Thursday, December 30, 2004

உவமைகள் வர்ணனைகள் - 33

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 33: ஜெயந்தன் படைப்புகளிலிருந்து:

1. சுப்ரமணியம் உறக்கத்திலிருந்தார். அது நிம்மதியான தூக்கம். சந்தோஷமான தூக்கம். இத்தனை நாள் இல்லாத ஒரு மன அமைதியும் கவலை விடுதலையும் நேற்று மாலை அவருக்கு ஏற்பட்டிருந்தது. அநேகமாக இந்த வரன் அமைந்த மாதிரிதான். இரவு ஒன்றிரண்டு முறை விழிப்பு வந்தபோதுகூட தான் இந்த சந்தோஷத்துடனேயே தூங்கிக் கொண்டிருப்பதை அவரால் உணர முடிந்தது. நீண்ட நாள் ஒழுகும் வீட்டிலிருந்தே கஷ்டப்பட்டு பழகிய ஒருவன் ஒருநாள் அந்தக் கூரை வேயப்பட்ட பிறகு, அதன் மீது மழை கொட்டித் தீர்க்கும்போது அவன் உள்ளிருந்து அடைகிற சந்தோஷத்தை அவர் அனுபவித்துக் கொண்டிருந்தார்- தூக்க நிலையிலும்.

- 'முறிவு' நாவலில்.

2. வனஜா அவனது அருமைக் காதலி. ஒரு காலத்தில் இவனது கையில் இருந்த ஐஸ் கட்டி. அது கரைவதற்கு முன்பே, தட்டிப் போன ஒன்று. அதனால் என்றுமே கரையாத ரூபத்தில் இவன் நினைவில் இருப்பவள். இன்னும் இவன் நினைவாகவே இருப்பாள் என்று இவனால் நம்பப்படுபவள்.

- 'பச்சை' சிறுகதையில்.

3. அவனுக்கு இப்படித்தான் தோன்றியது. சில கவிஞர்கள் கவிதை என்றால் என்னவென்று தெரியாமலே நல்ல கவிதைகளை எழுதி விடுவதைப் போலவே, இவர்களும் வியாபாரம் என்றால் என்னவென்று தெரியாமலே வியாபாரத்தில் நிலைத்து நின்று நின்று கொண்டிருக்கிறார்கள்.

- 'வாணிகம்'.

4. யோசிக்கிறது நாய் வளக்குற மாதிரி. நாயோட சங்கிலி நம்ம கையிலே இருக்கணும். நம்ம பிடியிலே இருக்கணும். அது நம்ம கால்ல மாட்டிக்கிட்டு அது பின்னாலே நாம ஓடக்கூடாது.

- 'சங்கிலி'.

5. - ஆமாம். மனுஷக் குரங்குக்கு எந்தப் பூமாலையும் ஒன்றுதான். புத்தனிலிருந்து மார்க்ஸ் வரை எல்லாப் பூமாலைகளையும் இது பிய்த்துத்தான் போட்டிருக்கிறது.

- '542'.

6. நீ குயவன் பானை வனையும்போது பார்த்திருக்கிறாயா? பாற்கடலிலிருந்து அமுதம் வந்தமாதிரி அந்த மாய விரல்களை வணங்கிக் கொண்டே வெறும் களி மண்ணிலிருந்து பானை வரும்.

- 'பட்டம்'.

7. -அது ஒரு பெரிய சாவு. இறந்து போன காளியப்பக் கவுண்டருக்கு வயது 72. இந்தப் பெரிய சாவுகளில் ஒரு பெரிய முரண்பாடு. இதில் அநேகமாக எந்தத் துக்கமும் இருக்காது. 'பெரிய சாவுடா, போய்ட்டு வந்துடு'.

- வீடு வழிந்து, வாசல் வழிந்து, கூட்டம் ஜே ஜே என்று இருந்தது.

- ஆண்களிடம் ஒரு social gathering- கிற்கு மேல் ஒன்றும் தெரியவில்லை. ஆனால் பெண்கள் உள்ளே, ஒப்பாரிப் போட்டியில் கலந்து கொண்டிருப்பவர்களைப்போல ஆவேசம் கொண்டு அழுது கொண்டிருந்தார்கள்.

- 'துக்கம்'.

8. அவளுக்கு அவளது உடம்பின் பரிமாணத்திற்கு எதிரிடையான சிறிய இடுங்கிய கண்கள். அவை ஆண்களில் யாரைப் பார்த்தாலும் இவன் நமது இரையா என்று ஒளியைப் பாய்ச்சும். இல்லையென்று அறிகிற போது தாட்சண்யமற்ற ஒரு குரோதத்தை வீசும்.

- 'சம்மதங்கள்'.

9. நல்ல ஆஜானுபாகுவான உருவம். வயது ஐம்பத்திரண்டு இருக்கலாம். ஆனால் முப்பதின் முறுக்கு உடலில் தெரிந்தது. இப்போதும் தனி ஆளாய் நின்று இவரால் நான்கு பேரைச் சமாளிக்க முடியும் என்கிற தோற்றம். அந்த் உடல் பலமே சதைத்திமிராகி, அவரது ஆகாத செயல்களுக்கு மூல காரணமாய் இருந்திருக்க வேண்டும் என்று நினைக்கும்படியான திரண்டு முறுகிய உடல் அமைப்பு.

- 'துப்பாக்கி நாய்க்கர்'.

10. எந்த மிருகமும் தான் தின்பதற்கு மேல் தன் இரையை எந்தக் கேவலமும் செய்வதில்லை. மனிதன் மிருகத்திடமிருந்து பரிணாமம் பெற்றவன் என்பதை விடக் கேவலமான பொய் இருக்க முடியாது என்று மனம் குமைகிறது.

- 'மாரம்மா'.

- தொடர்வேன்.

- அடுத்து எஸ்.வி.வி யின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Thursday, December 23, 2004

நினைவுத்தடங்கள் - 28

ஐயாவின் பள்ளியில் விடுமுறை கிடையாது. சனிக்கிழமை மதியம் அரை நாளும் ஞாயிறும் ஆசிரியர்களுக்கு மட்டும்தான் விடுமுறை. அதற்காகப் பெற்றோர்கள் ஏதும் குறை சொல்வதில்லை. மாதத்தில் ஒரு சனிக்கிழமை ஆசிரியர் சங்கக் கூட்டத்துக்கு பக்கத்து நகரத்துக்கு எல்லோரும் கட்டாயம் போக வேண்டும் என்பதால் மாதம் ஒரு நாள் மட்டும் மாணவர்களுக்கும் விடுமுறை கிட்டும். அன்று தெருக்கள் திமிலோகப்படும். ஏரி, குளம் தூள் கிளம்பும். அப்போது சிலர் மட்டும் 'எங்கே போய்த் தொலைஞ்சார் செதம்பரத்து வாத்தி? ஏ அப்பாடி! அவுரு இல்லேன்னாலும் இதுகளை மேய்க்க முடியாது!' என்று அலுத்துக் கொள்வார்கள். ஐயாவும் கூட இவர்களைக் கட்டி மேய்க்க அலுத்துக் கொள்ளாது போனாலும் சமயங்களில் 5 வயதுக்குள்ளான பிள்ளைகளையும், பெற்றோர்கள் வீட்டில் அவர்களைச் சமாளிக்க முடியாமல் பள்ளிக்கு அனுப்பும்போது, 'ஏன் வயத்துக்குள்ளே இருக்கிற பிள்ளைங்களையும் எறக்கி அழச்சிக் கிட்டு வந்துடுங்களேன்! அதான் இங்கே செதம்பரத்து வாத்தி ஒருத்தி இருக்கானே- அவனுக்கு வேறே என்ன வேலை?' என்று சீறுவார்.

சனி பிற்பகலும் ஞாயிறும் பள்ளி உண்டே தவிர அந்நாட்களில் பாடம் கிடையாது. சனி மதியம் வந்ததும் தோட்ட வேலை செய்ய விட்டு விடுவார். பள்ளிக்கூடம் ஒரு பரந்த ஆல மரத்தடியில் நடந்தது. ஐயா தங்கியிருந்த சாவடியை ஒட்டிய பகுதியை வளைத்து சாவடிக்கு முன்னால் 'ப' வடிவில் பாத்திகள் அமைத்து பூச்செடிகள், குரோட்டன்கள் எல்லாம் வைத்திருந்தார். பாத்திகளின் நடுவில் பன்னீர் மரமும் பவழமல்லிகையும் வளர்த்திருந்தார். விடிகாலை 'வேத்தாஞ் சீட்டு'க்கு வரும் போது 'கம்' மென்று, பன்னீர்ப் பூவும் பவழமல்லிகையும் கிழே சிதறிக் கிடந்து நாசிக்கும் மனதுக்கும் சுகந்தத்தையும் புத்துணைர்வையும் ஊட்டும். ஆண்பிள்ளைகள் பாத்திகளுக்கிடையே சருகு பொறுக்கி, களை நீக்கி வேலை செய்கையில் பெண் பிள்ளைகள் வீட்டிலிருந்து ஒவ்வொருவரும் கொண்டு வந்திருக்கிற சின்னச் சொம்புகளால் பள்ளிக்குப் பக்கத்திலேயே உள்ள ஏரியிருந்து நீர் மொண்டு வந்து செடி மரங்களுக்கு ஊற்றுவார்கள். இந்த வேலை என்றால் பிள்ளைகளுக்குப் படு குஷி. இப்போது அவர்களது கூச்சல், கும்மாளங்களை ஐயா கண்டுகொள்ள மாட்டார். வேலை முடிந்ததும் பொழுதிருக்கவே வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

ஞாயிற்றுக் கிழமை வேறு வேலை. மாதம் ஒரு முறை ஆண் பிள்ளைகள் எல்லாம் கூப்பிடு தொலைவில் ஓடும் ஆற்றுக்குப் போய் ஆற்று மணலை சின்னக் கூடைகளில் அள்ளி வந்து பாத்திகள் போக முன்னால் உள்ள உட்காரும் இடத்தில் கொட்டிப் பரப்பி எழுதிப் பழகவும் உட்காரவும் சமப்படுத்துவார்கள். அதிகாலையே எல்லாப் பையன்களும் கையில் சின்னக் கூடையுடன் வந்துவிட வேண்டும். ஐயா மேற்பார்வையில் வரிசையாய் ஆற்றுக்குப் போய், மணலை அள்ளி தலையில் சுமந்தபடி வரிசையாய் வரவேண்டும்.

அன்று கொஞ்சம் தாமதமாக 10 மணிக்குப் பள்ளி தொடங்கும். அன்று பொது அறிவு, மற்றும் நடைமுறைக்குப் பயனுள்ள படிப்பாக அமையும். பிராமிசரி நோட்டு எழுத, குடக்கூலி-போக்கிய பத்திரம் எழுத அன்று ஐயா கற்பிப்பார். இதுதான் பள்ளிப்படிப்பைத் தொடராமல் ஊரோடு நிறுத்திக் கொள்கிறவர்களுக்குப் பின்னாளில் கை கொடுக்கக் கூடியதாக இருந்தது. அதோடு பஞ்சாங்கம் பார்ப்பது, நாள் பார்ப்பது எல்லாம் சொல்லிக் கொடுப்பார். அதற்காக தமிழ் வருஷங்கள், திதிகள், நட்சத்திரங்கள் எல்லாம் மனப் பாடம் செய்ய வேண்டும். ஞாயிற்றுக் கிழமைகளில் அதனைச் சோதிக் கவும் பயிற்சி கொடுக்கவும் ஐயா பயன் படுத்தினார். மாலையில் விளையாட அனுமதிப் பார். பெண் பிள்ளைகள் எல்லைக் குள்ளேயும், பிள்ளைகள் பாத்திகளுக்கு வெளியே தெருவிலும் விளையாடலாம். அவரவர்க்கு ஏற்றபடி- பெண்களானால் கும்மி, கிளித் தட்டு பையன்களானால் சடு குடு, சரணா என்று ஐயாவே பிரித்துக் கொடுத்து ஆடச் செய்வார். 5 மணி ஆனதும் "போதும்
விளையாடுனது! வீட்டுக்குக்குக் கிளம்புங்க!" என்று அனுப்பி வைப்பார். அந்த இரண்டு நாட்கள் பிள்ளைகளுக்கு சுதந்திரமாக மூச்சு விடக்கூடிய நாட்களாக அமையும்.

- தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, December 14, 2004

களஞ்சியம் - 13

எனது களஞ்சியத்திலிருந்து - 13: விவேகசிந்தாமணி விருந்து - 2

பயனற்றவை:

காந்தியடிகள் 'ஒழுக்கமில்லாத கல்வி, நாணயமில்லாத வியாபாரம்........என்பதாக பயனற்ற ஏழைக் குறிப்பிடுவார். விவேகசிந்தாமணி இப்படிப் பல 'பயனற்றவை'களைப் பட்டியலிடுகிறது.

"தெருள் இலாக் கலையினார் செருக்கும் ஆண்மையும்,
பொருள் இலா வறிஞர்தம் பொறி அடக்கமும்,
அருள் இலா அறிஞர்தம் மௌன நாசமும்,
கரு இலா மங்கையர் கற்பும் ஒக்குமாம்."

தெளிவு இல்லாத கல்வி கற்றவர்களின் கர்வமும் மன ஊக்கமும், செல்வம் இல்லாத வறியவரின் ஐம்பொறிகளின் அடக்கமும், அருள் இல்லாத ஞானியரின் மௌன அழிவும், பிள்ளைப்பேறு இல்லாத பெண்களின் கற்பும் பயனற்றவை. இவை நான்கும் ஒன்றுக்கு ஒன்று சமமானவை எனலாம்.

இன்னொரு விதமான ஆறு பயனற்றவைகளும் சொல்லப் பட்டுள்ளன. அவை-

"திருப்பதி மிதியாப் பாதம்,
சிவனடி வணங்காச் சென்னி,
இரப்பவர்க்கு ஈயாக் கைகள்,
இனியசொல் கேளாக் காது,
புரப்பவர் தங்கள் கண்ணீர்
பொழிதரச் சாகா தேகம்
இருப்பினும் பயனென்? காட்டில்
எரிப்பினும் இல்லை தானே".

இறைவன் எழுந்தருளி உள்ள தலங்களை மிதியாத பாதமும், சிவனின் திருவடியை வணங்காத தலையும், யாசிப்பவர்க்கு ஏதும் அளிக்காத கைகளும், இனிய சொற்களைக் கேளாத செவிகளும், தம்மை ரட்சிப்பவர்கள் கண்ணீர் பொழிவதைப் பார்த்தும் உயிர் கொடாத தேகமும் பயனில்லாதவை. இந்த ஆறும் இருப்பதால் என்ன பயன்? சுடுகாட்டில் வைத்து எரித்திடினும் ஒன்றும் பயன் இராது.

அடுத்து, பயனில்லாத ஏழினை முதல் பாடல் கூறுகிறது:

"ஆபத்துக்கு உதவாப் பிள்ளை,
அரும்பசிக்கு உதவா அன்னம்,
தாபத்தை தீராத் தண்ணீர்,
தரித்திரம் அறியாப் பெண்டிர்,
கோபத்தை அடக்கா வேந்தன்,
குருமொழி கொள்ளாச் சீடன்,
பாபத்தைத் தீராத் தீர்த்தம்,
பயனில்லை ஏழும் தானே".

மிக்க துன்பம் உண்டான காலத்தில் உதவி செய்து அத் துன்பத்தை நீக்காத மகனும், அரிய பசியை நீக்க உதவாத உணவும், நீர் வேட்கையைத் தணிக்காத தண்ணீரும், வீட்டின் வறுமை நிலைமையை உணராமல் அதிகம் செலவு செய்யும் மனைவியும், சினத்தை அடக்கிக் கொள்ளாத அரசனும், ஆசிரியரின் உபதேசத்தை மனத்தில் கொள்ளாத மாணவனும், பாவங்களை நீக்காத தீர்த்தமும் - என்ற இந்த ஏழினாலும் பயனில்லையாம்.

தக்க சமயத்துக்கு உதவாத இன்னொரு எட்டு வகை பற்றியும் விவேகசிந்தாமணி கூறுகிறது. அவை-

"தன்னுடன் பிறவாத் தம்பி,
தனைப்பெறாத் தாயார் தந்தை,
அன்னியரிடத்துச் செல்வம்,
அரும்பொருள், வேசியாசை,
மன்னிய ஏட்டின் கல்வி,
மறு மனையாட்டி வாழ்க்கை,
இன்னவாம் கருமம் எட்டும்,
இடுக்கத்துக்கு உதவா தன்றே".

உடன் பிறவாத சகோதரன், தன்னைப் பெறாத தாய் தந்தை, அயலவரிடம் உள்ள செல்வம், கைக்குக் கிடைத்தற்கு அரிய பொருள், வேசியரிடம் ஆசை, ஏட்டில் எழுதியிருக்கும் கல்வி, அயலான் மனைவியோடு கூடிய வாழ்க்கை என்னும் இந்த எட்டு வகைகளும் (ஏழு தான் உள்ளன) தக்க சமயத்துக்கு உதவமாட்டா.

கடையாக, பயனளிக்காத சிலவற்றையும் விவேகசிந்தாமணி பட்டியலிடுகிறது.

"சந்திரன் இல்லா வானம்,
தாமரை இல்லாப் பொய்கை.
மந்திரி இல்லா வேந்தன்,
மதகரி இல்லாச் சேனை,
சுந்தரப் புலவர் இல்லாத்
தொல்சபை சுதரில் வாழ்வு,
தந்திகளில்லா வீணை,
தனமில்லாக் கொங்கை போலாம்"

நிலவு இல்லாத ஆகாயம், தாமரை இல்லாத நீர்நிலை, நல்ல அமைச்சரைப் பெறாத அரசன், மதங்கொண்ட மலைபோன்ற யானைகள் இல்லாத படை, அழகிய மொழியாளுமை மிக்க புலவர் இல்லாத தொன்மையான சபை, பிள்ளைகள் இல்லாத வாழ்க்கை, நரம்புகள் இல்லாத வீணை - இவை யாவும் கொங்கை இரண்டுமில்லாத மங்கையர் இன்பம் போல வீணாகும்.

- இப்படி அருமையான கருத்துப் பெட்டகமாகவும் இனிய யாப்புவகைகள் நிரம்பியதாகவும் உள்ள விவேகசிந்தாமணி, வாசிக்கும் தோறும் நல்வ்¢ருந்தாய் இருப்பதை இன்னும் வரவிருக்கிற பாடல்களால் உணரலாம்.

-மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

Wednesday, December 08, 2004

களஞ்சியம் - 12

எனது களஞ்சியத்திலிருந்து - 12: விவேகசிந்தாமணி விருந்து:

1. அறிமுகம்:

தமிழின் சிறந்த அற நூல்களுள் 'விவேக சிந்தாமணி' குறிப்பிடத்தக்கது. அதன் எளிமை கருதியும், அது கூறும் மனங் கொள்ளத்தக்க சிறந்த அறிவுரைகளாலும் எல்லோராலும் விரும்பிக் கற்கப் பட்டதனால் அது பெருவழக்குப் பெற்றது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வரை திண்ணைப் பள்ளிகூடங்களில் விவேகசிந்தாமணி கட்டாயமாகப் பயிற்றுவிக்கப்பட்டது. அதனால் திண்ணைப் பள்ளிக்கூடப் படிப்பு மட்டும் உடைய நாட்டுப்புற மக்கள், அச்சு வடிவம் பெற்ற அல்லி அரசாணி மாலை, நல்லதங்காள் கதை போன்று மனப்பாடமாகக் கூறுவர். 'மக்கள் இலக்கிய வரிசை'யில் 'விவேக சிந்தாமணி'க்கு ஒரு நிச்சயமான இடம் என்றும் உண்டு.

விவேக சிந்தாமணி மிகவும் பிற்பட்ட காலத்தது. நாயக்கர் மன்னர்கள் தமிழகத்தை ஆண்டபோது, பல்வேறு சந்தர்ப்பங்களில் பலரால் பாடப்பட்ட தனிப்பாடல்களின் தொகுப்பே விவேக சிந்தாமணி. இதில் பல நூல்களிலிருந்து எடுக்கப்பட்ட செய்யுட்களும் பிற்காலத்தே பலர் பாடிய தனிப் பாடல்களும் தொகுக்கப் பட்டுள்ளன. இந்நூலில் சாதாரண நடைமுறை அறங்களும், வாழ்க்கை ஒழுங்குகளும், உயர்தர்ம நெறிகளும் கதைகள், நகைச்சுவை, அவலம், வீரம், காதல் போன்ற சுவைகளுடன் எளிய நடையில் சொல்லப் பட்டுள்ளன.

'விவேக சிந்தாமணியைத் தொகுத்தவர் யார் என்பது தெரியவில்லை. அவர் வாழ்ந்த காலம், இடம் ஏதும் அறிய முடியவில்லை. பாடல்களை இயற்றியவர், பாடல் தோன்றிய சூழல் எதுவும் குறிப்பிடப் படவில்லை. பாடல்களைத் தொகுத்து வரிசைப் படுத்துவதற்குப் பாடலின் சிறப்பு, யாப்பு, கருத்து ஆகியவற்றை மனதில் கொண்டு ஒரு வரன்முறையைப் பின் பற்றவில்லை. அதனால் விவேக சிந்தாமணி பல்சுவை இலக்கிய மாய் - ஒர் கலவை நூலாக உள்ளது' என்பார் புலவர் மாணிக்கம்.

கடந்த நூறு ஆண்டுகளில் ஏறக்குறைய இருநூறு பதிப்புகள் போல மூலமும் உரையுமாய் விவேக சிந்தாமணி வந்திருப்பதே அதன் செல்வாக்கை உணர்த்தும். கடவுள் வாழ்த்து உட்பட 135 பாடல்கள் பல்வகை யாப்பில் உள்ளன. வெண்பாக் களும், கட்டளைக் கலித்துறைகளும், ஆசிரிய விருத்தங்களும் அமைந்த பாடல்கள். முதற்பாடல் கணபதி துதியாக அமைந்த வெண்பாவாகும். பிற 134 பாடல்களும் பெரும்பாலும் நீதிக்கருத்தை உணர்த்தும் பாடல்களே. சில பாடல்கள் நாட்டில் வழங்கும் பழமொழிகளுக்கு விளக்கம் தருபவை. சில திருக்குறளுக்கு விளக்க உரை போல்வன. புத்த ஜாதகக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், நாட்டில் வழங்கும் பழங்கதைகள், புராண இதிகாச நிகழ்ச்சிகளைக் கற்பனை நயத்தோடு கூறும் கதைகள் பல பாடல்களில் உள்ளன. வடமொழியில் உள்ள தனிப்பாடல்கள் சிலவற்றின் மொழி பெயர்ப்பாகவும் சில பாடல்கள் உள்ளன. காதல் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இன்பச்சுவையை மிகைப்படுத்தும் பாடல்களும் உள்ளன. பெண்ணையும் சிற்றின்பத்தையும் பழித்துரைக்கும் பாடல்களும் பல உள்ளன.

டி.கே.எஸ். சகோதரர்கள் தங்களது 'இராஜ ராஜ சோழன்' என்னும் வரலாற்று நாடகத்தில் விவேக சிந்தாமணிப் பாடல் ஒன்றை இனிய இசையோடு பாடச் செய்தனர்.

"சங்கு முழங்கும் தமிழ்நாடன்
தன்னை நினைந்த போதெல்லாம்,
பொங்கு கடலும் உறங்காது!
பொழுதோர் நாளும் விடியாது!
திங்கள் உறங்கும்! புள் உறங்கும்!
தென்றல் உறங்கும் சில காலம்!
எங்கும் உறங்கும் இராக் காலம்!
என் கண் இரண்டும் உறங்காவே!

இந்தப் பாடலின் கருத்து, இனிமை, கற்பனை காரணமாய் நாடகத்தில் இடம் பெற்ற போது மக்களின் போற்றுதலுகு உள்ளானது. இது போன்ற அரிய இனிய பாடல்களை நான் ஆரம்பப்பள்ளிப் பருவகாலத்தில் மனப்பாடம் செய்ததால் இன்று பேச்சிலும் எழுத்திலும் அவை தாமாகவே வந்து விழுகின்றன. அந்த அற்புதப் பாடல்கள் சிலவற்றை பல் வேறு தலைப்புகளில் 'யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்ற பெரு நோக்கில் குழுமத்தில் எழுத விழைந்தேன்.

- தொடரும்.

-வே.சபாநாயகம்.

நினைவுத் தடங்கள் -27

மதியப் பள்ளி 2 மணிக்குத்தான் என்றாலும், பிள்ளைகள்- அனேகமாக எல்லோரும் போன உடனே சாப்பிட்டுவிட்டு வந்து விடுவார்கள். ஐயா அதற்குள் தானே சமைத்த சாதத்தைச் சாப்பிட உட்காருவார். சாதம் மட்டும் தான் அவர் சமைப்பது. பிள்ளை களை அனுப்பி வசதியான வீடுகளிலிருந்து குழம்போ ரசமோ வாங்கி வரச் சொல்லிபோட்டுச் சாப்பிடுவார். 'அய்யோ பாவம்! தனி ஆம்பிள்ளை எப்படிக் குழம்பெல்லாம் வைப்பார்' என்று அனுதாபப்பட்டுத் தாய்மார்கள் முகம் சுளிக்காமல் தாராள மனதுடன் தருவார்கள். சாப்பிட்ட பின் ஐயா கூடத்தில் பாய்விரித்து சிரமபரிகாரம் செய்து கொள்ளுவார். அப்போது இரண்டு பையன்கள் உள்ளே அழைக்கப் படுவார்கள்- ஒருத்தன் கால் அழுத்தவும் இன்னொருத்தன் விசிறி கொண்டு விசிறவும். சற்று நேரத் தில் ஐயாவின் லேசான குறட்டை கேட்டதும் எழுந்து வெளியே வருவார்கள். அப்புறம் தான் எல்லோருக்கும் நிம்மதியாய் மூச்சு விடவும் பேசிக்கொள்ளவும் முடியும்.

மற்ற ஆசிரியர்கள் 2 மணிக்குத்தான் வருவார்கள். அதுவரை சட்டாம் பிள்ளைதான் சத்தமில்லாமல் பார்த்துக் கொள்வான். அப்போது அவனது அதிகாரம் தூள்பறக்கும். ஐயாவின் கெடுபிடியே தேவலை என்கிற மாதிரி இருக்கும். பிள்ளைகள் சிலரிடம், மதியம் சாப்பிட்டு வரும்போது ஏதாவது தின்பண்டம் எடுத்து வரும்படி சொல்லுவான். கொடுக்காப்புளி, இலந்தை, வெல்லம் என்று அவரவர்க்குக் கிடைத்ததைக் கொண்டு வருவார்கள். சமயங்களில் சில பிள்ளைகளால் கொண்டு வரமுடியாது போய்விடும். அதை மனதில் வைத்துக் கொண்டு, ஏதாவது கோள் மூட்டி, பேசியதாக எழுதி வைத்து, கோமணம் கட்டாத போது காட்டிக் கொடுத்து - ஐயாவிடம் 'கொலை அடி' வாங்கிவைத்து விடுவான். ஒரு தடவை புரோகிதர் விட்டுப் பெண்ணுக்கு எதுவும் கிடைக்கவில்லை. தினமும் நச்சரித்துக் கொண்டிருந்தான். அன்றும் கொண்டு போகாவிட்டால் அவன் என்ன செய்வானோ என்ற பயத்தில் அகப்பட்டதைக் கொண்டு வந்து விட்டாள். "என்ன இன்னிக்காச்சும் எதுனாகொணாந்தியா?" என்று அவன் கேட்கவும் அவள் பயத்துடன் தலையசைத்தாள். "எடு சீகிரம்'' என்று அவன் அவசரப்படுத்தவும், அவள் மிரட்சியுடன் சுற்று முற்றும் பார்த்தபடி இடது கையைப் பின்னால் முதுகுப் பக்கம் கொண்டுபோய் பாவாடை நாடாவின் அடியில் செருகி சுருட்டி வைத்திருந்ததை விடுவித்து கையை மூடியபடி அவனது கையில் வைத்து மூடினாள். அவன் ஆவலோடு திறந்து பார்த்தால் - அதில் இருந்தது ஒரு சாம்பார் முருங்கைக்காய்த் துண்டு! 'அடச் சீ!' என்று கையை உதறி வெளியே விட்டெறிந்தான். எல்லோரும் சத்தம் போடாமல் நமுட்டுச் சிரிப்பு சிரித்தோம். அதற்குப் பிறகு அவன் அந்தப் பெண்ணை எதுவும் கொண்டு வரக் கேட்பதில்லை.

மணி இரண்டானதும் மற்ற ஆசிரியர்கள் வந்து விடுவார்கள். அவர்களில் ஒருவர் மட்டும் பள்ளி இறுதி வகுப்புவரை படித்த இடைநிலை ஆசிரியர். அவர்தான் விருப்பப்பட்டவர்க்கு மட்டும் மூன்றாம் வகுப்புக்கு மேல் ஆங்கிலம் சொல்லித் தருவார். மணி நாலரை வரை அவர்கள் பாடம் நடத்தி விட்டுக் கிளம்புவார்கள். பள்ளி நேரம் முடிவதை அறிவிக்க மணியெல்லாம் அடிப்பதில்லை. அவர்கள் கிளம்பினால் பள்ளி நேரம் முடிவதாகக் கொள்ளவேண்டும். அவர்கள் போனால் பிள்ளைகளும் போய்விட முடியாது. அப்புறம் ஐயா பிடித்துக் கொள்வார் ஆறு மணி வரை.

அதற்குப் பிறகு ஐயா எல்லா வகுப்புகளுக்கும் சோதனையில் இறங்குவார். காலையில் முறை போட்ட வாய்ப்பாடு, எழுத்து எல்லாம் சோதிக்கப்படும். அரிச்சுவடிப் பையன்கள் கேட்ட எழுத்தை மணலில் எழுதிக்காட்ட வேண்டும். வாய்ப்பாடுகள் கெட்டி எண்சுவடியில் உள்ளபடி தமிழ் எண்கள், நெடுங்கணக்கில் மாகாணி, அரைக்கால், கால், அரை, முக்கால் வாய்ப்பாடு என்று எதைக் கேட்டாலும் திக்காமல் திணறாமல் சொல்ல வேண்டும். பாடங்களின் தலைப்பு வரிசைகள்- பாட எண் சொன்னால் தலைப்பு, தலைப்பு சொன்னால் வரிசை எண்- இப்படி எப்படி மடக்கினாலும் பதில் சொல்ல வேண்டும். இல்லாவிடில் தொலைந்தது. ஐயா எப்போதும் கக்கத்தில் வைத்திருக்கும் மணிப் பிரம்பு இரக்கமின்றி உடல் மீது விளையாடும். ஆக, எண்ணும் எழுத்தும் எல்லோருக்கும் அத்துப்படி ஆவது இந்த நேரத்தில் தான். பெரிய வகுப்புப் பையன்கள் சதகம், விவேக சிந்தாமணி போன்ற நீதிநூல்களை மனப் பாடம் செய்ததை ஒப்பிக்கக் கேட்பதும் இப்போதுதான்.

ஒவ்வொருவரும் அவரவர் வீட்டு மத ஆசாரப்படி ஒரு சதகத்தைத் தேர்ந்து, அதை மனப்பாடம் செய்ய வேண்டும். சைவக் குடும்பமானால் 'அறப்பளீசுரர் சதகம்', 'குமரேச சதகம்' - வைஷ்ணவக் குடும்பமானால் 'திருவேங்கட சதகம்' - இப்படி ஒன்றை ஐயாவே அவரவர் குடும்பத்திற்கேற்ப வகைப்படுத்திக் கொடுத்து விடுவார். ஒன்றாம் வகுப்புக்கு 'உலகநீதி, இரண்டாம் வகுப்புக்கு 'ஆத்திசூடி', மூன்றாம் வகுப்புக்கு
'கொன்றைவேந்தன்' நான்காம் வகுப்புக்கு 'வெற்றிவேற்கை', ஐந்தாம் வகுப்புக்கு 'விவேக சிந்தாமணி' - நான்கு, ஐந்தாம் வகுப்புகளுக்கு மட்டும் ஆண்டுக்கு ஒரு சதகம் பாடம். சதகம் ஒப்பிக்கிற வேளை பலருக்குக் கண்டம்தான்! வார்த்தைகளைச் சந்தி பிரித்துப் சொல்லத் தெரியாமல் திணறினால், ஐயாவிடம் அடிவாங்காமல் முடியாது. இப்படித்தான் நான் ஐந்து வகுப்புக்குள் எண்ணும் எழுத்தும் கசடறக் கற்றேன். அறப்பளீசுரர் சதகமும், விவேக சிந்தாமணியும் மனப் பாடம் செய்தேன். இன்று அவை எனக்கு உதவுகின்றன.

லேசாகப் பொழுது மங்கத் தொடங்கியதும் ஐயா, "ம்ம்.. போயி வெளக்கு முன்னாலே ஒக்காந்து படிக்கணும். நா வந்து பாப்பேன்" என்று மிரட்டலாகச் சொல்லி அனுப்பி வைப்பார். சொன்னபடி இரவு வீட்டுக்கு வருவார் என்பதும் உண்மைதான்; ஆனால் வராமல் போகிற அதிர்ஷ்டமும் சிலருக்குக் கிட்டுவதுண்டு.

எங்களுக்கு முன் தலைமுறையில் மாலைப் பள்ளி முடிந்து கீழ்க்கண்ட பாடலை பிள்ளைகள் அனைவரும் ஒரே குரலில் பாடி விடை பெறுவதுண்டு.

"அந்திக்குப் போறோம் நாங்கள்
அகத்திலே விளையாடாமல்
சுந்தர விளக்கிகன் முன்னே
சுவடிகள் அவிழ்த்துப் பார்த்து
வந்தது வாராதெல்லாம்
வகையுடன் படித்துக் கட்டி
இந்திரன் சேவல் கூவ
எழுந்திருந்து வாரோமையா
திருப்தியாய் அனுப்புமையா
திருவடி சரணம் தானே"

பின்னொட்டு:-

இதற்கு முன் கட்டுரையில், நெற்றிக்கு இட்டுக் கொண்டு வராத மாணவனின் நெற்றியில் சட்டாம் பிள்ளை சாணத்தைப் பூசி விடுவான் என்று எழுதியிருந்தேன். அதை இணையத்தில் படித்த என் தம்பி அது தொடர்பான ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தி எழுதியுள்ளார். ஒரு தடவை எங்களூரில் இருந்த ஒரே முஸ்லிம் குடும்பத்துப் பையன் அவனது மத முறைப்படி நெற்றிக்கு இடாமல் வந்திருந்தான். அப்போதைய சட்டாம் பிள்ளைக்கு முஸ்லிம்கள் நெற்றிக்கு இடமாட்டார்கள் என்பது தெரியாமல் அவனது நெற்றியிலும் பட்டையாய் சாணத்தைப் பூசி விட்டான். அந்தப் பையன் அழுது கொண்டே வீட்டுக்குப் போய் அவன் அப்பாவிடம் சொல்லிவிட்டான். அப்பாக்காரர் கோபாவேசமாக வந்து ஐயாவிடம் சத்தம் போட்டு மகனை நிறுத்திவிடப் போவதாகச் சொன்னார். ஐயா யாருக்கும் பணிகிறவர் அல்ல. ஆனாலும், பெற்றவரின் உணர்வை மதித்து மன்னிப்புக் கேட்காத குறையாக சமாதானப் படுத்தி அனுப்பினார். அவர் போன பிறகு சட்டாம்பிள்ளைக்குக் கிடைத்த மண்டகப்படி அவனது ஜென்மத்துக்கும் மறக்காது! அத்தோடு அவனது சட்டாம்பிள்ளை பதவியும் பறிக்கப் பட்டது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Tuesday, November 30, 2004

உவமைகள்-வருணனைகள் - 32: இந்திரா பார்த்தசாரதி

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 32 : இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளிலிருந்து:

1. மினி-பஸ் என்பது ஒரு சங்கப் பலகை. அது சாந்தினிசௌக் போய்ச் சேருவதற்குள் குறைந்தது நூறு பேராவது அதற்குள் இருப்பார்கள். ஆண்-பெண் அனைவரும் பால் உணர்வு நீங்கி, ஆத்ம நிலையில் உறவாடும் இடம். வெயிலில் வதங்கி, வியர்வையில் அனைவரும் உருகி ஒருவர் மீது ஒருவராய் நிற்கும் போது, ஆண்- பெண் உணர்வு எங்கிருந்து வரும்? காமத்தைக் கடக்க உதவும் மினி-பஸ் ஒரு தெய்வ சந்நிதானம், சந்தேகமே இல்லை. அல்லது மினி-பஸ் கி.பி 2000ல் இருக்கப்போகும் பாரதமா? எலிப் பொறியில் அகப்பட்ட எலிகள் ஒன்றையன்று அடித்துக்கொண்டு சாகின்றன.

- 'ஒரு ரூபாய்' கதையில்.

2. சில நாட்களுக்கு முன்பு ஹரிஹரன் தன் நண்பர்களிடம் கூறிக் கொண்டிருந்த ஒன்று அவர் நினைவுக்கு வந்தது. சர்வாதிகார நாட்டில் ஒரு நாய்க்கு எல்லாவிதமான சௌகர்யங்களும் இருந்தன; ஆனால் அதற்கு ஒரு ஏக்கம், தன்னிஷ்டத்திற்குக் குரைக்க முடியவில்லையே என்று.

- 'வழித்துணை'.

3. மந்திரிகளின் பூதாகரமான உடம்பு அவருக்கு எரிச்சலை ஊட்டியது. இது செல்வத்தின் வளர்ச்சியா அல்லது வறுமையின் வீக்கமா?

- 'கருகத் திருவுளமோ?'.

4. நேற்று சூரியனுக்கு ஓய்வு. சாம்பல் பூசிய நாளாய் இருந்தது. இன்று, நேற்றுப்பெற்ற ஓய்வில் கலைப்பு நீங்கி புதுப்பொலிவுடன் வானத்தில் பவனி வந்தான். அவனை வாரி உடம்பில் பூசிக் கொள்ள மணலில் மல்லாந்து கிடந்தன பல வெள்ளை உடல்கள். இளைஞர்கள், வயதானவர்கள், பால் வேறுபாடின்றி, கண்களில் மட்டும் கறுப்புக் கண்ணாடி திரையிட்டு உடம்பில் மற்றைய பகுதிகளை சூரியனின் அரவணைப்புக்குச் சமர்ப்பித்திருந்தனர்.

- 'குன்று'.

5. சாமான்களையெல்லாம் சரிபார்த்து. நண்பர்களுக்குக் கைகாட்டி விட்டு என் சீட்டில் உட்காரப் போன போதுதான் அவரைக் கவனித்தேன். அவர் அறிதுயில் கோலம் கொண்டிருந்தார், கால்களைத் தாராளமாக நீட்டியபடி. இன்னொருவர் அங்கே உட்காரவேண்டுமென்ற எண்ணம் அவருக்கு இருந்ததாகவே தெரியவில்லை. உலகத்தைப் பந்தாகச் சுற்றி குர்தாப் பையில் வைத்திருப்பவர் போல் அவர் அலட்சியமாகப்
பார்த்துக் கொண்டிருந்தார்.

- 'அவஸ்தைகள்'.

6. உலகம் உறங்கிக் கொண்டிருக்கும் போது, ட்யூப் வெளிச்சத்தில் உயிர்பெற்றெழும் அந்த ஓட்டலில், நெற்றியில் திருநீறு துலங்க, பளிச் சென்ற முகத்துடன், உடையுடன், 'காப்பியா அண்ணா?' என்று ஒருவர் கேட்கும்போது உலகம் ஸ்தம்பித்து நிற்கிறது. காலம் பின்னோக்கிக் கிழிந்து, நாற்பத்தைந்து வருஷங்களுக்கு முன்னால், கும்பகோணம் அம்பி அய்யர் ஹோட்டலில் நிற்பது போல் ஒரு பிரமை.

- 'கோட்சேக்கு நன்றி'.

7. அருணகிரிக்குச் சற்று பெரிய சரீரம். கனத்த சரீரம். அவர் பக்கத்தில் உட்காரும்போது அவன் சற்றுத் தள்ளித்தான் உட்காரவேண்டும். அருணகிரியின் சரீர ஆக்கிரமிப்பு ஒரு காரணம். இன்னொன்று அவர் உரக்கப் பேசினால் சப்தம் அவரிடமிருந்தா அல்லது கார் இஞ்சினிலிருந்தா என்று சொல்வது கஷ்டம். கார் இஞ்சினில் ஏதாவது தகராறு இருந்து சப்தம் வந்து, அந்த சப்தம் அவரிடமிருந்து வந்ததாக நினைத்துக் கொண்டுவிட்டால் விபத்து ஏற்படுவதற்கான சாத்யக்கூறு உண்டு. அவர் உரக்கப் பேசும்போது குரலை அப்படி ஏன் கனைக்கிறாரென்பது தான் அவனுக்குப் புரியவில்லை.

- 'இறுதிக் கடிதம்'.

8. நாற்காலியின் ஒரு பக்கத்தில் கையை ஊன்றிக் கொண்டு கன்னத்தில் கை வைத்தவாறு உட்கார்ந்திருந்தார் சாம்பசிவன். பக்திக்கு மணமுண்டு என்று காட்டுவது போல் அவர் உடம்பில் பூசியிருந்த திருநீறு சுகந்தமான வாசனையை அறை முழுதும் வாரியிறைத்தது.

- 'அறியாமை என்னும் பொய்கை'.

9. அரை மணி நேரமாக அவன் காத்துக் கொண்டிருக்கிறான். ஒரு பஸ் கூட வரவில்லை. பஸ் நிலையத்தில் நல்ல கூட்டம். இத்தனை பேரும் பஸ்ஸில் ஏறிப் போயாக வேண்டும். இந்தியாவில் வேறெதுவும் பொங்கி வழியாவிட்டாலும், மக்கள் கூட்டத்துக்குப் பஞ்சமே இல்லை. தனி மனிதனின் தனித்வம் கரைய வேண்டுமானால் தில்லியில் பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டும்.

- 'பிரச்சினையின் நிறம்'.

10. 'ஸிந்தியா ஹவுஸ்' அருகே அவன் நின்ற போது, அவனை உராய்ந்தவாறு ஒரு பஸ் வந்து நின்றது. பஸ் தன்னை 'வா'என்று அழைக்கும் போது உட்காராமல் இருப்பது அதன் நட்பை அலட்சியம் செய்வது பொல. அவன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான்.

- 'அவன் பெயர் நாகராஜன்'.

- தொடர்வேன்.

- அடுத்து ஜெயந்தன் படடைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Monday, November 29, 2004

நினைவுத் தடங்கள் - 26

காலை 9 மணிக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வந்த பின் தான் முறைப்படி காலைப்பள்ளி துவங்கும் என்றாலும், அய்யாவின் எதிர் பார்ப்பின்படி எல்லா பிள்ளகளும் 8 மணிக்கே வந்துவிட வேண்டும். ஆசிரியர்கள் வருவதற்குள் காலைப் பிரார்த்தனை, முறைபோட்டு எழுதுதல், காப்பி எழுதுதல் எல்லாம் அய்யா பார்வையில் நிகழும்.

எல்லொரும் காலையில் குளித்து நெற்றியில் அவரவர்க்குரிய மதச் சின்னங்களை இட்டுக் கொண்டு கையில் விறகோ வரட்டியோ அய்யாவின் சமையலுக்காகக் கொண்டு வருவது கட்டாயம். சம்பளம் என்பது வெறும் எட்டணா தான். அதுவும் பெண்களுக்கும் ஹரிஜனங்களுக்கும் கிடையாது என்பதால் பெற்றோர் இந்த விறகு விஷயத்திற்குச் சுணங்குவதில்லை. விறகைக் கொண்டு வந்து அய்யா தங்கும் கூடத்திற்கு வெளியே வெயிலில் போட்டு விட்டுப் போய் உட்கார்ந்ததும், சட்டாம் பிள்ளை ஆண்கள் ஒவ்வொருவரையும் பின் பக்கம் தடவிப் பார்த்துக் கோவணம் கட்டியிருக்கிறார்களா என்று சோதிப்பான். யாராவது கோவணம் கட்டாது வந்தால், அய்யாவிடம் அவன் கொண்டு போகப் படுவான். அய்யா அவனது துண்டை உருவி அம்மணமாக்கி வீட்டுக்குத் துரத்தி விடுவார். அப்படியே வீட்டுக்கு ஓடி கோமணம் கட்டிக்கொண்டு வந்தால் தான் ஆயிற்று. சிலர் மறதியாலோ கோவணத்துக்குத் துணி கிடைக்காமலோ கட்டாது வரும்போது சட்டாம்பிளையிடமிருந்து தப்பிக்க பின்புறம் அரணாக் கயிற்றில் பேப்பரைச் சுருட்டிச் செருகி முட்டாகக் காட்டுவது உண்டு. சட்டாம்பிள்ளைக்கு அவ்வப்போது ஏதாவது தின்பண்டம் கொண்டு வந்து கொடுத்தால் காட்டிக் கொடுக்க மாட்டான். இல்லாவிடில் அய்யாவிடம் மாட்ட வைத்துவிடுவான். துணியை உருவி துரத்துவதுடன், ஏமாற்றுவேலையில் ஈடுபட்டதற்காக கடுமையாய்ப் பிரம்படியும் கிடைக்கும்.

பிரார்த்தனை ஆரம்பிக்கு முன் அய்யா எல்லோருடைய நெற்றியையும் சுற்றி வந்து பார்ப்பார். யாராவது நெற்ற்¢க்கு இட்டுக் கொண்டு வராதிருந்தால் அய்யா உடனே சட்டம் பிள்ளைக்குக் கையைக் காட்டுவார். அவன் வெளியே போய், தெருவில் கிடக்கும் சாணியை எடுத்துவந்து நெற்றிக்கு இடாதவன் நெற்றியில் மூன்று வரிகளாக விபூதிப் பட்டை மாதிரிப் பூசி விட்டுவிடுவான். நாழியாக ஆக, சாணி காய்ந்து வறவற வென்று இழுக்கும். அப்புறம் அவன் நெற்றிக்கு இட ஒரு நாளும் மறக்க மாட்டான்.

அடுத்து அய்யா "கடவுள் வணக்கம் பாடுங்க" என்றதும் எல்லோரும் எழுந்து நின்று கைகூப்பியபடி உரத்த குரலில் ஒரே இரைச்சலாய்ப் பாட ஆரம்பிப்பார்கள். குரு வணக்கத்தில் தொடங்கி, விநாயகர், சரஸ்வதி என்று, ஒரு கடவுளுக்கு ஒரு பாடல் வீதம் வள்ளலார், அருணகிரியார் பாடல்களைப் பாடுவார்கள். எல்லோருடைய வாய்களும் அசைகின்றனவா என்று அய்யா கவனமாகப் பார்ப்பார். மற்றபடி இரைச்சலை அவர் கண்டு கொள்வதில்லை.

கடவுள் வணக்கம் முடிந்ததும் முறைபோட்டு மணலில் எழுதுவதும் காப்பி எழுதுவதும் தொடங்கும். மூன்றாம் வகுப்புக்கு மேல்தான் காப்பிநோட்டு. அரிச்சுவடி வகுப்பும், ஒன்று, இரண்டாம் வகுப்புகளும் மணலில் ஒருவன் உரத்து ராகமாய்ச் சொல்லிக் கொண்டே எழுத மற்றவர்கள் பின்பற்றி உரத்துச் சொல்லியபடி எழுதவேண்டும். மாற்றி மாற்றி முறை போட்டுக் கொண்டு தொடர வேண்டும். இப்படி 'அ' தொடங்கி 'ன்' வரை 247 எழுத்துக்களையும் வாய்ப்பாடுகளையும் தினமும் எழுதியாக வேண்டும். இதனால் எழுத்துப் படிவதோடு மனப்பாடமும் ஆகிவிடும். ஒரு பக்கம், அய்யா மேசை மீது அடுக்கி வைக்கப் பட்டிருக்கு காப்பி நோட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்துத் தன் கைப்பட எதாவது வாசகங்களை எழுதிப் பொடுவார். அவற்றை எடுத்து எல்லோரும் அவரவர் நோட்டுகளில் அய்யா எழுதி இருப்பது போலவே அச்சு அச்சாய்க் காப்பி எழுதுவர். அடுத்து எல்லோரும் தலைக்கு எண்ணெய் தடவி தலைவாரி இருக்கிறார்களா, சட்டைப் பொத்தான்களைச் சரியாகப்
போட்டிருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பார். அது முடிந்ததும் அய்யா வருகைப் பதிவேட்டை எடுத்து வகுப்புவாரியாகப் பெயர்க¨ளை அவர்களது சாதியுடன் பதிவு செய்துள்ளபடி, வாசிப்பார். பெயரோடு சாதியையும் சேர்த்து எழுதுவதும் அழைப்பதும்தான் அய்யாவின் வழக்கம். புதுப் புத்தகத்தில் பெயர் எழுதிக் கொடுக்கும்பொதும் அப்படித்தான். அதை யாரும் அப்போது ஆட்சேபிப்பதில்லை. விட்டுவிட்டால் தான் ஆட்சேபணை எழுமே தவிர சேர்ப்பதில் புகார் வராது.

இதற்குள் மணி ஒன்பது ஆகிவிடும். மற்ற ஆசிரியர்களும் வந்துவிடுவர். அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அய்யா தன் கூடத்துக்கு சமையல் செய்யப் பொய்விடுவார். மணி பனிரெண்டு வரை பாடத்திட்டப்படி பாடங்கள் நடக்கும். காலை வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் சாப்பிடப் போய் விடுவார்கள். அவர்கள் போனாலும் பிள்ளைகள் உடனே போய்விட முடியாது. அய்யா வெளியே வந்து ஒரு அரைமணி நேரம் மனக்கணக்குகளை எல்லோருக்கும் போட்டுச் சரி பார்ப்பார். பிறகு "சரி, போய்ச் சாப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க" என்று அனுப்பி வைப்பார். எங்களுக்கு முன் தலைமுறைவரை அதிகாலை பாடியது போல இப்போதும் மதியச் சாப்ப்பாட்டுக்குப் போகும்போதும் ஒரு பாட்டுப் பாடுவது உண்டு.

"சட்டம் சரவை தானெழுதி
சரவா இலக்கத் தொகை ஏற்றி
இட்ட கணக்கும் வாசகமும்
எல்லாக் கணக்கும் பார்த்துவிட்டோம்
வட்டமான சூரியனும்
மதியம் திரும்பி மேற்காச்சு
திட்டம் பண்ணி அனுப்புமையா
திருவடிசரணம் தானே!" - என்று ஒரே குரலில் பாடி விடைபெறுவதுண்டு.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

களஞ்சியம் - 11: பாட்டுக்குப் பாட்டு

எனது களஞ்சியத்திலிருந்து - 11: பாட்டுக்குப் பாட்டு:

"பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்
பாட்டனாரைத் தோற்கடிப்பேன்
எதிர்ப் பாட்டுப் பாட வந்தா
ஏணி வச்சுப் பல்லுடைப்பேன்"

- என்று தெருக் கூத்தில், நடிக நடிகையர் தம் மீது வீசப்படும் பாட்டுக் கணைகளுக்கு அதே பாணியில் பதிலளிப்பது உண்டு. இலக்கியத்திலும் இது போன்று பாட்டுக்குப் பாட்டாலேயே பதிலளித்திருப்பதைக் காணலாம்.

கவிச் சக்கரவர்த்தி கம்பருக்கும், ஔவையாருக்கும் இப்படி ஒரு வாக்குவாதம் நடந்ததாக ஒரு கதை உண்டு. கம்பர் ஔவையை "ஒரு காலடீ நாலிலைப் பந்தலடி!" என்று சொல்லிப் பொருள் கேட்டதாகவும் அதை 'அடீ' என்று தன்னைக் கேலி செய்து பாடியதாகக் கொண்டு ஔவை 'அடா!' என்று வருமாறு அமைத்து எதிர்ப் பாட்டாக கீழ்க்கண்ட பாடலைப் பாடியதாகவும் சொல்கிறார்கள்.

கம்பர் கேட்டது ஒரு கொடியை அடியாகக் கொண்டுள்ளதும் நான்கு இலைகளைப் பந்தல் போல உடையதுமான ஆரைக் கீரையைப் பற்றியதாகும். ஔவை அதற்கு விடை தருவது போலப் பாடுகிறார்:

"எட்டேகால் லட்சணமே! எமனேறும் பரியே!
மட்டில் பெரியம்மை வாகனமே!- முட்டமேல்
கூரையில்லா வீடே! குலராமன் தூதுவனே!
ஆரை அடா சொன்னாய் அடா!

( எட்டேகால்- தமிழ் எழுத்தில் 'எட்டு'க்கு 'அ' என்றும், 'கால்' அளவைக்கு 'வ' என்றும் குறியீடு உள்ளது. அதன் படி, எட்டேகால் லட்சணமே - அவ லட்சணமே! யமன் ஏறி வரும் எருமை மாடே! அழகு கெட்ட மூதேவி(பெரியம்மை)யின் வாகனமாகிய கழுதையே! முழுதும் மேலே கூரை இல்லாத குட்டிச் சுவரே! ராம தூதனாகிய குரங்கே! நீ சொன்னது ஆரைக்கீரையடா.)

இப்படியா கடுமையாக ஏசிக் கொள்வார்கள்? நமது நவீன எழுத்தாளர்களின் 'நாச்சியார்மட' ஏச்சு இதனிடம் பிச்சை வாங்க வேண்டும்!

கம்பரின் எதிரியான ஒட்டக்கூத்தருக்கும் இப்படி ஒரு ஏச்சு கிடைத்திருக்கிறது. குயவர் இனத்தைச் சேர்ந்த புலவர் ஒருவரை " நீ யாரடா?" என்று அகம்பாவத்தோடு கேட்க, அதற்குப் பதிலாக அவர் பாடிய பாடல் இது:

"மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி
யானை முன் வந்து எதிர்த்தவன் யாரடா?' - என்று கேட்டதற்கு

"கூனையும் குடமும் குண்டுசட்டியும்
பானையும் வனை அங்குசப் பையல் யான்" - என்று பதில் வந்தது.

- 'மோனை முதலியவை நன்கு அமைந்த முத்தமிழ்க் கவிதைகளான மும்மதங்களையும் பொழிகின்ற யானையைப் போன்ற எம்முன் வந்து நின்ற நீ யாரடா?' என்று ஒட்டக்கூத்தர் கேட்க, 'நான் சால், குடம், குண்டுசட்டி, பானை முதலிய மண் பாத்திரங்களைச் செய்யும் அழகிய குயவன் ஆவேன்' என்று பதில் கிடைத்தது. 'அங்குசம் - அழகிய குயவன், யானைய அடக்கும் அங்குசம் போன்றவன் என்றும் பொருள். கூனை - சால்.

நமது புதுமைப்பித்தனும் இப்படி ஒரு கவிஞரைச் சாட நேர்ந்தது சுவாரஸ்ய மானது.

'கிராம ஊழியன்' என்ற பத்திரிகையின் ஆண்டுமலரில் புதுமைப்பித்தன் 'ஓடாதீர்' என்றொரு பாடல் எழுதினார். 'வேளூர் வே.கந்தசாமிப் பிள்ளை' என்ற புனைபெயரில் அவர் எழுதிய முதல் பாட்டு இது. அதற்குச் சில மாதங்களுக்கு முன் காலமான எழுத்தாளர் கு.ப.ராஜகோபாலனின் குடும்பத்துக்கு நிதி திரட்டிய தமிழர்களின் தாராள மனப்பான்மை நன்றியறிதலைக் கண்டெழுந்த வயிறெரிச்சலைத்தான், இந்தப்பாடலில்,

"ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்பு கட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
"வானத்து அமரன்
வந்தான் காண்! வந்ததுபோல்
போனான்காண்" என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்.
அடியேனை விட்டுவிடும்". - என்று எழுதினார்.

கலைஞனைச் சாக விட்டுவிட்டு, அவனது புகழுடம்பைத் தூக்கி வைத்துக் கூத்தாடும் ரசிகத்தனத்தைக் குத்திக் காட்ட எழுந்த 'வீராப்புத் தார்க்குச்சி'தான் இந்தப் பாடல்.

'ஓடாதீர்' என்ற பாடலைப் படித்த ஒரு எழுத்தாளர், 'மளிகைக் கடை மாணிக்கம் செட்டியார்' என்ற புனைபெயரில், 'ஓடும் ஓய், உம்மால் ஒரு மண்ணும் ஆகாது' என்று புதுமைப்பித்தன்பாணியிலேயே புதுமைப்பித்தன் பாட்டுக்கு ஒரு எதிர் வெட்டுப் பாடல் எழுதி 'கலாமோகினி' என்ற பத்திரிகையில் வெளியிட்டார். அந்தச் 'செட்டியாரு'க்கு மீண்டும் 'கிராம ஊழியன்' மூலம் புதுமைப்பித்தன் அளித்த பதில் இது:

'உருக்கமுள்ள வித்தகரே' என்ற தலைப்பிலான் அந்தப் பாடலில்,

'ஓடும், உழையும்
உழைத்து உருப்படியாய்
வாழுமென்று-
நம்மிடமே
வித்தாரமாக விளக்கும்
வினோதரே!
பொறுமையுடன் கேட்டிருந்து
புத்திமதி சொல்ல வந்த
புரவலரே
அத்தனைக்கும்
அடியோம் கட்டுப்பாடு!

குப்பைகூளம், செத்தை
கூட்டிவைத்த தூசு தும்பட்டம்,
அத்தனைக்கும்-
உப்பு, பருப்பு,
உளுத்தம்பயறு,
சித்தரத்தை, புளி,
சீமை இலந்தை
எனவே,
செப்பி விலை கூறும்
வாணிபத்துக்கு
ஒத்து வருமோ
உயர் கவிதை?

புத்தி சொல வந்தவர் போல்,
ஏனையா
வித்தாரக் கவிதை
கையாண்டீர்?
ஒத்து வராது
ஓட்டாண்டிப் பாட்டு;
உமக்கேன் இந்தப் பொல்லாப்பு!

விட்டுவிடும்
வேறே கணக்கிருந்தால்
பாரும்!
ஐந்தொகையில் புத்திதனைக்
கட்டியழும்
ஆசைக் கனவெழுப்பும்
அமிஞ்சிப் பையல்களின்
காசுக்குதவா
கவைக்குதவா,
கதையிலே
செல்லாதீர்!
புத்தி சொல வந்தவரே
புத்தி தடுமாறி விட்டால்
புத்தியெமக் கெப்படியோ
சித்திக்கும்!
வீணாம் கனவுகளை
எங்களுக்கே விட்டு
பெட்டியடிச் சொர்க்கத்தில்
புகுந்து விடும்!

.........................
........................

சொத்தைக் கதை எல்லாம் அளக்காதீர்
ஒற்றச்சிதையினிலே
உம்மெல்லோரையும்
வைத்து எரித்திட்டாலும்
வயிற்றெரிச்சல் தீராது! - என்று திட்டித் தீர்த்தார்!.

- மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

Wednesday, November 17, 2004

வருணனைகள்- உவமைகள் - 31: நாஞ்சில்நாடன்

வருணனைகள்- உவமைகள் - 31

நாஞ்சில்நாடன் படைப்புகளிலிருந்து:

1. நிதானமாகப் பறந்து கொண்டிருந்தது நிலவு. பச்சைக்கும் பழுப்புக்குமான இடைநிறத்தில் சாய்ந்து கிடந்தன நெற்புதர்கள்.காற்றில் பழுக்கும் நெல்லின் பரவிய மணம். நிலவு கரைந்த காற்று சலசலக்கச் சஞ்சலப்பட்டது.

- 'பாலம்' கதையில்.

2. கொம்புச் சீப்பை எடுத்துப் 'பறட் பறட்' டென்று தலை வாரினான். கோவிலுக்குப் போவதால் திருநீறு பூசினால் நல்லதோ என்று அவனுக்குத் தோன்றியது. சந்தேகத்தின் பலனைச் சாமிக்கு அளித்து மூலையில் தொங்கிய தேங்காய்ச் சிரட்டைக் கப்பரையிலிருந்து திருநீற்றை அள்ளிப் பூசினான்.

- 'ஆசையெனும் நாய்கள்'.

3. ஏனோ தெரியவில்லை., சமீப காலமாய்த் தமிழ் சினிமா தியேட்டருக்குள் நுழைவது என்பது ஏதோ தகாத காரியம் செய்வது போன்ற கூச்சத்தை ஏற்படுத்துவதாக இருந்தது. காமிராக்கள் கிராமத்தின் அழகைக் காட்டிக் கொண்டே இருக்கையில் ஒலிபெருக்கிகள் நரகலை உமிழ்ந்து கொண்டிருந்தன.

- 'ஒரு வழிப் பயணம்'.

4. தெரு முற்றங்களில் தெளிபடுகிற சாணித் தண்ணீரின் சளசளப்பு, உழப் போகிற மாட்டுக்குத் தண்ணீர் வைக்கின்றதால் எழும்பும் உலோக வாளிகளின் கிணுக்காரம், 'கடக் கடக்' என்று வட்டக் கொம்புகளைப் பிணைத்துக் கொண்டு செல்லச் சண்டை போடும் எருமைக் கடாக்கள், கழுநீர்ப் தொட்டிக்குள் முகத்தை முக்கிமூச்சு விட்டுக் 'கட கட'வெனச் சத்த மெழுப்பும் எருமைக் கன்று, சம்பாத் தவிட்டின்
ரேகைகள் கண் மட்டத்துக்கு வட்டம் போட நாடி மயிர்களிலிருந்து தண்ணீர் சொட்ட மேலுதட்டை உயர்த்தி£ இள்¢த்து 'ங்றீங்ங்....'என்று குரலெழுப்பும் தாய் எருமையின் பின் புறத்தை முகர்ந்து பார்த்து நக்குகின்ற இரண்டு பல் கிடாக் கன்று, "சவத்துப் பய சாதிக்கு ஒரு
வகுதரவு கெடையாது!" என்று கிடாக்கன்றின் புட்டியில் அழிசன் கம்பால் சாத்துகிற செல்லையா-

இதையெல்லாம் மௌனமாய்க் கவனித்துக் கொண்டு கட்டிலில் கிடந்து புரண்டான் சிதம்பரம்.

- 'தேடல்'.

5. பெட்டியினுள் ஏறி இருக்கையில் அமர்ந்தான். ரயில் புறப்பட இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தன. ஒரு சின்னப் படையெடுப்பு நடத்துவது போல அந்தக் குடும்பம் ஏறியது.

- 'சிறு வீடு'.

6. வேறு குத்தகையில் தான் என்ன வருமானம்? தென்னை, பனைகளுக்குக் கிளைகள் இல்லை என்பதால் பெரிய லாபமில்லை. மாப்பிள்ளை பிடித்த காசு பிள்ளைஅழிக்க ஆச்சு என்பது போல், தென்னை மரங்கள் உச்சிக் கொண்டையில் நாகமணி போல் சேமித்து வைத்திருக்கும் காய்களைப் பறித்தால் ஏற்றுக் கூலிக்குத் தான் சரியாக இருக்கும்.

- 'புளி மூடு'.

7. வைத்தியனாருக்குப் பிள்ளைகள் கிடையாது. ஒரு புராண கதா பாத்திரம் போல இருந்தார். காதில் வெள்ளைக் கடுக்கன், முன்தலை சிரைத்த குடுமி, வெள்ளை உடம்பெல்லாம் வெள்ளை ரோமம், சிறிய தொந்திக்கு மேல் கட்டிய அகலக்கரை வேட்டி,தோளில் துவர்த்து, மூக்குப் பொடி வாசம் வீசும் மீசையற்ற முகம், கைத்தடி, மருந்துப் பெட்டி....கொண்டு போன ஆறவுன்சு குப்பியில் 'முள்ளெலித் தைலம்' என்று ஒரு சொந்தத் தயாரிப்பை நாலு அவுன்சு ஊற்றிக் கொடுத்தார்.

- 'முள்ளெலித்தைலம்.'

8. அறையினுள் இருள் சேமித்து வைத்திருந்தார்கள் போலும்.

- 'பேய்க்கொட்டு'.

9. சுப்பையாப் பிள்ளைக்கு ஒரே புழுக்கமாய் இருந்தது. காற்று நிறைமாத கர்ப்பிணி போல அசைந்தது.

- 'சைவமும் சாரைப்பாம்பும்'.

10. அது 1951ல் கட்டப்பட்ட கட்டிடம். மாடிப்படிகள், கைப்பிடிச் சுவர்கள் எல்லாம் மூளிபட்டுக் கிடந்தது. சொசைட்டிக் காரர்கள் எல்லா நிலைகளிலும் பதிமூன்று வாட் பல்பு போட்டிருந்தார்கள். வெளிச்சுவர்கள் சுண்ணாம்பு கண்டு பதினேழு ஆண்டுகள் ஆகியிருந்தபடியால் மின் விளக்கின் ஒளியில் முக்கால் பாகத்தைச் சுவர்கள் உண்டு ஜீவித்திருந்தன. எலியன்று மூன்றாம் மாடியிலிருந்து யாரையோ சந்தித்து விட்டுத் திரும்பிக் கொண்டிருந்தது அவசரமாக.

- 'சதுரங்கக் குதிரை' நாவலில்.

- தொடர்வேன்.

- அடுத்து இந்திராபார்த்தசாரதி படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

Tuesday, November 16, 2004

நினைவுத் தடங்கள் - 25

எனது ஆரம்பக் கல்வி அரசு உதவி பெற்ற துவக்கப் பள்ளியில்தான் என்றாலும் அது பழைய திண்ணைப் பள்ளிக்கூட பாணியில் தான் நடைபெற்றது. அதன் நிர்வாகியான லிங்காயத் இன சிதம்பரம் சாமிநாத அய்யர், பள்ளிப் பாடத் திட்டத்துக்கு அப்பாற் பட்டு எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தவைதான் இன்றும் நிலைத்திருக்கின்றன. அவரை நாங்கள் 'அய்யா' என்றுதான் சொல்லுவோம். அப்படித்தான் சொல்ல வேண்டும். 'சார்' என்றெல்லாம் சொல்லக் கூடாது. 'சாராவது, மோராவது' என்று அவர் கண்டிப்பார்.

அவர் ஆசிரியர் பயிற்சி பெற்றவரில்லை. பள்ளி நேரம் காலை 9 மணி முதல் மாலை 4.30 வரை என்றால் அதற்கு முன்னும் பின்னும், எல்லா வகுப்புகளையும் அவரே பார்த்துக் கொள்வார். பள்ளி நேரத்தில் மற்ற பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பார்த்துக் கொள்வர்கள். அய்யா பார்த்துக் கொள்ளும் நேரம் தான் உருப்படியானது, கட்டுப்பாடும் ஒழுங்கும் கொண்டது. பிள்ளகள் பயந்து அமைதி காக்கும் நேரமும் அதுதான்.

அய்யாவின் நேரம் அதிகாலையிலேயே தொடங்கி விடும். எல்லோரும் பொழுது புலருமுன்னே எழுந்து, கைகால் சுத்தம் செய்து நெற்றிக்கு இட்டுக்கொண்டு, புத்தகம் எதுவுமில்லாமல் சிலேட்டு மட்டும் எடுத்துக் கொண்டு, பள்ளிக்கு வந்து விட வேண்டும். முதலில் வருபவன் 'வேத்தான் சீட்டு' என்கிற வரிசைப் பட்டியலை, சிலேட்டில் பதிவு செய்வான். முதலில் வந்தவன் 'வேத்து' - அடுத்து வருபவன் 'ஒன்று' எனப் பதிவாகும். எல்லோரும் கையெழுத்து தெரியுமுன்னரே வந்து சேர்வார்கள். அய்யா குடும்பம் இல்லாதவர் என்பதால் பள்ளியிலேயே - ஊர் மக்கள் கொடுத்த பொதுச் சாவடி- தங்கி இருப்பவர், சரியாக ஆறு மணிக்கு எழுந்து வெளியில் வருவார் - அக்குளில் மணிப்பிரம்புடன். அதுவரை மூச்சு விடுவதுகூடக் கேட்காதபடி எல்லோரும் அமைதியாக இருக்க வேண்டும். முதலில் வந்த 'வேத்து'- பட்டியலை வாசிப்பான். வேத்துக்கு அடி கிடையாது. அதனால் முதலில் வரப் போட்டி போடுவோம். பிறகு, வந்த வரிசைப்படி நீட்டும் கரங்களில் வரிசை எண்படி பிரம்படி விழும். பிரம்படி என்றால் பலமாக இராது. கடைசி அடிக்கு முன் வரை லேசாகப் பிரம்பு ஆடி உள்ளங்கையைத் தட்டும். கடைசி அடி சற்றுப் பலமாக விழும். 'உஸ்' என்று கையை உதறி வாயால் ஊதிக் கொள்கிற மாதிரி இருக்கும். அடி வாங்குபவரது முகத்தையோ அது காட்டும் வேதனையையோ அய்யா கவனிப்பதில்லை. முதலாக வந்தவனைப் பாராட்டுவதோ, கடைசியாக வந்தவனைக் கண்டிப்பதோ இல்லை. இது பிள்ளைகள் விடியற்காலையில் சீக்கிரம் எழுந்திருக்கவும் அமைதியாக இருக்கவுமான பயிற்சியே தவிர வேறு கண்டிப்பு கிடையாது.

'வேத்தடி' முடிந்ததும் வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான். திரும்பு முன் எல்லோ ரும் உரத்த குரலில் ராகம் போட்டு ஒரு பாட்டு எங்களுக்கு முன் தலைமுறைகளில் பாடுவது உண்டு.

'காலமே எழுந்திருந்து
கைகால் சுத்தம் செய்து
கோலமாய் நீறும் பூசி
குழந்தைகள் பசியும் ஆற,
பாடமும் சொல்லிக் கொண்டோம்
'படியடி' ஏந்திக் கொண்டோம்
சீலமாய் அனுப்புமையா
திருவடி சரணம்"

- என்று தண்டமிட்டு சிலேட்டுடன் வீடு திரும்புவார்கள். பாட்டில் குறிப்பிட்டுள்ளபடி நிகழ்ச்சிகள் நடக்க வேண்டுமென்பதில்லை. விடியற்காலைப் பள்ளி முடிந்ததும் பாடியாக வேண்டிய சம்பிரதாயம் அது. போய்க் குளித்து. சாப்பிட்டு, சீக்கிரம் புத்தகங் களுடன் திரும்பவேண்டும். ஆனால் இதற்கு 'வேத்தடி' கிடையாதாகையால் ஓடிவர வேண்டியதில்லை. நிதானமாக வரலாம். ஆனால் ஒன்பது மணிக்குள் வரவேண்டும். அப்புறம் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பொறுப்பு. அய்யா மாலைப் பள்ளி நேரம் முடிகிற வரை தலையிட மாட்டார். பிள்ளைகளுக்கு சுதந்திரமான நேரம் அது.

-மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Friday, October 29, 2004

களஞ்சியம் 10 - அசலும் நகலும்

கவிஞர்கள் தங்களுடைய முன்னோடிகளின் படைப்புகளிருந்து சொல்லாட்சிகள், உவமைகள், வருணனைகள், கருத்துக்களை அழகாக எடுத்தாண்டிருப்பதைப் பார்க்கிறோம். திருக்குறள் அப்படி கம்பனது காவியத்திலும் பிறகாப்பியங்களிலும் நிறைய எடுத்தாளப் பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் தன் சினிமாப் பாடல்களில் பழம்பாடல்களையும் பாரதியின் பாடலையும் முன் மாதிரியாகக் கொண்டு அதே சொல்லாட்சி, சந்தம், யாப்புகளை அசலைப் போலவே - இன்னும் சொன்னால் அசலை விடவும் அற்புதமாய்ப் போலச் செய்திருக்கிறார். அவரது 'அத்திக்காய் ஆலங்காய்...' பாடலும், 'உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ.....' போன்றவை தனிப்பாடல்கள் சிலவற்றின் நகலாக இருப்பதை, தனிப்பாடல் திரட்டுகளைப் படித்தவர் அறிவர். அவரது 'மெதுவா மெதுவா தொடலாமா?' என்பதும், 'வளையல், வளையல் கல்யாண வளையலுங்க....' என்பதும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் ஆங்கிலக் கவிதைகளான 'பல்லக்குத் தூக்கிகள்'(Palanquin Bearers) - 'Lightly O lightly we bear her along' என்பதையும், 'வளையல் விற்பவர்கள்'(Bangle sellers) - 'Bangle sellers are we, who bear the shining loads to the temple fair...' என்பதையும் நினைவூட்டுவன.

இவையெல்லாம் ஓரளவே போலச் செய்யப்பட்டவை. ஆனால் பாரதியின் கண்ணன் துதியான,

'காயிலே புளிப்பதென்னே? கண்ணபெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ணபெருமானே!'

என்ற வரிகளை அப்படியே அடியற்றி அதே பாணியில் 'அம்பிகாபதி' திரைப்படத்தில் பாடியுள்ள பாடல் அற்புதமானது.

'கண்ணிலே இருப்பதென்ன? கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ? கன்னி இளமானே!
கார்குழலை ஏன் வளர்த்தாய்? கன்னி இளமானே
காளையரைக் கட்டுதற்கோ? கன்னி இளமானே!
பல்வரிசை முல்லையென்றால் கன்னி இளமானே,
பாடும் வண்டாய் நான் வரவா? கன்னி இளமானே!
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே!
அன்ன நடை பின்னுவதேன்? கன்னி இளமானே
ஆர்விழிகள் பட்டனவோ கன்னி இளமானே!'

- காலம் பல கடந்தும் காதுகளில் ரீங்கரிக்கிற இப்பாடலை மறக்க முடிகிறதா?

இன்றைய நவீன கவிஞர்களும் இதே போல சங்கப் பாடல்களை அடியற்றி போலச் செய்திருக்கிறார்கள்.

பிசிராந்தையார் என்ற புலவரை 'இவ்வளவு வயதாகியும் உங்களது தலை முடி நரைக்காதிருப்பது எப்படி?' என்று கேட்டபோது அவர் அளித்த பதிலாக ஒரு பாடல் 'புறநானூறு' தொகுப்ப்¢ல் உள்ளது:

'யாண்டு பல ஆக
நரையில ஆகுதல்
யாங்காகியர் என
வினவுதிராயின்
மாண்ட என் மனைவியடு
மக்களும் நிரம்பினர்
நான் கண்டனையர்
என் இளையரும்
வேந்தனும் அல்லவை
செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய
கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே!'

இதை ஒட்டி கவிஞர் சிவசக்தி என்பவர் எழுதிய ரசமான கவிதை இது:

`யாண்டு சில ஆகியும்
நரை பல ஆகுதல்
யாங்கு ஆகியர் என
வினவுதிர் ஆயின்.....
மாண்பிலா மனைவி
தறுதலைத் தனையர்
சுரண்டிடும் சுற்றம்
நன்றியிலா நண்பர்
அரசியல் பேய்கள்
ஆகியோர் உறைகாடு
யான் வாழும் காடே!

காலத்துக் கேற்ற பாட்டு தானே!

கவிஞர் மீராவும் இதே போல `செம்புலப் பெயல் நீரார்' என்ற சங்கப் புலவரின் பாடலை ஒட்டி அங்கதச் சுவையடு ஒரு கவிதை எழுதியுள்ளார்.

`யாயும் யாயும்
யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
யானும் நீனும்
எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே! - இது சங்கப் பாடல்.

மீரா பாடுகிறார்:

`என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
நானும் நீயும் உறவின்முறை
எனது ஒன்று விட்ட
அத்தை பெண் நீ
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!

- மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

Monday, October 18, 2004

நினைவுத் தடங்கள் - 24

இளமைப் பிராய நினைவுகள் எல்லோருக்கும் இனிமையானது. அது மீண்டும் வராதா என்று ஏக்கமும் ஏற்படுவதுண்டு. 'மீண்டும் வாழ்ந்தால்.........' என்று ரைட் ஆனரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார். அது போல மீண்டும் இளமைப் பருவத்திலிருந்து வாழ்க்கை தொடர முடிந்தால்............ என்று நடக்க சாத்யமில்லாத நினைப்பு எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. அவ்வளவு சுவாரஸ் யமான இளமை அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். காரணம் இன்றைய வாழ்க்கையை வடிவமைத்தது அப்போது ஏற்பட்ட சூழ்நிலையே. குறிப்பாக இளமைக்கால கல்விச் சூழ்நிலை ஒருவரது வாழ்வில் முக்கியமானது. எனக்கு அமைந்த இளமைக் கல்விச் சூழ்நிலை இன்றைய- நெறியான ரசனை மிக்க வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. அதற்கு நான் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் செலுத்த வேண்டியது எனக்கு அட்சராப்பியாசம் செய்து வைத்து எண்ணும் எழுத்தும் பிழையறக் கற்பித்த எனது ஆசான் சி.எஸ்.சாமிநாத அய்யர் என்கிற வீரசைவருக்குத் தான்.

அப்போதெல்லாம் கல்விச் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தவர்கள் லிங்காயத்துகள் என்கிற வீரசைவர்கள்தான். சில பகுதிகளில் அவர்கள் சாத்தாணி வாத்தியார்கள் என்று அழைக்கப் பட்டார்கள். எங்கள் ஆசிரியர் எங்கள் அப்பாவின் இளமைக் காலத்திலேயே சிதம்பரத்திலிருந்து இளைஞராக எங்கள் ஊருக்கு வந்தவர். மூன்று தலைமுறையினர்க்குக் கற்பித்தவர். ஊர்ச் சாவடியை பள்ளிக்கூடம் நடத்த மக்கள் அவருக்கு அளித்தார்கள். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் அரசு அங்கீகாரம் இல்லாத திண்ணைப் பள்ளிக்கூடமாகத்தான் நடத்தினார். பிறகு அதை அரசு உதவி பெறும் பள்ளியாக- 'இந்து எய்டட் எலிமெண்டரி ஸ்கூல்' ஆக உயர்த்தினார்.

'கோல்டுஸ்மித்' எழுதியுள்ள 'கிராமத்துப் பள்ளி ஆசிரியர்" (The village school maaster) போல சகலமும் அறிந்தவர் அவர். பள்ளி அலுவலுக்கிடையே தேடி வரும் கிராம மக்களுக்கு, பஞ்சாங்கம் பார்த்து நாள் பார்த்துச் சொல்வார். 'பிராமிசரி நோட்' எழுதித் தருவார். இன்னும் படிப்பறிவற்ற அம் மக்களுக்குப் பல வகையிலும் உதவி, அவர்கள் மத்தியில் ஒரு மரியாதையை ஏற்படுத்துக் கொண்டிருந்தார்.

அவரது பள்ளியில் படிப்பு ஆறு வருஷங்கள். அரிச்சுவடி என்பதுதான் தொடக்க வகுப்பு. ஒரு ஆண்டு முழுதும் தமிழ் அரிச்சுவடி முழுதும் கற்ற பிறகே முதல் வகுப்பு. அகரம் தொடங்கி 247 எழுத்துக்களையும் ஆற்றுமணல் பரப்பப் பட்ட தளத்தில் உரத்து உச்சரித்த படியே எழுதிப் பழக வேண்டும். அப்படியே நூறு வரையிலான எண்ணிக்கை யும் மணலில் எழுதியே பாடமாக வேண்டும். இதில் தேர்ச்சியானதும் அரிச்சுவடியில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள் எனப்படிப் படியாய் வாக்கிய அமைப்புவரை படிக்கப் பயிற்சி தருவார். இடையில் கதையும் பாட்டும் மூலம் கதை கேட்கவும் சொல்லவும் பயிற்சி. முதல் வகுப்பில் 'உலகநீதி', இரண்டாம் வகுப்பில் 'ஆத்திச் சூடி', மூன்றாம் வகுப்பில் 'கொன்றை வேந்தன்', நான்காம் வகுப்பில் 'வெற்றி வேற்கை', ஐந்தாம் வகுப்பில் 'விவேக சிந்தாமணி' மற்றும் 'மூதுரை', 'நல்வழி' ஆகிய நீதி நூல்களும் ஏதாவது ஒரு சதகம் அவரவர் வீட்டு மதத்துக்கேற்ப 'அறப்பளீசுர சதகம்', திருவேங்கட சதகம்' என்று ஆறு ஆண்டுகளில் தமிழ் பிழையற எழுதவும் படிக்கவும் நீதி நூல்களில் பயிற்சியும் பெற்றேன். அது இன்று எனது இலக்கிய ரசனைக்கும் படைப்புக்கும் பெரிதும் காரணமாய் இருக்கிண்றன. தினசரி காலையில் அவரே கைப்பட தலைப்பு எழுதிக் கொடுத்து அனைவரும் காப்பி எழுத வேண்டும். இதனால் கையெழுத்து அழகாய் எழுதப் பயிற்சி கிடைத்தது.

இன்றைய ஆரம்பக் கல்வியில் எண்ணிலும் எழுத்திலும் இத்தகைய முறையான பயிற்சி இல்லாதால் தான் இன்றைய இளைஞர்க்கு உச்சரிப்பிலும், எழுத்திலும், கணிதத்திலும் இலக்கியத்திலும் தடுமாற்றத்தைப் பார்க்கிறோம். ஆசிரியர்களிடமும் அத்தகைய அர்ப்பணிப்பையும் சேவை மனப்பாங்கையும் இன்று காண முடியாமையும் இளைஞர்களின் கல்வித் தரக் குறைவுக்குக் காரணம். ஒரு மாணவனுக்கு மாதம் எட்டணா மட்டும் சம்பளமாய் வாங்கிக் கொண்டு கற்பித்து வல்லவனாய் ஆக்கிய அந்த ஆசிரியருக்கு மாறாக- இன்றைய ஆயிரக்கணக்கில் கறந்து கொண்டு பிள்ளைகளை வெறும் மனப்பாட எந்திரங்களாய் ஆக்கிவரும் கான்வெண்ட் படிப்பை எண்ணும்போது மனம் வெதும்பத்தான் முடிகிறது.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்

வர்ணனைகள் உவமைகள் 30 - ஜெயமோகன்

நான் ரசித்த வருணனைகள் உவமைகள் - 30: ஜெயமோகன் படைப்புகளிலிருந்து:


1. மலையன் வீடுவழி ஓடும் ஓடையை அங்கிருந்து பார்க்க முடிந்தது. பல நூறு அடி ஆழத்தில் வெள்ளைச் சரிகை ஒன்று விழுந்து கிடப்பது போலிருந்தது. வெவ்வேறு நீல நிறங்களில் சிறிய மலைகள்; அப்பால் அகஸ்தியர்கூட மலையில் இளநீலத் திரை.
மலைகளே விதம் விதமான படுதாக்கள் தான்.

- 'நச்சரவம்' கதையில்.

2. எனக்கு மிகவும் பரிச்சயமான ஆறு இது. என் இளமைப் பருவத்துத் தோழி. மழையில் அவளுடைய துள்ளல். இரவில் அவளுடைய மௌனம். பனி பெய்யும் காலையில் அவளது நாணம். எவ்வளவு நெருக்கமானவள் இவள் எனக்கு ........

- 'நதி'.

3. உற்சாகமான மரம் அது. இந்த சோகம் அதற்கு அபூர்வமானது. காலையில் வானம் கழுவிச் சாய்த்து வைக்கப்பட்ட பெரிய நீல நிறக் கண்ணாடி போலத் தோன்றும்போது பார்க்க வேண்டும் அதை. வானத்தைத் துடைக்க அசையும் பட்டுக் குஞ்சம் போலிருக்கும். கூந்தல் காற்றில் மிதக்க, இடையசைத்து ஆடும் நளினமான பெண்மை. காலையில் பச்சைந்¢றம் சற்று நீர்த்துப் போயிருக்கும். ஒளியின் பிரகாசம் ஏற ஏற, ஓலைப் பரப்பு மின்னத் தொடங்கும். புள்ளியாக ஒளித்துளிகள். அவை காற்று வீசும் போது வரிசை குலையாமலேயே அசையும்.

- 'கண்'.

4. அந்தக் காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப் பொழுதில் கூட நின்ற யானை மறையும் இருட்டு. அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை. புலி போட்ட மீதத்தை நரி தின்கிற காடு. தரை தெரியாமல் செடிப் படப்பு. வானம் தெரியாமல் இலைப் படப்பு. வழியாக மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒத்தையடிப் பாதை. அது பேச்சிமடி தாண்டி, பெருஞ்சாணி மலை தாண்டி, நெடு மங்காடு சுரம் தாண்டி அனந்த பத்மநாபன் பாதங்களில் முடிகிறது. காட்டுமிருகத்தின் நகமும், காணிக்காரன் காலுமல்லாமல், நாட்டுவாசியின் வாசம்கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது.

- 'படுகை'.

5. மரத்தாலும் பிரம்பாலும் ஆன ஒரு சாமானைத் தூக்கிக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டார் மேனோன். அது ஒட்டடையும் கரியும் படிந்து இருந்தது. பகல் ஒளியில் ஏதோ அந்தரங்க உறுப்பைத் திறந்து வைத்தது போல அசிங்கமாக இருந்தது.

- 'பல்லக்கு.

6. வானத்தைத் தொட்டு ஏதோ எழுத முனையும் தூரிகை போல நின்றிருந்தது ஆலமரம்.

- 'வனம்'.

7. பாடல் பெற்ற ஸ்தலம். வசைஎன்றும் சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிறபோக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும் நடராசனை எட்டு வரியில் இடக்குப் பண்ணி விட்டுப் போனார்.

- 'சிவமயம்'.

8. சொடேரென்று மங்கான்சிங் சவுக்கை உதறினான். சொடேரென்று ஒலி என் மீது தெறித்தது. என் உடம்பு மெல்ல நடுங்க ஆரம்பித்தது. அந்தக் கணம் ஒன்றை அறிந்தேன்.சவுக்கு ஒரு பொருளல்ல. அது ஒரு இருப்பு. அதன் கருமை நெளியல், அதன் சீறல், ஈவிரக்கமற்ற ஒலி.

- 'சவுக்கு'.

9. அச்சுக்காரியஸ்தனுக்கு ஆஸ்த்துமா. அந்தியில் ஒரு மாதிரி, காலையில் வேறு மாதிரி. தம்பிரானுக்கு முன் ஒரு முகம். அடியாளர்களிடம் இன்னொரு முகம். நுணுக்கமாக இரண்டு தாள்களை ஒட்ட வைத்து உருவாக்கப்படும் அட்டைக் காகிதம் போல் ஒரு இரட்டை மனிதர் அவர்.

- 'லங்காதகனம்'.

10. படிகளில் கூட்டம் பெருகியது. ஒரு ஆறு. மேலேறும் ஆறு. கால்களினால் ஆன ஆறு, புடவைகளால், வேட்டிகளால், பேண்டுகளால், செருப்புகளால் ஆன ஆறு.

- 'ஏழாம் உலகம் நாவலில்'.

- தொடர்வேன்.

- அடுத்து நாஞ்சில் நாடன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்

களஞ்சியம் 9: வறுமைப்பாட்டு

எனது களஞ்சியத்திலிருந்து - 9 - வறுமைப் பாட்டு:

'கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார். 'நல்குரவு' என்று ஒரு அதிகாரமே வறுமையின் துன்பம் பற்றி வள்ளுவர் எழுதி இருக்கிறார். வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால் வறுமையேதான் என்கிறார்.

'இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது'.

அது மட்டுமல்ல - வறுமை என்கிற பாவி ஒருவனைப் பற்றிக் கொண்டால் இம்மை இன்பம் மட்டுமின்றி மறுமை இன்பமும்கூட இல்லாது செய்து விடுமாம்.

'இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்' என்கிறது குறள்.

இந்த இல்லாமை என்கிற வறுமை அதிகமும் புலவர்களையே பீடிக்கிறது. அதன் கடுமை தாளாமல் அது தரும் துன்பத்தையும் அவர்கள் கவிதை ஆக்குகிறார்கள் என்பதைப் பழம் பாடல்கள் நமக்குச் சொல்கின்றன.

வறுமையின் துன்பத்தை அனுபவித்த சுந்தர கவிராயர் என்கிற புலவர், வறுமை வந்தால் என்னென்னவெல்லாம் அரிதாகிவ்¢டும் என்று ஒரு பாடலில் சொல்கிறார். 'வறுமை ஒருவனை வந்து அடையுமானால் உண்பதற்குச் சோறு கிடைப்பது அரிதாகும்; அறுசுவை உணவும், பால், தயிர், நெய் மூன்றும் கிடைப்பதற்கு அரிதாகும்; பகற்பொழுதில் வெற்றிலைப் பாக்கு கிடைப்பது அரிதாகும்; இருள் நிறைந்த நள்ளிரவ்¢ல் அன்புடைய காதலி அருகில் இருப்பது அரிதாகும்; படுத்துத் தூங்குவதற்குப் பாய் கிடைப்பது அரிதாகும்; உடம்பை மறைப்பதற்குரிய ஆடை கிடைப்பது அரிதாகும்,' என்கிறார்.

அன்னம் உணற்கு அரிதாம்;
ஆமாறு மூன்றும் அரிதாம்;
பள்ளம் அரிதாம்
பகலின்கண்; - துன்ந்¢சியில்
நேயம் அரிதாகும்;
நித்திரைக்கும் பாய் அரிதாம்;
காயக்கு அரிதாம்
கலை.

(அன்னம் - சோறு; ஆமாறு மூன்று - ஆவினிடத்தில் இருந்து பெறும் பால் தயிர், நெய் ஆகிய மூன்று; பள்ளம் - வெற்றிலைப் பாக்கு; துன் - நெருங்கிய; நேயம் - அன்பு, அன்புடைய காதலி; காயம் - உடல்; கலை - ஆடை.)

'வறுமையானது உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்திலும் இழிவான சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும்' என்கிறார் வள்ளுவர்.

'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு வரும்.'

இதனை விவேக சிந்தாமணி உருக்கமாகச் சித்தரிக்கிறது.

'தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரங் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்:
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்;
உலகெலாம் பழிக்கும் தானே.

பொறுக்க முடியாத வறுமை ஒருவனுக்கு வருமானால், பலர் கூடிய அவைக்குள் செல்ல அவனுக்கு நாணம் உண்டாகும். வேங்கையைப் போன்ற அவனது வீரமும் குன்றி விடும். விருந்தினரைப் பார்க்க நேரின் வெட்கம் ஏற்படும். மலர்க்கொடி போன்ற மனை விக்கு அச்சப்பட நேரிடும். அற்பருடன் சேருமாறு செய்யும். மென்மேலும் வளர வேண்டிய அறிவும் குறையும். உலகமெல்லாம் அவனைப் பழிக்கும்.

'வறுமைக்கு ஆட்பட்டவன், நேற்றும் என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைச் செய்த வறுமை, இன்றும் என்னை வந்து துன்புறுத்துமோ?' எனத் தினமும் அஞ்ச வைக்கும் என்கிறார் வள்ளுவர்.

'இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.'
(நெருநல் - நேற்று; ந்¢ரப்பு - வறுமை)

மதுர கவியார் என்னும் புலவர் வறுமையால் மிகவும் வாடினார். காளத்தியப்பர் என்கிற வள்ளலைத் தேடி தன் வறுமை தீரப் பரிசில் பெறச் சென்றார். வழியில் ஒரு சத்திரத்தில் இரவு தங்கும்படி நேர்கிறது. படுத்தவரின் சிந்தனை விரிகிறது. வறுமையை விளித்து, 'ஏ வறுமையே! நிழலைப் போல என்னைப் பின்பற்றி என்னோடு இவ்வளவு நாட்கள் திரிந்து வருந்தினாய். நாளைக்கு இருப்பாயோ? நாளைக்கு நான் திருநின்றை யூருக்குப் போய் வள்ளல் காளத்தியப்பரைப் பார்த்தபின் என் பாடலைக் கேட்டு உன்னை அவர் ஓட்டிவிடுவார். அதற்ககப்புறம் நீ எங்கோ நான் எங்கோ? போனால் போகிறது! இன்று மட்டும் சற்றே என்னோடு இருந்து விட்டுப் போ!' என்று நக்கலாகப் பாடுகிறார்.

`நீளத் திரிந்து உழன்றாய்
நீங்கா நிழல் போல
நாளைக்கு இருப்பாயோ
நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால்
நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே
இரு!

(உழன்றாய் - வருந்தினாய்; நின்றை - திருந்¢ன்றையூர்)

'இப்படி வறுமையில் வாடுபவர் நெருப்பிலே கூட இருந்து உறங்குதலும் கூடும்; ஆனால் வறுமை வந்துற்றபோது யாதொன்றாலும் உறங்குதல் அரிதாம்' என்கிறார் வள்ளுவர்.

'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்ப்¢னுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.'

புலவர்கள் தாம் வறுமையால் வாடுகிறவர்களா வேறு யாரும் இல்லையா என்றால் அந்தகக் கவி வீரராகவ முதலியார் எனும் பெரும் புலவர் எப்போதும் வறுமை நீங்காத எட்டு பேரைப் பட்டியலிடுகிறார்

'கவிகற்றவர்க்கும், கணிகற்றவர்க்கும், கம்மாளருக்கும், ஓவிகற்றவர்க்கும், உபாத்திகளுக்கும், உயர்ந்த மட்டும் குவிவைக்கும் ஒட்டர்க்கும், கூத்தாடிகட்கும், குருக்களுக்கும் இவரெட்டுப் பேர்கட்கு நீங்கா தரித்திரம் என்றைக்குமே!'

பாட்டிசைக்கும் பாவலர்க்கும், சோதிடம் கணிக்கத் தெரிந்தவர்க்கும், உலோகவேலை செய்யும் தொழிலாளருக்கும் , ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உயரமான சுவர் வைக்கிற ஒட்டர்களுக்கும், கூத்தாடும் நடிகர்களுக்கும், புரோகிதர்களுக்கும், வறுமை எப்போதும் நீங்காது.

இன்றைக்கு அந்தகக் கவி வீரராகவர் இருந்தால் ஆசிரியர்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கி விடக் கூடும்!

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்

வருணனைகள் உவமைகள் - 29: வண்ணதாசன்

நான் ரசித்த வருணனைகள் உவமைகள் - 29: வண்ணதாசன் படைப்புகளிலிருந்து

1. தொம்மென்று அறைக் கதவை வீசியடைத்தான். அதிர்ச்சியில் கொடியில் கிடந்த பாண்ட்ஸ், ஹேங்கரிலிருந்து வழ வழத்து- ஒரு கீழிறங்குகிற பாம்பை நினைவூட்டியபடி- தரையில் சரிந்தது.

- 'பூனைகள்' கதையில்.

2. டைப்பிஸ்ட் கம்-க்ளெர்க் என்று ஒரு அவசரமான நியமனத்துடன் யாரும் எதிர்பாராத அலுவலகச் சூழ்நிலையில் நின்றபோது 'வேறு ஆளே கிடைக்கலையா, கருவாட்டுக் கூடையிலே பொறுக்கின மாதிரி' என்று யாரோ பின்னால் சொல்ல அவள் ஒவ்வொரு சீட்டாக வணங்கி அறிமுகமாகிக் கொண்டிருந்தாள்.

- 'சில பழைய பாடல்கள்'.

3. அந்தக் குவார்ட்டர்ஸ் வீட்டுக்கு முன் செல்லப்பா நிற்கையில் உள்ளே வரவிடாமல் தடுப்பதுபோல ஒரு நார்க்கட்டில் குறுக்குவாட்டில் நிறுத்தப் பட்டிருந்தது. அதன் கால்கள் நான்கும் முட்டவரும் கொம்புகள் போன்று ஒரு ஆயத்ததுடன் இருந்தன.

- 'தற்காத்தல்'.

4. அது அவள் நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை முழுவதுமாக அள்ளி மறுபடி மேலே வீசிக் கொள்கிற நேரத்தின் படம். ஓரு கை தோளுக்குச் சென்று கொண்டிருக்க, ரவிக்கைக்கு முழுக்கனத்தைக் கொடுத்திருந்த மார்பும் தோளின் செழுமையும் பக்க வாட்டில் தெரிய, புடவை ஒருசந்தோஷமான பாய்மரம் போலப் பின்பக்கம் விசிறி அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் மூடியிருக்கும். வாய்
கொள்ளாத சிரிப்பில் கன்னத்து ரோஸ் பவுடர் பூச்சுத் திரண்டு மேடிட்டு ஓரிரண்டு ஜிகினா மினுக்கும்.

- 'போய்க் கொண்டிருப்பவன்'.

5. தாத்தா முன்னைப்போல இப்போது சவரம் செய்து கொள்வதுகூட இல்லை. சினிமாக்களில் நாலு பக்கமும் இருந்து நாலுபேர் ஒருத்தனை அமுக்கிப் பிடிப்பதுபோல தாத்தாவின் தோற்றம் சகல பக்கங்களிலும் பிடிபட்டு அமுங்கிக் கொண்டிருந்தது.

- 'நிறை'.

6. லோகாவைப் பார்க்கமல், இன்னும் ஜன்னல் கம்பியின் துரு ஏறிய திண்மையில் விரலைச் சுண்டிக் கொண்டிருந்தான். நாலு கம்பியிலும் விரல் வேகமாக வழிந்து ஒரு இசையின் துவக்கம் போலச் சப்தம் மறுபடி மறுபடி எழுந்தது. இந்த இயக்கத்துக்குச் சம்பந்த மில்லாது ஓடுகிற ஒரு கசந்த நாடாபோல அவனுடைய பேச்சிருந்தது.

- 'திறப்பு'.

7. சட்டென்று எல்லாம் முடிந்து போயிற்று. அவனுக்கு வேலை கிடைத்து வேறு ஊருக்குப் போனதுடன் எல்லாம் நின்று விட்டது. இவளுக்கு மட்டும் அந்த முகத்தின் துரத்தல் இருந்தது. கொம்புகளைப் பாய்ச்சுவதற்குக் குனிந்த தலையுடன் துரத்திக்கொண்டே வருகிற காட்டு மிருகம்போல, அவளைக் கொஞ்ச நாள் அந்த முகம் அலைக்கழித்தது. அப்புறம் அதையும் தொலைத்தாயிற்று. மலையிலிருந்து கழற்றி ஒவ்வொன்றாக வீசுவதுபொல இந்த வாழ்க்கையின் வீச்சு எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து கொண்டிருந்தது.

- 'அந்தந்த தினங்கள்'.

8. அவர்களைச் சுற்றி, ஏப்ரலின் மலர்ச்சியைக் கிளை நுனிகளில் ஏந்திக் கொண்டு கம்மென்று வாகை மரங்கள் வாசனையைப் பெய்து கொண்டிருந்தது. வெகுதூரம் வரைகூடவே வந்து நம் விரட்டலுக்குப் பின் மனமின்றித் திரும்புகிற வீட்டு நாய்க் குட்டியாக வேப்பம்பூவின்
வாசனையும் விட்டுவிட்டுக் கூடவே வந்துபோய்க் கொண்டிருந்தது.

- 'சங்கிலி'.

9. தேர் நிலைக்கு வந்து நின்றிருந்தது. தேரின் வடம் ஒவ்வொன்றும் நீளம்நீளமாக அம்மன்சன்னதி வரைக்கும் பாம்புமாதிரி வளைந்து வளைந்து கிடந்தது. தேர் சகலஅலங்காரங்களுடனும் தோரணங்களுடனும் வாழை மரத்துடனும் நிலவு வெளிச்சத்தில் மௌனமாகப் பேசாமல் நின்றது. கோமுவோடு கோபித்துக் கொண்டு சண்டைபோட்டதுபோல் தோன்றியது.

- 'நிலை'.

10. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிவருகிற இவனுடைய கோபமும் படபடப்பும் கவனிக்க வைத்தன. டவுன் பஸ்ஸில் சில கண்ணாடிகள் நொறுங்கி அப்படியே நிற்குமே அதுபோல பேசுகிறவனுடைய முகம் ஆயிரம் நடுங்கலுடன் நொறுங்குவது தெரிந்தது.

- 'பளு'.

- தொடர்வேன்.

-அடுத்து ஜெயமோகன் படைப்புகளிலிருந்து.

-வே.சபாநாயகம்.

Thursday, September 09, 2004

நினைவுத்தடங்கள் - 23

எனது பல்வேறு ரசனைக்கு, இளமையில் எங்களூரில் நிகழ்ந்த பலவித திருவிழாக்களும் காரணமாய் இருந்திருக்கின்றன. முக்கியமாக ஒவ்வொரு கோடையிலும் நடைபெற்ற 'காமுட்டி' என்கிற காமதகனம், திரௌபதிஅம்மன் தீமிதி, சிறுத்தொண்டர் அன்னப்படையல் போன்ற
விழாக்களில் நடைபெறுகிற கூத்து, பாட்டு போன்றவை என் கலைரசனைக்கு அந்தச் சின்ன வயதிலேயே ஊக்க சக்தியாய் இருந்தன. அறுவடைக்குப் பின் மக்களிடம் கொஞ்சம் பணப்புழக்கம் அதிகம் என்பதால் இத்தகைய திருவிழாக்கள் கோடையில்தான் சாதாரணமாய் நடக்கும்.

காமன்பண்டிகையில் பெரிதும் ஈர்ப்பது அதில் பாடப்படும் பாடல்கள்தாம். இப்பொதெல்லாம் காமன் பண்டிகை அனேகமாக அருகிவிட்டது என்றே சொல்ல வேண்டும். கிராமங்களிலும் தொலைக்காட்சி மக்களை ஆக்கிரமித்திருப்பது மட்டுமல்ல- காமன் பண்டிகைப் பாடல்களைப் பாட வல்லவர் அனேகமாக எல்லா ஊர்களிலும் அற்றுப் பொனதும் காரணம் என்றே சொல்ல வேண்டும்.

எங்கள் ஊரில் அருமையான குரல்வளமுடைய முதியவர்கள் நாலைந்து பேர் அப்போது இருந்தார்கள். பரம்பரை பரம்பரையாய் கைமாறி வந்த பாடல்கள் கொண்ட கைப்பிரதிகளை அவர்கள் பொக்கிஷம் போல் போற்றிப் பாதுகாத்து வந்தனர். அவர்களது பாடல்களைக் கேட்கவென்றே வெளியூரிலிருந்தும் வருவார்கள். உருக்கமும் இனிமையும் நிறைந்த அப்பாடல்கள் இன்னமும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன. காமன் பண்டிகைக்குக் காப்புக்கட்டிய நாளிலிருந்து இரவில் எல்லோரும் சாப்பிட்டான பிறகு ஊர் மந்தையில் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே போட்டிருக்கும் பந்தலின் அருகே கூடுவார்கள். ரதி, மன்மதன் சார்பில் பாட இரு குழுவாக பரம்பரை யாகப் பாடுகிறவர்கள் எதிரெதிரே கயிற்றுக்கட்டிலில் கையில் பாடல்கள் எழுதிய நோட்டுப் புத்தகங்களுடன் அமர்ந்திருப்பார்கள். சற்றுத் தள்ளி ஒதுக்குப் புறமாக பறைக்
கொட்டுகளுடன் உள்ளுர் சேரிவாசிகள் பறைகளை நெருப்பில் காய்ச்சித் தயார் நிலையில் நிற்பார்கள்.

விநாயகர் துதியுடன் நிகழ்ச்சி தொடங்கும்.

'மூலாதரப் பொருளே லீலாவிநோதகரே
முனமது கைப்பொருளே முக்கண்ணார் தன் மகனே!'

என்று முதல் அடியைப் பாடியதும் 'டண் டண்' என்று ஒற்றைக் கொட்டு முழங்கும். பிறகு அடி அடியாகப் பாடிவர ஒற்றைக்கொட்டு ஒவ்வொரு வரிக்கும் தொடர்ந்து முழங்கும். பாடல் வரி முடிகையில் சற்று நீட்டி 'வீ....நாயகரே......வாருமையா' என்று பாடுபவர் முடித்ததும் 'டண்டண் டணக்குடக்.....டண்டண் டணக்குடக்......' என்று ஆவேசமாய் எல்லாப் பறைகளும் முழங்குகைய்¢ல் நமக்கு ஒரு சிலிர்ப்பு உண்டாகும். இப்படி
நடுநிசி கதை தொடரும்.

காமதகனத்தன்று ஊரை ஒட்டியுள்ள வெள்ளாற்றுக்குப் போய் கலசத்தில் நீர் மொண்டு, கொட்டு முழக்குடன் கொண்டு வருவார்கள். உடன் வந்திருக்கிற இளைஞர்களில் திருமணமாகாத இருவரை முன்னறிவிப்பின்றி நீரில் பிடித்துத் தள்ளி குளிக்க வைத்து ரதி மன்மதன் வேடமணிய வைப்பார்கள். முன்பே சொல்லிவிட்டால் யாரும் வேடம் தரிக்க முன் வரமாட்டார்கள். ரதிக்கு எண்ணை கலந்த மஞ்சள் வண்ண மும், மன்மதனுக்கு பச்சை வண்ணமும் முகத்திலும் உடலிலும் பூசப்படும். அந்த வேடத்துடனே அவர்கள் கலசத்துடன் காமதகனம் நடைபெறும் இடத்துக்கு வருவார்கள். ரதி மன்மதனுடன் நெற்றிக்கண்ணால் மதனை எரிக்கப் போகும் பரம சிவனுக்கும் ஒரு இளைஞனை
வேடமிடச்செய்து காவியுடையுடன் கலசத்துடன் அழைத்து வருவார்கள்.முன்பே பந்தலில் நடப்பட்டுள்ள ஆலங்கிளையின் அடியில் பரம சிவன் உட்கார்ந்து தபசில் ஆழ்வார். அருகில் சொக்கப்பனை போன்ற அமைப்பில் ஒரு கூம்பு வடிவத்தில் கட்டப் பட்டுள்ள துவரைமிலார்களின் நடுவே மன்மதன் உருவம் வரையப்பட்டுள்ள படம் வைக்கப்பட்டிருக்கும். பரமசிவம் தபசிருக்கும் ஆலங்கிளைக்கும் மன்மதன் படம் உள்ள கூம்புக்கும் இடையே இரட்டைவாணம் கோத்த கயிறு கட்டப்பட்டிருக்கும். தீபாராதனை முடிந்ததும் சகடையில் ரதி மன்மதன் சுதைச்
சிற்பங்கள் ஏற்றப்பட்டு எதிரே ரதி மன்மதன் வேடமிட்டவர்கள் கைகளில் வில்லேந்தி முன்னே நடக்க ஊர்வலம் புறப்படும். இனிமேல்தான் சுவாரஸ்யமெல்லாம்.

மன்மதன் பரமசிவனின் தபசைக் கலைக்கப்போகிறான். ரதி அவனிடம் அப்படிச் செய்து தன் தந்தையாகிய சிவனின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று இறைஞ்சுவாள். இந்தக் கட்டத்துக்காகவே அனைவரும் காத்திருப்பார்கள். ரதி, மன்மதன் இருவர் பக்கத்திலும் அந்தக் கட்சிக்காகப் பாடுபவர்கள் கையில் நோட்டுடன் இருப்பார்கள். முதலில் ரதியின் உருக்கமான வேண்டுதல் தொடங்கும். பாடுகிறவர் வழக்கம் போல ஒவ்வொரு அடியாய்ப் பாட பறைக்கொட்டு தொடர்ந்து முழங்கும். அப்பாடல் முடிந்ததும் பறைகள் ஒரு உத்வேகத்தொடு முழங்க ரதி வேடமிட்டவர் கையில் வில்லுடன் மன்மதனை நோக்கிப் போய்ப் போய்த் திரும்புவார். பிறகு மன்மதனின் மறுப்புப் பாடல். அதற்கேற்றபடி கொட்டு - மன்மதனின் எதிர் நடை என்று தொடரும்.

மன்மதன் சிவனைப் பழித்து 'அடி! உங்கப்பன் பேயாண்டி......' என்று பாடும்போது ரதி வேடமிட்டவருக்கு ஆவேசம் வந்து விடும். அதற்காகவே பக்கத்தில் நின்று கொண்டிருக்கும் இருவர் அவர் கீழே விழுந்து விடாதபடி தாங்கிப் பிடிப்பார்கள். அவருக்கு மட்டுமல்ல - முன் ஆண்டில் ரதி வேடமிட்டவர் அருகில் இருந்தாலும் மன்மதனின் ஏச்சைக் கேட்டு ஆவேசமடைந்து சாமியாடுவார்கள். அவர்களையும் தாங்கிப் பிடிப் பவர்களும் உண்டு. விழட்டும் என்று விட்டுவிடுவதும் உண்டு. இப்படி நான்கு பிரதான தெருக்கள் வழியில் ஊர்வலம் தொடரும். பந்தலுக்குத் திரும்பும்வரை ரதி மன்மதன் சம்வாதம் அருமையான பாட்டுகளில் தொடரும்.

பந்தலுக்குத் திரும்பியதும் மன்மதன் தபசிருக்கும் சிவனை நோக்கி மலர் அம்பு எய்யும் விதமாக, மன்மதன் படம் இருக்கும் பக்கத்தில் தொங்கும் இரட்டை வாணம் பற்ற வைக்கப்படும். உடனே அது 'சுர்'ரென்று சீறியபடி சிவனை நோக்கிப் போகும். மறுமுனையை அடைந்ததும் இரட்டை வாணத்தின் மறுவாணம் தானாகவே பற்றிக் கொண்டு மன்மதனை நோக்கிச் சீறிப்பாயும். சிவன் நெற்றிக் கண்ணைத் திறந்து காமனை எரிப்பதாக அர்த்தம். காமன் படத்தின் மீது கற்பூரத்தைக் கொளுத்துவார்கள். படம் பற்றியெரிய அதைத்தாங்கி நின்ற துவரை மிலாறும் 'சட சட' வென எரியும் . அதிர் வேட்டு முழங்கி காமதகனம் முடிந்ததை ஊருக்கு அறிவிக்கும்.

பி¢£றகு ரதி, சிவனிடம் அழுது புலம்புவதும் மன்மதனை மீண்டும் உயிப்பிக்க வேண்டுவதுமான பாடல்கள் கொட்டு முழக்குடன் தொடரும். அது ஒப்பாரி வடிவில் வெகு உருக்கமாய் இருக்கும். இந்தப் பாடல்களின் உருக்கத்தை ரசிக்கவென்றே நான் ஒவ்வொரு கோடையிலும் அது நடக்கிறவரை ஊருக்குப் போய் வந்தேன். அது தந்த ரசனை இன்பத்தை என் பிள்ளகளுக்கும் தர விரும்பினாலும் அது இனி கிட்டாது என்பதுதான் சோகம்! எங்கள் வெள்ளாறும் வற்றிப் போனதும் அதைவிடவும் சோகம்!

-தொடர்வேன்.

- வே.சபாநாயகம்

Friday, September 03, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 8: புலம்பல் கவி

பொருள் கொடுத்தால் போற்றிப் பாடுவதும் பொருள் கொடாவிடில் தூற்றிப் பாடுவதும் புலவர்களது இயல்பு என்பார்கள். சில சாதுப் புலவர்கள் தகுதி இல்லா தவரைப் பாடச் நேர்ந்ததற்காக சுயபச்சாதாபத்துடன் புலம்புவதும், இறைவனிடம் முறையிடுவதும் உண்டு.

இராமச்சந்திரக் கவிராயருக்கு இப்படி நிறைய அனுபவம் உண்டு. பணம் படைத்த பலருக்குப் புலவர்களின் அருமையோ அவர்தம் கவிதைகளின் பெருமையோ தெரிவதில்லை. அவர்களுக்குப் பணம்தான் பெரிது. பணம் படைத்திருப்பதால் தாங்களே உயர்ந்தவர்கள் என்று அவர்களுக்கு எண்ணம். அதனால் அவர்கள் புலவர்களை மதிப்ப தில்லை. கவிஞர்கள் உதவி நாடி வந்து விட்டால் ஒரு சமயம் வெறும் கும்பிடு போட்டு அனுப்பி விடுவார்கள்; மற்றொரு சமயம் முகத்தைத் திருப்பிக் கொண்டு போய்விடுவார்கள்; வேறொரு சமயம் ஏதோ கணக்குப் போடுகிறவர்களைப் போல விரல்களை மடக்கிக் கொண்டு வாயால் முணுமுணுத்துக் கொண்டிருப்பார்கள்; பிறிதொரு சமயமோ வேட்டைநாய் போலச் சீறி விழுவார்கள். இவர்கள் மனம் ஒத்து வரும்படி கவிகள் பாடி அவருக்கு அலுத்துப் போய்விட்டது. 'இப்படி நான் எத்தனை நாள் கயவர்களிடம் போய் அலைந்து திரிவது - திருப்பரங்குன்றில் வாழும் மூருகப் பெருமானே' என்று முறையிடுகிறார்:

வணக்கம் வரும் சில நேரம்,
குமர! கண்ட
வலிப்பு வரும் சில நேரம்;
வலியச் செய்யக்
கணக்கு வரும் சிலநேரம்;
வேட்டைநாய் போல்
கடிக்க வரும் சில நேரம்;
கயவர்க்கெல்லாம்
இணக்கம்வரும் படிதமிழைப்
பாடிப் பாடி
எத்தனை நாள் திரிந்து திரிந்(து)
உழல்வேன், ஐயா?
குணக்கடலே! அருட்கடலே!
அசுர ரான
குரைகடலை வென்ற பரங்-
குன்றுளானே!

( குமர - குமரக் கடவுளே. கண்ட வலிப்பு - கழுத்து வலிப்பு. அசுரரான குரைகடலை - அரக்கர்களன் கடல் போன்ற கூட்டத்தை. குரை - சப்திக்கும்.)

பொதியமலைச் சாரலில் உள்ள பெரியம்மை கோவிலுக்கும் போய் இராமச்சந்திரக் கவிராயர் தன் தலை விதியை நொந்து கொண்டு புலம்புகிறார். ' புல்லுக் கட்டும், விறகும் சுமந்து பிழைத்தவர்கள் பூர்வபுண்ணிய வசத்தினால் இன்று சீமான்கள் ஆகி விட்டார்கள்.ஏராளமாக விளைந்த நெல்லை மூட்டையாகக் கட்டி வைத்திருக்கிறார்கள். பண மூட்டையும் சேர்ந்திருக்கிறது. அந்தஸ்தைக்காட்டிக் கொள்ள நீலக் கல்லில் கடுக்கனும் போட்டுக் கொள்கிறார்கள். சொல்லால் கவிதை கட்டும் புலவர்களைக் கண்டு விட்டால், பாய்ந்து கதவை அடைத்துக் கொள்ளுகிறார்கள். புலவரோடு மல்யுத்தம் நிகழ்த்த எதிரே வருகிறார்கள். இப்படிப் பட்ட மடையர்களைப் பாடி நான் காலம் தள்ளவா? இதுதான் என் தலை விதியா?'

'புல்லுக் கட்டும்
விறகும் சுமந்தபேர்
பூர்வ காலத்துப்
புண்ணிய வசத்தினால்,
நெல்லுக் கட்டும்
பணக்கட்டும் கண்டபின்
நீலக்கல்லில்
கடுக்கனும் போடுவார்;
சொல்லுக் கட்டும்
புலவரைக் கண்டக்கால்
தூரிப் பாய்ந்து
கதவை அடைத்தெதிர்
மல்லுக் கட்டும்
மடையரைப் பாடவோ,
மலயச் சாரலில்
வாழ் பெரியம்மையே?'

( தூரி - நெருங்கி, மலயம் - பொதிகைமலை.)

இதே கவிராயர் ஒரு பிரபுவிடம் சென்றார். பலவாறாக அவனுக்கு ஏற்பில்லாத பல பெருமைகளை அவன் மீது ஏற்றிப் புகழ்ந்து பாடினார். அப்படியும் பயனில்லை. 'இல்லை' என்று அவன் கைவிரித்துவிட்ட சோகத்தைப் பாடுகிறார்:

'கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்;
காடுறையும் ஒருவனை நாடாள்வாய் என்றேன்;
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்;
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்;
மல்லாரும் புயமென்றேன் சூம்பல் தோளை;
வழங்காத கையனை நான் வள்ளல் என்றேன்;
இல்லாது சொன்னேனுக்கு 'இல்லை' என்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே!'

அட்டாவதானம் சரவணப் பெருமாள் கவிராயர் என்றொரு புலவருக்கு நேர்ந்த அனுபவத்தை அவர் கவிநயத்துடனும் நகைச் சுவையுடனும் பாடியிருக்கிறார்.

பெருஞ்செல்வன் ஒருவன் ஒருநாள் தன் வீட்டில் சாய்வு நாற்காலியில் அமர்ந்திருந்தான். அவன் ஈயாத உலோபி. ஏழைகளையும் புலவர்க¨ளையும் அருகே அண்ட விட மாட்டான். அவனிடம் பொருட் செல்வம் இருந்ததே ஒழிய கல்விச் செல்வம் இல்லை. அவனைக் காண புலவர் வந்தார். அவர் புலவர் என்று அவனுக்குத் தெரியாது. அதனால் 'வாரும், நீர் யார்' என்று கேட்டுவிட்டான். அது கேட்ட புலவர் 'யான் வித்து வான்' என்றார். அதைக் கேட்டதும் அவனது உடல் மின்சாரம் தாக்கியதுபோல நடுங்கியது; வாய் குழறியது; உள்ளம் ஒடுங்கியது; மதிமோசம் வந்து விட்டதே என்று பதறினான்; மெல்ல சுதாரித்துக் கொண்டு 'நீர் வந்த காரியம் எது?' என்றான். புலவரிடம் பேச்சை வளர்க்க அவன் விரும்பவில்லை. பேச்சு வளர்ந்தால் இந்தப் பொல்லாத புலவர்கள் சொல்லால் மயக்கிப் பணம் பிடுங்கிவிடுவார்கள் என்று பயம். சுருக்கமாய்ப் பேசி அனுப்பி விட எண்ணினான்.

ஆனால் புலவர் அவ்வளவு எளிதில் பதில் சொல்லிவிடுவாரா? கடல் மடை திறந் தாற்போல் புகழுரைகளை அள்ளி வீசலானர். 'விண்ணுகில் காமதேனு என்றொரு பசு இருக்கிறது. அது கேட்டவர்க்கு எதையும் இல்லை என்னாது அளிக்கும் என்பார்கள். அத்தகைய - மண்ணுலகக் காமதேனு நீதான்! விண்ணுலகில் கற்பக விருட்சம் என்றொரு மரம் உண்டு. அதனடியில் நின்று என்ன கேட்டாலும் அது உடனே வழங்கும். நீ மண்ணுலகக் கற்பக விருட்சம்! தேவருலகில் சிந்தாமணி என்றொரு அரிய கல் உள்ளது. அது கேட்டதைக் கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டது. அந்த சிந்தாமணி நீயே! அரிச்சந்திரன் என்ற மன்னன் சொன்ன சொல் தவறாதவன். நீயும் அவனைப் போல வாக்குத் தவறாதவன். இந்தக் காலத்து அரிச்சந்திரன் நீதான்!' என்றெல்லாம் புகழ்மொழிகளை எடுத்து விட்டார். இத்தகைய புகழ்மொழிக்கு மயங்காதிருக்கவும் முடியுமா?

ஆனால் அவனது முகம் மகிழ்ச்சியைக் காட்டுவதற்குப் பதில் சிவந்தது. கண்கள் சினத்தால் சிவப்பேறியது. அவரது புகழுரைகளை எல்லா இகழுரைகளாகக் கருதினான். கோபம் கொப்பளிக்கப் புலவரை நோக்கி, 'யாரைப் பார்த்து மாடு, மரம், கல் என்று கூறினீர்?' என்று கேட்டான். 'அய்யா! நான் எங்கே தங்களை அப்படியெல்லாம் சொன்னேன்?' என்று அச்சத்துடன் கேட்டார். ' காமதேனு என்று அழைத்தீரே- மாடே என்று சொல்லாமல் சொல்கிறீரா? மரமே என்று சொல்லாமல் கற்பக விருட்சமே என்றீர். கல்லே என்று சொல்லாமல் சிந்தாமணியே என்றீர். நீர் குறிப்பினால் சொன்னதை நான் உணரமட்டேன் என்று நினத்தீரா? இதையாவது பொறுத்துக் கொள்ளலாம்- கடைசியாக ஒரு அவதூறு சொன்னீரே அதை மன்னிக்கவே முடியாது. அரிச்சந்திரன் என்றீரே எத்தைய இழிசொல் அது! அரிச்சந்திரன் போல நான் யாருக்காவது அடிமைத் தொழில் செய்தேனா? யார் கையில் என் மனைவியை விற்றேன்? அடாத சொல் சொன்னீரே? இந்த வசை தீருமோ?' என்று கடுமையாய்ப் பேசினான்.

'வாரும் நீர் யார் என்ன வித்துவான் என்னவும்
மதிமோசம் வந்ததென்றே
வாய் குழறி மெய்எலாம் நடுக்குற்று நீர்
வந்த காரியம் எது எனச்
சீருலாவிய காமதேனுவே தாருவே
சிந்தாமணிக்கு நிகரே
செப்புவனத்து அரிச்சந்திரனே எனலும்
சினந்து இரு கணும் சிவந்தே
யாரை நீர் மாடு கல் மரம் என்று சொன்னதும்
அலால் அரிச்சந்திரன் என்றே
அடாத சொல் சொன்னையே யார்க்கடிமையாகினேன்
ஆர்கையில் பெண்டு விற்றேன்
தீருமோ இந்தவசை என்றுரைசெய் வெகுகொடிய
தீயரைப் பாடி நொந்தேன்
திருமன்றுள் நடுநின்று நடம் ஒன்று புரிகின்ற
தில்லை வாழ் நடராசனே`.

என்று புலம்புகிறார் புலவர்.

இவையெல்லாம் இடைக்காலப் புலவர்களின் புலம்பல். நம் காலத்து நாயகர் ஒருவரின் புலம்பலைப் பார்க்கலமா?

ஜெமினியின் ஔவையார் படத்துக்கு ஆரம்பத்தில் வசனம் எழுதியவர் பிரபல எழுத்தாளர் புதுமைப்பித்தன். அவரது நண்பரும் ஜெமினியின் கதை இலாகா பொறுப் பாளருமான கொத்தமங்கலம் சுப்புதான் அவரை அப்பணிக்கு திரு வாசனிடம் சிபாரிசு
செய்தவர். புதுமைப்பித்தனின் பணிக்கான ஊதியமும் திருப்திகரமாக இல்லை; அதற்கான அங்கீகாரமும் கௌரவமாக இல்லை. யாரோ அது பற்றி புதுமைப்பித்தனிடம் கேட்டபோது எரிச்சலோடு புலம்பிய கவிதை இது:

அவ்வை எனச் சொல்லி
ஆள்விட்டுக் கூப்பிட்டு
கவ்வக் கொடுத்தடித்தால்
கட்டுமா - சவ்வாது
பொட்டு வச்சுப் பூச்சணிந்து
பூப்போல ஆடை கட்டும்
மொட்டைத் தலையனையே
கேளு.

கொத்தமங்கலம் சுப்புவைப் பார்த்திராதவர்களுக்கு காட்டப்படும் ஒரு சின்ன சித்திரம் கசப்பின் முழுமையைக் காட்டுகிறதல்லவா!

-மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

Friday, August 20, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 7: இரங்கற்பா

கவிவளம் மிக்க கவிஞர்கள் எது பாடினாலும் - அது பாராட்டோ, வசையோ, பரவசமோ எதுவாக இருந்தாலும் கவிநயத்துடனும் நெஞ்சைத் தொடுவதாகவுமே இருக்கும். அப்படியே, தமக்கு அருமையானவர் மறைந்தால் மனம் நொந்து கவிஞர்கள் பாடும் இரங்கற்பாக்களும் அற்புதமானவை.

கம்பர் காலத்தில் வாழ்ந்த ஒரு பெரும் புலவர். வாணியன் தாதன் என்பது அவரது பெயர். தமிழில் உத்தரகாண்டத்தைப் பாடியவர். கம்பருடன் சதாபோட்டி. கம்பரது வாழ்நாள் முழுதும் அவரிடம் விரோதம் பாராட்டியவர். ஆனால் அந்தரங்கத்தில் கம்பரது புலமையில் மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். கம்பர் காலமானபோது அவரோடு கவியும், கலையும், கல்வியுமே செத்துவிட்டதுபோல் வாணியன் தாதனுக்குத் தோன்றியது. கவிச்சக்கரவர்த்தி மறைந்த நாளிலேயே சரஸ்வதிதேவி தன் மாங்கல்யத்தை இழந்து விட்டாள் என்றும் அவர் கருதினார். அதோடு இனி அற்பமான புலமையுடை யவர்கள் பாடு கொண்டாட்டமாய்ப் போய்விடும். கம்பர் இல்லாத உலகில் அவர்கள் பேரும் புகழும் சம்பாதித்து வாழ்வார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது வாணியன் தாதனுக்குத் துயரம் பொறுக்கவில்லை. கம்பர் இல்லாத உலகத்தில் மகாலட்சுமிக்கு வாழ்வு உண்டு; பூமாதேவியும் என்றும் போல் இருப்பாள்; சரஸ்வதியின் பாக்கியந்தான் போய்விடும் என்று புலம்புகிறார்:

` இன்றோ நம் கம்பன்
இறந்தநாள்! இப்புவியில்
இன்றோ அப் புன்கவிகட்கு
ஏற்ற நாள்! - இன்றோதான்
பூமடந்தை வாழப்
புவிமடந்தை வீற்றிருப்ப
நாமடந்தை நூல் வாங்கும்
நாள்!`

நமச்சிவாயப் புலவர் என்பவர் வள்ளல் சீதக்காதியால் மிகவும் மதிக்கப் பெற்றவர். சீதக்காதி இறந்த செய்தியைக் கேட்டு ஆற்றொணாத் துயரம் கொண்டார். `சீமான் இறந்திட்டபோதே புலமையும் இறந்ததுவே` என்று புலம்பினார். மனம் குழைந்து அவர் வருந்திப் பாடுகிறார்:

பூமாது இருந்தென்
புவிமாது இருந்தென்? பூதலத்தில்
நாமாது இருந்தென்?
நாம் இருந்தென்? நல் நாவலர்க்குக்
கோமான் அழகமர் மால்
சீதக்காதி கொடை மிகுந்த
சீமான் இறந்திட்ட போதே
புலமையும் செத்ததுவே!
( பூமாது- லட்சுமி; புவிமாது - நிலமகள்; நாமாது- பிரமன் நாவிலிருக்கும் சரஸ்வதி; பூதலம்-நிலவுலகம்; மால் - திருமால் )

இந் நிலவுலகில் இலக்குமி இருந்து என்ன பயன்? நிலமகள் இருந்தும் யாது பயன்? நல்ல புலமை வாய்ந்த புலவர்களுக்கு வள்ளலும் திருமால் போன்று அழகு பொருந்தியவனுமான மன்னன் சீதக்காதி உயிர் நீத்தபோதே புலவரின் கல்விச் சிறப்பும் ஒழிந்து போயிற்று.

தமக்கு அருமையானவர் இறந்தால் மனம் வெதும்பி சாபமிடும் புலவர்களும் உண்டு. கூவத்து நாரணன் என்றொரு வள்ளல் இருந்தார். அவர் இறந்தபோது ஒரு புலவர் கதறிப் புலம்பினார். அவரது உயிரைப் பறித்த எமனை வயிறெரிந்து சாபமிட்டார்.

`உலகத்தில் வள்ளல்கள் ஒரு சிலர் தான். ஆனால் உதவி நாடி யாசிப்பவர்களோ மிகப் பலர். இதைத் தெரிந்திருந்தும் கூவத்து நாரணன் உயிரை எமன் கொண்டு போய் விட்டான். எமனே! நீ நாசமாய்ப் போக! கரி வேண்டுமென்றால் ஏதாவது காட்டு மரங்களை வெட்டி எரித்துக் கொள்ளாமல் கற்பக விருட்சங்களையா வெட்டுவது? அநியாயமாகக் கூவத்து நாரணனைக் கொன்று விட்டாயே?`

`இடுவோர் சிறிது; இங்கு
இரவோர் பெரிது
கெடுவாய், நமனே!
கெடுவாய் - படுபாவி!
கூவத்து நாரணனைக்
கொன்றாயே! கற்பகப் பூங்
கா வெட்டலாமோ
கரிக்கு?

கூவத்து நாரணன் உயிரை அபகரித்து விட்டான் எமன் என்று சொல்லாமல், அவனைக் கொலை செய்துவிட்டான் என்றே புலவர் உக்கிரத்துடன் சொல்லுகிறார்.

ரசிகமணி டி.கே.சியின் அருமைப் புதல்வர் தீத்தாரப்பன் நல்ல கவிஞர்; கதாசிரியர்; அவரது கதை - கவிதை சேர்ந்த தொகுப்பு ஒன்று `அரும்பிய முல்லை` என்ற பெயரில் வெளியாகியுள்ளது. டி.கே.சியின் இந்த அருமைப் புதல்வர் 32 வயதில் இறைவனடி சேர்ந்தார். டி.கே.சியின் சோகம் அவரது ரசிகர்களின் சோகம் அல்லவா? கவிமணி டி.கே.சியின் அரிய நண்பர். அவரது அருமை மகன் இறந்த செய்தி கேட்டதும் ஒரு பாடல் எழுதி டி.கே.சிக்கு அனுப்பி வைக்கிறார்.

`எப்பாரும் போற்றும்
இசைத் தமிழ்ச் செல்வா என்
அப்பா அழகிய செல்
லையா நான் - இப்பாரில்
சிந்தை குளிரச்
சிரித்தொளிரும் உன் முகத்தை
எந்த நாள் காண்பேன்
இனி?`
(செல்லையா என்பது தீத்தாரப்பனின் செல்லப் பெயர். தீபன் என்ற புனை பெயரில் எழுதினார்.)

இந்தப் பாடலைப் பார்த்ததும் டி.கே.சி எப்படித் துடித்தாரோ என்று தானே நினைக்கத் தோன்றுகிறது? அதுதான் இல்லை! டி.கே.சி மகனை மறந்தார்; அவர் இறந்ததை மறந்தார்; பாட்டின் அருமையை மிக ரசித்து அனுபவித்தார். அதன் பிறகு அவர் சொன்னார்: " இப்படி ஓர் அற்புதமான கவி தமிழுக்குக் கிடைக்குமானால் உயிரைக் கொடுத்துக்கூட அதைப் பெறலாம்!''

" இப்படி மகனைப் பிரிந்த காலத்தும் அவன் மேல் பாடப்பட்ட பாட்டை அனுபவிக்கும் அற்புதப் பிறவியை என்ன என்பது! அவரை `ரஸஞ்ஞான்¢` என்கிறார் நண்பர் மகராஜன். ஆம், ரஸிகத்தன்மை சிலருக்கு இருக்கலாம். இவ்வுலக நிலையாமையைப் பற்றி ஞானம் பிறக்கலாம் பிறருக்கு. ஆனால் தன் உடல் ஆடும்போதுகூட, ஞான திறமும் மீறி ரஸமாகப் பாட்டை அனுபவிப்பது என்றால் அப்படி அனுபவிப்பவரை ரஸஞ்ஞானி என்று கூறாமல் என்ன கூறி விளக்க முடியும்? " என்று எழுதுகிறார் தொ.மு.பாஸ்கரத்தொண்டைமான்.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Friday, August 06, 2004

நினைவுத் தடங்கள் - 22

கோடைவிடுமுறை வரைக்கும் கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் நிறைய எடுத்தேன். சிதம்பரம் கோயிலுக்குப்போய் கோபுரங்களையும் சிவகங்கைக் குளத்தையும் பொன்னம்பலத்தையும், நடன சிற்பங்களையும் கல்சங்கிலி தொங்கும் பிரம்மாண்ட தூண்களையும் எடுத்தேன். எடுத்து மாளவில்லை. ஏகப்பட்ட படங்கள் எடுத்தும் சலிக்க வில்லை. எடுத்த பிலிமை பல்கலைக் கழக வளாகத்திலேயே இருந்த ஆர்.டி.வேலு ஸ்டூடியோவின் கிளையில் கொடுத்து டெவலப் செய்து பிரிண்ட் போடுவேன். ஸ்டூடியோ உரிமையாளர் சின்ன பேபி ப்ரௌனி காமிராவில் எடுத்தவைகளா என்று நம்ப முடியாமல் கேட்டார். என் படங்கள் அவருக்குத் திருப்தியாக இருந்ததால் பிறகு சலுகை காட்டத் தொடங்கினார். இருட்டறைக்குள் உடனிருந்து டெவலப்பிங் ப்ரிண்டிங்கு களைப் பார்க்கவும் அனுமதித்தார். அவ்வப்போது விளக்கமாகச் சொல்லியும் கொடுத்ததோடு நானே அங்கு ப்ரிண்ட் போடவும் அனுமதித்தார். அதன் பிறகு கோடைவிடுமுறைக்கு ஊர் திரும்பியபோது டெவலப்பிங் மற்றும் ப்ரிண்ட்டிங் செய்யத் தேவையான கரைசல்கள், ப்ரிண்டிங் தாட்கள் எல்லாம் சலுகை விலையில் கொடுத்தார்.

ஊருக்கு வந்ததும் மச்சுவீட்டின் ஒரு அறையை என் இருட்டறையாக ஆக்கிக் கொண்டு, எடுத்த பிலிம்களைக் கழுவவும் ப்ரிண்ட் போடவும் செய்தேன். நாள் முழுதும் காமிராவைத் தூக்கிக்கொண்டு,பால்ய நண்பன் ஒருவனோடு காடுமேடெல்லாம் சுற்றிக் கண்ணில் பட்டதையெல்லாம் படமெடுத்தேன். போட்டோ அப்போது பிரமிப்பான விஷயமானதால், இப்போது சினிமா ஷ¥ட்டிங் நடந்தால் கூடுகிறமாதி ஒரு கூட்டம் எங்கு போனாலும் ஒரு சிறியவர் பெரியவர் பேதமன்றித் தொடர்ந்து வரும். ஸ்கூட்டர் வழியில் நின்று விட்டால் ஒர் கூட்டம் சூழ்ந்து கொண்டு மேற் கொண்டு செய்யவிடாமல் டென்ஷன் உண்டாக்குவார்களே அதுபோல் இந்தக் கூட்டமும் நம்மைப் படம் எடுக்கவிடாமல் தொல்லை கொடுக்கும்.

நான்கு மைலுக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்தில் முருகன் கோயிலில் மயில் ஒன்று இருப்பதாக அறிந்து அதைப்படம் எடுக்க நண்பனுடன் போனேன். கோயிலை விசாரித்துப் போவதற்குள் ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து கொண்டுவிட்டது. மயிலைப் படம் எடுக்கப் போகிறோம் என்றதும் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். கோயிலை அணுகி மயிலைப் படம் எடுக்க முயன்றபோது கூட்டத்தின் கூச்சலால் மிரண்டுபோய் மயில் பறந்து விட்டது. அதைத் தொடர்ந்து தேடிப் போய் எடுக்கும்போது மீண்டும் தூரத்தே போய் உட்கார்ந்தது. நாங்களும் விடாது தொடர்ந்தோம். கடைசியில் அது பஸ் போகும் சாலைக்குப் போய்விட்டது. அப்போது வழியோடுபோன பஸ்ஸ¤ம் கூட்டத்தைக் கண்டு நின்று விட்டது. மதியம் தாண்டியும் மயிலைப் படம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்தொடு திரும்பினோம்.

இப்படி 4 வருஷங்கள் சின்னக் காமிராவில் படம் எடுத்து சலித்தபின் என் அத்தான் ஒரு விலையுயர்ந்த காமிரா, கொஞ்சம் சல்லிசான விலைக்கு வந்தபோது 150ரூ.க்கு வாங்கிக்கொடுத்தார். அப்போது நான் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராகப் பணியேற்றிருந்தேன். யாஷிகா-ஏ என்ற ஜப்பான் காமிரா. இதுவும் ரோலிப்ளெக்ஸ் போல ரிப்ளெக்ஸ் காமிராதான். இதில் டைமிங் அப்பர்ச்சர் எல்லாம் உண்டு. பெட்டிக் கேமிரா போல அல்லாமல் தேவையான ஒளியை நாமே கணக்கிட்டுச் சரியாக அமைத்தால்தான் நல்ல தெளிவான படம் எடுக்க முடியும். இதற்காக சில போட்டோப் புத்தகங்கள் வாங்கிப் படித்து சோதனை முயற்சியாகப் பல படங்கள் எடுத்தேன். கண்ணன், தினமணிக் கதிர் போன்ற பத்திரிகைகளில் நான் எடுத்த படங்கள் வெள்¢யாகின. ப்ளாஷ் லைட் வாங்கியதும் நெருங்கிய உறவினர்கள் திருமணங்களில் எல்லாம் நான் தான் போட்டோகிராபர். இப்போது வெளிநாட்டுக்கு எல்லோர் வீட்டிலும் யாராவது போயிருப்பதால் எல்லோர் வீட்டிலும் இளைஞர்கள் கல்யாணமண்டபத்தில் காமிராவும் கையுமாய் நிற்கிறார்கள். நமக்கு இப்போது மவுஸ் இல்லை. வருந்தி அழைத்தாலும் போகமுடிவதில்லை.

பிறகு வன்னப்படங்களின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டது. வண்ணப் படங்கள் எடுக்க ரிப்ளெக்ஸ் காமிராக்கள் அதிக செலவை உண்டாக்கும் என்பதால் 35mm காமிரா ஒன்று வாங்க வேண்டி வந்தது. மஸ்கட்டில் என்ஞினீயராக இருந்த என் மைத்துனன் மூலம் cannon QL-1.9 என்ற காமிராவை வாங்கி ஸ்லைட் படங்களாக நிறைய எடுத்தேன். அதற்காக ஒரு சின்ன ஸ்லைட் புரொஜெக்டரும் வாங்க வேண்டியிருந்தது.
இதைக் கொண்டு மாமல்லபுரம், செஞ்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாக்குமரி போன்ற இடங்களுக்குக் கெல்லாம் குடும்பத்துடன் போய் சிலிர்ப்புடன் ஏராளமாய் எடுத்தேன். என் அம்மா குறைப் பட்டுக் கொண்டபடி நான் என் சம்பளத்தில் அதிகம் செலவழித் தது டைகள் வாங்கவும் போட்டோ எடுக்கவும் தான். ஒன்றையொட்டி ஒன்று வாங்குவது போல் ஓய்வுபெற சில ஆண்டுகள் இருக்கும்போது கட்டிய வீட்டில் போட்டொ டார்க் ரூம், அதில் என்லார்ஜிங் மிஷின் என்று வளர்ந்து கொண்டே போயிற்று. இப்படி போட்டோக் கலை ஒரு 50 வருஷம் என்னைப் பிடித்து ஆட்டியது. இப்போது தான் கொஞ்ச நாட்களாக, கணினி வாங்கி அதில் தீவிரமாய் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு
போட்டோவுக்கு நேரமில்லை. இருந்தாலும் அவ்வப்போது கை துறுதுறுக்கத்தான் செய்கிறது.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

Wednesday, August 04, 2004

நினைவுத் தடங்கள் - 21

சின்ன வயதிலேயே எனக்கு ஓவியத்தைப் போலவே புகைப்படக் கலையிலும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. எங்கள் தாய்மாமா வீட்டில் பெரிய பெரிய ரவிவர்மா ஓவியங்கள் இருந்ததையும் அவை எனக்கு சின்ன வயதில் பிரமிப்பையும் ரசனையையும் ஏற்படுத்தின என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதுபோலவே நிறைய புகைப்படங்களும் வீடு முழுக்க மாட்டப் பட்டிருந்தன. அப்போதெல்லாம் ஒருவர் வீட்டில் குழந்தையையோ, குடும்பத்தையோ படம் எடுத்தால் அதில் ஒரு பிரதியை கண்ணாடி சட்டம் போட்டு உற்றார் உறவினர்க்குக் கொடுப்பார்கள். புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளும் ஸ்டூடியோவுக்குப் போய், நின்று கொண்டு உட்கார்ந்துகொண்டு என்று பல் போஸ்களில் படம் எடுத்துக் கொண்டு அதன் பிரதிகளை நெருங்கிய உறவினர்க்குத் தருவர்கள். அப்படிச் சேர்ந்த படங்கள் ஒவ்வொரு வீட்டிலும் புகைபடிந்து ஒட்டடை பின்னி நிறையத் தொங்கும்.

அப்போதைய படங்கள் எல்லாம் அனேகமும் `செப்பியா` எனப்படும் செம்பழுப்பு நிறத்திலேயே இருக்கும். என் மாமாக்களில் ஒருவர் உடையார் பாளையம் ஜமீனில் அந்தக் காலத்தில் பேஷ்கார் ஆக இருந்தார். அவர் நிறைய அவரது அலுவலக உடையில் பல போஸ்களில் எடுத்து மாட்டியிருந்தார். குடுமித்தலையில் சேட் தொப்பி போல பூப் போட்ட பட்டைத் தொப்பி, உக்கழுத்துவரை பொத்தான் போட்ட கோட்டு, நெற்றியில் விபூதிப் பட்டை, சந்தனப் பொட்டு, காதில் காவடிமாதிரி அடியில் இருக்கும் சிவப்புக் கல் வைத்த கடுக்கன், கோட் பையில் செருகிய கர்ச்சீப், கழுத்தில் விசிறியடுக்கு அங்கவஸ்திரம்- பரமசிவம் கழுத்துப் பாம்பு மாலை போல, பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய
வேட்டி, காலில் முன் பக்கம் வளைந்த வார் செருப்பு என்று தான் யார் படம் எடுத்துக் கொண்டாலும் ஒரே மாதிரியில் இருக்கும். என் மாமா ஒரே பிளேட்டில் எடுத்த மாதிரி ஒரு டஜன் பாஸ்போர்ட் சைஸ் படங்கள் - டை கட்டியும் கட்டாமலும், கோட் போட்டும் போடாமலும்,வெயிஸ்ட் கோட்டுடனும் என்று பனிரெண்டு போஸ்களில் எடுத்து அமைத்த படம் ஒன்றும் ஏதோ கும்பகோணம் மகாமக ஸ்பெஷல் சலுகைப் படம் என்று எடுத்து மாட்டியிருந்தார்.

தம்பதிகள் படமும் அந்தக் காலத்துப் பாஷனில் இருக்கும். ஆண்கள் மேல் சொன்ன லட்சணங்களுடனும் பெண்கள் கழுத்து நிறைய நகைகளுடன் காதில் கொப்பு, மாட்டல், மூக்கில் பேசரி, புல்லாக்கு, முழங்கைக்குமேல் நெளி, இடுப்பில் ஒட்டியாணம் என்று என்று சர்வாலங்கார பூஷிதையாய்த்தான் போட்டோவுக்கு நின்றார் கள். ரவிக்கையின் கை முழங்கை தாண்டி முக்கால் கைக் கொண்டதாக அந்தக்
காலத்து பாஷனுக்கு அத்தாட்சியாக இருக்கும். படம் எடுப்பவர் வீட்டுக்கு வந்தோ அல்லது தன் ஸ்டூடியோவிலொ கருப்புத்துணி மூடிய முக்காலி ஸ்டேண்டில் நிற்கும், பிளேட் காமிராவில் தான் படம் எடுப்பார். கைக்காமிராவெல்லாம் பின்னால்தான் வந்தது. அந்தச் சின்ன வயதில் நான் பார்த்து ரசித்த போட்டோப் படங்களும் போட்டோ எடுத்தபோது பார்த்ததும் எனக்கு போட்டோ எடுக்கும் ஆசையை ஏற்படுத்தியது.

எட்டு ஒன்பது வயதில் அதுவும் அந்தக் காலத்தில் என் ஆசை எப்படி நிறைவேறும்? ஒரு சதுர அட்டைப் பெட்டியில் ஒரு வட்டமான பழைய மூக்குக் கண்ணடி லென்சைப் பொருத்தி லென்சை கையால் மூடித்திறந்து ஸ்டூடியோக் கேமிராவில் செய்வது போலச் செய்து படம் எடுத்த மாதிரி பாவனை செய்தேன். ஆரம்ப வகுப்பு பாடப் புத்தகங்களிலிருந்து கிழித்த மரம், செடி, ஆடு, மாடு, ஊஞ்சல் ஆடும் பெண், வண்டியோட்டும் ஆள் படங்களை சின்ன அட்டைகளில் ஒட்டி, அதற்கேற்றபடி படம் எடுத்தமாதிரி பாவனை செய்து அப் படங்களை நண்பர்களிடம் காட்டுவேன். அவை அசல் அல்ல என்று தெரிந்தாலும் என்னிடம் போட்டொ எடுத்துக் கொள்ள சிறுவர்கள் கெஞ்சுவார்கள். இப்படித் தான் என் ஆரம்ப காலப் போட்டோ முயற்சி இருந்தது.

பிறகு கல்லூரிக்குப் போன பிறகு இண்டர் படிக்கும் போது தான், நிஜ போட்டோ எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. என் இன்னொரு மாமா மகன் ஜே.எம்.கல்யாணம் - சென்னை மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனின் அப்பா ஒரு சிறந்த போட்டோக் கலைஞர். அவர் தான் எனக்கு இக் கலையில் குரு. அவர் அப்போது `ரோலிப்ளக்ஸ்' என்ற அப்போதைய விலை உயர்ந்த, தரமான கேமராவால் அற்புதமான படங்களை எடுத்து வந்தார். அனேகமாக எங்கள் உறவினர்கள் எல்லோர் வீட்டிலும் அவர் எடுத்த படங்கள் தொங்கின. அவர் என் போட்டொ ஆர்வத்தைப் பார்த்து தன்னிடம் இருந்த அமெச்சூர் `பேபி ப்ரவ்னி` கேமிராவை எனக்குக் கொடுத்து அதில் பழகும்படி சொன்னார்.

அது ஒரு சின்ன கையடக்கமான காமிரா. அது கொடாக் பெட்டி காமிரா போல இல்லாமல் ரோலிப்ளக்ஸ் கேமிரா மாடல்¢ல் - ரிப்ளெக்ஸ் டைப்பில் இருந்தது. ஆளை போக்கஸ் செய்து பட்டனை அமுக்க வேண்டியது தான். வேறு டைமிங், அப்பர்ச்சர் என்று எதுவும் கிடையாது. நல்ல வெளிச்சத்தில் கை நடுங்காமல் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அற்புதமாக வரும். மேலும் பெட்டி கேமரா மாதிரி இல்லாமல் இது மிகவும் சிக்கனமாக இருந்தது. அதற்கு வேண்டியது 1 1/4" க்கு 1 1/4" அளவில் சதுரமான 12 படங்கள் எடுக்கும் 128பிலிம் தான். அதன் விலை அப்போது - 1951ல் - ரூ.1.25 தான். அப்பா அனுப்பும் மாதாந்திர பணத்தில் சிக்கனம் செய்து மாதம் ஒரு பிலிமாவது வாங்கி விட முடியும். அந்த கேமிராவால் நான் முதலில் எடுத்த படம் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாக கட்டடம் தான். நாலு புறமும் பெரிய கடிகாரங்கள் காட்டும் மணிக்கூண்டுடன் அமைந்த - பல்கலைக் கழக அடையாளம் சொல்லும் பெரிய கட்டடம், என் முதல் படத்திலேயே வெகு அழகாகப் பதிவாகி இருந்தது. என் முதல் கதையை அச்சில் பார்த்த பரவசத்தை அது ஏற்படுத்தியது. முதல் ரோல் முழுதும் பல்கலைக் கழகத்தின் பல்வேறு காட்சிகள் தான். ஒரு படம் கூட சோடையில்லாமல் பளிச் சென்று அற்புதமாய் அமைந்து விட்டது பெரிய சாதனை புரிந்து விட்ட பூரிப்பை ஏற்படுத்தியது.

- மீதி அடுத்த மடலில்.

-வே.சபாநாயகம்

Monday, August 02, 2004

நினைவுத் தடங்கள் - 20

'கொடுப்பினை வேண்டும்' என்று ஏங்க வைக்கும் கலைகளில் ஒன்று இசை. எல்லோருக்கும் இசை வசப்படுவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை மணி அய்யர், கே.பி.சுந்தராம்பாள் என்று மிகச் சிலருக்கே அந்த பாக்யம் கிட்டுகிறது. ஆனால் இசையை ரசிக்க அனேகமாக
அதிகப்படியானவர்க்கு வாய்த்திருக்கிறது. 'பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்பார்கள்' என்பார் மகாகவி பாரதி. அப்படியிருக்க மனித
இனம் பாட்டை ரசிப்பதில் அதிசயமென்ன?

எனக்கும் பிள்ளைப் பிராய முதலே இசையில் ஈடுபாடு இருந்தது. எங்கள் வீட்டில் யாரும் பாட வல்லவர்களாக இல்லை. வீட்டின் சூழ்நிலையும் பாரம்பரியமும்கூட இந்தக் கொடுப்பினைக்கு அவசியமானவை. பிராமணக் குடும்பங்களில் இது சர்வ சாதாரணமாக குழந்தைகளுக்கு அமைந்து விடுகிறது. வளைகாப்புத் தொடங்கி பிள்ளைப் பேறு வரை கர்ப்பிணியை அமரவைத்துப் பாடுவதும், பிள்ளை பிறந்தது முதல் தாலாட்டுக்குப் பதில் தாய் கர்நாடக இசையைப் பாடுவதும் குழந்தைக்கு இசைஞானம் கருவிலேயே ஏற்பட வாய்ப்பாகிறது. இன்றைய நகரீய வாழ்வில் அந்த வாய்ப்பு குறைந்து போனாலும் மற்றக் குழந்தைகளை விட பிராமணக் குழந்தைகளுக்கு இசை ரசனையும் இசைத் திறனும் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம். இசை வேளாள ருக்கும் இது சாத்யமே.

எனக்கு இசைரசனை எப்போது தொடங்கியது எண்ணிப் பார்க்கிறேன். எங்கள் வீட்டின் மறுபாதியில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டில் நவராத்திரி தோறும் கொலு வைப்பார்கள். எங்கள் பெரியப்பா மகள் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். அவருக்கு கொலுவைப்பதிலும் கொலுவின் முன்னால் பாடவும் ஆசை. அவருக்குப் பாட வராது. அவரது சினேகிதி - எங்கள் புரோகிதரின் பெண்ணுடன் சேர்ந்து ஏதாவது பாடுவார். அதை எங்கள் உள்ளூர் நாதசுரக்காரர் அவர்கள் பாடியதை நாதசுரத்தில் வாசிப்பார். வெளியூரிலிருந்து புதிதாகக் குடிவந்த ஒரு நாயுடு அம்மாவும் தெலுங்கில் எதாவது பாடுவார். நாதசுரம் அதையும் அடியொற்றி இசைக்கும். அந்த சின்ன வயதில் - 5,6 வயதில் அதை நான் ரசிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து எங்களுர் இளைஞர்கள் சிலர் - புரோகிதர் மகன், நாதசுரக்காரர் மகன் மற்றும் சில இசையார்வமுள்ள இளைஞர்கள் பக்கத்து நகரத்தில் நடக்கும் டெண்ட் சினிமாக் கொட்டகைகளில் பார்த்து வந்த படங்களிலிருந்து பாடல்களை எப்போதும் பாடியபடி இருபார்கள். அப்போதைய படங்களில் பாட்டுதான் பிரதானம்.

எம்.கே.தியகராஜ பாகவதரும் பி.யூ.சின்னப்பாவும், எம்.எஸ்ஸ¤ம் நடித்தபடங்கள் அப்போது பிரபலமானவை. பாட்டின் எண்ணிக்கையை வைத்தே விளம்பரம் வரும்.

'..........இன்னார் நடித்த 48 பாடல்கள் கொண்ட படம்' என்று விளம்பரம் இருக்கும்.

எம்.கே.டி நடித்த சிவகவி, பில்கணன் - பி.யூ.சின்னப்பா நடித்த மங்கையற்கரசி, குபேர குசேலா - எம்.எஸ் நடித்த பக்த மீரா, சேவாசதனம் -எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் - கே.பி.எஸ் நடித்த மணிமேகலை போன்ற படங்களை அவர்கள் பார்த்துவிட்டு வந்து சின்னப் பிள்ளைகளான எங்களுக்கு நடித்தும் பாடியும் அந்தப் படங்களைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துவார்கள். அதனால் ஏற்பட்ட
ரசனை எனக்கு கர்னாடக இசைமீது ஈர்ப்பை வளர்த்தது.

முதன்முதலாக கிராமபோன் என் பத்து வயதில் தான் எனக்கு அறிமுகமானது. எங்கள் வீட்டின் மறுபாதியில் இருந்த என் பெரியப்பா மகன் அன்றைய பாணி மைனர். புதுமைப்பித்தன் சித்தரிக்கிற - குதி புரள கிளாஸ்கொ மல் வேட்டி, மஸ்லின் ஜிப்பா, 'நெஞ்சின் பெட்டைத் தன்மையைக் காட்டும் மைனர் செயின்' சகிதமாய் சென்ட் மணக்க ரேக்ளா வண்டியில் தினமும் மாலையில் ஜமாவோடு பக்கத்து நகரத்துக்குப் போய் இரண்டு ஆட்டமும் சினிமா பார்த்து விட்டு திரும்புவதுதான் தினசரி ஜோலி.

அவர் இசைப் பிரியர். அவர் திடீரென்று ஒரு நாள் ஒரு கிராமபோன் பெட்டியைத் தன் ரேக்ளா வண்டியில் கொண்டு வந்தார். ஒரு ஆள் அணைத்துத் தூக்கும் படியான பெரிய சதுர அளவிலான பெட்டி அது. நூக்க மரத்திலான அந்தப் பெட்டி புதுப் பாலிஷில் பளபளத்தது. தங்க
நிறத்தில், ஊமத்தை பூ வடிவிலான அதன் ஒலி பெருக்கிக் குழல் எல்லோரையும் வசீகரித்தது. தெருத் திண்ணையில் வைத்து, பெட்டியைத் திறந்து கூடவே அவர் கொண்டு வந்திருந்த சதுரப் பெட்டியிலிருந்த இசைத்தட்டைப் பொருத்தி ஓடவிட்டார். கணீரென்ற எம்.கே.டி யின் 'அம்பா மனங்கனிந்து..' என்ற பாடல் எழுந்ததும் அதுவரை கிராமபோனைப் பார்த்திராத என்னைப் போன்ற சிறுவர் களும் பெரியவர்களூம் 'ஆ'வென வாய்பிளந்து அதிசயித்தது இன்னும் மனதில் பசுமையாய் நிற்கிறது. தொடர்ந்து பாகவதரின் 'அப்பனைப் பாடும் வாயால்', 'மன்மத
லீலையை வென்றார் உண்டோ' போன்ற அவரது புகழ்பெற்ற பாடல்களையும் எம்.எஸ், தண்டபாணி தேசிகர் சின்னப்பா, அரியக்குடி பாடல்களையும் தினமும் போட்டு எங்க ளைக் கிறங்க வைத்தார். தொலைக் காட்சி வந்த புதிதில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ள வீடுகளில் கூடிய கூட்டம் போல தினமும் எங்கள் வீட்டின்முன் ரசிகர் கூட்டம்தான். என்.எஸ். கிருஷ்ணன், காளி.என்.ரத்தினம் ஆகியோரது நகைச்சுவைத் தட்டுகளும் டம்பாச்சாரி, தூக்குத் தூக்கி போன்ற நாடகங்களும் எங்களுக்குக் கேட்கக் கிடைத்தன. திரும்பத் திரும்பத்
தினமும் கேட்டு எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. தூக்கத்தில் கூட பாகவதர் பாட்டுதான். அப்படி கர்னாடக இசை என்னை ஆட்கொண்டது.

அதனால் ஏற்பட்ட தாக்கம்தான் உறவினர் வீட்டுக் கல்யாணங்களில் கண் விழித்துப் பிரபல பாடகர்களின் இசைக் கச்சேரிகளை ரசிக்க வைத்தது. அத்தோடு அண்டை கிராமங்களில் நடைபெறுகிற அரிச்சந்திரன், வள்ளித்திருமண நாடகங்களில்
புகழ்பெற்ற சோழமாதேவி நடேசன் போன்ற அற்புதக் கலைஞர்களின் நாடகப்பாடல்களைக் கேட்க அந்த வயதிலிலேயே மைல்கணக்கில் அயர்வு பாராமல் நடக்க வைத்தது. பின்னாளில் அண்ணாமலையில் பயின்றபோது சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை மற்றும் தண்டபாணிதேசிகர் தலைவர்களாக இருந்த இசைக் கல்லூர்¢யில் நடந்த கச்சேரிகளைத் தேடிக் கேட்க வைத்தது. அப்படி கர்னாடக இசையை ரசித்து விட்டு இப்போதைய சினிமாப் பாடல்களைக் கேட்க மனம் சம்மதப் படவில்லை.

-தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

எனது களஞ்சியத்திலிருந்து - 6: வசைக் கவி

போற்றினும் போற்றுவர் : பொருள் கொடாவிடின்
தூற்றினும் தூற்றுவர்: சொன்ன சொற்களை
மாற்றினும் மாற்றுவர்: வன்கணாளர்கள்
கூற்றினும் பாவலர் கொடியவர் ஆவரே!

- என்று ஒரு அரசன் புலவர் இயல்பைப் பற்றி பாடினான். இதற்குக் காளமேகம் சரியான உதாரணம். ஒருநாள் பசியோடு நாகைப்பட்டினம் வழியே காளமேகம் போகிறான். அந்த ஊரில் காத்தான் என்பவரது சத்திரத்திற்குப் போனால் சாப்பாடு கிடைக்கும் என்று யாரோ
சொன்னதைக் கேட்டு அங்கே போகிறான். வெகுநேரம் காத்திருந்தும் சாப்பாடு தயாராகிற வழியாகத் தெரியவில்லை. கடும்பசி கண்ணை இருட்டுகிறது. காளமேகத்துக்குக் கடுங்கோபம் வருகிறது. கோபத்தில் ஏதாவது வசைப்பாடு விட்டால் காரியம் கெட்டுவிடும். எனவே சாப்பாடு தயாராகும்வரை பல்லைக் கடித்தபடி காத்திருக்கிறான். ஓரு வழியாக இரவு கழிந்து விடிகிற நேரத்தில்தான் உணவு பரிமாறப்படுகிறது.
ஆத்திரத்தோடு காளமேகம் பாடுகிறான்;

கத்துக்கடல் சூழ் நாகைக் காத்தான் தன் சத்திரத்தில்
அத்தமிக்கும்போதில் அரிசி வரும்; - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓரகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளியெழும்.

-`என்னய்யா சத்திரம் நடத்துறார் இந்த காத்தான்? காலைலேர்ந்து காத்திருக்கிறோம், அஸ்தமிக்கிற நேரத்துலதான் அரிசி வருது; அப்புறம் அதைக் குத்தி உலையிலே போடும்போது ஊரே அடங்கி தூங்கப் போயிடுது; சாதம் வெந்து ஒரு அகப்பைச் சோறு இலையிலே விழறத்துக்குள்ளே கிழக்கே வெள்ளி நட்சத்திரம் கெளம்பிடுது!` என்று வசை பாடுகிறான். ஆனால் அதற்காக சாப்பிடாமல் இருக்க முடியாதே! சாப்பிடுகிறான். சத்திரத்து நிர்வாகியின் காதுக்கு காளமேகம் பாடிய இந்த வசைப்பாட்டு போகிறது. வந்திருப்பவர் காளமேகம் என்று தெரிகிறது. ஐயோ! இந்த ஆள் பாடினார் என்றால் சத்திரத்துப் பெயர் கெட்டுப் போகுமே என்று பதைத்து புலவரிடம் ஓடி வருகிறார்.`ஐயா! மன்னிக்கணும்!இன்னிக்குக் கொஞ்சம் தாமதமாகிவிட்டது. உண்மைதான். நீங்க புகழ் பெற்ற கவிஞர்1 நீங்க இப்படி வசைபாடினது வெளியே தெரிஞ்சா சத்திரத்துப் பெயர் கெட்டிடும். பெரியமனசு பண்ணிப் பாட்டை மாத்திப் பாடணும்` என்று மிகப் பணிவோடு கேட்டுக் கொள்கிறார். இப்போது பசியாறிவிட்ட நிலையில் கோபம் குறைந்திருக்கிறது காளமேகத்துக்கு. அதோடு சத்திரத்து நிர்வாகியின் பணிவான வேண்டுகோள் நெஞ்சை நெகிழ்விக்கவே மனம் இளகிச் சொல்கிறான்: `பாட்டை மாத்தவேணாம்! அப்படியே இருக்கட்டும்.` என்கிறான். `அது எப்படி ஐயா?` என்கிறார் நிர்வாகி. பொருளை மாற்றி விளக்கம் தருகிறான்:

`நாகைப் பட்டினத்து காத்தான் சத்திரத்துக்குப் போனால் அங்கே சாப்பாடு எப்படிப் போடுறவார்கள் தெரியுமா? காலையிலிருந்து அஸ்தமிக்கும் வரையிலும் அரிசி வந்து கொண்டே இருக்கும்; அவ்வளவையும் உலையிலே இட்டு சமைத்தால் ஊரே சாப்பிடலாம். ஒரு அகப்பை அன்னம் இலையில் விழும்போது பார்த்தால் அப்படியே வெள்ளி நட்சத்திரம்போலப் பளிச்சிடும்! அவ்வளவு வெண்மையாயிருக்கும் சோறு`

`ஆகா!` என உருகிப்போகிறார் நிர்வாகி. `சொன்ன சொற்களை மாற்றினும் மாற்றுவர்` என்றது உண்மையாகிறது.

முத்துராம முதலியார் என்ற கவிஞரின் அனுபவம் வேறு வகையானது! 100 ஆண்டுகளுக்கு முன் சென்னை மயிலாப்பூரில் வாழ்ந்த புலவர் இவர். தனவான்கள் ஊருக்கு விருந்திடுவது பாராட்டுகுரிய செயல்தான். ஆனால் விருந்துண்ண வருவோரை அன்போடு வரவேற்று அடக்கமாக நடந்து கொள்ளாமல் அகம்பாவத்தோடு அவமரியாதையாய் வந்தவரை நடத்துவது பண்பாடில்லாத அற்பரின் செயல். அப்படி நடந்து கொண்டஒரு பணக்காரரைச் சாடுகிறார் கவிஞர்.

`அட்டைக்கேன் மணிமந்த்ரம்? அறுகினுக்கேன் கூர்வாள்? கால் அலம்பிடும்பீக்
குட்டைக்கேன் பொற்படிகள்? குருடனுக்கேன் கண்ணாடி? கொல்லும் கள்ளிப்
பட்டைக்கென் சம்பாரம்? படுபாவி முருகன் எனும் பழந்துடைப்பக்
கட்டைக்கேன் ஊர்விருந்து? புலவர்காள்! நீங்கள் இது கழறுவீரே!`


- நிரில் கிடக்கும் அட்டை கடித்தால் அதற்குப் பரிகாரம் செய்ய மணிமந்திர ஔஷதம் எதற்கு? அறுகம் புல்லறுக்க கூரிய வாள் எதற்கு? கால்கழுவும் குட்டைக்கு எதற்குத் தங்கப்படிகள்? குருடனுக்கு எதற்குக் கண்ணாடி? உயிரைக் கொல்லும் பாலைச் சுரக்கிற கள்ளி என்ன லவங்கப்பட்டையா - அதன் பட்டையைப் போட்டுச் சமையல் செய்ய? அதுபோல முருகன் என்னும் இந்தப் பழையத் துடைப்பக் கட்டைக்கு ஊர்விருந்து எதற்கையா? புலவர்களே! நீங்களே சொல்லுங்கள்!`

( மணிமந்த்ரம் - விஷம் போன்றவற்றைப் போக்குவதற்குப் பயன்படும் கல்மணி¢யும் மந்திரமும்; சம்பாரம் - கறிக்குப் போடும் மசாலைச் சரக்குகள்; முருகன் என்பது சென்னையில் அப்போது வாழ்ந்த முருகப்ப முதலியாரைக்குறிக்கும்)

-மேற்கண்ட பாடலைப் படித்ததும் பலருக்கு சிவாஜி நடித்த -கலைஞர் வசனம் எழுதிய `குறவஞ்சி` திரைப்பட வசனம்

`நெருப்புக்கு ஏன் பஞ்சு மெத்தை? - இந்த
நீதிகெட்ட ஆட்சிக்கு ஏன் மணிவிழா? -

நினைவுக்கு வரக்கூடும்! இது கலைஞருக்கும் கவிஞர் கண்ணதாசனுக்கும் சர்வசாதாரணம். நாம் ரிஷிமூலம் நதிமூலமெல்லாம் பார்க்கக் கூடாது.

இந்தப் பாடலுக்கும் மூலம் ராமச்சந்திரக் கவிராயரின் ஒரு பாடல் என்றால் ஆச்சரியப்பட வேண்டாம்.

`கள்ளிக்கேன் முள்வேலி? கழுதைக்கேன் கடிவாளம்? கறுப்பில்லாத
உள்ளிக்கேன் பரிமளங்கள்? உவர்நிலத்துக்கேன் விதைகள்? ஒடித்துப் போடும்
சுள்ளிக்கேன் கோடாலி? துடைப்பத்திற்கேன் கவசம்? சும்மா போகும்
பள்ளிக்கேன் அதிவீர மழவரங்கப் பூபதியேனும் பட்டம் தானே?

- ராமச்சந்திரக் கவிராயர்.

-நகலைவிட அசல் கலைதன்மை மிகுந்திருக்கிறதில்லையா?

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

எனது களஞ்சியத்திலிருந்து - 5: பாராட்டுக் கவி

கவிஞர்கள் பொன்னுக்கும் புகழுக்கும் மட்டும் பாடியவர்களில்லை. அரசர்களையும் செல்வந்தர்களையும் மட்டும் படியவர்களில்லை. எளியோர்களையும் சாதாரண மக்கள் ஊழியர்களையும் கூடப் பாடியிருக்கிறார்கள். பெரிய உதவி என்றில்லை; பெரிய விருந்து என்றில்லை. அற்ப உதவி செய்தாலும் எளிய உணவளித்தாலும் அதையும் மனம் நெகிழ்ந்து பாடியிருக்கிரார்கள்.

அப்படிப்பட்ட கவிஞர்களில் முன் நிற்பவர் ஔவை. `உப்புக்கும் பாடி கூழுக்கும் ஒரு கவிதை ஒப்பிக்கும் எந்தன் உளம்` என்று தன் கவிப்பொருள் பற்றிக் கூறுகிறவர். ஒரு தடவை மழையில் நனைந்து பசியோடு ஒரு குடிசைக்குள் ஔவை நுழைகிறார். அது, தந்தையை இழந்து ஏழ்மையில் ஆதரவற்று தனியே வாழ்ந்த பாரி மன்னனின் மக்களான அங்கவை, சங்கவை யின் குடிசை. தந்தையின் நண்பரான ஔவையைக் கண்டதும் அப் பெண்களுக்கு எல்லையில்லா மகிழ்ச்சி. தந்தையைப் போல் அவருக்கு விருந்தளிக்க வசதியில்லை. தங்களுக்காகக் சமைத்திருக்கிற எளிய உணவை இடுகிறார்கள். நல்ல உணவை அளிக்கமுடியாமைக்கு வருந்துகிறார்கள். ஆனால் கவிஞருக்கு
அது அமுதமாகப் படுகிறது. வயிறும் மனமும் நிறைய, ஔவை பாடுகிறார்.

`வெய்தாய் நறுவிதாய் வேணளவும் தின்பதாய்
நெய்தான் அளாவி நிறையிட்டுப் - பொய்யே
அடகு என்று சொல்லி அமுதத்தை இட்டார்
கடகம் செறியாதோ கைக்கு?

`அடடா! என்ன அருமை! சூடாக, நறுவிசாக, வேண்டியமட்டும் தின்னும்படியாய் நிறைய நெய்விட்டு `கீரை` என்று பொய் சொல்லி விட்டு அமுதத்தை அல்லவா படைத்திருக்கிறார்கள்? இந்தக் கைகளுக்கு இரத்தினக் கடகம் அல்லவா செய்து போட வேண்டும்?` என்று உருகுகிறார்.

( வெய்து - சூடு; அடகு - கீரை )

இன்னொரு இடத்திலும் பசிக்கு ருசியான - ஆனால் மிக எளிமையான உணவு படைக்கப் பட்டபோதும் இப்படித்தான். கவிஞருக்கு உணவின் தரம் பெரிதல்ல. அளிக்கும் மனமே முக்கியம். புல்வேளூர் என்ற ஊரில் வாழ்ந்த பூதன் என்கிற ஒரு எளி-யவன் விருப்பத்தோடு
ஔவையாருக்கு மிக எளிய உணவைப் படைத்தான். வரகு அரிசியைக் கொண்டு சமைத்த சோறு; கத்தரிக்கய்ப் பொரியல்; முரமுர வெனப் புளித்த மோர்; இதுதான் அவன் இட்டது. ஆனால் கவிஞருக்கு எல்லா உலகங்களையும் ஈடாகக் கொடுத்தாலும் அந்த விருந்துக்கு இணையாகச் சொல்ல முடியவில்லையாம்!

கவிதை பிறக்கிறது:

`வரகரிசிச் சோறும், வழுதுணங்காய் வாட்டும்
முர முர வெனவே புளித்த மோரும் - திரமுடனே
புல்வேளுர்ப் பூதன் புரிந்து விருந்திட்டான்; ஈது
எல்லா உலகும் பெறும்.

( வழுதுணங்காய் - கத்தரிக்காய்; புரிந்து - விரும்பி )

கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கும் கவிதையின் பாடு பொருள் - உயர்ந்ததாக, உயர்ந்த மனிதர்களாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை. எள்¢ய மனிதர் செய்யும் சிறு உதவியையும் பெரிதாகக் கருதி அவர்களைப் பாராட்டிக் கவி புனைந்தளிப்பார்.

ஸ்ரீராமன் என்றொரு சலவைத் தொழிலாளி ஒருமுறை கம்பருடைய ஆடைகளை மிக அருமையாய் ஒப்புமை காட்டவியலாத வெண்மையுடன் வெளுத்துக் கொடுத்தான். அவனது சலவையின் நேர்த்தியை வியந்த கம்பர் அத்திறனை கொஞ்சம் உயர்வு நவிற்சியுடன் பாராட்டிக் கவிதையை வழங்கினார்.

வெள்ளைவெளேரென்ற - ஸ்ரீராமன் வெளுத்துக் கொடுத்த வேட்டியைப் பார்த்தார் சிவபெருமான். உடனே தம் தலையை அண்ணாந்து பார்த்தார். ஏன்? அந்த சலவை அதிகப் பிரகாசமாகமாக இருக்கிறதா அல்லது தாம் தலையில் சூடியுள்ள பிறைநிலா அதிகப் பிரகாசமாக இருக்கிறதா என்று ஒப்பிட்டுப் பார்க்கத்தான்!

பிரம்மதேவர் தம் மனைவியான சரஸ்வதி தேவியைப் பார்த்தார். சரஸ்வதி ஸ்படிகம் போன்று வெண்மையானவர். ஸ்ரீராமனது வெண்மையான சலவை, தம் மனைவியோடு அதனை ஒப்பிட்டுப் பார்க்கச் செய்தது.

மும்மூர்த்திகளில் மூன்றாமவரான மகாவிஷ்ணுவுக்கும் ஸ்ரீராமனின் சலவையை கண்டு வியப்புண்டாகி தன் கையிலிருக்கிற வெண்சங்கைப் பார்க்கிறார் - எது அதிக வெண்மையானதென்று!

- இப்படி மும்மூர்த்திகளும் வியக்குமாறு மலைபோன்ற தோள்களையுடைய வண்ண ஸ்ரீராமனின் சலவையின் நேர்த்தி இருந்ததாம்!

இப்போது கவிதையைப் பார்ப்போம்:

`சிரம் பார்த்தான் ஈசன்; அயன்
தேவிதனைப் பார்த்தான்;
கரம் பார்த்தான் செங்கமலக்
கண்ணன்; - உரம்சேர்
மலை வெளுத்த திண்புயத்து
வண்ணான் சீராமன்
கலை வெளுத்த நேர்த்திதனைக்
கண்டு.

(சிரம் - தலை; அயன் - பிரம்மா; மலை வெளுத்த - மலையையும் தோற்கடித்த;
கலை - துணி)

இப்படித்தான் இன்னொரு தொழிலாளி - கம்பரின் பாராட்டுக் கவியைப் பெறுகிறான். மாமண்டூர் என்ற ஊரில் இருந்த சிங்கன் என்ற கொல்லன் கம்பருக்கு ஒரு அருமையான எழுத்தாணியை கலைநேர்த்தியுடன் வடித்துக் கொடுத்தான். இரும்பு வேலையில் மகா நிபுணனான அந்தக் கொல்லனைப் பாராட்டி கம்பர் ஒரு கவிதை பாடினார். பாராட்டு என்றாலே கொஞ்சம் உயர்வு நவிற்சி இருக்கும்தானே?

இந்தக் கலைஞனைத் தேடி மும்மூர்த்திகளும் அவனது உலைக்களத்துக்கே வந்து காத்துக் கிடக்கிறார்கள். ஏன் தெரியுமா?

மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் ஆயுதமான சக்கராயுதம் அநேக யுத்தங்களில் பயன்படுத்தியதால் தேய்ந்து போயிருக்கிறது. அடுத்து அதற்கு வேலை வருவதற்குள் புதிய சக்கராயுதம் செய்தாக வெண்டும். நல்ல வலுவான இரும்பில் செய்ய வல்லவன் மாமண்டூரில் இருக்கிற சிங்கன் என்கிற கொல்லன்தான். எனவே அவரே நேரில் உலைகளத்துக்கே வந்து `அப்பா, எனக்கு அவசரமாய் ஒரு சக்கரம் செய்து கொடு` என்று கேட்டுக் கொண்டு நிற்கிறார்.

அப்போது பிரம்மதேவன் அங்கு வருகிறார். கோடிக்கணக்கான மக்களது தலையில் எழுதி எழுதி அவரது எழுத்தாணி தேய்ந்து போய்விட்டது. இனிப் பிறக்கிறவர்களுக்கு புது எழுத்தாணி கொண்டுதான் தலையெழுத்தை எழுதவேண்டும். என்வே ` எனக்கு உடனே ஒரு எழுத்தாணி செய்து கொடப்பா` என்று கேட்டுக்கொண்டு அவர் நிற்கிறார்.

இந்த சமயத்தில் கோழிக்கொடியோனான முருகப் பெருமான் அங்கு வந்து குன்றைத் துளைக்கும்படியான கூரிய வேல் ஒன்றை வடித்துக் கொடு என்று கேட்கிறார். கடைசியாக சிவபெருமானும் வந்து விட்டார். `சிங்கா! எனக்கு ஒரு மழு செய்து கொடேன்` என்கிறார்.

இப்படி - தெய்வங்களே கொல்லனைத் தங்கள் இருப்பிடத்துக்கு அழைத்து ஆயுதங்களைச் செய்யச் சொல்லாமல் தாங்களே நேரில் சென்று கேட்கிறார்கள் என்றால் சிங்கன் எப்பேர்ப்பட்ட கலைஞனாக இருக்க வேண்டும்!

இப்போது பாடலைப் பார்ப்போம்:

`ஆழியான் `ஆழி`
அயன் `எழுத்தாணி` என்பார்;
கோழியான், `குன்றெறிய
வேல்` என்பான்; - பூழியான்
`அங்கை மழு` என்பான்,
அருள்பெரிய மாவண்டூர்ச்
சிங்கன் உலைக் களத்தில்
சென்று.

(ஆழியான் - திருமால்; ஆழி - சக்கரம்;ராயன் - பிரும்மா; கோழியான் கோழிக் கொடியோனான முருகன்; பூழியான் - உடலெங்கும் புழுதி போல விபூதியைப் பூசியுள்ள சிவபெருமான்; அங்கை மழு - கையில் வைத்துக் கொள்ளும் அழகிய மழு; அருள் பெரிய - கருணை மிகுந்த; மாவண்டூர் - மாமண்டூரின் பழைய பெயர் )

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.