Sunday, March 22, 2009

நான் ஏன் எழுதுகிறேன்?

'நான் ஏன் எழுதுகிறேன்' என்று இதுவரை நான் சிந்தித்ததில்லை. இப்போதுதான் அதுபற்றிச் சிந்திக்கிறேன்.

சின்ன வயதில், ஐந்தாம் வகுப்புப் படிக்கும் போது நவராத்திரிக்கு வீடு வீடாய்ப் போய் பிள்ளைகள் கோலாட்டம் அடிப்பது எங்கள் பள்ளியின் வழக்கம். அதில் ஒரு கும்மிப் பாட்டு. 'சிதம்பரக் கும்மி' யில்
ஒரு நாலு வரி:
'நாலு புரத்திலும் கோபுரமாம் - அதில்
நடுவில் எங்கணும் மாளிகையாம்
காலோராயிரம் கொண்டொரு மாளிகை
கட்டியிருப்பதைப் பாருங்கடி' - என்று சிதம்பரம் கோயில் பற்றி வரும்.

அடிக்கடி பாடிப்பாடி இந்த வரிகள் என் நாவில் புரண்டு கொண்டேஇருக்கும். இதை ஒட்டி ஏனோ எங்கள் ஊருக்குப் பக்கத்தில் உள்ள புகழ்பெற்ற விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலின் ஐந்து கோபுரங்களைக் காட்டி பாடத் தோன்றியது.

'நாலு புரத்திலும் கோபுரமாம் - அதன்
நடுவிலும் ஒரு கோபுரமாம்'

......என்று பாடினேன். அதற்கு மேல் எழுதியதாக ஞாபகமில்லை. கும்மிப் பாட்டின் சந்தமும் நயமும் மனதுள் உறைந்து அப்படி எழுத ஆசை எழுந்ததால் பாடி இருக்கிறேன்.

எனது அடுத்த முயற்சியும் பாட்டுதான். எட்டாம் வகுப்போ என்னவோ படித்துக் கொண்டிருக்கிறேன். 'வாழ்க்கை' சினிமாப் படம் வந்து எல்லோர் நாவிலும் அப் படத்தின் புகழ் பெற்ற பாடலான 'எண்ணி எண்ணிப் பார்க்க மனம் இன்பங் கொண் டாடுதே......' ஒலித்த காலம். எங்களூரில் சித்திரை மாதத்தில் சிறுதொண்டர் நாடகம் எங்கள் ஊர்ப் பையன்களால் நடிக்கப்படும். அந்த நாடகத்தில் பாட என் தோழன் ஒருவன் நாடகத்தில் பபூன் வேஷம் கட்டுபவன் - நான் பாட்டுக் கட்டுவேன் என்கிற நம்பிக்கை உடையவன் - அதே மெட்டில் ஒரு பாட்டு எழுதித் தரச் சொன்னான். என் திறமையை அவன் மதித்ததால் எழுந்த ஆர்வத்தில் நானும்,

'எண்ணி எண்ணிப் பார்க்க மனம்
வெண்ணையா உருகுதே
என்னைக்குத்தான் கோடைகாலம்
போகுமிண்னு தோணுதே!

தண்ணித் தண்ணி யிண்ணு
தவியாத் தவிக்குதே
தாகத்துக்கு ஐஸ் போட்ட
ஆரஞ்சுண்ணு கேக்குதே!'
என்று எழுதிக் கொடுத்தேன்.

அந்தப் பாட்டுக்கு அபாரமான அப்ளாஸ். பத்தாம் வகுப்பு வரை எனக்கு வசனத்தில் எழுத வாய்ப்பு ஏதும் வந்ததில்லை. எழுதவும் தோன்றியதில்லை. அப்போது புதிதாக எம் பள்ள்¢க்கு வந்த தமிழாசிரியர் வித்துவான் சாம்பசிவரெட்டியார் பத்திரிகைகளில் கவிதைகள் கட்டுரைகள் எழுதிவருபவர் - பள்ளியில் 'கலைப்பயிர்' என்றொரு கையெழுத்துப் பத்திரிகை தொடங்கி எங்களைக் கதை, கட்டுரை, கவிதை எழுதத் தூண்டினார். அப்போதே நான் நிறையப் படிக்கத் தொடங்கி இருந்தேன். நிறைய நாவல்களும் கதைகளும் படித்திருந்தேன். கல்கியில் 'பொன்னியின் செல்வன்' முதன் முதலாகத் தொடராக வந்த சமயம். அதைப் படித்ததால் உண்டான தூண்டுதலால் நாமும் கதை எழுதிப் பார்க்கலாமே என்று ஆசை வந்தது. அப்போது தமிழாசிரியர் 'கலைப்பயிரு' க்குக்கதை எழுதச் சொன்னதால், நான் படித்த திண்ணைப் பள்ளிக் கூட ஆசிரியரை வைத்து 'எங்கள் வத்தியார்' என்று நடைச் சித்திரம் போன்ற ஒன்றை எழுதிக் கொடுத் தேன். அதை மிகவும் பாராட்டிய எங்கள் தமிழாசிரியர் 'கலைப்பயிர்'பத்திரிகையிலும் 'இந்த மாணவனிடம் எழுத்து திறைமை இருக்கிறது. இக்கதையைப் பத்திரிகைக்கு அனுப்பினால் பிரசுரமாகும்' என்றெழுதினார். எனக்குப் பரவசமாகி அவரிடமே எந்தப் பத்திரிகைக்கு எப்படி அனுப்புவது என்று கேட்க அவர் தான் எழுதிக்கொண்டிருந்த 'நாரண துரைக்கண்ணன்' ஆசிரியராக இருந்த 'ஆனந்தபோதினி'க்கு அனுப்ப வழிகாட்டினார். உடனே அவர் சொன்னபடி வெள்ளைத் தாளில் ஒரு பக்கம் மட்டுமே எழுதி தபாலில் அனுப்பி வைத்தேன். பள்ளிக்கூடத்துப் பையனின் கதையைப் போடுவார்களா என்றெல்லாம் சிந்திக்கத் தோன்றவில்லை. ஏதோ ஒரு நம்பிக்கை, ஆசிரியர் கொடுத்த தைரியம் அனுப்பி விட்டேன். பிறகு அதை மறந்து போனேன். ஆனால் இரண்டு மாதம் கழித்து அக்டோபர் 1950ல் அது 'ஆனந்தபோதினி'யில் பிரசுரமானதை ஆசிரியர் அழைத்துக் காட்டினார். 'குபீலெ'ன்ற ஒரு பரவசம் மயிர்க்காலில் எல்லாம் பரவி நானும் எழுத
லாம் என்ற நம்பிக்கை வந்து அதனால் எழுதத் தொடங்கினேன். அதற்குத் தூண்டுதலாய் இருந்த
தமிழாசிரியரும், மாணவன் என்று உதாசீனம் செய்யாது எழுத்தை மட்டுமே மதித்து வெளியிட்ட நாரண துரைக்கண்ணன் அவர்களுமே என்னை எழுதச் செய்தவர்கள்.

என் முதல் கதையே பிரசுரமானதாலும் தொடர்ந்து என் எழுத்துக்கு அங்கீகாரம் கிட்டியதாலுமே நான் எழுதுகிறேன். நான் வலிந்து கதைகள் எழுதுவதில்லை. என்னைச் சுற்றிலும் நான் பார்த்த, கேட்ட, என்னைப் பாதித்த நிகழ்வுகள் என்னை எழுதத் தூண்டுகின்றன. மாந்தர்களின் பெருமை சிறுமைகளை, வாழ்வின் சோகத்தை, அவலத்தை, எக்களிப்பை - கற்பனையை அதிகம் கலக்காமல், பார்த்தவாறே யதார்த்த வாழ்வைச் சித்தரிக்க விரும்புகிறேன். மனித நேயமும் வாழ்வில் நம்பிக்கையுமே என் கதைகளின் அடி நாதமாகும். மற்றபடி புதுமைப்பித்தன் சொன்னதைப்போல உலகை உத்தாரணம் செய்யும் நோக்கத்திலோ சீர்கெட்ட சமூகத்தைத் திருத்தி அமைக்க வேண்டும் என்ற ஆர்வத்திலோ நான் எழுதவில்லை.

என் முதல் கதை பிரசுரமாகாதிருந்தால் நான் தொடர்ந்து எழுதியிருக்க மாட்டேன். ஆரம்ப காலத்தில் நாரணதுரைக்கண்ணன் அவர்களும், எஸ்.எஸ்.மாரிசாமி அவர்களும் என் எழுத்தை அங்கீகரித்து அவர்களது ஆனந்தபோதினி, பிரசண்டவிகடன், இமையம், பேரிகை ஆகியவற்றில் தொடர்ந்து பிரசுரித்ததால் நம்பிக்கை வளர்ந்து பின்னர் வணிக இதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் எழுதினேன். பல போட்டிப் பரிசுகளிலும் வென்றேன். ஏதும் ந்¢கழ்வுகளோ, அகத் தூண்டுதலோ இருந்தாலொழிய நான் எழுதுவதில்லை. அதனால், போட்டிகளுக்கோ வேண்டுகோள்களுக்கோ எழுத முடிவதில்லை.

முடிவாகச் சொல்வதானால், என் எழுத்துக்குப் பத்திரிகைகளில் இடம் கிடைப்பதாலும் என்னைச் சுற்றி நிகழ்பவை என்னைப் பாதித்து எழுதத் தூண்டுவதாலுமே எழுதுகிறேன். 0

Monday, March 16, 2009

இரா.முருகனின் 'அரசூர் வம்சம்'

1948ல் இந்தியாவில் திரையிடப்பட்ட ஷேக்ஸ்பியரின் 'ஹாம்லட்' படத்துக்கு 'ஆனந்த விகடனி'ல் விமர்சனம் எழுதிய பேராசிரியர் கல்கி அவர்கள் இப்படி எழுதினார்: 'அற்புதமான படம். ஒரு தடவை பார்த்தவர்கள் என்றும் மறக்க முடியாதபடி மனதில் ஆழ்ந்து பதிந்துவிடும் படம். மனித குலத்தின் மகோன்ன தத்தையும் நீசத்தனத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் படம். மனித உள்ளத்தில் புதைந்து கிடக்கும் அற்புத
ரத்தினங்களையும், ஆபாச பயங்கரங்களையும் எடுத்துக் காட்டும் படம்.'

- இந்த விமர்சனத்தில் 'படம்' என்று வருகிற இடங்களில் எல்லாம் 'நாவல்' என்று போட்டுக்கொண்டால் மிகையாகி விடாது - என்று திரு. இரா.முருகன்அவர்களின் 'அரசூர் வம்சம்' என்ற நாவலைப் படித்து முடித்ததும் எனக்குத் தோன்றியது. 'கொஞ்சம்போலத் தெரிந்த வரலாறு, துண்டு துணுக்காய்த் தெரிந்த பரம்பரையின் வேர்கள் சட்டம் அமைத்துக் கொடுக்க' ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட அரசூர் வம்சத்தின் கதையை மிக அற்புதமாக தனக்கே உரிய நகைச்சுவையும் நையாண்டியும் கூடிய சுகமான நடையில் முருகன் இந்த நாவலை எழுதியுள்ளார். தமிழ்நாடு, கேரளம் என்கிற 'இரு மாநிலங்களை, இரண்டு மொழிப் பிரதேசங்களைத் தொட்டு, துளி நிஜம் நிறையக் கற்பனை இவற்றில் அடிப்படையில்' அந்தக்காலத்து மனிதர்களின் பெருமைகளையும் - சிறுமைகளையும், சாமர்த்தியங்களையும் - அசட்டுத்தனங்களையும் அவர்களது அசலான கொச்சையும், ஆபாசமும் மிக்க பேச்சுக்களோடு கொஞ்சமும் பாசாங்கின்றி - பிறந்தமேனிக்கு, முகம் சுளிக்கச் செய்யாமல் ரசமாகப் படைத்துள்ளார். ஆங்காங்கே மாந்திரீக யதார்த்தம் போலத் தோன்றும் சில பதிவுகளுடன் வாசகனைப் பிரமிக்கவும் புருவம் உயர்த்தவும் செய்யும் படைப்பு. 'என்னுரை'யில் அவர் ஆசைப்படுகிற மாதிரி அவரது அனுபவத்தையும், மகிழ்ச்சியையும், மன நிறைவையும் படித்து முடித்ததும் நாமும் பகிர்ந்து கொள்ள முடிகிறதுதான்.

கதை இதுதான்: அரசூர் வம்சம் என்பது சுப்ரமணிய அய்யர் மற்றும் அவரது இரு மகன்கள்சாமிநாதன், சங்கரன் ஆகியோரைக் கொண்டது. அவர்கள் புகையிலை வியாபாரம் செய்து பணக்காரர்கள் ஆகி மாடி வீடு கட்டிக் கொண்டவர்கள். பக்கத்தில் இருந்த ஒரு பவிஷை இழந்த ஜமீந்தார் பொறாமைப்படுகிற மாதிரி வளர்ந்த வம்சம் அது. மூத்த மகன் சாமிநாதன் மனநிலை பிறழ்ந்தவன். இளையவன் சங்கரன் அப்பாவின் புகையிலை வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்தி வருபவன். அவனுக்கு மலையாளக்கரையில் பெண் பார்க்க, குடும்பத்தோடு போயிருக்கையில் புகையிலைக் கிடங்குடன் கூடிய சுப்பிரமணிய அய்யரின் வீடு தீப்பிடித்து எரிந்து போகிறது. திரும்பிவந்து பார்த்த சுப்பிரமணிய அய்யர் ராஜாவுக்கு மானியம் வழங்கும் துரைத்தனத்தாருக்குப் புகார் செய்ய, அவர்கள் வந்து விசாரித்து தீப்பிடித்ததற்கு ராஜாதான் காரணம் என்று ராஜா நஷ்டஈடு தரத் தீர்ப்பளிக்கிறார்கள். ஆனால் சுப்பிரமணிய அய்யர் தம் சொந்த செலவில் வீட்டைப் புதிதாகக் கட்டிக் கொள்கிறார். நஷ்ட ஈட்டுக்குப் பதிலாக, ராஜா தன் அரண்மனையில் ஒரு பகுதியைப் புகையிலைக் கிடங்காகத் தர நேர்கிறது. சங்கரன் தன் புதுமனைவியோடு புது வீட்டில் குடியேறி அரசூர் வம்சத்தை வளர்க்கிறான். வெகு நாட்கள் கருத்தரிக்காதிருந்த ராணியும் கருத்தரித்து ஜமீந்தாரின் வம்சத்தை வளர்க்கிறாள்.

கதா பாத்திரங்கள் வட தமிழ்நாட்டுக்குப் புதியவர்கள். பாலக்காட்டுப் பிராமணர்களும் கேரளக் கரையினரும். அதனால் அவர்களது கலாச்சாரமும், பேச்சு நடையும் பல புதிய சுவாரஸ்யங்களைத் தருகின்றன. பாத்திரங்களின் நடமாட்டமும் வித்தியாசமானவை.

கதையில் வரும் ஜமீன்தார் அரசுமானியம் பெறும் பெருங்காயம் வைத்த டப்பா. தான் தன் பிரஜைகளால் மதிக்கப்படுவர் இல்லை என்பதை அறிந்தவர். அற்ப கேப்பைக் களிக்காக நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டு, சதா போகம் பற்றியும், சாப்பாட்டைப் பற்றியுமே சிந்தனை. பக்கத்து வீட்டில் இசைக்கும் பாட்டுப் பெட்டியில் ஒரு மயக்கம். அவரதுமுன்னோர்கள் அவரது எல்லா நடவடிக்கைகளிலும் அரூபமாய்த் தலையிடுவதாகப் பிரமை. 'டான் குவிக்ஸாட்' போன்ற ஒரு அசட்டுக் கேலிச் சித்திரமாகவே கதை நெடுக வருகிறார்.

குழந்தை இல்லாத அவரது ராணி சாதாரணப் பெண் போலப் பேனை நசுக்கி சுவரில் கோடு போடுகிறவள். பக்கத்து மாடி வீட்டிலிருந்து கொண்டு யாரோ தான்குளிக்கும்போது பார்ப்பதாக ராஜாவிடம் புகார் செய்துகொண்டே இருப்பவள். ராஜாவின் கையாலாகத் தனத்தை அறிந்தும் 'ஒரு ராஜாவாகக் கட்டளை போட்டு அந்த வீட்டை இடித்துப் போடச்' சொல்லுபவள்.

சகோதரர்கள் இல்லாவிட்டாலும் அவர்களது உடை பாணிக்காக 'பனியன் சகோதரர்கள்' என்று அழைக்கப்படுகிற இரட்டையர்கள் கதையில் அடிக்கடி தென்படுகிறவர்கள். மாடி வீட்டுக்கு பாட்டுப் பெட்டியை அறிமுகப்படுத்தியவர்கள். ராஜாவின் ருசி அறிந்து அவருக்கும் பாட்டுப் பெட்டி, படமெடுக்கும் பெட்டி, நூதன வாகனம், மேல்நாட்டு கொக்கோகப் படங்கள் கொண்ட புத்தகங்கள், பின்னால் வரப்போகிற அறிவியல் அதிசயங்களையும் சொல்லி ராஜாவுக்கு ஆசைகாட்டிப் பணம் பறிப்பவர்கள்.

கல்யாணமான மறு வருஷமே நிர்க்கதியாய் விட்டுவிட்டு வேதாந்தப் பித்துடன் வடக்கே ஓடிப்போன கணவனைப் பற்றி, கிழவியான பின்னும் ஏதும் தகவல் கிடைக்காத நித்திய சுமங்கிலி சுப்பம்மா ஒரு மறக்கவியலாத பாத்திரம். சுமங்கலிப் பிரார்த்தனையின் போது வாழ்த்துப் பாடல் பாடுகிறவள். 'அவளுக்கு ஏழு தலைமுறைப் பெண்டுகளைத் தெரியும். அவர்களோடு சதா சம்பந்தம் இருப்பதாலோ என்னவோ அவர்களுடைய ஆசீர்வாதத்தில், நினைத்த மாத்திரத்தில் பாட்டுக் கட்டிப் பாட வரும்'. சுப்பிரமணிய அய்யர் குடும்பத்துக்கு
மிகுந்த ஒத்தாசையாக இருப்பவள்.

மூத்தமகன் சாமிநாதன் வேதவித்து - ஆங்கிலக் கல்வியும் பெற்றவன். மனநிலை பிறழ்ந்து, முன்னூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்திருந்த ஒரு குருக்கள் பெண்ணோடு ஆவிபோகம் செய்கிறவன். தம்பி சங்கரனுக்குப் பெண் பார்க்க எல்லோரும் போயிருக்கையில் தீப்பிடித்து எரிந்த வீட்டில் இருந்த அவனும் அதில் கருகிப்
போகிறான்.

அப்பாவின் புகையிலை வியாபாரத்தைக் கவனித்துக் கொள்ளும் இளையமகன் சங்கரன் விடலைப் பருவத்தினருக்கே உரிய பாலியல் வக்கிரச் சிந்தனையோடு மாடியிலிருந்தபடி பக்கத்து அரண்மனை ராணியின் குளியலை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பார்க்கிறவன். துருக்க வியாபாரி ஒருவனிடம் தொழில் வித்தை கற்றுக்கொள்ளச் சென்னை செல்கிறவன் அங்கே கற்றுக் கொள்வது - கப்பலில் சந்திக்கும் வெள்ளைக்காரிகளிடமிருந்து புணர்ச்சி வித்தைகள். திரும்பி வந்து பகவதிக்குட்டியைக் கல்யாணம் செய்து கொண்டு வியாபாரத்தையும் வம்சத்தையும் பெருக்குகிறான்.

சங்கரனுக்குப் பெண் கொடுக்கும் அம்பலப்புழை துரைசாமி அய்யன் சகோதரர்கள் கூட்டுக் குடும்பத்தில் பெண்டாட்டிகளோடு சேரக்கூட இட வசதியும் சந்தர்ப்பமும் வாய்க்காமல் அவஸ்தைப் படுகிறவர்கள். தங்கை பகவதிக்குட்டியை சங்கரனுக்கு மணம் முடித்துக் கொடுத்த பிறகு கடைசி சகோதரன் கிட்டாவய்யன் தனியாக ஓட்டல் நடத்தப் பணம் கிடைப்பதால் குடும்பத்தோடு கிறிஸ்தவத்திற்கு மாறுகிறான்.

இன்னும் யந்திரங்களுக்குள் தேவதைகளைப் பிரதிஷ்டை செய்து கொடுத்து பரிகாரம் செய்யும் ஜோசியன் அண்ணாசாமி அய்யங்கார், வெண்பா இயற்றுவதில் வல்லவளான சகலகலாவல்லி கொட்டக்குடிதாசி, கிட்டாவய்யன் மனைவி சிநேகாம்பாள், ஜமீந்தாரின்மைத்துனன் புஸ்திமீசைக்காரன், சங்கரனுக்குத் தொழில் கற்றுத்தரும் சுலைமான்பாய் என்று ரகம் ரகமான, உயிர்த்துடிப்புடனான பாத்திரங்கள் இரா.முருகனின் பாத்திரப் படைப்புத் திறனுக்குச் சான்று பகர்பவை.

இரா. முருகனுக்கென்று ஒரு தனி கதை சொல்லும் திறனும், நடையும் அமைந்திருப்பதை இந்த நாவலும் உறுதிப் படுத்துகிறது. ஆரம்ப காலத்தில் சுஜாதாவின் சாயல் நடையில் தென்பட்டாலும் பிற்காலத்தில் அது மறைந்து, தஞ்சை மண்ணின் குறும்பும் நையாண்டியும் மிக்க உரையாடல் நிறைந்த தி.ஜானகிராமனின் சரசரவென ஓடும் ரசமான நடை போல - பாலக்காட்டுப் பிராமணப் பேச்சு ருசியுடன் இந்த நாவலின் நடை அமைந்து விட்டிருக்கிறது. அந்தக் காலகட்டத்து அந்தப் பிராந்தியத்து மக்களின் போஜனம் - பப்படமும்,
பிரதமனும், சோறும் கறியும் கேரள வாசனையோடு வாசிப்பில் மணக்கிறது. நாவலை முழுதும் வாசிப்பதன் மூலமே இரா. முருகனின் எழுத்து காட்டும் கலைடாஸ்கோப் வண்ணஜாலங்களை முழுமையாக ரசிக்க முடியும். சில இடங்களில் ஆனந்தரங்கம் பிள்ளையின் டைரிக் குறிப்பின் வசனப் பிரயோகங்களை¨யும் காண்கிறோம்.

சொல்லாமல் சொல்லி புன்னகைக்க வைக்கிற சாமர்த்தியத்தை நாவல் முழுதும் பார்க்கிறோம். சொல் செட்டும், சின்னச் சின்ன வாக்கிய அமைப்பும் கொண்ட - வாசகனைத் தலைசுற்ற வைக்கும் பின்னல் நடை இல்லாத - எளிய லகுவான நடை காரணமாய் நாவலின் நானூற்றுச் சொச்சம் பக்கங்களும் இறக்கை கட்டிப் பறப்பது போல வாசிப்பு சுகமாய் ஓடுகிறது. ஒளிவு மறைவற்ற பட்டவர்த்தனமான, உள்ளதை உள்ளபடியே சொல்லுவதில் போலிக் கூச்சமில்லாத வெளிப்பாட்டினால் கதாமாந்தரின் இடக்கு மற்றும் அருசியான பாலியல் பேச்சுகள் நமக்கு முகச்சுளிப்பை ஏற்படுத்தவில்லை. அநேகமாக, கதையில் வரும் எல்லா ஆண்களுமே -
ஜமீன்தார், சங்கரன், அவன் அண்ணன் சாமிநாதன், கிட்டாவய்யன் என்று எல்லோருக்கும் எப்போதும் பாலியல் சிந்தனைதான். 'கலாச்சாரம் என்பது நல்லது, கெட்டது, நறுமணம், நிணநாற்றம் சேர்ந்த ஒரு கலவை' என்பதே இந்நாவலின் மௌனச் சங்கேதம் என்கிறார் பி.ஏ.கிருஷ்ணன் தன் முன்னுரையில்.

நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் போய், அந்தக் காலகட்டத்தில் சமூகத்தில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டு இருந்த அத்தனை கலை, இலக்கிய, சமூக அரசியல் மாற்றங்களையும் உள்வாங்கிய அனுபவங்களை நாவலில் காண்கிறோம். அந்தக் கட்டத்து மாந்தர்களின் சமுக, பொருளாதார நிலைக்கு ஏற்றபடி செய்யப்பட்ட யதார்த்த சித்தரிப்பில் நாவல் வெற்றி பெற்றுள்ளது. காலமாறுதலான இன்றைய நிலையிலும் கதையைப் படிக்க முடிகிறது என்பதும் நாவலின் சிறப்பாகும். திரு.பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் சொல்வதுபோல 'காலத்தை முன்னும் பின்னும் ஓடச் செய்கிற முயற்சி'யில் வெற்றி கண்டு, 'பழைமையில் எதிர்காலத்தின் வித்துக்கள் இருக்கின்றன' என்கிற மயக்கத்தை நாவல் ஏற்படுத்துகிறது. 0

Sunday, March 01, 2009

தெரிந்த - கவனிக்கத் தவறிய முகங்கள்

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, 1964ல் 'கல்கி'யில் வெளியான 'பேசாத உறவு' முதல் சமீபத்திய 'இஞ்சி' வரையிலான திரு.பி.ச.குப்புசாமியின் கதைகளை அவதானித்து வருபவன் நான். அற்புதமான மரபுக்கவிஞரும், கதைக்கலைஞருமான அவர் எப்போதும் வாழ்க்கை பற்றிய ஆரோக்கியமான கனவுகளோடும், மனித நேயத் துடனுமே மாந்தர்களைக் கண்ணகலப் பார்த்து வருபவர் என்பதை 'எனி இந்தியன்' வெளியிட்டிருக்கும் 'தெரிந்த முகங்கள்' என்ற அவரது முதல் கதைத் தொகுப்பினைப் படிப்பவர்கள் அறிய முடியும். சிறுகதை வெளிப்பாட்டில் பெரும் சாதனைகளை
நிகழ்த்தி இருக்க வேண்டிய அவர், தனது குருநாதர் ஜெயகாந்தனைப் போலவே, வெகுகாலத்துக்கு முன்னரே கதைகள் எழுதுவதை நிறுத்தி விட்டவர். ஆன்மீகநாட்டம் மற்றும் 'எழுதி என்னவாகப் போகிறது' என்பதுடன் திரு.ராஜாராம் பதிப்புரையில்
குறிப்பிட்டுள்ளபடி எழுத்தின்மீது கொண்டுள்ள மகத்தான மரியாதை காரணமாகவும் எழுதுவதை நிறுத்தி வைத்திருந்தவரை, தற்போது 'வார்த்தை' இதழ் எழுத்துலகிற்கு
மீட்டிருப்பது இலக்கிய உலகுக்கு இதம் தரும் செயலாகும்.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்துமே எதாவது ஒருவகையில் 'முகங்'களை அவர் எதிர்கொண்டதன் பல்வகை வெளிப்பாடாகவே உள்ளன.
எல்லாமே நமக்குத்தெரிந்த முகங்கள்தாம். ஆனால் நாம் கவனிக்கத் தவறிய -
குப்புசாமியின் பார்வைக்கு மட்டும் புலப்பட்டிருக்கிற மென்மையும் மேன்மையும்
கொண்ட மகத்தான மனிதர்களின் முகங்கள். அவர்கள் பெரும் லட்சியவாதிகள் அல்லர். வாழ்க்கையை அதன் போக்கில், தர்க்கிக்காமல் - 'கங்கவரம்' கதையின்
நாயகியான காமுவைப்போலவே - மௌனமாக ஏற்றுக் கொண்டிருக்கும் சாதாரண
மனிதர்கள். நாம் கவனிக்கத் தவறவிட்ட இவர்களை இக் கதைகளின் மூலம் நம் அருகே கொணர்ந்து காட்டியுள்ளார் ஆசிரியர்.

இவர் அழகிய முகங்களை ஆராதிப்பவர் என்பதை இத்தொகுப்பில் உள்ள பலகதைகளில் காண முடியும். பணிநிமித்தமாய்ப் போகும் இடங்களில் எல்லாம் 'அந்தக் காலகட்டத்தில் நான் தனித்தனியே அந்த ஜனங்கள் எல்லோரையும் முகம் தெரிந்துகொண்டேன்' என்று 'சகுந்தலா சொல்லப்போகிறாள்' கதையில் எழுதுகிறார்.

'அசட்டுத்தனத்தின் ஆழங்கள்' என்ற கதையிலும் அவர் பார்வையில் தென்படுகிற முகங்களை இப்படி வருணிப்பார்: 'ஜன்னலூடே பார்க்கும் பல முகங்களும் வரிசையாய்த் தெரிந்தன. பேசுகிற முகங்கள்.... சிரிக்கின்ற முகங்கள்.... ஆழ்ந்து யோசிக்கிற முகங்கள்.....'

'கங்கவரம்' கதையின் நாயகி காமுவின் கன்னி கழியாத சோகத்தைச்
சித்தரிக்கும்போது அவளது முகத்தை, 'வாழ்வின் ரசம் ஊறித் ததும்ப வேண்டிய இந்த முகம்...' என்று இரங்குவார். காமு, மாடத்தில் அகல்விளக்கை வைத்துவிட்டு திரியைத் தூண்டிக் கொண்டிருந்ததைக் குறிப்பிடும்போது, 'முகம் எப்படி இருந்தது தெரியுமா? அதுவும் ஏற்றப்பட வேண்டிய ஒரு விளக்குபோலவே இருந்தது!' என்று உருகுவார்.

- இங்ஙனம் அவர் அறிந்த முகங்கள் எல்லாம் அவரால் ஆராதிக்கப் பட்டவையே. படித்தபின் அவை நமக்கும் தெரிந்த முகங்களாகி விடுகின்றன.
நூலின் தலைப்பான 'தெரிந்த முகங்கள்' குறிப்பிடுகிற முகங்கள் வேறாயினும் அது எல்லாக் கதைகளுக்குமே ஓரளவு பொருந்திப் போகின்றன.

இதே மாதிரி, 'கனவு'ம் இவர் கதைகளில் அதிகம் இடம் பெற்றுள்ளன. ஒரு கலைஞனுக்கு, அதுவும் ஒரு கவிஞனுக்கு 'கனவு' இயல்புதானே?

முதல் கதையே - 'கிருஷ்ணாரெட்டியின் குதிரைச்சவாரி'யே, கனவு பற்றியது தான். இக்கதையில் வரும் இவரது பால்ய நண்பன், அடிக்கடி விதம்விதமான குதிரை களின் மீது சவாரி செய்வதாய்க் கனவு காண்பவன். பல ஆண்டுகளுக்குப் பின்னர் அவனைச் சந்திக்கும்போது அத்தகைய கனவுகள் அடியோடு நின்று போயிருந்தன.
காரணம் பின்னாளில் ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட தேக சம்பந்தமான உறவு என்று தெரிகிறது. கனவு இங்கே பால் விழைவின் குறியீடாக வருகிறது.

'சகுந்தலா சொல்லப் போகிறாள்' என்கிற கதையில் அவளை அறிமுகப் படுத்தும் இடத்தில், 'எத்தகைய கிராமப்புறமாக இருந்தபோதிலும் அங்கே ஒரு
அழகிய கனவு தோன்றும் போலும்... சகுந்தலா ஒரு கனவு போன்றவள்' என்று
சித்தரிப்பார். இது வேறு கனவு!

'அசட்டுத்தனத்தின் ஆழங்கள்' கதையில், 'எனது கனவுகள் காலத்தின்
அடிவானம் நோக்கி உருவமிழந்து போய்க் கொண்டிருப்பதைப்போன்ற ஒரு பிரமை யுடன் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தேன்' என்று தன் சிதைந்த
கனவைச் சொல்லுகிறார்.

'மீள்வதில் என்ன இருக்கிறது?' என்ற கதையில் காட்டும் கனவு ஆன்மீகம் கலந்த காவியக் கனவு. 'காதலைப் பற்றியும், பெண்களைப் பற்றியும் அதுவரை நான்
கனவுகள் மட்டுமே கண்டு ஏங்கிக் கொண்டிருந்தேன். அந்தக் கனவின் பெண்கள் இந்தப் பூமியில் இல்லை. அவர்கள், இராமகிருஷ்ணரின் வாக்கினால் விவரிக்கப்பட்டு,
சக்தியின் பிரபைகள் என அவரால் பூஜிக்கப்பட்ட தத்துவங்களிலே இருந்தனர்.
அந்தியின் கருநிறச் சாயை படிந்த நெடும் பாலைவனங்களுக்கும், கடல்களுக்கும் அப்பால் உள்ள வேறுதேசங்களின் காவியங்களிலே இருந்தனர். குத்துவிளக்கின் சுடரொளியில் பிறந்து, எனது மனோபாவங்களின் உருவக்கோடுகளுக்குள் வந்து நுழைந்த வானத்துக் கனவுகளிலே இருந்தனர்' என்று கவித்துவத்தோடு எழுதுவார்.

இத்தொகுப்பில் உள்ள கதைகளில் மிகச்சிறப்பானவை என 'சகுந்தலா
சொல்லப்போகிறாள்', அசட்டுத்தனத்தின் ஆழங்கள்', 'மீள்வதில் என்ன இருக்கிறது?' என்கிற கதைகளைச் சொல்லலாம். இக்கதைகள், வித்தியாசமான பத்திரிகையாளராகப் பேசப்பட்ட திரு.'சாவி'யால் அங்கீகரிக்கப்பட்டு 'தினமணி கதிரி'ல் 'நட்சத்திரக் கதை' என முத்திரை இடப்பட்டு பரிசு பெற்றவை. சாவியின் அங்கீகரிப்பு அக்கால கட்டத்தில் பொருட்படுத்தக்கூடியாதாக இருந்தது.

இக்கதைகள் நிறைவேறாத ஆனால் அதற்காக இடிந்து போய்விடாத
காதல்களைச் சொல்பவை. இக்காதல்களில் அசட்டு உருக்கம் இல்லை; ஆயாசம் இல்லை; ஏமாற்றம் இல்லை; ஏக்கம் இல்லை. பாத்திரங்கள் சோக உருவிலேயே
வார்க்கப்பட்டவை என்றாலும் மற்றவர் நலன்மீது, மகிழ்ச்சியான வாழ்வின்மீது அக்கறை கொண்ட சுயநலமற்ற காதல்கள். இவரது கதைகளில் வரும் பெண்கள் அனைவருமே எதுவும் பேசுவதில்லை. மௌனம் சாதிப்பவர்கள்; கண்ணியமும் மென்மையும்
மிக்கவர்கள். காதலர்களும் காதல்மொழிகள் பேசி வழிபவர்கள் அல்லர்; காதலை
வெளிப்படுத்தத் தயங்குகிறவர்கள். எட்டி நின்று ஆரவாரமின்றி அடக்கி வாசித்து,
காதலை உணர்த்துகிறவர்கள். காதல் நிறைவேற வேண்டும் என்கிற பிடிவாதமும் அற்றவர்கள். இக்கதைகளில் சஸ்பென்ஸ் என்கிற உச்ச கட்டங்கள் இல்லை. இவை மென்மையாய் சப்தமின்றி சிலுசிலுத்து ஊர்ந்து செல்லும் ஓடைநீர் போன்றவை. மனதை உறுத்தாத இதம் தருபவை. 'பேசாத உறவு' என்கிற கதை அப்படிப்பட்ட, நெஞ்சுக்கு இதமான ஒரு கதை.

'சகுந்தலா சொல்லப்போகிறாள்' கதையில் வரும் சின்னப் பெண் ஒருத்தி,அவளுக்கு வயதாலோ, மனதாலோ எவ்வகையிலும் பொருத்தமற்ற ஒரு சவடால்ப் பேர்வழிக்கு மணம் முடிக்கப்பட்டுவிடுவாளோ என்று கதை சொல்லியின் கவலையைச் சொல்லி, அந்தப் பெண் சகுந்தலா, தான் அதற்கு மறுப்புச் சொல்லப்போவதாகச் சொல்வதைக் கேட்டு அது நடக்க வேண்டும் என்று ஆதங்கப்படுவதைச் சொல்கிறது.

'அசட்டுத்தனத்தின் ஆழங்கள்' காதல் வயப்படவர்கள் தனது செயல்கள்அசட்டுத்தனம் என்று அறிந்திருந்தும் பிரக்ஞையுடனேயே அதன் அடியாழத்துக்கே சென்றுவிடுகிற பேதைமையைச் சொல்கிறது. 'காதல் வயப்பட்ட உள்ளம், அற்பமான விஷயங்களைக்கூடப் பைத்தியக்காரத்தனமாய்ப் பெரிதுபடுத்திக் கொள்கிறது' என்கிற சுய இரக்கமும் காட்டப்படுகிறது.

'மீள்வதில் என்ன இருக்கிறது?'- கதையில் வரும் காதலன், காதலியின் அன்புக்காக அவளது காலடியில் சரணாகதி அடைந்தும், அவள் அவனது காதலைஅவ்வப்போது சுவீகரிப்பதும், நிராகரிப்பதுமாய்க் கோலம்காட்ட - தனது காதலின்
தீவிரத்தால் மனநோயாளி ஆகிப் போவதையும், அதிலிருந்து மீள அவன் மரணத்தின் விளிம்புக்கே சென்றுவிடும்போது, அவனைப் பார்க்க வருகிற அவளை கடைசி
நேரத்திலாவது தனது ஆண்மையைச் சிறுமைப்படுத்த அனுமதிக்கூடாது என்று
வைராக்கியமாக இருப்பவன் - நேரில் கண்டதும் 'இனி மீள்வதில் எந்த அர்த்தமும் இல்லை' என்று மீண்டும் சரணாகதி அடைகிற அவலத்தையும் சொல்கிறது.

'பேசாத உறவு' கதையில், கதைநாயகன் சிவராமனுக்கு பக்கத்து வீட்டுப் பெண் பத்மாமீது காதலில்லாத ஈர்ப்பு உண்டாகிறது. அவளுக்கும் அவனிடம்
மரியாதையும் நாணமும் கொண்ட ஈடுபாடு இருக்கிறது. ஒருநாள் அவளுக்குத்
திருமணமும் ஆகி குழந்தையும் பிறக்கிறது. என்றாலும் அவளது கணவனைவிட தனக்கே அவளிடம் பாசம் காட்ட உரிமை இருப்பதாக எண்ணுகிறான். தன் குழந்தைக்கு அவள் இவனது பெயரையே வைத்திருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறான். அவர்கள் இருவரும் என்றைக்கும் பேசியதில்லை. பேசக்கூடிய உறவு அவர்களுக்குள் இருந்ததில்லை. இறுதிவரை அந்த உறவு பேசாத உறவாகவே நின்று விடுகிறது.

'கங்கவரம்' என்கிற கதை 'ஆனந்த விகடனி'ல் பிரசுரமான கதை. இருபது வயது இளைஞனாய் சாரங்கன் கங்கவரம் கிராமத்துக்கு வேலைக்காகச் சென்ற
போது, மனதுக்கு ரம்மியமாய் எத்தனையோ விஷயங்கள் இருந்தபோதும் அக்ரஹாரத்தில் வயது கடந்த பின்னும் திருமணமாகாமல் 'கோரிக்கையற்றுக் கிடக்கும் வேரில் பழுத்த பலா'வாய், கனவுகளின் சருகாய் இருந்த காமு என்கிற ஏழைப்பெண்ணுக்காக மனம் அலைக்கழிக்கப்படுகிறான். அறிவும், அழகும் நிறைந்த அவள் எப்படி ஒருவராலும் அங்கீகரிக்கப்படாதவளாக இருக்கிறாள் என்ற பரிதாப உணர்ச்சி அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவனுக்கு எழுகிறது. கடைசியில் ஒரு நாள் அவன் வேறு ஊருக்கு
மாறுதலாகி அந்த ஊரைப் பிரியவேண்டி வருகிறது. ஊருக்குப் புறப்படு முன், கடைசித் தடைவயாக அவளைக் கோயிலில் பார்க்க நேர்கிறது. அதுவரை அவளிடம் எதுவும் பேசியிராத அவன், மனம் உருகி 'உங்களைப் பார்த்தால் வருத்தமாய் இருக்கு....உங்களுக்குச் சீக்கிரம் கல்யாணம் ஆகணும்' என்று சொல்லிவிட்டுப் பதிலை
எதிர்பாராமல், கால்கள் தடுமாற வெளியேறுகிறான். வெகுகாலத்துக்கு காமுவை அவனால் மறக்க முடியவில்லை. கங்கவரமும் பிறகு ஒரு கனவு போலாகியது.

'விருது' என்றொரு கதை. ஜெயகாந்தன் அவர்கள் 'குமுதத்'துக்காக ஒருமுறை தயாரித்த சிறப்பிதழில் அவரால் தேர்வு செய்யப்பட்டு வெளியானது.
'நல்லாசிரியர் விருது' எப்போதும் 'வாங்கப்படுவதா'கவே பேசப்படுவதும், ஒருபோதும் 'கொடுக்கப்பட்டுள்ளது' என்று சொல்லப்படுவதில்லை என்பதும் கல்வித்துறையில் பேசப்படுகிற கேலி. இக்கதையில் அதனை மையமாகக் கொண்டு, நல்லாசிரியர்
விருதுக்கு ஆசிரியர் மனுப்போடும் கேவலத்தைச் சாடி, நல்லாசிரியரைத் தேடி
அரசாங்கமே விருது வழங்கிக் கௌரவிக்க வேண்டும் என்கிற தார்மீக நெறியைச்
சுட்டிக் காட்டுகிறது கதை.

'இஞ்சி' என்கிற கதை ஒரு நேர்மையான, கடமை உணர்வு மிக்க ஒரு
பாரஸ்டர் பற்றியது. குப்பையில் கொட்டப்படும் இஞ்சித் துண்டுகள், காலம் கடந்தும் முளைத்து எழுவதுபோல வாழையடி வாழையாய் நேர்மையான அதிகாரிகள்
தோன்றாததின் குறியீடாக கதை சொல்லப்படுகிறது.

தொகுப்பின் தலைப்பிலான கடைசிக்கதை 'தெரிந்தமுகங்கள்' சற்றே
நீளமானது. இதைக் கதை என்று சொல்வதைவிட பரவசமான அனுபவங்களின்
வெளிப்பாடு என்பது சரியாக இருக்கும். ஜெயகாந்தன் அவர்களே தனது அணிந்துரை யில் குறிப்பிட்டுள்ளதுபோல அவரையும் அவருடன் நெருக்கமான ஐந்து திருப்பத்தூர் நண்பர்களையும் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதைபோன்ற அறிக்கை. இதில் வரும்
சித்தர் போன்ற சாமியாரையும், புகழ்பெற்ற மடத்தின் தலைவரையும் தெரிந்த முகங்களாய் நம்மால் அடையாளம் கண்டு கொள்ள முடிகிறது.

திரு.குப்புசாமியின் எழுத்து முழுவதுமே கலைத்தன்மையும், இலக்கிய நயமும் கொண்டவை. உவமைகள் அழகும் ரசனையும் மிக்கவை. வருணனைகள் எப்போதும் கவித்துவம் மிக்கவையாய் இருக்கும். இத்தொகுப்பிலும் எண்ணி எண்ணி ரசித்து
மகிழும்படியான வருணனைகளும் உவமைகளும் காணக் கிடக்கின்றன. உதாரணத் துக்கு:

'மருண்டு தாழ்ந்த அந்த வதன மாதுரியமும், சிறிதே இமைத்த அந்த இமைகளின் மகா சாந்தமும், மெதுவாய் மடிந்த அந்த அதரங்களின் புதுமையும்
அவன் நெஞ்சில் இதமாய் நுழைந்தன'. (பேசாத உறவு)

'அந்த நாட்களில் நான் எழுதிய கடிதங்களை எல்லாம் நினைத்துக்
கொண்டேன்....எனது சொற்கள் அவளைச் சூழ்ந்து ஒளி செய்யும் சுடர்கள் போன்றி ருந்தன. கவிதையின் லயமும், கனவின் வர்ணமும் கொண்டு அவள் காதலைப் புனைந்துரைத்தன...! மூடு பல்லக்குகள்போல் எனது மௌனமான கடிதங்க¨ளை
ஏந்திச் சென்று அவள்பால் முறையிட்டன'. (அசட்டுத்தனத்தின் ஆழங்கள்)

'இத்தொகுப்பு குப்புசாமியை மீள் அறிமுகம் செய்வதன் மூலம் இலக்கிய உலகிற்கு ஒரு புதிய கொடையை அளிக்கிறது. மேன்மையைக் கௌரவிப்போம்'
என்கிறார் திரு.ராஜாராம் பதிப்புரையில். ஆனால் இந்த வெளிப்பாடும் வெளிச்சமும்
திரு,குப்புசாமியை இலக்கியப் படைப்பின் மீட்சிக்குத் தூண்டுமா அல்லது 'மீள்வதில் என்ன இருக்கிறது?' என்று முன்போல மௌனமாகிவிடுவாரா என்பது அவருக்கு
நெருக்கமானவர்களின் கவலையாக இருக்கும். எனினும், இத்தொகுப்பு அவரிட
மிருந்து மேலும் பல அரிய படைப்புகளை வாசகர் எதிர்பார்க்கச் செய்வதாக உள்ளது என்பதை மட்டும் அவருக்குச் சொல்லியாக வேண்டும். O

நூல்: அறியாத முகங்கள்
ஆசிரியர்: பி.ச.குப்புசாமி
வெளியீடு: எனி இந்தியன் பதிப்பகம், சென்னை.