Saturday, June 21, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 25. ந.சிதம்பரசுப்பிரமண்யம். .

1. எந்தக்காரியம் சித்தி அடைய வேண்டுமானாலும் அதற்குத் தவம் செய்ய வேண்டும். அந்தத் தபஸ் எழுத்துக்கும் வேண்டும்.

2. நிரந்தரமான பிரச்சினைகள், நிரந்தரமான போராட்டங்கள் இவைகளை ஊடுருவிப்
பார்ப்பதே இலக்கியம். மகாபாரதமாயினும் சரி, சிறுகதையாயினும் சரி இவைகளை விஸ்தரிக்கும்போது உயர்ந்த இலக்கியமாகி விடுகிறது.

3. உணர்ச்சி முக்கியம். மேலெழுந்தவாரியாகப் பார்க்காமல் சமூகம், தேசம், பாஷை, மதம் இவைகளைக் கடந்து மனித ஹிருதயத்தின் ஆழத்தைக் கண்டு, அந்த அனுபவத்தைப்
பிறருக்குப் பங்கிட்டுக் கொடுப்பதே ஆசிரியனின் வேலை.

4. இவ்வுலகில் எதிரிடையான எவ்வளவோ பொருள்களும் குணங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மை இருக்கிறது. கூடவே தீமையும் இருக்கிறது. அழகு இருக்கிறது. அதனுடனேயே அருவருப்பான விஷயமும் இருக்கிறது. கருணை இருக்கிறது. கொடுமையும் இருக்கிறது....இவற்றில் எழுத்தாளன், எப்படி எந்தெந்த அளவுக்கு, எந்தெந்த விஷயங்களைப் பொறுக்கி எடுத்துத் தன் சிருஷ்டித் தொழிலை செய்ய வேண்டியது? என்ன அளவுகோல்? எப்படி எடைபோட்டு விஷயங்களை எடுத்துக் கொள்வது? எந்தச் சல்லடைமூலம் தனக்கு வேண்டிய சாமான்களை சலித்து எடுப்பது?
........எழுத்தாளன் நல்லதோர் எண்ணத்தில், மனதைத் தூய்மைப்படுத்தும் சிந்தனையில், உள்ளத்தை உயர்த்தக்கூடிய அனுபவத்தில் நிலைத்து நிற்குமேயானால் அப்போது எழுத்தின் தன்மையும் தானே சிறந்தோங்கி விளங்குகிறது.

5. எழுத்து என்பதே சத்தியம்(truth), சுந்தரம்(beauty), சிவம்(goodness) இவற்றைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவையே உலகை இயக்குபவை. எழுத்திலே இவற்றையே பிரதிபலிக்க வேண்டும். தவிர ஒரு அடிப்படையான குறிக்கோளும் வேண்டும். அடிப்படையான லட்சியத்துடன் எழுதும், எழுதப்படும் எதிலுமே இவை மூன்றும் பிரதிபலிக்காமலிராது.

Sunday, June 15, 2008

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 24. ந.பிச்சமூர்த்தி.

1. கற்பனை என்பது என்ன? இல்லாத தொன்றை உருவாக்குவதும் இருப்பதற்குப் புதிய பொருள் கூட்டுவதும் கற்பனையின் செயல். கருத்துக்கு வளர்ச்சியும், உருவமும் கொடுக்கும் சமாதானம்தான் கற்பனை. உலகத்தை மனோமயமாகப் பார்ப்பதுதான் கற்பனையின் முதல் வேலை - முழு வேலையும்கூட. வாழ்வை விவரிக்கும் சக்தி கற்பனை.
பலவாகத் தோன்றுவதை ஒருமைப் படுத்துவது ம் கற்பனைதான். கற்பனையின் துணைகொண்டெழுவது இலக்கியம்.

2. இலக்கியம் தோன்றுவதற்கு எந்த அளவு கற்பனை தேவையோ அந்த அளவு வாழ்வும் தேவைப்படும். உலகத்தில், வாழ்வில் நடப்பவற்றை எல்லாம் இலக்கிய கர்த்தரின் மனது பதிவு செய்து கொண்டே இருக்கிறது. இப் பதிவுகளைத்தான் கற்பனை பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளுகிறது. தள்ளுவதைத் தள்ளி வேண்டியவற்றைச் சேர்த்து, இலக்கிய சிருஷ்டியை உருவாக்குகிறது. அதனால்தான் வாழ்வுக்குப் போட்டியான உலகமாக அது அமைகிறது - திரிசங்குவின் உலகத்தைப் போல.

3. இலக்கியமென்பது ஒரு சிலருக்காக அல்ல. எல்லோருக்கும்தான் என்னும் அடிப்படை
ஒப்புக் கொள்ளப்படுமானால் இலக்கிய நடையைப்பற்றி அதிக விவாதத்துக்கு இடமில்லை. சாதாரன ஜனங்களுக்கு இலக்கியத்தின் மூலம், இன்பத்தையும் புது திருஷ்டியையும் உண்டாக்க விரும்பும் இலக்கியகர்த்தன் நடைமுறை பாஷையைப் புறக்கணிக்க முடியாத். புறக்கணித்தால் தன் நோக்கத்தில் வெற்றிகாண இயலாது.

4. பாம்பு அடிக்கடிசட்டை உரித்துக் கொள்வதுபோல எழுத்தாளன் - தன்னைப் புதிசுபடுத்திக் கொள்ள வேண்டும்.

5. எனக்கு எப்போதும் உனர்ச்சிதான் முக்கியம். தர்க்கரீதியான அறிவுக்கு இரண்டாம் இடந்தான்.

6. தன்னை அறியப் பல வழியுண்டு. எழுத்தும் ஒரு வழி.

7. எழுத்தின் மூலமாக வாழ்க்கையைப் போட்டோ பிடிப்பது முடியாத காரியம். எழுத்தாளனுடைய மனமென்னும் மஞ்சள் நீர் பட்டால் சம்பவத்தின் கோலம் புதுமையாய் மாறிவிடும்.

8. இலக்கியத்தைப் பிரசாரம் ஆக்க முயண்றாலும், பிரசாரத்தை இலக்கியமாக்க முயன்றாலும், 'விதைக்கும் ஆகாமல் கறிக்கும் உதாமல் போவது' என்பார்களே, அதைப் போன்ற நிலையைத்தான் தமிழ் இலக்கியம் அடையும்.....வாழ்வின் கோட்பாடுகளை மறக்கும் இலக்கியத்துக்கு - மறுக்கும் சிருஷ்டித்திறனுக்கு அமரத்துவம் கிட்டுவது சந்தேகமே....

.

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 23.. 'அகஸ்தியன்'

( பி.எஸ்.ரங்கநாதன் என்ற இயற்பெயர் கொண்ட 'அகஸ்தியன்', எண்பதுகளில் பிரபலமாய்ப் பேசப்பட்ட நகைச்சுவை எழுத்தாளர். 'கடுகு' என்ற புனைபெயரிலும் நிறைய 'குமுதம்', 'தினமணி கதிர்', 'கல்கி' பத்திரிகைகளில் எழுதியவர்.)

1. நகைச்சுவை எழுதுவதும் ஜோக் எழுதுவதும் வெவ்வேறு. நகைச்சுவை கதை, கட்டுரையில் தனியாக ஜோக் என்று இருக்காது; இருக்க வேண்டிய அவசிய மில்லை. கட்டுரையில் வரும் கதாபாத்திரங்கள், அவர்கள் குணபேதங்கள், பெயர்கள், சம்பாஷணைகள், நிகழ்ச்சிகள் இவைகளில் நகைச்சுவை இழையோட வேண்டும். ஒட்டு மொத்தமாக நகைச்சுவை உணர்வைப் படிப்போர் மனத்தில் எழுப்ப இவை உதவும்.

2. பெரும்பாலான நகைச்சுவைக் கதைகள் நடுத்தர வர்க்கத்தைச் சுற்றி அமைவதைக் கவனியுங்கள். அப்படி இருந்தால்தான் வாசகரும் ஏதோ தங்கள் குடும்பத்தில் நடக்கும் நிகழ்ச்சியாகக் கருதுவார்கள். இதன் காரணமாகக் கதையை அவர்கள் ஒருபடி அதிகமாகவே ரசிக்க முடியும்.

3. எழுதுவது என்பது மிக எளிய விஷயம். ஆனால் எழுதத் தொடங்குமுன் நிறைய மனத்தில் அசை போடவேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு நிறைய யோசனை செய்து மனத்திலேயே கதையை உருவாக்குகிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு சுலபம் அதைக் காகிதத்தில் எழுதிவிடுவது.

4. கதை எவ்வளவு முக்கியமோ அவ்வளவு - ஏன் கதையைவிட அதிகம் என்றுகூடச் சொல்லலாம் - முக்கியமானது நடை, கதை சொல்லும் விதம், நிகழ்ச்சிகளை அமைக்கும் விதம், சம்பாஷணைகளைச் சரளமாகவும் இயற்கையாகவும் அமைக்கும் விதம், சுவையாக முடிக்கும் விதம் - எல்லாம் முக்கியமானவை.

5. நகைச்சுவை எழுதும்போது, சிலேடைகளைப் பொருத்தமாகச் சேர்க்கலாம். பேச்சுத் தமிழில் மட்டும் சில சிலேடைகளைச் சேர்க்க முடியும். அவற்றை எழுத்தில் கொண்டுவர முயலாதீர்கள்.

6. அதீதமும் நகைச்சுவையில் ஒரு முக்கிய அம்சம். இப்படி நடக்கவே முடியாது என்று உங்களுக்குத் தெரியும். இருந்தாலும் இத்தகைய நகைச்சுவை ரசிக்கப்படும்.

7. நகைச்சுவைக் கதைகளில் கேரக்டரை உருவாக்குவதில் மிக்க கவனம் வேண்டும். சற்று வித்தியாசமான, கோணங்கியான, கொனஷ்டையான, வக்கிரமான, ஓரளவு மிகைப்படுத்தப்பட்ட கேரக்டர்களாக இருப்பது நலம். எப்படி இருப்பினும், அவை கல்லில் செதுக்கிய மாதிரி தீர்மானமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் ஒரு கேரக்டர்தான். அதை நாம் விவரிக்கும் விதத்தில் இருக்கிறது கதையின் வெற்றியும் தோல்வியும்.

எழுத்துகலைபற்றி இவர்கள் - 22. எம்.டி.வாசுதேவன் நாயர்.

1.நமக்கு எழுத வேண்டும் என, உள்ளூர ஒரு உணர்வு எழவேண்டும். அதுதான் கலை இலக்கியம் படைப்பதற்கான தொடக்கப்புள்ளி ஆகும். நமக்கு மட்டும் கேட்கக்கூடிய ஒரு விசித்திர சப்தம். வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து அவற்றை வாக்கியங்களாகக் கோர்த்து எடுத்து, ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லுவதற்கான ஒரு முயற்சி.

2. 'நான் சொல்லுவதைக் கேள்' என உள்ளூர நம்மை ஒரு சக்தி உந்தித் தள்ளும். ஆக, இவ்வாறு நாம் எழுத ஆரம்பிக்கும்போது, நாம் எங்கெங்கெல்லாமோ இழுத்துச் செல்லப் படுவோம். அப்போது நமக்கு நம்பிக்கை ஏற்படும். தொடக்கத்தில் எழுதத் துவங்கும்போது மழை வெள்ளம் இழுத்துச் செல்லும் காகித ஓடம் போல் சில முன்னோக்கிப் போகும். பல மூழ்கும். நம்மால் எழுத முடியும் என்று நம்பிக்கை ஏற்பட்ட பிறகு நாம் எழுதப் போகும் விஷயத்தைப்பற்றி சிந்திக்க வேண்டும்.

3. 'எதைப்பற்றி எழுதவேண்டும்?' என, முதலில் நமக்குள்ளே கேட்டுக் கொள்ள வேண்டும். நம் வாழ்க்கை முழுக்கக் கதைகள் நிரம்பிக் கிடக்கின்றன. வாழ்க்கை என்றாலே க¨தைகள்தானே! நாம் அடிக்கடி சொல்வோமே 'அவனுடைய கதை இதைவிட ரொம்பக் கஷ்டம்' என.

4. வாழ்க்கைப் பரப்பினூடே நம்முடைய கவனத்தை ஈர்ப்பதற்குரிய அம்சங்கள் ஏராளமாகக் கிடக்கின்றன. இவற்றுள் நாம் எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் பிரச்சினைக்குரிய விஷயம். தேர்ந்தெடுக்கப்பட்ட விஷயங்களை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் என்பதும் மிக முக்கியமான ஒன்றுதான்.

5. இலக்கிய உலகிற்குள் அடியெடுத்து வைக்கும் இளம் இலக்கியவாதிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய புதிய புதிய எழுத்து முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். விடாமுயற்சி ஒன்றின் மூலமாக மட்டுமே இதை ஒருவரால் சாதிக்க இயலும். 'நாம் எழுதியது சரியல்ல' எனத் தோன்றுமானால் உடனே அதை ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும்.

6. இலக்கியப் படைப்பின்பொது நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் மொழியாகும். சாதாரண மனிதர்களுக்குப் புரியும்படியான மொழியிலேயே நாம் ஒரு படைப்பைப் படைக்க வேண்டும். ஒரு படைப்பாளி படைக்கும் படைப்பை வாசகர்கள் வாசிக்க வேண்டும் என்று கட்டாயம் ஒன்றும் இல்லை. அவர்களை வாசிக்குமாறு தூண்டிவிடவேண்டியது இலக்கியவாதி களின் கடமையகும். இதயத்துக்குள் ஊடுருவிச் செல்லத் தக்கதாக இருக்கவேண்டும் இலக்கிய வாதிகள் பயன்படுத்தும் மொழி. வாசகர்களின் இதயத்துக்குள் நுழைந்து, புதியதொரு சிந்தனையைக் கிளறிவிடும் தன்மையும் வலிமையும் அதற்கு இருக்க வேண்டும்.

7. நாம் எழுதிய கதைகளைப் படித்துப் புரிந்து கொள்ள ஏதாவது 'கைடு' களைத் தேடிப் போகும்படியான இக்கட்டான சூழ்நிலை ஏற்பட்டு விடக்கூடாது. காரணம், அம்மாதிரி கதைகளை வாசகர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள். எழுதி எழுதி அவற்றை நாமே கிழித்துப் போட வேண்டும். பிறகு அவற்றிலிருந்து சிறந்த உள்ளடக்கம் கொண்டவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சிறந்த மொழியில் எழுதுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய ஒரேஒரு வழி இது ஒன்றுதான். அதாவது, சோர்வடையாமல் திரும்பத் திரும்ப எழுதுவது.

8. இலக்கியப் படைப்பில் 'உருவம்' ஒரு மேல் சட்டை போன்றதல்ல. ஒரு தோல் போன்றது.
ஒரு படைப்பிற்கு சுலபமான புரிந்து கொள்ளக்கூடிய எளிய சொற்களாலான மொழிதான் மிக வலிமையினையும் அழகினையும் அளிக்கிறது. எளிமையான மொழிக்குரிய சிறப்பும் இதுதான். வார்த்தைகளுக்கு இடையே காணப்படும் இடைவெளிகளுக்குக்கூட அநேக அர்த்தங்கள் இருக்கிறது. உலகில் எத்தனை ஊடகங்கள் வந்தாலும் சரி, இலக்கியம் நிலைத்து நிற்பது உறுதி. காரணம் மொழிக்கு அவ்வளவு வலிமை உண்டு.


9. படைப்பின்போது அதற்குத் தோதுவான வார்த்தைகள் கிடைக்காமல் தேடித் திரிவது பண்டைக்காலம் தொட்டே உள்ள சிக்கல்தான். வார்த்தைகள்தான் பணிபுரிவதற்குரிய ஆயுதமும் தரத்தை நிச்சயிப்பதுமாகும். வார்த்தைகளோடு இழுபறி ஏற்பட்டால் ஒரு படைப்பு நன்றாக அமையும்.

10. இனி ஒரு முக்கிய விஷயம். நாம் ஒவொருவரும் புத்தகங்களைக் காதலிக்க வேண்டும். எனக்கு எழுதுவதற்குரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதே தொடர்ந்து வாசித்துக் கொண்டிருந்த வாசிப்புதான்.

எழுத்துக்கலைபற்றி இவர்கள் - 21. மகாகவி பாரதியார்

1. தம்பி, உள்ளத்தில் உண்மை இருந்தால், கையில் எழுதுகோலை எடுத்துக் கொள், எழுது.

2. கூடியவரை பேசுவது போலவே எழுதுவதுதான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி. எந்த விஷயம் எழுதினலும் சரி, ஒரு கதை அல்லது ஒரு தர்க்கம், ஒரு சாஸ்திரம் ஒரு பத்திரிகை விஷயம் எது எழுதினாலும்,
வார்த்தை, சொல்லுகிற மாதிரியாகவே அமைந்து விட்டால் நல்லது.

3. பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து அதாவது ஜனங்களுக்குச் சற்றேனும் பழக்கமில்லாமல், தனக்கும் அதிகம் பழக்கமில்லாத ஒரு விஷயத்தைக் குறித்து எழுத ஆரம்பித்தால் வாக்கியம் தத்தளிக்கத்தான் செய்யும், சந்தேகமில்லை. ஆனாலும் ஒரு வழியாக முடிக்கும்போது, வாய்க்கு வழங்குகிறதா என்று வாசித்துப் பார்த்துக் கொள்ளுதல் நல்லது. அல்லது, ஒரு நண்பனிடம் படித்துக் காட்டும் பழக்கம் வைத்துக் கொள்ளவேண்டும்.

4. சொல்ல வந்த விஷயத்தை மனதிலே சரியாகக் கட்டி வைத்துக் கொள்ளவேண்டும். பிறகு கோணல், திருகல் ஒன்றுமில்லாமல் நடை நேராகச் செல்ல வேண்டும். முன் யோசனை இல்லாமலே நேராக எழுதும் திறமையை வாணி கொடுத்து விட்டால் பின்பு சங்கடமில்லை. ஆரம்பத்திலே, மனதிலே கட்டி முடித்த வசனங்களையே எழுதுவது நன்று.

5. உள்ளத்தில் நேர்மையும் தைரியமும் இருந்தால், கை பிறகு தானாகவே நேரான எழுத்து எழுதும். தைர்யம் இல்லாவிட்டால் வசனம் தள்ளாடும். சண்டி மாடு போல ஓரிடத்தில் வந்து படுத்துக் கொள்ளும். வாலைப் பிடித்து எவ்வளவு திருகினாலும் எழுந்திருக்காது.

6. வசன நடை, கம்பர் கவிதைக்குச் சொல்லியது போலவே தெளிவு, ஒளி, தண்மை, ஒழுக்கம் இவை நான்கும் உடையதாக இருக்க வேண்டும். இவற்றுள் ஒழுக்கமானது தட்டுத் தடையில்லாமல் நேரே பாய்ந்து செல்லும் தன்மை.

7. நமது தற்கால வசன நடையில் சரியான ஓட்டமில்லை. தள்ளாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. உள்ளத்தில் தமிழ்ச் சக்தியை நிலை நிறுத்திக் கொண்டால் கை நேரான தமிழ்நடை எழுதும்.