Friday, January 28, 2005

நினைவுத் தடங்கள் - 29

ஒரு பையனைப் பள்ளியில் புதிதாகச் சேர்க்கிறார்கள் என்றால் பிள்ளைகளைப் பொறுத்தவரை அது மிகவும் ரசமான விஷயம்! முதலாவது அன்று காலை அரைவேளப் படிப்புக் கிடையாது. இரண்டாவது 'ஐயா'வின் சிடுசிடுப்பும் கெடுபிடியும் அன்று மதியம் வரை சுத்தமாக இராது.
மாறாக ஐயாஅன்று மட்டும் சுமுகமாக அனைவரிடமும் பேசுவார்; யாரிடமும் கடுமை காட்டமாட்டார். முகத்தில் அபூர்வ மென்மையும் மலர்ச்சியும் இருக்கும். புதிதாகச் சேருகிற பையனை, சேருகிறபோதே மிரளச் செய்துவிடக் கூடாது என்பதற்காகவும் அன்றைய வரும்படியை உத்தேசித்தும் அப்படி இருக்கக் கூடும்.

வரும்படி குடும்பத்தைப் பொறுத்தது. வசதியான குடும்பம் என்றால் ஒரு ஜதை வேட்டி, துண்டு ஐயாவுக்குக் கிடைக்கும். தட்சணையாக ஒரு ரூபாயும் - குறுணி நெல், பழம், தேங்காய், அரிசி எல்லாம் உண்டு. சாதாரண குடும்பமென்றால் வேட்டி, துண்டு நீங்கலாக மற்றவை நிச்சயம் கிடைக்கும். மற்ற ஆசிரியர்களுக்கு இதில் பங்கில்லை. வெறும் கால் ரூபாயும், தாம்பூலமும் மட்டும்தான். 'அட்சராப்பியாசம்' செய்து வைப்பவர் ஐயாதானே? அதனால் முழு வரும்படியும் அவருக்கு மட்டும்தான். ஊர்க்காரர்கள் ஐயா- வைத் தவிர வேறு யாரும் அட்சராப்பியாசம் செய்துவைப்பதையும் விரும்ப மாட்டார்கள். ஆயிரம் குறை சொன்னாலும் ஐயாவின் ஆகி வந்த கையால், குழந்தையின் கையைப் பிடித்து, பரப்பிய நெல்லின் மீது 'அரியே நம' என்று ஐயா எழுதிக் கொடுத்தால்தான் படிப்பு வரும் என்பது அங்கு மூன்று தலைமுறையாய் இருந்து வருகிற நம்பிக்கை!

எப்போதும் அடைத்திருக்கிற சாவடியின் சட்டக்கதவுகள் பரக்கத் திறந்துவைக்கப் பட்டு கூட்டி மெழுகப்பட்டு பளிச் சென்று அன்று காட்சிதரும். சுவற்றடியில் சரஸ்வதி படம் மலர்மாலை அணிவிக்கபட்டு பக்கத்தில் மரத்தண்டு விளக்கும் முன்னால் பசுஞ்சாணிப் பிள்ளையாரும் அருகம்புல்லுடன் இருக்கும். ஐயா அதிகாலையிலேயே சுவடி தயாரித்து வைத்திருப்பார். பசுமைமாறி மஞ்சள் ஏறிய புதிய பனையோலை நறுக்குகள் நாலைந்தை இடது ஓரம் துளையிடப்பட்டு மட்டை நரம்பினால் கட்டி, எழுத்தாணியால் ஐயாவே 'அரிநமோத்து சிந்தம்; அரியே நம' என்று தொடங்கி 'அ' முதல் '·' வரை எழுதி வைத்திருப்பார்.

நல்ல நேரம் தொடங்கியதும் சட்டாம்பிள்ளை தலமையில் வரிசை வரிசையாகப் பிள்ளைகள் கிளம்பி புதிதாகச் சேரவுள்ள குழந்தையின் வீட்டுக்குப் போவார்கள். வசதியான பெரிய இடம் என்றால் மேள தாளத்துடன் குழந்தையை ஊர்வலம்போல் அழைத்து வருவார்கள். காப்பரிசி, பொரிகடலை, பழம் ஆகியவற்றைத் தட்டுக்களில் பெரிய பிள்ளைகள் சிலர் எடுத்துக் கொள்ள, தகப்பனார் மற்றும் உறவினர் உடன்வர பள்ளிக்கு வருவார்கள். வரும்போது சட்டாம்பிள்ளை 'சீதக்களபச் செந்தாமரைப்பூ.. ' என்று தொடங்கும் விநாயகர் அகவலையும் சரஸ்வதி துதியையும் உரக்கப் பாட எல்லாப் பிள்ளைகளும் கோரஸாகப் பாடி வருவார்கள். பள்ளிக்குள் வந்ததும், சேரவுள்ள குழந்தயை ஐயா 'வாங்க' என்று சிரித்த முகத்தோடு அழைத்துப்போய் உள்ளே கூடத்தில் பிள்ளையார் முன்னே போடப்பட்டுள்ள சின்ன மணையின்மீது உட்கார வைப்பார். பிறகு தேங்காய் உடைத்து நைவேத்யம் காட்டி, சரஸ்வதிக்கும் பிள்ளையா- ருக்கும் தீபம் காட்டி, குழந்தையை முன்னால் விழுந்து நமஸ்கரிக்க வைத்தபின் ஐயா அருகில் அமர்ந்து அட்சராப்பியாசம் தொடங்குவார். மஞ்சள்கொம்பையும் ரூபாய் நாணயத்தையும் குழந்தையில் கையில் கொடுத்து முன்னால் பரப்பியுள்ள நெல்லின்மீது ஐயா கையைப் பிடித்து 'அரி..... அரி.....' என்று உரத்துச் சொன்னபடி எழுதவைப்பார். குழந்தையும் கூடவே சொல்ல வேண்டும். இப்படி 'அ' தொடங்கி அக்கன்னா வரை எழுதி முடித்ததும், ஓலைச் சுவடியை எடுத்துப் பிரித்துப் படிக்கச் சொல்லித்தருவார். பிறகு குழந்தையை எழுப்பி ஐயாவுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும், தகப்பனார் மற்றும் வந்துள்ள பெரியவர்களுக்கும் நமஸ்கரிக்கச் செய்வார். எல்லோரும் திருந்£று பூச்¢ குழந்தையை ஆசசிர்வதிப்பார்கள். அய்யாவுக்கும் மற்ற ஆசிரியர்களுக்கும் தக்க மரியாதை செய்தபின் பிள்ளைகளுக்கு அவர்கள் வெகுநேரமாய் ஆவலோடு காத்திருக்கிற பொரிகடலையும், காப்பரிசியும் வழங்கப்படும்.

'சரி, கொண்டுபோய் விட்டுட்டு வாங்க! பையா, போய்ட்டு நாளைக்கு வந்துடணும்' என்று புதுப் பையனிடம் சிரித்தபடி ஐயா சொல்லுவார். பையனும் ஐயாவின் சிரிப்பை நிஜமென்று நம்பி, சிரித்தபடி தலையாட்டுவான். 'அதுதான் அவனிடம் ஐயா சிரிக்கிற கடைசி சிரிப்பு' என்று அவனுக்குத் தெரியாது பாவம்! அவனை அழைத்துக் கொண்டு பிள்ளைகள், முன்பு கிளம்பியது போலவே வரிசையாக, பாடியபடி அவன் வீட்டுக்குப் போவார்கள். வீட்டில் அவனை விட்டுவிட்டு, அனைவரும் உரத்தகுரலில்,

"ஓடாதே!
ஒளியாதே!
இட்டதே சோறும்
பெற்றதே கறியும்
உண்டு தூங்கிப்
பூசை முடித்து,
வெள்ளி முளைக்கப்
பள்ளிக்கு வாரும்!"

என்று மறுநாளைக்குப் பள்ளிக்கு வரச் சொல்லிவிட்டுத் திரும்புவார்கள்.

மறுநாள் புதுப்பையன் முதல் நாளைய ஐயாவின் சிரித்த முகத்தை நிஜமென்று நம்பி பள்ளிக்கு உற்சாகத்தோடு வருவான். ஐயாவின் மலர்ந்த முகம் மறைந்து போய் கடுகடுப்பும், மிரட்டலும் கொண்ட முகத்தை பார்த்ததும் அரண்டு போவான். மறுநாள் பள்ளிக்கு வரச் சிணுங்குவான். ஐயாவுக்குத் தகவல் தெரிந்ததும் சட்டாம்பிள்ளையும் இரண்டு பெரிய பையன்களும் அனுப்பப்படுவார்கள். அவர்கள் போய் அவனைத் 'தரதர' வென்று கதறக் கதறப் பள்ளிக்கு இழுத்து வருவார்கள். தொடர்ந்து அந்தப் பையன் மக்கர் செய்தால் ஐயா இரக்கமின்றி, இதற்கென்று வைத்திருக்கிற சின்ன விலங்குக் கட்டையைக் காலில் பிணைத்துப் பூட்டுப் போட்டுவிடுவார். ஒருநாள் முழுக்க அழுது, அடங்கிப் போய்விடுவான். காட்டிலிருந்து பிடித்து வந்த யானையைப் பழக்குகிற மாதிரிதான்! அந்தக் காலத்துப் பெற்றவர்கள் ஐயாவின் இந்த நடைமுறையை ஆட்சேப்¢ப்பதில்லை. ஐயா பிள்ளைகளின் நல்லதுக்குத்தான் எதையும் செய்வார் என்று பூரணமாக நம்பினார்கள். அதனால் ஐயாவின் ஆளுமையில் பிள்ளைகள் ஆரோக்கியமாய் உருப் பெற்று வெளியே வந்தார்கள்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Monday, January 24, 2005

உவமைகள் வருணனைகள் - 34

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள்: 34 : எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து:

1. முப்பத்திரண்டு குணங்களில் இரண்டு குணங்கள் தவிர மற்றவையெல்லாம் பிள்ளையிடத்தில் இருக்கின்றன என்பார்களே - அதாவது, தனக்காகவும் தெரியாது, ஒருத்தர் சொன்னலும் கேட்கமாட்டான் என்று - அது துரைச்சாவுக்குத்தான் பொருத்தமானது.

- 'புது மாட்டுப் பெண்' நாவலில்.

2. அவருடைய சம்சாரம் என்னவோ ரொம்பக் கட்டுப் பெட்டி. நிரக்ஷரகுக்ஷ¢. சடகோப அய்யங்காரே குடுமி வைத்துக் கொண்டிருக்கிற மனுஷர். குடுமி ஒரு பாபமும் பண்ணவில்லை. ஆனாலும் குடுமி வைத்துக் கொண்டிருக்கிறவர்கள் இம்மாதிரி முற்போக்கான விஷயங்களை ஆதரிப்பது அசம்பாவிதம் போல் ஏதோ ஒரு உணர்ச்சி நமக்குத் தட்டுகிறது. கிராப்புக்குத்தான் அவை பொருத்தமாக இருக்கின்றன.

- 'பத்மநாபன்' கதையில்.

3. சுகுமாரி என்றது எங்க வீட்டுக்காரி. சுகுமாரி என்ற பெயரைச் சுருக்கி 'சுக்கு' என்று நான் அவளைக் கூப்பிடுகிறது. பேருக் கேத்தாப்போல் அவள் கொஞ்சம் காரமாகவே இருப்பாள். அவள் வீட்டிற்கு வந்தது முதல் அவள் சொல்லுகிற பேச்சை நான் கேட்கிறது என்கிறதே தவிர நான் சொல்லுவதை அவள் கேட்கிறது என்பது என்னவோ கிடையாது.

- 'மூக்குத்திருகு'.

4. அந்தக் கணவனை கல்யாணத்துக்கு முன் அவள் முன்பின் அறிந்தவளல்ல. தற்கால கல்யாணங்களைப் போல் அவள் தகப்பனார் இரவாய்ப் பகலாய் ரெயில் பிரயாணம் செய்து, தந்தியும், தபாலுமாய்ப் பறக்க வைத்து, காசி முதல் ராமேஸ்வரம் வரையில் சல்லடை போட்டுச் சலித்து, அலுத்துப்போய்க் கடைசியாய்ப் பிடித்துக் கொண்டு வந்த சரக்கு அந்தப் புருஷன். கல்யாண காலத்தில் கோணியில் போட்டுத் தைக்கப் பட்டிருக்கும் சரக்கு போலவே இருந்தான். அவிழ்த்துப் பார்த்தால் 'ரேஷன்' அரிசி மாதிரி ஆய்விட்டாலும் ஆய்விடலாம். இந்த ரீதியில் ருக்மணிக்குச் சாரங்கபாணி புருஷன் ஆனான்.

- 'அங்குசம்'.

5. மாமியார் ரகத்தில் எத்தனையோ விதம். பிள்ளைக்கும் நாட்டுப்பெண்ணுக்கும் சண்டை மூட்டிவிட்டுப் பிள்ளை சம்சாரத்தை அடிக்கும்போது "அடே அப்பா கையால் அடிக்காதேடா! பெண் பாவம் பொல்லாது. பெண்ணைக் கைதீண்டி அடிக்கக் கூடாதுடா, ஒரு கட்டையாவது எடுத்துக் கொள்ளுடா!" என்று சொல்லுகிற மாமியார்களும் இருக்கிறார்கள். இன்னும் இம்மாதிரியே படிப்படியாய் எத்தனையோ ரகங்கள்.
பஞ்சாமியின் தாயார் இதிலொன்றிலும் சேர்ந்தவளல்ல.

- 'அம்மாவுக்கு ஜுரம்'.

6. பல் கட்டிக் கொண்டவர்கள் முகத்திலேயே ஒரு களை உண்டு. கொஞ்சம் அசட்டுக் களையானாலும் பரவாயில்லை. கடவுள் கொடுத்த பற்களைவிட இவைகள் நன்றாய்த் தான் இருக்கின்றன. இதனாலேயே கடவுள் அவ்வளவு வேலைக்காரர் இல்லை என்று தெரிகிறது.

- 'ருக்மணிக்கு வயிற்றிலே பல்'.

7. அவளுக்கு இப்போது வயது நாற்பத்தைந்து ஆயிற்று. அவள் பருமனும் மூஞ்சியின் கோரமும், ரிக்ஷாவில் உட்கார வேண்டுமானால் ரிக்ஷா போதுகிறதில்லை. ஒவ்வொரு கையும் ஆனை தும்பிக்கை மாதிரி இருக்கிறது. தலை உடம்போடு இறுகிப்போய்க் கழுத்தே இல்லை. இதில் குள்ளம் வேறு.

- 'புருஷர்களை நம்பக் கூடாது'.

8. எட்டு நாய்கள், ஒன்பது ஓநாய்கள், இருபத்தைந்து குள்ள நரிகள், மூன்று சிங்கங்கள், நான்கு புலிகள், ஐம்பது குரங்குகள் எல்லாம் சேர்ந்து ஒரே சமயத்தில் 'பீபில்ஸ் பார்க்கில்' ஊளையிட ஆரம்பித்தால் எப்படி இருக்குமோ அப்படியிருந்தது நம் வீடு. காரணம் காலையில் மணி ஏழாகியும் பால்காரன் இன்னும் வரவில்லை.

- 'பால்காரன்'.

9. விடாமுயற்சிக்குப் பகீரதனை உதாரணமாகச் சொல்லுவார்கள். பிச்சைக்காரர்களையும் சொல்லலாம். பிசைக்கு வந்தவன் பிச்சை வாங்காமல் போனால் அவன் அந்தத் தொழிலுக்கே புதியவனாக இருக்க வேண்டும். அல்லது அந்த வேலைக்கே லாயக்கில்லாதவனாக இருக்கவேண்டும். பிச்சைக்காரனை வீட்டை விட்டு அனுப்புவதற்கு ஒரே வழிதான் உண்டு; அதாவது பிசை போட்டு அனுப்பிவிடுவது. பிச்சை போடாமல் அவனை அனுப்பிவிடுவதற்கு எவ்வளவோ தந்திரங்கள் கற்றிருக்கவேண்டும். உருட்டல், மிரட்டல், பயமுறுத்தல் இவற்றால் ஆகிற காரியமில்லை.

- 'பிச்சைக்காரர்கள்.

10.ஜி.வி.டேவ் என்பவர் திவான்பகதூர் கருடாச்சாரியருடைய அருமைப் புதல்வன். ஆதியில் அவருக்கு வாசுதேவன் என்று நாமகரணம் செய்யப்பட்டிருந்தது. வெள்ளைக்காரர் நம்மை ஆளவந்த பிறகு இந்தியர்கள் என்று தெரியாவண்ணம் வெளித் தோற்றத்தை மாற்றிக் கொள்வதோடு நம்மவர்களுடைய ஆசை நிற்கவில்லை. பேரையும் மாற்றிப் பெருமை அடைவதில் நமக்கு உற்சாகம் ஏற்பட்டது. அந்த மோகத்திற்கு இணங்க வாசுதேவனுடைய பெயர் முதலில் உடல் குறுகி வி.தேவ் என்றாயிற்று. வெள்ளைக்காரப் பெயராய்த் தொனிப்பது மேலும் விசேஷம் என்று 'த' காரம் 'ட' காரமாய் மாறி வி.டேவ் என்றாயிற்று. ஜி என்பது அவன் தகப்பனார் கருடச்சாரியர் பெயரைக் குறிப்பது. இவ்வாறு, வாசுதேவன் ஜி.வி.டேவ் என்று பெருமையையும் ஆத்ம திருப்தியையும் விளைவிக்கும்படியான பெயயருடன் விளங்கி வந்தான்.

- 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் டேவ்'.

- தொடர்வேன்.

- அடுத்து ராஜம்கிருஷ்ணன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Tuesday, January 18, 2005

களஞ்சியம் - 15

எனது களஞ்சியத்திலிருந்து - 15 : விவேகசிந்தாமணி விருந்து - 4

ஆபத்தும் அழிவும்:

விவேகசிந்தாமணி நம்பிக்கை வறட்சியையே அதிகம் பேசுவதாகத் தோன்றும். ஆனால் நம்பிக்கை ஊட்டுவதும், அழிவு ஆபத்து பற்றி எச்சரிக்கை அளிப்பதுமான பாடல்களும் இருக்கின்றன. விரைந்து உயிர் இழக்கச் செய்வதான சில ஆபத்தான செயல்களை ஒரு பாடல் பட்டியலிடுகிறது.

அரவினை ஆட்டுவாரும், அருங்களிறு ஊட்டுவாரும், இரவினில் தனிப் போவாரும், எறியும் நீர் நீந்துவாரும், விரைசெறி குழலியான வேசியை விரும்புவாரும், அரசனைப் பகைத்திட்டாரும் ஆருயிர் இழப்பர்தாமே.

பாம்பை எடுத்து ஆட்டுபவர்களும், அரிய யானையை ஆட்டுவிக்கும் பாகர்களும், இரவிலே தனியே அயல் ஊர் செல்பவர்களும், நீர்நிலையில் நீந்துபவர்களும், மணமிக்க கூந்தலையுடைய வேசியரை விரும்புகிறவர்களூம், மன்னரைப் பகைத்துக் கொண்ட வர்களும் அதிலேயே தம் இன்னுயிரை இழப்பர்.

விரைவில் அழிந்துபோகக்கூடியவை எவை என்றும் ஒரு பாடல் எச்சரிக்கிறது:

மூப்பிலாக் குமரி வாழ்க்கை,
முனையிலா அரசன் வீரம்,
காப்பிலா விளைந்த பூமி,
கரையிலாதிருந்த ஏரி,
கோப்பிலான் கொண்ட கோலம்,
குருவிலான் கொண்ட ஞானம்,
ஆப்பிலாச் சகடு போலே
அழியும் என்று உரைக்கலாமே.

தனக்கு மூத்தவர் துணையில்லாமல் தனியே வாழும் இளம் பெண்ணின் வாழ்வும், கோபமில்லாத அரசனின் வீரமும், காவல் அற்ற விளைச்சலை உடைய நிலமும், கரை இல்லாத ஏரியும், தன்னிடம் இருக்க வேண்டியவை இல்லாதவன் கொள்ளும் டம்பமும், ஆசாரியன் இல்லாதவன் கொண்ட ஞானமும், அச்சாணி இல்லாத வண்டியைப் போல அழிவுக்கு ஆட்படும் என்று சொல்லலாம்.

இன்னொரு வகை ஆகாத செயல்களையும் ஒரு பாடலில் காணலாம்:

தந்தை உரை தட்டியவன், தாய் உரை இகழ்ந்தோன்,
அந்தம் உறு தேசிகர்தம் ஆணையை மறந்தோன்,
சந்தம் உறு வேதநெறி தாண்டின இந்நால்வர்
செந்தழலின் வாயினிடை சேர்வது மெய்கண்டீர்.

தந்தையின் சொல்லைக் கேளாது மீறி நடந்தவன், தாயின் சொல்லை இகழ்ந்து ஒதுக்கியவன், நல்ல குருவின் ஆணையை மறந்தவன், அழகிய வேத நெறிகளைக் கடந்தவன் ஆகிய இந்த நான்கு பேரும் சிவந்த அக்கினிவாயின் கண் அடைவது உண்மை என அறியவும்.

இயல்புக்கு மாறாக நடப்பதாலும் கேடு விளையும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:

நிட்டூரமாக நிதிதேடும் மன்னவனும்
இட்டதனை மெச்சா இரப்போனும் - முட்டவே
கூசி நிலை நில்லாக் குலக்கொடியும் கூசிய
வேசியும் கெட்டு விடும்.

குடிமக்களைக் கொடுமைப் படுத்தி நிதி திரட்டும் மன்னவன் அழிவான். தனக்கு அளித்த தானத்தைப் போதும் என்று பாராட்டாத யாசகனும் அழிவான். அயல் ஆடவனிடம் நெருங்கக் கூச்சமடைந்து கற்பு நிலையில் நில்லாத குலமகளும் கெடுவாள். தன்னை விரும்பி வந்தவரிடம் நெருங்கிப் பேசக் கூச்சப்படும் வேசியும் கெடுவாள்.

இப்படி இன்னும் பல எச்சரிக்கைகளையும் அறிவார்ந்த நெறி முறைகளையும் வரும் பாடல்களில் காணலாம்.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

Wednesday, January 05, 2005

களஞ்சியம்-14

எனது களஞ்சியத்திலிருந்து - 14: விவேகசிந்தாமணி விருந்து - 3:

செல்வமும் வறுமையும்:

விவேகசிந்தாமணி ஒரு யதார்த்த இலக்கியம். வாழ்க்கையில் நாம் அனுபவத்தில் காண்பவற்றையே ஒருஎச்சரிக்கை போல எடுத்துச் சொல்பவை அதன் பாடல்கள். செல்வம் இருப்பவர்க்கு நடைமுறையில் இருக்கும் மதிப்பும் அது இல்லாமல் போனால் ஏற்படும் சிறுமையும் பற்றி நிறைய சொல்லப்பட்டிருக்கிறது. செல்வம் ஒருவனுக்கு வாய்க்குமானால் உலகம் அவனுக்கு எப்படி மரியாதை தரும், அவன் வகை கெட்டுப் போனால் எப்படி அவனை நடத்தும் என்பதை ஒரு பாடல் சொல்கிறது:

பொன்னொடு மணி உண்டானால்
புலையனும் கிளைஞன் என்று
தன்னையும் புகழ்ந்து கொண்டு
சாதியில் மணமும் செய்வர்;
மன்னாராய் இருந்த பேர்கள்
வகைகெட்டுப் போவார் ஆகில்
பின்னையும் ஆரோ என்று
பேசுவார் ஏசுவாரே!

- ஒருவனுக்குப் பொன்னும் புகழும் உண்டானால், அவன் புலையன் என்று மக்களால் இழித்துரைக்கப் பட்டவன் என்றாலும் அவனைத் தம் உறவினன் என்று வலிந்து போய் உறவை ஏற்படுத்திக் கொண்டு தம்மையும் புகழ்ந்து கொண்டு தம்மைவிட உயர்ந்த சாதியில் திருமணமும் செய்து கொள்வார்கள். ஒரு காலத்தில் அரசராக இருந்தவர் பொருள் வரும் வழியற்றுக் கெட்டுப் போவார் எனின், 'அவர் யாரோ' என்று இழித்துப் பேசுவார்கள்.

(கிளைஞன் - உறவினன்)

இன்னொரு பாடல் 'பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்ற குறள் வாக்கை ஒட்டி, இவ்வுலகில் பொருள் இல்லாதவருக்கு என்னென்ன இல்லாமல் போகும் என்பதைப் பட்டியலிடுகிறது:

பொருள் இல்லார்க் கின்பம் இல்லை;
புண்ணியம் இல்லை; என்றும்
மருவிய கீர்த்தி இல்லை;
மைந்தரின் பெருமை இல்லை;
கருதிய கருமம் இல்லை;
கதிபெற வழியும் இல்லை;
பெருநிலம் தனில் சஞ்சாரப்
பிரேதமாய்த் திரிகு வாரே.

- இவ்வுலகத்தில் பொருள் இல்லாதவர்க்கு இன்பம் கிடையாது; புண்ணியம் ஏற்படுவதில்லை; பொருந்திய புகழ் விளைவதில்லை; மக்களால் பெருமை உண்டாவதில்லை; நினைத்தபடி ஒரு செயலை செய்து முடிக்க முடிவதில்லை; மோட்சம் பெறவும் வழி இல்லை; இந்தப் பெரிய உலகில் அவர் நடமாடும் பிணமாகமே திரிவார்கள்.

அப்படிப் பொருள் இருந்தாலும் அவரது நிலைமை தளர்ந்தால் என்ன ஆகும் என்பதையும் ஒரு பாடல் சொல்கிறது:

நிலை தளர்ந்திட்டபோது
நீணிலத்து உறவும் இல்லை;
சலம் இருந்து அகன்றபோது
தாமரைக்கு அருக்கன் கூற்றம்;
பலவனம் எரியும்போது
பற்று தீக்கு உறவாம் காற்று;
மெலிவது விளக்கே ஆகில்
மீண்டும் அக்காற்றே கூற்றாம்.

( சலம் - நீர்; அருக்கன் - கதிரவன், சூரியன் )

- நீர் நிறைந்த பொய்கையில் உள்ள தாமரை மலருக்கு நட்பாய் இருந்த கதிரவனே நீர் வற்றிய காலத்தில் அதற்குப் பகையாய் மாறி அழிப்பான். அடர்ந்த தீக் காடுகள் தீப்பற்றி எரியும்போது அத் தீயினுக்கு காற்று உதவியாய் நிற்கும். அதே தீ ஒரு சிறுவிளக்கைப் போலச் சுருங்கினால் அதே காற்று எமனாகி அந்தத் தீயினை அழித்து விடும். அதுபோல செல்வம் நிறைந்த காலத்தில் நெருக்கமாய் இருந்தவர்கள் அது தவறிய காலத்தில் உறவு நீங்கிப் பகைவர் ஆவார்கள்.

இப்படி செல்வந்தராயிருந்த ஒருவர் வறியவர் ஆக நேர்ந்தால் அவரது நிலைமை எவ்வளவு பரிதாபத்துக்குரியதாக மாறும் என்பதை ஒரு பாடல் மிக உருக்கமாகச் சொல்கிறது:

தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரம் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்;
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்:
உலகெலாம் பழிக்கும் தானே.

- ஒருவனுக்குத் தாங்க முடியாதபடி வறுமை வருமானால் நாலுபேர் கூடியிருக்கிற சபைக்குள் செல்ல மனம் வெட்கப்படும். வேங்கையைப் போன்ற அவனது வீரம் குறையும். விருந்தினர் வந்தால் அவரை எப்படி உபசரிக்கப் போகிறோம் என்று, அவரை எதிர் கொள்ள மனம் கூசும். பூங்கொடி போன்ற மென்மையான மனைவிக்கு - என்ன சொல்லி இழித்துரைப்பாளோ என - அஞ்ச வேண்டி வரும். அற்பர்கள் எல்லாம் மலினமாய்க் கருதி சகவாசம் கொள்ள விழைய, அவருக்கு இணக்கம் காட்ட நேரிடும். மென்மேலும் வளரவேண்டிய அறிவு குறையும். உலமெலாம் அவனைப் பழிக்கும்.

இப்படி இன்னும் பல நடைமுறை வாழ்வின் யதார்த்தங்களை விவேகசிந்தாமணி நூல் நெடுகச் சொல்லிக் கொண்டே போகிறது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.