Friday, July 08, 2005

நினைவுத் தடங்கள் - 34

எங்கள் பெரியப்பாவுக்கு நேர் எதிரிடையான குண இயல்புடையவர் எங்கள் அப்பா. அவர் முரடர் என்றால் இவர் சாந்த சொரூபி. எங்கள் அப்பாவுக்குக் கோபம் வந்து பார்த்ததாக எங்களுக்கு நினைவில்லை. எனக்கு வினவு தெரிந்து எங்களில் யாரையும் அடித்ததில்லை. கண்டிப்பு உண்டே தவிர தண்டனை தருவதில்லை. வேலையாட்களைக் கூட பெரியப்பா போல நாக்கில் நரம்பின்றித் திட்டியதில்லை. அதிக பட்சம் 'மடையா', 'முட்டாள்' என்பதுதான் அவர்களது திட்டலாக இருக்கும். அதனால் பொது மக்களிடம் எங்கள் அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஒப்பிட்டுப் பார்க்க பெரியப்பாவின் குணம் அதற்குத் துணை புரிந்தது. இன்றும் நாங்கள் கிராமத்துக்குச் சென்றால் எங்கள் அப்பாவுக்குக் கிடைத்த அதே மரியாதை எங்களுக்குக் கிடைக்கும். எங்கள் அப்பா காலமான பிறகு என் சகோதரர்கள் அனைவரும் தங்கள் பங்கு நிலத்தை விற்றுவிட்டு சென்னை, திருச்சி ஆகிய இடங்களில் வீடு கட்டி இடம் பெயர்ந்த போது, நான் ஊருக்கு அருகில் உள்ள நகரில் வசித்ததால் மூத்தவர்கள் பலர் எங்கள் அப்பாவின் நினைவாக நானாவது நிலத்தை விற்காமல் பிறந்த மண்ணுடன் என்றும் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் வற்புறுத்தியதால் நான் விற்க வில்லை. அந்த அளவுக்கு எங்கள் தந்தையார் மக்கள் மனதில் இன்றும் நிலைத்திருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எங்கள் அப்பாவின் தர்ம சிந்தையும் தயாள குணமும் மக்கள் மத்தியில் பெயர் பெற்றிருந்தது. எங்கள் எல்லோரையும் படிக்க வைத்து நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுத்தது போலவே எங்கள் ஊரில் உள்ள எல்லாப் பிள்ளைகளும் படித்து வாழ்வில் முன்னுக்கு வரவேண்டும் என்பதில் அக்கறை காட்டினார்கள். இரவில் சாப்பாடு முடிந்ததும் அண்டை அயலில் உள்ள பிள்ளைகளுக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்து வந்தார்கள். அவர்கள் ஆங்கிலம் கற்பிப்பதை வேடிக்கை பார்க்கவே இரவில் கூட்டம் கூடும். ஏனெனில் அப்போது ஆங்கிலம் பேசுவது ஒரு அதிசயம் மக்கள் மத்தியில். தங்கள் பிள்ளைகளும் அப்படிப் பேச எஙகள் தந்தை முயற்சி எடுப்பதில் அவர்களுக்குப் பெரிய மகிழ்ச்சி. அப்படி அன்று எங்கள் தந்தையார் தூண்டியதே இன்று எங்கள் ஊரில் நிறைய பேர் - பெண்கள் உட்பட- படித்து முன்னேறி இருப்பதற்கு ஒரளவு காரணம் எனலாம்.

எல்லோரும் கல்வி பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தியது போலவே எல்லோரும் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்பதிலும் அக்கறை காட்டினார்கள். அப்போதெல்லாம் காலரா போன்ற கொள்ளை நோய் வந்தால் மருத்துவ உதவி பெற எந்த வசதியும் வாய்ப்பும் மக்களுக்குக் கிடையாது. எங்கள் தந்தையார் காலரா மருந்தை தபாலில் வரவழைத்து கிராமத்தில் - குறிப்பாக சேரியில் காலரா வரும் போது, மிகுந்த பரிவோடு கொடுத்து எவ்வளவோ பேரைக் காப்பாற்றி யிருக்கிறார்கள். பெரியவர்களானால் சர்க்கரையிலும், குழந்தைகளானால் தேனிலும் காலரா மருந்தை வயதுக்கேற்றபடி சொட்டுகள் விட்டுத் தானே குழைத்து மணிக் கொரு தரம் உள்ளுக்குக் கொடுத்து கடுமையான பத்தியம் சொல்லி பேணிஉள்ளார்கள். சாவின் விளிம்புக்குப் போய் காப்பாற்றப் பட்டவர்கள் மிகுந்த விசுவாசத்துடன் வெகுநாள் வரை பேசியதை நாங்கள் கேட்டிருக்கிறோம்.

அதே போல பாம்புக்கடிக்கும் ஒரு அற்புத மூலிகையைக் கொண்டு பலரது உயிர்களை எங்கள் சுற்று வட்டாரத்தில் காப்பாற்றி இருக்கிறார்கள். பாம்பு கடித்து வாயில் நுரை தள்ளி கட்டிலில் கிடத்தி தூக்கி வரப்பட்ட பலர் இந்த பச்சிலை வைத்தியத்தால் பிழைத்து எழுந்து நடந்து போன அதிசயத்தை இன்றும் எங்கள் ஊரில் நினைவு கூர்வதுண்டு. எங்கள் தந்தையாரைப் போலவே எங்கள் தாயாரும் குழந்தை வைத்தியத்தில் அக்கறை கொண்டு தஞ்சாவூர் மாத்திரை, கோரோசனை போன்ற மருந்துகளை வாங்கி வைத்துக் கொண்டு இரவு பகல் பாராது கொடுத்து உதவி இருக்கிறார்கள். எங்கள் தந்தையார் இப்படிப் பல உயிர்களைக் காப்பாற்றிய புண்ணியத்தால்தான் நாங்கள் பத்து பிள்ளைகளும் அமோகமாக வாழ்வதாக ஊரின் மூத்த குடிகள் இன்றும் சொல்லி எங்களை வாழ்த்துவார்கள்.

எங்கள் தந்தையார் தீவிரமான சிவபக்தரும் கூட. தினமும் அதிகாலையில் வயற்காட்டுக்குச் சென்று பயிர்களைப் பார்த்துவிட்டுப் பத்து மணி அளவில் திரும்பிய பிறகு அவர்களே கிணற்றில் நீரிறைத்து ஆசாரமாய்க் குள்¢த்துவிட்டு சிவபூஜை செய்த பிறகுதான் ஒரே வேளையாக மதிய உணவை உட்கொள்வார்கள். தினமும் புற்று மண்ணால் சிவலிங்கம் செய்து சந்தனமும் பூவும் சாத்த்¢, தேவாரமும் திருவாசகமும் பாடி ஒரு மணி நேரத்துக்கு மேலாக பூசை செய்வார்கள். அந்தப் பாடல்களைக் கேட்டுக் கேட்டு எங்கள் எல்லோருக்கும் அவை பாடமாகி விட்டன. அதன் தாக்கமே என் இலக்கிய ஈடுபாட்டிற்கு அடிப்படை என எண்ணுகிறேன். இரவில் அனுஷ்டானம் செய்து சிவன் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்து வந்த பிறகுதான் இரவு உணவு. இந்த நியதியை அவர்கள் உடல் தளர்ந்து, விழும் வரை கடைப்பிடித்தார்கள். அவர்கள் செய்த பூஜாபலன்தான் நாங்கள் இன்று குறைவின்றி வாழ்வதற்குக் காரணம் என்று எல்லோரும் சொல்வார்கள். அதை மெய்ப்பிப்பது போல ஒரு நிகழ்ச்சி நடந்ததை இங்கே சொல்ல வேண்டும்.

லால்குடியில் வாழ்ந்த என் மூத்த சகோதரி ஒருமுறை குழந்தைகளுடன் பஸ்ஸில் எங்கள் ஊருக்குக் கிளம்பி வந்திருக்கிறார்கள். அப்போது திருச்சியிலிருந்து எங்களூர் வரை பஸ் ஓடவில்லை. மூன்று மைலுக்கு அப்பால் உள்ள ஊரோடு பஸ் வந்து திரும்பிவிடும். ஊருக்கு வரவேண்டுமானால் அப்பாவுக்குக் கடிதம் போட்டு வண்டியை பஸ் நிற்கும் ஊருக்கு வரச்செய்துதான் வீட்டுக்கு வர முடியும். அப்படி அக்கா கடிதம் முன்னதாகப் போட்டிருந்தும் அன்று வரை அது கிடைக்காததால் வண்டி அனுப்பப் படவில்லை. பஸ் வந்த நேரம் அந்தி மயங்கும் வேளை. இடமோ எட்டியவரையில் அத்துவானக் காடு. திருடர்களும் குடிகாரர்களும் இருட்டிய பிறகு புழங்கும் இடம். வண்டியைக் காணோம் என்றறிந்ததும் என் சகோதரிக்கு அழுகையே வந்துவிட்டது. சின்னஞ் சிறு குழந்தைகளை வைத்துக் கொண்டு கழுத்திலும் கையிலும் நகைகளுடன் எப்படி ஊர் போய்ச் சேரப்போகிறோம் என்று திகைத்து நிற்கையில் தெய்வமே இரக்கப்பட்டு அனுப்பியதுபோல் ஒரு கட்டை வண்டி விறகேற்றிச் சென்று விற்று விட்டுத் திரும்பியது - இருட்டில் யாரோ குழந்தைகளுடன் நிற்பதைப் பார்த்துவிட்டு அருகில் வந்து நின்றது. "யாரம்மா இந்த வேளையில் தனியாக ..?" என்று வண்டி யோட்டி அனுதாபத்துடன் கேட்க, என் சகோதரி வண்டி வராததைச் சொல்லித் தேம்பி இருக்கிறார்.

வெகு பாமரனான அந்த வண்டியோட்டி இறங்கி வந்து யார் எவர் என்று விசாரித்தார். சகோதரி எங்கள் ஊரையும் எங்கள் அப்பாவின் பெயரையும் சொல்ல அந்த ஆள் 'ஆ' என்று அதிர்ந்தவராய் "அம்மா அந்தப் புண்ணியவான் பொண்ணா நீங்க? அவுரு போட்ட பிச்சையிலே தான் நான் இன்னும் உசுரோட இருக்கேன். நல்ல பாம்பு கடிச்சி கட்டையா நீட்டி விட்டவன பச்சிலை குடுத்துக் காப்பாத்துன புண்ணியவான் அம்மா உங்க அய்யா! அவுரு பண்ண தருமம் தான் இந்த நேரத்திலே என்ன இங்க அனுப்பியிருக்கு. நீ பயப்படாதே. ஏறு வண்டியிலே. நா கொண்டு போய் அப்பா கிட்டே விடுறேன்" என்று அபயம் கொடுத்தார். பெற்றோர் செய்யும் புண்ணியம் பிள்ளைகளைக் காக்கும் என்பதை மெய்யாக்கியது போல நடந்தது இது. இப்படி எங்கள் தந்தையார் செய்த தர்மமும் சிவபூஜையும் எங்களைக் காத்ததே தவிர அவர்களைக் காக்கவில்லை என்பது பெரிய சோகம். அறுபது வயதில் அவர்களுக்கு ஏற்பட்ட ஒரு கார் விபத்தில் கண்ணருகே அடிபட்டு அப்போது அது பாதிப்பை உண்டாக்காமல் பின்னாளில் சிறுகச் சிறுக கண் பார்வையை இழக்கும்படி ஆனது.அது அவர்களது நித்திய நியமங்களையும் பரோபகாரச் செயல்களையும் பாதித்தது. கடைசி இருபது ஆண்டுகள் இருட்டில் வாழ்வது போன்ற அந்தக வாழ்க்கை வாழ்ந்த கொடுமையைச் சொல்லி உருகாதவர் இல்லை. அவரிடமே சிலர் கேட்பார்கள்: " இவ்வளவு தர்மமும் சிவபூஜையும் செய்தீர்களே, உங்களுக்கு ஏன் இந்தக் கொடுமை?" என்று கேட்பவர்கள்¢டம், "நான் இந்த ஜென்மத்தில் ஏதும் பாவம் செய்ததில்லை. இது போன ஜென்மத்தின் கர்ம வினை" என்று அவர்களைத் தேற்றுவார்கள். ஜென்மம், பாவ புண்ணியம் இவற்றில் நம்பிக்கை இல்லாதவரையும் எங்கள் தந்தையாரது வாழ்க்கை சிந்திக்க வைப்பதாக அமைந்திருந்தது.

- மேலும் சொல்வேன்.

- வே.சபாநாயகம்.

Wednesday, July 06, 2005

உவமைகள் வர்ணனைகள் - 42

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 42

பாலகுமாரன் படைப்புகளில் இருந்து:

1. சினிமா ஒரு காட்டாறு. அதற்கு இலக்கு முறைமை எதுவுமில்லை. காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருக்கும் நதி, கரை புரண்டு கிராமத்துப் பக்கம் போகும். பிறகு நகரத்தில் உலா வரும்.

- 'என் கண்மணி' நாவலில்.

2. சின்ன ஏரி மாதிரி இருந்தது லைப்ரரி.

- 'ஆருயிரே மன்னவரே' நாவலில்.

3. வெட்கம் ஒரு சுகமான விஷயம். வெட்கம் பழகப் பழகப் பிடித்துப் போகும். மறுபடி வெட்கப்பட மாட்டோமா என்று தோன்றும். வெட்கப் பட்டதை நினைத்து நினைத்து மறுபடி வெட்கப் படும். வெட்கம் காதலுக்கு உரம்.

- 'கல்யாண மாலை' நாவலில்.

4. இது மந்தை. மனித மந்தை. எங்கு போகிறோம் என்று தெரியாமல் இரு நூறு ஆடுகளுக்குள் எந்த ஆடு முதல் என்று முட்டிக் கொள்கிற மந்தை. நின்று நிதானித்து, தனித்து, தலை தூக்கி, எந்தத் திசை நோக்கி, எதற்கு என்று இவர்கள் கேட்டதே இல்லை. இவர்கள் இல்லை உலகம்; 'உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே'. உயர்ந்தவர்கள் யாரென்று உயர்ந்தவர்களுக்குத்தான் தெரியும். அவர்களால் தான் ஏற்றுக் கொள்ள முடியும்.

- 'புருஷ விரதம்' நாவலில்.

5. காற்று, பத்து வயசுப் பெண்போல மின்விசிறி இறக்கைகளோடு கோத்துக் கொண்டு தட்டாமாலை ஆடிற்று. முரளிதரன் தலையைக் கலைத்தது.

- 'மரக்கால்' நாவலில்'.

6. "ஜலமில்லாத காவிரி மகாகொடுமை ரகு. தலையை மழிச்சு நார்மடி சுத்தி மூலையில் உம்மென்று உட்கார்ந்திருக்கிற கிழவி மாதிரி. ரொம்ப வேதனை ரகு. நீ இப்போ ஊருக்கு வராதே. ஜலம் வந்த பிறகு நான் உனக்கு எழுதுகிறேன்."

- 'ஏதோ ஒரு நதியில்' குறுநாவலில்.

7. வாழ்க்கை மாறிக் கொண்டிருக்கிறது. தினம் தினம் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது. தரையில் ஓடிக் கொண்டிருந்த விமானம் புகையோடு எழும்பத் தொடங்கி விட்ட மாதிரி அதீத வேகம் கொண்டு விட்டது. உலகம் மிகவும் சுருங்கி விட்டது. பேண்டும், சட்டையும், தலைமயிரும் மட்டுமில்லை, மனைவியே, மேற்கத்திய வக்கிரமும் நம்மீது வந்து விழுந்து விட்டது. கப்பலில் டிங்கு ஜுரம் வந்து இறங்குகிறது. பழங்கதைகள் பேசி லாபம் என்ன....?

- 'சேவல் பண்ணை' நாவலில்.

8. காதலித்த பிறகு அயர்ச்சி வருகிறதோ இல்லையோ திருமணம் என்பதற்குப் பிறகு ஒரு அயர்ச்சி வரத்தான் செய்கிறது. அது அயர்ச்சி இல்லை. இனி என்ன என்ற கேள்வி. கூத்து முடிந்து இல்லத்துக்குத் திரும்பும் போது கூத்து பாதியும், வீடு பாதியுமாய் நினைவிலிருக்குமே அதைப் போன்ற ஒரு அதிசயம்.

- 'கிருஷ்ண அர்ஜுனன்' நாவலில்.

9. யாரையுமே..... எதையும் எப்போதும் காதலித்தல் முடியாது. காதலுக்குக் கீழே இருக்கிற பொய் புரிந்து போன பிறகு முடியாது. கீழே இருக்கிற சேறு தெரிந்த பிறகு தாமரை உயரே வந்து விடும். எனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று சிரிக்கும். தெறித்தாலும் ஒட்டாது. சேறு கீழே விழும்.

- 'யானை வேட்டை' நாவலில்.

10. மல்லிகை ரொம்ப ரொமாண்டிக்கான பூ. ரோஜா மாதிரி மல்லிகை கம்பீரமில்லை. போகன்வில்லா மாதிரி குப்பைத்தனமில்லை. நாகலிங்கம் மாதிரி சந்நியாசி இல்லை. முல்லை போலவும் குழந்தைத் தனமில்லை. தாழைபோலக் குப்பை இல்லை. மகுடம் போல அழுக்கு இல்லை. கனகாம்பரம் போல அலட்டல் இல்லை. மனோரஞ்சிதம் போல மந்திரத்தனமில்லை. சாமந்தி போலத் திமிரில்லை. தாமரைபோல கர்வமில்லை. மல்லிகை ஒரு ரொமாண்டிக் பூ. குடித்தனப் பொம்பிளை போல காதல், காமம், அமைதி, அழைப்பு, அலட்சியம், அழகு எல்லாம் நிறைந்த பூ.

- 'அடுக்கு மல்லி நாவலில்'.

- இன்னும் வரும்.

- அடுத்து வல்லிக்கண்ணன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநயகம்.

Tuesday, July 05, 2005

களஞ்சியம் - 21

எனது களஞ்சியத்திலிருந்து - 21

விவேகசிந்தாமணி விருந்து - 10 - பாவையரைப் பழிக்கும் பாடல்கள்:

விவேகசிந்தாமணி விருந்தின் இறுதிப் பகுதிக்கு வந்திருக்கிறோம்.

பல்விதச் சுவைகளையும் கொண்ட பாடல்களை உள்ளடக்கியுள்ள விவேகசிந்தா மணியில் விரச உணர்வுக்குத் தீனி போடும் பாடல்களும் உண்டு. அவை பகிர்ந்து கொள்ளத் தக்கவை அல்ல. ஆனால் வேண்டுபவர் தேடிப் படித்து அதில் தென்படும் கவியழகையும் இனிய ஒசை நயத்தையும் ரசிக்கலாம்.

பெண்ணின்பத்தைச் சுவைபடச் சித்தரிக்கும் பாடல்கள் உள்ள அதே நூலில் பெண்களை இழிவு படுத்திப்பாடும் பாடல்களும் உள்ளன. பெண் தொடர்பினைத் துறக்கத் துண்டுவதாக அவை தோற்றம் தந்தாலும் அவை போலித் துறவறத்தையே உள்ளே கொண்டவை. அருணகிரியாருக்குப் பின் தோன்றிய அவை அக்காலத்தின் அடிச்சுவட்டைக் கொண்டவை.

வேசியரை நம்பக் கூடாது என்று சொல்கிற பாடல் ஒன்று:

ஆலகால விடத்தையும் நம்பலாம்;
.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;
கோல மாமத யானையை நம்பலாம்;
.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;
காலனார் விடு தூதரை நம்பலாம்;
.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;
சேலை கட்டிய மாதரை நம்பினால்
.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.

ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர்- இ¢த்யாதிப் பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.

இதையே மீண்டும் வலியுறுத்துவது போல இன்னொரு பாடல்:

படியின் அப்பொழுதே வதைத்திடும்
.....பச்சைநாவியை நம்பலாம்;
பழி நமக்கென வழி மறைத்திடும்
.....பழைய கள்ளரை நம்பலாம்;
கொடுமதக்குவடு என வளர்ந்திடு
.....குஞ்சரத்தையும் நம்பலாம்;
குலுங்கப்பேசி நகைத்திடும் சிறு
.....குமரர் தம்மையும் நம்பலாம்;
கடையிலக்கமது எழுதி வைத்த
.....கணக்கர் தம்மையும் நம்பலாம்;
காக்கை போல் விழி பார்த்திடும் குடிக்
.....காணியாளரை நம்பலாம்;
நடை குலுக்கியும் முகம் மினுக்கியும்
.....நகை நகைத்திடும் மாதரை
நம்பொணாது மெய் நம்பொணாது மெய்
.....நம்பொணாது மெய் காணுமே.

உண்டவுடனே கொல்லத்தக்க பச்சைநாவியான கொடிய நஞ்சையும் நம்பி உட்கொள்ளலாம்; 'பழி நமக்கு வரினும் வரட்டும்' என்று அதைப் பொருட்படுத்தாது வழி மறித்துக் கொள்ளையடிக்கும் கள்வரையும் நம்பி உறவு கொள்ளலாம்; கொடிய, மதத்தை உடைய மலைபோன்று வளர்ந்துள்ள யானையையும் நம்பி அதனை நெருங்கலாம்; உடல் குலுங்க பசப்பு வார்த்தைகளைப் பேசி நகைத்து ஏமாற்றும் சிறுவர்களையும் நம்பி நேசிக்கலாம்; குடிகளுக்குக் கணக்கின் உள்வயணத்தைக் காட்டாது மோசடியாய் தான் எழுதி வைத்த கட்டுத் தொகையைக் காட்டி வஞ்சிக் கும் கணக்கர்களையும் நம்பலாம்; ஒரே விழியை உடையதாயினும் கூரிய பார்வையை உடையதான காக்கையைப் போலப் பயிரிடும் குடிமக்களுக்கு யாதொரு பயனும் கிட்டாதபடி கட்டிக் காக்கும் காணியாட்சி உடையவரையும் நம்பலாம்; நடக்கும் போது உடலைக் குலுக்கியும், மஞ்சள் முதலியவற்றால் முகத்தை மினுக்கியும் பசப்பி, மிகுதியாகச் சிரிக்கும் இயல்புடைய நங்கையரை நம்பக்கூடாது; நம்பக்கூடாது; நம்பக்கூடாது. இது உண்மை.

( 'பழி நமக்கென வழி மறைத்திடும் பழைய நீலியை நம்பலாம்' - என்றும் ஒரு பாடம் உண்டு. பழியைக் கருதாது ஒரு வணிகனை வழி மறித்துக் கொலை செய்த பழையனூர் நீலி பற்றிய குறிப்பு இது. )

இன்னொரு பாடல் வேசியரின் சாகசங்களைப் பட்டியலிடுகிறது:

வெம்புவாள் விழுவாள் பொய்யே;
.....மேல் விழுந்து அழுவாள் பொய்யே;
தம்பலம் தின்பாள் பொய்யே;
.....சாகிறேன் என்பாள் பொய்யே;
அம்பினும் கொடிய கண்ணாள்
.....ஆயிரம் சிந்தையாளை
நம்பின பேர்கள் எல்லாம்
.....நாயினும் கடை ஆவாரே.

உங்கள் துயரத்தைக் கண்டு வருந்தியவளாய் மயங்கி விழுவாள்; அது பொய்யே ஆகும். மேலே விழுந்து அழுவாள்; அதுவும் பொய்யே ஆகும். உங்கல் எச்சில் தாம்பூலத்தை உண்பாள்; அது பொய்யே ஆகும். 'உனக்காக நான் உயிர் விடுவேன் என்று உரைப்பாள்; அது பொய்யே ஆகும். அம்பை விடக் கூர்மையான கண்களை உடைய, ஆயிரம் சிந்தனைகளை உடைய இத்தகைய மங்கையரை நம்பியவர்
எல்லோரும் நாயை விடக் கீழான நிலையை அடைவர்.

இந்தப் பாடல்கள் எல்லாம் பொதுவாக எல்லாப் பெண்களையுமே பழிப்பது போலத் தோன்றினாலும் இவை விலைமாதரின் இயல்பையே சித்தரிக்கின்றன என்று கொள்ள வேண்டும். ஆயினும் கீழ்க்கண்ட பாடல் பெண்களின் பொது இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. மாதரின் நெஞ்சை யாராலும் அறிய இயலாது என்பதை அழகான அறிவார்ந்த உவமைகளுடன் எடுத்துச் சொல்கிறது.

அத்தியின் மலரும் வெள்ளை
.....ஆக்கை கொள் காகம் தானும்
பித்தர் தம் மனமும் நீரில்
.....பிறந்த மீன் பாதம் தானும்
அத்தன் மால் பிரமதேவ
.....னால் அளவிடப் பட்டாலும்
சித்திர விழியார் நெஞ்சம்
.....தெளிந்தவர் இல்லை கண்டீர்.

அத்தியின் பூ, வெண்மை நிறமுள்ள காகம், பைத்தியக்காரர்களது உள்ளம், நீரில் பிறந்த மீனின் கால் ஆகியவற்றை யாராலாவது பார்க்க முடியுமா? ஒருவேளை பிரம்மதேவனால் அளவிடக் கூடுமோ என்னவோ? ஆனால் சித்திரத்தில் வரையப்பெற்ற கண்களைப் போன்ற விழிகளை உடைய மாதர்களின் உள்ளத்தின் நோக்கத்தைக் கண்டு தெளிந்தவர் உலகத்தில் யாரும் இல்லை.

மற்ற பாடல்களை ஏற்பதில் பலருக்கும் மாறுபட்ட கருத்து இருந்தாலும் பெண் கள்¢ன் மனம் பற்றிய இந்தக் கருத்தை எல்லோரும் ஏற்பார்கள்தானே?

- விவேகசிந்தாமணி திகட்டாத விருந்து. எனது எடுத்துக் காட்டுகள் இலக்கிய ரசனையுள்ள அனைவரையும் அந்நூலைத் தேடிப் படிக்க வைக்கும் என்ற நம்பிக்கை யுடன் இந்த விருந்துப் பரிமாறலை முடிக்கிறேன்.

- எனது களஞ்சியத்திலிருந்து மேலும் எடுத்தளிப்பேன்.

- வே.சபாநாயகம்.

களஞ்சியம் - 20

எனது களஞ்சியத்திலிருந்து - 20

விவேக சிந்தாமணி விருந்து -9

காதலில் மலர்ந்த கவிதைகள்:

விவேக சிந்தாமணி ஒரு பல்சுவைக் களஞ்சியம். `எல்லாப் பொருளும் இதன் பாலுள' என்று திருக்குறளைச் சொல்வது போல, `எல்லாச் சுவையும் இதன்பால் உள' என்று விவேக சிந்தாமணியைச் சொல்லலாம். மென்மைமையான காதல் உணர்வைவைச் சித்தரிக்கும் இனிய பாடல்கள் பல இதில் உள்ளன.

ஒரு தலைவன் தன் தலைவியை இப்படிப் புகழ்கிறான்:

வண்டு மொய்த் தனைய கூந்தல்
.....மதன பண்டார வல்லி
கெண்டையோ டொத்த கண்ணாள்
.....கிளிமொழி வாயின் ஊறல்
கண்டு சர்க்கரையோ தேனோ
.....கனியொடு கலந்த பாகோ
அண்டமா முனிவர்க்கு எல்லாம்
.....அமுதம் என்று அளிக்கலாமே.

`என் காதலி வண்டுகள் மொய்த்தாற் போன்ற கூந்தலை உடையவள்; கயல்மீனைப் போன்ற விழிகளை உடையவள்; கிளியின் பேச்சு போன்ற மொழியினள்; `மதனக் களஞ்சியம்' என்ற கொடி போன்ற இவளது வாயின் நீர் கற்கண்டோ, சர்க்கரையோ, தேனோ, பழத்தோடு கூடிய பாகோ அறியேன். ஆனாலும் அதனைத் தேவர்கள் முனிவர் எல்லோருக்கும் அமுதம் என்று கொடுக்கலாம்' என்று புகழ்ந்துரைக்கிறான்.
(பண்டாரம்- களஞ்சியம்)

அதோடு மட்டுமல்ல அவள் மன்மதனும் மயங்கிப் போகும் மயக்கத்தினைத் தரக் கூடியவள் என்கிறான்:

அலகு வாள்விழி ஆயிழை நன்னுதல்
திலகம் கண்டுஎதிர் செஞ்சிலை மாறனும்
கலகமே செயும் கண் இதுவாம் என
மலரம்பு ஐந்தையும் வைத்து வணங்கினான்.

`ஒருதடவை - கரும்பு வில்லை உடையவனான மன்மதன், என் காதலியைப் பார்த்தான். வாளாயுதத்தைப் போன்ற கண்களை உடைய அவளது அழகிய நெற்றியில் உள்ள பொட்டின் அழகைக் கண்டான். இவளுடைய கண்கள் சாதாரணமானவை அல்ல - கலகம் விளைவிப்பவை, இவள் முன்னே நம் அம்புகளுக்கு வேலை இல்லை எனக் கருதி, தன் கையில் உள்ள மலர் அம்புகள் ஐந்தையும் அவள் முன்னர் வைத்து வணங்கினான் தெரியுமா?' என்கிறான்.
( அலகு வாள் - வாளாயுதம்; ஆயிழை - பெண்; நுதல் - நெற்றி; செஞ்சிலை - செவ்விய வில்; மாறன் - மன்மதன் )

அவளை முதன் முறையாகக் கண்டபோது தனக்கு ஏற்பட்ட கிளர்ச்சியையும், மயக்கத்தையும் சொல்கிறான்:

அருகில் இவள், அருகில் இவள், அருகில் வர உருகும்,
கரிய குழல் மேனி இவள் கானமயில் சாயல்
பெரிய தனம் சிறிய இடை பேதை இவள் ஐயோ
தெருவில் இவள் நின்ற நிலை தெய்வம் எனலாமே.

`கரிய நிறம் கொண்ட கூந்தலையும், அழகிய மேனியையும், கானகத்து மயிலினை ஒத்த சாயலையும், பெரிய மார்பகங்களையும், சிறுத்த இடையினையும் கொண்ட அவள் அருகில்வர அருகில்வர உள்ளம் அப்படியே உருகிப் போகும். ஐயோ, இவள் தெருவில் நிற்கும் நிலையை நோக்கில் தெய்வப்பெண் என்றே மயங்கிச் சொல்லுதல் வேண்டும்` என உருகிப் பேசுகிறான். கம்பன் ராமனை `ஐயோ இவன் வடிவென்பதோர் அழியா அழகுடையான்' என்று உருகுவதை நினைவூட்டுகிறது. சந்தமும் கூட கம்பனது சந்தமே.

அவள் அருகில் வந்ததும் அவளை உச்சி முதல் உள்ளங்கால் வரை பார்த்து ரசிக்கிறான். அவளது நாசியைப் பார்த்ததும் ஒரு சந்தேகம் வருகிறது. அதை அவளிடமே கேட்கிறான்:

கொல்உலை வேல் கயல் கண்
.....கொவ்வையங் கனிவாய் மாதே!
நல்அணி மெய்யில் பூண்டு
.....நாசிகா பரண மீதில்
சொல்அரில் குன்றி தேடிச்
.....சூடியது என்னோ என்றான்
மெல்லியல் கண்ணும் வாயும்
.....புதைத்தனள் வெண்முத்து என்றாள்.

''கொல்லன் உலைக்களத்தில் காய்ச்சிக் கூர்மை செய்யப்பட்ட வேலாயுதத்தையும், கயல்மீனையும் போன்ற கண்களையும், கொவ்வைக்கனி போன்ற சிவந்த வாயினையையும் உடைய பெண்ணே! நல்ல ஆபரணங்களை தேகத்தில் அணிந்து மூக்கில் மட்டும் குற்றம் பொருந்திய குன்றிமணியை அணிந்து கொண்ட காரணம் யாதோ?"

அதற்கு அந்தப் பெண் வெட்கம் கொண்டு தனது கண்களையும் சிவந்த வாயையும் மூடிக் கொண்டு, ''அது குன்றிமணி அன்று; வெண்மை நிறமுடய முத்து'' என்றாள்.

அப்பெண்ணின் வாய்ச் சிவப்பாலும் கண் மையின் கருப்பாலும் வெண்மையான முத்து குன்றிமணி போலத் தோன்றியது என்பது குறிப்பு. அவள் வாயையும் கண்ணையும் மூடியதும், முத்து வெண்மையாக விளங்கியது. (அரில் - குற்றம்)

இன்னும் இது போன்ற நயமான அநேக சிருங்கார ரசப் பாடல்கள் நிறைந் துள்ள இலக்கியப்
பெட்டகம் விவேக சிந்தாமணி.

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்.