Monday, October 25, 2010

இவர்களது எழுத்துமுறை - 12 - ஜெயகாந்தன்

1. என் மனத்தால், புத்தியால், உணர்வால் நான் அறிந்து அனுபவப்படாத எதைப்பற்றியும் நான் எழுதினதில்லை.என் படைப்புகளில் கற்பனைக்கு அதிக இடம் அளிப்பதில்லை. அனுபவத்தின் அடிப்படையில் கிடைத்த யூகத்தின் துணை கொண்டே பெரிதும் எழுதுகிறேன். நான் பொறுமையாக உலகின் பேச்சைக் கேட்கிறேன். அதை என் பார்வையில் உட்படுத்திப் பார்க்கிறேன். அதனால் கிடைக்கும் காட்சியைக் கலை வடிவம் கொடுத்துப் பாரக்கிறேன்.

2. என்னைப் பெரிதும் பாதிப்பவை மனித வாழ்வின் பிரச்சினைகளே. என்னைப் பொறுத்தவரை எழுத்தாளனுக்கு அவனது படைப்புகளுக்குப் பகைப்புலனாக அமைய வேண்டியது மனிதவாழ்வின் பிரச்சினைகளே.

3. சமுதாயத்திற்கு தனிப்பட்ட முறையில் தீவிர சுயஉணர்வு (இன்டென்ஸ் செல்ஃப் ஃபீலிங்)இல்லை யென்பேன். ஆனால் எழுத்தாளனுக்கு இது இன்றியமையாதது. அலனுடைய படைப்புகளில் சமுதாய நோக்கமே முதலிடம் பெற வேண்டும். உருவம் உத்தி முதலிய கலை நுட்பங்கள் உள்ளடக்கத்தைப் பொறுத்தே அமைகின்றன. சமுதாயத்தின் வாழ்க்கை முறையினால், ஏற்றத் தாழ்வுகளினால், சட்ட திட்டங்களினால் பெரிதும் பாதிக்கப் பட்டவர்களைப் பற்றி எழுதுவது அவசியம் என்பேன். இதை நீங்கள் என் எழுத்தில் காண்பீர்களானால் அதுவே என்னுடைய தனித்துவம் நிலை என்பேன்.

4. நான் எழுதுவதற்கு ஒரு URGE-ம் அதற்குரிய காரணமும் உண்டு. என் எழுத்துக்கு ஒரு லட்சியமும் உண்டு. நான் எழுதுவது முழுக்க முழுக்க வாழ்க்கையிலிருந்து நான் பெறும் கல்வியின் விளைவும் எனது தனிமுயற்சியின் பலனுமாகும்.

5. நான் பணத்துக்காகவும் எழுதி இருக்கிறேன். நான் எழுதுவதன் முலம் பணம் சம்பாதித்திருக்கிறேன். ஆனால் நான் எழுதுவதே பணத்துக்காக அல்ல. அப்படியென்றால், வேறு எதற்காக? புகழுக்காகவா? ஆம்! புகழுக்காகத்தான்.....நிரந்தர புகழுக்காக.

6. நான் எழுத ஆரம்பித்த காலத்தில் எழுதியவை எல்லாம் ஆபாசமென்று என்னை ஏசியவர்கள் பலர். மனிதனுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியை ஆக்ரமித்துக் கொண்டிருப்பதே பால் உணர்ச்சி. ஆகவே அதற்கும் நான் மதிப்பளிக்க விரும்பினேன். ஒரேயடியாக அதைப் பற்றி மட்டுமே எழுதுவவதோ அல்லது அதை அறவே வெறுத்து ஒதுக்குவதோ சரியல்ல என்று எண்ணுபவன் நான்.

7 . என் எழுத்துக்கள் எந்தத் தனிமனிதரையும் தனிப்பட்ட முறையில் அலசுவதில்லை; ஆராய்வதில்லை; அவமதிப்பதில்லை. அப்படி நான் செய்துவிடுகிற பட்சத்தில் அதுவே என்னுடைய எழுத்துக்களின் வீழ்ச்சியாகும்.

8. என்னுடைய கதைகள் நஞ்சுக் கொடியோடு, நாற்ற நீரோடு, உதிரக் கவிச்சியோடு, உரத்த குரலுடன் பிறக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். பிறக்கிற கதைகள் இலக்கியச் சுத்தமாக இருந்தால் போதும். மொழிச் சுத்தம் அவ்வளவு முக்கயமில்லை.

9. வாசகர்களுக்குப் பிடித்ததை நான் எழுதுவதில்லை. நான் எழுதுவதை விரும்புகிறவர்களே என் வாசகர்கள்.

10.எழுதுவதால் நான் மேன்மையுறுகிறேன். எழுதுவதனால் என் மொழி வளம் பெறுகிறது. எழுதுவதால் என் மக்கள் இன்பமும் பயனும் எய்துகிறர்கள். எழுதுவதால் சமூகப் புரட்சிகள் தோன்றுகின்றன. எதிர்காலச் சமூகத்தை மிக உன்னத நிலைக்கு உயர்த்திச் செல்ல இலக்கியம் ஒன்று தேவை. இதற்காகவெல்லாம் நான் எழுதுகிறேன். வாழ்க்கைப் போராட்டத்தில் நான் தேர்ந்தெடுத்துக் கொண்ட ஆயுதம் எழுதுகோல். அதனால் எழுதுகிறேன். 0

Monday, October 18, 2010

இவர்களது எழுத்துமுறை - 11 - சுந்தரராமசாமி

1.நான் என் அனுபவங்களை என் எழுத்தில் ஆராய்கிறேன். அவற்றில் விழுந்து கிடக்கும் திரையை அகற்ற முடியுமா என்று பார்க்கிறேன்.ரியாலிட்டியைச் சந்திப்பதும் அதை மனப்பூர்வமக ஏற்றுக் கொள்வதும் நமக்கு மிகவும் சங்கடமான விஷயம். இந்த எதிர் கொள்ளலுக்கு என்னையும் மற்றவர்களையும் தயார்ப்படுத்த முயல்பவைதான் என் எழுதுக்கள்.

2.சுய அனுபவம் சார்ந்துதான் ஒரு எழுத்தாளன் எழுத முடியும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. சிறு வயதில் ஏற்பட்ட எண்ணம் இது.இன்று வரையிலும் விசேஷப் பாதகம் இல்லாமல் அந்த எண்ணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

3.எனக்கே முற்றிலும் தெளிவாகாத ஒரு இயற்கைத் தாகந்தான் இன்றும் என்னை எழுதத் தூண்டுகிறது எனத் தோன்றுகிறது.ஒரு விதத்தில் இதைத் தவிர வேலை ஏதும் மேற்கொள்ள என்னால் ஆகாது என்றும் சொல்லலாம். எழுதுகிறபோது எனக்கேற்படுகிற ஒரு 'அட்ஹோம்' உணர்ச்சி எனக்கு வேறு வேலைகளில் ஏற்படுவதில்லை. வேறு காரியங்களில் ஈடுபட்டிருக்கும்போது எனது மூர்த்திகரம் சிந்திச் சிதறுவதாகத் தோன்றுவதாலும், எழுத்தில் குவிந்து தன்னம்பிக்கையையும் ஆத்ம திருப்தியை ஏற்படுத்துவதாலும் இயற்கை இந்த ஒரு வேலைக்கே என்னைத் தயார் செய்திருக்கிறதோ என எண்ணிக் கொள்கிறேன்.

4.குறைவாக எழுதி இருக்கும் நிலையிலும் எனக்கு மனநிறைவைத் தரும் சில விஷயங்களும் உள்ளன.என் எழுத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி, எழுதும் காலத்தில் எனக்கிருந்த ஆற்றலையும்,அறிவையும், மனதையும் முழுமையாகச் செலுத்தியே எழுதி இருக்கிறேன்.அத்துடன் ஒவ்வொரு படைப்பையும் செம்மை செய்யவும் செப்பனிடவும் முயன்றிருக்கிறேன்.அவசரமாகவோ கவனக் குறைவாகவோ எதையும் எழுதியதில்லை.

5.எழுதுவதன் மூலம் நான் வாசகர்களுக்கு எந்த விதத்திலும் கடமைப் பட்டவனாக உணரவில்லை. என்னுடைய வாசகர்கள் யார் என்பதும் எனக்குத் தெரியாது.வாசகர்களை சுவாரஸ்யப்படுத்துவதோ, அவர்களுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதோ, வாழ்க்கைப் பாதையில் அலுப்பு நடை நடந்து அவர்கள் 'அப்பாடா!' என்று ஆயாசத்துடன் சோர்ந்து உட்காரும்போது குதிரைச் சதை பிசைந்து விடுவதோ என்னுடைய வேலை அல்ல.

6.லட்சக்கணக்கான வாசகர்களின் பலவீனங்களைத் திருப்தி படுத்துவது என்னுடைய வேலை அல்ல என்று நினைக்கிறேன்.அவர்களுடைய பாலுணர்வுகளை நான் சுரண்ட விரும்பவில்லை. அவர்களுடைய அறிவுகளை மழுங்கடித்து வாழ்க்கையைப் பற்றி ஒரு கனவை உருவாக்க விரும்பவில்லை.கலை பற்றிய என் நம்பிக்கைக்கு எதிரான காரியங்கள் இவை என்று நினைக்கிறேன்.

7.நான் எனக்காக மட்டும் எழுதக்கூடியவனாக இருக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறேன்.எனக்குள் புதையுண்டு கிடக்கும் கலை உணர்ச்சி ஒரு வடிவம் பெற்று வெளிவந்த பின்புதான் எனக்கே அது இருந்திருப்பது தெரிய வருகிறது. இதே போல் வேறு என்ன என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டுவிடவே நான் எழுத முற்படுகிறேனோ என்னவோ! இவ்வாறு வெளிப்பட வெளிப்பட, நான் அத்தகைய அனுபவங்களுக்கு ஆளாக
ஆளாக,என்னை நான் கண்டு கொள்வது ஒரு விதத்தில் சாத்யமாக இருக்குமென்று தோன்றுகிறது.

8.வாசிப்புத்தன்மை என்பது முக்கியமான விஷயம். ஒரு விஷயத்தை எழுதி அது வாசகனுக்குப் போய்ச் சேரவில்லை என்றால் எந்த எழுத்தாளனுக்கும் அது ஏமாற்றம்தான்.ஆக நான் ஒரு விஷயத்தைச் சுலமாகச் சொல்ல வேண்டியது முக்கியமானது.ஆனால் நான் என்ன நினைக்கிறேனோ அதைச் சொல்லவும் வேண்டும். அதுவும் முக்கியம்தான்.என்னுடைய சிந்தனையில் பல்வேறுபட்ட மாற்றங்கள் நிகழும் சந்தர்ப்பத்தில் அதையும் நான் சொல்ல ஆசைப்படுகிறேன்.

9.நான் உள்ளடக்கத்துக்கு ரொம்பவும் முக்கியத்துவம் கொடுப்பேன்.உள்ளடக்கம் சரியாகச் சொல்லப் பட்டிருக்கிறதா, பரிபக்குவமாக இருக்கிறதா, அனுபவமாக மாற்றப் பட்டிருக்கிறதா, கருத்துக்கள் வெறும் கருத்துக்களாக இல்லாமல் கலையாக மறு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறதா என்றெல்லாம் பார்ப்பேன்.

10.புதுமை மீது எனக்குத் தீராத கவர்ச்சி உண்டு. புதுமை என்று மொழி சார்ந்து நிற்கும் வடிவத்தை மட்டுமே நான் குறிப்பிடவில்லை. புதுமை என்பது முக்கியமாக எனக்கு விஷயம் சார்ந்த விமர்சனம் ஆகும்.அது வாழ்க்கை சார்ந்த புதிய பார்வையும் ஆகும்.இன்றைய வாழ்க்கை சார்ந்த தாழ்வுகளை விவாதித்துக் குறைகளை இனம் கண்டு அவற்றை நீக்கும் வழிவகையாகும். இந்த வேட்கை சார்ந்ததுதான் என் புதுமை. புதிய படைப்பு, இன்று வரையிலும் படைப்பாளிகள் போயிராத வாழ்க்கையின் புதிய பிராந்தியத்துக்குள் போயிருக்க வேண்டும்.புதிய அனுபவங்களைக் கொண்டு வந்து வாழ்க்கை சார்ந்த பார்வைகளை விரிவுபடுத்தி இருக்க வேண்டும்.புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி நம் சிந்தனைகளைக் கூர்மைபடுத்தி இருக்க வேண்டும். பழைய மொழியை வைத்து இந்த லட்சியங்களை நிறைவேற்ற முடியாது.வாழ்க்கையின் விமர்சனம் தரும் புதிய மொழிதான் புதிய அனுபவங்களையும் சிந்தனைகளையும் படைத்துக் காட்டும்.

11.ஒரு எழுத்தாளன் என்ற முறையில் நான் எதற்கும் பூரண விசுவாசம் செலுத்துகிறவன் அல்ல.நடைமுறை அர்த்தப்படி கட்சிகள்,அரசாங்கம்,சமூகம்,மதம்,தேசம் இவற்றிற்கெல்லாம் பூரண விசுவாசம் அளித்து விடக்கூடாது என்பதை எனது இலக்கியக் கொள்கையின் ஒரு பகுதியாக நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன். வெகு ஜனத்தின் நம்பிக்கைகளைப் பிரதிபலிப்பதோ, புதிய நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளும்படி அவர்களைத் தூண்டுவதோ என் வேலலையல்ல. அவர்களுடைய பொது நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட விதிவிலக்கான உண்மைகளைச் சொல்லி,அந்தச் சந்தர்ப்பங்களில் அவர்களுடைய விரோதியாகவும், காலத்தின் நண்பனாகவும் இருப்பதே என் வேலை என்று எண்ணுகிறேன். மனிதனின் சராசரித்தன்மையின் அழுத்தத்தினால் வெளியே பிதுங்கிவிடும் விதிவிலக்கான உணமைகள் அலட்சியப் படுத்தப்பட்டு முக்கால் உணமைகள் முழு உண்மைகளின் தோற்றம் கொள்கிறபோது, மைனாரிட்டியின் கால் உண்மையில் கலந்து கொண்டு கத்துவது தவிர்க்க முடியாத காரியமாகவே எனக்குப் படுகிறது.

12.வாழ்வின் அந்திமதசையில் இவ்வாறு கூறிக் கொள்ள முடிந்தாலே போதும்."என்னுடைய கலைத்திறன் மிகச் சொற்பமானதுதான் எனினும் அந்த சொற்ப கலை உணர்வையும் நான் பேணிச் சீராட்டி வளர்த்தேன். எனது அந்தரங்கத்துக்கு உவப்பான விஷயத்தையே நான் அளித்தேன். மூன்று வார்த்தைகளில் சொல்லக் கூடியதை நாலு வார்த்தைகளில் சொல்லலாகாது என்ற விதியைக் கடைசி வரையிலும் நான் காப்பாற்ற முயன்றேன். எனக்குக் கிடைத்த மொழியை மலினப் படுத்தாமல் மறு சந்ததிக்கு அளிக்க நானும் என்னால் ஆன முயற்சி எடுத்துக் கொண்டேன்." இவ்வளவு போதும் எனக்கு. 0

Monday, October 11, 2010

இவர்களது எழுத்துமுறை - 10 - வண்ணநிலவன்

1. உங்களது இலக்கியக் கொள்கை என்ன?

இலக்கியம் என்பது ரசனைதான். எல்லோராலும் ரசிக்கப்படுவதால், எல்லோருக்கும் பிடித்திருப்பதால் கலை வாழ்கிறது. சாதிப்பிரச்சினையை வைத்து ஒரு கதை எழுதினேன். அந்தப் பிரச்சினை என்னைப் பாதித்தது எழுதினேன். அவ்வளவுதான் கலையில் முடியும். அதிர்ஷ்டவசமாய் கலையில் தீர்வு இருக்கலாம். எனக்கு முக்கியமானது கலைதான்.

2. உங்களை வெளி உலகுக்கு பிரபலப்படுத்திய 'கடல்புரத்தில்' அச்சில் வந்தபோது உங்கள் மனநிலை என்னவாக இருந்தது?

என்னைப் பொறுத்தவரை எதுவுமே பாதிக்கல. எனக்கு எல்லாமே ரொம்ப சாதாரணமாகத்தான் படுது. ஏதோ நாம ரொம்ப சாதாரணமா செஞ்சா எல்லோரும் இப்படி பிரமாதமா இருக்குன்னு சொல்றாங்களேன்னுதான் எனக்கு ரொம்ப ஆச்சரியம் ஏற்பட்டது. மகிழ்ச்சியோ, கர்வமோ, அகந்தையோ எனக்கு ஏற்படல.

3. இது தன்னடக்கமா?

நல்ல எழுத்து எது என்று எனக்குத் தெரியும். என்னைவிட பிரமாதமாய் எழுதுபவர்கள் இருக்கிறார்கள் என்பதும் எனக்குத் தெரியும். நான் எழுதிய எழுத்துக்கள் எனக்குத் திருப்தியா இல்லை. என்னை விடவும் பிரமாதமான எழுத்துக்களைப் பார்க்கும்போது நான் அதற்கு அருகே இல்லை. என் நல்ல எழுத்தை இனிமேல்தான் எழுத வேண்டும். அது முடியுமான்னு தெரியல.

4. உங்கள் படைப்புகளில் குறிப்பாக கடல்புரத்தில் மற்றும் ரெயினீஸ் அய்யர் தெரு நாவல்களில் தகாத உறவு அதிகம் இருக்கிறதே? இது உங்கள் வயதின் மனோ நிலையா?

நான் கண்ட, கேட்ட விஷயங்களைத்தான் கதைகளில் சொல்லி இருக்கிறேன். இவை அல்லாத விஷயங்களும் நிறைய இருக்கின்றன.

5. புதுமைப்பித்தனைப் போல் என் சிறுகதைகளிலும் நாவல்களிலும் நிறைய பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறேன். ஒன்றை மாதிரி ஒன்றை நான் எழுதுவதே இல்லை. இந்த என் பரிசோதனை முயற்சி ஒருவேளை வாசகனை எட்டாமல் போயிருக்கலாம். என் தாமிரபரணிக் கதைகளைப் பார்த்தால் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு முகத்தோடு இருக்கும். நான் எல்லாக் கதைகளையும் ஒரே மாதிரி, ஒரே குரலில் சொல்வதில்லை. நான் எந்தப் பாத்திரத்தை அமைக்கிறேனோ அதன் குரலில்தான் பேசுகிறேன்.எனது குரல் வேறு வேறு விதமாய் இருக்கும். என் ஒவ்வொரு கதையையும் ஒவ்வொரு ட்யூன் மாதிரி பார்க்கிறேன். என் நாவலுக்கும் இது பொருந்தும். இதற்கு மத்தியிலும் வண்ணநிலவன் பார்க்கும் பார்வை, இது வண்ணநிலவனின் கோணம் என்பது இருக்கும். விதம் விதமாய், நவம்நவமாய் நான் சொல்ல நினைப்பதை வேண்டுமானால் என் தனித்துவம் என்று சொல்லலாம். காதலையும் வறுமையையும் மட்டும் நான் எழுதவில்லை.

6. எனக்கு எழுத்து எப்போதுமே தாகம் அல்ல. எதோ தோணிச்சி எழுதினேன். இலக்கியத்தை மேலெழுந்த வாரியாகச் செய்ய இஷ்டமில்லை. எதையாவது எழுதுவது என்று நான் எழுதுவதில்லை. என் பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்றோ வாராவாராம் என் பெயர் பத்திரிகையில் வரணும்னோ, என் நோக்கம் கிடையாது. பொறக்கும் போது பேனாவோடா பொறந்தேன்? சாகும்தன்னியும் எழுதிக்கிட்டே இருக்கணும்கிற சங்கல்பமும் இல்லை. 0

Sunday, October 03, 2010

இவர்களது எழுத்துமுறை - 9. - இந்திராபார்த்தசாரதி

1. நான் என்னை என் எழுத்தில் கரைத்துக் கொண்டு, அதே சமயத்தில் ஒதுங்கி நின்று ரசிக்கவேண்டும் என்கிற அற்ப ஆசை கொண்டவன்.

2. எனக்கு ஏற்பட்ட, நானறிந்த மற்றவர்களுடைய அனுபவங்களையுந்தாம், நான் எழுத்தில் காண முயற்சி செய்து வந்திருக்கிறேன். இதுதான் நேர்மையான விஷயம் என்று எனக்குப் படுகிறது. நான் சொல்லுகிற விஷயம் புதிது என்பதையோ அல்லது நான் எனக்காக எழுதுகிறேன் என்ற அசட்டுத்தனத்தையோ என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

3. உலகத்தை உய்விக்க வேண்டும் என்ற அதிகப் பிரசங்கித்தனம் எனக்குக் கிடையாது. இலக்கியம் இத்தகைய பொறுப்புக்களை மேற்கொள்ளவும் இயலாது என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். ஒரு கலை நுணுக்கத்துடன் நோக்கி, மனிதன் தன்னுடைய எலும்புக்கூட்டைத் தானே பார்க்கும்படியான ஒரு கண்ணாடியைப் பிடிப்பதுதான் இலக்கியத்தின் வேலை. இதை நான் நன்குணர்ந்திருப்பதால்தான் என்னைச் சில விமர்சகர்கள் சினிக் என்று சொல்லுகிறார்கள் போலிருக்கிறது.

4. என் எழுத்தில் ஆங்கிலச் சொற்கள் விரவி வருகின்றன என்று சிலர் குற்றம் சாட்டுகிறார்கள். நான் மொழியை வெறும் சாதனமாகத்தான் கருதுகிறேன். ஒரு கருத்தை எவ்வளவு வலுவாக, இயல்பு குன்றாமல் சொல்ல முடியும் என்பதுதான் என் அக்கறை. தமிழில் சொன்னால் நான் நினைக்கின்ற கருத்து வலுவாகச் சொல்லப்படவில்லை என்று தோன்றும்போது, ஆங்கிலத்தில் எழுதுகிறேன். இது ஒரு குறைதான். மறுக்கவில்லை. இது என் குறையை மட்டுமல்ல சமூகத்தின் பலஹீனத்தையே காட்டுகிறது.

5. எப்படி ஒரு காற்றாடி பறப்பதற்கு எதிர்க்காற்று தேவையாக இருக்கின்றதோ, அதைப்போலவே என்னைப் படிப்பதற்கு வாசகன் தேவையென்பதை நான் நிச்சயமாக நம்புகிறேன். எதிரில் உள்ளவனைப்போய் அது அடைய வேண்டும் என்று நினைக்கிறேன். புரியாமல் எழுதுவதை ஒரு ஸ்டைல் என்று கொள்ள முடியாது.

6. என்னுடைய எழுத்தினால் ஒரு மாற்றம் ஏற்பட வேண்டும் என்று கருதுகிறேன். மாற்றம் என்றால் புரட்சி என்று அரத்தமல்ல. 'மாற்றத்தை ஏற்படுத்தாத எந்தவொரு இலக்கியத்துக்கும் அர்த்தமில்லை' என்று சொல்லலாம்.

7. Writing, basically is a kind of co-ordination. பல நிகழ்ச்சிகள், சம்பவங்கள் மனதில் ஏற்றப்பட்டு, பாதிப்புடன் கலந்து ஒரு ஒருங்கிணைப்பை ஏற்படுத்தும் பொழுது இலக்கியம் பிறக்கிறது. கேரக்டர்களை வைத்துக்கொண்டுதான் நிகழ்ச்சிகளை நான் என் நாடகங்களில் உருவாக்குகிறேன்.

8. இலக்கியம் இலக்கியத்துக்காக, கலை கலைக்காக என்பதெல்லாம் பித்தலாட்டம். பழையகாலச் சிந்தனை.பத்தொன்பதாம் நூற்றாண்டில் Walter Pater ஆரம்பித்தான் Art for artsake என்று. தூய இலக்கியம் என்று ஒன்று கிடையாது. அடுத்த வீட்டுக்காரனைப்பற்றி நான் எழுதும்போதே அது ஒரு சமூகச்செயலாகவிடுகிறது. 0