Tuesday, June 29, 2004

எனது களஞ்சியத்திலிருந்து - 4: கூட்டுக் கவி

தனிக் கவிஞர்களின் பாடல்களல்லாமல் இரண்டு மூன்று கவிஞர்கள் சேர்ந்து பாடிய கூட்டுக் கவிகளையும் தனிப்பாடல் திரட்டு போன்றவற்றில் பார்க்கிறோம். பெரிதும் இரட்டைப் புலவர்கள் பாடியுள்ளவற்றையே நம்மில் பலரும் அறிவோம். இரட்டையர் பாடி பூர்த்தியாகாதிருந்த ஒரு வெண்பாவை காளமேகம் பூர்த்தி செய்ததாக ஒரு பாடல் உண்டு.

இரட்டைப் புலவர்கள் திருவாரூர் சென்று தியாகேசரைத் தரிசித்துவிட்டு ஒரு மண்டபத்தில் வந்து உட்கார்ந்தனர். வழக்கம் போல் ஒருவர் ஒரு பாடலைத் தொடங்கி இரண்டு அடிகள் பாடும் போது
" நாணென்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்;
பாணந்தான்......
- என்பதோடு நிறுத்திவிட,
அடுத்தவர் அதைத் தொடரத் தோன்றாமல் தியங்கினார். அப்போதைக்கு மண்டபத்துச் சுவற்றில் பாடியவரையில் அங்கு கிடைத்த கரிக்கட்டியால் எழுதி வைத்து விட்டு தங்களது யாத்திரையைத் தொடர்ந்தனர். பிறகு கொஞ்ச நாட்கள் சென்று, திரும்பி வந்தபோது அவர்கள் முடிக்காமல் விட்டிருந்த பாடலை யாரோ பூத்தி செய்திருந்ததைப் பார்த்து
வியப்புடன் நெருங்கிப் பார்த்த போது பூர்த்தி செய்த வரிகளின் கீழே, - 'காளமேகம்' என்று கைஎழுத்திட்டிருந்ததைக் கண்டு
சிலிர்த்துப் போனார்கள்.

இரண்டாவது வரியில் 'பாணந்தான்....' என்பதைத் தொடர்ந்து,

........மண்தின்ற பாணமே - தாணுவே
சீராருர் மேவும் சிவனே நீர் எப்படியோ
நேரார் புரம்எரித்த நேர்'.
- என்று எழுதப் பட்டிருந்தது.

சிவபெருமான் முப்புரங்களை எரித்த போது பூமியைத் தேராகவும், சந்திர சூரியரைச் சக்கரங்களாகவும், மேருமலையை வில்லாகவும், வாசுகி என்ற பாம்பினை நாணாகவும் மண்ணை உண்ட கண்ணனை(திருமாலை) அம்பாகவும் கொண்டு சென்றார் என்பது புராணக் கதை. அதை
அடிப்படையாகக் கொண்டு இரட்டையர் சொல் நயமுடன் பாடத்தொடங்கிய பாடலைக் காளமேகம், தனக்கேயுரிய சாதுர்யத்துடன் சிலேடையில் நையாண்டி செய்கிறார்.

'நாண் என்றால் நஞ்சிருக்கும்- நாகத்தின் நஞ்சு உள்ளது- நைந்து போயுள்ளது;
நல்ல வில்லோ (நற்சாபம்) - கல்சாபம்-கல்லால் ஆனது;
பாணமோ மண்தின்ற பாணம் - மண்தின்று மக்கிப்போனது- மண்ணைத் தின்றது;
-இப்படி இருக்க இவற்றைக் கொண்டு, திருவாரூர் ஈசனே! நீர் எப்படித்தான் திரிபுரத்தை எரித் தீரோ?-
அறியோம்.

முழுப்பாடல்: நாண் என்றால் நஞ்சிருக்கும்; நற்சாபம் கற்சாபம்:
பாணந்தான் மண்தின்ற பாணமே- தாணுவே
சீராரூர் மேவும் சிவனே நீர் எப்படியோ
நேரார்புரம் எரித்த நேர்.

இப்பாடலில் மயங்கிப்போன இரட்டையர் காளமேகத்தைக் காண விழைந்து அவரது ஊருக்குச் சென்றார்கள். அந்தோ பரிதாபம்! அவர்கள் சென்ற நேரத்தில் காளமேகத்தின் உடல் மயானத்தில் எரியூட்டப் பட்டதைத்தான் காணமுடிந்தது. ஆசுகவியின் உடல் வேகிறதைக் கண்டு மனம் நொந்து அவர்கள் பாடினார்கள்:

ஆசு கவியால் அகில உலகெங்கும்
வீசுபுகழ் காள மேகமே! - பூசுரா!
விண்கொண்ட செந்தழலிலே வேகுதே ஐயையோ!
மண்தின்ற பாணம் என்ற வாய்.
-என்று பரிதவித்தார்கள்-வழக்கம்போல் ஆளுக்கு இரண்டடியாகத்தான்!

இப்படி ஒட்டக்கூத்தனும் குலோத்துங்க சோழனும் பாடிய ஒரு கூட்டுக் கவியும் உள்ளது. சோழன் உலா வரும்போது ஒட்டக் கூத்தன் அவனைப் புகழ்ந்து இரண்டடி பாட, சோழன் இரண்டடி பாடி முடித்த பாடல் இது:

ஆடும் கடைமணி நாவசையாமல், அகிலமெங்கும்
நீடும் குடையைத் தரித்த பிரான்; இந்த நீள்நிலத்தில்
பாடும் புலவர் புகழ் ஒட்டக்கூத்தன் பதாம்புயத்தைச்
சூடும் குலோத்துங்க சோழன் என்றேயெனைச் சொல்லுவரே!

- கொஞ்சம் பரஸ்பர ஒத்தடம்தான்! ஆனாலும் அருமையான கவியல்லவா கிடைத்திருக்கிருக்கிறது!.

நம் காலத்து நாயகர்களான இரண்டு இலக்கியவாதிகளும் இப்படிக் கூட்டுக் கவிபாடியுள்ளார்கள். காலஞ்சென்ற கவிஞர் தமிழ் ஒளியும் ஜெயகாந்தனும் நெருக்கமான இலக்கிய நண்பர்கள். ஜெயகாந்தனும் அற்புதமான கவிஞர் என்பது பலருக்குத் தெரியுமோ என்னவோ?
தொ.மு.சி.ரகுநாதன்- தான் புதுமைப்பித்தனுக்கு மிகவும் நெருங்கியவர் என்பதை 'புதுமைப் பித்தன் வரலாறு', 'புதுமைப்பித்தன் கவிதைகள்', இன்னும் பல கட்டுரைகள், பேச்சுக்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்ததில் அலுப்படைந்த நண்பர்கள் இருவரும் ஒரு கூட்டுக்கவி மூலம் தங்களது எரிச்சலை வெளிப்படுத்தினார்கள்.

முதல் இரண்டடியை ஜெயகாந்தன் பாட, ப்¢ன் இரண்டடியை தமிழ் ஒளி பாடினார்:

பித்தன் உனைப்புகழ்ந்து பேசினான் என்பதனால்
கத்தலாம் என்று கதைக்காதே - எத்தனே
ஆடும் சிவனுடனே ஆடுகின்ற பேய்க்கும்பல்
ஆடுமோ சிற்றம்பலம்?

கொஞ்சம் கடுப்படிக்கிற பாடல்தான். ஆனால் அப்படிக் கடுப்படிக்க நேர்ந்து விடுவதும் உண்டு தானே? எனக்கும் கூட அப்படி ஒரு சந்தர்ப்பம் நேர்ந்தது. நான் ஆசிரியராகப் பணிபுரிந்த போது, நானும் பக்கத்து ஊரில் இருந்த ஒரு இலக்கிய நண்பரும் சீட்டுக்கவி மூலம் இலக்கியப் பரிவர்த்தனை செய்து கொள்வதுண்டு. அதையறிந்த- கவிஞரான நண்பரிடம் கவிதை எழுதக் கற்று வந்த ஒரு இளைஞர், என்னோடு பரிச்சயமில்லாத நிலையில் எனக்கு ஒரு சீட்டுக்கவியை அனுப்பினார்.

'கூட்டுப்பணி புரிய
கூட்டாளி தேவையென்று
சீட்டுக்கவி தந்தேன்
சிந்தையொடு - ஓட்டாலே
நாட்டுக்கு என்ன
நலம்பயக்கச் செய்வதென்று
கூட்டுக் குகந்தோய் நீ
கூறு'.

முன்பின் பழக்கமில்லாமலே இவ்வளவு நெருக்கமாய் அவர் எழுதியது எனக்கு எரிச்சல் ஊட்டியது. அதனால் அவரது வேண்டுகோளை மறுக்கிற விதமாக இப்படி எழுதி அனுப்பினேன்:

'கூட்டுப்பணி புரிய
கூட்டாளி தேவை என்றீர்
கூட்டுப்பணி எனக்குக்
கட்டாது - கூட்டு
கொள்ளைக்குப் போனாலும்
கூடாதாம் கூட்டென்ற
சள்ளை உதவா
தெனக்கு!'

பாவம்! மிகவும் காயப்பட்டுப் போனரோ என்னவோ? பின்பு அவரிடமிருந்து எதுவும் வரவில்லை.

- மேலும் சொல்வேன்.

எனது களஞ்சியத்திலிருந்து - 3: பிரிவாற்றாமை

மரபிலக்கியத்தில் 'பிரிவாற்றாமை' ஒரு ரசமான பகுதி. வள்ளுவர் முதல் நாடோடிக் கவிஞன் வரை அது பற்றிப் பாடாத கவிஞர் இல்லை. அவர்களது கவிதைகளில் தலைவனது பிரிவால் வாடும் தலைவியரது ஆற்றாமை உருக்கமும் நெகிழ்ச்சியும் மிக்கவை.

உற்றார் உறவினர் இல்லாத ஊரில் குடியிருப்பது மனிதர்களுக்கு மிகவும் துன்பமான வாழ்க்கை. அதைவிடத் துன்பம் தருவது ஒரு பெண் தன் காதலனைப் பிரிந்திருப்பது. ஏனெனில் சாதாரண நெருப்பு தொட்டால்தான் சுடும். காமநோய் நெருப்போ தொட்டுக் கொண்டிருக்கிற வரை சுடாமல், விட்டுப் பிரிந்தவுடன் சுடுகிறது.

'இன்னாது இனன் இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு'

'தொடற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ' - என்கிறார் வள்ளுவர்.

பிரிவாற்றாமையில் இவர்க்கு நிலவு சுடும். இரவு துன்புறுத்தும். கடல் அலைஓசையும் வருத்தும். இரவு முடிவற்றதாக நீண்டு வேதனை தரும்.

'ஆழிவாய்ச் சத்தம் அடங்காதோ? யான் வளர்த்த
கோழிவாய் மண்கூறு கொண்டதோ? - ஊழி
திரண்டதோ கங்குல்? தினகரனும் தேரும்
உருண்டதோ பாதாளத் துள்'
- என்று ஆத்திரப் படுகிறாள் ஒருத்தி.

'இந்தக் கடல் முழக்கம் அடங்காதா? நான் வளர்த்த கோழியின் வாயில் மண் அடைத்து விட்டதா? அது கூவினால் இரவு கழிந்து, விடிந்து விடுமல்லவா? ஒருவேளை உலகம் அழியக் கூடிய ஊழிக்காலம் வந்து விட்டதா? அதனால்தான் இப்படி முடிவற்ற இரவாக இருக்கிறதா?
சூரியனும் அவனது தேரும் பாதாளத்துக்குள் உருண்டு விழுந்து விட்டனவா?' என்று எரிச்சல் படுகிறாள்.

இன்னொருத்தியும் 'சூரியனது தேர் விரைந்து வந்து பொழுதை விடிய வைக்காதா? சூரிய உதயத்தில் வந்து விடுவதாகச் சொன்ன தன் காதலன் அதனால் தான் இன்னும் வர வில்லையோ?' என்று கவலைப் படுகிறாள். அவளுக்கு ஒரு சந்தேகம் வருகிறது. 'இந்த சூரியனுக்கு இன்று என்ன ஆயிற்று? ராகு அல்லது கேது என்கிற பாம்பு விழுங்கி விட்டதா? அல்லது அவன் ஏறி வருகிற தேர் அச்சுமரம் முறிந்து போய், புரவிகள் கயிற்றை உருவிக் கொண்டு ஓடிவிட்டனவா? அல்லது செத்துத்தான் போனானோ? அல்லது இன்று பாதையை மாற்றிக்
கொண்டு வேறுவழி போய்த் தொலைந்தானா? தோழி! எனக்கு எப்படியடி விடியப் போகிறது' என்று ஆற்றமாட்டாமல் புலம்புகிறாள்:

அரவம் கரந்ததோ?
அச்சு மரம் இற்றுப்
புரவி கயிருருவிப்
போச்சோ? - இரவிதான்
செத்தானோ? வெறு வழி
சென்றானோ? பாங்கி எனக்கு
எத்தால் விடியும்
இரா?

- ரசிகமணி டி.கே.சி அவர்களுக்கு மிகவும் பிடித்தமான பாடல் இது!.

இன்னொருத்திக்கு- விரகதாபத்தில், வானில் தண்ணொளி பொழிகிற நிலவின் குளுமை தீயாய்ச் சுடுகிறது. 'இது ஏன் தான் இப்படி எரிக்கிறதோ? இந்த ஊரையே தன் வெப்பத்தால் எரித்துவிடுமோ? அல்லது இந்த உலகத்தையே சுட்டெரிக்கப் போகிறதா? வேறு யாரை எல்லாம் இது நீறு ஆக்குமோ? எனக்குத் தெரியவில்லை' என்கிறாள் தோழிகளிடம்.

இந்தப் பாடலைத் தான் கேட்டு ரசித்த அனுபத்தை டாக்டர் உ.வே.சா அவர்கள் ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார். ஒரு நாள் இரவு சாப்பிட்ட பின் வீட்டு மொட்டை மாடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார். திடீரென்று இரவின் நிசப்தத்தைக் கலைத்து ஒரு உருக்கமான பாடல் வரி கேட்கிறது. 'ஊரைச் சுடுமோ........உலகந்தனைச் சுடுமோ...... ஆரைச் சுடுமோ?......அறியேனே.......' என்று அந்தக் குரல் உருக்குகிறது. உ.வே.சா நிமிர்ந்து உட்காருகிறார். மீண்டும் அதே உருக்கமான பாடல் வரி அவரை சிலிர்ப்படையச் செய்கிறது. எழுந்து நடந்து போய் தெருவை எட்டிப் பார்க்கிறார். பாலெனப் பொழியும் நிலவொளியில் தூத்தில் ஒரு ராப்பிச்சைக்காரன் பாடிக் கொண்டே போவது தெரிகிறது. 'மூங்கிலிலைமேலே தூங்கும்.....' என்று ஏற்றப் பாட்டில் கேட்டு மூங்கில் இலை மேலே தூங்குவது எதுவாக இருக்கக்கூடும் என்று புரியாமல் தவித்த கம்பரைப் போல, மகாவித்துவானான உ.வே.சாவுக்கு 'எது ஊரைச் சுட வல்லது? உலகத்தையே சுடப் போவது எது?' என்ற குழப்பம் உண்டாகிறது. அடுத்த வரிக்காகக் காத்திருக்கிறார். ஆனால் அந்தப் பொல்லாத பிச்சைக்காரன் அந்த ஒரு வரியையே திரும்பத் திரும்பப் பாடியபடி செல்கிறான். தமிழ்த் தாத்தாவுக்குப் பொறுக்க வ்¢ல்லை. பரபரப்புடன் படியிறங்கி அவனைத் தொடர்ந்து போய் பாட்டு முழுவதையும்கேட்டுவிடத் துடிக்கிறார்.

ஆனால் எத்தனை தெரு சுற்றி வந்தாலும் அவன் அந்த ஒரு வரிக்கு மேல் பாடுவதாய் இல்லை. பொறுமை இழந்தவராய் அவனை நெருங்கி, " அப்பனே! அந்தப் பாட்டைத் தொடர்ந்து பாடேன்" என்கிறார். "பாட்டா? பசி உயிர் போகிறது - தொடர்ந்து பாட சக்தி எங்கே இருக்கிறது?" என்று அலுத்துக் கொள்கிறான் அவன். "அவ்வளவுதானே? என் கூட வா. வயிறார சாப்பாடு போடுகிறேன். சாப்பிட்டு விட்டுப் பாடு!" என்று அழைக்கிறார். அவன் பரமானந்தத்துடன் அவருடன் போகிறான். திண்ணையில் அமர வைத்து உணவளிக்கிறார். அவன் சாப்பிட்டுத் திருப்தியாய் ஏப்பம் விட்டபின், "இப்போது முழுப் பாட்டையும் பாடு" என்று ஏதோ புதையலைப் பார்க்கப் போகிற ஆர்வத்தோடு கேட்கிறார். அவன் பாடுகிறான்:

'ஊரைச் சுடுமோ? உலகந்தனைச் சுடுமோ?
ஆரைச் சுடுமோ அறியேனே! - நேரே
பொருப்பு வட்டமான நகில் பூங்கொடியீர்! இந்த
நெருப்பு வட்டமான நிலா.'

'ஆகா! ஆகா!' என்று உருகிப் போகிறார் - ஊர் ஊராய் நடையாய் நடந்து பழந்தமிழ்ச் செலவங்களை தேடி நமக்களித்த வள்ளல்!

- மேலும் சொல்வேன்.

எனது களஞ்சியத்திலிருந்து - 2:- சீட்டுக்கவி

முற்காலத்தில் புலவர்கள் அரசவையில் மன்னரைப் புகழ்ந்து பாடி பரிசில் பெறுவார்கள். தமது தேவையை ஓலைச் சுருளில் கவி வடிவில் எழுதி அதையே கடிதமாகக் கொடுத்து அனுப்புவது வழக்கம். இதைச் சீட்டுக்கவி என்பர். மகாகவி பாரதி அவரது 15ஆம் வயதில் எட்டப்ப மன்னருக்கு தனது படிப்புக்கு உதவி கேட்டு, தனது கோரிக்கையைப் பாடலாகவே எழுதினார். அது இப்படித் தொடங்குகிறது:

"தென்னிளசை நன்னகரிற் சிங்கம் வெங்கடேசுரெட்ட
கன்னன் சுமூக சமூகம்"

என்று தலைப்பிட்டு, மன்னரின் பெருமையைப் பாடி,

"...........................................பெருவரை
விறற்றோள் மகிப! வெங்கடெசு ரெட்ட
மன்னர்தம் மன்ன! நீ மகிழ்வொடு காண்க.
இன்னணம் எளியேன் எழுதிய விண்ணப்பம்:

என்று தொடங்கி,
தமிழ் மொழியின் பெருமை, தமிழ் கற்றவர்களின் அவல நிலை, பிற மொழியான ஆங்கிலம்
கற்றவர்களின் மேலாண்மை ஆகியனவற்றைக் குறிப்பிட்டு,

"கன்ன!யான் அம்மொழி கற்கத் துணிந்தனன்
எனினும்
கைப்பொருள் அற்றான் கற்பதெவ்வகை?
பொருளான் அன்றிக் கல்வியும் வரவில;
கல்வியான் அன்றிப் பொருளும் வரவில;
முதற்கண் கல்வியே பயிறல் முறைமையாம்
அதற்குப் பொருளிலை ஆதலின் அடியேன்
வருந்தியே நின்பால் வந்தடைந்தனன்.
பெருந்திரு உடையைநின் பேரருள் உடைமையன்
மாந்தர்ப் புரத்தல் வேந்தர்தந் திருவருட்கு
இலக்கியமாதலின் எளியேற் கிந்நாள்
அரும்பொருள் உதவிநீ£ அனைத்தும் அருள்வையால்

...............................................................................
என்று வேண்டி மன்னரை வாழ்த்தி முடிக்கிறார்.

"பாரதி விடுத்த கோரிக்கயை ஏற்று எட்டையபுர மன்னர் பண உதவி செய்தாரா என்று நம்மால் அறியக் கூடவில்லை" என்று சீனி.விசுவநாதன் 'மகாகவி பாரதி வரலாறு' நூலில் குறிப் பிடுகிறார்.

பாரதிக்குப் பின் வந்த புதுமைப்பித்தனும் சீட்டுக்கவிகள் எழுதியுள்ளார். ஆனால் அவர் எழுதியது எந்த மன்னருக்கும் இல்லை. அவரது நண்பர் ரகுநாதனுக்குத்தான். மன்னருக்குத்தான் எழுத வேண்டுமா என்ன? தனக்கு வேண்டிய பொருளை வாங்கி வரும்படி ரகுநாதனுக்கு கவிதை வடிவில் எழுதினார்.

புதுமைப்பித்தனுக்கு திருநெல்வேலி லாலாக்கடை அல்வா என்றால் மிகவும் பிரியம். ரகுநாதன் திருநெல்வேலிக்குச் சென்றிருந்தபோது அல்வா வாங்கி அனுப்புவதாகச் சொல்லி விட்டுப் போனார். சில தினத்துக்குள் புதுமைப்பித்தன் திருவனந்தபுரம் செல்ல வேண்டியிருந்தது.
எனவே, தான் புறப்படும் தினத்தைக் குறிப்பிட்டு விருதுநரில் தன்னைச் சந்த்¢க்கும்படி கூறி ரகுநாதனுக்கு ஒரு கடிதம் எழுதினார். கடிதம் வெறுங் கடிதமல்ல; இரண்டு பாட்டுக்களைக் கொண்ட சீட்டுக்கவி.

''அல்வா எனச் சொல்லி
அங்கோடி விட்டாலும்
செல்வா நீ தப்ப
முடியாதே! - அல்வா
விருது நகர்க் கெடியில்
உன்னுடனே கட்டாயம்
வருது எனக் காத்திருப்பேன்
நான்.

சென்னைக்குப் பதினேழில்
சீட்டுக் கொடுத்துவிட்டு
உன்னைப் பிறகங்கே
சந்தித்து - பின்னை
ஊருக்குப் போவேன்
உறுதியாய் வா அங்கே
நேருக்கு மற்றவையப்
போ."

'ஆனால் குறிப்பிட்டபடி அவர் வரவில்லை' என்று எழுதுகிறார் ரகுநாதன்.

புதுமைப்பித்தன் கவிதைகளின் பாதிப்பால் நானும் சீட்டுக்கவி எழுதினேன். நான் ஆசிரியப் பணியேற்ற புதிதில் விருத்தாசலத்திற்கு அருகில் ஒரு கிராமத்தில் இருந்த ஒரு இலக்கிய நண்பருக்கு அடிக்கடி அங்கிருந்து தினசரி பள்ள்¢க்கு வரும் மாணவர் வசம் கடிதம் அனுப்புவேன். அந்த நண்பர் சிறந்த கவிஞர். நான் படித்த சில நூல்களைப்பற்றி கவிதையிலேயே கடிதம் அனுப்பினேன்.

"நீட்டி மடக்கி
நெடுநேரம் கருதாங்கி
பாட்டென்று ஏதோ
பண்ணிவச்சேன் - சீட்டுக்
கவிபாடும் என்று
கவியும்மைக் கொல்கின்றேன்
செவிசாய்ப்பார் வேறெனக்கு யார்?

பித்தனது பாணியிலே
பேத்தித் தொலைச்சிருக்கான்
சத்திருக்கோ என்று
சலியாதீர் - பித்துகுளிப்
பயலெல்லாம் பாட்டெழுதி
பல்லை உதிர்க்கையிலே
இயல் எழுதக் கூடாதோ
நான்?

வெண்பா இலக்கணம் ஏதும் கற்றவனல்ல நான். 'இழுக்குடைய பாட்டுக்கு இசை நன்று' என்றபடி சந்தத்தை அடிப்படையாகக் கொண்டு எதுகை மோனையோடு எழுதி அனுப்பினேன். அவர் இப்படி பதில் கவிதை எழுதினார்,

'சீட்டுக்கவி எழுதி
விட்டீர் சிறப்பாக!
பாட்டைப் பாராட்டுதலும்
வேண்டுமோ? -பாட்டைநீர்
பாடாய்ப் படுத்திய
பாட்டினைக் கண்டபேர்
ஓடாமல் நிற்பரோ
தான்'.

என்று கொஞ்சம் இடித்திருந்தார். ஆனலும் அடுத்த பாட்டில் ஆறுதலாக,

நம்மிருவர் பாட்டிலும்
நல்லோர் வகுத்திட்ட
செம்மைசால் இலக்கணம்
சிதையினும் - உண்மையில்
சித்தந்தனில் அயர்வு
கொள்ளற்க உம்கவியில்
பித்தன்தனைக் காண்கின்றேன்
நான்.' - என்று எழுதியிருந்தார்.

சிறுபிள்ளை விளையாட்டுதான்! ஆனால் அப்போது அது ஒரு உத்வேகம்! நண்பர் ஹரி போன்றவர்கள் வெகு அநாயசமாக இந்த சீட்டுக்கவி விளையாட்டை விளையாடி இருப்பார்கள்.

- மேலும் சொல்வேன்.

Tuesday, June 22, 2004

நான் ரசித்த வருணனைகள் - உவமைகள் - 24

நான் ரசித்த வருணனைகள் - உவமைகள் - 24
--------------------------------------
கு.அழகிரிசாமி படைப்புகளிலிருந்து:
=========================

1. அவள் (ஜானகி) சிரித்தால் முத்து உதிர்கிறது; நடந்தால் அங்கே செந்நெல் விளைகிறது. இருவரும் நடந்து வரும் போது மண்ணில் விழும் தடம், பூமாதேவியின் உள்ளங்கையில் அதிர்ஷ்ட ரேகை ஓடுவது போல் இருக்கிறது.

- 'திரிவேணி சங்கமம்' கதையில்.

2. அந்தப் பக்கத்து கிராமங்களுக்கெல்லாம் அந்த முத்துமாரி ஒரு தெய்வம் மட்டுமல்ல, வழக்குத் தீர்க்கும் நீதிபதியும், நோய் தீர்க்கும் வைத்தியரும், திருடனைப் பிடித்துக் கொடுக்கும் உளவதிகாரியும் கூட அவள்தான்.
- 'அக்கினிப் பிரவேசம்'.

3. அழகில்லாவிட்டாலும், ஒரு கன்னிப் பெண்ணோடு தெருவில் சிரித்துப் பேசிக் கொண்டு வருவது ஒரு சுகமான அனுபவம்...

- 'இரண்டு பெண்கள்'.

4. மனித ஜாதிக்கு தீராத நோய் ஒன்று பிடித்திருக்கிறது. மாறாத சாபம். இறங்காத விஷம். அதன் பெயர் பணம்......

- 'ஞானரதம்' நாடகத்தில்.

5. இந்த எண் சாண் உடம்பில் சப்த சமுத்திரங்களும் அலை மோதுகின்றன. பிரபஞ்ச கானத்தையே இந்தச் சின்னஞ்சிறு வீணை இசைக்க வேண்டியிருக்கிறது. தாங்க முடியாத மகாசக்திகள் இந்த உடம்பின் மன அரங்கத்தில் நவரச நடனங்களையும் ஆட முந்துகின்றன....

- 'கவிச்சக்கரவர்த்தி' நாடகத்தில்.

6. பிரம்மனுடைய சிருஷ்டியில் இந்தப் பழத்தைப் போன்ற துர்நாற்றம் மிகுந்த வேறொரு வஸ்து உலகத்திலேயே கிடையாது! அதே சமயத்தில் பிரம்ம சிருஷ்டியில் இதற்கு இணையான சுவை கொண்ட பண்டமும் கிடையாது. 'வாழ்க்கையும் இப்படித்தான் முரண்பாடுள்ளதாய்
இருக்கிறது' என்பதை டோரியன் பழம் நமக்கு உணர்த்துகிறது.

- 'நாடே ஒர் ஊர்' பயணக்கட்டுரையில்.

7. அது என்ன கிழமை, எந்த மாதம், எந்தத் தேதி என்பவையெல்லாம் எனக்கு ஞாபகமில்லை. சிறு குழந்தையாக இருந்தால், அப்பா பச்சைப் பலப்பம் வாங்கிக் கொடுத்த நாள் என்றோ, எதிர் வீட்டு ரமா ஜரிகைப் பாவாடை கட்டிக் கொண்டு வந்த நாள் என்றோ சொல்லிவிடும். இந்தச் சமயத்தில் நானும் கூட சிறுகுழந்தையைப் போல்தான் சொல்ல வேண்டியிருக்கி - ரஷ்யாக்காரன் முதல் முதலில் 'ஸ்புட்னிக்'கை விட்டதற்கு நாலைந்து நாட்கள் கழித்து என்று ஞாபகம்.

- 'கார் வாங்கிய சுந்தரம்' கதையில்.

8. இப்போது முதலியார் வீட்டில் அவர் குடும்பமும் பிள்ளைகள் குடும்பமுமாக நான்கு குடும்பங்கள் ஆகிவிட்டன. பிள்ளைகள் மூன்று ஆயுதங்கள். மனைவிமாரைச் சேர்த்து ஆறு ஆயுதங்கள். இதிலே மனைவிமார் என்ற ஆயுதங்கள் நேரடியாக முதலியார் மீது பாய்வதில்லை.
ராக்கெட்டுகள் விண்வெளிக் கோள்களை ராக்ஷஸ வேகத்தில் வெளியே தள்ளுவதைப் போல், கணவன்மாரைத் தள்ளிவிடும் கருவிகளாக இருந்தார்கள்.

- 'அபார ஞாபகம்'.

9. பிறக்கும் போதே இப்படி அறுபது வயதுக் கிழவராக, அப்பாவி மனிதராகப் பிறந்து, பிறந்த நாள்முதல் மளிகைக் கடை ஆறுமுகம்பிள்ளை வீட்டுத் திண்ணையிலேயே வசித்து வருவது போல் எல்லோருக்கும் தோன்றியது.

- 'தரிசனம்'.

10. ஏதோ ஓர் அரண்மனையில் சிறிது நேரத்தில் நடக்கப் போகும் மங்கள காரியத்தை எக்காளம் ஊதி அறிவிப்பது மாதிரி, உல்லாசத்தும் அங்குரார்ப்பண கோலாகலத்துக்கும், அடையாளம் போல களியாட்டமாடும் அந்த மோகன ராகத்தை, அன்று அந்த மாலை நேரத்தில் அனுபவித்த அனுபவமே தனி. சிறிது நேரம் பொன்னூசலாடி மகிழ்வது, சிறிது நேரம் யாரையோ மறைமுகமாகக் கேலி செய்து விட்டு முகத்தைத் திருப்புவது.......

- 'மீனா'.

- தொடர்வேன்.

- அடுத்து நா.பா வின் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

நினைவுத் தடங்கள் - 19

சிறு வயது முதலே எனக்கு ஓவியத்தில் நாட்டமிருந்தது. ரசனை போலவெ இதுவும் பயிற்சியால் அடையமுடியும் என்றாலும் இயல்பாகவே அமைவது ஒரு கொடுப்பினைதான். எனக்கு அந்தக் கொடுப்பினை இருந்தது. பிள்ளைப் பிராயத்தில், மாலை நேரத்து வானில் மிதக்கும் பஞ்சுப் பொதி போன்ற மேகங்களில் எனக்கு யானையும் குதிரையும் தேரும் தெரிந்- தன. சாக்கட்டி கிடைத்தால் தரையில் சின்னச் சின்னதாக ஏதாவது வரைந்து கொண்டிருப்- பேன். அப்போதைய பூட்பாலிஷ் டப்பாவின் (Cobra) மேல் இருந்த - மண்டலமிட்டபடி தலையுயர்த்தி கம்பீரமாய் குத்திட்டு நின்று பிளந்த நாக்கை நீட்டிச் சீறும் நல்ல பாம்பை நான் முதன் முதலில் வரைந்தது நினைவில் நிற்கிறது. வரலாற்றுப் பாடப் புத்தகத்திலிருந்த சிவாஜியும், அக்பரும், பாபரும், தாஜ்மஹாலும் என்னை வரையத் தூண்டின. இத் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்டபடி எங்களூர் தச்சாசாரி ஒரு சிற்பக் கலைஞர். அவர் மரத்தில் சிற்பங்கள் செய்யும் போதும் அவற்றிற்கு வண்ணங்கள் தீட்டும் போதும் மிக ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருப்பேன். அவரது மகன் என்னை விட பத்து வயது மூத்தவர் - அவரும் தந்தையைப் பார்த்து மரத்திலும் சுதையிலும் சிற்பங்கள் செய்வார். ஊர் முழுக்க ஒரு திண்ணை விடாது, பென்சில் ஓவியங்களை - நீர்வீழ்ச்சி, ஓடைகள் போன்று இயற்கைக் காட்சிகள் என்று வரைந்தாலும் அதிகமும் சாமி படங்களே- மயில் மீது அமர்ந்திருக்கும் முருகன், மயிலுடன் நிற்கும் குழந்தை முருகன், குழல் ஊதும் கண்ணன் தலையில் மயிலிறகோடு, தாமரையில் அமர்ந்திருக்கும் லட்சுமி என்று ரவிவர்மா பாணியில் வரைந்தபடியே இருப்பார். வீட்டுக் காரர்கள் யாரும் ஆட்சேபித்தலில்லை. மாறாக அழைத்து போட ஊக்கமளித்த¨ர். எப்போதும் அவரது காதில் கூர் சீவிய நீளமான பென்சில் அமர்ந்திருக்கும். அந்தப் பென்சிலை அவர் உளியால் சீவுவது முதற்கொண்டு அருகில் இருந்து பார்த்துக் கொண்டிருப்பேன். என் ஆர்வத்தைக் கண்டு அவர் என்னையும் அதே திண்ணைப் பக்கத்தில் அவரது ஓவியத்தைப் பார்த்து வரையச் சொல்லுவார். ஆங்காங்கே திருத்தமும் செய்து வழி காட்டுவார். அவரது ஓவியம் எதிலும் கண்கள் மட்டும் பூர்த்தி செய்யப் படாமலிருக்கும். கடைசியாகத்தான் கண்களைத் திறக்க வேண்டும் என்பார். ஆனால் அந்தக் 'கடைசி' ஒருபோதும் வந்ததில்லை. எனக்கு நினைவு தெரிந்து பிறகு எந்த நாளிலும் எந்த ஓவியத்துக்கும் கண் திறக்கப் பட்டதில்லை.

பள்ளியில் படித்த காலங்களில், ஓவிய வகுப்பு என்று தனியாக இருந்தும் அவ்வகுப்புகளில் ஏதும் கற்றதில்லை. துர்அதிர்ஷ்ட வசமாக எனக்கு வாய்த்த ஓவிய ஆசிரியர்கள் - மாணவனாக இருந்தபோதும் சரி, தலைமை ஆசிரியராகப் பணியாற்றியபோதும் சரி - எல்லோரும் பஞ்சத்துக்கு ஆண்டியாக - வயிற்றுப் பிழைப்புக்காக அரைகுறைப் படிப்புடன் அரசு நடத்தும் ஆறுமாத ஓவிய சான்று பெற்று வந்தவர்களாகவே இருந்தார்கள். மாணவர்களை விழி உயர்த்தி பிரமிக்க வைக்கும் லட்சியமோ அர்ப்பணிப்போ அவர்களிடம் நான் கண்டதில்லை. பள்ளி இறுதி வகுப்பில் தவறியவர்கள் எல்லோரும் அநேகமாக - அப்போது ஹையர்கிரேட் ஆசிரியர்களா கவோ, ஓவிய ஆசிரியர்களாகவோ, நெசவு ஆசிரியர்களாகவோ, லோயர்கிரேட் உடற்பயிற்சி ஆசிரியர்களாகவோ பயிற்சி எடுத்துக் கொண்டு வந்து- கொஞ்சமும் அக்கலைகளில் ஆர்வமற்ற வர்களாய் பள்ளிகளில் அமர்ந்து மாணவர்களது கழுத்தை அறுப்பவர்களாக பிழைப்பை ஓட்டினார் கள். இன்றும் அந்த நிலைமையில் ஏதும் மாற்றமில்லை. எட்டாம் வகுப்பில் எனக்கு வந்த ஓவிய ஆசிரியர் உடற்கல்விக்கும் ஆசிரியர். அந்தக் காலக்கட்டத்தில் அப்படி ஒரு இரட்டைப் பயிற்சி பெற்றிருந்த ஆசிரியர்கள் நியமிக்கப் பட்டனர். அது ஒரு வகையில் தேவலை. பாட வேளை அதிகம் இல்லாமல்
இரண்டு ஆசிரியர்கள் சோம்பலாய் பொழுதைக் கழிக்காமல் ஒருவரோடு போயிற்று. அரசாங்கத்துக்கும் லாபம். இப்போது ஒவ்வொன்றிற்கும் தனித்தனி ஆசிரியர். வகுப்பறைக்குப் பெயர் எழுதச் சொன்னால் கூட 'எனக்கு அழகாக எழுத வராது ஐயா' என்று நழுவும் கபட்டுப் பசுக்களையே என் பணிக்காலத்தில் பார்த்திருக்கிறேன். கொஞ்சம் யதார்த்தமாக சிந்திக்கிற தலைமை ஆசிரியர்கள் அவர்களிடம் கோபிப்பதில் லாபமில்லை என்று அவர்களை அலுவலக வேலைகளுக்கு பயன்படுத்திக் கொள்வார்கள். எனக்கு ஓவிய ஆசிரியரைக் கொண்டு பள்ளிச் சுவர்களில் தேசப் படங்கள், இயற்கைக் காட்சிகள் என்று வரைந்து பிள்ளைகளுக்கு கலையுணர்ச்சியைத் தூண்டும் ஆசை இருந்தும் அது நிறைவேறி¢யதில்லை.

நான் படிக்கும்போதே சில்பி, மாலி, கோபுலு போன்றோரின் கோட்டோவியங்களில் மனதைப் பறி கொடுத்து அவர்களைப் போலவே கார்ட்டூன்களும், காரிகேச்சர்களும் வரையப் பழகியிருந்தேன். அதனால் நான் ஆசிரியராகப்பணி செய்த காலங்களில் பள்ளி இலக்கிய மன்றத்துக்கு பேச வந்த பெரியவர்களை ஒரு ஆட்டொகிராப் நோட்டில் அப்படியே அவர்களைப் பார்த்து பென்சிலால் வரைந்து அவர்களிடம் ஆட்டொகிராப் வாங்கியிருக்கிறேன். அதை இன்றும் நினைவு கூர்கிற என் பழைய மாணவர்கள் உண்டு. அப்படி வரைந்த போது சில
சுவையான அனுபவங்களும் கிட்டியதுண்டு.

குன்றக்குடி அடிகளார், மயிலை சிவமுத்து, கி.வா.ஜ, தேவநேய பாவாணர், உலகஊழியனார், திருக்குறள் முனுசாமி போன்ற இலக்கியவாதிகளும் அண்ணாத்துரை, நெடுஞ்செழியன், புலவர் கோவிந்தன் போன்ற அரசியல்வாதிகளும் என் ஓவிய ஆல்பத்திலிருக்கிறார்கள். கி.வா.ஜ 'கலையால் காலத்தைக் கொல்லலாம்' என்று எழுதிக் கையொப்பமிட்டார். உலகஊழியனார் எதிரே மேடையருகில் அமர்ந்து நான் வரைந்ததைக் கண்ணுற்றவர், நான் கூட்டமுடிவில் அணுகி அவரது சித்திரத்தைக் காட்டி ஒப்பம் கேட்டபோது, 'ஐயா, தாங்கள் என்ன பணி செய்கிறீர்கள்?' என்று கேட்டார். 'இப்பள்ளியில் கணித ஆசிரியராகப் பணி செய்கிறேன்' என்று சொன்னேன். 'அப்படியா! நான் பத்திரிகை நிருபரோ என்று உடையைப் பார்த்து எண்ணினேன்' என்று நான் கோட் சூட்டில் இருந்ததைக் குறிப்பிட்டுச் சொன்னவர் அப்படியேமேடையிலேயே என்னைத் தழுவிக் கொண்டார். 'ஓவியம் உணர்ந்தவர் இறையெனக் கருதப் படுபவர்' என்று எழுதிக் கையொப்பமிட்டார். அவ்வளவு பெரிய அறிஞரின் அந்தப் பாராட்டு இன்றும் மெய் சிலிர்க்க வைக்கிறது. 'ஐயா, நீங்கள் தியானம் செய்தால் சுலபமாக வருமே!' என்றார். 'எப்படி ஐயா?' என்று விளக்கம் கேட்டேன். 'ஓர் உருவைப் பார்த்து நினைவில் இருத்திப் பின் அதனை அப்படியே தாளில் பதிப்பது மனம் ஒருமைப் பட்டவர்க்கே சாத்தியம். உங்களுக்கு அது கைவந்திருப்பதால் மனதை ஒருமுகப் படுத்தும் தியானக் கலை சுலபம்' என்றார்.

இப்படி பெரியவர்களை வரைந்து ஒப்பம் பெற்றது போலவே எங்கள் பள்ளிக்கு பார்வையிட வரும் அதிகாரிகளையும் வரைந்து ஒப்பம் பெறுவதுண்டு. அதைப் பாராட்டியவர்களும் உண்டு, கடுப்படித்தவர்களும் உண்டு. முதன்மைக்கல்வி அதிகாரியான ஒரு அம்மையாரை நான் தலைமை ஆசிரியராக இருந்தபோது எங்கள் பள்ளிவ்¢ழாவின் போது வரைந்து காட்டியபோது அவரது உயர்ந்த பதவியையும் மறந்து, வியந்து மனமாரப் பாராட்டினார். அதன் பிறகு போகிற பள்ளியிலெல்லாம் ஓவிய ஆசிரியர்களையெல்லாம் 'அங்க பாரய்யா, ஒரு தலைமை ஆசிரியர் என்னைப் பார்த்து அப்படியே வரைந்து விட்டார். நீர் போட்டால் கீழே பெயர் எழுத வேண்டியிருக்குமோ?' என்று சீண்டியிருக்கிறார். அதற்கு மாறாக இன்னொரு முதன்மைக் கல்வி அதிகாரி- ஓய்வு பெறும் நிலையில் இருந்தவர்- முகமெல்லாம்ம் காலத்தின் முத்திரைகள்
கோடுகளாய்ப் பதிந்திருக்க அப்படியே நான் அதனைப் பதிவு செய்திருப்பதைப் பார்த்து முகம் சுள்¢த்தவராய் 'போய்யா! இது என்னை மாதிரியே இல்லை! இவ்வளவு வயதானவனாகவா நான் இருக்கிறேன்?' என்று முரண்டி கையொப்பமிட மறுத்துவிட்டார். அதுவும் ஒரு பாராட்டு என்று கொள்வதைத் தவிர வேறு என்ன செய்வது?

- தொடர்வேன்.

Wednesday, June 02, 2004

நான் ரசித்த வருணனைகள்-உவமைகள் -23.

'மௌனி' யின் படைப்புகளிலிருந்து:

1. நாம் சாயைகள் தானா? எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்?

- 'அழியாச்சுடர்' கதையில்.

2. விட்டில் பூச்சிகள் போன்று விளக்கை வட்டமிட்டே அழிவதுதானா ஆடவர் வாழ்க்கை?

- 'சாவில் பிறந்த சிருஷ்டி'.

3. அந்த இருள் வெளியில் கலகலவென நகைத்ததென ஒரு சப்தம் கேட்க, ஒளிகொண்ட
ஏதோ ஒன்று உருவாகி எட்டிய வெளியில் மிதந்துசென்றது.

- 'மனக்கோலம்'.

4. காலத்தைக் கையைப் பிடித்து நிறுத்திக் கனிந்த காதலுடன் தழுவினாலும் , அது நகர்ந்து
சென்று கொண்டேதான் இருக்கும்.

- 'பிரபஞ்ச கானம்'.

5. ஹிருதயத்தின் சங்கீத ஒலி சப்தமின்றி வெள்¢வியாபகம் கொள்ளும் என்ற நினைப்பினால்,
அதை விடாது பிடித்து விரல் நுனி வழியே பிடில் தந்திகளிலே ஏற்றி நாதரூபமாக்கச் சிரமப்-
பட்டான். நீல வானத்தை அணுகி மறைந்த சூரிய ஒளியில் சலிக்கும் அனேக வித வர்ண
மேகங்களைத்தான் கட்டி நின்றன அவன் பிடித்த ஸ்வரக் கற்பனைகள். உயரே பறந்து
மறைந்தும், காதில் இனிக்கக் கூவும் இன்னிசைப் பறவைகளே போன்று அவன் கீதம் சபை
-யோர்களைப் பரவசமாக்கியது.

- 'நினைவுச் சூழல்'.

6. தன்னைப் போன்றே திகைத்து வீதி மரங்களும் நகரமுடியாது நின்றிருப்பதை சேகரன்
பார்த்தான். லேசாக மரங்கள் காற்றில் அசையும்போது. அதன் தலையிலிருந்து பூக்கள்
பொலபொலவென்று உதிருவது வெகு விநோதமாகத் தெரிந்தது. எதிர் பங்களாவிலிருந்து
நாய் குரைப்பு சத்தம் கேட்டது. எதிரொலியில் அப் பங்களாவே நாயெனக் குரைப்பது
போலிருந்தது.

- 'பிரக்ஞை வெளியில்'.

7. ஒரு சோகமான கீதம் அவன் பாடிக் கொண்டிருந்தான். என் உணர்வை உயர்த்தி கனவிற்-
கும், நனவிற்கும் உள்ள நுண்ணிய எல்லைக் கோட்டை துடைக்கவல்ல அவனுடைய கானம்,
சாதாரணமானதல்ல.

- 'எங்கிருந்தோ வந்தான்'.

8. எதிரில் மரங்கள் வெளிச்சத் திரையின் முன்பு, கருப்புருவங்கொண்டு தெரியலாயின.வெளிச்சம்
கண்ட வெகு தூரத்தை உன்னிப்பாய்க் கவனித்தால் அன்று மிகச் சோதி கொண்டது போன்ற
காலைச் சூரியன் உதயமாவதைக் காணக் கண் கூசியது. மேலே அண்ணாந்து பார்க்கும்
போதும் ஒரே வெளிச்சத் தோற்றமேயன்றி தனித்தோற்றம் ஒன்றும் காணக்கூடவில்லை.

- 'கொஞ்ச தூரம்'.

9. விரல்களின்றியும் வீணையில் சங்கீதம் வியாபகம் கொள்ளும் போலும். சுருதி, விலகி எட்டியா
நின்று இடைவிடாது முணுமுணுக்கிறது! சப்தத்திலிருந்து சங்கீதம் விடுதலை பெற்று எட்டிய
வெளியில் மௌனமான வியாபகம் கொள்கிறது. சுவர்க் கோழிகள் இடைவிடாது புலம்புகின்
றன. அவன் மனவெளி இருளில் ஒன்றி நின்று ஒன்று அந்தப் பக்கம் சுட்டிக்காட்ட மனம்
அச்சம் கொள்கிறது. மௌனமாக இருந்து அந்த அறையில் நிலைத்து நிற்பது தன்னை
மறந்த பிறிதொன்று புறவெளியில் சஞ்சரிப்பதான எண்ணத்தைக் கொடுத்தது. அவன்
அப்போது அவள் எண்ணத்தில் லயித்து இருந்தான்.

- 'மனக்கோலம்'.

10. பிரபஞ்ச வெளியில் கட்டுப்பாடின்றித் திரியும் பறவை போன்ற ஞான உணர்வைப் பிடித்துக்
கூண்டில் அடைத்ததுதான் அந்தக் காவியம். சாசுவதானந்தத்தை வாக்கியத்தில் புதைத்துக்
கொண்டு களிப்பதில், கலைஞர்கள் கடவுளுடைய சிருஷ்டி ஆனந்தத்திற்கு ஒப்பானதை
உணர்கிறார்கள் போலும். எவ்வகை சிருஷ்டியும் அழிவிற்கு விரைந்து செல்வதாயினும்,
அழிவின்றித்தான் அவர்கள் மனதில் அக்கண ஆனந்தம் பரவுகிறது.

- 'மாபெருங்காவியம்'.

- தொடர்வேன்.

- அடுத்து கு.அழகிரிசாமி ய்¢ன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்.

V .Sabanayagam