Sunday, November 16, 2008

நினைவுத்தடங்கள் - 39

பின்னாளில் எனக்கு நாடகக்கலையில் ஆர்வம் குறைந்து போனது
என்றாலும் இளமையில் நான் பார்க்க நேர்ந்த உள்ளூர், வெளியூர் தெருக்கூத்துகள்,
நாடகங்கள் தந்த ரசனையால் அக்கலையில் ஒரு மோகம் இருந்தது. அதன்
காரணமாய் எங்கள் கிராமத்து இளைஞர்கள் நாடகம் கற்றுக்கொண்ட போது
அவர்களுக்காக சில காட்சிகளை எழுதவும், கல்லூரி நாட்களில் விடுதி விழாக்
களுக்காக வானொலி நாடகங்கள் எழுதவும் நேர்ந்தது.

ஒரு டிசம்பர் விடுமுறையில் நான் ஊர் வந்திருந்தபோதுதான் ஆர்வ
மிகுந்த சில இளைஞர்கள் நாடகக்குழு ஒன்றை ஆரம்பித்திருந்தார்கள். எங்கள்
எதிர் வீட்டுக்காரர் - நடுத்தர வயதைக் கடந்தவர் - ஒருவர்தான் அமைப்பாளர்,
வழிகாட்டி. அவர் எங்கு நாடகமோ, தெருக்கூத்தோ, டெண்ட் கொட்டகை
சினிமாவோ நடந்தாலும் அவற்றைத் தவறாது பார்த்துவிட்டு வந்து வசனம்,
பாடல்கள், நடிப்பு எல்லாவற்றையும் அச்சு அசலாய் ஊர் விடலைப் பையன்
களுக்குச் சொல்லிக் காட்டியவர். அதனால் அவர் பொறுப்பில் எல்லாவற்றையும்
விட்டிருந்தார்கள்.

'சிறுத்தொண்ட நாயனார்' கதை முதல் நாடகமாகத் தேர்வு செய்யப்பட்டு ஒரு நாடக வாத்தியாரையும் எங்கிருந்தோ அழைத்து வந்திருந்தார்கள். அவர்
தோற்றத்தில் நாடக ராஜபார்ட் போல பாகவதர் கிராப்புடன் இருந்தாலும் ஆசாமி
படுகிழம் என்பதில் இளைஞர்களுக்கு அவரிடம் நம்பிக்கை எழவில்லை. ஆனால்
அமைப்பாளர் அவர் நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை நாடக சபாவில் நடிகர்களுக்கு வெகுகாலம் பயிற்சியளிப்பவராக இருந்தவர் என்றும் முதுமையால் அதிலிருந்து
விலகி விட்டதாவும் அவர் மிகுந்த அனுபவசாலி என்றும் சொல்லி அவர்களைச்
சமாதானப் படுத்தினார். ஆனாலும் அவர் சிவாஜிகனேசன், எம்.ஜி.ஆர் போன்றவர்
களுக்கெல்லாம் நடிப்பு சொல்லிக் கொடுத்திருப்பதாகச் சொன்னதை மட்டும்
அவர்கள் நம்பவில்லை. ஆனால் அப்புறம் சில மாதங்களுக்குப் பிறகு சிவாஜிகணே
சனின் மகளின் திருமண அழைப்பு அவருக்கு வந்த போது கொஞ்சம் அசந்துதான்
போனார்கள்.

நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு அவரவர்க்குரிய வசனங்கள் எழுதிக்
கொள்ளப் பட்டு ஒத்திகை ஆரம்பமானபோது என்னைப் பார்வையாளராக அமைப்
பாளர் அழைத்திருந்தார். அப்போதுதான் நான் பத்திரிகைகளில் எழுத ஆரம்பித்
திருந்தேன். அதையும் எனது நாடக ஆர்வத்தையும் அறிந்திருந்ததால் என்னை
வந்துபார்த்து யோசனை சொல்லுமாறு அழைத்திருந்தார். நாடகத்தின் ஆரம்பக்
காட்சியில், பல்லவமன்னரிடம் சேனாதிபதியாய் இருந்த பரஞ்சோதி வாதாபிப்
போருக்குப் பிறகு சிவத்தொண்டு செய்யத் தன்னை விடுவிக்குமாறு கேட்டதையும்,
அதன்படி நரசிம்ம பல்லவர் அவரை விடுவித்து சிவத்தொண்டுக்கு அனுப்பியதையும்
சேர்க்கலாம் என்று சொன்னேன். அவர்களது நாடகப் பிரதியில் அது இல்லை.
அமைப்பாளர் அந்தக் காட்சியை நீயே எழுதிக்கொடு என்று கேட்டுக் கொண்டார். இப்படித்தான் எனது நாடக எழுத்து ஆரம்பமாயிற்று. அந்தக் காட்சியை எழுதிக்
கொடுத்ததோடு தர்பார் சீனில் ஒரு நாட்டிய நிகழ்ச்சியைச் சேர்க்கவும் யோசனை
சொன்னேன். அப்போது நடனம் ஆடுவதில் அதீத ஆர்வமும் திறமையும் கொண்ட
ஒரு வெளியூர் இளைஞருக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதற்காக ஒரு
நாட்டியப் பாடலும் எழுதிக் கொடுத்தேன். அப்போது 'பராசக்தி' படம் வெளியாகி
அதன் பாடல்கள் பிரபலமாக இருந்த நேரம். அந்தப் படத்தில் வரும் 'ஓ ரசிக்கும்
சீமானே.......!' என்ற பாடல் மெட்டில் 'ஓ இனிக்கும் தமிழே...!' என்று தொடங்கும்
பாடலை எழுதித் தந்தேன். அதோடு நாடகத்தின் நடுவில் நகைச்சுவை நடிகன் பாட, ஏ.வி.எம்மின் 'வாழ்க்கை' படத்தில் வரும் 'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பம்
கொண்டாடுதே' என்ற மெட்டில்,

'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் துன்பமிகவாகுதே
எண்ணைக்குத்தான் கோடைகாலம் போகுமிண்ணு தோணுதே
தண்ணித் தண்ணி தண்ணியின்னு தவியாய்த் தவிக்குதே
தாகத்துக்கு ஐஸ்போட்ட ஆரஞ்சுன்னு கேட்குதே!'

என்று ஒரு பாடலும் எழுதிக் கொடுத்தேன். இதன் மூலம் பாடல் ஆசிரியராகவும்
ஆனேன்.

நாடக ஒத்திகையின்போது நாடகவாத்தியாரை மிகவும் படுத்திவிட்டார்கள். கிராமம் என்பதால் சமூக ஏற்றத்தாழ்வின் பிரச்சினையால் சின்னச் சின்ன சிக்கல்கள்
எழுந்தன. சிறுத்தொண்டர் பாத்திரத்துக்கு தேர்வு செய்யப் பட்டிருந்தவர், மேல்
ஜாதிக்காரர். நரசிம்ம பல்லவன் பாத்திரத்துக்குத் தேர்வு செய்யப்பட்டவர் மேல்ஜாதி வீடுகளில் ஊழியம் செய்யும் கீழ்ஜாதிக்காரர். நரசிம்மபல்லவர், 'சேனாதிபதி!' என்று
விளிக்கும்போது, பரஞ்சோதி தலை வணங்கி, 'சக்கரவர்த்தி!' என்று பேசவேண்டும்.
ஆனால் மேல் ஜாதிக்காரரான நடிகர், 'ஏன் ராஜன்?' என்றுதான் கேட்பேன், 'இந்த .......ஜாதிப்பயலை 'சக்கரவர்த்தி' என்று அழைக்கமாட்டேன், தலைவணங்கியும் பேச
மாட்டேன்' என்று பிடிவாதம் பிடித்தார். பாவம் நாடக வாத்தியார்!. அவரால் சமாளிக்க முடியவில்லை. பிறகு நான் தலையிட்டு 'பரஞ்ஜோதி'க்கு அது நடிப்புதான், அதனால்
கௌரவப் பிரச்சினை இல்லை என்று சமாதானப் படுத்தினேன். இப்படி பல
இடைஞ்சல்கள் வாத்தியாருக்கு! வயிற்றுப் பிழைப்பை எண்ணி சகித்துக் கொண்டார்.

நாடகம் நடந்தபோது பரஞ்ஜோதியின் ஒப்பனையிலும் சம்பந்தப்பட்டவர்
ஒரு விசித்திரம் செய்தார். தலையில் தளபதிக்கான தலைப்பாகையை வைத்துக்
கொண்ட அவர், தளபதிக்கான அங்கிகளையும் அட்டைக் கவசங்களையும் அணிய
மறுத்து நாடகத்துக்காக அவர் மாமனார் தைத்திருந்த பேண்டும் புஷ் ஷர்ட்டும்
அணிந்து இடதுகையில் புதுவாட்சும் காலில் கட்ஷ¥வுமாய் தர்பார் சீனில்
நுழைந்தார். இப்படி ரசமான வினோதங்கள் நிறைய கிராமத்து நாடகங்களில்!

நாடகத்துக்கு இடையிடையே 'குறவன் குறத்தி' போன்ற துக்கடா
நிகழ்ச்சிகள் நடக்கும். இதை 'சில்லரை' என்பார்கள். மரபான இந்த 'சில்லரை'
களிலிருந்து ஒரு மாற்றமாய் உள்ளூர் ஆரம்பப்பள்ளி மாணவர்களை வைத்து நான்
எழுதித் தயாரித்திருந்த 'சாணக்கியன் சபதம்' என்கிற சின்ன ஒரங்க நாடகத்தை
மக்கள் மிகவும் ரசித்தார்கள். இதே போல நாடகம் நடந்த மூன்று நாட்களுக்கும்
கலைஞர் கருணாநிதி எழுதி சிவாஜி நடித்த 'சாக்ரடிஸ்', 'சாம்ராட் அசோகன்"
ஆகியவற்றையும் பள்ளிப் பிள்ளைகளைக் கொண்டு தயாரித்து இடைவேளைகளில்
மேடை ஏற்றினேன்.

அவற்றிற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்ததால் முழு நேர நாடக
மாக ஒன்றை தனியாக ஒருநாள் நடத்திக் காட்ட ஆசைப்பட்டேன். அது நவீன
நாடகம் போல் மூன்று மணி நேரத்தில் சினிமா பாணியில் பாட்டு, நடனம் குறை
வாகக் கொண்டதாக நடத்த முடிவு செய்தேன். அப்போது கல்லூரிக் கோடை
விடுமுறைக்காலம் என்பதால் மூன்று மாத அவகாசம் கிடைத்தது. முன்பு சிறுவர்
களைக் கொண்டு நடத்திய சாணக்கியன் சபதம் செய்யும் காட்சியை மட்டும்
கொண்ட பிரதியை விஸ்தரித்து மூன்றுமணி நேர நாடகம் அளவுக்கு 'சாணக்கியன்
சபதம்' என்ற பெயரிலேயே எழுதி முடித்தேன். நடிகர்களுக்கு - நிறையப் பேர்
ஆசைப்பட்டும், ஓரளவு படித்தவர்களாகத் தேர்வு செய்தேன். அதுவரை நான் நடித்த
தில்லை என்றாலும் நானும் ஒரு முக்கிய பாத்திரம் ஏற்று நடிக்க முடிவுசெய்தேன்.
நாடக வசனங்கள் எழுதிக் கொடுக்கப்பட்டு ஒத்திகைக்குள் மனப்பாடம் செய்துவிட
நடிகர்களுக்குச் சொல்லி விட்டு ஒத்திகைக்கான இடத்தை ஏற்பாடு செய்வதில்
முனைந்தேன். எங்களுக்குச் சொந்தமான கூரைக் கொட்டகை ஒன்று ஏர், கலப்பை முதலியவற்றைப் போட வைத்திருந்ததை ஒழித்துச் சுத்தம் செய்து தரையை சாண
மிட்டு மெழுகி புழங்கும் இடமாக ஆக்கினேன்.

நாடக ஒத்திகைத் தொடங்கியது. இரவு 8 மணிக்கே உணவை முடித்துக் கொண்டு நடிகர்களை வரச் செய்திருந்தேன். முதல் நாள் ஒத்திகையே வேடிக்கையும், ந¨ச்சுவையும் நிரம்பியதாக இருந்தது. சாணக்கியன் நடந்து வரும்போது கட்டைப்
புல் தடுக்கி விழும் காட்சி. சாணக்கியன் கோபத்துடன் தன்னை விழச்செய்த கட்டைப் புல்லைப் பிடுங்கி அதனிடம் உச்சுக் கொட்டியபடி "ஏ கட்டைப்புல்லே....!" என்று
பேசவேண்டும். சாணக்கியராக நடிப்பவர் கட்டைப்புல் கையில் இருக்கும் பாவனை
யுடன்,"த்சோ! த்சோ! ஏ கட்டைப்புல்லே....." என்றார். எனக்கு நான் எழுதியதாக இல்லாமல் வசனம் வித்தியாசமாகப் படவே, "இருங்க..இருங்க..! அதென்ன த்சோ..
த்சோ?'' என்றேன். "நீங்கதான் சார் எழுதி இருக்கீங்க" என்றார் நடிகர். "எங்கே
காட்டுங்க" என்று பிரதியை வாங்கிப்பார்த்ததும் எனக்குச் சிரிப்பு வந்து விட்டது.
உச்சுக் கொட்ட அடைப்புக் குறிக்குள் நான் எழுதிக் கொடுத்ததையும் அவர் மனப்
பாடம் செய்திருக்கிறார். இப்படியாக முதல் நாள் ஒத்திகை இரவு 12 மணிவரை
நடந்து முடிந்தது. "சரி, நாளைக்கும் இதே மாதிரி நேரத்துக்கு வந்து விடுங்கள்"
என்று எல்லோரையும் அனுப்பி விட்டு வீட்டுக்கு வந்தேன் - மறுநாள் ஒத்திகை
நடக்கப்போவதில்லை என்பதை அறியாமல்.

நான் இரவில் திண்ணையில்தான் படுப்பதால் நான் நடுநிசிக்குமேல் படுக்க வந்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. காலையில் தாமதமாக எழுந்தபோது அப்பா வயல்காட்டுக்குப் போயிருந்தார்கள். பல்துலக்கி காபி சாப்பிடும்போது அம்மா
ஆரம்பித்தார்கள். ''ராத்திரி எப்ப படுக்க வந்தே?"

"ஏன்? பத்து மணிக்கு மேலே ஆயிட்டுது." என்றேன்.

"மணி பன்னண்டு வரைக்கும் நீ வராதத அப்பா பாத்துட்டு எங்கே
போயிருக்கேன்னு கேட்டாங்க. எங்கிட்ட சொல்லிட்டா நீ போனே? எனக்குத்
தெரியாதுன்னு சொன்னேன். ஆனா ஆரோ சொல்லித் தெரிஞ்சிருக்கு நீ நாடகம்
போடறது. அப்பா ரொம்ப வருத்தப்படுறாங்க"

"ஏம்மா! அதுலே என்னா?"

"அதுலே என்னாவா? நம்ம மானமே போயிடுச்சிங்கிறாங்க அப்பா. நம்ம குடும்ப கௌரவம் என்ன, அந்தஸ்து என்ன? இன்னார் வீட்டுப்பையன் கூத்தாடு
றான்னா....? ஊருக்குப் பெரிய குடும்பம், பரம்பரையா நாட்டாமக் குடும்பம் ஒன்னாலே கூத்தாடிக் குடும்பம்னு பேசணுமா? அப்பாவுக்குப் பிடிக்கலே! படிக்கிற வயசிலே
என்னா கூத்தாட வேண்டியிருக்குங்கிறாங்க. நீ கெட்டுப்போறதும் இல்லாமே ஊரான் வீட்டுப் பிள்ளைகளையும் கூத்தாடக் கூப்பிடுறதும் பேச்சுக்கு எடமாயிடும்னு அப்பா
வுக்குக் கவலையா இருக்கு. இன்னியோட அந்தக் கூத்தைத் தல முழுகிடு. அப்பா மனசு நோகிற மாதிரி பண்ணாதே"

எனக்கு இடி விழுந்தமாதிரி இருந்தது. என் ஆசைக்கு இப்படி ஒரு தடை
வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அப்பா படித்தவர்கள்; முற்போக்கு எண்ணம் உடையவர்கள். அவர்களுக்கு எப்படி இதைக் கொச்சைப்படுத்த முடிகிறது?

மனம் கசந்து வெளியே வந்தேன். அப்போது நாடக முயற்சியில் எனக்கு
உறுதுணையாய் நிற்கும் நண்பர் வந்தார். அவரிடம் சொல்லி ஒரு பாட்டம் அழலாம்
என்று நிணைத்த போது அவரே ஆரம்பித்தார். நாங்கள் நாடகம் நடத்துவதைக் கௌரவக் குறைவாக, நடிக்கும் பையன்களின் பெற்றவர்கள் பலர் நினைப்பதாகவும் அவர்கள் தங்கள் பிள்ளைகளை இனி அனுப்பமாட்டர்கள் என்றும் சொன்னார். நான்
நொந்து போனேன். அதோடு என் நாடக ஆசை அற்பாயுளில் மரித்தது.

--- 0 ---