Monday, January 28, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..........14 வண்ணநிலவன் - 'கடல்புரத்தில்’




          சொல்லுகிறதுக்கு எவ்வளவோ இருக்கிறது. ஓரத்தில் ஒதுங்கி நின்று எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்துப் பார்த்து இன்னும் அலுக்கவில்லை. எல்லோரையும் போலத்தான், ‘இந்த வாழ்க்கையில் ஏதோ இருக்கிறது என்று தேடிப் போய்க் கொண்டிருக்கிறேன். நான் எழுதவென்று ஆரம்பித்து, ‘இவனும் ஏதோ சொல்லுகிறானே என்ற ஒரு நிலையும் ஏற்பட்டுப்போயிருக்கிறது

எல்லாம் பெரிய விஷயங்கள்தான்; எல்லோரும் உயர்வானவர்கள் தான். மனிதர்களுக்கு அன்பு எனகிற பெரிய வஸ்து அளிக்கப்பட்டிருக் கிறது. மனிதனை நெருங்குகிறதுக்கு எவ்விதத் தடையுமில்லை. எவ்வளவோ இழந்தாலும் பெறுகிறதுக்கும் ஏதாவது இருந்து கொண்டே தான் இருக்கிறதென்று நினைக்கிறேன். ஸ்ரீ சுந்தர ராமசாமி சொன்னது மாதிரி, ‘எதையாவது இழந்துதான் எதையாவது பெறுகிறோம் என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்படுகிறது.

நானும் எழுதுகிறவர்களில் ஒருத்தனென்று ஆகிப்போனதால், இலக்கியத்தைப் பற்றி மனம்விட்டுப் பேசுகிறேன். 

     கலை, மனம் சம்பந்தப்பட்டது; ரசனை பூர்வமானது. உண்மையோடு நெருங்கிய சமந்தமுள்ளது. நல்ல கலைஞன் ஜனங்களிடம் பொய் சொல்ல மாட்டான். கலைக்குப்பொய் ஆகாது.

இந்தக்கதையைப்பற்றி நான் சொல்ல வேணுமே?

     இந்தக் கதையில் வருகிற மணப்பாட்டு ஊர்க்கார்ர்களை நினைத்தால் வெகு வியப்பாய் இருக்கிறது. மனத்தில் அன்பிருந்தால் பேசுகிற சொற்கள் மந்திரம் போலாகும். மணப்பாட்டு ஜனங்கள் பேசுகிறது தேவபாஷையாகத்தான் எனக்குப் படுகிறது. கொலை செய்தார்கள்; ஸ்நேகிதனை வஞ்சித்தார்கள்; மனைவி, புருஷனுக்குத் துரோகம் நினைத்தாள். சண்டையும் நடந்தது. ஆனாலும் எல்லோரிடமும் பிரியமாக இருக்கவும் தெரிந்திருந்தது அவர்களுக்கு.

     மனம் உய்ய வேண்டும்; இதற்குத்தான் இலக்கியம் உதவும். மனத்தை உய்விக்கிற இலக்கியத்தை, எப்போதாவது ‘அன்புவழியைப் போன்ற ஒரு நாவலை எழுதிவிட முடியுமென்று நினைத்துத்தான் எழுதிப் .போகிறேன்.

சென்னை                      உங்களுடைய,  
31-1-1977                      வண்ணநிலவன்                                                                                                            


  
 

                                                                           

Monday, January 21, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..........13 கி.ராஜநாராயணன்- ‘கரிசல் காட்டுக் கடுதாசி’



                ரு கலந்துரையாடலின்போது ஒருத்தர் என்னிடம் கேட்டார்., “உங்க புத்தகங்களின் தலைப்புகள் ‘க எழுத்து வரிசையைக் கொண்டிருக்கிறதே உங்களுக்கு அப்படி ஒரு ‘சென்டிமென்ட் உண்டா? என்று!

     பெயர்கள் சில வேளைகளில் இப்படித் தானாக வந்து அமைந்து கொள்கிறது எனபதுதான் சுவாரஸ்யம்.

     இந்தக் கட்டுரைகளில் கற்பனை இல்லை, இவைகளில் சிலது மட்டும், பரிமளிக்கம் பண்ணுவதற்காக எழுதப் பட்டவைகளில் கொஞ்சம் ‘கதை உண்டு, மற்றபடி அனைத்தும் நடப்புத்தான்.

     கட்டுரை என்றால் ஞாயப்படி ஒரு மாற்றமும் செய்யாம நூத்துக்கு நூறு – பெயர்கள் உட்பட – அப்படியேதானே சொல்ல வேண்டும்? ஆனால் இதில்த்தான் இருக்கிறது சிக்கல்! கிராமத்து மக்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு எழுத்தாளனுக்கு, துல்லியமக அப்படியெல்லாம் ரோமத்தை ரண்டாகக் கீறிக்காட்டுவது போல செய்து காட்டமுடியாது.

            கதை என்று எழதினாலே, ‘யாரை வைத்து இது எழுதப்பட்டது என்று ஆராய்ச்சி நடக்கும்போது, கட்டுரை என்றால் எவ்வளவு சிரமம் என்பது தெரிந்தவர்களுக்குத்தான் தெரியும், ஆவலாதி வராமல் எழுதித் தொலைக்கணும்; தலையும் நனையாமல் சாஸ்திரமும் பொய்யாகாமல்க் குளிக்கணும்.

     நான் எழுதுகிறேன் எனபதே ரொம்ப நாட்களுக்கு இங்கே யாருக்குமே தெரியாமல் இருந்தது. கொஞ்சம் பிரபலம் ஆக ஆக, ரொம்ப தூரத்திலிருந் தெல்லாம் ஆட்கள் தேடிக்கொண்டு வரவர, சந்தேகம் பலப்பட்டுப் போச்சு, கிராமம் என்பது ரொம்பச் சின்ன வட்டம் தும்மினாலே ஊர் பூராவும் கேட்கும்!

     இதுக்குப்பிறகு என் சொந்தக்காரர்களே, “ஏம்பா.... நீ என்னமோ எழுதியிருக்கியாமெ; கொஞ்சம் கொடேன் படிச்சிப் பாக்கட்டும்... என்று வந்து கேட்க ஆரம்பித்தார்கள்.; நடோடிக்கதைகள் புத்தகத்தைத் தருவேன். அநேகமாய் அது திரும்பி வராது.

     அடுத்தபடியாக வந்து கேட்கிறவர்களுக்கு, ‘ இன்னார் வாங்கிக் கொண்டு போயிருக்கார்; கொண்டு வந்து தரட்டும் கொடுக்கிறேன் என்பேன்! இப்படிக் கொஞ்சநாள் வழுக்கிக்கொண்டிருந்தேன். மனசாரப புஸ்த்தகத்தை விலை கொடுத்து யார் வாங்கிப் படிக்கப் போகிறார்கள்!!

     ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றியுள்ள விஷயங்களை அப்படியே எழுத வேண்டும் என்ற லேசாகச் சொல்லி விடுவார்கள். அதிலுள்ள சீண்ரங்கள் அவர்களுக்குப் புரியாது. ஆனால் நாங்கள் அதை எழுதாமலும் இல்லை; எழுதவுமில்லை!

     எப்பவாவது நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும் போது சில நடப்புகளைச் சொல்லுவேன். ‘என்னது இப்படியும் நடக்குமா என்று கேட்டுச் சிரிப்பார்கள்.

     “..... கரிசல் கடுதாசிகள் ஒரு புதி உலகை தமிழர்களுக்குக் காட்டிக்கொண்டு வருகின்றன. கரிசல்க்காடு ஒரு விந்தை உலகமாக இருக்கிறது. தோண்டத்தோண்ட அந்த மண்ணிலிருந்து என்னென்னவோ கிடைக்கின்றன..’’
என்று கடிதத்தில் எழுதியிருக்கிறார் ரசிகமணியின் பேரன் தீப.நடராஜன் அவர்கள். உண்மைதான்; தோண்டத்தோண்ட வந்துகொண்டுதானிருக்கிறது!

இடைச்செவல்                    கி.ராஜநாராயணன்
13 – 3 - 88

Monday, January 14, 2013

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து..........12 .க.நா.சுப்ரமண்யம் – ‘இலக்கிய விசாரம்’




     லக்கிய விசாரம் என்பது சற்றுக் கனமான விஷயம்தான். அதைச் சுவைபடச் செய்ய வேண்டிய அவசியம் ஆரம்பத்தில் இன்றுள்ள நிலையில் உண்டு. கதைகள், நாவல்கள், நாடகங்கள் என்று எழுதும் ஆசிரியன் வாசகனை நினைத்துக்கொண்டு எழுதக்கூடாது. என்கிற கட்சியைச் சேர்ந்தவன் நான். எழுதி முடித்த பிறகு வாசகன் வரலாமே தவிர, அதற்கு முன் இலக்கியாசிரியன் முன் அவன் வரக்கூடாது; வந்தால் அவன் எழுத்துத் தரம் குறைகிறது. ஆனால் இலக்கிய விசாரம் செய்யும்போது மட்டும் எந்த இலக்கியாசிரியனும் வாசகனை மனத்தில் வைத்துக் கொண்டுதான் செய்தாக வேண்டும். இப்படிச் செய்கிற இலக்கிய விசாரத்தை ஒரு லக்ஷிய விசாரகனுக்கும் வாசகனுக்கும் நடக்கிற சம்பாஷணை  உருவத்திலே செய்தால் நன்றாக வருமே என்று எனக்குப் பல நாட்களாகவே ஒரு நினைப்பு.

     ஜியார்ஜ் மூர் என்கிற ஆங்கில இலக்கியாசிரியர் Conversations in Ebury Street என்று லேசாக ஆங்கிலச் சம்பாஷணைகள் மூலம் இலக்கிய விசாரம் செய்து பார்த்திருக்கிறார். அதைப் படிக்கும்போது, அதேமாதிரி நானும் செய்து பார்க்கலாமே என்று எனக்குத் தோன்றியதுண்டு. நண்பர் புதுமைப்பித்தன் பதிப்பித்த ‘தினமணி ஆண்டு மலரிலே இலக்கியச் சோலை என்று ஒரு சம்பாஷணை எழுதினேன். அது திருப்திகரமாகவே அமைந்தது. ஒரே நோக்கை மட்டும் எடுத்துச் சொல்லாமல், எதிர்க் கட்சியையையும் கூடியமட்டும் எடுத்துச் சொல்லிவிட முடிகிறது எனபது இந்த சம்பாஷணை உருவத்தில் ஒரு வசதி. அதேபோலப் பல வருஷங்களுக்குப் பிறகு பாரதியாரைப்பற்றி என்று பி.ஸ்ரீ.ஆசாரியா அப்போது நடத்திக் கொண்டிருந்த ‘லோகோபகாரி யில் ஒரு சம்பாஷணை எழுதினேன். அதுவும் எனக்குத் திருப்திகரமாகவே வந்தது.

     இந்த இலக்கிய விசாரம் என்கிற விஷயத்தைச் சம்பாஷணை உருவத்தில் நான் 1945, 1946ல் திட்டமிட்டேன். உலக இலக்கியம் பூராவும் சுற்றி வரவும், கனமான விஷயங்களை லேசாகச் சொல்லவும், அவசியமானபோது பேச்சு விஷயத்துக்குத் திருப்பம் தரவும் சம்பாஷணை உருவம் மிகவும் லாயக்கானது என்பது இதை எழுதிய பிறகு எனக்கே முன்னைவிட அதிகத் தீர்மானமாயிற்று. இந்த உருவத்திலே தொடர்ந்து இலக்கிய விசாரத்தைச் செய்து வர நான் உத்தேசித்திருக்கிறேன்.

     எந்த மொழியிலுமே இலக்கிய விசாரத்தின் ஆரம்ப காலத்திலே சில சிரமங்கள் உண்டு. சில வார்த்தைகளை நாம் எந்த அர்த்தத்தில் உபயோகிக்கிறோம் என்பது வாசகனுக்குத் தெளிவாகாத விஷயமாக இருக்கிறது. பழக்கத்தால் தான் அதை அவன் அறிந்து கொள்ள முடியும். வேதாந்தம், சைவ சித்தாந்தம் போன்ற துறைகளில் உள்ளதுபோல இலக்கிய விசார உலகமும் சங்கேத வார்த்தைகள் நிரம்பியது. நம்மிடையே தமிழ் இலக்கிய விசாரம் செய்ய ஆரம்ப்பிப்பவர்கள் மேலை நாடுகளில், முக்கியமாக ஆங்கிலம் வழங்கும் பிரதேசத்தில், உபயோகமாகும் Stream of Conciousness  சங்கேத வார்த்தைகளை அப்படியே மொழிபெயர்த்து உபயோகித்து விடுகிறார்கள். ஆங்கில, பிறமொழி சங்கேத வார்த்தைகள் எதுவும் வராமல் விமர்சனம் செய்ய வேண்டும் – தமிழுக்கு என்று தனியாக இலக்கிய விசார சங்கேதங்கள் ஏற்படும் வரையில் என்பது என் அபிப்பிராயம். இல்லாவிட்டால் தமிழ் இலக்கிய விசாரம் ஆங்கில, ஐரோப்பிய இலக்கிய விசாரத்தின் நிழலாகவே இருக்கும்; தனி உருவம் பெறாது.  

     இந்த வழக்குக்குப் பண்டிதர்கள்தான் முதல் பலியாகிறார்கள் – ஒரு பண்டிதர் lyric ன்கிற ஆங்கில சங்கேத பதத்திற்குத் தமிழ் அர்த்தம் தருவதற்காகப் படாதபாடு படுகிறார். வேறு ஒருவர் நனவோடை இலக்கியம் என்று Stream of Conciousness என்கிற ஒரு இலக்கிய நாவல் உக்தியை ஒரு இலக்கியமாகவே நினைத்துக் கட்டுரை எழுதுகிறார். இதிலே Conciousness என்பதே ஒரு தனிச் சாஸ்திரத்தின் தனிச் சங்கேதம். இலக்கியத்துக்கு வரும்போது அது எப்படி எப்படியோ மாறுகிறது. நமது பேராசிரியர் எழுதுவதற்கும், Stream of Conciousness என்று மேலைநாட்டார் சொல்வதற்கும் ஸ்நானப் பிராப்தி கூடக் கிடையாது என்பது வெளிப்படை விஷயம் தெரிந்தவர்களுக்கு.

     இப்படியெல்லாம் இலக்கிய விசாரத்தை வளரவிடக்கூடாது. தமிழில் சிறுகதையும், நாவலும் இன்று தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை உள்ளவன் நான். இலக்கிய விமர்சனமும் தமிழ் உருவம் பெற வேண்டும் என்கிற ஆசை நிறவேற இலக்கிய விசாரம் என்கிற இச்சிறு நூல் நான் கட்டுகிற முதல் படி.


திருவல்லிக்கேணி    க. நா. சுப்ரமண்யம்.
  10-8-58           

Monday, January 07, 2013

நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து....11. கல்கி - விந்தனின் 'முல்லைக்கொடியாள்'

விந்தன் கதைகளைப் படிப்பதென்றால் எனக்கு
எப்போதும் மனதிலே பயம் உண்டாகும். 
படித்தால்,மனதில் என்னென்ன விதமான
சங்கடங்கள்உருவாகுமோ. எப்படிப்பட்ட  
வேதனைகளுக்குஆளாக நேருமோ 
என்ற பயம்!

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் சிறிய கதைகளும்

பெரிய கதைகளும் பெரும்பாலும் ஒரு 
சாதியாரைப்பற்றியே வந்து கொண்டிருந்தன. 
எழுதுகிறவர்களும் படிக்கிறவர்களும் 
பிராமணர்களாக இருந்தபடியால் அந்தச் 
சாதியாரைப் பற்றியே கதைகள்  
எழுதப்பட்டன.அந்தக் கதைகளில் 
கையாளப்பட்ட தமிழ் நடை, பிராமணர்கள்
குடும்பங்களில் வழங்கும் தமிழாகவே இருந்தது.

மற்ற சாதிக்காரர்கள் அதிகமானபோது

பிராமணக் கதை, பிராமணத் தமிழ் 
ஆகியவற்றைக் குறித்து வாசகர்களிடையே 
புகார்கள் எழுந்தன.

இதன்பேரில், மற்ற சாதியாரை பற்றிய கதைகள்

பல வரத் தொடங்கின. பிராமண எழுத்தாளர்கள்
கஷ்டப்பட்டு வேறு சாதியாரைப் பற்றிக் கதைகள்
எழுதும்போது அவர்கள் வர்ணிக்கும் நடை உடை
பாவனைகள் அவ்வளவு சரியாயிருப்பதில்லை

மிகச்சிரமம் எடுத்துகொண்டு எழுதினாலும்
சில சமயம் 'ராபனா என்று குட்டை
உடைக்கும்படியான தவறுகள் நேர்ந்துவிடும்.
இன்னொரு அபாயமும் அதில்
ஏற்படுவதாயிற்று.

கதை என்றால், அதில் நல்ல பாத்திரங்களும்
வருவார்கள்; துஷ்டப் பாத்திரங்களும் வருவார்கள்.
பிராமணர்களைப் பற்றி யார் என்ன எழுதினாலும்

அதைப் பற்றிச் சாதாரணமாக ஆட்சேபம்
எழுவதில்லை.அவர்களை என்ன பாடுபடுத்தி
எப்படி வதைத்தாலும் கேள்வி முறையிராது.
ஒரு பிராமண கதாபாத்திரத்தைத் தலை
மொட்டையடித்துக் கழுதை மேலேற்றி வைத்து
ஊர்வலம் விட்டால், கதை படிப்பவர்களில் சிலர்
அருவருப்படைவார்கள்; சிலர் சிரிப்பார்கள். 

ஆனால் யாரும் சண்டைக்கு வரமாட்டார்கள்.

ஆனால் ஓரு செங்குந்தரையோ, ஒரு வன்னிய
குலத்தவரையோ, ஒரு அரிசன சகோதரரையோ

கதையில் பொல்லாதவனாகச் செய்திருந்தாலும்
வந்தது மோசம்; அந்தக் குலத்தைச் சேர்ந்தவர்கள்
கதையைப் படிக்க நேர்ந்துவிட்டால் ஆசிரியரோடு
துவந்த யுத்தம் செய்ய வந்துவிடுவார்கள்.

இதன் காரணமாக, மற்ற சாதிகளைச் சேர்ந்த
ழுத்தாளர்கள்கூடத் தத்தம் சமூகக் குடும்ப
வாழ்க்கைகளைப் பற்றி எழுதத் தயங்கிப்

பிராமணத் தமிழில் பிராமணக் குடும்பங்களைப்
பற்றின கதைகளை எழுதினார்கள்!

அதெல்லாம் ஒரு காலம். அந்தக் காலம் போய்
தமிழ்நாட்டு இலக்கிய உலகத்தில் சாதிப்

பிரச்சினை ஒருவாறு தொலைந்து. எந்தச்
சாதியாரைப் பற்றியும் பயமில்லாமல் கதை
எழுதலாம் என்ற நிலைமை ஏற்பட்டது. இந்த
சமயத்தில் நவயுக மறுமலர்ச்சி எழுத்தாளர்கள்
தோன்றினார்கள். ருஷ்யக் கதைகளையும்
மற்ற மேனாட்டுக் கதைகளையும் படித்தார்கள்.

அந்தக் கதைகளைப் போல் இந்த நாட்டு ஏழை
எளிய மனிதர்களையும் உழைப்பாளி

மக்களையும் பற்றிக் கதை எழுதத்
தொடங்கினார்கள்.

மிராசுதார்களையும்,தாசில்தார்களையும்,
ஐ.சி.எஸ்.காரர்களையும் வக்கீல்மார்களையும்
கைவிட்டு விட்டு,ஏழைக் குடியானவர்களையும்,
ஆலைத் தொழிலாளர்களையும், ரிக் ஷா

வண்டிக்காரனையும்,சுமை கூலிக்காரனையும்
பற்றிக் கதை எழுதத் தொடங்கினார்கள்.

ஆனால் எவ்வளவுதான் அனுதாபத்துடனும்

இலக்கியப் பண்புடனும் எழுதினாலும் அந்தக்
கதைகள்,கதை என்ற முறையில் 
நன்றாயிருக்குமே தவிர,அவற்றில் 
உண்மை ஒளி தோன்றுவதில்லை.

பாடுபட்டு அறியாதவன் பாட்டாளியின் 

துயரத்தைப் பற்றியும், சேற்றில் இறங்கி 
அறியாதவன் குடியானவனுடைய கஷ்டத்தைப் 
பற்றியும் என்னதான் கண்ணீரில் பேனாவைத்
தோய்த்துக்கொண்டு எழுதினாலும், அந்தக்
கதைகளில் மற்ற எல்லாச் சிறுகதை
இலட்சியங்களும் இருக்கலாம்;உள்ளத்தை
ஊடுருவித் தைக்கும் படியான இதயம் ஒன்றிய
ஈடுபாடு இருப்பதில்லை.

அப்படிப்பட்ட உண்மை ஒளிவீசும் சிறுகதைகளை
எழுதுவதற்கு ஏழை எளியவர்களிடையேயிருந்தும்
உழைப்பாளி மக்களிடையே யிருந்தும் 

ஆசிரியர்கள் தோன்ற வேண்டும்;  
அவர்களுடைய எழுத்தில் இலக்கியப் பண்பும் 
பொருந்தியிருக்க வேண்டும்.

மேற்கூறிய இலட்சணங்கள் பொருந்திய கதை
ஆசிரியர்களில ஒருவர் விந்தன். உழைப்பாளி
மக்களிடையே பிறந்து வளர்ந்து உழைத்துப்
பண்பட்டவர். ஏழை எளியவர்கள், தொழிலாளிகள்,
பாட்டாளிகளின் சுக துக்கங்களை இதயம் ஒன்றி
அநுபவித்து உணரும் ஆற்றல் பெற்றவர்.

மனிதனுக்கு மனிதன் செய்யும் அநீதியையும்
கொடுமையையும் காட்டும்போது, “விந்தனுடைய
தமிழ் நடையின் சக்தி உச்சநிலை அடைகிறது.

விந்தனுடைய கதைகளைத் தமிழ் மக்கள்

ஆர்வத்துடன் வரவேற்றுப் படித்து மேலும் 
மேலும்கோபமும் ஆத்திரமும் அடைவார்கள் 
என்றும்அதன் பலனாக மூகத்திலுள்ள 
அநீதிகளையும்கொடுமைகளையும் ஒழிக்க 
ஊக்கங்கொள்வார்கள் என்றும் நம்புகிறேன்.

 
- ரா. கிருஷ்ணமூர்த்தி (கல்கி)