Friday, December 05, 2014

எனது கதைகளின் கதை


1.எங்கள் வாத்தியார்.

கதைகள் அனைத்துமே கற்பனையால் மட்டுமே 
எழுதப்படுவதில்லை. கதைக்கான உந்துதல் ஏதாவது 
ஒரு நிகழ்வின் பாதிப்பாகவே இருக்கும். எனது கதைகள் 
எதுவுமே கற்பனை இல்லை. நான் கண்ட, கேட்ட,  
பரவசப்பட்ட சம்பவங்களின் அடிப்படையிலேயே 
எழுதப்பட்டவை. தங்கத்துக்கு செம்பு சேர்ப்பது போல 
கதையின் முழுமைக்கு கற்பனை துணையாகும்.

எனது முதல் கதை எங்கள் வாத்தியார்’ கதையா 
நடைச்சித்திரமா என்று புரியாத நிலையில் எழுதப்பட்டது. 
பின்னாளில் பல ஆண்டுகளுக்குப்பின் வ.ரா’ வின் 
நடைச்சித்திரங்களை மணிக்கொடி’ படித்த பின்தான் 
நான் எழுதியது நடைச்சித்திரம்தான் என்று புரிந்தது. 
ஆனலும் அதில் சிறுகதையின் சுவாரஸ்யம் இருந்தது.

1950ல் நான் பள்ளி இறுதி வகுப்பு படிக்கும்போது 
வித்துவான் சாம்பசிவ ரெட்டியார் என்றொரு தமிழாசிரியர் 
எங்களுக்குத் தமிழ் உணர்வை தனது போதனையின் ஊடே 
ஊட்டியவர். அவர் பிற தமிழாசிரியர்களிமிருந்து 
மாறுபட்டவராய் பத்திரிகைகளிலும் எழுதி வந்தவர். நான் 
அப்போதே நிறைய கல்கி. விகடன், கதிர் போன்ற 
த்திரிகைகளையும், நாவல்கள். சிறுகதைத் தொகுப்புகள் 
என்று கிடைத்தவற்றை எல்லாம் வாசிக்கும் ரசனை 
உள்ளவன் என்பதை அறிந்த அவர் அவ்வப்போது ஆனந்த 
போதினி’யில் வெளி வந்த அவரது படைப்புகளை என்னிடம் 
காட்டுவார். 

அந்த காலகட்டத்தில் புதிய முயற்சியாக கலைப்பயிர்’ 
என்றொரு கையெழுத்துப் பத்திரிகையை பள்ளியில் 
தொடங்கி வைத்தார். அந்தப் பத்திரிகையின் ஒவியன் 
நான்தான். அதோடு நிறுத்தாமல் கதை ஒன்றையும் 
எழுதும்படியும் அவர் என்னைத் தூண்டினார். மற்ற 
மாணவர்களையும் கதை, கட்டுரை, கவிதைகள் எழுதத் 
தூண்டினார். 

கல்கியின் முதல் படைப்பான ’ஏட்டிக்குப் போட்டி’ 
கட்டுரைத் தொகுப்பைப் படித்த பாதிப்பில், என்னை 
மிகவும் ஈர்த்த வித்தியாசமான எனது தொடக்கக் கல்வி 
ஆசான் பற்றி எழுத எண்ணி, எங்கள் வாத்தியார்’ 
என்ற தலைப்பில் எழுதினேன்.

தொடக்கமே வாசிப்பவரை ஈர்க்குமாறு இருக்க வேண்டும் 
என்று கல்கி, துமிலன் பாணியில் இப்படி ஆரம்பித்தேன்: 
சிம்ம சொப்பனம் சிங்காரவேலு’ வாத்தியரை உங்களில் 
பலருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ..... என்று 
தொடங்கி எங்கள் ஆசிரியரது குணாதிசயங்கள, கல்வி 
போதிப்பில் அவர் காட்டிய அக்கறை, கண்டிப்பு 
எல்லாவற்றையும் நகைச்சுவையுடன் எழுதினேன். 

அதுதான் என் முதல் படைப்பு. அதை கலைப்பயிர்’ 
பத்திரிகையில் வெளியிட தமிழாசிரியரிடம் கொடுத்தேன். 
அதைப் படித்த ஆசிரியர், ‘நன்றாக இருக்கிறது. இதைப் 
பத்திரிகைக்கு அனுப்பலாம். பிரசுரமாகும்.” என்றார்.

எனக்கு சிலிர்ப்பாக இருந்தது. அய்யா, சிறுவர்களது 
எழுத்தையும் பிரசுரிப்பார்களா?” என்று வியப்புடன் 
கேட்டேன்.நான் எழுதும் ஆனந்தபோதினி’ ஆசிரியர் 
நாரண துரைக்கண்ணன் வித்தியாசமானவர். 
பெரியவர் சிறியவர், புதியவர் பிரபலமானவர் 
என்றெல்லாம் அவர் பார்ப்பதில்லை. தரமான எழுத்து 
என்றால் அவர் விருப்புடன் ஏற்று வெளியிடுவார் அதிலும் 
மாணவர் என்றால் திறமை இருந்தால் ஊக்குவிக்கும் 
உயர்ந்த பண்பாளர். நிச்சயம் உனது இந்த படைப்பை 
வெளியிடுவார்” என்று உற்சாகமூட்டி உடனே  
ஆனந்தபோதினி’க்கு அனுப்பும் வழிமுறையைச் 
சொன்னார். அதன்படி அன்றே என் கதையை வெள்ளை 
முழுத்தாளில் ஒரு பக்கம் மட்டும் படி எடுத்து அஞ்சல் 
மூலம் அப்பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன்.
 
அடுத்த மாதமே அக்டோபர் 1950 ஆனந்தபோதினி’ இதழில் 
என் கதை பிரசுரமானது.எனக்கு பிரதி ஏதும் வரவில்லை. 
ஆனால் எங்கள் தமிழாசிரியர் அப்பத்திரிகையின் சந்தாதாரர் 
ன்பதால் அவருக்கு பிரதி வந்திருந்தது. அவர்தான் 
பார்த்துவிட்டு என்னிடம் காட்டி பாராட்டினார். அப்போதிருந்த மனநிலையை இப்போது நினத்தாலும் உடலெங்கும் 
பரவச உணர்ச்சி பரவுகிறது. பின்னாளில் காண்டேகர் 
எழுத்தில் நான் படித்த முதல் காதல், முதல் குழந்தை,  
முதல் படைப்பு எல்லாமே பரவசமானதுதான்’ 
என்றபடியான பரவசநிலையில்தான் அப்போது நான் 
இருந்தேன். 

ஆசிரியரிடம் பிரதியை வாங்கி வந்து திரும்பத் திரும்ப 
வாசித்தேன். இரவு படுக்கும் போது தலைமாட்டில் 
பல நாட்கள் வைத்திருந்தேன். இந்த பிரசுரத்தால் 
ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் 
என் மதிப்பு உயர்ந்தது.

இந்த முதல் பிரசுரம் தந்த நம்பிக்கையில தொடர்ந்து 
எழுதி நானும் எழுத்தாளனாக அங்கீகரிக்கப்பட்டேன். 
அதற்காக என் ஆசிரியருக்கும் என் முதல் படைப்பையே 
பிரசுரித்த ஆனந்தபோதினி ஆசிரியர் திரு. நாரண 
துரைக்கண்ணன் அவர்களுக்கும் என்றும் நன்றி 
மிக்கவனாக  இருப்பேன். 

பள்ளி மாணவன் என்று அலட்சியப்படுத்தாமல் 
ஊக்குவித்த அவர்கள் இருவரது பெருந்தன்மையால்தான் 
இன்று நான் ஒரு படைப்பாளியாகத் திகழ முடிகிறது 
என்பது சத்தியம். நா.பார்த்தசாரதி, அசோகமித்திரன்  
போன்ற புகழ் பெற்ற படைப்பாளிகளின் தொடக்கமும் 
ஆனந்தபோதினி’ தான் என்று அறியும்போது என் மனம் 
பூரிக்கிறது.பின்னாளில் நான் பல பரிசுகளும் விருதுகளும் 
பெற்றபோது அதைக் கேட்டு மகிழவும் ஆசீர்வதிக்கவும் 
என் தமிழாசிரியர் வித்துவான் சாம்பசிவ ரெட்டியார் 
இல்லையே என்று மனம் ஏங்குகிறது. அந்த ஏக்கத்தை 
என் குறுநாவல் தொகுதி ஒன்றை அவருக்குச் சமர்ப்பித்து 
சமாதானம் அடைகிறேன். 

Thursday, November 27, 2014

பி.எம்.கண்ணன் என்னும் நாவலாசிரியர்





1953ல் என் மூத்த சகோதரரின் திருமணத்தின்போது 
திருமணப் பரிசாக வந்த புத்தகங்களில் ஒன்று 
பெண் தெய்வம்’ என்னும் நாவல். அப்போதெல்லாம் 
திருமணப் பரிசாக நிறைய புத்தகங்கள் வழங்கப்பட்டன. 
அந்நாவலை எழுதியவர் பி.எம்.கண்ணன் என்கிற - 
அவரது காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்தவரும் 
மணிக்கொடி காலத்தவருமான எழுத்தாளர். மறு ஜன்மம்’ 
என்ற அவரது சிறுகதை மணிக்கொடி’ யில் 
வெளிவந்திருக்கிறது. ’கலைமகள்’ நாவல் போட்டியில் 
பரிசு பெற்றவர்.

கலைமகள் காரியாலயம் சிறந்த எழுத்தாளர்களது 
அருமையான படைப்புகளை 1950களில் பதிப்பித்து 
வந்தது. கலைமகள் ஆசிரியர் வாகீச கலாநிதி 
கி.வா.ஜகந்நாதன் அவர்கள் தேனீ போன்று புதுமையான 
படைப்புகளைத் தேடி, இனம் கண்டு அறிமுப்படுத்துவதில் 
ஆர்வமிக்கவர். புதுமைப்பித்தனது சர்ச்சைக்குரிய - 
ராஜாஜி முகம் சுளித்த - சாப விமோசனம்’ போன்ற 
கதைகளை கலைமகளில் வெளியிட்டவர். அவரது தேர்வில் புதுமைப்பித்தனின் ’காஞ்சனை’, தி.ஜானகிராமனின் 
கொட்டுமேளம்’, ‘சிவப்பு ரிக்ஷா’, கி.சந்திரசேகரனின் 
பச்சைக்கிளி’ ந.சிதம்பர சுப்பிரமணியனின் இதயநாதம்’,  
ஆர்வி’யின் குங்குமச் சிமிழ்’ போன்ற அருமையான 
நூல்கள் கலைமகள்’ வெளியீடாக வந்தன. அந்த 
வரிசையில் பி.எம்கண்ணன் 1943 இல் எழுதிய 
பெண் தெய்வம்’ நாவலும் வெளியானது. அந்த நாவலைப் 
படித்த நான் மிகவும் பரவசமானேன். ஆரவாரமின்றி,  
பிரச்சார நெடியில்லாமல், மனித வாழ்வின் பெருமை 
சிறுமைகளை ரசமாக எளிய மொழியில் 
வெளிப்படுத்துகிறவராக பி.எம்.கண்ணனை நான் கண்டேன். 

படித்து 60 ஆண்டுகள் ஆகியும் அந்நாவலின் 
கதைமாந்தர்களும் அவர்களது பாத்திரப்படைப்பும்,  
யதார்த்தமான குடும்பப் பிரச்சினைகளின் சித்தரிப்பும் 
என் நெஞ்சில் நிழலாடுகின்றன. 

15 க்கு மேற்பட்ட நாவல்களும்,   3 சிறுகதைத் 
தொகுப்புகளும் வெளியிட்ட பி.எம்.கண்ணன் இன்று 
முழுதுமாக மறக்கப் பட்டவர். இன்றைய தலைமுறையினர் 
மட்டுமின்றி மூத்த தலைமுறையினர் பலரும் கூட 
அவரை அறிந்திருக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன்.  
இல்லாததே இல்லை’ என்று சொல்லப்படுகிற கூகிளி’ல் 
கூட அவரது சிறுகதை மறு ஜன்மம்’ மணிக்கொடி’யில் 
பிரசுரமான செய்தி தவிர வேறு எதுவும் பி.எம்கண்ணனைப் 
பற்றி நிறைவான தகவல் கிடைக்கவில்லை.

எஸ்.ஏ.பி அண்ணாமலை அவர்கள் ஆசிரியராக இருந்த 
குமுதம்’ பத்திரிகையின் ஆரம்பக் கட்டங்களில் – 
1950 களில் சிறப்பான தொடர் நாவல்கள் வெளிவந்தன. 
எஸ்.ஏ.பி யின் காதலெனும் தீவினிலே’ போன்ற 
விறுவிறுப்பான நாவல்களைத் தொடர்ந்து 
பி.எம்.கண்ணனின் நிலவே நீ சொல்’, ‘பெண்ணுக்கு 
ஒரு நீதி’ ஆகிய நாவல்கள் 1964 இல் தொடராக வந்து 
வாசகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றன.

ஆனந்த விகடனில் வெளிவந்த லக்ஷ்மி’ (டாக்டர் திரிபுர சுந்தரி) அவர்களின் மிதிலா விலாஸ்’ நாவல் போல 
குடும்பப் பிரச்சினைகளை, பெண்களின் வாழ்க்கையில் 
நிகழும் சிக்கல்களை முன் வைத்தே பி.எம்.கண்ணனின் 
நாவல்கள் அதிகமும் அமைந்தன. வாழ்வின் எந்த 
சம்பவத்தையும் யதார்த்தத்திலிருந்து விலகாமல் 
நம்பகத்தன்மையுடன் படைத்ததால் வெற்றிகரமான 
படைப்பாளியாக அவர் கருதப்பட்டார். 

நவீனத்துவம், பின்நவீனத்துவம் போன்ற புரட்சி எதையும் 
அவர் செய்து விடவில்லைதான். ஆனால் வாழ்க்கையின் 
மீது அக்கறை கொண்டவராக, தனிமனித, குடும்ப 
பிரச்சினைகளை, சந்தர்ப்பவசத்தால் கீழ்மையில் விழும் 
மனிதர்களின் வக்கிரங்களை, அவர்களிடையே 
அபூர்வமாய்த் தென்படும் மனிதநேய மேன்மைகளை 
எல்லாம் அவர் தன் அனுபவத்தால், மனங்கொள்ளும் 
அருமையான படைப்புகளாக்கியவர்.

அவரது பாத்திரங்களில் அற்ப மனம் படைத்த, நாக்கு 
வழியே பிறரை நோகடிக்கும் மானிடர்கள், மொட்டைக் 
கடிதங்களை அனுப்பி அப்பாவி மனிதர்களின் வாழ்வைச் 
சீர்குலைக்கிற கயவர்கள் மட்டுமல்லாமல் தெய்வத்தோடு 
வைத்து வணங்கத் தக்க மாமனிதர்களும் இருக்கிறார்கள். 
இவர்களில் அதிகமும் பெண்களாகவே இருக்கிறார்கள். 
பெண்தெய்வம்’ என்கிற நாவலில் இப்படிப்பட்டவர்களைக் 
காணலாம்.கீழ்மை மனங்கொண்டு பிறரது துன்பத்தில் 
இன்பங் கண்டவர் ஒரு கட்டத்தில் மனசாட்சியின் 
உறுத்தலால் பிராயச்சித்தம் காண்பவர்களையும் 
காட்டுவது நம்பகத்தனமையோடு உள்ளது.

நாவலில் வரும் நான்கு விதமான பெண்களை அவர் 
சித்தரிப்பது ரசமானது: 

இந்தப் பெண்களால் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமே 
ஆட்டம் கொடுத்துவிட்டது. அந்தக் குடும்பத்தையே 
திரஸ்கரிக்கத் தயாராக இருக்கிறது சமூகம்!

பெண்கள் என்ன, அத்தனை சக்தி வாய்ந்தவர்களா? ஆம்! 
அவர்கள் இல்லாமல் எந்தக் காரியம் ஆகும்! நல்லதுக்கும் 
சரி, கெட்டதுக்கும் சரி, பெண் இல்லாமல் முடியுமா? ஒரு 
புருஷனின் வாழ்க்கை பூரணத்துவம் பெற, பெண் 
இல்லாவிட்டால் எப்படி? அவ்விதம் இருப்பினும் 
பெண்களில்தான் எத்தனை வகை! எத்தனைகுணம்! 
எத்தனை பேதம்!

பெண்களை பூஜித்தால் தெய்வம்; தூஷித்தால் பிசாசு! 
ஆனால் பூஜித்தாலும் தெய்வம், தூஷித்தாலும் தெய்வம் 
என்று சொல்லக்கூடிய பெண்களும் இருக்கிறர்கள். 
அவர்கள் நூற்றுக்கு ஒன்று, ஆயிரத்துக்கு ஒன்று;  
அவ்வளவுதான். அவள் பெண்தெய்வம்! இந்த இரண்டு 
வகைகள் மட்டுமின்றி, பெண்களில் இன்னும் 
ஒரு வகை உண்டு. பூஜித்தாலும் பேய், தூஷித்தாலும் 
பேய் என்கிற ஜாதி அது. அந்த ஜாதிப் பெண்களுக்கு 
மனசில் எப்போதுமே சந்தோஷம் என்பது மருந்துக்கும் 
கூட இருக்காது. இது தவிர இன்னொரு ரகமும் உண்டு. 
பூஜித்தால் பிசாசு, தூஷித்தால் தெய்வம் என்பது அது.   
இந்த வகுப்பைச் சேர்ந்த பெண்களைக் கொண்டாடினாலோ 
வந்தது ஆபத்து! கடிந்து கொண்டாலோ அடங்கி 
நடப்பார்கள்  - 

இப்படி வாழ்க்கையில் நாம் காணும் யதார்த்தங்களை 
பி.எம்.கண்ணனின் படைப்புகளில் காணலாம். 
 
அவரது பாத்திரச் சித்தரிப்புகளும், வர்ணனைகளும் கூட 
அவரது எழுத்துவண்ணத்தை காட்டக்கூடியவை. 
பாசாங்கற்றுதன் சாமர்த்தியத்தைக் காட்டுவதாக
இல்லாமல் நம்பகத்தன்மையுடன் கதை சொல்பவராகவே 
அவரது நாவல்களைப் படித்தபின் நமக்குத் தோன்றும். 
கதை முடிந்த பிறகு உள்ளுக்குள் அது உண்டாக்கும் 
அலையடிப்பு வாசகனைக் கரைசேர்க்கும் வல்லமை 
உடையது அவரது எழுத்து! நவீனக்கூறுகள் நிறைந்த 
இன்றைய இலக்கியச் சூழலில் அவரது படைப்புகள் 
சனாதனமாக இன்றைய தலைமுறையினருக்குத் 
தோன்றலாம். ஆனாலும் அன்றைய நாவலாசிரியர்களில் 
பி.எம்.கண்ணன் ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாளி 
என்பதும் அவரது நாவல்கள் மறு வாசிப்புக்கு 
உரியன என்பதும் மறுக்க முடியாதவை.

அவரது படைப்புகள் (எனக்குக்கிடைத்தவரை) :

சிறுகதைத்தொகுப்புகள்:

1. பவழமாலை 2.தேவநாயகி 3. ஒற்றை நட்சத்திரம்.

நாவல்கள்:

1.பெண் தெய்வம் 2.மண்ணும் மங்கையும் 3.வாழ்வின் ஒளி 
4.நாகவல்லி 5.சோறும் சொர்க்கமும் 6.கன்னிகாதானம் 
7.அன்னை பூமி 8.முள் வேலி 9.காந்த மலர் 10.ஜோதி மின்னல் 
11.நிலவுத் தாமரை 12.தேவானை 13.தேன் கூடு 
14.அன்பே லட்சியம் 15. மலர் விளக்கு 16.நிலவே நீ சொல் 
17.பெண்ணுக்கு ஒரு நீதி.    

-