Monday, March 25, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து......22. வல்லிக்கண்ணன் – ‘வல்லிக்கண்ணன் கடிதங்கள்’



    தை எழுதுவது எனக்குப் பிடிக்கும். அதைவிட அதிகம் பிடிக்கும் கடிதங்கள் எழுதுவது.

     கதை எழுதினால், அது அச்சாக பத்திரிகையைத் தேடவேண்டும். அப்படியே கதை அச்சில் வந்தாலும் அதை எத்தனை பேர் படித்து ரசிப்பார்கள் என்று சொல்வதற்கில்லை.

     சில கதைகள் எவராலும் படிக்கப்படாமலே கூடப் போகலாம்.  ஆனால் கடித விஷயம் அப்படி அல்ல. அதைப் பெறுகிறவர் அதைப் படித்தே தீர்வார். அவர் அதில் உள்ள விஷயங்களை ரசித்து மகிழ்கிறாரா, படித்து விட்டு வெறுப்போ கோபமோ அல்லது வேறு ஏதோ உணர்ச்சி கொள்கிறாரா என்பது வேறு விஷயம். எழுதி அனுப்பப்படும் கடித்துக்கு நிச்சயமாக  ஒரு வாசகர் உண்டு. எனவே நான் கடிதங்கள் எழுதுவதில் மிகு விருப்பமும் ஈடுபாடும் கொண்டேன்.

     நான் அதிகம் பேசுகிறவன் அல்லன். ஆனாலும் கடிதங்களில்தான் நான் அதிகம் பேசினேன். நான் கண்டது, கேட்டது, படித்தது, படிக்க விரும்பியது, எனது கனவுகள், ஆசைகள், பயணங்கள், எனக்குப் பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள், என்னைச் சுற்றிலும் நடந்தவை நடந்ததாகப் பிறர் சொன்னவை – இப்படி சகல விஷயங்கள் பற்றியும் நான் என் கடிதங்களில் பேசுவது உண்டு. ஆகவே, என் கடிதங்களை வரப் பெற்றவர்கள் அவற்றை மேலும் எதிர்பார்த்தார்கள்.

            நான் என் அண்ணாவுக்கு எழுதினேன். அன்புச் சகோதரர் தி.க.சிவசங்கரனுக்கு நிறைய நிறைய எழுதினேன். நான் வெளி உலகத்தில் திரியத் தொடங்கிய 1943ஆம் வருடம் முதலே இவர்களுக்கு எழுதினேன். பிற நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியதவர்கள், என்னோடு தொடர்பு கொண்டு பல்வேறு தகவல்கள் – விளக்கங்கள் பெற விரும்பியவர்கள் என்று எண்ணற்ற பேர்களுக்குக் கடிதங்கள் எழுதினேன்.

     என் கடிதங்கள் தங்களுக்கு உற்சாகம் ஊட்டுகின்றன என்றார்கள். சந்தோஷமும், நம்பிக்கையும், ஆறுதலும் தருகின்றன என்றார்கள். இலக்கியம், புத்தகம், பத்திரிகைகள், எழுத்தாளர்கள், மனிதர்கள் பற்றி சுவையான விஷயங்களைத்  தெரிந்து கொள்ள அவை உதவுகின்றன என்றார்கள்.

     என்மீது அன்பு கொண்டு தங்கள் புத்தகங்களையும் சிறு பத்திரிகை களையும், தொடர்ந்து பலரும் அனுப்பலானார்கள். புத்தகங்களைப் படித்து விட்டு என் அபிப்பிராயத்தை அவர்களுக்கு எழுதினேன். பத்திரிகைகளைப் பாராட்டியும் வாழ்த்தியும் எழுதினேன். அவை தங்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிப்பதாக அதைப் பெற்றவர்கள சொன்னார்கள்.

புத்தகம் – பத்திரிகை அனுப்பினால் வரப்பெற்றேன் என்று கடிதம் எழுதித் தெரிவிக்கக் கூட மனமில்லாத எழுத்தாளர்கள் பெருத்த இந்த நாட்டிலே கிடைத்த்தும் படித்து விட்டு கடிதம் எழுதுகிற என் பண்புக்காக மகிழ்ச்சி அடைந்தவர்கள், கடித வாசகங்களை தங்கள் பத்திரிகைகளிலும் பத்தகங்களிலும் அச்சடித்து மகிழ்ந்தார்கள்.

இவன் எல்லோரையும், எல்லாவற்றையும், எப்பவும் பாராட்டிக் கொண்டிருக்கிறான் என்று எழுத்துலகத்தைச் சேர்ந்தவர்கள் பரிகசிக்கலானார்கள்; குறை கூறினார்கள். ஆனாலும், என் கடிதங்களை எதிர்பார்த்து எனக்கு வரும் பத்திரிகைகள், புத்தகங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன.

இச்சிறு தொகுப்பில் உள்ளவை வல்லிக்கண்ணன் கடிதங்களின் சிறிய ‘சாம்பிள் தான். பல்வேறு ரசங்களையும், சுவைகளையும், குணாதிசயங்களையும் கொண்ட எண்ணற்ற கடிதங்கள் – தி.க.சிவசங்கரன், ‘முத்தமிழ் கலாவித்வ ரத்ன அவ்வை டி.கே.சண்மும், எழுத்தாளர் ஆதவன்(கே.எஸ்.சுந்தரம்), வண்ணதாசன் மற்றும் சில நண்பர்களுக்கு, வெவேறு காலகட்டங்களில் எழுதப்பட்டவை – கால வெள்ளத்தோடு அடிபட்டுப் போனவைதான்.  ‘இழப்பு கணக்கில் எழுதப்பட வேண்டியவை அவை.

வல்லிக்கண்ணன்.

    


Monday, March 18, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 21. இரா.முருகன் - ‘மூன்றுவிரல்’



    ற்ற எந்தத் தொழிலில இருப்பவர்களையும்விட முழுக்க முழுக்கக் கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுகிறவர்கள் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம்.

     கணினி மென்பொருள் தொழில்நுட்ப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச கவன ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் – இந்தியச் சராசரி வருமானத்தைவிடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் – வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாப்டவேர் இஞ்சினீயர்களைப் பற்றிப் பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கிரம் தரைக்கு வந்துவிடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்மந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கி இருந்தேன்.

            ஆனால் தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான  படிமத்தை உடைத்து அந்த்த் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில்சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்க வேண்டி இருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன் வைக்க உத்தேசித்தேன்.

     நண்பர் பா.ராகவன் திடீரென்று தொலைபேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிகையின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டதோடு, அது கம்ப்யூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.

     ‘ஐந்து நிமிடத்தில் திரும்ப ஃபோன செய்யறேன்.......தலைப்பைச் சொல்லுங்க.

     நான் என் கம்பஃயூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜெக்ட் மானேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்கு பிரிப்புக்கு இடையே என்ன காரணத்தாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்றுபோக  நான் அதைத் திரும்ப இயங்க வைக்க ரீபூட் செயது கொண்டிருந்தபோது  உதயமான தலைப்புதான் ‘மூன்று விரல்

     திடீரென்று இயக்கம் மறந்து உறைவதும், திரும்பச் செயல்படத் தொடங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமில்லை, அதோடு சம்பந்தப்பட்டவர்களின் வாழ்க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது.

     இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள. ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் துனிநாக்கு ஆங்கிலமுமாக சூயிங் கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள். 

     ‘அவனா...... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு, லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்...... என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு கிடக்கானாம்...... நல்லா வேணும் என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கு இலமே!

     இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் அனுபவம், எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் ‘மூன்று விரல் இல்லை.

     எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.

     இந்த முன்னுரையையும் இதோடு முடித்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

அன்புடன்
இரா.முருகன்.

Monday, March 11, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து.... 20 அ.முத்துலிங்கம் – ‘மகாராஜாவின் ரயில் வண்டி’.



கீத் மில்லர் சொல்கிறார், “உண்மையான கதைகளை எழுத வேண்டாம். யாரும் நம்பமாட்டார்கள். உண்மைத் தன்மையான கதைகளை எழுதுங்கள்.

அப்படித்தான் இந்தக் கதைகளும். எல்லாமே உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் கணிசமான அளவு கற்பனை வாசகம் கலக்கப்பட்டவைதான். கீத்மில்லர் சொன்னதுபோல் உண்மைச் சம்பவங்களை எழுதினால் யார் நம்பப்போகிறார்கள்?

நாலு வருடங்களாக எழுதிச் சேர்த்தவை இவை. ஆப்பிரிக்கா, கனடா, பொஸ்னியா, பிரான்ஸ், அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை என்ற உலக நாடுகளின் பின்னணியில் எழுதப்பட்டவை.

வார்த்தைகளே என் கதைகளுக்கு ஆரம்பம். நடுநிசியில் அபூர்வமாக ஒரு வார்த்தை வந்து என்னைக் குழப்பிவிடும். அது என்னை வசீகரிக்கும்; சிந்திக்க வைக்கும்; பிறகு ஆட்கொள்ளும் அப்படித்தான் தொடக்கம்.

ஜீன் ஜெனே என்ற பிரபல பிரஞ்சு எழுத்தாளர் சொலகிறார்: ‘வார்த்தை என்ற ஒன்று இருந்தால் அது உபயோகப்படுத்தப்பட வேண்டும். இல்லையென்றால் அது கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாது; ஒரு வார்த்தை அரைகுறை வயதாக அழிய நேரிடுவது சோகமானது; உயர்ந்த கலைஞனின் பங்கு எந்த வார்த்தைக்கும் அதன் மதிப்பை உயர்த்துவதுதான்.

சிலர் வேறு மாதிரி. எனக்குத் தெரிந்த ஒருவர் வித்தியாச மானவர். மை படாத ஆறு தாட்களை எடுத்துக்கொண்டுபோய் மேசையில் குந்துவார். அப்படியே நிறுத்தாமல் எழுதிக்கொண்டு போவார். பேப்பர் முடியும் போது கதையும் முடிந்து விடும். ‘இது எப்படி? என்று கேட்டால் ‘கதையை அது தொடங்கும்போது ஆரம்பித்து, அது முடியும்போது முடித்துவிட வேண்டும்என்பார். நானும் புரிந்ததுபோல தலையை ஆட்டுவேன்.

சிறுகதை படைப்பது அவ்வளவு இலகுவான காரியமா?
என் நண்பர் ஒருவர் பிற மொழி எழுத்தாளர்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் படைத்த மிகச் சிறந்த கதைகளைத தமிழில் மொழிபெயர்ப்பதில் ஈடுபட்டிருந்தார். அந்த முயற்சிக்கு உதவுவதற்காக நான் ஒரு 200 வெளிநாட்டுக் கதைகளைப் படிக்க வேண்டி வந்தது. இந்தக் கதைகள் உலகத்துச் சிறந்த எழுத்தாளர்களால் படைக்கப்பட்டு வாசகர்களாலும், விமர்சகர்களாலும் உன்னதமானவை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டவை. அந்த அற்புதமான குவியலில் இருந்து இருபது கதைகளை மாத்திரம் தெரிவு செய்ய வேண்டிய கட்டாயம் எனக்கு.

அந்தத் தொகுப்பில் கதாசிரியர்கள் பற்றிய குறிப்புகளையும், கதைகளின் பின்னணி பற்றி ஆசிரியர்களது உரைகளையும் பின்னிணைப்பாகக் கொடுத்திருந்தார்கள். 

அவற்றிலிருந்து இரண்டு உண்மைகள் எனக்குப் புலப்பட்டன. ஒன்று அந்தக் கதைகளை எழுதிய ஆசிரியர்களில் பெரும்பான்மை யானவர்கள் சிருஷ்டி இலக்கியத்தைப் பாடமாக எடுத்தவர்கள், அதைக் கற்பித்தவர்கள், பட்டறைகளில் பங்கேற்றவர்கள். இரண்டு எல்லோருமே அந்தக் கதைகளைப் பல மாதங்கள் செலவழித்து உருவாக்கி இருக்கிறார்கள். ஒருவராவது ஒரே அமர்வில் எழுதி முடிக்கவில்லை. ஜூம்பா லாகிரி என்ற இளம் எழுத்தாளர், புலிட்ஸர் பரிசு பெற்றவர், தான் அந்தக் கதையைத் திட்டமிடுவதற்காகப் பல மணி நேரங்களை நூலகத்தில் செலவழித்ததாகச் சொல்கிறார். அதை முடிக்க அவருக்கு ஆறு மாத காலம் பிடித்ததாம். இன்னொரு எழுத்தாளர் ஹாஜின், 1999ஆம் ஆண்டின் National Book Award பெற்றவர், தனக்குக்  குறிப்பிட்ட கதையை எழுதுவதற்கு ஒரு வருட காலம் எடுத்ததாகக் கூறுகிறார்.

இவற்றைப் படித்தபோது எனக்கு மிகுந்த ஆசுவாசம் ஏற்பட்டது. இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒரு கதையாவது ஒரு மாதத்திற்கும் குறைவான நேரத்தில் எழுதப்படவில்லை. நாலு வருடத்து உழைப்பு இவ்வளவு சொற்பமாக இருப்பதன் காரணம் ஆமை வேகத்தில் செயல்பட்ட என் படைப்பு முயற்சிகள்தான். வேகதில் என்ன சாதனை? தரம்தான் முக்கியம். அதை வாசகர்கள் தீர்மானிக்க வேண்டும்.


பிரியமுடன்,
அ.முத்துலிங்கம்.
19 நவம்பர் 2001.

Monday, March 04, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து...........19. வெங்கட் சாமிநாதன் – ‘இன்னும் சில ஆளுமைகள்’



துவும் சூன்யத்தில் பிறப்பதில்லை. சூன்யத்தில் வாழ்வதுமில்லை. எந்தப் படைப்பும் படைத்தவனிடமிருந்து பெற்றதை உடன் எடுத்துக் கொண்டுதான் வருகிறது. படைத்தவன் குணத்தை அது பிரதிபலிக்கும். அல்லது அவன் எண்ணத்தைப் பிரதிபலிக்கும். படைத்தவனும், அவன் எண்ணங்களும் குணமும்  மறுபடியும் சூன்யத்தில் பிறந்த்தில்லை.அதற்கும் முதிய தடங்களைக் காட்டும் சங்கிலித் தொடர் பின்னோக்கிப் போய்க் கொண்டே இருக்கும். அது போலத்தான் படைப்பின் முன்னோக்கிய வாழ்வும். தான் ஒரு வரலாற்றோடு வந்தாலும், வந்தபின் தனித்து விடப்பட்டு அவ்வக்காலத்து சூழ்நிலைக்கு ஏற்ப இன்னொரு வரலாற்றை அது உருவாக்கிக்கொண்டே போகிறது. சூனயத்தில் பிறப்பதுமில்லை. சூனயத்தில் வாழ்வதுமில்லை.

இப்படிச் சொல்லிக்கொண்டே போனால் இன்றைய அரசியல்வாதிகளின் வாய்ப்பந்தல் போலாகிவிடும் அபாயம் உண்டு. குறள் எழுதக் காரணமான வள்ளுவனின் நிர்ப்பந்தங்கள கட்டாயம் உண்டு. நாம் பலவாறாக ஆராய்ந்து தற்காலிகமாக யூகித்துப் பலவற்றைச் சொல்லலாம். அது போக அதன் அர்த்தங்கள் எனவும் நிறைய நம் அப்போதைய தேவைகளுக்கு ஏற்ப பல சொல்வோம். வள்ளுவன் எழுத நேர்ந்த நிர்ப்பந்தங்களும் அவன் ஒவ்வொரு குறளுக்கும் கொண்ட அர்த்தங்களும், இடைப்பட்ட நூற்றாண்டுகள் பலவற்றின் நீட்சியில் அதற்குத் தரப்படும் அர்த்தங்களும் இன்று வள்ளுவனும் குறளும்  அர்த்தம் என்னவாக இருந்தாலும் பெறும் பயன்பாடும் வள்ளுவனாலோ குறளாலோ தீர்மானிக்கப்படவில்லை. நம் தேவைகளால் தீர்மானிக்கப் படுகின்றன. அப்படித்தான் எல்லாமே. அவன் ஏட்டுச்சுவடியில் எழுதும்போது  அவனுக்கு இருந்த தேவையும், இன்று பேருந்துகளில் நாம் காணும் குறள் எழுத நேர்ந்த  தேவையும் ஒன்றாக இருக்குமா?

என்னால் எதையும் அதன் சூன்யத்தில் பார்க்க, படிக்க, புரிந்து கொள்ள முடிவதில்லை. வார்த்தை விழும்போதே அதன் குரலுக்கு முன்னும் பின்னுமுள்ளதெல்லாம் அந்த வார்த்தைகளோடு சேர்ந்து விஸ்வரூபம் கொண்டுதான் என் காதில் அது விழுகிறது. கேட்கும்போதும், படிக்கும்போதும் எந்த ஒரு எழுத்தும் அதை எழுதியவனிடமிருந்து அவன் சூழலில் இருந்தும், அந்த எழுத்து பின் சேரும் சூழலிடமிருந்தும் பிய்த்துப் பார்க்க முடிவதில்லை. அதன் பொய்மையும் உண்மையும் தெரியாது போய்விடுவதில்லை. மறுபடியும் எந்த எழுத்தையும் படிக்கும்போதும் அதை எழுதியவனைப்பற்றி அவன் இதுகாறும் எழுதியவற்றிலிருந்தும் அவனைப்பற்றி, வாழ்க்கைபற்றி அறிந்தவற்றிலிருந்தும் பெற்ற சேமிப்பு அத்தனையோடும்தான் அந்த எழுத்து எனக்கு அர்த்தம் பெறுகிறது. அந்த எழுத்தாளனின் ஆளுமை பற்றிய பிம்பம் இப்படி உருவாகிக்கொண்டே போகிறது. அந்த பிம்பத்தின் இதுவரைய சேர்க்கை முழுதும், இப்போது நான் படிக்கும் அவனது எழுத்துக்கு அர்த்தம் தந்து கொண்டிருக்கிறது. எழுதியது பேசியது மட்டுமல்ல, அவன் சொல்ல விரும்பாத நிர்ப்பந்த மௌனங்களும் பேசுகின்றன. அர்த்தம் கொள்கின்றன. பல பேச்சுக்களில், எழுத்தில் பொய்மை பளிச்சிடுவதை உடனே உணர முடிகிறது. அதற்கான காரணங்களை நான் அடுக்கலாம். உணரவைக்கலாம். நிரூபிக்கமுடியாது.

அதெல்லாம் இருக்கட்டும்.  எந்தப்படைப்பும் என்னை எவ்வாறு பாதிக்கிறது, நான் அவற்றை எப்படி அர்த்தப்படுத்திக் கொள்கிறேன என்பதைச் சொல்லத்தான் எழுதினேன். படிக்கும்போது என்முன் நிற்பது அதுவரைநான் அப்படைப்பாளியின் அறிந்த ஆளுமை முழுதும், அந்த ஆளுமை உருவாகிக் கொண்டே இருப்பது. “நீங்கள ஏன் ராஜ்கபூரின அந்தப் படத்துக்குப் பாட மறுத்தீர்கள்?என்று மிகப்பெரிய அரிய சந்தர்ப்பத்தை நழுவ விட்டீர்களே என்ற அர்த்தத்தில் கேட்ட கேள்விக்கு “எனக்கு அந்தப் பாடலைப் பாடப் பிடிக்கவிலைஎன்று லதா மங்கேஷ்கர் பதில் சொன்னார். அவர் மறுத்து மட்டுமல்ல, அவரது ஆளுமை பற்றிய உண்மையையும், அந்தப்பாடல், ராஜ்குமாரின் படம் எல்லாம் பற்றிய உண்மையையும் அந்தப் பதில் சொன்னது. இன்னும் பெரிதாக விஸ்வரூபம் எடுத்து, அது ராஜ்கபூர்,  லதா மங்கேஷ்கர் இருவர் ஆளுமையையும் என் முன் நிறுத்தியது அந்தப் பதில். எந்த அரசியல்வாதியின் பேச்சிலும் உள்ள உண்மையும் பொய்மையும் பளிச்சிடவில்லையா உடனுக்குடன். அப்படிப் பளிச்சிடச் செய்வது எது? “என் மூச்சில் தமிழிருக்கும் என்ற பாட்டைக் கேட்டிருக்கிறோம். சரி தமிழிருக்கிறதா? இருந்த்தா? அது எந்த ஆளுமையைச் சேர்ந்தது? இப்படித்தான் எல்லாமே.

     இலக்கியத்தின் அழகு அது பேசும் உண்மையிலிருந்து பிறக்கிறது. திட்டமிட்ட வடிவங்களால், சொல் அலங்காரங்களால் அல்ல. அந்த உண்மையையும் அதன் பின்னிருக்கும் ஆளுமையையும உணரத்தான் முடியும்.

இங்கு நான் சந்தித்த ஆளுமைகள்.இன்னும் சிலர். படித்தும், கண்டு பழகியும் அறிந்த ஆளுமைகள்.

வெங்கட் சாமிநாதன்
     19 -11- 06.