Wednesday, April 23, 2008

'எழுத்துக்கலை பற்றி இவர்கள்'- 19 -கி.ராஜநாராயணன்

1. கவிதையைப் போலவே, சிறுகதையிலும் வார்த்தைகள்தான் அதிமுக்கியம். "அனாவசியமாக ஒரு வார்த்தைகூட இருக்கக் கூடாது" என்கிறான் ஆண்டன்செக்காவ்.
ஒருவார்த்தையை எடுத்தாலும், சேர்த்தாலும் கதை பாதிக்கப்பட வேண்டும் என்கிறான்.

2. சிறுகதையின் உருவம் கொஞ்சம் விசித்திரமானது. அது முதலில் வாலைத்தான் காண்பிக்கும்; கடைசியில்த்தான் தெரியும் தலை! அதனால் ஆரம்ப வாக்கியத்தைவிட கடைசி வாக்கியம்தான் முக்கியம் - தவில் அடியின் முத்தாய்பைப் போல. சிலை செய்கிறவன் செய்து முடித்த சிலைக்குக் கடேசியில் கண்களைத் திறக்கிற மாதிரி!

3. கதைக்கு ஒரு கரு என்ன, இரண்டு கரு வைத்துக்கூட ஒரு கதையை எழுதலாம். கருவே இல்லாமல்கூட கதை எழுதி விடலாம். கூந்தல் வைத்திருக்கிற பொண்ணு எப்படி வேண்டுமானாலும் கூந்தலை முடிந்து காண்பிப்பாள். எல்லாம் சாமர்த்தியத்தினுள் அடக்கம்.

4. எழுதுகிறவனுக்கு மாத்திரமில்லை. எல்லோருக்கும்தான் கிடைக்கும் கரு. கருவுக்குப் பஞ்சமே இல்லை. சொல்லப் போனால் எழுதப்பட்ட கருக்களைவிட, எழுதப்படாமல் கிடக்கிற கருக்கள்தான் லட்சோபலட்சம். இன்றைய தேதி வரை கரு கிடைக்காமல் திண்டாடினான் ஒருவன் என்று நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால் கருவைத் தேர்ந்தெடுக்கிறவன் புதுப்புது மாதிரியானவைகளாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒருவன் புதுக்கருவை வைத்து எழுதித் தோற்றுப் போனாலும்கூட அவனுக்கு அதற்காக நான் 30 மார்க்குகள் கொடுப்பேன்.

5. தூங்கிறபோது நம்முடைய மூளை உறுப்புகளில் சில தூங்காமல் கனவை எழுப்பிக் கொண்டிருப்பது போல, ஒரு எழுத்தாளன் விழித்துக் கொண்டிருக்கும்போதும் அவனுள் 'சிலது' தூங்கிக் கொண்டு ஒருவகையான கனவை எழுப்பிக் கொண்டே இருக்கும். அர்த்தஜாமத்திலும் தேனீக்கூட்டில் காது வைத்துக் கேட்டால் வரும் ஓசையைப் போல் அவனுடைய உள்ளத்தில் ஒரு ஓசை உண்டாகிக் கொண்டே இருக்கும். செம்மை செய்யப்படாத, முழுதும் பூர்த்தியடையாத ஆபரணங்கள் பொற்கொல்லனின் பட்டரையைச் சுற்றி கிடப்பதுபோல, பூர்த்தியாகாத எண்ணற்ற கதைக்கருக்கள் அவனுடைய மன அறைக்குள் அங்கங்கே சிதறிக் கிடக்கும்.

6. கருக்களில் நாலு வகை உண்டு. கேள்விப்பட்டது, பார்த்தது, அனுபவித்தது, கற்பனை. இந்த நாலில் எது, சம்பந்தப்பட்ட கதைக்கு நன்றாக அமையும் என்று சொல்ல முடியாது. பொதுவாக அனுபவித்தது சிறப்பாக அமையலாம் என்பது என்னுடைய கணக்கு.

7. எழுத்தாளர்கள் ஏகலைவன் மாதிரி. அவர்கள் எந்த வாத்தியாரையும் வைத்துக் கொண்டு தங்கள் தொழிலை கற்றுக் கொண்டதில்லை. அதேபோல எந்த ஒருவனுக்கும் அவர்கள் வாத்தியாராக இருந்து கற்றுக் கொடுக்க விரும்புவதும் இல்லை.

8. ஒவ்வொரு மனுஷனிடமும் அவன் வாழ்க்கை சம்பந்தப்பட்ட ஒரு நாவலுக்கான கதை நிச்சயம் இருக்கும். தன்னுடைய வாழ்க்கையையே சுவாரஸ்யமாக - போரடிக்காமல் - சொன்னால் அதுவே ஒரு நாவலாகி விடும்.

9. நாவல் என்பது ஒரு பரந்த விஸ்தாரமான களம். எழுத்தாளன் அதில் ஓடியாடி இஷ்டம்போல் 'விளையாட'லாம். சிறுகதை போல, தீ வளையத்துக்குள் பாய்ந்து தீக்காயம் படாமல் வெளியே வருவதோ, இரும்புக் கூண்டுக்குள் மோட்டார் சைக்கிளில் பக்கவாட்டிலோ அல்லது மேலுங்கீழாகவோ வட்டமடிக்கிற சோலியே கிடையாது.

10. நாவலில் இன்னொரு முக்கிய அம்சம், நடை; மொழிநடை.. சரித்திர நாவல் என்றால் அதில் வருகிற அரசியும் அரசனும் தனிமையில் பேசும்போதுகூட அவர்களுக்குள் ஏட்டுத் தமிழ் நடையில்தான் பேசுவார்கள் என்கிற மடத்தனமான ஓர் எண்ணம் இருக்கிறது! (நம்முடைய வானொலி சரித்திர நாடகங்களைக் கேட்டிருக்கிறீர்களா?) இரண்டு புலவர்கள் சந்தித்து ஒருத்தருக்தொருத்தர் பேசிக் கொள்ளும்போதுஅப்படிப் பேசினார்கள் என்றால், தொலைந்து போகிறது என்று விட்டுவிடலாம்.; ராஜாவும் ராணியும் படுக்கை அறையில் ஏட்டுத் தமிழில் பேசிக் கொண்டார்கள் என்பது எனக்குச் சரியயாகத் தோன்றவில

Thursday, April 10, 2008

எழுத்து க்கலை பற்றி இவர்கள்...........18 - வாசந்தி

1. சுவாரஸ்யமகச் சொல்லப்படும் எந்தக் கதையும் நல்ல கதைதான். பார்த்த ஒரு சம்பவத்தை, மனதில் நச்சரிக்கும் ஒரு உணர்வை, அல்லது அனுபவித்த ஒருஅனுபவத்தை, அதை சொல்லிவிடவேண்டும் என்று நம்முள் தகிக்கும் ஆதங்கத்தை சுவாரஸ்யமாக வாசகர்களுக்குத் தெரிவிப்பது மட்டும் போதாது - நீங்கள் சொல்வதை வாசகர்கள் நம்ப வேண்டும் - உங்களது உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளவேண்டும். - அவர்களிடையே இத்தகைய பாதிப்பை உங்கள் கதை ஏற்படுத்தவில்லையானால், தவறு உங்கள் அனுபவத்தில் இல்லை - அதை நீங்கள் சொன்ன விதத்தில்.

2. வார்த்தைகளைப் பொறுக்குவதிலும், அவற்றை வாக்கியமாய்க் கோர்ப்பதிலும் ஒரு பொற்கொல்லனின் பொறுமையும் கவனமும் நமக்கிருக்க வேண்டும். அவன் அலுக்காமல் செய்யும் நகாசு வேலையைப்போல் நாமும் நமக்குத் திருப்தி அளிக்கும்வரை கதையைப் பாலிஷ் செய்ய வேண்டும். வெற்றிக்குக் குறுக்கு வழிகள் கிடையா.

3. கதையைச் சொல்லும் பாணி ஆளுக்கு ஆள் வித்தியாசப்படும். சொல்லப் போகிற விஷயத்துக்குத் தகுந்தமாதிரி மாறுபடும். கதையை ஆரம்பிக்கும் விதமே வாசகர்களின் கவனத்தைக் கவர வேண்டும். உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தை ஆரம்பத்திலிருந்து கடைசிவரை கிரமப்படுத்தி எழுத முற்பட்டீர்களானால், நியூஸ் பேப்பர் ரிப்போர்ட்டைப் போல் ஆகிவிடும் - start with bang - எடுத்த எடுப்பிலேயே வாசகரின் பார்வையைக் கட்டிப் போட வேண்டும். நேராக விஷயத்துக்கு வந்து கதையைப் பின்னுங்கள்.

4. அனாவசிய, சுவாரஸ்யமற்ற சம்பாஷணைகள் அலுப்புத் தட்டுவதுபோல். சம்பஷணையே இல்லாத கதை ஓட்டமும் அலுப்புத் தட்டும்.

5. உங்களுடைய கருத்துக்களை, (தீர்மானமான கொள்கைகளைக் கூட) மண்டையில் அடிக்கிற மாதிரி 'ஆகையால் வாசகர்களே' என்று உபதேசிக்கிற தினுசில் புகுத்தாதீர்கள். அதை அப்படியே ஏற்கும் பாமரத்தனம் இப்போது எந்த வாசகருக்கும் இல்லை. உங்களுடைய நல்ல எண்ணங்கள் கதையில் ஒரு சுகந்தம்போல் வரவேண்டும்.
அதைக் கதாபாத்திரங்கள் மூலம் அல்லது சம்பவங்கள் மூலம் நாசூக்காகத் தெரிவிக்கலாம். அநேகம் சிறுகதைகள் சப்பென்று போவதற்கும், லேசாக எரிச்சலூட்டுவதற்கும், இந்த நாசூக்குத் தெரியாமல், எழுத்தாளர்கள் தங்களைக் கதைகளுக்குள் 'ப்ரொஜெக்ட்' செய்வதுதான் காரணம்.

6. கதையில் ஒருஆச்சரியம் காத்திருக்க வேண்டும். நம்பும்படியான ஆச்சரியம் - அது அதிர்ச்சி தரலாம் அல்லது சிரிக்க வைக்கலாம் - எதுவாக இருந்தாலும் 'பூ, இவ்வளவுதானா!' என்று வாசகர் அலுத்துக் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

7. என்னைப் பொறுத்தவரை ஒரு சிறுகதையின் கடைசி பாராதான் மிகக் கடினமானது. அதிகம் கவனம் கொடுக்கப்பட வேண்டியது. ஏனென்றால் நமது நோக்கம் வாசகரின் பார்வையை ஈர்ப்பது மட்டுமல்லை - அவருடைய நினைவுப் பெட்டகத்தில் இடத்தைப் பிடிப்பதும்கூட - நமது கடைசிப் பாராவைப் பொறுத்திருக்கிறது, நமது கதையின் ஆயுள

Wednesday, April 02, 2008

எழுத்துக்கலை பற்றி இவர்கள் - (17 ) வி.ஆர்.எம்.செட்டியார்.

1. சிறுகதையை யாரும் நல்ல முறையில் எழுதிவிடலாம் என்று நினைப்பது தவறு; வாழ்க்கையில் நிறைந்த அனுபவமுடையவர்கள், மொழியின் நுட்பங்களை நன்கு உணர்ந்தவர்கள்,
சம்பாஷணையின் அவசியத்தையும் வேகத்தையும் உணர்ந்தவர்கள், சமூக முரண்பாடுகளை அறிந்தவர்கள், நிறைந்த கதைநூற்பயிற்சியுடையவர்கள் இவர்கள்தான் நல்ல முறையில்
சிறுகதைகளைச் சிருஷ்டிக்க முடியும்.

2. வாழ்க்கையைக் கண்டு அதைப் போட்டோ படம் பிடிப்பது சிறுகதை அல்ல;வாழ்க்கையை, இயற்கையின் நிறைந்த நுட்பத்துடன், இயற்கையின் நிறைந்த வர்ண வளர்ச்சியுடன், பார்வை யின் கூர்மையால் சித்திரம் வரைய வேண்டும். ஒரு சிறு நிகழ்ச்சியும் சிறந்த சித்திரமாக சிறுகதை மாளிகையில் அமைந்து விடுகிறது. நிகழ்ச்சியின் நுட்பநிறைவே சொற்சித்திரமாக,பொற்சித்திரமாக, பேசும் சித்திரமாக வளர்கிறது.

3. சிறுகதையை எப்படி எழுதுவது என்று தயங்குவதில் யாது பயன்? வாழ்க்கையை நன்றாய்க் கவனிக்க வேண்டும். மனித இயல்பு எப்படி நிமிஷத்துக்கு நிமிஷம் மின்சார வேகத்துடன் புரட்சியடைகிறது என்பதைக் கவனிக்க வேண்டும்; மனித குணமும் விதியின் குணமும் எப்படிப்
போரிடுகின்றன என்பதையும் நன்கு ஆராயவேண்டும்; உலகத்தின் சூழ்ச்சிகள் எப்படி
உலகத்தையே யுத்த அரங்கமாக்குகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்; எழுதும்
நடைக்கும் பேசும் நடைக்கும் உள்ள வித்தியாசங்களை நுட்பமாக அறிய வேண்டும்; கதையில் வரும் பாத்திரங்கள் எப்படி உயிர்ப் பாத்திரங்களாக, மெய்யுருவங்களாக அமைய வேண்டு மென்பதையும் ஆராய வேண்டும்.இவைகளே நல்ல சிறுகதையின் லட்சணங்களாகும்.

4. சிறுகதை எழுதுபவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த சிறு நிகழ்ச்சிகளைச் சற்று
ஞாபகப்படுத்திப் பார்த்தால் அதிலிருந்து குறைந்தது இருபது சிறுகதைகளை எழுதிவிடலாம். நல்ல ஞாபகத்துடன், நிறைந்த நுட்பத்துடன் ஞாபக டைரியைப் புரட்ட வேண்டும். பல நண்பர்களு
டைய சுயசரிதையினின்றும், நியூஸ்பேப்பரில் கண்ட நிகழ்ச்சிகளிலிருந்தும், கடைத்தெருவிலும், ரயில்வே ஸ்டேஷனிலும், துறைமுகத்திலும், டிராமாக் கொட்டகைகளினின்றும், குடும்பங்களில் நிகழும் குறிப்புகளிலிருந்தும் மிகமிக அருமையான சுவைமிகுந்த சிறுகதைகள் எழுப்பலாம். ஒரு சிறுகுழந்தை அம்புலிக்கு அழுவது முதல், வறுமையால் வாடித்துடிக்கும் பிச்சைக்காரன் ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து மடிவதுவரை எதுவும் சிறுகதைச் சரக்குதான்; எம்.ஏ படித்துவிட்டு
வேலைக்கு அலைந்து கதறுவது முதல் தன் சர்டிபிகேட்டை நெருப்பில் போடுவதுவரை எதுவும்
சிறுகதையின் சீற்றம்தான். எல்லாம் எழுதும் சொல்வன்மையிலே சிறுகதைச் சித்திரம் இன்பமாய் வளர வேண்டும்.

5. கதையின் நடை விறுவிறுப்புடன் பாய வேண்டும். சிறுசொற்கள் காவிய வேகத்துடன் மனநிலையைச் சித்தரிக்க வேண்டும். இயற்கையின் சௌந்திரியத்தையும் மொழியின் இதயத்தில்
எழுப்ப வேண்டும். சொற்கள் கதிர்களாகவும், வர்ணங்களாகம்,அழகு கூட்டங்களாகவும் மின்ன வேண்டும். இதய ஒலியும், இதய ஒளியும், உள் இயற்கையும், வெளி இயற்கையும் மொழியின் மர்மத்தில் பிரதிபலிக்க வேண்டும்.

(V.R.M Chettiar B.A ஆயிரத்துத் தொளாயிரத்து முப்பதுகளில் பிரபலமாய் இருந்த அறிஞர்; ஆங்கிலத்திலும் தமிழிலும் நிறைய எழுதியவர்; சிறந்த விமர்சகர்; 'My Shelly', 'Oscar Wilde's de profundis - An Appreciation','Lyric festoons', 'Tagore and Arabindo', 'Lucid Moments', 'Gems from Montaigne' ஆகிய நூல்களை எழுதியவர்.
திருச்சிக்காரர். நிறைய தமிழ் நூல்களும் எழுதி தானே வெளியிட்டவர்.)