Wednesday, September 19, 2007

கால நதிக்கரையில் - 23

கால நதிக்கரையில் - அத்தியாயம் - 23

- வே.சபாநாயகம்


இந்தக் கீழமந்தை சற்று விஸ்தாரமானது. திரௌபதை அம்மன் கோயில் அருகில் உள்ள கீழமந்தை, கரிநாளில் ஊர் இளைஞர்கள் சரணாக் கட்டுவதற்கும் 'சடுகுடு' விளையாடுவதற்கு மட்டுமே பயன்பட்டது. திரௌபதை அம்மன் கோயில் அரவான் களபலி, அக்னி எல்லாம் இந்த மந்தையில் தான் நடக்கும். அவையும் கூட பஞ்சாயத்து ஏற்பட்டு பொதுத் தண்ணீர்த் தொட்டியும், சிறுவர் பூங்காவும் அமைத்தபின் நடத்த இடமின்றி நின்றே போயின. அப்புறம் பூங்காவுக்கு எதிரில் உள்ள சின்னத் திடலில் மட்டும் தெருக்கூத்தும் நாடகமும் நடைபெற்று வந்தன.

பூங்காவை நெருங்கியதும் அதன் அலங்கோலத்தைப் பார்த்து, "என்னப்பா இப்டி ஆயிட்டுது? சுத்துச் சுவரெல்லாம் இடிஞ்சு கெடக்கு, விளயாட்டுப் பொருள்கள் இருந்த சுவடே தெரியல!" என்றார் சிதம்பரம் மருதுவிடம்.

"இப்ப பஞ்சாயத்துத் தலைவர்னு யார் இருக்காங்க? பஞ்சாயத்து எலக்ஷன் நடந்து பத்து வருஷமாச்சே! நிர்வாக அதிகாரின்னு இருக்காங்க. அவங்க டவுன் லேர்ந்து எப்பவாச்சும் நெனச்சுக்கிட்டா வருவாங்க, வரி வசூல்பண்ண! மத்தபடி ஊர் வளர்ச்சிக்கு அக்கற காட்டுனாத்தானே?" என்றான் மருது.

"இங்க நாடகம் நடக்குமே, அதுவாவது நடக்குதா?"

"நடேச ஆசாரி இருந்த வரிக்கும் அன்னப் படையல ஒட்டி சிறுத்தொண்டர் நாடகம் நடந்துக்கிட்டிருந்துது. அவருக்கப்றம் எடுத்து நடத்த ஆளு இல்லே"

அந்த இடத்தில் முதன் முதல் அவர் பார்த்த தெருக்கூத்து ஞாபகத்துக்கு வந்தது. அப்போது சிதம்பரம் மிகவும் சிறு பிள்ளை. எதிர் வீட்டுத் தொந்தி மாமாதான் அந்த நாடகத்தை பார்க்க அவரைத் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு வந்தார். மேடைக்கு எதிரே சாக்குகளும், பாய்களும் விரித்து ஆணும் பெண்ணும் பிள்ளைகளும் உட்கார்ந்திருக்க மாமா அவரை மேடைமீதே ஒரு ஒரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொண்டார். நாடகம் ஆரம்பித்து கொஞ்சம் பார்த்தவர் - நடுநிசியைத் தாண்டிவிட்ட நேரம் - மாமா மடியிலேயே தூங்கி விட்டார்.

திடீலென மேடை அதிர, இடிபோல முழக்கமும் காட்டுக் கத்தலும் கேட்டுப் பதறி எழுந்த போது பார்த்த காட்சி பயத்தை எழுப்ப, 'வீல்' என அலறினார்.

மேடையில் ஒரே கூட்டமும் இரைச்சலுமாய் இருந்தது. கூட்டத்திலிருந்த எல்லோரும் கன்னங்கரேலென்று முகத்தில் கரியைப் பூசிக் கொண்டு, அடர்த்தியான மீசையும் கனத்த புருவமும் பெரிய குங்குமப் பொட்டும் கருப்பு உடையும், கையில் உலக்கையுமாய் நின்றிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் பிரதானமாக, பெரிய கிரீடம் தரித்து கரிய முகத்தில் பெருத்த பயங்கர மீசையும் அடர்ந்த புருவமும் நெற்றியில் விபூதிப் பட்டையும் அதன் நடுவில் பெரிய குங்குமப் பொட்டும், கனத்த சரீரத்தில் கருப்புப் பட்டு உடையும் வலது கையில் பெரிய கதாயுதமும், இடது கையில் மாட்டின் தலைக்கயிறு போல கயிற்றுச் சுருளுமாய், பயங்கரமாய் விழித்தபடி ஒருவர் நின்று கொண்டிருந்தார். "எம தருமன் நானே! ஏழேழு லோகத்துக்கும் எம தருமன் நானே!' என்று உரத்த குரலில் பாடினார். அவரைச் சுற்றி நின்றவர்கள் கைகளில் இருந்த உலக்கைகளை 'டமால் டமால்' என மேடைமீது இடித்துப் பயத்தை அதிகரித்தார்கள்.

பயந்து வீரிட்ட சிதம்பரத்தை மாமா அணைத்துப் பிடித்தபடி, "ஒண்ணும் பயப்படாதே! எம தர்பார் நடக்குது. அதோ, அவுருதான் எமன்" என்று மத்தியில் கிரீடத்துடன் நின்றிருந்த கனத்த ஆளைக் காட்டினார். "மத்தவங்க எல்லாம் எமகிங்கரன்க" என்றார்.

மேல மந்தையில் ஒருதடவை மாரியம்மன் கோயில் விழாவுக்காக ஒரு நாடகம் நடந்தது. அது இதுபோல மேடையில் நடக்கவில்லை. அது வடக்கத்தி நாடகமாம். அவர்கள் தரையில் பார்வையாளர்களின் கண்மட்டத்தில்தான் ஆடுவார்களாம். தொந்தி மாமா சொல்லி இருக்கிறார். அதுவானால் இது போல உலக்கைகளை டமால் டமால் என்று பலகையில் இடிக்க முடியாது.

அப்போது பக்கத்துக் கிராமங்களில் அடிக்கடி நாடகமும் தெருக்கூத்தும் நடக்கும். தொந்தி மாமா சிதம்பரத்தை தோளில் தூக்கிக் கொண்டு அங்கெல்லாம் அழைத்துப் போய்க் காட்டி இருக்கிறார். அப்போது பார்த்த நாடகங்களும் கூத்துக்களும், சிதம்பரத்துக்கு சிறுவயதில் படித்த கதைப் புத்தகங்களைப் போலவே இன்னும் ஞாபகத்தில் இதுக்கிறது. அப்போதைய புகழ்பெற்ற ராஜபார்ட் நடிகர் சோழமாதேவி நடேசன் என்பவர் எட்டுக் கட்டைச் சுதியில் உரத்துப் பாடுவது கூப்பிடு தொலைவுவரை கேட்கும். அப்போதெல்லாம் ஒலிபெருக்கி நாடக மேடைக்குப் புழக்கத்துக்கு வரவில்லை. அதே போல பபூன் வேஷத்துக்கு மதனத்தூர் குண்டு என்பவர் பிரபலம். இவர்களை அழைத்து நாடகம் போடுவதும் அதைப் பார்க்க வாய்ப்புக் கிடைப்பதும் அப்போது சாதனைகளாகப் பேசப்பட்டன. தான் சோழமாதேவி நடேசனையும், மதனத்தூர் குண்டுவையும் பார்த்தது பற்றியும் அவர்களது நடிப்பையும், பாட்டையும் சின்ன வயதிலேயே தொந்தி மாமா தயவால் ரசிக்கும் வாய்ப்பு பெற்றது பற்றியும் சிதம்பரம் இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பார்.

பக்கத்து நகர டெண்ட் கொட்டகைகளில் தாம் பார்த்து வந்த சினிமாக்களைப் பற்றி வாய் ஓயாமல் பேசிப் பரவசப்படுவது போலவே, இந்த நாடகங்களைப் பார்த்து விட்டு வரும் ஒரு வாலிபக்குழுவினர் வாய் உருக நாள் முழுதும் பேசி மகிழ்வார்கள் அவர்களில் முக்கியமானவர் எதிர்வீட்டு தங்கராசுப் பிள்ளை. அவர் நல்ல ரசிகர். நன்கு பாடவும் கூடியவர். அவருக்குத் திடீரென்று ஒரு ஆசை ஏற்பட்டது. அதுவரை வெளி நாடகக் குழுதான் இங்கு வந்து நாடகம் போட்டிருக்கிறது. ஏன் நம்மூர்ப் பையன் களை வைத்து நாடகம் போடக் கூடாது என்று தன் சகாக்களைக் கலந்து ஆலோசித்து அதைச் செயல்படுத்தவும் முனைந்தார். ஆர்வமுள்ள இளைஞர்களும் ஊர்ப்பெரியவர்களில் பலரும் ஆதரவு தரவே நாடக மன்றம் ஒன்று உருவாயிற்று.

தங்கராசுப் பிள்ளைக்குத் தெரிந்த நாடக வாத்தியார் ஒருத்தர் சிதம்பரத்தில் இருந்தார். அவர் நவாப் ராஜமாணிக்கம் போன்ற புகழ்பெற்ற நாடகக் குழுவில் இருந்தவர். அவருக்கு சங்கரதாஸ் சுவாமிகளின் எல்லா நாடகங்களும் பாடம். சிவாஜி கணேசனுக்கே பாடம் சொல்லிக் கொடுத்ததாக அவர் சொல்லிக் கொண்டார்.அவரைப் போய் அழைத்து வந்து நாடகம் சொல்லித்தர ஏற்பாடு செய்யப் பட்டது. அவருக்கு குடி இருக்க ஜாகையும் தினமும் ஒருவர் வீட்டில் சாப்பாடும் ஏற்பாடாயிற்று.

முதல் நாடகம் 'சம்பூர்ண ராமாயணம்' என்று முடிவாயிற்று. ஊரிலுள்ள பாடத் தெரிந்த, தெரியாத இளவட்டங்களை எல்லாம் கட்டாயமாக நாடகத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளச் செய்தார்கள். போருக்கு வீட்டுக்கு ஒரு ஆள் வரவேண்டும் என்கிற மாதிரி எல்லா வீடுகளிலிருந்தும் இளைஞர்கள் சேர்க்கப்பட்டார்கள். நிறையப்பேர் இருந்தால்தானே செலவைப் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைக்கும்? சின்னப் பையன்கள் கூட - ஒரு வீட்டுக்கு ஒருவர் என்று தேடும் போது வாலிபர்கள் தேறாவிட்டால் - வற்புறுத்தி சேர்க்கப்பட்டார்கள். எல்லோருக்கும் வேஷம் இருந்தது. மூன்று நாள் நாடக மில்லையா? மூன்று நாட்களுக்கும் மூன்று ராமர், மூன்று சீதை, பால ராம லட்சுமணர்கள், நிறைய வானரங்கள்......என்று எல்லோருக்கும் பங்களிப்பு இருந்தது.

முன்னிரவில் எட்டு மணிக்கு எல்லோரும் நாடகப் பயிற்சிக்கென்று தெரிவு செய்யப்பட்ட ஊர்ப் பொதுச் சாவடியில் கூடிவிட வேண்டும். நள்ளிரவு வரை தினமும் பயிற்சி நடக்கும். பயிற்சியைப் பார்க்க ஒரு கும்பல் தினமும் சாவடி முன் கூடிவிடும்.

தூக்கம் வராதவர்களுக்கும், பொழுது போகாத பெருசுகளுக்கும் அப்போது அதுதான் பொழுது போக்க உதவிற்று. இரவுநேரத்தில் சுகமாகத் தூங்க நிணைப்பவர்களுக்கு சாவடியிலிருந்து எழும் - தாளத்துக்கோ எந்த ஒழுங்குக்கோ ஒத்து வராத கர்ணகடூர பாட்டுக்களும் வசனங்களும் இடைஞ்சல் செய்ய, எப்போதடா இந்த ஒத்திகை முடிவுக்கு வரும் என்ற ஏக்கத்தை உண்டாக்கியது.

நாடக வாத்தியாரின் பாடுதான் பாவம்! எந்த விதத்திலும் - நடிப்பு, சாரீரம் எதுவும் ஒத்து வராத மலட்டுக் கலைஞர்(!)களுடன் - அவர் மொழியில் சொன்னால் - மாரடிக்க வேண்டி இருந்தது. 'சிவாஜி'க்கெல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு இந்த மரமண்டைகளுக்கெல்லாம் சொல்லித் தரவேண்டியிருக்கிற தன் விதியை நொந்து கொண்டு அவர் அடிக்கடி தலையில் அடித்துக் கொள்வார். என்ன செய்வது? பிழைப் புக்கு ஏதாவது செய்தாக வேண்டுமே! அவரது நலிந்த தோற்றமும் தள்ளாமையும் அதட்டிக் கற்பிக்கிற திறமின்மையும் காரணமாய், பிள்ளைகளுக்கு அவ்வளவாக அவரிடம் மதிப்பு இல்லை. "இவராவது சிவாஜிக்குப் பாடம் சொல்லித் தரவாவது? எல்லாம் டுப்!" என்றே அவர்கள் ஏளனம் செய்து வந்தார்கள். ஆனால் ஒரு நாள் அவர் அடிக்கடி "சிவாஜிக்கு எங்கிட்ட ரொம்ப மரியாதை. அவரு வீட்டுலே எந்த விசேஷம்னாலும் இண்ணைக்கும் மறக்காமெ எனக்கு அழைப்பு வரும்" என்று சொல்லி வந்ததை மெய்ப்பிக்கிற மாதிரி சிவாஜியின் மகள் திருமணத்துக்கு அவருக்கு அழைப்பிதழ் வந்தே விட்டது. அலங்காரமான, பெரிய விலை உயர்ந்த அந்த அழைப்பிழைப் பார்த்த பிறகு தான் அவர்களின் அலட்சியமும் அவமதிப்பும் நீங்கியது. ஆனாலும் வாத்தியார் மிகவும் பொறுமைசாலி. இவர்களது அறியாமைக்காக ஒரு நாளும் முகம் சுளித்ததில்லை. தன் அருமை தெரிந்தவராய் தங்கராசுப் பிள்ளை ஒருவர் இருப்பதே அவருக்குப் போதுமான தாக இருந்தது.

நடேச ஆசாரிதான் ராஜபார்ட். பால ராமர் தவிர்த்து இரண்டாவது மூன்றாவது நாளின் ராமர் அவர்தான். அவரை விட்டால் சுமாராகக் கூட நடிக்கவோ பாடவோ ஆள் இல்லை. நாடகப் பாத்திரங்களைப் பகிர்ந்து கொடுப்பதிலும் வாத்தியாருக்குப் பிரச்சினைதான். வசதியற்ற அல்லது மேல் ஜாதியல்லாத ஒருவனை ராஜா வேஷத்துக் குப் போட்டு விட்டு, வசதியான மேல் ஜாதிப் பையனை அவனுக்குக் கீழே மந்திரியாகவோ சேவகனாகவோ போட்டுவிட முடியாது. கீழ்ஜாதி ராஜா வேஷக்காரன் "அடேய்! சேவகா" என்று அழைத்தால் மேல்ஜாதி சேவக வேஷக்காரன் கௌரவத்தை விட்டுக் கொடுத்து, எப்படி "ப்ரபோ!" என்று தண்டனிட்டு வணங்க முடியும்? ஆகக்கூடி பாத்திரத்துக்குப் பொருத்தமான ஆளாகத் தேர்வு செய்யாமல் அந்தஸ்துக்கு ஏற்ற வேஷமாகத் தர வேண்டிய நிர்ப்பந்தம். எல்லோரையும் திருப்தி செய்ய வேண்டிய நிலையில் வாத்தியார் இருந்தார். தங்கராசுப் பிள்ளை உதவியோடு எப்படியோ சமாளித்து நாடகப் பயிற்சியைத் தொடங்கினார்.

மூன்றுமாதம் கடுமையாய்ப் பயிற்சி தரப்பட்டதும், கோடையில் ஒருநாள் முதல் கன்னி நாடகத்தை வெகு விமர்சையாய் நடத்த ஏற்பாடுகள் நடந்தன. அக்னி மற்றும் ஊர்த் திருவிழாக்களுக்கு சொந்த பந்தங்களை அழைப்பது மாதிரி இந்த நாடக அரங்கேற்றத்துக்கும் அழைப்புகள் போய் ஊரே திமிலோகப்பட்டது. இந்த உறவினர்களில் அதிகமும் நாடக நடிகர்களின் விருந்தாளிகளே. அவர்கள் வந்திருப்பது முக்கியமாக நாடகம் பார்க்க அல்ல; நாடகத்தில் மேடை ஏறும் தம் உறவுப் பையனுக்கு, கல்யாணத்தில் மொய் எழுதுகிறமாதிரி மாலை, புத்தாடைகள், மைனர்செயின், மோதிரம் முதலியவற்றை, மேடையில் ஏறி அணிவித்துக் கவுரவிக்கத்தான். நடிப்பு பாட்டு எல்லாம் அவர்களுக்கு முக்கியமே அல்ல.

அப்பொழுது சிதம்பரம், கல்லூரியில் கடைசி வருஷம் படித்துக் கொண்டிருந்தார். நாடக ஏற்பாட்டைக் கவனித்த தங்கராசுப் பிள்ளைக்கு சிதம்பரத்தின் கலை ரசனையும் திறமையும் தெரியும். அதனால் உள்ளூர்ப்பள்ளி மாணவர்களைக் கொண்டு குட்டி நாடகம் ஒன்றை நடுவில் ஒருநாள் நடத்தக் கேட்டுக் கொண்டார். அதன்படி சிதம்பரம் ஐந்தாம் வகுப்புப் புத்தகத்தில் இருந்த "சாணக்கியன் சபதம்" என்ற ஒரே ஒரு காட்சி மட்டுமே கொண்ட குட்டி நாடகம் ஒன்றை சின்னப் பையன்களுக்குப் பயிற்சி கொடுத்து மேடை ஏற்றினார். பெரியவர்களது நடிப்பைவிட குழந்தைகளது நடிப்பு வெகுவாக மக்களைக் கவர்ந்தது.அதிலிருந்து மக்கள் ஒவ்வொரு வருஷ நாடகத்தின் நடுவிலும் சிதம்பரம் ஒரு குழந்தை நாடகத்தை நடத்த வேண்டும் என்று வற்புறுத்தியதும், அதன்படி சிதம்பரம் சிவாஜிகணேசன் சினிமாக்களில் இடையே நடித்த 'சாம்ராட் அசோகன்', 'சாக்ரட்டீஸ்' போன்ற நாடகங்களை குழந்தைகளுக்குப் பயிற்றுவித்து மேடை ஏற்றி மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றதும் இப்போது ஞாபகத் துக்கு வருகிறது. நகைச்சுவைக் காட்சிகளுக்கு அன்றைய புகழ்பெற்ற சினிமாப் பாடல் களின் மெட்டுக்களில் சில பாடல்களும் அவர்களுக்கு எழுதிக் கொடுத்ததும் நினை வுக்கு வருகிறது.

பாராட்டுக் கிடைத்த உற்சாகத்தில், சிதம்பரம் ஒரு முழு நாடமே எழுதி ஊர்நாடகம் நடக்கும்போது நடத்தவும், தானும் அதில் நடிக்கவும் ஆசைப் பட்டதும், அதை அறிந்த அப்பா 'நம் கௌவுரத்துக்கு மேடையேறி கூத்தாடி மாதிரி நடிப்பது குறைச்சல்' என்று நினைப்பதாக அம்மா சொன்னதும் அந்த ஆசையை விட வேண்டி வந்ததும் நினைவில் ஓடியது.

அடுத்தடுத்த நாடகங்களுக்கு நடேச ஆசாரியே நாடக வாத்தியார் ஆனார். அதற்குப் பிறகு தொடர்ந்து கோடையில் அன்னப் படையலுக்கு சிறுத்தொண்டர் நாடகத்தை நடத்துவது அவரது பொறுப்பாயிற்று.

"இப்போது நடேச ஆசாரியும் இல்ல, நாடகம் நடத்துன தங்கராசுப் பிள்ளையும் இல்ல! அதானால மந்தையில் நாடகம் பாக்குற வாய்ப்பும் இல்லாமப் போய்ட்டுது" என்று மருது சோகத்தோடு சொன்னான்.

(தொடரும்)

Saturday, September 08, 2007

கால நதிக்கரையில் - 22

கால நதிக்கரையில் - அத்தியாயம் - 22

- வே.சபாநாயகம்


அய்யனார் கோவில் இருக்கும் இலுப்ப மரத்தடியில் வந்து நின்றார்கள். கோவிலும், அதற்கு வெளியே இருக்கும் அய்யனார் சிலையும், எதிரில் நிற்கும் இரட்டைக் குதிரைகளும், அவற்றின் இரு புறமும் குதிரைகளின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கும் வீரர்களும் அப்படியேதான் அன்று பார்த்த மாதிரியே இருந்தன. முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்தபடியே வண்ணமற்று, பாசி ஏறி, பீடங்களில் சின்னச் சின்ன அரசங்கன்றுகள் முளைத்திருந்ததில் மாற்றம் எதுவும் காணோம். புதுப்பிக்கவோ வண்ணம் பூசவோ அக்கறை காட்டவில்லை என்றாலும் பின்னப் படுத்தப்படுத்தாமலும் சேதம் எதுவும் விளைவிக்காமலும் இருந்தது பாராட்டப்பட வேண்டிய ஒன்றுதான். ஒருவேளை அய்யனாரிடம் இருக்கும் பயம் காரணமாக யாரும் அதைத் தொட்டிருக்கமாட்டார்கள் என்றும் தோன்றியது.


சின்ன வயதில் சிதம்பரம் அவ்வளவு பெரிய அய்யனார் சுதைச் சிற்பத்தை வேறு எங்கும் பார்த்தில்லை. சிலை அமர்ந்திருக்கும் பீடமே ஒர் ஆள் உயரத்துக்கு இருக்கும். சிலை அதற்கு மேல் பிரம்மாண்டமாக இரண்டு ஆள் உயரத்துக்கு இருக்கும். பெரியவர்களும் அண்ணாந்து தான் அய்யனாரின் முகத்தைப் பார்க்க முடியும். பல ஊர்களில் இருப்பது போல உறுப்புகள் சரியான விகிதத்தில் அமையாது ஏதோ குறை இருக்கிற மாதிரி இல்லாமல், கச்சிதமான சிற்ப சாஸ்திர அளவுக் கேற்றபடி அமைக்கப் பட்டதாக அழகாக கம்பீரமாக இருக்கும். அழகு மட்டுமிருந்தால் உக்கிரம் இருக்காது என்பதாலோ என்னவோ, கோழி முட்டை அளவுக்குப் பெரிய விழித்த கண்கள் கருநீலக் கண்ணாடிக் கோலிகள் போல ஜொலிக்கும்படியும், முறுக்கிய பெரிய கனத்த மீசைகளுடனும் சிற்பி செய்திருக்கக் கூடும். சின்னப் பிள்ளை கள் தனியே நின்று பார்த்தால் பயந்து விடுவார்கள். ஆனால் கலையழகு மிக்க அப்படிப் பட்ட அய்யனார் சிலையை அவர் இதுவரை பார்த்ததில்லை.


குதிரைகள் இரண்டும்கூட அம்சமாய், சிற்ப சாஸ்திரப்படி அமைக்கப் பட்டவை போல அழகாய் இருக்கும். சேணம், கடிவாளம் எல்லாம் வேலைப் பாடுகளுடன் இருக்கும். வலுவான கால்கள் திடமான குளம்புகளுடன் ஊன்றியபடி வேட்டைக்குக்

கிளம்பும் துடிப்புடன் சற்றே தலைதாழ்த்து நிற்கிற மாதிரி தெரியும். வலது பக்கக்குதிரையின் அருகில் கடிவாளத்தைப் பிடித்திருக்கும் வீரனின் காலடியில் ஒரு துடியான வேட்டை நாயும் ஓடத் தயாராக நிற்பதுபோலக் காணப்படும். மொத்தத்தில் அது ஒரு அழகிய சிற்பக் கூடம் போலவே சிதம்பரத்துக்குத் தோன்றியது. சின்ன வயதில் பயமுறுத்தல் காரணமாக அருகில் சென்று பார்த்திராததால் அதன் சிற்ப அருமை தெரியாது போயிற்று. ஒரு பயம் கலந்த கவர்ச்சி மட்டுமே அந்த வயதில் அவருக்கு அவற்றைக் கடக்கும் போது இருந்தது. இப்போது இது நம்மூர்க் கலைக்கூடம் என்று பெருமையாய்ச் சொல்லிக் கொள்ளலாம் என்கிறமாதிரி ஒரு விதப் புத்துணர்வுடன் சிலைகளை வலம் வந்தார். நெடுஞ்சாலைகளிலும், சில ஊர்களிலும், திரைப்படங்களிலும் - பளீரென்கிற வண்ணப் பூச்சுடனும், என்றும் புது மெருகுடனும் காணப் படுகிற அய்யனார் சிலைகளைப் போல இது இல்லை என்றாலூம் வண்ணம் பூசாமலே கருமையும் பசுமையும் கலந்த அந்தப் பழைமை அவருக்குப் பிடித்திருந்தது.


எல்லா ஊரையும் போல அய்யனார் பற்றிய கதைகள் இங்கும் உண்டு. தொந்திமாமா சின்ன வயதில் நிறையச் சொல்லி இருக்கிறார். நள்ளிரவில் அய்யனார் தீவட்டி வெளிச்சத்தில் தன் படைகளோடு கணகணவென சேங்கண்டியும் மணியும்

ஒலிக்க, தாரை தப்பட்டைகள் முழங்க வேட்டைக்குப் போவார் என்றும் அப்போது எதிர்ப்படும் யாரும் ரத்தம் கக்கிச் செத்துப் போவார்கள் என்றும், அவர் வேட்டைக்குப் போவதை யாரும் வீட்டுக்கு வெளியில் நின்று பார்க்கவும் கூடாது என்றும் மாமா

சொன்னவை ஞாபகத்துக்கு வருகின்றன. அப்போதெல்லாம், வீட்டுத் தெருநடையில் அவரும் மற்ற பிள்ளைகளும் படுத்திருக்கையில், எழுப்பி உள்ளே போய்ப் படுக்க வைக்க இதுமாதிரி அம்மா பயமுறுத்தியதுண்டு. ஆனால் தொந்தி மாமாவிடம், தான்

ஒருபோதும் இரவில் அப்படி அய்யனார் வேட்டைக்குச் செல்லும் ஆரவாரத்தைக் கேட்டதில்லையே என்று கேட்டபோது, அய்யனார் வேட்டைக்குப் போகும்போது மக்கள் எல்லாம் அப்போதைக்குப் பிரக்ஞை இல்லாத மாயத் தூக்கத்தில் இருப்பார் கள் என்று சொன்னதை இப்போது நினைத்துப் பார்க்கையில் சிரிப்பு வந்தது.


அய்யனார் கோவில் பற்றி இன்னொரு பயமுறுத்தலும் உண்டு. உச்சி வேளை யில் பெண்கள் - குறிப்பாக இளம்பெண்கள் அய்யனார் கோவில் பக்கம் போகக் கூடாது என்றும் போனால் அங்கே இலுப்பை மரத்தில் வாசம் செய்கிற முனி பிடித்துக் கொள்ளும் என்றும் சொல்வார்கள். யாராவது இளம்பெண்கள், கர்ப்பிணிகள் மயக்கம் போட்டு விழுந்தாலோ, பயத்தால் அரண்டவள் போல் விழித்தாலோ - அய்யனார் கோவில் வழியே உச்சி நேரத்தில் போனதால்தான் என்று தீர்மானமாய்ச் சொல்லி

விடுவார்கள். பூசாரியைக் கூப்பிட்டுக் காட்டினால் அவன் நிச்சயம் அது இலுப்ப மரத்து முனியின் சேட்டைதான் என்றும் பூஜை போட்டு ஓட்டியாக வேண்டும் என்றும் சொல்வான். இலுப்பை முனியின் தயவில் பூசாரிக்கு அடிக்கடி பிழைப்பு நடக்கும்.


அப்படி ஒருதடவை ஒரு பெண்ணுக்குப் பூசாரி பேயோட்டிய நிகழ்ச்சியை அருகிருந்து பார்த்தது சிதம்பரத்துக்கு இப்போது நினைவுக்கு வந்தது.


எதிர் வீட்டுக்கு புதிதாக ஒரு சின்னப்பெண் திருமணமாகி வந்திருந்தாள். வீட்டு நினைவோ என்னவோ அவள் எப்போதும் சுரத்தின்றியே இருந்தாள். அதனால் அவள் கணவனும் மாமியாரும் அவளை எதாவது குற்றம் குறை சொல்லி முகம் சுருங்க வைப்பார்கள். ஒருதடவை மதிய நேரத்தில் அவள் மடேலென்று நின்ற நிலைக்கு வெட்டிய மரம்போல விழுந்துவிட்டாள். சாப்பாடு நேரம் என்பதால் கனவன் வீட்டில் தான் இருந்தான். அவள் விழுந்ததைப் பார்த்துவிட்டு அவள் மாமியார் வீரிட்டாள். கணவன் ஓடித் தூக்கினான். அக்கம்பக்கம் இருந்தவர்கள் கணத்தில் கூடி விட்டார்கள். பெண் நினைவிழந்து மரக்கட்டைபோலக் கிடந்தாள். முகத்தில் தண்ணீர் தெளித்தும் காற்றுப் பட விசிறியும் அவள் அசையவில்லை. ஆளுக்கு ஆள் ஒன்று சொல்ல ஆரம்பித் தார்கள். தெருவின் கடைசி வீட்டுப் பாட்டி சொன்னாள்: "இப்பதான் அவ அய்யனார் கோயில் பக்கத்திலேர்ந்து வந்ததப் பாத்தேன். அதான்!"


எல்லோருக்கும் அதுதான் காரணமாய் இருக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே பூசாரிக்கு ஆள் போயிற்று. அவன் வந்து விபூதி பூசி வேப்பிலை அடித்து மந்திரித்ததும் அவள் லேசாக அசைந்தாள். "இது அந்த இலுப்ப முனியோட வேல

தான்! ஒண்ணும் பயப்படவேணாம். கழுதெய நான் வெரட்டி அடிக்கிறேன்" என்று கணவனுக்கும் மாமியாருக்கும் தைரியம் சொன்னான். "பாவம், புதுப் பொண்ணு! பூசாரி சொன்னபடி செய்யப்பா" என்று சொல்லி விட்டுக் கூடி இருந்தவர்கள் கலைந்தார்கள்.


அதன்படியே இரண்டு நாளில் முனிஓட்டுதல் ஆரம்பமாயிற்று. பூசாரி, சிந்தை சரியாக உள்ளவர்களே பார்த்ததும் பயப்படும்படியான பயங்கர ஒப்பனையுடன் - அகன்ற நெற்றியை முழுதும் அடைத்து விபூதி பூசி, புருவத்துக்கும் முன் நெற்றிக்கும் இடையில் பெரிய ரூபாய் நாணயத்தை விடப் பெரிதான ரத்தச் சிவப்பில் குங்குமம் வைத்து, திருகிவிட்ட அடர்ந்த மீசையுடன் கையில் உடுக்கையும் வேப்பிலைக் கொத்துமாக வந்தான். முனி பிடித்திருப்பதாக அவன் சொன்ன பெண்ணைக் கூடத்தில் உட்கார வைத்து, புகை மூட்டத்தை எழுப்பி, உடுக்கையை ஓங்கியடித்து, கர்ணகடூரமான குரலில் ஏதொ ஒரு பாட்டைப் பாடியதே அந்தப் பெண்ணை மிரட்டி இருக்கும். சடேலென்று ஒரு குத்து திருநீரை அள்ளிப் பெண்ணின் முகத்தில் அடித்தான் பூசாரி. அதில் சற்றே மருண்டு தலையை அசைத்து தூசிப்படலத்தை விலக்க முயன்றவளை நோக்கி வேகமாக வேப்பங் கொத்தை விசிறிச் சுழற்றினான். "ம்ம்ம்.....ஆடு.....!" என்று தலையில் வேப்பங் கொத்தால் அடித்தான். பாவம், பெண் அரண்டு போய்க் கண்கள் சொருக ஒரு பக்கமாய்ச் சரிந்தாள்.


"ஏய்! எங்கிட்டியே ஒன் வேலயக் காட்டுறியா? இந்த ஜாலக்குக்கெல்லாம் நான் ஏமாந்துட மாட்டேன். ம்ம்ம்...ஆடு!" என்று மறுபடியும் வேப்பங் கொத்தால் அடித்தான். "ஐயோ! அடிக்காதே அடிக்காதே!" என்று என்று அவள் அரற்றினாள். "அப்ப ஆடு!" என்று வேப்பங் கொத்தைச் சுழற்றி விசிறினான். அடிக்குப் பயந்தோ அல்லது 'தந்னைப் பேய் பிடிக்கவில்லை, மாமியார், கணவன் இருவரும் அனுசரணையாக இல்லாமல் வதைப்பதுதான் காரணம்' என்றால் யாரும் தனக்கு ஆதரவாகப் பேசப் போவதில்லை என்று உணர்ந்தோ, அவள் தலை லேசாக ஆட ஆரம்பித்தது.

'

"பாத்தியா! அடின்னதும் அதுக்குப் பயம் வந்துடுச்சி" என்று அதற்குள் கூடி விட்ட அண்டை அயல் கூட்டத்திலிருந்து ஒரு குரல் எழுந்தது. சிதம்பரமும் அந்தக் கூட்டத்தில் ஒரு பார்வையாளராக இருந்தார். பெண்ணின் தலையாட்டம் பூசாரியின்

வேப்பங் கொத்தின் வேகச் சுழற்சிக்கு ஏற்ப வேகமெடுத்து சக்கர வட்டமாகச் சுழன்றது. பெண்ணுக்கு நீண்ட கூந்தல். அது பரந்து விரிந்து சுழன்றது பயமூட்டுவதாக இருந்தது. சிதம்பரத்துக்குப் பாவமாக இருந்தது. சுழற்சிக்கு ஏற்ப உடல் இடுப்பு வரை ஆட்டுக்கல் சுழற்றப் படுவது போல வளைந்து திருகி சுழன்றது. பிறகு எத்தனை

நாளைக்கு உடம்பு வலிக்குமோ என்று மனம் கசிந்தார்.


''ஏய்! சொல்லு யாரு நீ? இலுப்ப மரத்து முனிதானே?" என்று வேப்பங்கொத்தால் பெண்ணின் தலையில் சுளீரென்று அடித்தான் பூசாரி. பார்த்துக் கொண்டி ருந்த சிதம்பரத்துக்கு வலித்தது. 'கிறீச்'சென்று கத்தியபடி அந்தப் பெண் பின்னால்

சாய்ந்து பிரக்ஞை அற்றவளானாள்.


"சரி! இண்ணைக்குப் போதும். நாளைக்கு மீதியக் கேட்டுக்கிறேன்" என்று பூசாரி தன் கடையைக் கட்டினான். 'ஆருன்னு சொல்லி, போறேன்னு சொல்ற வரைக்கும் பூசாரி உடமாட்டான்' என்று ஒரு கிழவர் தனக்குச் சொல்கிறமாதிரி மற்றவர்களுக்கும் சொன்னார். இப்படி எத்தனையோ முறை பார்த்திருக்கிற அனுபவம் அதில் தொனித்தது.


இப்படி எத்தனையோ முறை அந்தச் சித்திரவதை தொடர்ந்தது. அந்தப் பெண்ணுக்கு புதிதாக வாழ வந்த இடத்தில், இந்தக் கொடுமையைத் தடுத்து நிறுத்த யாரும் இல்லை. அறிவியலும், மருத்துவ ஆராய்ச்சிகளும் வளர்ந்துள்ள இன்றைய நிலை யிலேயே கூட 'இது மூட நம்பிக்கை, பேயும் இல்லை முனியும் இல்லை - இது மனோவியாதி; மருத்துவரிடம் காட்டுங்கள்' என்று உணர்ந்து வழிகாட்டுபவர்கள் இல்லாத போது, அறியாமையும் மூடநம்பிக்கையும் மிகுந்த அந்தக் காலத்தில் யாருக்கு அவளைக் காப்பாற்றத் தெரிந்திருக்கும்? கடைசியாக பூசாரியே அலுத்துப்போய், "இது இங்கக் கட்டுப்படலீங்க; பேசாம குணசீலத்துக்கு அழச்சிக்கிட்டுப்போயி அங்க ஒரு மண்டலம் கோயிலச் சுத்த வையுங்க" என்று தன் தோல்வியை ஒப்புக்கொண்டு விலகினான்.


பிறகு ஓராண்டுக்கு மேலாகப் பிரமை தொடர்ந்தது. பின்னர் ஒரு நாள் அவள் கருத்தரித்து ஒரு குழந்தையைப் பெற்றெடுத்ததும்தான் சரியாயிற்று. அவளுக்குச் சரியாயிற்று என்பதை விட அவளுடைய மாமியாருக்கும் கணவனுக்கும் புத்தி சரியா

யிற்று என்று சொல்லவேண்டும்.


"சரி, போலாமா?" என்ற மருதுவின் குரல் சிதம்பரத்தைப் பழைய நினைவுகளிலிருந்து மீட்டது.


"ஒவ்வொரு எடமும் பழைய நினைவுகளக் கிளறிவிட்டுடுது" என்றபடி நடந்தார்.


இருவரும் அய்யனார் கோவில் திடலிலிருந்து கீழமந்தையை நோக்கி நடந்தார்கள்.


(தொடரும்)

கால நதிக்கரையில் - 21

காலையில் சொன்னபடியே எட்டு மணிக்கு மருது அப்பு வீட்டுக்கு வந்து விட்டான். இருவரும் மீண்டும் சிவன் கோயில் குளத்தை நோக்கிச் சென்றார்கள். குளத்தின் கீழ்க்கரைக்குச் சென்றார்கள்.


அங்கு புளிய மரத்தடியில் ஒரு கொல்லன் உலைக்களம் இருந்தது. அங்கு ஆறுமுக ஆசாரியும் அவரது இரு மகன்களும் எப்போதும் ஓய்வின்றி வேலை செய்து கொண்டிருப்பார்கள். சிதம்பரம் சிறுவயதில் அங்கு போய், அப்பாவு ஆசாரியின் சிற்ப வேலையைப் பார்க்கிற அதே சுவாரஸ்யத்தோடு ஆறுமுக ஆசாரியின் வேலையை ஆர்வத்தோடு பார்ப்பார். இரும்பு செக்கச்செவேலென்று பழுத்து ஒளிர்வதையும் அதைத் தணலிலிருந்து ஆறுமுக ஆசாரி இடதுகைக் குறடாவால் எடுத்துப் பட்டறை

மீது வைத்ததும் அவரது இரு மகன்களும் மாறி மாறி சம்மட்டியால் படீல்படீலென ஓங்கி அடிப்பதையும் பார்ப்பது அவருக்கு இன்னொரு பிடித்தமான காட்சியாகும்.


இப்போது அந்த இடத்தில் உலைக்களம் இருந்த சுவடே இல்லாமலிருந்தது.


"எங்கேப்பா ஆறுமுக ஆசாரி உலைக்களம்?" அன்று மருதுவைக் கேட்டார்.


"ஆறுமுக ஆசாரிக்கப்றம் அவரோட மகன்கள் காலம் வரைக்கும் பட்டறை இருந்துது. அப்பறம் அடுத்த தலமுறைக்குத் தொழில்ல நாட்டம் இல்லே. வேலையும் முன்ன மாதிரி வரலே. அதனால பசங்க எல்லாம் வெளிநாட்டுக்குச் சம்பாதிக்கப்

போய்ட்டானுவ. நடேச ஆசாரி மகன் சண்முகம்தான், தான் போன வழி அவங்க¨ளையும் அழச்சிக்கிட்டுப் போய்ட்டான்" என்றான் மருது.


"போகட்டும், அப்பிடியாவது இந்தத் தலமுறையாவது செழிப்பா இருந்தா சரிதான்"


"அப்டி ஒண்ணும் டவுன் பக்கம் மாதிரி, திரும்பி வந்து வீட்டக்கட்டி நெலம் நீச்சுன்னு வாங்குன மாதிரி இல்லீங்க. இருக்குற மனைய, நெலத்த அடமானம் வச்சு லட்சக்கணக்குலே கட்டி, வெளிநாடு போய்ட்டு வந்தா, கடனத் திருப்பறதுக்கும்

நெலத்த மூக்கறத்துமே சரியாப்பூடுது. 'குபேரப்பட்டணம் கொள்ள போனாலும் அதிர்ஷ்டம் கெட்டவனுக்கு ஆப்பக் காம்புதான் கெடைக்கும்'கறது நம்ம ஊர்ப் பசங்களுக்குத்தான் பொருந்தும்" என்றான் மருது.


மேலும் நடந்து ஊர்த் தொழிலாளிகள் குடி இருக்கும் கடைசித் தெருவுக்கு வந்தார்கள். முனையில் இரண்டு குயவர் குடும்பம் இருந்தது. எதிரில் இருந்த சூளை எப்போதும் கனிந்து கொண்டிருக்கும். பக்கத்தில் சலவைத் தொழிலாளியின் வெள்ளாவி அடுப்பும் புகைந்து கொண்டிருக்கும். நாவிதனுக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையும் பக்கத்தில் இருந்தது. இப்போது எல்லாமே சுவடற்று இருந்தது.


சிதம்பரம் கேட்பதற்கு முன்பே மருது சொன்னான். "ஒரு தொழிலாளியும் இப்ப ஊர்ல இல்லீங்க. வெலவாசியும், வேல இல்லாததுமா எத்தினி நாளைக்குத்தான் தாக்குப் புடிக்க முடியும்? எல்லாரும் டவுனுப் பக்கம் போய்ட்டான். காசு பெரட்ட

முடிஞ்சவன் வெளிநாட்டுக்குப் பறந்துட்டான். அதுமட்டுமில்லீங்க - குடி ஆளுங்களும் விவசாயத்துலே வயிறு ரொம்பாதுண்ணு டவுன்பக்கம் கொத்தன் சித்தாளு வேலைன்னு போய் வந்துக் கிட்டிருக்கானுவ. வீட்டுலே சமைஞ்சு இருக்குற பொண்ணுங்களும் டவுன் கடைகள்ள எடுபிடி வேலைக்குப் போயாச்சு. காலைலே எட்டுமணிக்கப்றம் ஊரே வெறிச்சோன்னு போயிடும்."


"அது சரிதான். இனிமே வீட்டுலே அத்தினி பேரும் ஒழச்சாத்தான் முடியும். அப்டியாவது வீட்டுல சோம்பி இருக்காமப் பொழப்பப் பாத்துக்கிட்டா நல்லதுதான்" என்றார் சிதம்பரம்.


'ஆனா ஒண்ணு! பொம்பளப் புள்ளைங்க எல்லாம் அப்பன் ஆத்தாள எத்¢ர் பாக்காம தங்களோட சம்பாத்தியத்திலே வேண்டியத வாங்கிக்கவும் நாகரீகமா சுடிதார், சல்வார் கமீஸ¤ன்னு விதம்விதமா உடுத்திக்கவும் குறையில்லாம இருக்கு. அப்பிடி அதுங்க நவநாகரீகமா உடுத்திக்கிட்டு வேலைக்குப் போறது ஒருவகையில முன்னேற் றம்ணுதான் சொல்லணும்" என்று ஊரின் வளர்ச்சியைச் சொன்னான் மருது.


பேசியபடி தெருக்கோடியில் இருந்த சிதம்பரம் வீட்டின் போரடி நெல் களத்துக்கு வந்தார்கள்.


ஊரிலேயே பெரிய களம் அது. நெல் அறுவடை ஆனதும் களத்தில் போராக நெல்கட்டுகள் அடுக்கி இருப்பதை இரவில் பார்த்தால் இரண்டு மூன்று யானைகள் நிற்பது போலிருக்கும். நெல்லடித்து வீட்டுக்குக் கொண்டுவரும் வரை - அப்பா மாலை அனுஷ்டானமெல்லாம் முடித்துக் கோயிலுக்குப் போய்விட்டு வந்து சாப்பிட்டுவிட்டுக் களத்துக்குக் காவலுக்காகப் படுக்க வர இரவு எட்டு மணியாகிவிடும். அப்பா வரும் வரை பண்ணையாள் தங்கவேல் துணையுடன் காவலுக்கு இருப்பது சிதம்பரம்தன்.


மாலை ஆறுமணிக்குக் கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு வீட்டிலிருந்து கீழ்க் கோடியிலிருந்த களத்துக்கு சிதம்பரம் வரும்போது களத்துக்குத் தென்புறம் இருக்கும் ஐயனார் கோவிலை ஒட்டியுள்ள பாதை வழியாகத்தான் வரவேண்டும். பத்து வயசுக்குள்தான் அப்போது அவருக்கு இருக்கும். ஐயனார் கோயில் அருகில் வரும் போது அவருக்கு உள்ளே நெஞ்சுக்குள் இரட்டை உலக்கைபோட்டு இடிப்பது போல 'திக் திக்' என்று இருக்கும். திரும்பிப் பார்க்கப் பயப்பட்டு வேகமாக நடப்பார். ஒரு

சின்னக் குருவியின் சிலும்பல்கூட தூக்கிவாரிப்போடச் செய்யும். உயிரைக் கையில் பிடித்தபடி பரபரவென்று நடந்து களத்தை அடைவார். முன்னிலவு இல்லாத நாட்களில் களம் 'கரு கும்' மெனும் இருட்டில் முழ்கி இருக்கும். அய்யனார் குளத்துத் தவளைகள் வேறு 'கொரா கொரா' என்று கோஷ்டிகானம் மாதிரி வறட்டுக் கூச்சல் எழுப்பியபடி இருளின் பயத்தை அதிகப் படுத்தும்.


களத்தின் வேலிப்படலின் வாசலில் தங்கவேலு காத்திருப்பான். "பயப்படாம வந்தீங்களா சின்னபுள்ளே?" என்று வரவேற்பான். "தூக்குப் போட்டுக்கிட்டு செத்துப் போன இருளம் பொண்டாட்டிதான் இந்த எடத்துலே நாக்குட்டியா அலயுது. அது

கிட்ட வந்தா, 'சீ!நாயே! இதப்பாரு செருப்பு!'ன்னு கால் செருப்பத் தூக்கிக் காட்டுனா கழுதை அலண்டுகிட்டு ஓடிப்போயிடும்" என்றான் ஒருதடவை. அதைக் கேட்டதும் சிதம்பரத்துக்கு மயிர்க் கால்கள் பயத்தில் சிலிர்த்தன. அதற்குப் பிறகு களத்துக்கு வரும்வரை காலருகில் நாய் தொடருவது போல் பயம் எலும்புக் குருத்துக்குள் ஓடும்.


அப்பா வருகிறவரை தங்கவேலு ஏதாவது கதை சொல்லிக் கொண்டிருப்பான். அதெல்லாம் அனேகமாகப் பேய், கொள்ளிவாய்ப் பிசாசு, தீவட்டிக் கொள்ளைக்காரன் கதைகளாகத்தான் இருக்கும். திகிலோடு, அவனைத் தொட்டுவிடாமல் அருகில்

நெருங்கி உட்கார்ந்து கொள்ளுவார். ஒருவேளை அப்படி நெருங்கி வரட்டும் என்று தான் அவன் பயமூட்டும் கதைகளைச் சொல்லுகிறானோ என்றுகூடத் தோன்றும்.


சில சமயங்களில் ஊருக்குள், சேரிக்குள் நடக்கிற கள்ளக்காதல் உறவுகளை ரசமாக, சப்புக்கொட்டிக் கொண்டு சொல்வான். வாய்வழிப் போர்னோகிராபியாக அவை இருக்கும். சில நேரங்களில் கிராமத்து வாத்ஸாயனாராக மாறிவிடுவான். பெண்களின் வகைகளையும், சாதி வாரியாக எந்தச் சாதிப் பெண்ணுக்கு எந்த அங்கம் அழகாய் இருக்கும் என்பதையும் சின்னப் பையனிடம் பேசுகிறோமே என்கிற உறுத்தலே இல்லாமல் - சிதம்பரம் தான் அவனது மன அவசங்களை ஓடிப்போகாமல் கேட்கக்கூடிய சுமைதாங்கியென எண்ணி, விஸ்தாரமாய் விளக்கிக் கொண்டிருப்பான். அப்பாவிடம் அவன் இப்படியெல்லாம் பேசுவதைச் சொல்லலாமா, சொன்னால் 'நீ ஏன் காது குடுத்துக் கேட்டே?' என்று திட்டுக் கிடைக்குமோ என்று பயந்து தனக்குள்ளேயே புதைத்துக் கொண்டுவிடுவார் சிதம்பரம். எப்போது நெல்லடிப்பு முடிந்து களம் காலியாகி காவல் வேலைக்கு முடிவுக்கு வருமோ என்று இருக்கும்.


ஓருவழியாக அப்பா வந்ததும், கையில் லாந்தருடன் தங்கவேலு துணைக்கு வர சிதம்பரம் வீடு திரும்புவார். அவரை வீட்டில் விட்டுவிட்டு அம்மா தரும் சாதத்தைச் சாப்பிட்டுவிட்டு தங்கவேலு லாந்தருடன் அப்பாவுக்குத் துணையாகக் களத்தில் படுக்கத்

திரும்புவான்.


"என்ன அப்டியே சில மாதிரி நின்னுட்டீங்க?" என்று மருது சிந்தனையைக் கலைத்தான்.


"பழைய ஞாபமெல்லாம் வந்துது. சின்ன வயசுலே இங்க பயந்தபடி காவலுக்கிருந்தது, அப்பத் தொணைக்கு இருந்த தங்கவேலு - எல்லாத்தையும் நெனச்சுக் கிட்டேன். எவ்வளவு ஒட்டுதலான ஆட்கள்! பகல்ல காவல் இருந்தப்ப வேல செய்ஞ்ச பண்ணையாட்கள் வீட்டுப் பெண்களும் நினைவுக்கு வர்ராங்க. பூவாயின்னு ஒருத்தி எங்க கிட்ட ரொம்ப வருஷமா வேல செஞ்சாளே ஞாபகம் இருக்கா? அவுளுக்கு எங்கிட்ட சதா ஏதாவது வம்பு வளக்கறதிலே ஒரு சந்தோஷம்.


'ஏங்க சின்னாண்டே! எம் பொண்ணத் தரேன் கட்டிகிறீங்களா?' என்பாள். 'சீச்சீ! அம்மாக்கிட்ட சொல்லுவேன்' என்று நான் அருவருப்புடன் உதறுவேன். சாய்ங்காலம் வேல முடிஞ்சு அவங்க வீடு திரும்புறப்ப அம்மாக்கிட்ட முந்தானையை ஒதறிக் காட்டிட்டுக் கெளம்புவாங்க. பூவாயியின் மடியில ஏதோ முடிச்சு போலக் கனமாகத் தெரியறதப் பாத்துட்டு நான், 'அதென்ன முட்டா இருக்கு? அங்க எதியாவது ஒளிச்சு வச்சிருக்கியா?' ன்னு சிறுபிள்ளத்தனமாக் கேப்பேன். முந்தானைய மறுபடியும் ஒதறி 'அப்றம் முழுசா அவுத்துடுவேன்!' என்று சிரித்தபடி பயமுறுத்துவா. அம்மா 'போடி வம்புக்காரி. அறியாப்புள்ளக்கிட்ட என்ன பேசறதுன்னு கெடை

யாதா?' ன்னு கண்டிப்பாங்க. எவ்வளவு எளிமையான வெள்ளந்தியான ஜனங்க! இப்ப அதும் மாதிரி வேலை முடிஞ்சதும் துணிய ஒதறிக்காட்டச் சொல்ல முடியுமா?"

என்றார் சிதம்பரம்.


"அதென்னவோ நெசந்தான்! கவுடும் சூதும் படியளக்கிற பணக்காரங்கக் கிட்டதான். காலம் மாறிப்போச்சு. இப்ப அந்த ஜனங்களுக்கும் வசதி வாழ்வுன்னு வந்தப்றம் எல்லாருக்குமே கவுட்டுத்தனமும் ஏமாத்துப் புத்தியும் வளந்துட்டுது" என்றான் மருது.


"களத்துலே - கட்டுக்கட்டா நெல்லடிச்சதும், எதிரெதிரா ஆளுங்க நின்னு முறத்தாலே நெல்ல வாரி வாரி ஆகாசத்துல வீசித் தூத்துனதும், நெல் மலயாக் குவிஞ்சிருந்ததும் இன்னும் அப்பிடியெ கண்ணுல நிக்குது. வண்டியிலே நெல் மூட்டைகள அடுக்கி ஏழெட்டு நட வீட்டுக்கு ஆளுங்க கொண்டு போனதும், அதப் பட்டற கட்டி குட்டித் தேர்கள் மாதிரி வீட்டுக்குப் பக்கத்துலே கெணத்தடியிலே வச்சதும் வருஷா வருஷம் பாக்கறதுக்கு அலுக்காத காட்சி!" என்று சிதம்பரம் அந்தக் கால நிகழ்ச்சிகளை மருதுவுக்குச் சொல்கிற மாதிரி தனக்கும் சொல்லிக் கொண்டார். "பட்டற கட்டறதுக்கு களத்துலேர்ந்து நம்ம வீடுவரைக்கும் ஆளுங்க திரிச்ச வைக்கோல் பிரி, மலப்பாம்பு தெரு நெடுக்கப் படுத்துக் கெடக்கிறமாதிரி வளைஞ்சு வளைஞ்சு கெடந்ததும், அதப் பெரிய பெரிய பந்துகளா பந்துகளா ஆளுங்க சுருட்டுனதும் மறக்காத காட்சிதான். தெருவெல்லாம் வைக்கோல் சிதறி மெத்தமேல நடக்குற மாதிரி ரெண்டு நாளைக்கு நடக்கச் சுகமா இருக்கும். அப்போது பரவி இருந்த புது வைக்கோல் வாசனைகூட இப்பக் காத்துலெ மணக்குறமாதிரி ஒரு பிரமை ஏற்படுது "


"எனக்கு வினவு தெரிஞ்சி நம்ம வீட்டுல நான் நெல்லு பட்டறயப் பாத்ததில்லியே!" என்றான் மருது.


"பின் நாளுலே, பட்டறய ராவோட ராவா அறுத்துக் களவாடுன திருட்டுப் பயம் அதிகமானதும் அப்பா வீட்டுக்குள்ளவே பெரிய பெரிய மரத்தொம்பகளச் செஞ்சு அதுல நெல்லப் போட்டுட்டாங்க" என்றார் சிதம்பரம்.


"வீட்டுக்குள்ளப் பத்திரப் படுத்தி வச்சும் பத்திரமில்லாத நெலமையும் வந்துது.கடுமையான ரேஷன் அமுலுக்கு வந்தப்போ சர்க்காரு பகலிலியே ஊடுபூந்து அதிரடிக் கொள்ள அடிச்சது ஒனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் மருதுவை.


பதிலை எதிர்பார்க்காமலே தொடர்ந்து சொன்னார்: "ரேஷன் ஆரம்பிச்சப்போ இப்ப மாதிரி விவசாயிங்க எங்க நெல்லை அரசாங்கம் கொள்முதல் பண்ணணும்னு கேக்கலே. அப்ப நெல் விளைச்சல் இப்ப மாதிரி இல்லே. அதனாலே அரசாங்கமே கட்டாயக் கொள்முதல் பண்ணுச்சு. வீடுவீடா தாசில்தார் தம் படையோட வந்து விவசாயிகளைக் கட்டாயப் படுத்தி நெல்லை அள்ளிக்கிட்டுப் போயிடுவாங்க. கொள்முதல் கட்டாயத்துக்குப் பயந்து பலபேர் பகல்ல ஊர்லியே தென்படமாட்டாங்க.


"ஒரு தடவ ஒரு முரட்டுத் தாசில்தார் அப்பா கிட்ட ரொம்ப மரியாத இல்லாம நடந்துட்டான். அப்பா நெல் தர சம்மதிச்சாலும் விளைச்சல் முழுதுமே தரணும்னு அவன் கட்டாயப்படுத்துனப்ப, அப்பா 'அவ்வளவையும் கொடுத்துட்டா எங்களுக்குச்

சாப்பாட்டுக்கு வேணாமா? ஆளுகளுக்குக் கூலி தர வேண்டாமா?' ன்னு நியாயமாத்தான் கேட்டாங்க. ஆனா அந்தத் தாசில்தார், "சாப்பாடுக்கு இல்லேண்ணா கடையில அரிசி வாங்கிச் சாப்புடு. ஒரு வேள மட்டும் சாப்புடு. ஊரே பட்டினி கெடக்குறப்ப ஒனக்கு மட்டும் என்ன மூணு வேளச் சாப்பாடு?' ன்னு ஒருமையில, ஊர் முழுக்க வேடிக்கப் பாக்க, கேவலமாப் பேசுனான். முரட்டுத்தனமா வீட்டுக்குள்ள புகுந்து தொம்பையக் காலி பண்ணி சுத்தமா அள்ளிக்கிட்டுப் போய்ட்டான். பாத்தவங்க எல்லாம் வாயுருகிப் போய்ட்டாங்க."


"ஆமாமா! எங்கப்பா சொல்லிருக்காரு. ஆனா அந்தத் தாசில்தாரு அடுத்த மாசமே பக்கவாதம் வந்து கைகால் விழுந்து நாக்கு இழுத்துப் போச்சுன்னும் ஜனங்க எல்லாம் 'பெரிய பூஜை பண்ணுறவர், தர்மவான் - அவரக் கண்டபடி பேசுனதாலே தான் கடவுள் வாய ஒருவழியாப் பேசாம அடைச்சுட்டார்'னு பேசிக்கிட்டதாவும் சொல்லுவார்" என்றான் மருது.


"அறிவுபூர்வமா அப்டிச் சொல்றது சரியில்லதான். ஆனா அப்போதைக்கு அது ஏதோ அப்பா பட்ட மனக் காயத்துக்கு ஒரு ஆறுதலாத்தான் பட்டுது" என்ற சிதம்பரம், "வா அய்யனார் கோயிலப் பாத்துட்டு வரலாம் என்று நடந்தார். மருதும் நடந்தான்.


(தொடரும்)

கால நதிக்கரையில் - 20

இருவரும் கோயிலுக்கு முன் உள்ள அப்பாவு ஆசாரி வீட்டருகே வந்ததும் நின்றார்கள். சிதம்பரம் வீட்டைப் பார்த்தார். அதுவும் கூரை வீடுதான். ஆனால் சேதமில்லாமல் அவ்வப்போது பராமரிக்கப்பட்டு வருவது தெரிந்தது. திண்ணையின் பக்கச் சுவர் ஒன்றில் எம்.ஜி.ஆரின் வண்ணப் படம் பெரிதாக வரையப்பட்டிருந்தது. படம் தத்ரூபமாக இருந்தது.


"அட! யாருப்பா வரைஞ்சது இந்தப் படத்த? அப்பாவு ஆசாரி மகன் நடேச ஆசாரி இருக்காரா?" என்று கேட்டார் சிதம்பரம்.


"அவரும் காலமாயி ரெண்டு வருஷம் ஆச்சுங்க. இது அவரோட மகன் சண்முகம் வரைஞ்சது. அவனும் அப்பா மாதிரியே பெரிய ஓவியக்காரன்" என்றான் மருது.


"பாத்தியா 'குலக்கல்வி கல்லாமல் பாகம் படும்' கிறது சரியாத்தான் இருக்குது. வீட்டுலே இருக்கானா அவன்?"


"அவன் இப்ப துபாயிலே இருக்கான். அப்பா காலமாறதுக்கு முந்தியே அங்க போய்ட்டான். சாவு சேதி கேட்டு வந்து காரியமெல்லாம் முடிஞ்சதும் திரும்பப் போய்ட்டான்"


சிதம்பரத்துக்கு அதே திண்ணையில் நடேச ஆசாரி அமர்ந்து சுவரில் சித்திரம் தீட்டியதும், தான் அருகிருந்து பார்த்ததும் கண் முன் விரிகிறது. திரும்பி வீட்டேதிரே பார்த்தார். அங்கே அப்பாவு ஆசாரி கோவிலுக்காகச் செதுக்கிக் கொண்டிருந்த

ரிஷப வாகனத்தை அருகே உட்கார்ந்து தான் பார்த்ததும், சற்றுத் தள்ளி அவர் மகன் நடேச ஆசாரி கடைசல் பட்டறையில் ஏதோ ஒரு சித்திரவேலைப்பாட்டை உளி கொண்டு உருவாக்கிக் கொண்டிருந்ததும், தன் வேலைக்கிடையே அப்பாவு ஆசாரி அதைப் பார்த்து 'உளிய அழுத்திப் பிடிக்காதே' என்று திருத்தியதும் காட்சி காட்சியாகக் மனத்திரையில் ஓடுகிறது.


நடேச ஆசாரி மரம் மற்றும் சுதை வேலைகளிலும் வல்லவர். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் திரௌபதை அம்மன் கோவிலில் பாரதம் பாடிவந்தார். நல்ல இசை ஞானமும் உண்டு. பாரதக் கதை பாடும்போது நடத்தப்படும் 'கீசக வதம்' நாடகத்தில்

திரௌபதையாக அவர் வேஷம் போடுவார். ஊரில் சிறுத்தொண்டர் அன்னப்படையல் நடக்கும் போது அவர் தான் சிறுத்தொண்டர் வேஷம் அணிந்து, பிள்ளை இல்லாதவர்கள் வேண்டுதலின்படி மாவில் செய்த சீராளன் பிரதிமையை மேளதாளத்துடன்

ஊர்வலமாக எடுத்துச் செல்வார். மாரியம்மன் கோவிலின் முன் நடக்கும் படையலில் பிள்ளைக் கறிக்காக சீராளனை அரியும் போது அவருக்குச் சாமி வந்துவிடும். ஆவேசமாய் உடலை முறுக்கி, பிடிக்கு அடங்காமல் உருண்டு புரண்டு மூர்ச்சையாகி விடுவார். அவருக்கு வரும் ஆவேசத்தைப் பார்க்கவே ஊரில் பலரும் அடுத்த வருஷத் துக்காகக் காத்திருந்ததுண்டு. அடுத்து நடைபெறும் சிறுத்தொண்டர் நாடகத்திலும் அவர்தான் சிறுத்தொண்டர். வண்ணம் தீட்டுவதிலும் வல்லவர் என்பதால் எல்லோருக் கும் ஒப்பனை போடுவதும் அவர்தான். விஜயதசமியில் பெருமாள் கோவில் அம்பு போடும் விழாவுக்குப் புராணகால வில் அம்பு தயாரித்துத் தருவதும் அவர்தான். சிவன் கோவிலில் முருகனுக்கு விசேஷ நாட்களில் செய்யும் அலங்காரங்களுக்கு குருக்களுக்குப் பெரிதும் உதவுவது அவர்தான். காமுட்டித் திருவிழாவில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் ரதி மன்மதன் படங்களை வரைந்து தருவது அவர்தான்.


அவரது வலது காதில் எப்போதும் கூராகச் சீவிய நீளப் பென்சில் இருக்கும். ஊர் முழுக்கக் காலியாய் இருக்கும் தெருப்பக்கச் சுவர்களிலும், சிலரது வீட்டுத் திண்ணைச் சுவர்களிலும் சுவாமி படங்களை - நடராஜா, லட்சுமி, சரஸ்வதி,

விநாயகர் - என்று வரைந்தபடியே தென்படுவார். ஆனால் எல்லா உருவங்களுக்கும் முகம் மட்டும் முழுமை அடைந்திருக்காது. கண்கள் மட்டும் திறக்கப்படாமல் வெறும் வெள்ளை விழிகளாய் இருக்கும். அதனால் சித்திரங்கள் அழகாக இருந்தாலும் வெள்ளை விழியால் குருடன் நம்மைப் பார்க்கிற மாதிரி, ஒரு மாதிரி இருக்கும்.


அடுத்த வீடான அருணாசலப் பண்டாரத்தின் வீடு இருந்த இடம் குட்டிச் சுவர்களுடன் காலியாகக் காட்சியளித்தது.


"பண்டாரம் வீடு என்னாச்சு மருது? அவரோட வாரிசு யாருமில்லியா?" என்று கேட்டார் சிதம்பரம்.


"பண்டாரத்தின் பெரியமகன் சிவலிங்கம்தான் இதுலே ரொம்ப நாள் குடி இருந்தாரு. அவரும் ரெண்டு வருஷத்துக்கு முன்னால காலமாயிட்டாரு. அடுத்தவன் சுப்பராயலு - நம்மளோட சின்ன வயசுலே படிச்சவன் சிவங்கோயிலு மெய்காவலா இருந்தான். அவனும் அண்ணனுக்கு முந்தியே போய்ட்டான். வீட்டப் பராமரிக்க ஆருமில்ல. இடிஞ்சு குட்டிச் சுவராக் கெடக்கு" என்றான் மருது.


அந்தச் சிவலிங்கம் அப்பாவிடம் மிகுந்த விசுவாசமும் மரியாதையும் மிக்கவன். எப்போதும் அப்பாவுடன் வயற்காட்டில், நெல் களத்தில் இருப்பான். அப்பாவைப் பற்றி யாரும் எதுவும் அவன் முன்னிலையில் சொல்லிவிட முடியாது.


சிதம்பரத்துக்குப் பத்து வயசு இருக்கும்போது ஒருதடவை அவனுடன் நெல் களத்தில் காவல் இருக்க நேர்ந்தது. அப்பாவின் சாதுவான குணத்தை ஏமாளி எனக் கருதிப் பலரும் அப்பாவை ஏமாற்றி வருவதாகச் சொன்ன சிதம்பரம், "இந்த அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியலை! எல்லாரியும் நல்லவங்கண்ணு நெனைக்கிறாங்க" என்று எல்லா விடலைப் பையன்களும் பேசுகிறமாதிரி சொல்லிவிட்டார். சிவலிங்கம், கண்களை உருட்டி ஆவேசமாக "என்னா சொன்னீங்க தம்பி? நம்ம அப்பாவுக்கு ஒண்ணும் தெரியாதா? அவங்களை விட உங்குளுக்கு அதிகம் தெரியுமோ? சின்ன வயசு, புரியாமப் பேசுறீங்க. அப்பாரைவிட இங்க அதிகம் தெரிஞ்சவங்க ஆரு?" என்று சண்டைக்கு வந்துவிட்டான். அவன் போன்ற விசுவாசிகளை இப்போது பார்க்க

முடிகிறதா என்று சிந்தனை ஓடியது.


கோவில் வாசலை நெருங்கியதும் ஏதோ ஒரு மாற்றம் தெரிவதை சிதம்பரம் உணர்ந்தார். முன்பு, வாயிலுக்கு முன்மண்டபம் கிடையாது. இப்போது பெருமாள் கோவிலில் இருப்பது போலவே - கற்றளியாக இல்லாமல் - செங்கல்லால் ஆன முன்மண்டபம் அமைக்கப் பட்டிருந்தது.


''இது எப்பப்பா கட்டுனது? அப்பா ரொம்ப நாளாக் கட்டணும்னு சொல்லிக்

கிட்டிருந்தாங்களே!"


"அது அப்பா காலமானதுக்கப்றம் வடக்குத் தெரு ராசமாணிக்கம் முயற்சி எடுத்துக் கட்டுனாரு. மேலே போட்டிருக்கிற நீளமான பலகைக் கல்லு முழுக்க நம்ம அம்மா உபயம் - அப்பா ஞாபமாக் குடுத்தாங்க. ஊர் ஊர் ஊராப்போயி நன்கொட வசூல் பண்ணிக் கும்பாபிஷேகமும் அவருதான் பண்ணுனாரு. அது நடந்து பத்து வருஷம் ஆச்சி" என்றான் மருது.


கோயில் விமானத்தை நிமிர்ந்து பார்த்தார். வண்ணம் மங்கிபோயிருந்தது. பிரகாரத்தைச் சுற்றிப் பார்க்க விழைந்தார். இந்தப் பிரகாரத்தைச் சின்ன வயதில் தினமும் அப்பாவுடன் சுற்றியதுண்டு. பள்ளியில் ஏதாவது தண்டனையிருந்து தப்பவோ, ஆசைப்பட்டது கிடைக்கவோ அவர் பிரகாரத்தைச் சுற்றுவதாக வேண்டிக் கொள்வார். பிரச்சினையின் கடுமைக்கேற்ப சுற்றுக்களின் எண்ணிக்கை வித்தியாசப்படும். 'அப்பனே! கைலாசநாதரே! இன்னிக்கு வாத்யார்க்கிட்ட அடிவாங்காம இருக்கணும்'பா. உன்ன பத்து சுத்து சுத்துறேன்' என்று வேண்டிக் கொள்வார். எப்போதுமே வேண்டுதல் பலிக்கும் என்பதில்லை. ஆனால் பலிக்காவிட்டாலும் தெய்வக் குத்தம் வந்துவிடும் என்று சொன்னபடி பிரகாரத்தைச் சுற்றிவிடுவார். ஒரு தடவை நல்ல மழையில்கூட சொன்ன சொல்லைக் காப்பாற்ற குடையைப் பிடித்தபடி சுற்றி வந்திருக்கிறார். இப்போது நினைக்கும்போது சிரிப்பு வருகிறது.


பிரகாரத்தைச் சுற்றி இருந்த நந்தவனத்தைக் காணோம். அதற்கும் கோவில் உபயோகத்துக்குமான கிணறு மூடப் பட்டிருந்தது.


"எங்கப்பா நந்தவனம்?" என்றார் சிதம்பரம்.


"சரியான பராமரிப்பு இல்லாம காஞ்சு போச்சுங்க. கெணறும் வத்திப் போச்சு.வேதவிநேசக் குருக்கள் றக்கோயிலுக்கு மாறிப் போனதுக்கப்றம் நெலயா இங்கியே தங்கிப் பூசை பண்ணுற குருக்கள் யாரும் அமையிலெ. ராஜேந்திரப்பட்ட ணம் கோயில் குருக்கள்தான் காலையிலும் அந்தியிலும் வந்து பூஜை பண்ணிட்டுப் போவாரு. உச்சிக் காலப் பூஜை நிண்ணுபோயி ரொம்ப வருஷம் ஆகுது. ராசமாணிக்கம் இருந்தவரிக்கும் கோயிலுக்கு வந்து குத்தம் கொறயக் கேப்பாரு. அவரும் போனதுக்கப்றம் இந்தக் கோயிலப்பத்தி யாருக்கு அக்கறை? கோயில் நிர்வாக அதிகாரியும் ராஜேந்திரப் பட்டணத்திலியே ஆபீஸை வச்சிக்கிட்டு இங்கே வர்ரதே இல்ல. எளவட்டத்துக் கெல்லாம் அரசியல்லதான் நாட்டம். அதுலே ஏதாவது சுருட்டிப் பொழைக்கலாம். இங்க என்னா கெடைக்கும்? கோயில் நெலத்தக் குத்தகைக்கு எடுத்தவன்லாம் சரியாக் குடுக்கறதில்லே. நித்ய பூஜைக்கே தள்ளாட்டம்" என்று பெருமூச்சு விட்டான் மருது.


பேசிக்கொண்டே சன்னதிக்கு எதிரே இருந்த கண்டாமணிக்கருகில் வந்து நின்றார்கள். அந்தக் கோவிலின் கண்டாமனி பெரியது. பெருமாள் கோவில் நகரா 'டப டப' என்று பேரிரைச்சலோடு முழங்குகிறமாதிரி இந்த மணி 'டாங் டாங்' என்று

ஊர் அதிர முழங்குவதும் சிதம்பரத்துக்குப் பிடிக்கும். இரண்டுமே ஊர் முழுதுமே கேட்கும். கண்டாமணியை மெய்காவல் இழுத்து அடிக்கையில் அதன் மேலுள்ள காவடி போன்ற அமைப்பு முன்னால் வளைந்து வளைந்து - குனிந்து சிரம் தாழ்த்தி வணங்குகிறமாதிரி இருக்கும். அதைப் பார்க்க வேடிக்கையாய் இருக்கும்.


திரும்பி இடப்பக்கம் இருந்த குளத்தின் படித்துறையைப் பார்த்தார். அதுவும் உடைந்து சிதிலமாகி இருந்தது. குளமும் வற்றியும் தூர்ந்தும் பார்க்க வறட்சியாய்த் தெரிந்தது. படித்துறையின் இரண்டு புறமும் கரையில் சரக் கொன்றை மஞ்சள் வண்ணத்தில் சரம் சரமாய்ப் பூத்துத் தொங்கும். காலைச் சூரியனின் கதிர்கள் அந்த மஞ்சள் பூக்களின் வழியே ஊடுருவி ஒருவிதப் பரவசத்தைக் கொடுக்கும். இப்போது மரத்தையே காணவில்லை. காட்டுக்கருவைதான் மண்டிக் கிடந்தது.


இந்தப் படியில் சிதம்பரம் பையனாக இருந்தபோது அப்பாவைப்போல் சிவலிங்கத்தை வைத்துப் பூஜை செய்தது நினைவுக்கு வருகிறது. அப்பா தருமை ஆதீனத்திடம் தீட்சை பெற்று பெரிய பூஜை செய்தவர்கள். தினமும் அதிகாலையில் எழுந்து வயற்காட்டுக்குப் போய் நிலங்களை எல்லாம் சுற்றிப் பார்த்துவிட்டுத் திரும்பிவரக் காலை பத்து மணியாகும். பிறகு கிணற்றடியில் குளித்து அவர்களே ஆசாரமாய்க் கிணற்று நீரைச் சின்னக் குடத்தில் எடுத்து வந்து பூஜைக்கு அமர்வார்கள். இடுப்புத் துண்டுடன் நெற்றி, மார்பு, கை என்று பதினாறு பட்டைகளுமாய் விபூதி பூசி, கழுத்தில் தங்கக் கொப்பு வைத்த பெரிய ருத்திராட்ச மாலை அணிந்து பூஜைக்கென்று கட்டப்பட்டிருக்கும் சின்ன மேடையில் பூஜைக் கிண்ணங்க¨ளைப் பரப்பி, புற்று மண்ணால் தினமும் புதிதாக சிவலிங்கம் செய்து பூஜை செய்வார்கள். வெகு நேரம் தேவாரமும் திருவாசகமும் பாடி கண்மூடி பூஜிப்பார்கள். பூஜை முடிய ஒரு மணிக்கு மேலாகும். பனிரெண்டு மணிக்குதான் ஒரே வேளையாய் சாப்பாடு.


அப்பா பூஜை செய்யும் போது பலமுறை அருகிருந்து பார்த்துப் பார்த்து சிதம்பரத்துக்கும் அது போல் பூஜை செய்ய ஆவல் பிறந்தது. அப்பா பாடும் பாடல்கள் எல்லாம் மனப்பாடம். அப்பாவின் சின்ன பழைய ருத்திராட்சமாலையை அணிந்து

கொண்டு, அப்பாவைப் போல¦வே விபூதிப் பட்டை போட்டுக் கொண்டு, ஒரு சின்ன மாவுக்கல் சிவலிங்கத்தையும் சின்ன குட்டி நந்தியையும் வைத்து இந்தப் படித்துறையில் அமர்ந்து அப்பா பாடும் பாடல்களைப் பாடி அவரும் பலதடவை பூஜை செய்திருக்கிறார். அப்பாவுக்குப் பிறகு அவர்தான் பூஜைக்கு வாரிசு என்றும் அப்பாவின் பூஜைப்பெட்டியை அவர்தான் வாங்கிக் கொள்ளப் போகிறார் என்றும் அருகிருந்து பார்த்த குருக்களும் மெய்காவலும் பேசிக் கொள்வார்கள். இப்போது அதை நினைத்துப் பார்த்தார். சின்னவயதின் மயக்கம் பின்னர் மேல் படிப்புக்குப் போனபோது மறைந்து போய், நாத்திகம் பேசுகிறவராய் அவர் ஆவார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.


"கோவிலுக்குத் தர்மாத்தாக்கள் இல்லியா? அவங்க தினமும் கோயிலுக்கு வரமாட்டாங்களா? இதயெல்லாம் கவனிக்க மாட்டாங்களா?" என்று கேட்டார் சிதம்பரம்.


'அதான் சொன்னனுங்களே. பெரிய கோயில்னா பரிவட்டம், முதல் மரியாத எல்லாம் கெடைக்கும். அதோட வருமானம் உள்ள கோயிலா இருந்தா அதிகாரிக்கு ஒத்துப்போனா நாய்க்குக் கறித்துண்டு வீசுறக் கணக்கா எதாவது பொறுகித் திங்க

லாம். இங்கதான் ஒடையவரே ஒருவேள நிவேத்தியத்துக்கு அல்லாடுறாரே! அதனாலே போட்டி இல்லே. ஆளும்கட்சிக்காரனுவ தான் மூணுபேரு பேருக்குத் தர்மகர்த்தான்னு இருக்கானுவ. அதிலே ஒருத்தன் சேரி ஆளு. யாரு தெரியுங்களா? உங்கப் பண்ணக் காரன் குண்டுமணி மவன் மூக்கறதான் ஒரு தர்மகர்த்தா. அப்பா ஒக்காந்த எடத்துல இவன்லாமா?" என்று அங்கலாய்த்தான் மருது.


"அப்படியெல்லாம் நெனைக்கக் கூடாதுப்பா. அதுதான் ஜனநாயகம். எல்லாருக்கும் வாய்ப்புத் தரணுமில்லியா? அத்தோட அப்பாவோ மத்தப் பெரியவங்களோ என்னா சாசுவதம்? அவங்கதான் எத்தினி நாளைக்கு இருப்பாங்க? காலம் மாற மாற எண்ணங்களும் மாறித்தானே ஆகணும்?" என்று அவனை சமாதானப் படுத்தினார்.


"அப்படி இல்லீங்க. அந்தக் காலத்துலே தெரியாமியா ஊர்ப் பெரிய மனுஷாள மணியம், தர்மகர்த்தான்னு வச்சாஙக். பணத்தேவை இல்லாதவங்கண்ணா பொதுப் பணத்துக்கு ஆசப்பட மாட்டாங்க, இதுமாதிரி கோயில்ல பூஜைக்கு தள்ளாட்டம்னா

தெய்வத்துப் பயந்து கைப்பணத்தப் போட்டுக் கோயில்ல விளக்கு அணையாமப் பாத்துக்குவாங்க. இப்ப மாதிரி அண்ணாடங்காச்சிகளப் போட்டா அவனுக்கே திண்டாட்டங்கறச்சே ஆண்டவனுக்கு எப்புடிச் செலவழிப்பான்?" என்று மருது வாதம் செய்தான்.


"நமக்கு ஜனநாயகம் இன்னும் பிடிபடல்லே. எல்லாம் போகப்போகச் சரியாப் போகும். சரி போலாமா?" என்று நடந்தார்.


"எங்க தங்கப் போறீங்க?" என்று விசாரித்தான் மருது.


"அப்பு வீட்லதான் ரெண்டு நாளைக்கும். அவங்களுக்குக் கஷ்டம் வேணாம்னு கொஞ்சம் செலவுக்குப் பணம் கொடுத்திருக்கேன்."


"அது சவுரியப்படுங்களா? சொந்த வீட்டியும்தான் வித்துட்டீங்க. இப்ப விருந்தாளி மாதிரி சொந்த ஊர்லியே ஒருத்தர் வீட்டுலே தங்குறமாதிரி ஆயிப்போச்சு! சரி, போங்க. காலைலே நான் அங்க வந்து பாக்குறேன்" என்று விடை பெற்றுக் கொண்டான் மருது.


சிதம்பரம் அப்பு வீட்டை நோக்கி நடந்தார்.


(தொடரும்)

கால நதிக்கரையில் - 19

சிவன் கோவிலுக்கு முன்னதாக குளத்தங்கரை ஓரமாக இருந்த முதல் வீட்டை சிதம்பரம் மறக்க முடியாது. அவரது வலது உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கடியே அரையங்குல நீளத்து நிலைத்துவிட்ட தழும்பு ஒன்று அந்த வீட்டை நினைவூட்டிக் கொண்டிருக்கிறது.

அந்த வீடு - அவர்கள் வீட்டில் வெகு காலமாய் வேலை செய்து வந்த சுந்தரத்தினுடையது. சுந்தரத்தின் கணவன் தருமலிங்கமும் சிதம்பரம் வீட்டில் சிறு வயதிலிருந்தே வேலை செய்து வந்தவர். சுந்தரம் வீடு கூட்டுவது, பாத்திரம் தேய்ப்பது, பிள்ளைகளுக்குக் குளிப்பாட்டுவது போன்ற வேலைகளையும், தருமலிங்கம் வண்டி ஓட்டுவது, கிணற்றிலிருந்து நீர் சேந்தி வருவது, பால் கறப்பது போன்ற இதர வேலைகளையும் செய்து வந்தார்கள்.

காலை வேலைகள் முடிந்ததும் சுந்தரம் வீடு திரும்பும்போது சில சமயங்களில் மூன்று வயதுக் குழந்தையாயிருந்த சிதம்பரத்தை இடுப்பில் தூக்கிக் கொண்டு செல்வதுண்டு. அவர்கள் வீட்டில் சிதம்பரத்துக்கு விளையாட அவர் வயதே ஒத்த அவர்கள் மகன் மருது இருந்தான். மதியம்வரை சிதம்பரம் அவர்கள் வீட்டில்தான் இருப்பார். பிள்ளைகள் குளக்கரைக்குச் சென்று விடாமலும் ஆபத்தான விளையாட்டில் ஈடுபடாமலும் வேலைக்கிடையே சுந்தரம் கவனமாய் இருப்பதுண்டு.

ஒருமுறை சுந்தரம் அடுப்படியில் வேலையாய் இருக்கையில் சிதம்பரமும் மருதும் வீட்டின் பின்புறம் இருந்த பூவரச மரத்தடியில் விளையாடிக் கொண்டிருந்தார் கள். அப்போதுதான் அந்த விபத்து நடந்தது.

பூவரசம் பூ எப்போதுமே சிதம்பரத்துக்குப் பிடிக்கும். அதன் மஞ்சம் வண்ண இதழ்களும் உள்ளே அடிப்பகுதியில் வட்டமாகத் தெரியும் கருஞ்சிவப்பு நிறமும் அவருக்குப் பரவசமூட்டுபவை. இப்பொழுது மரம் நிறையப் பூத்திருந்தது. கொஞ்சம் பூக்க¨ளைப் பறிக்க சிதம்பரம் ஆசைப் பட்டார். பூ உயரத்தில் இருந்தது. பெரியவர் களுக்குக் கைக்கெட்டும் தூரம்தான். ஆனால் சின்னப் பிள்ளைகளுக்கு எட்டாதபடி இருந்தது. மரத்தின் மீது ஒரு நீண்ட மூங்கில் சார்த்தி இருந்தது. மருதுவைக் கழியைப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு சிதம்பரம் அந்தக் கழியைப் பற்றிக் கொண்டு ஏறினார். குரங்கு வாசற்கம்பிமீது நடக்கிற மாதிரிதான். கால் நழுவி எந்தக் கணத்திலும் விழுந்து விடலாம். ஆனாலும் பூவைப் பறிக்கும் ஆவலில் தத்தித் தடுமாறி ஏறி விட்டார். கிட்டத்தில் ஒரு பூ இலைக்கடியில பாதி மறைந்தபடி தெரிந்தது. எட்டிக் கையை நீட்டி அதைப் பறித்தார். அப்போது 'சுரீர்' என்று ஏதோ உள்ளங் கையில் குத்தியது மாதிரி இருந்தது. 'வீல்' என்று அலறினார். மருது பயந்து போய் "அம்மா..அம்மா... " என்று வீரிட்டான். "ஐயோ, என்னடா?" என்று சுந்தரம் அடுப்படி யிலிருந்து ஓடி வந்து பார்த்தால்...!

சிதம்பரம் மூங்கில் கழியில் சரிந்து தொத்தியபடி அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறார். வலது உள்ளங்கையிலிருந்து ரத்தம் கொட்டுகிறது. கால் கட்டை விரல்கள் மட்டும் மூங்கில் கழியை அணைத்தபடி இருந்தன. 'ஐயோ.!' என்று பதறிய படி சுந்தரம் ஓடிவந்து தொங்கும் சிதம்பரத்தைத் தலையில் தாங்கிக் கொண்டார்.சிதம்பரத்தின் வீறல் நிற்கவில்லை. "ஐயோ! யாராவது ஓடியாங்களேன்!" என்று சுந்தரம் அலறியது கேட்டு பக்கத்து வீட்டுப் பண்டாரம் ஓடி வந்தார்.
"ஐயோ, தூண்டில் முள்ளுல்ல கையிலே மாட்டிக் கிட்டிருக்கு.......!" என்று அலறியவராய் ஓடி வந்து பல்லால் தூண்டில் முள்ளின் இணைப்பு நூல் கயிற்றைக் கடித்து அறுத்து சிதம்பரத்தை விடுவித்தார். சிதம்பரத்தைக் கீழே இறக்கி அவர் கதறக் கதற தூண்டிலின் வளைவான கூரிய முள்ளை லாகவாய்ப் பிடுங்கினார் பண்டாரம். ஆற்றில் மீன் பிடிக்கும் பெரிய தூண்டில் அது. தூண்டில் முள் ஒரு குட்டி அரிவாள் மாதிரி பெரிதாக இருக்கும். கனமான நீண்ட மூங்கிலில் கட்டிய முரட்டு நூலின் கயிற்றில் அது இணைக்கப் பட்டிருந்தது. மீன் பிடிக்கும் நேரம் போக மற்ற நேரங்களில் அதனை மரத்தில் சார்த்தி வைப்பார்கள். சிதம்பரத்தில் கண்ணுக்கு இலைகளுக்கிடையே மறைந்திருந்த தூண்டில் முள் தெரியவில்லை. உள்ளங்கையில் ஆட்காட்டி விரலுக்கும் மோதிர விரலுக்கும் இடையே புகுந்து ஆட்காட்டி விரலுக்கு அடியில் குத்தி மறுபக்கம் வந்திருந்தது. உடனே பக்கத்து நகர ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோய், கட்டுக்கட்டி கை பூரணமாகக் குணமடைய ஒரு மாதத்திற்கு மேல் ஆயிற்று.

இப்போது நினத்தாலும் சிதம்பரத்துக்கு எலும்புக் குருத்துக்குள் பயம் ஊடுருவி சில்லிட வைக்கிறது. சுந்தரம் மட்டும் உடனே ஓடி வந்து தலையில் தாங்கவில்லை என்றால் சிதம்பரத்தின் கால்பிடி நழுவி, அந்தரத்தில் தொங்கி கனம் தாளாமல் கை விரல்களுக்கிடையில் அறுந்து...........ஐயோ அதை நினைத்தாலே சிலிர்க்கிறது!

இதனால் மட்டுமின்றி, சிதம்பரத்துக்கு சுந்தரம் மீதும் தருமலிங்கம் மீதும் ஒரு மதிப்பும் கனிவும் இருந்தது. இருவரும் அவர்கள் வாழ்நாள் முழுதும் சிதம்பரம் வீட்டிலேயே வேலை செய்தார்கள் என்பதல்ல அதற்குக் காரணம். அவர்கள் இருவரும் தங்களை வேலைக்காரர்களாகவே எண்ணாமல் அவ்வீட்டின் உறுப்பினர்களாகவே கருதி பொறுப்புடனும் பாசத்துடனும் பணி செய்தார்கள். சிதம்பரத்திடமும் மற்ற குழந்தைகளிடமும் மிகவும் பாசம் காட்டினார்கள். அவர்களுக்கு அம்மா தாராளமாகவே ஊதியம் கொடுத்தது மட்டுமின்றி வீட்டில் எது செய்தாலும் அவர்களுக்குக் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள். அதோடு அவர்கள் வேலை செய்யும் போது அம்மாவும் சும்மா மேற்பார்வையிடாமல் தானும் கலந்து கொண்டு செய்வார்கள். "நாங்கதான் இருக்கமே, நீங்க ஏன் ..?" என்று அவர்கள் தடுத்தாலும் வேலைகளில் பங்கு கொள்வது அம்மாவின் சுபாவம். வேலைக்காரர்கள் அம்மாவுக்கு உதவிக்குத்தானே தவிர முழுதும் அவர்களிடமே விட்டுவிட்டு மேற்பார்வை இடுவதற்காக அல்ல.

இவ்வளவு பரிவோடு அவர்களிடம் இருக்கும் அம்மா ஒரு விஷயத்தில் மட்டும் சுந்தரத்தைச் சிறுமைப் படுத்துகிற மாதிரி நடந்துகொள்வது சிதம்பரத்துக்கு உறுத்தலாய் இருந்தது. சுந்தரம் வீடு கூட்டும்போது காமிரா அறைக்குள் கூட்டச் சென்றால் அம்மா பிள்ளைகளில் யாரையாவது உடன் காவலுக்கு இருக்கச் சொல்லுவார்கள். அந்த அறைக்குள் மறைத்து எடுத்துச் செல்கிறமாதிரி எதுவும் திறந்து கிடப்பது இல்லை என்றாலும் அம்மா யாரையாவது உடன் அனுப்புவது சுந்தரம் வேலைக்கு வந்தது முதலே பழக்கமாய் இருந்து வந்திருக்கிறது. ஆனால் ஒரு தடவை கூட சுந்தரம் அதற்காக முகம் சுளித்ததில்லை. "இத்தினி வருஷமா செய்யிறேன், இன்னும் எம்மேலே நம்பிக்கை இல்லியா?" என்று கேட்க வேண்டாமோ? ஊகூம்! 'அவர்கள் பொருள், அவர்கள் எச்சரிக்கையாய் இருக்கிறார்கள்' என்றுதான் நினைப்பு ஓடி இருக்குமே தவிர, எதிர்ப்புணர்ச்சி இருந்ததாகத் தெரியவில்லை. அம்மாவுக்கும் அதில் உறுத்தல் இல்லாதது போலவே சுந்தரத்துக்கும் அதில் உறுத்தல் இருந்ததில்லை என்பதுதான் சிதம்பரத்தின் ஆதங்கம். இன்னும் சொல்லப்போனால் அறைக்குள் கூட்டச் சென்றால் சுந்தரமே பிள்ளைகளில் யாரையாவது அழைத்து 'காமிரா கூட்டப் போறேன் வா' என்று அழைப்பார். தன்னைக் கட்ட, யானை தானே தன் சங்கிலியை எடுத்துக் கொடுப்பது போல அது இருக்கும்.

'இப்படியுமா அப்பாவியாக - தான் சிறுமைப் படுத்துவதை உணராமல் அல்லது உணர்ந்தும் அது பற்றி முகம் சுளிக்காமல் - மனிதர்கள் இருப்பார்கள்?' என்று சிதம்பரத்துக்கு சுந்தரத்தின் மீது வியப்பும் மதிப்பும் ஏற்படும்.

- 'இன்று அப்படி விசுவாசமான வெகுளியான மனிதர்களைப் பார்க்க முடியுமா?' என்று சிதம்பரத்துக்கு சிந்தனை ஒடியது. சுந்தரம் அவர் மனக்கண்னில் தோன்றி மென்மையாய் முறுவலித்தார்.

இதோ! சுந்தரத்தின் வீடு வந்து விட்டது. அதே கூரை வீடுதான். ஆனால் ஆள் குடியிருக்கிற மாதிரி கூரை திருத்தி வீடு சேதமில்லாமல் இருந்தது. வீட்டின் முன்னே வந்து நின்றார். யார் இருப்பார்கள்? சுந்தரமும், தருமலிங்கமும் அப்போதே ஐம்பது வயதுக்கு மேல். மருது இருக்கலாமோ என்னவோ! திறந்திருந்த முன் வாயிலிலிருந்து யாரோ வெளியே வருவது தெரிந்தது.

"ஆருங்க? ஆரைப்பாக்குறீங்க?" என்றபடி முண்டா பனியன் அணிந்த ஒரு ஆள் வெளியே வந்தார்.

" இது மருது வீடுதானே?"

"ஆமாங்க. நீங்க யாருன்னு தெரியலையே!"

"அட! நீ மருது தானே?" என்று அடையாளம் கண்டுகொண்டவராய் சிதம்பரம் மகிழ்ச்சி பீரிடும் குரலில் கேட்டார். "என்னத் தெரியுதா? சிதம்பரம்...".

ஒரு கணம் திகைத்த அவன், "அய்! நீங்களா? அய்யோ! என்ன அதிசயமா இருக்கு? எப்ப வந்தீங்க? எங்கேர்ந்து வர்ரீங்க? எங்களயெல்லாம் இன்னும் ஞாபகம் வச்சிருக்கீங்களே!" என்று கூவினான் பரவசத்துடன்.

"காலைலேதான் வந்தேன். ரிடையர் ஆயாச்சு. ரொம்ப வருஷம் ஆச்சேன்னு நம்ம ஊரைப் பார்க்கிறதுக்காக வந்தேன். தெரிஞ்ச முகம் ஆருமே இல்லே. அப்பு வீட்டுக்குப் போனேன். அவனுக்கு ஞாபக முட்டவேண்டி இருந்தது. பழைய மனுஷங்க யாரையாவது பாக்க மாட்டமான்னு ஏக்கமா இருந்துது. நல்ல வேளை நீயாவது இருக்கியே!"

"நீங்க வேலைக்குப் போனப்புறம் உங்களப் பாக்கவே முடியிலியே! இனிமெ என்னிக்காச்சும் உங்களப் பாப்பமான்னு இருந்துது. நீங்களே வந்துட்டிங்க" என்றான் மருது உணர்ச்சிப் பெருக்குடன்.

"சரி! நீ என்ன செய்றே, அப்பா அம்மால்லாம் இருக்காங்களா எல்லாம் சொல்லு" என்றார் சிதம்பரம்.

"அய்ய, வெலியிலியே நிக்கிறீங்களே உள்ள வாங்க" என்றழைத்தபடி ஓடி திண்ணையைத் தன் மேல் துண்டால் தூசி தட்டி உட்காரக் காட்டினான். சிதம்பரம் திண்ணைமீது அமர்ந்தார்.

"அப்பா அம்மா செத்து பத்து வருஷத்துக்கு மேலே ஆச்சி. நா பத்தாவதுக் கப்றம் டிரைனிங் படிச்சு வாத்தியாரா இருந்துட்டு இப்பதான் ரிட்டையர் ஆனேன். இங்கியேதான் இருக்கேன். ஒண்ணும் பெரிசா மாத்தமில்லே. அன்னைக்கு நீங்க பாத்த அதே மாதிரிதான். என்ன, அப்பா அம்மா மாதிரி வீடு சேவகம் செய்யாம தேக உழைப்பு இல்லாம, பிக்கல் பிடுங்கல் இல்லாத வாத்தியார் உத்தியோகம். எதோ கவுரமா ஓடிக் கிட்டிருக்கு"

"எங்க போனாலும் எத்தினி வருஷம் ஆனாலும் சொந்த ஊர, பாலிய ஞாப கத்தை மறக்க முடியுமா? அதிலியும் உங்கம்மாவ மறக்குமா? அதோட உங்கத் தோட்டத்துப் பூவரச மரத்த மரக்க முடியுமா?"

"அய்ய! அத இன்னுமா ஞாபகம் வச்சிருக்கீங்க?' என்று வியப்பூடன் கூவினான் மருது.

"மறக்கமுடியுதா? சாப்பிட எப்ப உள்ளங்கைய விரிச்சாலும் இந்தத் தழும்பு ஞாபம மூட்டிக்கிட்டு இருக்கே!" என்று அந்தத் தழும்பைக் காட்டினார் சிதம்பரம்.

"ஆமாங்க! சின்ன வயசு சம்பவம்லாம் அப்பிடியே மனசுலே தங்கிடும்தான். கொஞ்ச இருங்க, டீக்கடைக்குப் போயி ஒரு டீ வாங்கியாந்துடுறேன்" என்று கிளம்பினான் மருது. என்ன தடுத்தும் நிற்காமல் ஒட்டமும் நடையுமாகப் போய் எங்கிருந்தோ ஒரு கிளாஸ் டீயுடன் வந்தான்.

டீயைக் குடித்துவிட்டு "நீ இப்ப சும்மாதானே இருக்கே, வாயேன் சிவங்கோயிலப் பாக்கலாம்" என்றழைத்தார் சிதம்பரம்.

"அதவிட எனக்கு என்னா பெரிய வேல? நீங்க வராதவங்க வந்திருக்கீங்க, வாங்க போலாம். இந்த டீக்கிளாசக் குடுத்துட்டு வர்ரேன்" என்று மருது ஓடினான். அவன் வந்ததும் சிவன் கோவிலை நோக்கி இருவரும் நடந்தார்கள்.

(தொடரும்)

கால நதிக்கரையில் -18

திரௌபதை அம்மன் கோவில் ஊரின் ஈசான்ய மூலையில் அமைந்திருந்தது. இடப்புறத்தில் சிவன் கோவில் குளம். குளத்துக்கு மேற்கில் சிவன் கோவில். திரௌபதை அம்மன் கோவிலுக்குப் பின்புறம் குளத்தங்கரையில், ஒரு பெரிய அரச மரம். அதனடியில் குளத்தில் இறங்குபவர்களைப் பார்க்கிறமாதிரி ஒரு பெரிய கல் பிள்ளையார். பிரம்மச்சாரியான பிள்ளையார் தன் அம்மாவைப்போல அழகான பெண்ணை, தண்ணீர் எடுக்க வருபரிடையே தேடிக் கண்டு பிடிக்கவே குளத்தங் கரையில் ராப்பகலாய்த் தனியாகக் காத்திருப்பதாகக் கதை சொல்வார்கள்.

சிதம்பரம் திரௌபதை அம்மன் கோவிலின் முன்புறமாகப் போகாமல் இடப் புறமாகச் சுற்றிக் கொண்டு பிள்ளையாரைப் பார்ப்பதற்காக நடந்தார்.

பிள்ளயார் அன்று பார்த்த மேனிக்கு அழிவின்றி, எண்ணெய் காணாத உடம்புடன் வறட்சியாய்த் தென்பட்டார். கழுத்திலொரு காய்ந்த பூமாலையைக்கூடக் காணோம். திரௌபதை அம்மன் கோயிலுக்குக் காட்டும் அக்கறையைப் பிள்ளை யாருக்கு யாரும் காட்டுவதில்லை போலும்! அத்தோடு இவர் குளத்தங்கரை அநாதைப் பிள்ளையார் தானே? தனிக் கோவில் பிள்ளையார் அல்லவே!

எதிரே இருந்த குளத்தைப் பார்த்தார். குளம் முழுதும் பச்சைத் தகடுகளாய் மிதக்கும் அல்லி இலைகளையும், அவற்றினூடே இளஞ்சிவப்பில் தலை நீட்டிக் கொண்டிருக்கும் அல்லி மொக்குகளையும், பூக்களையும் காணோம். ஆங்காங்கே மிதந்தும் குப்புற மூழ்கியும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும் நீர்க் கோழிகளையும் காணவில்லை. கரை நோக்கி மெதுவாய் நகர்ந்து வரும் அலைகளை, ஆங்காங்கே வேலிகாத்தான் முட்செடிகளும், திட்டுகளுமாய் மேடிட்டிருக்கும் குளத்தில் எதிர் பார்ப்பதெப்படி? நின்று பார்க்க விசாலமாய் இருந்த கரைகள் முழுதும், அவலட்சணக் குடிசைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு சிதம்பரம் சிறுவயதில் பார்த்த குளத்தின் அழகை நிர்மூலப் படுத்தி இருக்கின்றன. நாகரீகத்தின் வளர்ச்சியும் வேகமும் மனிதனின் சுயநலத்தைக் காட்டுவதாகவே இருப்பதும் பாரம்பரிய அழகுகளைப் பேணவோ மேம்படுத்தவோ இல்லாதிருப்பதும் மனதுக்கு வருத்தத்தை அளித்தது.

சுற்றிக் கொண்டு கோவிலின் முன் பக்கம் வந்தார். கோவில் கட்டடத்தில் எந்த மாற்றமும் இல்லை. மூலஸ்தானத்தின் மேலே கவிந்திருக்கும் விமானமும், சுற்றுச் சுவர்களும் புதிதாக வண்ணம் பூசப்பட்டிருப்பதும் உற்சவ மரச் சிற்பங்கள் புதுவண்ணம் பெற்று பளிச்சென்று இருப்பதும் தான் குறிப்பிடத் தக்கதாய் இருந்தன. கோவிலின் எதிரே நெல்லடிக்கும் களம்போல பரந்த சமதளம் இருந்தது. அதில் தான் காப்புக்கட்டிய பின் இருபத்தோரு நாட்கள் தினமும் பாரதம் பாடப்படும். அங்கேதான் படுகளமும், அர்ச்சுனன் தபசும், கீசகவதம் நாடகமும் நடைபெறும். இப்போது சின்ன முற்றம்போலச் சுருங்கி அந்த இடம் மேடும் பள்ளமுமாய் பராமரிப்பு இன்றி இருந்தது. ஆன்மீகத்தில் அக்கறை பெரிதாகக் காணப்படவில்லை.

சில கிராமங்களில் மற்ற வளர்ச்சிகளுக்கீடாய் ஆன்மீக வளர்ச்சியும் பெருகி, இந்தச் சிறுதெய்வங்களான திரௌபதை, மாரியம்மன், செல்லி அம்மன் கோவில்கள் முறையாகப் பேணப்பட்டு, ஆண்டு தவறாமல் விழாக்களும் நடத்தப்பட்டு வருகையில் இங்குமட்டும் இப்படி இவர்கள் அக்கறை அற்றிருப்பது எதனால் என்று சிந்தனை ஓடியது. ஒரு ஊரின் இருப்பையும், சுமுகமான சமூக சூழலையும் காட்டும் இக்கொண்டாட்டங்கள் இங்கே மட்டும் வறண்டிருப்பது ஏன்? அரசியல் கட்சிகளின் வளர்ச்சி மட்டுமே தூக்கலாய் எங்கும் தெரிகிறது.

சின்ன வயதில் இங்கு பாரதக் கதை விடிய விடிய நடந்த கோலாகலம் சிதம்பரத்தில் நினைவில் ஓடுகிறது. அப்பாவு ஆசாரிதான் அந்தக் காலத்திலிருந்து பாரத பூசாரி. அவர் அற்புதமாக மரச் சிற்பங்களும் சுதைச் சிற்பங்களும் படைப்பவர்.
சுற்று வட்டாரக் கோவில்விமான சுதைச்சிற்பங்களும், ரிஷபம், அன்னம், மயில், மூஞ்சூறு போன்ற கோயில் மர வாகனங்களும், பல்லக்குகளும் அவர் செய்தவையாகத்தான் இருக்கும். சிவன் கோவிலை ஒட்டிய அவரது வீட்டுக்கு எதிரில் எப்போதும் சிற்ப வேலைக்காக வெட்டி வரப்பட்ட மரத் துண்டுகளும், அரைகுறையாய்ச் செதுக்கப் பட்டிருக்கும் வாகனங்களுமாய் எப்பொழுதும் நிறைந்திருக்கும். அப்பாவு ஆசாரி சிற்பங்களை மரத்தில் செதுக்கும் போது சிறுவயதில் அருகே இருந்து சிதம்பரம் ஆர்வமாய் கவனிப்பார்.

பாரதம் பாடுவது, ஆசாரியின் அப்பா காலத்திலிருந்து அவரது குடும்பம்தான். அப்பாவுடன் இருந்து கற்றதன்னியில் வில்லிபாரதம் நூலையும் பாடம் செய்திருந்தவர். தினமும் இரவு பாடுவதற்கு முன், ஒருமுறை பள்ளி ஆசிரியர் பாடம் தயாரிப்பது போல படித்து கவனம் செய்து கொண்டே பாட உட்காருவார். பெட்றொமாக்ஸ் வெளிச் சத்தில் எதிரே சிக்குப் பலகையில் வில்லிபாரதம் விரித்து வைக்கப்பட்டிருக்கும். அடிக்கடி அதை சரி பார்த்துக் கொண்டு பாடுவார். சிற்ப வேலைப்பாடு போலவே பாரதம் பாடுவதிலும் அவ்வளவு அற்பணிப்பு!

அதோடு அவருக்கு இன்னொரு சவாலும் கூட. சிதம்பரத்தின் பெரியப்பா மகன் அண்ணன் ஒருவர் - அதிகம் படிக்கவில்லை என்றாலும் கம்பராமாயணம், வில்லி பாரதம் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர். சின்ன வயதிலேயே கிட்டப்பார்வைக் குறைவினால் தடித்த சோடாபுட்டிக் கண்ணாடி போட்டவர். அவ்வªவு சிறுவயதில் அவ்வூரில் வேறுயாரும் கண்ணாடி போட்டதில்லையாதலால், அவருக்குக் 'கண்ணாடிப் பிள்ளை' என்ற அடைமொழியும் உண்டு. அவர் தினமும் வாசல் திண்ணையில் சிக்குப் பலகை மீது வில்லிபாரதத்தை வைத்துக் கொண்டு மிகவும் பொடி எழுத்தில் இருக்கும் பாடல்களை, கண்ணுக்கருகில் தெரிகிறமாதிரி குனிந்து ராகம் போட்டுப் படிப்பார். திரௌபதை அம்மன கோவில் காப்பு கட்டிவிட்டால அவருக்கு உற்சாகம் பீரிட்டெ ழும். தான் படித்த வில்லிபாரதத்தைச் சரியாகப் பூசாரி பாடுகிறாரா என்று எதிரே உட்கார்ந்து கூர்மையாய்க் கவனிப்பார். பாடல் விடுபட்டாலோ சொற்சோரம் இருந்தாலோ உடனே திருத்துவார். அதனால் அப்பாவு ஆசாரி தினமும் பாடம் செய்யாமல் பாட வருவதில்லை. தப்புக் கண்டு பிடிப்பதிலும், தவறு இல்லாமல் பாடுவதிலும் இருவருக்கும் தினமும் போட்டிதான்.

தினமும் பாரதம் பாடுமுன் முன்னிரவில் சுவாமி ஊர்வலம் புறப்படும். அப்பாவு ஆசாரி செய்த திரௌபதை அம்மன் மற்றும் பஞ்சபாண்டவர் சிலைகளும் ஒரே சகடையில் ஏற்றப் பட்டு உலாவரும். பெரிய செப்புக் குடத்தில் பல வண்ணங்களில் ஆன ஜண்டாக்கள் செருகப் பட்டிருக்கும் கரகமும் முன்னால் வரும். தீபத்தட்டு தரும் எல்லா வீடுகளிலும் சகடை நின்று தீபம் காட்டிவிட்டுச் செல்லும் என்றாலும் கரகாட்டம் மட்டும் முக்கியஸ்தர் வீடுகளில் மட்டுமே நடைபெறும். கோவில் பூசாரியே கரகம் சுமந்து வருவார். கொட்டு மேளத்துக்கு ஏற்ப அவர் ஒயிலாக ஆடுவது மிக அழகாக இருக்கும்.

தீபம் எடுப்பதிலும் ஒரு நடைமுறை உண்டு. பரம்பரையாய் முக்கியஸ்தர்களாய் இருக்கும் ஓரிருவர் வீடுகளில் மட்டுமே பூசாரி சகடையிலிருந்து இறங்கி வந்து தீபத்தட்டை எடுத்துப்போய் தீபம் காட்டிவிட்டுத் திரும்பக் கொண்டு கொடுப்பார். மற்ற வீடுகளில் வீட்டுக்காரர்களே தெருவில் இறங்கி சகடைக்கு அருகில்போய் பூசாரியிடம் தீபத்தட்டை நீட்டி, தீபம் காட்டியதும் வாங்கி வரவேண்டும். இந்த நடைமுறைக்குப் பல ஆண்டுகளாய் யாரும் ஆட்சேபணை எழுப்பியதில்லை. திடீரென்று ஒருதடவை இளைய தலைமுறை¨ச் சேர்ந்த ஒருவரால் ஆட்சேபிக்கப் பட்டது சுவாரஸ்யமான கதை.

சிதம்பரத்தின் அப்பாதான் ஊரின் முதல் படிப்பாளி என்பதால் அவரது பிள்ளைகள் கல்லூரிப் படிப்புப் படித்து ஊராரின் மரியாதைக்கு உரியவரானார்கள். அப்பாவின் தூண்டுதலின் பேரில் ஊரிலிருந்து மேற்படிப்புக்குச் சென்றவர்களில் ஒருவர் கொஞ்சம் துடிப்பான இளைஞர். கல்லூரிப் படிப்பு அவருக்கு சுய மரியாதை உணர்வையும் உரிமைக்குப் போராடும் சிந்தனையையும் வளர்த்து விட்டிருந்தது. அதன் பாதிப்பால் அவருக்கு, ஒரு சிலரது வீட்டில் மட்டும் பூசாரி தீபத் தட்டு எடுப்பதும் மற்றவர்கள் இரண்டாம்தரப் பிரஜைகளாய் ஆக்கப் பட்டிருப்பதும் உறுத்தியது. எல்லோருக்கும் சம மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று அவரது சுயமரியாதை போர்க்கொடி உயர்த்த வைத்தது.

பூசாரி யார் வீட்டிலெல்லாம் தட்டு எடுப்பதில்லையோ அவர்களைத் தனித் தனியாகச் சந்தித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தொடங்கினார். "மனிதர் எல்லோரும் சமமே! அப்படி இருக்கையில் ஓரிருவர் மட்டும் என்ன உயர்த்தியாம்? பூசாரியை எல்லோர் வீட்டுக்கும் தட்டு எடுக்கச் செய்ய வேண்டும்" என்று வலியுறுத்தினார். மூத்தவர்கள் நடைமுறையை மாற்றத் தயக்கம் காட்டினார்கள். இளவட்டங்கள் அவருடன் சேர்ந்து கொண்டார்கள். அதன்படி பூசாரியை அழைத்து, "இனி எல்லோருடைய வீட்டிலிருந்தும் தட்டு வாங்கிப் போய் தீபம் காட்டித் திருப்பிக் கொண்டு வந்து தரவேண்டும். யாருக்கும் விசேஷ மரியாதை தர வேண்டியதில்லை" என்று சொன்னார்கள்.

பூசாரி இளவட்டம் அல்ல. பாரம்பரிய நடைமுறையில் தகப்பன் பாட்டன் காலத்திலிருந்து ஊறிப்போனவர். இந்த புதிய மாற்றத்துக்கு ஒத்துக் கொள்ளாமல், "அதல்லாம் சரிப்பட்டு வராதுங்க. நடமுறய மாத்தாதிங்க" என்று மறுத்து விட்டார்.

"அப்படியானால் யார் வீட்டுக்கும் எடுக்கக் கூடாது. எல்லோருமே தத்தம் தட்டு களைத் தாங்களே எடுத்துப்போய்ப் பூசாரியிடம் கொடுத்துத் தீபம் காட்டலாம். அப்போது யாருக்குக்கும் தனிக் கௌரவம் இல்லாது போகும்" என்று புதிய யோசனையைச் சொன்னார் புரட்சி இளைஞர். எல்லோருக்கும் அதுவும் சரிதான் என்று பட்டது.

ஆனால் அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது. பூசாரி தட்டு எடுக்கும் வீடுகளில் சிதம்பரம் வீடும் ஒன்று. சிதம்பரத்தின் பெரியப்பா முரடர்; ஊரின் நாட்டாமை அவர். ''அதெல்லாம் முடியாது. இது என்னா புதுப் பழக்கம்? பூசாரி தட்டு எடுக்கலைன்னா நான் தீபத்தட்டே வைக்க மாட்டேன்" என்று மறுத்து விட்டார். அதனால் அவரைப் போலவே பூசாரி தட்டு எடுக்கும் வீடுகளில் எவருமே தீபத்தட்டுக் கொடுக்க வில்லை. புரட்சி இளைஞர்க்கு யாருக்கும் தனி மரியாதை காட்டாமல் தடுத்து விட்டோம் என்ற திருப்தி இருந்தாலும் தனக்குத் தோல்விதான் என்று உள்ளுக்குள் குமுறினார்.

ஆனால் பெரியப்பா அவரைவிட மிகுந்த குமுறலில் இருந்தார். எல்லோரும் 'சமம்' என்கிற இந்தப் புதிய போராட்டத்துக்கு சரியான பதிலடி கொடுக்கத் தீர்மானித்தார்.

அடுத்தமு¨றை திருவிழாவுக்கு வரிவசூல் செய்ய வந்தனர். புரட்சி இளஞர் தான் முன்னின்று வசூலில் தீவிரம் காட்டினார். பெரியப்பாவிடம் வந்ததும், "எப்படி வரி?" என்று கெட்டர் பெரியப்பா.

"ஏன் வழக்கம் போல் தான். காணி வரி" என்றார் இளைஞர்.

"இல்லப்பா! தலக்கட்டுவரி போட்டாத்தான் குடுப்பேன்" என்றார் பெரியப்பா.

"அதெப்டிங்க? இத்தன நாளா நடமுறையில இருக்குறதுதானே?"

"நடமுறையத்தான் மாத்திட்டியே! எல்லாரும் சமம்னு சொன்னதுக்கப்றம் வரியும் சமமாத்தானே வசூலிக்கணும்? நீ என்ன வரி கட்டுறியோ அதே வரியத்தான் நானும் கட்டுவேன்"

"என்னங்க இது - அதும் இதும் சரியா?" என்றார் இளைஞர் பெரியப்பாவின் நண்டுப்பிடியில் சிக்கியவராக.

"ஏம்'பா சரியாவாது? மரியாதை எனக்கும் உனக்கும் ஒரே மாதிரியா இருக்கனும்னா வரியும் எனக்கும் உனக்கும் ஒண்ணாத்தானே இருக்கணும்?"

இளைஞர் முகத்தில் ஈயாடவில்லை. "இவர்ட்ட பேச முடியாது. வா போகலாம்" என்று உடன் வந்த இளவட்டங்கள் பின் வாங்கின.

பெரியப்பா எகத்தாளமாகச் சொன்னார்: "படிச்சுட்டு வந்துட்டா படிக்காதவன் 'லாம் சும்பன்னு நெனப்போ? படிச்சவன் பாய்க்கடியிலே நொழஞ்சா படிக்காதவன் கோலத்துக்கடியிலே நொழைவான்னு நீ படிக்கலையோ?"

இப்பொழுது நினக்கும்போதும் சிதம்பரத்துக்கு அந்நிகழ்ச்சி புன்முறுவல் பூக்க வைத்தது. திரௌபதை அம்மன் கோவிலிலிருந்து கிளம்பி சிவன்கோவிலை நோக்கி நடந்தார்.

(தொடரும்)

கால நதிக்கரையில் - 17

சாப்பாடானதும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பினார் சிதம்பரம். கிழக்கே நடந்து அவர் சிறு வயதில் விளையாடிய கீழ மந்தைக்கு வந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த இடத்தில் எந்த மாற்றமும் இன்றி முன்புபோலவே இருந்தது. தென்கிழக்கு மூலையில் புதுப்பிக் கப்பட்டிருந்த திரௌபதை அம்மன் கோயில் மட்டும் புது வண்ணத்தில் ஜொலித் தது. தெருமுனையில் இருந்த அக்காலத்திய பிரபல பெட்டிக் கடையைக் காணோம். அதற்கு நேர் எதிரே இருந்த சிமிட்டிக்குழாய்த் தயாரித்த வீடு மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. கூரை வீடாக இருந்த அது சின்ன மச்சுவீடாகி இருந்தது.

அந்த ஊரின் ஒரே சிறுதொழிலான சிமிட்டிக் குழாய் தயாரிப்பு மூன்று தலைமுறையாய் பக்கத்தில் இருந்த சிவன் கோயில் குளத்தை நம்பி அந்த வீட்டில் நடந்து வந்தது. இப்போது பின் தலைமுறையின் ஆர்வமின்மையாலோ செய்பொருளுக்கு ஓட்டமின்மையாலோ தொடரப்படவில்லை என்று தெரிந்தது. முன்பெல்லாம் வீட்டுக்கு முன்னால் செய்து முடிந்த குழாய்களும், அச்சில் உருவாகிக் கொண்டிருக்கும் குழாய்களுமாய் நிறைந்திருக்கும். சிமிட்டிக் கலவை எப்படிக் குழாயாக ஆகிறது என்றறியும் ஆர்வத்தில் சிதம்பரம் சிறுவயதில் அங்கு அடிக்கடி வந்து பார்ப்பது சுவாரஸ்யமான பொழுது போக்கு.

அதற்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன 'செட்டியார் மளிகை'க் கடை இருந்தது. அப்பாவைப் போலவே கிழடாய்க் காட்சியளித்த மகன் ஒருவர் எப்போதும் திறந்த உடம்புடனும் தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடனும், அழுக்குப் பூணூல் மார்பின் குறுக்கே புரள கல்லாவில் கூனியபடியே உட்கார்ந்திருப்பார். அவர் எதிரே அவரைப் போலவே திறந்த மார்பில் பூணூலோடு அவரது அப்பா -தொந்தியும் தொப்பையுமாய், பெரியப்பா வீட்டில் வைக்கும் கொலுவில் பார்க்கிற செட்டியார் பொம்மையை ஞாபகமூட்டுபவராய், சாய்மானப் பலகையில் சாய்ந்த படி உட்கார்ந்திருப்பார். பக்கத்துச் சுவரில் நம்பர் போட்ட கடைச் சொருகு பலகைகள் சார்த்தப் பட்டிருக்கும்.

வியாபாரம் ஒன்றும் பெரிதாய் இருக்காது. மொத்தமாய் மளிகைப் பொருட்களை வாங்கிவைத்துக் கொள்ள முடியாத அன்றாடம் காய்ச்சிகளுக்கு, அடுப்பில் உலையேற்றி வைத்துவிட்டு அப்போதைக்குத் தேவையான உப்பு புளி மிளகாய் வாங்கிக் கொள்ள அந்த செட்டியார்க் கடைதான் ரட்சகராக இருந்தது. காசு கொடுப்பது அதிகமில்லை. கூலிக்குப்போய்க் கிடைக்கும் தானியங்களைக் கொடுத்து வாங்கிக் கொள்வதுதான் அதிகம். செட்டியாருக்கு அதில்தான் லாபம். ஜீவனமும் அதை நம்பித்தான் இருந்தது. காசு கொடுத்து வாங்குவது எல்லாம்-முன்தலையில் மாட்டிய கயிற்றில் முதுகுப் பக்கம் தொங்கும் கூடையுடன் தேயிலை பறிக்கும் பெண்கள் படம் போட்ட - அப்போது பிரபலமாய் இருந்த 'லிப்டன் டீ' பொட்டலங்கள் தாம். ஒரு தடவைக்கான ஒல்லிப் பொட்டலம் முதல் கொஞ்சம் அதிக வேளைகளுக்குக் காணும் கனத்த கட்டையான பொட்டலம்வரை விற்பனை ஆகும். சின்னப் பிள்ளைகள் ஆரஞ்சுமிட்டாய், ஜம்பிஸ்கட் என்று அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் வாங்குவதாலும் அக்கடை பிரபலம். காப்பி வில்லைகளும் அங்கு கிடைக்கும். மாத்திரை இங்க் வில்லைகள் ஒரு தம்பிடிக்குக் கிடைக்கும். பள்ளிக் கூடப் பிள்ளைகள் அதை வாங்கிப் பொடித்து இங்க் பாட்டிலில் போட்டு நீர் விட்டுக் கலக்கி இங்க் தயாரித்துக் கொள்வார்கள். சிதம்பரம் அப்படி இங்க் வில்லை வாங்கத்தான் அங்குபோவது. மற்ற பிள்ளைகள் வாங்கும் ஆரஞ்சுமிட்டாய், ஜம்பிஸ்கட் நாவில் நீ ஊறச் செய்யும். ஆனால் அப்பா அது போன்ற தின்பண்டங் களைக் கடையில் வாங்க அனுமதிப்பதில்லை.

செட்டியார் கடை போட்டியில்லாமல் வெகு நாட்கள் நடந்து வந்தது நினைவில் இருக்கிறது. பிறகுதான் ஒரு நாள் எதிர்ச்சாரியிலேயே புதியகடை ஒன்று முளைத்தது. போட்டி என்று சொல்ல முடியாது. மளிகைப் பொருட்கள் அங்கு இல்லை. வெற்றிலை பாக்கு, பீடி சிகரட், மிட்டாய், டீ காப்பி பாக்கட்டு கள், அப்போது பிரபலமாகி இருந்த சின்ன குனேகா செண்ட் பாட்டில் விற்பனை தான் அதிகம். இப்போதைய உரசல் லாட்டரி போல் அப்போது 'அதிர்ஷ்ட லாட்டரி' அட்டையில் ஒட்டியிருக்கும் மிட்டாய்ச் சீட்டை வாங்கிப் பிரித்தால் அதில் இருக்கும் எண்ணுக்கு, அதே அட்டையின் மேல்புறம் ஒட்டியிருக்கும் பல விதப் பரிசுப் பொருட்களில் ஒன்று கிடைக்கும். அட்டையின் எல்லா மிட்டாய்ச் சீட்டுகளையும் வாங்கினாலும் ஒட்டப்பட்ட பரிசுப்பொருட்களில் அதிகமும் யாருக்கும் விழாமலே தேங்கிப் போகும். அதில்தான் கடைக்காரருக்கு நல்ல லாபம் நிற்கும். அது தெரிந்தும் குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால் பரிசு கிடைக்காதா என்கிற நைப்பாசையில் சிறுவர்கள் அந்தக் கடையை மொய்ப்பார்கள்.

அந்தப் புதுக்கடை பிரபலமானதற்கு ஊர்க்காரர்களுக்கு சுவாரஸ்யமான வேறொரு விஷயம் இருந்தது. அக்கடையின் கல்லாவில் உட்கார வைக்கப் பட்டவன் பிள்ளைமார்த் தெருவில் தலை நிமிர்ந்து கைவீசி அலட்சியமாய் அதுவரை நடந்தறியாதவன். பிள்ளைமார் வீடுகளில் பணியாற்றும் கீழ்மட்டத்து வசதியற்ற குடும்பங்களில் ஒன்றின் பிரதிநிதி. குப்புசாமி என்கிற அவன், கட்டிக் கொள்ள முழுதாக ஒருவேட்டி இல்லாதவன். எப்போதும் இடுப்புத் துண்டோடு அலைபவன். ஏரி குளங்களில் வலைவீசி மீன்பிடித்து விற்பதுதான் அவனது தினசரி ஜீவனத்துக்கான தொழில்.யாராவது கூப்பிட்டால் எடுபிடி வேலைகளும் செய்வான்.

நல்ல கட்டுமஸ்தான உடலும், தீர்க்கமான முகவெட்டும் மட்டுமே அவனுக்கு சாதகமான அம்சம்.

அவனை அந்தக் கடையின் கல்லாவில் உட்கார வைத்தவள் பிள்ளை மார்த் தெருவின் மேல் மட்டத்து இளம் விதவை ராசாங்கம். சிப்பந்தியாக அல்ல- முதலாளியாகத்தான். அதுதான் ஊர்க்காரர்களின் சுவாரஸ் யத்துக்குக் காரணம்.

ராசாங்கம் நல்ல வசதியான குடும்பத்தின் ஒரே பெண். அவளது அம்மா இளம் வயதிலே கணவனை இழந்தவள். மகளைச் சிறுவயதில் தினமும் சீவிச் சிங்காரித்து, தங்க ராக்கொடி உச்சந் தலையில் வைத்துத் தலைபின்னி, தலை நிறையப் பூ வைத்து, பட்டுப்பாவாடை சட்டையில்தான் பள்ளிக்கு அனுப்புவாள். மகள் அருமை குலையச் பொறுக்கமாட்டாள். மிக செல்லமாய் வளர்த்து ஆளாக்கி, வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையாய்த் தேடிப் பிடித்து ஊரே அசரும்படி விமர்சையாய்க் கல்யாணம் செய்து வைத்து பிறகு நிம்மதியாய் செத்துப் போனாள்.

அம்மா, ராசாங்கத்தின் இளமை வளர்ப்பு பற்றியும் அவளது கல்யாணக் கோலாகலம் பற்றியும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லி மாய்ந்து போவார்கள். அவள் வயதுக்கு வந்தபோது மஞ்சள் நீராட்டி, முத்துப்பல்லக்கில் ஊர்வலம் நடத்தி ஒரு கல்யாணம் மாதிரியே செய்தாளென்று அம்மா வாய் உருகிப் போவார்கள்.

ராசாங்கம் தன் அம்மாவை இழந்த ஓராண்டிலேயே கணவனையும் இழந்து போனாள். பத்துநாள் காய்ச்சலில் படுத்தவன் மீளவில்லை. வசதியாய் வாழச் சொத்து இருந்தும் பாதுகாப்புக்கு ஆள் இல்லை. கோரிக்கையற்றுக் கிடக்கும் 'வேரில் பழுத்த பலா'வை வசப்படுத்திக் கொள்ள இளவட்டங்கள் பலர் முயன்றும் வைராக்கியமாய்த் தனியாக தைரியமாக அவள் சமாளித்ததை அம்மா போன்று அவள் மீது அக்கறை கொண்ட சிலர் பாராட்டவே செய்தனர். ஆனால் அது அதிக நாள் நீடிக்கவில்லை.

எப்படிப் பழக்கம் ஏற்பட்டதோ தெரியவில்லை, எதாவது எடுபிடி வேலைக்காகப் போய் வந்ததில் ஏற்பட்ட பழக்கமோ ஏதோ - ஊரில் அரசல் புரசலாக ராசாங்கத்தையும் குப்புசாமியையும் இணைத்துப் பேச்சுக்கள் உலவின. அம்மா அது அக்கப்போராகத்தான் இருக்கும், ராசாங்கம் அப்படிப் பட்டவள் அல்ல என்று நம்பவில்லை. ஆனால் அது அப்புவின் வீட்டுச் சுவரில் பகிங்கரமாக - அவளை முயன்று தோற்ற யாராலோ பிரகடனப்படுத்தப்பட்ட போது அம்மா வாய் அடைத்துப் போனார்கள்.

ஊர்வாய்க்குப் பயந்து இலைமறைவு, காய்மறைவாய் இருந்த அவர்களது உறவு எல்லோருக்கும் தெரிந்து போய்விட்டது என்றதும் பகிங்கரமாகவே- சேர்ந்து வாழுகிற அளவுக்குத் துணிந்து விட்டது. குப்புசாமி பயமின்றி பட்டப் பகலிலேயே கைவீசித் தெருவில் நடந்தான். இப்போது இடுப்பில் வெள்ளை நாலு முழ வேட்டியும் உடம்பில் சட்டையும், வாசனை எண்ணெய் தடவிச் சீவப்பட்டக் கிராப்புத் தலையும், வலது முண்டாவில் சிகப்புக் கயிற்றில் கோர்த்துக் கட்டிய தாயத்துமாய் பவனி வந்தான். இந்நிலையில்தான் அவன் இனி ஒருவரிடம் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டாம் என்று ராசாங்கம் அவனுக்குப் பெட்டிக் கடை வைத்துக் கொடுத்தாள்.

தினமும் காலையில் இருவரும் கைகோர்த்துக் கொள்ளாத குறையாய் ஜோடி போட்டுக் கொண்டு கடைக்குப் போவதும், பிறகு மதியச் சாப்பாட்டுக்குப் போய்வருவதும், இரவு கடையை மூடிவிட்டு அகாலத்தில் வீடு திரும்புவதும் பெரிய வர்களின் சாபத்துக்கு இலக்காயிற்று. 'கலி முத்திப் போச்சு! இப்பிடியா அறுத்துப் போனவ ஊரறிய கொழுத்துப் போய்த் திரிவா?' என்று பெண்கள் பொறுமினர். 'வக்கத்த பயலுக்கு அடிச்ச யோகத்தைப் பாரேன்! எல்லாத்துக்கும் அதிஷ்டம் வேணும்!' என்று இளவட்டங்கள் மனம் எரிந்தனர். யார் தூற்றுதலும் அவர்களைப் பாதித்து விடவில்லை. கவலையற்று காதலர்கள் தங்கள் பாட்டையில் உல்லாசமாய் நடந்தார்கள்.

இரண்டு வருஷம் போனதும், தான்தான் பட்டமரமாய் நிற்கிறோமே -அவனாவது குழந்தையும் குட்டியுமாய் வம்சம் தழைக்கட்டுமே என்ற எண்ணத்தில் ராசாங்கமே பெண் பார்த்து குப்புசாமிக்கு ஒரு கல்யாணத்தைத் தன் செலவிலேயே செய்து வைத்தாள். நாதியேதும் இல்லாதவன் என்பதால் பெண் கொடுக்க மறுத்தவரின் நிர்ப்பந்தத்தின்பேரில் தன் வீட்டையும் தன் நிலபுலன்களையும் அவன் பேருக்கு எழுதி வைத்தாள். அதுதான் அவள் செய்த தவறு.

'ஏன் இப்புடிப் புத்திகெட்டுச் சீரழியுதோ?' என்று அம்மா ஆதங்கப் பட்டார்கள்; 'புள்ளக்குட்டி பொறந்துதுண்ணா அடிச்சுத் தொரத்தத்தான் போறான்' என்றும் அங்கலாய்த்தார்கள். அப்படித்தான் ஒரு நாள் ஆயிற்று. ஆனால் அப்போது அவளுக்காக இரக்கப்பட யாருமில்லை! யாரையும் - ஜாதி ஜனங்களை, ஊர்ப் பெரியவர்களை மதித்து அவர்களுக்குப் பயந்து நடந்திருந்தால்தானே அவளுக்காக நியாயம் கேட்க வருவார்கள்? அவளும் அதையறிந்துதான் யாரிடமும் நியாயம் கேட்டு முறையிடவில்லை. ஒருவேளைச் சோற்றுக்கும் நாதியில்லாமல் எங்கோ ஒருநாள் ஊரைவிட்டே போய்விட்டாள்.

அந்தக் காலகட்டத்தில்தான் சிதம்பரம் கல்லூரிக்குப் படிக்கப் போனது. அதற்குப் பிறகு ராசாங்கம் என்ன ஆனாள் என்று அறிய அவருக்கு ஆர்வமோ வாய்ப்போ இல்லாது போயிற்று. படிப்பெல்லாம் முடிந்து அவர் வேலைக்கும் சென்ற பிறகு ஒருதடவை அவர் ஊருக்கு வந்தபோது அம்மா அவர்களாகவே ராசாங்கத்தின் பரிதாபக் கதையைச் சொன்னார்கள்.

"இந்த ராசாங்கத்தோடக் கதயக் கேட்டியா?" என்றார்கள்.

"என்னாம்மா ஆச்சு?"

"அத ஏன் கேக்குறே போ! நம்ம ரோட்டோரத்துலே குடிசை போட்டுக் கிட்டு பண்ணி மேச்சுக்கிட்டிருந்தானே பெலாந்துற தொம்பன்......."

"ஆமா, அவனுக்கென்ன..?"

"இந்தப் பாவிமுண்ட அவங்கூட ஒடிப்போயிருக்கா...."

"அடப் பாவமே! இப்ப எங்க இருக்காளாம்?"

"அவன் ஊருக்குக்குத்தான் போயி, பண்ணிக் குடிசையிலே அவங்கூட வாழுது சாதி கெட்டக் கழுத!"

"அப்'றம் எப்பிடித் தெரிஞ்சுது? யாரு பாத்தாங்களாம்?"

" நானே எங்கண்ணாலப் பாத்தேன்! போனமாசம் பெண்ணாடத்துக்கு பெரியம்மா ஊட்டுக்கு வண்டியிலே போறப்ப பெலாந்தொறகிட்ட வாய்க்காங் கரையிலே பண்ணி மேச்சுக்ககிட்டிருந்தா! வண்டிக்காரன் அழவாரத்தான் 'ஆச்சி, ஆச்சி! அங்கப் பாருங்க' ண்ணான். 'என்ன அதிசயம் அங்கே' ன்னேன். 'அதிசயந்தான்! அது யாருன்னு பாருங்க. உங்க ராசாங்கம் தான்'னு சொன்ன தும் நான் நம்பாம முன்னாலே எட்டிப்பாத்தேன். கன்னங்கரேல்னு கருவாடுமாதிரி காய்ஞ்சி போயி ஒரு கிழிச வட்டுத் துணியக் கட்டிக்கிட்டு ரவிக்கக்கூட இல்லாமெ மொட்டத் தலயோட, ஒரு நீட்டு மூங்கிக்குச்சியிலே கரண்டிமாதிரி தகரம் அடிச்சதாலே பண்ணிவிட்டய அள்ளி இடுப்புல இருந்த கூடயில போட்டுக் கிட்டு பாவி நிக்கிறா! முன்னாலே நெறயப் பண்ணிங்க மேஞ்சுக்கிட்டிருக்கு! அடக் கண்றாவியேன்னு வண்டிய நிறுத்தச் சொல்லி எறங்குனேன்.

''சத்தம் கேட்டுத் திரும்புன அவ என்னப் பாத்துட்டு அவசரமா ஓடி அங்க இருந்த புளியமரத்துக்குப் பின்னாலே மறைஞ்சு கிட்டா. நானும் விடலே. அவ நிக்கறதுக்கு எதுப்புறமாப் போயி நின்னேன். அவ அந்தப் பக்கமாத் திரும்பி தலயக் குனிஞ்சுக்கிட்டா. 'அடப் பாவி மவளே! இது என்னாடி கோலம்? உன்னப் பெத்தவ இந்த நெலையில உன்னப் பாத்தாத் தாங்குவாளா? அடி, நீ வாழ்ந்த வாழ்வென்ன, இருந்த இருப்பென்ன - இப்படிச் சீரழியணும்னு உனக்கு என்னடி தலயெழுத்து? இப்பிடிச் சாதிகெட்டு, குலங்கெட்டு சாக்கடையிலே ஏண்டி விழுந்தே? சொத்து சொகம், மானம் மரியாத எல்லாத்தியும் தொலைச்சுட்டு நிக்கிறியே, எனக்கே வயிறு எரியுதே ஒன்னப்பாக்க!' ன்னு ஆத்திரமும் அழுகையுமாச் சாடுனேன். ஆனா அவ அம்மக்குள்ளியாட்டம் அழுத்தமா பதிலும் சொல்லாம, திரும்பியும் பாக்காம நின்னா. எனக்கு எரிச்சலும் எரக்கமும் தாளாமே 'எக்கேடாவது கெட்டு நாசமாப் போ! அன்னிக்கு எழுதுனவன் அழிச்சா எழுதப் போறான்? ஒந்தலயெழுத்துப்படிதான் நடக்கும்'னு சொல்லிட்டு நா வந்து வண்டியில ஏறிக்கிட்டேன். பின்னால அவ தேம்புறது கேட்டது. 'அழுவுது ஆச்சி!' ண்ணான் அழவாரத்தான். 'அழுட்டும் போ! யார் விதிய யார் மாத்த முடியும்? நீ ஓட்டு வண்டிய' ன்னு வந்துட்டேன்" என்று முடித்தார்கள் அம்மா.

சிதம்பரத்துக்கு வியப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. 'இதென்ன, விதி மனிதவாழ்வை இப்படிப் பந்தாடுகிறது? 'குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்' என்பது அரசனுக்கு மட்டுமா? ஆண்டிக்கும் அதுதான் போலும்!' என்று பட்டது.

- இப்போது அந்தப் பெட்டிக் கடை இருந்த காலி இடத்தைப் பார்த்ததும் இத்தனையும் நினைவில் ஓடின.

அப்புறம் ஒரு நாள் குப்புசாமியும் தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டதும், பிள்ளை குட்டிகள் பிறந்து செலவுகள் கைமீறி ராசாங்கத்தின் நிலத்தை யும் வீட்டையும் விற்றுத் தொலைத்து மீண்டும் தன் பழைய குடிசைக்கே திரும்பி விட்டதும் கேள்விப்பட்டார். ராசங்கம் போனதுமே சீதேவியும் தன் அக்கா மூதேவிக்குக் கையைக் காட்டி விட்டு அவனை விட்டுப் போய்விட்டதாகப் பேசிக்கொண்டார்கள்.

வெகுநேரம் தெரு முனையிலேயே நின்றுவிட்டதை உணர்ந்தவராய் சிதம்பரம் திரௌபதை அம்மன் கோயிலை நோக்கி நடந்தார்.

( தொடரும் )

கால நதிக்கரையில் - 16

கண்ணம்மாவின் பெரியம்மாவுக்குக் குழந்தை இல்லாததால், அவளைக் கைக்குழந்தையாய் இருக்கும்போதே அவள் அம்மாவிடமிருந்து தூக்கி வந்து வளர்த்து வந்தார். ஆரம்பப் பள்ளியில் சிதம்பரம் அரிச்சுவடி வகுப்பில் சேர்ந்த அன்றைக்குத்தான் கண்ணம்மாவும் அவரது வகுப்பில் சேர்ந்தாள். சின்னப் பள்ளிக் கூடம் என்பதால் எந்த வகுப்பிலும் ஐந்து ஆறு பிள்ளைகளுக்கு மேல் இல்லை. சிதம்பரம் வகுப்பில் ஐந்து பேர் தான். அவரும் அவரது பக்கத்து வீட்டுப் பையனும் தவிர, கண்ணம்மாவுடன் மேலும் இரண்டு பெண்கள். சேர்ந்த அன்றே கண்ணம்மா சிதம்பரம் பக்கத்தில்தான் வந்து உட்கார்ந்தாள். அப்போது ஏற்பட்ட நட்பு அந்தப் பள்ளியின் ஐந்தாம் வகுப்பு படிப்பு முடிகிறவரை தொடர்ந்தது.

கண்ணம்மாதான் வகுப்பிலும் வெளியிலும் அவருக்கு உற்ற தோழியாக இருந்தாள். பள்ளி விட்டதும் வீட்டுக்குப் போய் புத்தகப் பையை வைத்துவிட்டு கண்ணம்மா வீட்டுக்கு விளையாடப் போய்விடுவார். மணியக்காரத்தாத்தா வீட்டுத் திண்ணயில்தான் அவர்களை அதிக நேரமும் காண முடியும். சாப்பாட்டு நேரமும் தூங்கும் வேளையும் தவிர அவர்கள் இணை பிரிவதே இல்லை.

கண்ணம்மாவின் பெரியப்பா பெரிய வசதியுள்ளவர் அல்ல. சொந்தமாக ஒரு கூரை வீடும் கொஞ்சம் நிலமுமிருந்தது. பிரச்சினையற்ற எளிய வாழ்க்கை.

பெரியப்பாவைவிட பெரியம்மா தான் ஊரில் எல்லோருக்கும் அதிகம் பரிச்சயம். பெரியம்மா கைவேலைகளில் திறமை மிக்கவர். அந்தக் காலத்தில் பெண்களின் பொழுதுபோக்கான - வாசற்படிக்கு மணிச்சரம் கோர்த்தல், அட்டையில் பூக்கள் பறவைகள் ஓவியங்களை மணிகள் கொண்டு தைத்தல், கண்ணாடி பாட்டிலுக்குள் மணிகள், சிறு பொம்மைகளை இறக்கி மரம் உருவாக்குதல் போன்ற நுட்பமான கலையில் வல்லவர். ஊர்ப் பெண்கள் பலருக்கும் அக்கலையைச் சொல்லித் தந்தார். யார் வீட்டிலாவது திருமணம் மஞ்சள்நீராட்டு, சீமந்தம் என்றால் பெண்களுக்கு அலங்காரம் செய்ய அவரைத்தான் அழைப்பார்கள். நலுங்கு, கோவிலில் நவராத்திரி கொலு ஆகியவற்றில் பாட அவரை விட்டால் ஊரில் வேறு ஆள் இல்லை. நல்ல குரல்வளம். அவர் முதலில் பாட, நாதஸ்வரக் கருப்பமுதலி அதை நாதஸ்வரத்தில் வாங்கி வாசிப்பது ஊரில் எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயம்.

ஆரம்பப்பள்ளி படிப்பு முடிந்து சிதம்பரம் அடுத்த நகரத்துப் பள்ளியில் மேல் படிப்புக்காக பெரியம்மா வீட்டுக்குப் போய்விட்டார். அப்போது கண்ணம்மாவும் தன் அம்மா ஊருக்குப் படிக்கப் போய்விட்டாள். அப்போது ஏற்பட்ட பிரிவு அப்படி ஒன்றும் மறக்க முடியாததாக இருந்து விடவில்லை. அதற்குப் பிறகு பள்ளி இறுதி வகுப்புக்கு முடிகிறவரை கண்ணம்மாவை அவர் பார்க்கும் வாய்ப்பே கிட்டவில்லை. வளரும் வயதில் புதிய சூழ்நிலையும் புதுப்புது நட்பும் கண்ணம்மாவை அவரது நினவிலிருந்து நழுவச் செய்து விட்டது.

ஆனால் ஆறு ஆண்டுகளுக்குப் பின் கண்ணம்மாவைத் தற்செயலாய் அவளது ஊரான தன் மாமாவின் ஊருக்குப் போனபோது சந்திக்க நேர்ந்தபோது அவரின் பழைய நட்பு மீண்டும் கிளைத்து அவரை உருகவைத்தது.

பள்ளி இறுதிவகுப்புத் தேர்வு எழுதி முடித்தவுடன் ஊரிலிருந்து வந்த மாமாமகன் அழைப்பின் பேரில் அவனுடன் அந்த ஊருக்குப் போனார். அதுதான் கண்ணம்மாவின் ஊரும் என்று தெரியும்தான். அவளையே மறந்து போனதால் அப்போது அவருக்கு அந்தப் பிரக்ஞை இல்லை.

போன மறுநாள் மாலை மாமா மகனுடன் அந்த ஊர்த் தெப்பக்குளத்தைப் பார்க்கலாம் என்று புறப்பட்டார்கள். குளத்தை நெருங்குகையில் எதிரே சில இளம்பெண்கள் இடுப்பில் குடத்துடன் வந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இவர்களை நெருங்கியதும் ஒருபெண் மட்டும் வரிசையை விட்டு விலகி சிதம்பரத்தின் முன்னால் வந்து நின்று உற்றுப் பார்த்தாள். சிதம்பரம் 'யார் அவள், ஏன் தன்னை அப்படிப் பார்க்கிறாள்' என்று புரியாமல் விழித்தார். "அய்! நீ சிதம்பரம்தானே?" என்று வியப்புடன் கூவினாள் அவள்.

சிதம்பரம் மேலும் குழம்பிவராய் வெறித்துப் பார்க்க, "என்னெத் தெரியலே? நான் கண்ணம்மா!" என்றாள் உற்சாகத்துடன். சிதம்பரத்துக்கு மின்சாரம் பாய்ந்த மாதிரி ஒரு அதிர்ச்சி உண்டாயிற்று. 'கண்ணம்மாவா?' என்று பொறிதட்டியது. பழைய நினைவுகள் பளிச்சிட, கண்கள் வியப்பால் விரிய, 'ஆங்! நீ....நீ எங்கே இங்கே....?" என்று திணறினார்.

" நான் கேக்க வேண்டிய கேள்விய நீ கேக்குறியே? இதானே என் ஊரு?" மறந்து போச்சா?" என்று அவள் நகைத்தாள்.

அவளையே மறந்துவிட்ட நிலையில் அவªது ஊர் மட்டும் எப்படி நினைவில் இருக்கும்? சங்கடத்துடன் நெள்¢ந்தபடி, "இது எங்க மாமா மகன். இவங்க ஊட்டுக் குத்தான் வந்துருக்கேன்" என்றார்.

"உங்க மாமா ஊடு எனக்குத் தெரியுமே! உங்கம்மா பொறந்த ஊரும் இதானே? எங்க ஊட்டுக்கு வாயேன்" என்று அவள் அழைத்தாள். அதற்குள் உடன் வந்த பெண்கள் போக அவசரம் காட்டவே, "சாய்ங்காலம் எந்தம்பிய அனுப்பறேன். அவசியம் வரணும்" என்று சொல்லி விட்டு அவர்களுடன் புறப்பட்டாள்.

மாமா மகன் கண்ணைச் சிமிட்டியபடி, "யாருடா இது எனக்குத் தெரியாமே இங்கே உனக்குச் சினேகிதம்?" என்றான். "அழகா இருக்காளே!"

சிதம்பரத்துக்கு அப்போதுதான் - 'கற்பனையில்கூட தான் எண்ணிப் பார்த்திராத சௌந்தர்யத்துடன் எதிரே நிற்பவள் - தன்னோடு பாலபருவத்தில் இணைந்து இழைந்து விளையாடிய கண்ணம்மாவா?' என்ற பிரமிப்பு தோன்ற மயங்கி நின்றார்.

''என்னடா? திகைச்சுப்போயி நின்னுட்டே! உனக்கே தெரியலையா? அவ ரொம்ப நாள் பழகுனமாதிரி பேசுறா, நீ எதுவுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறே?" என்று மாமா மகன் சீண்டினான்.

"அவ எங்கூட சின்னவயசுலே எங்க ஊர்லே ஒண்ணா படிச்சவ. பால்ய சினேகம். இப்ப வளந்துட்டதாலே தெரியலே!" என்று பதில் சொன்னார்.

"அப்ப உனக்குப் பால்ய சினேகிதி கெடச்சுட்டா! இனிமே என் தயவு தேவைப்படாது" என்று அவன் இடித்தான். " அப்படியெல்லாம் இல்லே!" என்றபடி மெதுவாக நடந்தார்.

வீடு திரும்பியபின் சிதம்பரத்துக்குக் குற்ற உணர்ச்சி மேலிட்டது. அட! எப்படி அத்தனை நெருக்கமான சினேகிதத்தை மறந்தோம்? அவள் எப்படிக் கொஞ்சமும் மறவாமல் நினவில் இருத்தியிருக்கிறாள்! எவ்வளவு பாசமாகப் பேசுகிறாள்! தன்மீதே கோபம் வந்தது அவருக்கு. சாயங்காலம் எப்போது வரும், எப்போது அவளது தம்பி வந்து அழைத்துப் போவான் என்ற துடிப்பு ஏற்பட ஆவலுடன் அந்த நேரத்துக்காகக் காத்திருந்தார்.

மாலை 5 மணிக்கு கண்ணம்மாவின் தம்பி வந்தான். அவனைக் குழந்தையாகப் பார்த்தது. இப்போது பெரிய பையனாகி இருக்கிறான். முகஜாடையைக் கொண்டே அவன்தான் கண்ணம்மாவின் தம்பி என்று சிதம்பரத்துக்குத் தெரிந்து விட்டது.

"சிதம்பரம் யார்?'" என்று அவன் கேட்டான்.

"நாந்தான். வா போகலாம்" என்று அவனுடன் புறப்பட்டார்.

"ஏய்! சீக்கிரம் வந்துடு" என்று சொல்லி அனுப்பினான் மாமா மகன்.

வாயிலிலேயே காத்திருந்தாள் கண்ணம்மா.

"வா வா!" என்று முகம் மலர கண் அகல வரவேற்று உள்ளே அழைத்துப் போனாள். அங்கே அவளது அம்மா, பெரியம்மா எல்லோரும் அன்போடு அவரை வரவேற்றுப் பேசினார்கள். பெரியம்மா " அட, நம்ம சிதம்பரமா! என்னமா வளந்துட்டே!" என்று ஊரில் அம்மா அப்பா எல்லோரையும் விசாரித்தார். பெரியப்பா இறந்துபோனதையும் தான் கண்ணம்மா வீட்டோடு வந்து விட்டதையும் சொன்னார்.

" நீ என்ன படிக்கிறே?" என்று விசாரித்தாள் கண்ணம்மா.

பள்ளி இறுதித் தேர்வு எழுதி இருப்பதையும் மேற்கொண்டு கல்லூரியில் சேர இருப்பதையும் சொன்னார். அவள் எட்டாம் வகுப்புவரைதான் படித்தாதாகவும் வயதுக்கு வந்து விட்டதால் வீட்டில் நிறுத்தி விட்டார்கள் என்றும் சொன்னாள். "என்னை ஞாபகம் வச்சிருந்தியா? நான் ஒன்ன மறக்கவே இல்ல" என்றாள். தான் அவளை மறந்து போனதை எப்படிச் சொல்வது?

இருட்டியதும் சிதம்பரம் விடை பெற்றுக் கொண்டார். "அடுத்த லீவிலும் அவசியம் வரணும்" என்றாள் கண்ணம்மா.

'அப்பா அம்மா எல்லாரியும் கேட்டதாச் சொல்லுப்பா" என்று பெரியம்மாவும் கூறி வழியனுப்பினார்கள்.

அடுத்த கோடை விடுமுறையில் போகவில்லை. ஆனாலும் கண்ணம்மாவைப் போய்ப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

இண்டர் முடித்ததும் அந்த கோடை விடுமுறையில் மாமாவின் ஊருக்குப் போனபோது கண்ணம்மாவின் வீட்டுக்குப் போனார்.

"வாப்பா சிதம்பரம். நல்ல நேரத்துக்கு வந்தே. கண்ணம்மாவுக்குக் கல்யாணம் நிச்சயமாயிருக்கு1" என்று வரவேற்றார் பெரியம்மா. "இதோ இவந்தான் - எங்க தம்பிதான் - கண்ணம்மாவுக்குத் தாய் மாமாதான் மாப்பிள்ள".

அந்தத் தாய் மாமாவைச் சிதம்பரத்துக்குத் தெரியும். சின்ன வயதில் அக்கா வீட்டுக்கு அவன் வந்திருக்கையில் பார்த்தது. அப்போதே அவன் வாலிப வயதில் இருந்தான். இப்போது முன் வழுக்கை விழுந்து வயதானவனாகக் காணப்பட்டான்.

கருத்து மெலிந்து நோயாளி போல இருந்தான். இவனா கண்ணம்மாவை மணக்கப் போகிறான் என்று மனம் சுருங்கியது.

அவனுக்கு இவனை முதலில் அடையாளம் தெரியவில்லை என்றாலும் பெயர் சொல்லி பெரியம்மா பேசியதும் புரிந்து கொண்டான்.

"அட, சிதம்பரமா? பெரியஆளா வளந்துட்டே!" என்று புருவம் உயர்த்தினான். அருகிலிருந்த ஒரு வயதான பெரியவரைக் காட்டி, "இது எங்க அப்பா, நீ பாத்திருக்க மாட்டே " என்று காட்டி அவரிடம் சிதம்பரம் யார் என்று கூறினான். பெரியவர் அவனைத் தெரிந்து கொள்வதில் உற்சாகம் காட்டவில்லை. கண்ணம்மாவின் அம்மாவும் வந்து பேசினார். "இரு கண்ணம்மாவைக் கூப்பிடறேன்" என்று உள்ளே போனார்.

சிதம்பரம் வந்திருப்பதை அறிந்து கண்ணம்மா உள்ளே இருந்து ஓடிவந்தாள்.

"வா சிதம்பரம். இப்பதான் ஞாபகம் வந்துதா? ஏன் போன லீவுக்கு வரலே?" என்றாள் மனக்குறையுடன்.

"த்ச" என்று சலித்துக் கொள்கிற சத்தம் வந்தது. பெரியவர்தான்!

"கல்யாணமாமே? மாமாதான் மாப்பிள்ளயாமே?" என்று கேட்டார்.

அதைக் கேட்டதும் அவளது முகம் சட்டென்று ஒளி இழந்ததை சிதம்பரம் கவனித்தார். அவளுக்கு விருப்பமில்லையோ? அவள் பதில் ஏதும் சொல்லவில்லை. எல்லோரும் இருந்ததால் அவளிடம் மனம் விட்டுப்பேச முடியவில்லை. நிறைவற்ற சந்திப்பாக அது முடிந்தது. "பத்திரிகை வரும்! அவசியம் கல்யாணத்துக்கு வா" என்று பெரியம்மா சொன்னார். கண்ணம்மாவைப் பார்த்தார். அவளிடமிருந்து ஏதும் அழைப்பு இல்லை. சற்று ஏமாற்றத்துடனேயே ஊர் திரும்பினார்.

பிறகு இரண்டாண்டுகள் கழித்து பட்டப்படிப்பு முடித்த கோடையில்தான் அவளைப் பார்த்து வரலாம் என்று அவளது ஊருக்குப் போனார். கல்லூரித் தேர்வு நேரமானதால் திருமணத்துக்குப் போகவில்லை. நேரே அவளது கணவன் வீட்டுக்குப் போனார். தெருக்கதவு சார்த்தி இருந்தது. படியேறி வாசலை நெருங்கினார்.

"ஆருப்பா அது? கேக்கம கொள்ளாம ஏறி வர்ரே?" என்று ஒரு கிழக்குரல் அதட்டியது. அப்புறம்தான் தெரிந்தது - நடையின் ஒரு ஓரத்தில் கண்ணம்மாவின் மாமனார்க் கிழவர் ஒரு நார்க்காட்டிலில் படுத்திருந்தது. கிழவர் எழுந்து கடுகடுப்புடன் அவனைப் பார்த்தார்.

"நாந்தான் சிதம்பரம் - புத்தூரு" என்றார் தயக்கத்துடன்.

"எங்க வந்தே?" என்றார் கிழவர் நிஷ்டூரமாக.

சிதம்பரத்து அதிர்ச்சியாக இருந்தது. என்ன இது ? வரவேற்பே சரியில்லை!

"எல்லாரையும் பார்க்கலாம்னு வந்தேன்" என்றார் ஏதோ குற்றம் புரிந்துவிட்ட தொனியில்.

"ஒண்ணும் பாக்கவேணாம் போ! ஆருக்கும் இங்க கொம்பு மொளைக்கல!" என்று விரட்டினார் கிழவர். சிதம்பரத்துக்கு மனம் சுருங்கியது. அவமானத்தை விழுங்கிக் கொண்டு, திரும்பி விடலாமா என்று எண்ணியபோது கதவு திறந்தது.

கண்ணம்மாவின் கணவன் வாயிற்படி அருகில் நின்று அவரை வேண்டாத விருந்தாளி போலப் பார்த்தான். வா என்று அழைக்கவில்லை. 'சரி, ஏதோ சிக்கல்' என்று தோன்றவே அவனை எதுவும் கேட்காமல் தலைகுனிந்தபடி படி இறங்கினார். "கதவச்சாத்திட்டு உள்ளபோடா! கண்டபயலும் தடதடன்னு உள்ள நொழையுறான்" என்று கிழவர் மகனிடம் கத்துவது கேட்டது.

பின்னங்கால் பிடரிபடவில்லை எனும்படி ஓடாத குறையாய் மாமா வீட்டுக் கும் போகாமல் பஸ் நிலையத்துக்கு ஓடினார். சுயபிரக்ஞையின்றி வீடு வந்து சேர்ந்தார். மாமா ஊருக்குப் போவதாய்ச் சொல்லிவிட்டுச் சென்றவர் போன சுருக்கில் திரும்பியதையும் முகம் சுரத்தில்லாது இருப்பதையும் கண்ட அவரது அம்மா என்ன நடந்தது என்று கவலையோடு விசாரித்தார். யாரிடமாவது சொல்லாவிட்டால் தாளாது போலிருக்கவே அம்மாவிடம் தனக்கு நேர்ந்த அவமானத்தை அழாக் குறையாய்ச் சொல்லி முடித்தார்.

"அடப்பாவி! அங்க ஏண்டா போனே? எனக்குத் தெரிஞ்சிருந்தா தடுத்திருப்பேனே!" என்றார் அம்மா கண்டிக்கும் குரலில். சிதம்பரத்துக்கு ஏதோ செய்யத் தகாதைச் செய்துவிட்ட மாதிரி ஒரு கலவரம் மனதில் ஏற்பட "ஏம்மா! என்ன ஆச்சு?" என்றார் பதற்றமாக. "கண்ணம்மாவுக்கு ஒண்ணுமில்லியே?"

"அந்தத் தொத்தல் மாமங்கூட வாழப் புடிக்காம எவங்கூடியோ ஒடிப் போயிடுச்சு. தேடிப்புடிச்சாந்து ஊட்டுலே அடச்சி வச்சிருக்கானுவோ. ஆரு போனாலும் அவளப் பாக்க, அவகிட்டப்பேச உடுறதில்ல! அது தெரியாம அங்க ஏன் போனே?" என்று அம்மா அங்கலாய்த்தார்.

சிதம்பரத்துக்கு அதிர்ச்சிமேல் அதிர்ச்சியாக இருந்தது. கண்ணம்மாவைப் பார்க்க முடியாதுபோனதைவிட அவளைப் பற்றிய அந்தக் குற்றச்சாட்டு பொறுக்க முடியாததாக இருந்தது. அப்படியே இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டார். கண்ணம்மாமீது அவருக்கு வெறுப்பு ஏற்படவில்லை. அவளுக்கு விருப்பமில்லாமல், வயதில் மிகவும் மூத்தவனுக்குக் கட்டி வைத்ததுதான் அவளது முடிவுக்குக் காரணமாய் இருக்கக்கூடும் என்று அவரது நட்பு மனம் அவளுக்காகக் கசிந்தது.

பிறகு அவளை அவர் பார்க்கவுமில்லை; பார்க்க முயலவும் இல்லை. இன்னும் அவள் தன் நட்பை நினைத்துக் கொண்டிருப்பாளோ என்று சிந்தனை ஓடியது.

"சாப்புட வாரீங்களா?" என்று தெருவில் குரல்கேட்டாது. அப்புவின் மனைவி தான். சிந்தனை கலைந்து "இதோ" என்று எழுந்து அவள் பின்னே நடந்தார்.

( தொடரும் )

கால நதிக்கரையில் - 15

வீடு சிறியதுதான். கணவன் மனைவி இருவருக்குப் போதும். வாசற்படிக்கு முன்னால் தெருவை ஒட்டி நீண்ட சிமிட்டுப் பூசிய குறடு இருந்தது. வாசற்படியைத் தாண்டியதும் நீளமான ஹால். வெளிச்சம் கம்மி. தோட்டத்துக் கதவைத் திறந்ததும் வெளிச்சம் பாய்ந்து உள்ளே வந்தது. சுவரை ஒட்டி ஒரு விசிப்பலகை. அதில் பாய் விரித்து அழுக்குத் தலையணையில் யாரோ படுத்திருப்பது தெரிந்தது.

"ஏங்க! தூங்குறீங்களா? யாரோ ஒங்களத் தேடிக்கிட்டு வந்திருக்காங்க, எந்திரிங்க! நீங்க உள்ள வாங்க" என்று சொல்லிய அந்தப் பெண்மணி ஒரு முக்காலியை எடுத்து விசிப்பலகைக்கு அருகில் போட்டாள்.

"ஆரு?' என்று அனத்தலாய்ச் சொல்லியபடி படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்தார். அப்பு தானா என்று சிதம்பரத்துக்குப் புரியவில்லை. வயதுக்கு மீறிய முதுமையும் தள்ளாமையும் தெரிந்தது. பல நாட்களாகச் சவரம் செய்யப்படாத முகம்.

இடுங்கிய கண்களில் பரிச்சயமான மெத்தனமும் பேதைமையும் புலனாயிற்று. அப்பு தான்!

"அப்பு என்னத் தெரியுதா? நா சிதம்பரம் வந்திருக்கேன்!" என்றார் அனுசரணையுடன்.

"ஆரு செதம்பரம்......?" என்று நினைவைத் தூண்டியபடி சிந்தனை வயப்பட்ட மாதிரி தெரிந்தது.

"நடுத்தெருப் பிள்ளை வீட்டுச் சிதம்பரம். ஒனக்கு வேலை வாங்கிக் குடுத்தனே..........."

வேலை என்று சொன்னதும் அந்த முகத்தில் சிறிது வெளிச்சம் ஏற்பட்டது. அதுவே அவனது வாழ்வின் லட்சியமாகவும் ஏமாற்றமாகவும் இருந்ததால் இருக்கலாம். " ஆங்! வாங்க வாங்க......." என்று நினைவில் அவரை அடையாளம் கண்டு எழ முயன்றான்.

"வேண்டாம் உக்காரு. எப்பிடி இருக்கே?" என்று விசாரித்தார். அவ்வளவு தான்! அதுவரை கேட்டிராத அந்த அனுசரணையான விசாரணை அவனை உலுக்கி இருக்கவேண்டும். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டான். "அப்றம் வேலக் கெடைக்கவே இல்லீங்க!" என்றான் கேவலுக்கிடையில். சிதம்பரம் நெகிழ்ந்து போனார். ஆண்டு பல கடந்தும் தன் வேலை பறிபோனதை அவனால் மறக்க முடியவில்லை என்று தெரிந்தது.

"அடடே! ஏன் இப்ப அழறே? ஊர விட்டுப் போயி ரொம்ப நாள் கழிச்சி இப்பதான் பாக்கலாம்னு வந்தேன். உன் வீடுதான் முதல்ல பட்டுது. அதான் உன்னப் பாக்கலாம்னு நுழஞ்சேன்" என்றார்.

அவன் மனைவி சட்டெனச் சுதாரித்தவளாய், "ஐய! அது நீங்க தானுங்களா? உங்களத்தான் அப்பப்ப சொல்லிப் பொலம்பிக் கிட்டுருப்பாரு!" என்றாள்.

கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால் அப்புவிடமிருந்து கடந்த காலம் பற்றி எதுவும் கோர்வையாய்ப் பெற முடியவில்லை. அவன் மனைவியிடமிருந்து ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது.

அப்புவுக்கு நாற்பது வயது வரை திருமணம் செய்து வைக்க அவனுடைய பெற்றோர்களுக்கு முடியவில்லை. தனக்காகவும் தெரியாத சொன்னாலும் புரியாத இரண்டும் கெட்டானாக, பெற்றவர்களுக்குப் பாரமாய், எந்த வாழ்வாதாரமும் இல்லாத அவனுக்குத் தம் பெண்ணின் வாழ்வைப் பலிகொடுக்க யார்தாம் முன் வருவார்? கடைசியில் இந்தப் பெண்தான் - தூரத்து உறவில், நாதியற்று முப்பது வயதாகியும் தாலிபாக்யம் கிட்டாதிருந்தவள் - தெரிந்தே வேறு வழியற்றவளாய் அவனை வாழ்நாள் முழுக்கச் சுமக்க ஒப்பிக் கழுத்தை நீட்டினாள். அந்த நிம்மதியில் பெற்றவர்கள் சீக்கிரமே காலமாகிவிட, இவள்தான் ஏதேதோ அகப்பட்ட வேலைகளை மானமாகச் செய்து காலத்தை ஓட்டி வந்திருக்கிறாள். பிறகு ஒரு பிள்ளை பிறந்து அவனை வளர்த்து ஆளாக்கிப் படிக்கவைத்து, அவனும் சூட்டிகையாய்ப் படித்து வடக்கே ஏதோ ஒரு வேலையைத் தேடிக் கொண்டபின் தான் அவளால் ஆசுவாசப் படுத்திக் கொள்ள முடிந்தது. அவன் மாதந்தோறும் அனுப்பும் பணத்தில் இப்போது தான் மூன்றுவேளையும் வயிறாரப் பசியாற முடிகிறது. அவன்தான் இடிந்து கொண்டி ருந்த வீட்டிலிருந்து பெற்றவர்களை வெளியேற்றி, பக்கத்திலேயே சின்னதாக ஒரு வீட்டையும் கட்டிக் கொடுத்துக் குடியமர்த்தி விட்டிருக்கிறான். அவனுக்கு இனிதான் திருமணம் செய்யவேண்டும்.

இவ்வளவையும் அவள் ஆற்றாமையுடனும் அழுகையினுடனும் சொல்லி முடித்ததும், 'கல்லினுள் தேரைக்கும் படியளக்'கிற கடவுள் அப்புவை முற்றிலுமாகக் கைவிட்டுவிடவில்லை என்று சிதம்பரத்துக்கு ஆறுதல் ஏற்பட்டது.

சற்று இளைப்பாறிய பின் அவர் வெளியே போய்வரக் கிளம்பினார். " இந்தப் பையும் பெட்டியும் இங்கியே இருக்கட்டும். நா இப்பிடியே கொஞ்சம் சுத்திப் பாத்துட்டு வரேன்" என்று எழுந்தார்.

"சாப்புட வந்துடுங்க, தோ நா சமைச்சுடுறேன்'" என்றாள் அந்தப் பெண்மனி.

"வேணாம்மா! சிரமப்படாதீங்க" என்று சிதம்பரம் மறுத்தும் அவள் மேலும் வற்புறுத்தவே, "சரி! தப்பா எடுத்துக்காதீங்க - நா திடீர்னு வந்துட்டதாலே வீட்டுலே பதார்த்தமெல்லாம் இருக்குதோ என்னுமோ - இத வச்சுக்கிங்க" என்று அவள் கையில் கொஞ்சம் பணத்தைக் கொடுத்து விட்டு வெளியே வந்தார். "வந்துடுங்க" என்று அப்புவும் சொல்வது கேட்டது.

வெளியே வந்து கிழக்கு நோக்கி கொஞ்ச தூரம் நடந்தார். அவரது பால்ய சினேகிதி கண்ணம்மா இருந்த வீட்டைத் தேடினார். ஒரு சிதைந்த, பாதி இடிந்த கூரைவீடு தான் இருந்தது. பக்கத்தில் மணியக்காரத் தாத்தா வீடு இருந்ததே! உயரமான அகன்ற கல்வீடு அது. அதுவும் பாதி இடிந்த நிலையில், ஓடெல்லாம் சரிந்து அலங்கோலமாய் இருந்தது. கண்ணம்மாவுடன் சிறுபிள்ளையாய் அவர் விளை யாடிய அகன்ற திண்ணை மட்டும் அப்படியே இருந்தது. திண்ணையின் ஓரம் முழுதும் கருங்கல் பதித்தது. அதில் தூசில்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தார்.

வீட்டுக்காரத் தாத்தா மணியக்காரரில்லை. அவரது மகன் தான் - சிதம்பரத்துக்கு சிற்றப்பா முறை வேண்டும் - மணியக்காரராக இருந்தார். அவர் வீட்டுத் தாத்தா என்பதால் அவர் 'மணியக்காரத் தாத்தா' என்று அழைக்கப் பட்டார். பக்கத்து வீடு கண்ணம்மாவின் வீடு என்பதால் சிதம்பரம் அந்தத் திண்ணையில்தான் அவளுடன் சிறு வயதில் விளையாடுவார். இந்தத் திண்ணையில், மணியக்காரத் தாத்தா அவருக்கும் கண்ணாம்மாவுக்கும் எவ்வளவு ரசமான கதைகளைச் சொல்லியிருக்கிறார்! பின்னாளில் சிதம்பரமும் ஒரு கதைசொல்லி ஆனதற்கு அவரும் ஒரு காரணி எனலாம்.

இப்போது நினைத்துப் பார்க்கையில் அந்தத் தாத்தா எவ்வளவு சுவாரஸ்யமான மனிதர் என்று தோன்றவும், மனத்திரையில் அவரது சித்திரம் ஓடுகிறது.

தாத்தா நல்ல உயரம். ஆறடி இருக்கலாம். டார்சான் படத்தில் பார்க்கிற மாதிரி அகன்ற பாறை போலத் தோன்றும் மார்புகளும் கரளை கரளையான தோள் மற்றும் முண்டாக்களும் நீண்டு திரண்ட கைகளும் வலுவாய் ஊன்றி நிற்கும் கால் களுமாய் ஆஜானுபாகுவாய் இருப்பார். இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டியைத் தார்ப்பாச்சிக் கட்டி இருப்பார். தோளின் ஒரு புறமாய் நீல ஈரிழைத் துண்டு தொங்கும். மார்பிலும் முழங்கைகளிலும் 'சவசவ' என்று கருத்தமுடி கரடி போன்ற தோற்றத்தைத் தரும். முன் தலை முழுக்க வழுக்கையாகி பின்னால் அர்த்தச் சந்திரன் போலக் கொஞ்சமாய் முடியுடன் இருப்பார்.

சிதம்பரம் ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே தாத்தாவுக்கு எண்பதுபோல வயதாகி இருந்தது. ஊரிலேயே மூத்தவர் அவராகத்தான் இருக்கவேண்டும். எல்லோருடைய வீடுகளிலும் நடக்கிற நல்லது கெட்டதுகளில் அவர் நிச்சயம் இருப்பார். அது போல ஊர்ப் பொது விஷயங்களிலும் அவர் முன் நிற்பார். அவர் இருந்தவரை ஊரில் திருட்டுப் பயம் கிடையாது. தாத்தாவுக்கு சிலம்பம், குஸ்தி எல்லாம் தெரியும். காலையில் பழையதும் கெட்டித் தயிரும் சுண்டக்குழம்பும் சாப்பிட்டு, வஞ்சனை இல்லாது வளர்ந்த உடம்பு. அவர் உடம்பே அதற்கு சாட்சி சொல்லும். இளவட்டம் ஒன்று அவரால் பயிற்சி தரப்பட்டு இரவில் ரோந்து வருவதும் எங்காவது திருடன் அரவம் ஏற்பட்டால் தாத்தா தலைமையில் உடனே ஊரைச் சுற்றி கையில் கனத்த தடி, சுளுக்கு சகிதம் வளைத்து, திருடன் எந்த வழியாலும் வெளியேறிவிடாதபடி காபந்து செய்தும் வந்தார்கள்.

அவர் இருந்தவரை திருடர்களுக்கு அந்த ஊர் என்றாலே பயம்தான். தாத்தா திருடர்களை மடக்கிய கதைகள் நிறைய.

மொட்டப்பிள்ளை என்றொரு பயங்கரத் திருடன். பக்கத்து ஊர்க்காரன்தான். அவன் பெயரைச் சொல்லியே - "தோ மொட்டப்பிள்ளயக் கூப்பிடவா?" என்று மிரட்டியே பிள்ளைகளைப் பணியவைத்து விடுவார்கள். ஆள் மொட்டைத் தலையுடன், கட்டுமஸ்தான உடம்புடன் சினிமாவில் வரும் தடிமுரடன் மாதிரி இருப்பான். பெரிய முட்டைக்கண்கள் எப்போதும் தூரத்திலேயே லயித்திருக்கும். அவன் தெருவில் நடந்தால் எதிரே வருபவர்கள் அவன் கண்ணுக்குப் பூச்சிகள் பறப்பது போலத் தெரியுமாம். தாத்தாவிடம் ஒருதடவை அவன் பிடிபட்ட பிறகு உள்ளூர், பக்கத்து ஊர்களில் தன் வேலையைக் காட்டுவது இல்லை. போலீசால் அவனைப் பிடிக்க முடியவே இல்லை. பெரிய, தலைக்குமேல் உயரமான முள்வேலியைக் கூட அனாயசமாய்த் தாண்டித் தப்பித்து விடுவான். அவனது சாகசங்கள் பற்றியும் அவனது குணாதிசங்கள் பற்றியும் தாத்தா சிதம்பரத்துக்கும் கண்ணம்மாவுக்கும் கதைகதையாய்ச் சொல்லி இருக்கிறார்.

தாத்தாவிடம் மொட்டப்பிள்ளை பிடிபட்ட கதையை பலமுறை கேட்டும் அலுத்ததில்லை. மொட்டப்பிள்ளை கன்னம் வைத்துத் திருடுவதில் பலே கில்லாடி! தாத்தாவுக்கு வீட்டின் எப்பகுதியில் எப்படிக் கன்னம் வைப்பார்கள், எப்படி உள்ளே நுழைவார்கள் என்பதெல்லாம் அத்துபடி. அதனால் ஒருமுறை அவர் வீட்டிலேயே மொட்டப்பிள்ளை கன்னம் வைத்தபோது அவர் ஒருவராகவே அவனை மடக்கிக் கட்டிப் போட்டார்.

நடு ஜாமம் கழிந்து எல்லோரும் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் வேளையில், தூக்கம் வராது படுக்கையில் புரண்டுகொண்டிருந்த தாத்தாவுக்கு, ஏதோ சுவரில் கல் பெயர்கிற மாதிரி சத்தம் கேட்கவே உஷாராகி, சத்தம் காட்டாமல் எழுந்து வீட்டுக் குள் ஒருமுறை சுற்றிவந்தார். கல் பெயரும் சத்தம் தொடர்ச்சியாக இல்லாமல் விட்டு விட்டுக் கேட்டது. காமிரா உள்ளில் இருந்துதான் சத்தம் வந்தது. தாத்தா அடிமேல் அடிவைத்து சத்தம் வந்த சுவர் அருகே போய் நின்று காதைச் சுவரில் வைத்துக் கேட்டார். நிச்சயம் யாரோ கன்னம் வைக்கிறான் என்று தெரிந்துவிட்டது. தாத்தா பதற்றப்படவில்லை. யாரையும் துணைக்கு அழைக்கவில்லை. சுவர் அந்தக்கால -ஒன்றரை அடி அகலமான, மண்ணைக் குழைத்துக் கட்டிய செங்கல் சுவர். அதனால் வெளிப்புறக் கற்கள்தாம் பெயந்து விழுந்து கொண்டிருந்தன. இன்னும் உள் பக்கம் பெயரவில்லை.

தாத்தா வீட்டிலிருந்த தடிமனான தாம்புக் கயிற்றை எடுத்து வந்தார். கூடத்தில் இருந்த கல் உரலை சத்தம் காட்டாது அலாக்காகத் தூக்கி வந்து கல் பெயரும் சத்தம் வந்த இடத்துக்கு அருகில் சற்றுத் தள்ளிப் போட்டார். தாம்புக் கயிற்றின் ஒரு முனையைக் கல்லுரலின் உடுக்கை போன்ற நடுப்பகுதியில், உருவிக் கொள்ளாதபடி இறுக்கிக் கட்டினார். கயிற்றில் சுருக்குப் போட்டு, குறவன் காடை கவுதாரி பிடிக்கக் கண்ணி வைக்கிற மாதிரி - ஆள் உள்ளே கால் வைக்கும் இடத்தில் வட்டமாக அகட்டிவைத்து மறுமுனையைக் கையில் பிடித்தபடி கல்லுரலுக்கு எதிர்ப் புறம் சுவரோரமாக குந்தி உட்கார்ந்து கொண்டார். கன்னம் இடுகிறவன் முதலில் தலையை உள்ளே விடமாட்டான். காலைத்தான் முதலில் உள்ளே விட்டு நோட்டம் பார்ப்பான். யாராவது விழித்திருந்து பிடித்தாலும் தலை போய்விட்டால் என்ன செய்வது? தாத்தாவுக்கு அந்த சூட்சுமம் தெரியும். அதனால் கால்கள் இரண்டும் இறங்கியதும் சுருக்கை இழுத்து கால்களைக் கட்டிவிடக் காத்திருந்தார்.

செங்கற்கள் நிதானமாய் அவசரமில்லாமல் பெயர்ந்து, உள்பக்க கல்லும் இழுக்கப்பட்டது. முதலில் ஒரு கை உள்ளே நுழைந்து சுழற்றி ஏதும் தட்டுப்படுகிறதா என்று நோட்டம் பார்த்தது. எதுவும் தட்டுப் படாததால் கொஞ்சம் கொஞ்சமாக மேலும் கற்கள் பெயர்க்கப்பட்டன. துவாரம் பெரிதாகி ஒரு ஆள் தாராளமாய் இடிக்காமல் நுழைகிறபடி ஆனதும் தாத்தா உஷாரானார். மூச்சு விடும் சத்தம் கூடக் காட்டாமல், கால்கள் உள்ளே இறங்கக் காத்திருந்தார். பின்பக்கமாக ஒவ்வொரு காலாக உள்ளே இறக்கி கால்களை ஊன்றி, இடுப்பு உள்ளே நுழைகையில் தாத்தா 'விசுக்'கென்று சுருக்கை இழுத்தார். கால்கள் பதறித் துள்ளி வெளியேற முயன்றன.ஆனால் சுருக்கு வலுவாய்க் கால்களைப் பற்றி இழுத்தன. மறுபக்கம் கயிறு கல்லுரலில் கட்டப்பட்டு இருந்தததால், கள்ளனின் காலை உதறி இழுக்கும் முயற்சி வெற்றி பெறவில்லை. தாத்தா கயிற்றை விடாது பிடித்தபடி துளையருகில் வந்து அவனது இடுப்பை இறுக்கிப் பிடித்துக் கொண்டார். என்ன திமிறியும் அவனால் தாத்தாவின் உடும்புப் பிடியிலிருந்து விடுபட முடியவில்லை. முரட்டுத்தனமாக அவனை உள்ளே இழுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அவனைக் கீழேதள்ளி, கல்லுரலுடன் கட்டிப் போட்டார்.

பிறகு விளக்கை ஏற்றி எடுத்து வந்து ஆளைப் பார்த்தால் அவன் மொட்டப் பிள்ளை என்று தெரிந்தது. "எலே! எங்கிட்டியே ஒன் வேலையக் காமிக்க வந்துட்டியா?" என்று நக்கலாய்க் கேட்டார். அவன் எங்கேயும் இப்படி அகப்பட்டுக் கொண்டதில்லை. கிழவர் லேசுப்பட்ட ஆளில்லை என்று தெரிந்ததும் சரணாகதி அடைந்து விட்டான். பொழுது விடியட்டும் என்று பக்கத்தில் சற்று தள்ளி துண்டை விரித்துப் படுத்துவிட்டார்.

விடிந்ததும் கதவை திறந்து ஆட்களை அரவங்காட்டி, கும்பல் கூடியதும் கட்டை அவிழ்த்து பின்கட்டாய்க் கட்டி அவனைத் தெருவுக்குக் கொண்டு வந்து திண்ணைத் தூணில் கட்டி நிறுத்தினார். ஊரே திரண்டு வந்து வேடிக்கை பார்த்தது.

ஆளாளுக்கு ஒன்று சொன்னர்கள். அப்போதெல்லாம் போலீசுக்குப் போவதில்லை. மக்களே தண்டம் கொடுத்து விடுவார்கள். தாத்தாதான் இப்போது தண்டம் விதிக்க வேண்டியவர், மொட்டப்பிள்ளையையே என்ன செய்வது என்று கேட்டார். அவன் மிகவும் பணிவாக "சாமி! நீங்க இப்பிடி ஒருத்தர் இருக்கறது தெரியாம வந்துட்டேன். இனிமே இந்த ஊருக்குள்ளே சத்தியமா நொழைய மாட்டேன். மன்னிச்சு உட்டுடுங்க" என்று சொல்லவும், தாத்தாவுக்கு அவனது நாணயம் தெரியுமாதலால் எல்லோரும் வேண்டாம் என்று தடுத்தும் பெருந்தன்மையோடு அவனைக் கட்டவிழ்த்து விடுவித்தார். அவன் தாத்தாவின் முன்னால் விழுந்து கும்பிட்டு எழுந்து 'விறுவிறு'வென்று போய் விட்டான். அதற்குப் பிறகு தாத்தா இருந்தவரை அவன் தன் வாக்கைக் காப்பாற்றினான். அந்த ஊர் வழியே கூடப் போகாமல் விலகியே நடந்தான்.

இதுபோன்ற தன் கள்ளர்களைப் பிடித்த சாகசத்தையும் பேய் பிசாசுகளைச் சமாளித்த சாகசங்கள் பற்றியும் மயிர்க் கூச்செறியும்படி ரசமாகச் சொல்லி இருக்கிறார். இப்போதும் அவரே சொல்வது போலவே இருக்கிறது. கண்ணம்மாவும் சிதம்பரமும் திறந்த வாய் மூடாமல் கேட்டிருப்பார்கள். அவர்களுக்கு தாத்தாதான் அந்த இளம்வயதில் பிரமிப்பைத் தந்த ஹீரோ. இப்போது அவரது சாகசங்களைப் பற்றி பேசிப் பகிர்ந்துகொள்ள கண்ணம்மா இல்லையே என்று தோன்றியது. தாத்தா சிதம்பரம் கல்லூரிக்குப் போன காலத்திலேயே காலமாகிவிட்டதாகச் சொன்னார்கள். கண்ணம்மாவும் அப்போதே அவளது பாட்டி வீட்டுக்குப் போய்விட்டாள். இந்த வயதில் அவளைப் பார்த்தால் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தார்.

(தொடரும்)

கால நதிக்கரையில் - 14

அப்புவுக்குத் திருமணம் ஆகிவிட்டதோ? அப்படியானால் அதிர்ஷ்டசாலிதான். அவனுக்கு யார் பெண் கொடுப்பார்களோ, அவனையும் ஒருத்தி மணந்து கொள்ளுவாளோ என்று பரிதாபத்துக்குரியவனாக அவன் இருந்தான். சிதம்பரம் ஊரை விட்டுப் போகும் வரை அவனுக்குத் திருமணம் ஆகி இருக்கவில்லை. இப்போது அவனையும் ஒருத்தி மனிதனாக ஏற்றுக் கொண்டு வாழ வந்திருக்கிறாளே! பாக்யசாலிதான். ஆனால் அவள் பாக்யசாலியாக இருக்கமுடியாது. தியாகியாக வேண்டுமானால் கருதலாம்.

அப்பு அவன் பெற்றோருக்கு ஒரே பிள்ளை. ஏழ்மையான குடும்பம். நிலம் ஏதுமில்லை; ஒரு வீடு மட்டும்தான். அதுவும் மூன்று சகோதரர்களுக்கும் பொதுவானது. தரகு வியாபாரம், கார்வாரி என அவருக்குப் பிழைப்பு நடந்து கொண்டி ருந்தது. வெகுநாட்கள் பிள்ளை இல்லாமல் ஏங்கிப் பிறந்தவன் அப்பு. அதனால் அருமையாய் வளர்த்தார்கள். ஆனால் அவன் பிறந்ததிலிருந்தே கொஞ்சம் மூளை வளர்ச்சிக் குறைவுடன் இருந்தான். மிகவும் அப்பாவியாகவும் உடனிருப்பவர்களின் கேலிக்கு ஆளாகிறமாதிரி அசடாகவும் இருந்தான். அவனைவிடச் சின்னப் பிள்ளைகள் கூட அவனை ஏமாற்றி விடுவார்கள். 'டே அப்பு' என்றுதான் அழைப்பார்கள். அவனுக்கு அதற்காக அவர்கள் மீது கோபம் வராது. பேச்சும் தீர்க்கமாயிராது. 'கருவேப்பிலையை' க் 'கருப்பப்பிள்ளை' என்பான். 'ஆஸ்பத்திரி' என்று சொல்ல வராது; 'ஆத்துக்குரிச்சி' என்பான். அதனால் எல்லோருக்கும் அவனைச் சீண்டுவதில் ஆர்வம் அதிகம். ஒவ்வொருவரும் அவனைக் 'கருவேப்பிலை' என்றும் 'ஆஸ்பத்திரி' என்றும் சொல்லச் சொல்லி மகிழ்வார்கள்.

பள்ளிக்கூடத்திலும் படிப்பு மிகவும் மந்தம். ஆசிரியருக்கு இவன் என்றால் இளக்காரம். அவரும் அவன் வாயைக் கிளறி அவன் உளறுவதை ரசிப்பார். எதையாவது சாக்கு வைத்து அடித்து நொறுக்குவார். அவனை வதைப்பதில் ஆசிரியர் உட்பட எல்லோருக்கும் மிக விருப்பம். அப்போது மைக்கூடும் பேனாவும் ஒவ்வொருவரும் கொண்டு வரவேண்டும். அப்புவின் மைக்கூடு மூடியில்லாத சின்ன மண் குப்பி. பேப்பரைச் சுருட்டி அதற்கு மூடியாகச் சொருகப் பட்டிருக்கும். அப்புவின் கவனத்தை ஒருவன் திருப்ப இன்னொருத்தன் அவனது மைக்கூட்டில் மண்ணை அள்ளிப் போட்டுவிடுவான். அது தெரியாமல் அப்பு நிப்புப்பேனாவை நுழைக்க அது 'சரக்' கென்று மண்ணில் நுழையும். உடனே 'ஹோ' என்று பயல்களின் சிரிப்பு! அப்பு பரிதாபமாய் விழிப்பான்.

விளையாட்டிலும் அவன்தான் பலிகடா. பம்பர விளையாட்டில் அவனது பம்பரத்தைப் பிளப்பதில் எல்லோருக்கும் போட்டி. கோலி விளையாட்டில் அவனது கோலியை மூர்க்கமாய் அடித்துச் சிதற விடுவதில் எல்லோருக்கும் ஆனந்தம். அவன் நடந்தாலே பின்னாலிருந்து காலை இடறி விழ வைப்பார்கள். ஓடும்போது தட்டி விடுவார்கள். 'ஓ' வென்றலறியபடி அலங்கோலமாய் விழுவான். பயல்களின் கும்மாளம் தாங்க முடியாது. கண்ணாமூச்சி ஆட்டத்தில் அவனது கண்களைக் கட்டி ஒவ்வொருவனாக வந்து அவன் தலையில் ஓங்கிக் குட்டி 'இது யார் தெரியுதா?' என்று கேட்பார்கள். அப்பு வலி தாளாமல் அலறுவான். பொறுக்க முடியாமல் சிதம்பரம் தான் அவனது உதவிக்கு அவ்வப்போது வருவார். அவர் அப்போது அவனை விட இரண்டு வகுப்புகள் மேலே படித்தார். அவனைத் தொந்தரவு செய்யும் பையன்களை மிரட்டி அவர்களிடமிருந்து விடுவிப்பார். அதனால் அவன் சிதம்பரத்திடம் ஒரு பாதுகாப்பான நட்பை உணருவான். வேறு யாரும் அவனுக்காகப் பரிந்து பேசுவதில்லை. அவனைச் சிறுவர்கள் துன்புறுத்தும் போது அவன் அம்மா பார்த்துவிட்டால் துடித்துப் போவாள். அவனை வருத்துகிற பிள்ளைகளைக் கை நெறித்துச் சாபமிடுவாள்.

ஒவ்வொரு வகுப்பிலும் இரண்டு மூன்று ஆண்டுகள். ஆசிரியராகப் பார்த்துப் பரிதாபப்பட்டு அடுத்த வகுப்புக்கு மாற்றினால் தான் உண்டு. அவன் ஐந்தாம் வகுப்பை முடிப்பதற்குள் பதினைந்து வயதாகி விட்டது. அப்போது சிதம்பரம் கல்லூரிக்குப் போயிருந்தார். அவரைப் பார்த்து அப்பு தானும் மேலே படிக்க ஆசைப் பட்டான். அதற்கு மேல் அவனுக்கு படிப்பு ஏறாது என்று தெரிந்தும் அவனுடைய ஆசையை மறுக்க மனமில்லாமல் அவனுடைய அப்பா மிகவும் சிரமப்பட்டு பக்கத்து நகரத்தில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் ஆறாம்வகுப்பில் கொண்டு போய்ச் சேர்த்தார்.

அப்போதெல்லாம் பஸ் வசதி இல்லை. தினமும் காலையில் சீக்கிரமாகவே கிளம்பி ஐந்து மைல் நடந்து போய் மாலையில் வாடி வதங்கி, இருட்டும் நேரத்துக்குத் திரும்பி வருவான். பாவம், மூன்று வருஷம் நடந்தது தான் மிச்சம்! 'எண்ணெய் செலவழிந்ததுதான் மிச்சம் பிள்ளை பிழைக்கவில்லை' என்கிறபடி படிப்பு மண்டையில் ஏற மறுத்தது. ஆறாம் வகுப்பைத் தாண்ட அவனால் முடியவே இல்லை.

கல்லூரி கோடை விடுமுறையில் போது சிதம்பரம் வந்திருந்த போது, அப்புவின் அப்பா அவனை அழைத்துக் கொண்டு அவரிடம் வந்தார். 'தம்பி! இனிம இவனப்படிக்கவைக்க என்னால முடியாது; படிப்பும் ஏறல. நீதான் பாத்து எதாவது ஒரு வேலைலே சேத்துடணும். எங்களுக்கும் வயசாயிடுச்சு. எஙகளுக்கப்பறம் என்னா ஆவானோ?" என்று கண்கலங்கச் சொன்னார். சிதம்பரத்துக்குப் பரிதாபமாக இருந்தது. ஆறாம் வகுப்பையே முடிக்காதவனுக்கு என்ன வேலை கிடைக்கும்? இருந்தாலும் அவரது திருப்திக்காகப் 'பார்க்கிறேன்" என்று அனுப்பி வைத்தார்.

பிறகு ஒவ்வொரு விடுமுறையின் போதும் அப்பு தேடி வந்து விடுவான். "என்னங்க, எனக்கு ஒரு வேல வாங்கிக் குடுங்க" என்பான் கெஞ்சலுடன். பரிதாபமாய் முகம் பார்த்து நிற்கும் அசட்டு ஆடு போல அவன் விழிப்பதைப் பார்க்க சிம்பரத்துக்கு நெஞ்சைப் பிசையும். சூதும் வாதும், உருட்டும் புரட்டும் நிறைந்த இந்த உலகில், ஒரு வேலையே வாங்கித் தந்தாலும் அதை வைத்துக் காப்பாற்ற அவனால் முடியுமா என்று மனம் உருகும்.

அவனது விடாத நச்சரிப்பால் சிதம்பரம் தன்னுடன் படித்த நண்பனின் அப்பா - அப்போதுதான் பக்கத்து நகரத்தில் அமைந்திருந்த ஊராட்சி ஒன்றியத்தின் தலைவராக ஆகி இருந்தவரிடம் அப்புவின் நிலைமையை எடுத்துச் சொல்லி அவனுக்கு ஏதாவது வேலை போட்டுத் தரக் கேட்டு, கடைசியில் அவர் அவனுக்கு அவரது அலுவலகத்தில் தற்காலிகமாக எடுபிடியாளாக வேலை போட்டுக் கொடுத்தார். அப்புவுக்கு நிறைய புத்திமதி சொல்லி அவனை வேலையில் சேர்த்துவிட்டு சிதம்பரம் போனார். படிப்பு முடிந்து வேலை ஏற்று அவர் ஊரிலிருந்து வெகு தூரத்தில் பணிக்கமர்ந்தார். ஆறு மாதம் போல ஊர்ப்பக்கம் திரும்ப முடியவில்லை. பிறகு ஒருதடவை ஊர் வந்தபோது அம்மாவிடம் அப்புவைப் பற்றி விசாரித்தார்.

"அதை ஏன் கேட்கிறே போ! அசடுன்னு தெரிஞ்சும் நீ வேல வாங்கிக் குடுத்தாப்பவே சொன்னேன். நீ கேக்ககல. அது வேலையத் தொலச்சுட்டு வந்து நிக்கிது!" என்றார் அம்மா.

"என்னம்மா ஆச்சு?" என்று பதற்றத்துடன் கேட்டார் சிதம்பரம். "அது விவரமெல்லாம் எனக்குப் புரியல. அப்பா வந்ததும் கேளு" என்றார் அம்மா. அப்பா வெளியே போயிருந்தார்கள். அப்பா வரும்வரை பொறுக்கவில்லை. " மணியக்காரரை வேணுமானாக் கேளு. அவுருதான் அழச்சிக்கிட்டு வந்தவரு!" என்று அம்மா சொல்லவும் உடனே பக்கத்துத் தெருவிலிருந்த மணியக்காரரைத் தேடிப் போனார் சிதம்பரம். மணியக்காரர் சொன்னது கதையில் வருவது போல மர்மமாகவும் அக்கிரமமாகவும் பட்டது.

மணியம் அப்புவுக்கு வேலைபோன கதையை விபரமாகச் சொன்னார்.

" பஞ்சாயத்து யூனியன் ஆபீசுலே இவன மாத்¢ரி இருந்த பியூன் வாட்சுமேனுக் கெல்லாம் ஆரம்பத்திலேர்ந்தே இவம் மேலே பொறாமை. மானேஜர் இவன் அப்பாவிங்கறதாலே இவங்கிட்ட அனுதாபமும் அக்கறையும் காட்டி வந்திருக்கிறாரு. அதுவே அவனுகளுக்குத் தாளல. மானேஜர் வேறே அவனுவளப் பத்தியும் அவனுங்க நடவடிக்க பத்தியும் இவங்கிட்ட அப்பப்ப விசாரிப்பாரு போல இருக்கு.. இவந்தான் சூதுவாது தெரியாத பயலாச்சா - எதச் சொல்லலாம், எதச் சொல்லக் கூடாதுன்னு தெரியாம நடந்த உண்மையச் சொல்லியிருப்பான் போல்ருக்கு. மானேஜரு அவனுகளக் கண்டிச்சிருக்கிறாரு. பாதிக்கப் பட்டவனுவ இவனப் பழிவாங்க சமயம் பார்த்துக்கிட்டு இருந்திருக்கிறானுவ. அதுக்குத் தோதா ஒரு நேரமும் வந்திருக்கு.

ஒரு நாளு மானேஜர் கைக்கடியாரத்தக் கழட்டினவரு ஞாபக மறதியா மேசை மேலியெ வச்சுட்டுப் போயிட்டிருக்காரு. மறுநாளு ஞாபகம் வந்து தேடிப் பாத்தப்ப கடியாரத்தைக் காணல. பியூன், வாட்ச்மேனுவளக் கூப்பிட்டுக் கேட்டிருக்காரு. அந்தப் பசங்கதான் வாட்சை எடுத்து ஒளிச்சு வச்சுட்டு "எங்களுக்குத் தெரியாது அய்யா! அப்புதான் நீங்க போனப்பறம் கடேசியா இருந்தவன்"ன்னு சொல்லவும் அப்புவைக் கூப்பிட்டுக் கேட்டிருக்காரு. அப்பு மிரள மிரள முழிச்சபடி தான் அதப்பாக்கவே இல்லைன்னு அழுதிருக்கான். மத்த ரெண்டு பயலும் "பாத்திங்களா அய்யா! கேக்கறதுங்காட்டியும் அழுவுறான். அவம் முழிக்கறதப் பாத்தாலே தெரியிலீங்களா? அவந்தான் அய்யா எடுத்திருப்பான்" ன்னு தூபம் போட்டிருக்கானுவ. மானேஜர் இவன நல்லதனமாக் கேட்டுப் பாத்திருக்காரு. இவன் "எனக்குத் தெரியாதுங்க" ன்னு அதே பதிலியே திரும்பச் திரும்பச் சொல்லவே அவரு கோபம் வந்து "ஒரு நாள் டயம் தரேன். அதுக்குள்ளே நீங்க மூணுபேரும் முடிவு பண்ணி யாரு எடுத்ததுண்ணு சொல்லியாகணும். இல்லேண்ணா சேர்மன் கிட்ட விஷயம் போயிடும்" னு மிரட்டி அனுப்பிட்டாரு.

மறுநாளைக்குள்ள அந்த ரெண்டு பயலுவளும் இவங்கிட்ட பயமுறுத்தி இருக்கானுவ. " டே அப்பு! நாந்தான் எடுத்தேன்னு ஒப்புத்துக்க. இல்லேண்ணா சேர்மன் அய்யாக்கிட்டச் சொல்லி உன்ன வேலைய விட்டுத் தொரத்திடுவாங்க. நாங்க ரெண்டு பேரும் பர்மனண்டு. எங்கள ஒண்ணும் செய்ய முடியாது. நீ புதுசு. உன்னத்தான் நீக்கிடுவாங்க" ன்னு மெரட்டி இருக்கானுவ. இவனுக்கு அவுனுவ சூது தெரியல. வேல போயிடும்னதும் பயந்துட்டான். " நீ ஒத்துக்கிட்டா ஓண்ணும் செய்யமாட்டாங்க. மொதத் தடவங்கறதால சும்மா எச்சரிக்க பண்ணி உட்டுவாங்க"ன்னு அவனுவ இவன மூளச்சலவ பண்ணி ஒத்துக்க வச்சுட்டானுவ. இந்த மடப்பயலும் அதே மாதிரி மானேஜர்கிட்ட, தான் தான் எடுத்தேன்னு ஒப்புத்துக்கிட்டான். மானேஜரு சேர்மன் கிட்ட சொல்லி இருக்காரு. அவரு நீதானே வேலைக்கு சிபாரிசு பண்ணேங்கறதால ஒனக்குச் சொல்லி அனுப்பினாரு. நீ இல்லேண்ணதும் எனக்குச் சொல்லி அனுப்பபுனாரு. நான் போனதும் விஷயத்த சொல்லி "இனிமெ இவன் இங்கே இருக்கிறது நல்லதில்லே. அழச்சிக்கிட்டுப்போயி அவன் அப்பாக்கிட்ட விட்டுடுங்க"ன்னாரு. நான் எவ்வளவோ சொல்லிப்பாத்தேன். "அவன் அப்பாவிங்க. யாரோ செஞ்சத் திருட்ட, பயத்துல தான் ஏத்துக்கிட்டுருக்கான். ஒருதடவ மன்னிச்சு விட்டுடுங்கண்ணு" தயவாக் கேட்டுக்கிட்டேன். "வேணாங்க. இதெல்லாம் பொறுப்பா வேலை செய்யிற இடம். இவன் தாக்குப் பிடிக்க மாட்டான்" னுட்டாரு.

மணியக்காரர் இப்படிச் சொன்னதும் என்ன செய்வது என்று சிதம்பரத்துக்குத் தெரியவில்லை. " நீ வருத்தப் பட்டு என்ன செய்யிறது? தனக்காகவும் தெரியாம சொன்னாலும் புரியாதவங்களுக்காகக் கவலப்பட்டுப் புண்ணியமில்ல" என்று சொல்லி விடை கொடுத்தார்.

வீட்டுக்கு வந்ததும் சிதம்பரம் அப்புவுக்கு சொல்லி அனுப்பினார். அவன் வந்ததும் 'என்னடா நடந்தது' என்று கேட்கும்போதே கேவிக்கேவி அழ ஆரம்பித்து விட்டான். சிதம்பரமும் கேட்டுப் பிரயோசமில்லை என்று "சரி, உந்தலையெழுத்து அவ்வளவுதான்! யாரு என்ன செய்ய முடியும்? போ!" என்று அலுத்துக் கொண்டார். அவன் அழுகையை நிறுத்திவிட்டு " வேற எதாச்சும் வேல வாங்கிக் குடுங்க" என்றான் இறைஞ்சல் தொனியில். சொல்லிப் புரியவைக்க முடியாது என்பதால் " சரி, பார்ப்போம்" என்று அனுப்பி வைத்தார்.

பிறகு பல இடங்களுக்கு மாற்றலானதால் ஊருக்கு வரவே முடியாது போயிற்று. அப்புவை மறந்தே போனார். இப்போது பல ஆண்டுகளுக்குப் பிறகு வந்தபோது அவனுக்கு என்ன ஆயிற்று என்றறிய விரும்பினார். தற்செயலாய் அவன் மனைவி இப்போது பார்த்து அவர் யாரென்று தெரியாமலே வீட்டுக்கு அழைத்திருக்கிறாள்.

இவ்வளவையும் அவனது வீட்டின் முன்னே நின்றபடியே சிதம்பரம் மனத்திரையில் ஓட்டிப் பார்த்தபடி இருக்கையில் "உள்ள வாங்க. ஏன் அங்கியே நிக்கிறீங்க?" என்று அந்தப் பெண்மணி அழைக்கவும் நினைவைத் திருப்பி, உள்ளே நுழைந்தார்.

(தொடரும்)