Friday, January 28, 2011

இவர்களது எழுத்துமுறை - 24.ஆர்வி.

1. பத்திரிகைகளில் என் கதைகள் வெளிவந்ததனால் மட்டும் நான் என்னை
எழுத்தாளனக எண்ணிக்கொண்டுவிடவில்லை. நான் எழுதிவற்றைத் திருப்பி
ஒரு முறை படிக்கிறபோது என் நெஞ்சோடு கலக்கின்ற சுகத்தை என்னால்
உணர முடிந்தது. அந்த மயக்கத்திலே என்னுள்ளே ஆண்மையாக உள்ள
கலையுணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவருவதைக காண்கிற புதுமை
இன்பத்தை அனுபவிக்கிறேன். நானே ஒரு புதுப் பிறவி எடுப்பது போன்ற
ஆனந்தத்தை உணர்கிறேன். என்னை நானே புதிதாக அறிந்து கொள்கிற
முயற்சியாகவும் என்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு நல்ல வகையை
அறிந்துகொண்டுவிட்ட முயற்சியாகவும் அந்த அனுபவம் விளங்குகிறது.

2. எழுத்தாளன் என்கிற முறையில் நான் எனக்காக மட்டுமல்ல பிறருக்காகவும்
எழுதுகிறேன். அதாவது நான் பெற்ற இன்பம் இந்த வையகமும் பெறட்டும்
என்று அதைச் சொல்லிக்கொள்ளலாம்.

3. என்னைப் பாதிக்கிற விஷயங்கள், பாதிக்காத விஷயங்கள், நான்
விரும்புகிற விஷயங்கள், விரும்பாத விஷயங்கள் எல்லாவற்றையும் பற்றித்
தான் எழுதுகிறேன். காசுக்காக எழுதுகிறேன்; புகழுக்காக எழுதுகிறேன்;
தாட்சண்யத்துக்காக எழுதுகிறேன்; மிரட்டுவதற்காக எழுதுகிறேன்; மிரளாமல்
இருப்பதற்காக எழுதுகிறேன்; என்னுடைய எழுத்தைக்கொண்டு ஜகத்ஜாலம்
எல்லாம் பண்ணிவிட வேண்டும் என்று எழுதுகிறேன். என்னை உயர்த்திக்
கொள்ள எழுதுகிறேன். பிறரை உயர்த்தவும் எழுதுகிறேன். கீதாச்சாரியன்
சொன்னது பார்த்தனுக்கு மட்டும்தானா? எனக்கும் சரி. பலனைக் கருதாமல்
எழுதுகிறேன். பலன் கருதியும் எழுதுகிறேன். தன்னுடைய விருப்பு
வெறுப்பெல்லாம் அழுகல் சொத்தைக்கருத்தெல்லாம் விமர்சனம் என்று
ஓயாமல் புலம்புகிறானே அவனுடைய பட்டியலில் என்னுடைய பெயர்
இருக்கிறதா என்று பார்ப்பதற்காக எழுதுகிறேன். அதில் பெயர் இருக்க
வேண்டியதில்லை என்பதற்காகவும் எழுதுகிறேன்.

4. எனக்கு இன்னும் ஒரு நிறைவு பிறக்கவில்லை. எதையோ ஒன்றை
சாதிக்கிற வேகம் இன்னும் தணியவில்லை. என் சிந்தனையெல்லாம் எங்கோ
இருக்கிறது. என்னைச் சுற்றியுள்ள சிறுமைகள், என்னிடமே உள்ள குற்றங்
குறைகள், பலவீனங்கள் ஆசைகள், அபிலாஷைகள் எல்லாம் வற்றாத
ஜீவநதிகள் போல் வடிவதும் பெருக்கெடுத்து வருவதுமாக இருந்துகொண்டே
இருந்தாலும் என் சிந்தனை மட்டும் இமயத்தின் பனிச்சிகரத்தில் தூய்மையான
இடம் ஒன்றைத் தேடிக்கொண்டுதான் இருக்கிறது. பேதம் சிறிதும் இல்லாத
அந்த இடத்துக்குத்தான் நான் என் எழுத்து மூலமாக யாத்திரையைத் தொடங்கி
இருக்கிறேன்.

5. நான் எழுதியது போதாது. எழுத வேண்டியது எவ்வளவோ? எழுத
வேண்டியதை முழுதும் எழுதவில்லை. எழுதியதை எழுதியிருக்க வேண்டிய
தில்லை. எனக்கே என்னிடம் திருப்தி இல்லை. ஆகவே நான் இனித்தான்
நான் விரும்பிய வண்ணம் எழுதப் போகிறேன். வாழ, வாழவிட எழுதுகிறேன்.

6. இலக்கியம் வேறு வாழ்க்கை வேறு அல்ல. வாழ்க்கையேதான் இலக்கியம்.
ஆகவே என் நெஞ்சை விட்டகலாத - எனது இளம் பருவத்தில் சந்தித்த
நபர்களை உங்கள் நெஞ்சிலும் பதியும்படி உலவ விடுகிறேன். 0

Tuesday, January 18, 2011

இவர்களது எழுத்துமுறை - 23.நகுலன்

1. 'ஏன் எழுதுகிறேன்?' என்றால் 'என்னால் எழுதாமல் இருக்க முடியாது
என்பதால் எழுதுகிறேன்'.

2. சிருஷ்டி நியதியில் எனக்கு நான் யார் என்று தெரியாது என்பதனால்,
என் உருவம் எனக்குப் புலப்பட, என் உலகம் எது என்று கண்டுபிடிக்க
நான் எழுத்தை நாடுகிறேன்; ஏனென்றால் அது என் வழி. ஆனால் என்னை
நான் தெரிந்துகொள்ள ஏதாவது ஒரு பிரதிபலிப்புத்தான் பயன்படுகிறது;
அந்தப் பிரதிபலிப்பு, பிரதிபலிப்பு என்பதாலேயே, என் நிதர்சனக்
காட்சியைத் தருவதில்லை; ஆனால் இந்த ஐயமும் நிழலாடுவதால்தான் மற்ற
பிரதிபலிப்புகளைவிட இந்தப் பிரதிபலிப்பு ஒரளவு எனக்கு நிதானத்தைத்
தருகிறது.

3. எப்படி எழுதுகிறேன்? என் அனுபவத்தை வைத்துக் கொண்டு பதில்
சொல்ல முயற்சிக்கிறேன். கொஞ்ச வருஷங்களாக எங்கும் இடம் கிடைக்காத
எழுத்தாளனாக இருந்த நிலை மாறி, புகுந்த இடமும் சில காரணங்களால்
புளித்துவிட்ட நிலை வந்ததும், ஏன் எழுதுகிறேன் என்பதைத் தெரிவித்திருந்த
நான், இப்போது எப்படி எழுதுகிறேன் என்பதையும் அறிந்து கொண்டி
ருக்கிறேன். குறிப்பிட்ட கட்டங்களில் என் உள்ளத்தில் ஒரு கட்டுக்கடங்காத
பரபரப்பு ஏற்படுகிறது. சமயம் எப்படியும் இருக்கலாம். அதிகாலை, நடுநிசி,
பகல் வேளை, மாலை, இந்தப் பரபரப்பை கழித்துத் தீர்க்க நான் எழுத
ஆரம்பிக்கிறேன். எழுதுகையில் சிறுகதை, சிறுகவிதையாக இருந்தால் ஒரே
இருப்பில் இருந்து எழுதிவிடுவது என் வழக்கம். இந்தக் கட்டங்களில்கூட
சிருஷ்டிவேதனையின் அதிதீவிரத் துடிப்பைத் தீர்க்க நடுநடுவே கட்டிலில்
சென்று நான் படுத்துக்கொள்வதும் உண்டு! பல ஆசிரியர்கள் கூறியபடி,
இந்த முதல் கட்டத்தில் என்னால் என் படைப்பை விமர்சனாக மாறி நின்று
பார்க்க முடிவதில்லை. நான் செய்ததை சீர்திருத்தச் சில சமயங்களில்
ஒரு கால இடை இடையீடு வேண்டிஇருக்கிறது. ஆங்கிலக் கவிஞன்
கூறியபடி சிருஷ்டி விஷயத்தில் அனுபவத்திற்கும் அதைக் கலையாக
மாற்றும் கட்டத்திற்கும் ஏற்படும் கால இடையீடு இயற்கையாக அமைவது;
இது செயற்கையாக நான் அமைத்துக் கொள்வது.

4. கதைகளுக்குக் கரு எவ்வாறு அமைகிறது? ராமசாமி எழுதிய மாதிரி
அனுபவம் கண்ணாடிச் சில்; எழுதுவனின் திறமைதான் அதற்கு ரசப்பூச்சுப்
பாய்ச்சுகிறது. நான் எழுதத் தேர்ந்தெடுக்கும் அனுபவம் என் மன
வார்ப்பைக் காட்டுகிறது. இந்த அனுபவத் துணுக்கு அடிமனத்திலிருந்து
சிருஷ்டிப் பரப்பில் வெடித்துக் கொண்டு வருகிறது. இதற்கு ஒரு பூர்ணத்
துவத்தைக் கொடுப்பது எழுதுபவனின் படிப்பு, மனோவிலாசம் அனுபவம்
மேலும் பலவற்றினால் உருவாக்கப்பட்ட அடிமனத்தின் செழிப்புதான்.

5. ஒரு நோட்புக்கில் என் கலை ஈடுபாட்டை, எனக்குள்ள கலைத்திறனை
சோதனை செய்ய, வேறு யாருக்குமின்றி, எனக்காகவே ஒரு சில
சிறுகதைகளை எழுதிக் கொண்டிருக்கிறேன். இது அவசியமா என்று
கேட்டால், இன்று தமிழ் இலக்கிய உலகம் இருக்கும் நிலையில் இதற்குமேல்
என்னால் எதுவும் செய்ய என்று தோன்றவில்லை. இவைகளைத்
திரட்டிப் பார்க்கையில் எழுத்தாளன் கற்பனை எவ்வாறு ஒரு குப்பைக்கூடை
என்பதும், இந்தக் குப்பைக கூளத்தில்தான் எவ்வாறு ஒன்றிரண்டு
தானியங்கள் மிஞ்சுகின்றன என்பதையும் சொல்ல வேண்டும். 0

Monday, January 03, 2011

இவர்களது எழுத்துமுறை - 22.நாஞ்சில்நாடன்

1. சிறுகதையின் இலக்கணம், அழகு, சீர்மை, கலைவெளிப்பாடு, சமூகஅக்கறை,
தொனி...எத்தனை சொற்கள் இல்லை தமிழில். எல்லாம் காலத்துக்குக் காலம்,
கோணத்துக்குக் கோணம், இடத்துக்கு இடம் மாறும் தன்மைத்தன. மாறாத சில
உண்டு. மனிதநேயம், சொல்வதில் நேர்மை....நான் வரித்துக் கொண்ட
இலக்கணங்கள் அவை. அதில் சோர்வில்லை தளர்வில்லை இன்றும் எனக்கு.

2. கதைகளில் நான் இன்னும் வாழ்வது புலனாகிறது. மனம் புதிய படைப்பு
வேகம் கொள்கிறது. தமிழ்ச் சிறுகதை இலக்கியம் எனும் தளகட தொடர்
ஓட்டத்தில் என்னாலும் சிறிது தூரம் ஓட முடிந்திருக்கிறது என்பது ஆசுவாசம்
தருவதாக இருக்கிறது. கோப்பையை யார் முத்தமிடுகிறார்கள் என்பதில்லை
என் ஆர்வம். ஓட்டம் தொடர்ந்து கொண்டிருகிறது என்பதிலும் ஜீவன்
வறண்டு போகவில்லை என்பதிலும் எனக்கு சமாதானம் உண்டு.

3. எழுத்து என்பது எனக்கு தவம் அல்ல; வேள்வி அல்ல; பிரசவ வேதனை
அல்ல; ஆத்மசோதனையோ சத்யசோதனையோ அல்ல; பணம் சம்பாதிக்கும்
முயற்சி அல்ல; பேரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல; வாழ்க்கையைப்
புரிந்து கொள்ளும் முயற்சி; என் சுயத்தைத் தேடும் முயற்சி!

4. எனது கருத்துக்களோடு எவரும் உடன்படலாம், மாறுபடலாம். ஆனால்
அவை வாசிக்கவும், பரிசீலிக்கவும், விவாதிக்கவும் படவேண்டும் என்பது
என் எதிர் பார்ப்பு.

5. பிறந்து வளர்ந்த இடம் பற்றி, என்னுடைய சூழல் பற்றி, என்னுடைய
நேரடி அனுபவங்கள் பற்றி எனக்கு நிறைய சொல்வதற்கு இருந்தது. இதை
ஒரு பகிர்தல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்தப் பகிர்தலுக்கு
என்னுடைய சிறுகதைகளையும், நாவல்களையும் பயன்படுத்திக் கொண்டேன்.
இப்படித்தான் தொடங்கினேன். பின்னால் எனக்கென்று ஒரு பார்வை
ஏற்பட்டது. இது சிறு வயதிலேயே கூட இருந்திருக்கலாம். ஆனால் அது
துலக்கம் பெறாமல் இருந்தது. பிறகு ஒரு துலக்கம் கிடைத்த பிற்பாடு
மேலும் தீவிரமாய் என்னால் எழுத முடிந்தது.

6. இந்த வடிவங்கள் உக்திகள் பற்றி விஷயங்களை எல்லாம் கற்றுத்
தேர்ந்துகொண்டு நான் எழுத வரவில்லை. எனக்கெது எளிதாக வாய்த்தோ,
எனக்கெது எளிதாக எழுத வந்ததோ அதில் தான் நான் தொடர்ந்து
சென்றேன். இந்த வடிவச் சிக்கல்களுக்குள்ளாக நான் எப்போதும்
திகைத்து நின்றதில்லை. 0