக்காக இரங்கும் 'வீடும் கூடும்' கவிதையிலும், முச்சந்தியில் சடைத்து நின்ற வேப்ப மரமொன்று வெட்டப்பட்டபோது 'மனுநீதி மனிதனுக்கு மட்டும்தானா?' என்று விசனப்படும் 'வேப்பமரத்திடம் ஒரு விசாரணை' என்ற கவிதையிலும் கவிஞரின் உயிர்நேயத்தைக் காண்கிறோம்.

அற்ப நோய்க்கும் ஆயிரக்கணக்கில் சிகிச்சைக்காக கொள்ளையடிக்க முயலும் இன்றைய அலோபதி மருத்துவர்களைக் கிண்டலடிக்கிறது 'பாலுண்ணிகள்' என்ற கவிதை. 'உறவுகள்' என்ற கவிதைஇன்றைய சில சௌகரியங்களால் ஏற்படும் இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது. கூரியர் சேவையால் தபால்காரரின உறவு
தொடராத யதார்த்தத்தை இக்கவிதை பேசுகிறது. 'அக்னிக்கோளம் ஆகும் பூமி'என்கிற கவிதையில் கவிஞரின் லோகோதய அக்கறையைப் பார்க்கிறோம்.

'நெல் விளைந்த வயல்களில்
கல் விளைந்து கட்டங்கள்' -

என்று தொடங்கி, மணல் கொள்ளையால் மறைந்து வரும் ஆறுகள், இறால் பண்ணைகளால் இழக்கும் மலர்த் தோட்டங்கள், இரும்பு ஆலைகளால் மறைந்துவரும் கரும்புத்தோட்டங்கள்....என மனிதர்கள் இயற்கையைச் சூறையாடி மறுபடியும் பூமியை அக்னிக்கோளம் ஆக்கும் கொடுமையை ஆற்றாமையோடு விவரிக்கிறது கவிதை.

மேனாட்டு இயற்கை உபாசகரான கவிஞர் Wordsworth போல, பேனா.மனோகரனும் இயற்கையழகில் நெஞ்சைப் பறிகொடுத்து, அதைத் தன் கவிதைகளில் பதிவு செய்பவர். அவருடைய கவிதைகளில் அதிகமும்
அத்தகையவையே. 'இயற்கையின் இரங்கராட்டினம்' எனும் கவிதையை அதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். 'Doffodils' கவிதையில் Wordsworth தான் கண்ட மஞ்சள் மலர்களில் மயங்கிய காட்சியை விவரிப்பது போல,

'தகத்தகாயமாய்/ தங்க அரளிகளின்/ தீப ஆராதனைகள்,
அக்னித் தூக்கலாய்...../ ஆகாயத்துக்கு அர்ச்சனை செய்யும்/ இட்டிலிப்பூக்கள்
.....................................................
அடடா....இஃது/ இயற்கை நங்கை நடாத்தும்/ இரங்கராட்டினம்!' - என்று வியக்கிறார்.

ஈழம் பற்றி எரியும் கொடுமையையும் 'தீ இனிது....' என்று அங்கதமாய் எழுதுகிறார்:

'கீழ்வெண்மணியில்/ ஏர்வாடியில்/ தருமபுரியில்/ கோத்ராவில்/ குடந்தையில்/ பானிப்பட்டில்/
ஈழத்தில்/ ஈராக்கில்
பூமிப்பந்தின்/ எங்காவது ஒரு மூலையில்
நிகழ்ந்து கொண்டிருக்கிறது
மனித ஜீவிதம்
எரிதலும் உயித்தலுமாய்'.

சில ஆண்டுகளுக்கு முன் உலகையே அதிரச் செய்த சுனாமியின் இரக்கமற்ற கோரத்தாண்டவம் இவரை வெகுவாகப் பாதித்ததை 'ஆழிப்பேரலை' என்ற கவிதை காட்டுகிறது. 'சூரசம்காரத்தின் சரித்திரம் தெரியும் - இந்த ஈர சம்காரத்தின் இதிகாசம் என்ன?' என்று வினா எழுப்புகிறார்.'கண்ணில் நீர் வரலாம்/ கடல் வரலாமா?' என்று மறுகுகிறார்.

இன்னும் எத்தனையெத்தனை ஏக்கங்கள், வியப்புகள், விசாரணைகள் சமூகக்கவலைகள்! 'பெட்டை', 'அஸ்தமனம்', 'சீதனச் சிறைகளில் சீதைகள்', 'சித்தார்த்தனைத் தேடும் போதிமரங்கள்' என ஆரோக்கியமான சிந்தனைகளை உள்ளடக்கிய கவிதைகள். எல்லாமே சிறப்பாக வந்திருக்கின்றன.

இவரது உவமைகள் வித்தியாசமானவை. இரை தாக்குதலுக்காக தரை இறங்கும் புறாக்களின் லாகவம் இராணுவ ஹெலிகேப்டர்களின் லாகவம் போல இருக்கிறதாம். சில வித்தியாசமான சொல்லாக்கங்களும் - 'மரக்குருதி', 'மழலை மச்சங்கள்' போன்றவை கவிதை வாசிப்பை சுகமாக்குகின்றன. வறட்டுத்
தனமான இன்றைய புதுக்கவிதை ஆக்கங்களில் அலுத்துப்போன கவிதைப் பிரியர்களுக்கு இவரது கவிதைகள் ஆசுவாசத்தையும் ஆனந்தத்தையும் அளிப்பவை. 0


நூல் : கற்றறிந்த காக்கைகள்.

ஆரிரியர் : பேனா.மனோகரன்.

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்., சென்னை.