Saturday, September 08, 2007

கால நதிக்கரையில் - 17

சாப்பாடானதும் கொஞ்சம் ஓய்வு எடுத்துக் கொண்டு மீண்டும் வெளியே கிளம்பினார் சிதம்பரம். கிழக்கே நடந்து அவர் சிறு வயதில் விளையாடிய கீழ மந்தைக்கு வந்தார். முப்பது ஆண்டுகளுக்குப் பின்னும் அந்த இடத்தில் எந்த மாற்றமும் இன்றி முன்புபோலவே இருந்தது. தென்கிழக்கு மூலையில் புதுப்பிக் கப்பட்டிருந்த திரௌபதை அம்மன் கோயில் மட்டும் புது வண்ணத்தில் ஜொலித் தது. தெருமுனையில் இருந்த அக்காலத்திய பிரபல பெட்டிக் கடையைக் காணோம். அதற்கு நேர் எதிரே இருந்த சிமிட்டிக்குழாய்த் தயாரித்த வீடு மட்டும் கொஞ்சம் மாறி இருந்தது. கூரை வீடாக இருந்த அது சின்ன மச்சுவீடாகி இருந்தது.

அந்த ஊரின் ஒரே சிறுதொழிலான சிமிட்டிக் குழாய் தயாரிப்பு மூன்று தலைமுறையாய் பக்கத்தில் இருந்த சிவன் கோயில் குளத்தை நம்பி அந்த வீட்டில் நடந்து வந்தது. இப்போது பின் தலைமுறையின் ஆர்வமின்மையாலோ செய்பொருளுக்கு ஓட்டமின்மையாலோ தொடரப்படவில்லை என்று தெரிந்தது. முன்பெல்லாம் வீட்டுக்கு முன்னால் செய்து முடிந்த குழாய்களும், அச்சில் உருவாகிக் கொண்டிருக்கும் குழாய்களுமாய் நிறைந்திருக்கும். சிமிட்டிக் கலவை எப்படிக் குழாயாக ஆகிறது என்றறியும் ஆர்வத்தில் சிதம்பரம் சிறுவயதில் அங்கு அடிக்கடி வந்து பார்ப்பது சுவாரஸ்யமான பொழுது போக்கு.

அதற்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன 'செட்டியார் மளிகை'க் கடை இருந்தது. அப்பாவைப் போலவே கிழடாய்க் காட்சியளித்த மகன் ஒருவர் எப்போதும் திறந்த உடம்புடனும் தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டியுடனும், அழுக்குப் பூணூல் மார்பின் குறுக்கே புரள கல்லாவில் கூனியபடியே உட்கார்ந்திருப்பார். அவர் எதிரே அவரைப் போலவே திறந்த மார்பில் பூணூலோடு அவரது அப்பா -தொந்தியும் தொப்பையுமாய், பெரியப்பா வீட்டில் வைக்கும் கொலுவில் பார்க்கிற செட்டியார் பொம்மையை ஞாபகமூட்டுபவராய், சாய்மானப் பலகையில் சாய்ந்த படி உட்கார்ந்திருப்பார். பக்கத்துச் சுவரில் நம்பர் போட்ட கடைச் சொருகு பலகைகள் சார்த்தப் பட்டிருக்கும்.

வியாபாரம் ஒன்றும் பெரிதாய் இருக்காது. மொத்தமாய் மளிகைப் பொருட்களை வாங்கிவைத்துக் கொள்ள முடியாத அன்றாடம் காய்ச்சிகளுக்கு, அடுப்பில் உலையேற்றி வைத்துவிட்டு அப்போதைக்குத் தேவையான உப்பு புளி மிளகாய் வாங்கிக் கொள்ள அந்த செட்டியார்க் கடைதான் ரட்சகராக இருந்தது. காசு கொடுப்பது அதிகமில்லை. கூலிக்குப்போய்க் கிடைக்கும் தானியங்களைக் கொடுத்து வாங்கிக் கொள்வதுதான் அதிகம். செட்டியாருக்கு அதில்தான் லாபம். ஜீவனமும் அதை நம்பித்தான் இருந்தது. காசு கொடுத்து வாங்குவது எல்லாம்-முன்தலையில் மாட்டிய கயிற்றில் முதுகுப் பக்கம் தொங்கும் கூடையுடன் தேயிலை பறிக்கும் பெண்கள் படம் போட்ட - அப்போது பிரபலமாய் இருந்த 'லிப்டன் டீ' பொட்டலங்கள் தாம். ஒரு தடவைக்கான ஒல்லிப் பொட்டலம் முதல் கொஞ்சம் அதிக வேளைகளுக்குக் காணும் கனத்த கட்டையான பொட்டலம்வரை விற்பனை ஆகும். சின்னப் பிள்ளைகள் ஆரஞ்சுமிட்டாய், ஜம்பிஸ்கட் என்று அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் வாங்குவதாலும் அக்கடை பிரபலம். காப்பி வில்லைகளும் அங்கு கிடைக்கும். மாத்திரை இங்க் வில்லைகள் ஒரு தம்பிடிக்குக் கிடைக்கும். பள்ளிக் கூடப் பிள்ளைகள் அதை வாங்கிப் பொடித்து இங்க் பாட்டிலில் போட்டு நீர் விட்டுக் கலக்கி இங்க் தயாரித்துக் கொள்வார்கள். சிதம்பரம் அப்படி இங்க் வில்லை வாங்கத்தான் அங்குபோவது. மற்ற பிள்ளைகள் வாங்கும் ஆரஞ்சுமிட்டாய், ஜம்பிஸ்கட் நாவில் நீ ஊறச் செய்யும். ஆனால் அப்பா அது போன்ற தின்பண்டங் களைக் கடையில் வாங்க அனுமதிப்பதில்லை.

செட்டியார் கடை போட்டியில்லாமல் வெகு நாட்கள் நடந்து வந்தது நினைவில் இருக்கிறது. பிறகுதான் ஒரு நாள் எதிர்ச்சாரியிலேயே புதியகடை ஒன்று முளைத்தது. போட்டி என்று சொல்ல முடியாது. மளிகைப் பொருட்கள் அங்கு இல்லை. வெற்றிலை பாக்கு, பீடி சிகரட், மிட்டாய், டீ காப்பி பாக்கட்டு கள், அப்போது பிரபலமாகி இருந்த சின்ன குனேகா செண்ட் பாட்டில் விற்பனை தான் அதிகம். இப்போதைய உரசல் லாட்டரி போல் அப்போது 'அதிர்ஷ்ட லாட்டரி' அட்டையில் ஒட்டியிருக்கும் மிட்டாய்ச் சீட்டை வாங்கிப் பிரித்தால் அதில் இருக்கும் எண்ணுக்கு, அதே அட்டையின் மேல்புறம் ஒட்டியிருக்கும் பல விதப் பரிசுப் பொருட்களில் ஒன்று கிடைக்கும். அட்டையின் எல்லா மிட்டாய்ச் சீட்டுகளையும் வாங்கினாலும் ஒட்டப்பட்ட பரிசுப்பொருட்களில் அதிகமும் யாருக்கும் விழாமலே தேங்கிப் போகும். அதில்தான் கடைக்காரருக்கு நல்ல லாபம் நிற்கும். அது தெரிந்தும் குருட்டு அதிர்ஷ்டம் அடித்தால் பரிசு கிடைக்காதா என்கிற நைப்பாசையில் சிறுவர்கள் அந்தக் கடையை மொய்ப்பார்கள்.

அந்தப் புதுக்கடை பிரபலமானதற்கு ஊர்க்காரர்களுக்கு சுவாரஸ்யமான வேறொரு விஷயம் இருந்தது. அக்கடையின் கல்லாவில் உட்கார வைக்கப் பட்டவன் பிள்ளைமார்த் தெருவில் தலை நிமிர்ந்து கைவீசி அலட்சியமாய் அதுவரை நடந்தறியாதவன். பிள்ளைமார் வீடுகளில் பணியாற்றும் கீழ்மட்டத்து வசதியற்ற குடும்பங்களில் ஒன்றின் பிரதிநிதி. குப்புசாமி என்கிற அவன், கட்டிக் கொள்ள முழுதாக ஒருவேட்டி இல்லாதவன். எப்போதும் இடுப்புத் துண்டோடு அலைபவன். ஏரி குளங்களில் வலைவீசி மீன்பிடித்து விற்பதுதான் அவனது தினசரி ஜீவனத்துக்கான தொழில்.யாராவது கூப்பிட்டால் எடுபிடி வேலைகளும் செய்வான்.

நல்ல கட்டுமஸ்தான உடலும், தீர்க்கமான முகவெட்டும் மட்டுமே அவனுக்கு சாதகமான அம்சம்.

அவனை அந்தக் கடையின் கல்லாவில் உட்கார வைத்தவள் பிள்ளை மார்த் தெருவின் மேல் மட்டத்து இளம் விதவை ராசாங்கம். சிப்பந்தியாக அல்ல- முதலாளியாகத்தான். அதுதான் ஊர்க்காரர்களின் சுவாரஸ் யத்துக்குக் காரணம்.

ராசாங்கம் நல்ல வசதியான குடும்பத்தின் ஒரே பெண். அவளது அம்மா இளம் வயதிலே கணவனை இழந்தவள். மகளைச் சிறுவயதில் தினமும் சீவிச் சிங்காரித்து, தங்க ராக்கொடி உச்சந் தலையில் வைத்துத் தலைபின்னி, தலை நிறையப் பூ வைத்து, பட்டுப்பாவாடை சட்டையில்தான் பள்ளிக்கு அனுப்புவாள். மகள் அருமை குலையச் பொறுக்கமாட்டாள். மிக செல்லமாய் வளர்த்து ஆளாக்கி, வீட்டோடு இருக்கும் மாப்பிள்ளையாய்த் தேடிப் பிடித்து ஊரே அசரும்படி விமர்சையாய்க் கல்யாணம் செய்து வைத்து பிறகு நிம்மதியாய் செத்துப் போனாள்.

அம்மா, ராசாங்கத்தின் இளமை வளர்ப்பு பற்றியும் அவளது கல்யாணக் கோலாகலம் பற்றியும் சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லி மாய்ந்து போவார்கள். அவள் வயதுக்கு வந்தபோது மஞ்சள் நீராட்டி, முத்துப்பல்லக்கில் ஊர்வலம் நடத்தி ஒரு கல்யாணம் மாதிரியே செய்தாளென்று அம்மா வாய் உருகிப் போவார்கள்.

ராசாங்கம் தன் அம்மாவை இழந்த ஓராண்டிலேயே கணவனையும் இழந்து போனாள். பத்துநாள் காய்ச்சலில் படுத்தவன் மீளவில்லை. வசதியாய் வாழச் சொத்து இருந்தும் பாதுகாப்புக்கு ஆள் இல்லை. கோரிக்கையற்றுக் கிடக்கும் 'வேரில் பழுத்த பலா'வை வசப்படுத்திக் கொள்ள இளவட்டங்கள் பலர் முயன்றும் வைராக்கியமாய்த் தனியாக தைரியமாக அவள் சமாளித்ததை அம்மா போன்று அவள் மீது அக்கறை கொண்ட சிலர் பாராட்டவே செய்தனர். ஆனால் அது அதிக நாள் நீடிக்கவில்லை.

எப்படிப் பழக்கம் ஏற்பட்டதோ தெரியவில்லை, எதாவது எடுபிடி வேலைக்காகப் போய் வந்ததில் ஏற்பட்ட பழக்கமோ ஏதோ - ஊரில் அரசல் புரசலாக ராசாங்கத்தையும் குப்புசாமியையும் இணைத்துப் பேச்சுக்கள் உலவின. அம்மா அது அக்கப்போராகத்தான் இருக்கும், ராசாங்கம் அப்படிப் பட்டவள் அல்ல என்று நம்பவில்லை. ஆனால் அது அப்புவின் வீட்டுச் சுவரில் பகிங்கரமாக - அவளை முயன்று தோற்ற யாராலோ பிரகடனப்படுத்தப்பட்ட போது அம்மா வாய் அடைத்துப் போனார்கள்.

ஊர்வாய்க்குப் பயந்து இலைமறைவு, காய்மறைவாய் இருந்த அவர்களது உறவு எல்லோருக்கும் தெரிந்து போய்விட்டது என்றதும் பகிங்கரமாகவே- சேர்ந்து வாழுகிற அளவுக்குத் துணிந்து விட்டது. குப்புசாமி பயமின்றி பட்டப் பகலிலேயே கைவீசித் தெருவில் நடந்தான். இப்போது இடுப்பில் வெள்ளை நாலு முழ வேட்டியும் உடம்பில் சட்டையும், வாசனை எண்ணெய் தடவிச் சீவப்பட்டக் கிராப்புத் தலையும், வலது முண்டாவில் சிகப்புக் கயிற்றில் கோர்த்துக் கட்டிய தாயத்துமாய் பவனி வந்தான். இந்நிலையில்தான் அவன் இனி ஒருவரிடம் கைகட்டிச் சேவகம் செய்ய வேண்டாம் என்று ராசாங்கம் அவனுக்குப் பெட்டிக் கடை வைத்துக் கொடுத்தாள்.

தினமும் காலையில் இருவரும் கைகோர்த்துக் கொள்ளாத குறையாய் ஜோடி போட்டுக் கொண்டு கடைக்குப் போவதும், பிறகு மதியச் சாப்பாட்டுக்குப் போய்வருவதும், இரவு கடையை மூடிவிட்டு அகாலத்தில் வீடு திரும்புவதும் பெரிய வர்களின் சாபத்துக்கு இலக்காயிற்று. 'கலி முத்திப் போச்சு! இப்பிடியா அறுத்துப் போனவ ஊரறிய கொழுத்துப் போய்த் திரிவா?' என்று பெண்கள் பொறுமினர். 'வக்கத்த பயலுக்கு அடிச்ச யோகத்தைப் பாரேன்! எல்லாத்துக்கும் அதிஷ்டம் வேணும்!' என்று இளவட்டங்கள் மனம் எரிந்தனர். யார் தூற்றுதலும் அவர்களைப் பாதித்து விடவில்லை. கவலையற்று காதலர்கள் தங்கள் பாட்டையில் உல்லாசமாய் நடந்தார்கள்.

இரண்டு வருஷம் போனதும், தான்தான் பட்டமரமாய் நிற்கிறோமே -அவனாவது குழந்தையும் குட்டியுமாய் வம்சம் தழைக்கட்டுமே என்ற எண்ணத்தில் ராசாங்கமே பெண் பார்த்து குப்புசாமிக்கு ஒரு கல்யாணத்தைத் தன் செலவிலேயே செய்து வைத்தாள். நாதியேதும் இல்லாதவன் என்பதால் பெண் கொடுக்க மறுத்தவரின் நிர்ப்பந்தத்தின்பேரில் தன் வீட்டையும் தன் நிலபுலன்களையும் அவன் பேருக்கு எழுதி வைத்தாள். அதுதான் அவள் செய்த தவறு.

'ஏன் இப்புடிப் புத்திகெட்டுச் சீரழியுதோ?' என்று அம்மா ஆதங்கப் பட்டார்கள்; 'புள்ளக்குட்டி பொறந்துதுண்ணா அடிச்சுத் தொரத்தத்தான் போறான்' என்றும் அங்கலாய்த்தார்கள். அப்படித்தான் ஒரு நாள் ஆயிற்று. ஆனால் அப்போது அவளுக்காக இரக்கப்பட யாருமில்லை! யாரையும் - ஜாதி ஜனங்களை, ஊர்ப் பெரியவர்களை மதித்து அவர்களுக்குப் பயந்து நடந்திருந்தால்தானே அவளுக்காக நியாயம் கேட்க வருவார்கள்? அவளும் அதையறிந்துதான் யாரிடமும் நியாயம் கேட்டு முறையிடவில்லை. ஒருவேளைச் சோற்றுக்கும் நாதியில்லாமல் எங்கோ ஒருநாள் ஊரைவிட்டே போய்விட்டாள்.

அந்தக் காலகட்டத்தில்தான் சிதம்பரம் கல்லூரிக்குப் படிக்கப் போனது. அதற்குப் பிறகு ராசாங்கம் என்ன ஆனாள் என்று அறிய அவருக்கு ஆர்வமோ வாய்ப்போ இல்லாது போயிற்று. படிப்பெல்லாம் முடிந்து அவர் வேலைக்கும் சென்ற பிறகு ஒருதடவை அவர் ஊருக்கு வந்தபோது அம்மா அவர்களாகவே ராசாங்கத்தின் பரிதாபக் கதையைச் சொன்னார்கள்.

"இந்த ராசாங்கத்தோடக் கதயக் கேட்டியா?" என்றார்கள்.

"என்னாம்மா ஆச்சு?"

"அத ஏன் கேக்குறே போ! நம்ம ரோட்டோரத்துலே குடிசை போட்டுக் கிட்டு பண்ணி மேச்சுக்கிட்டிருந்தானே பெலாந்துற தொம்பன்......."

"ஆமா, அவனுக்கென்ன..?"

"இந்தப் பாவிமுண்ட அவங்கூட ஒடிப்போயிருக்கா...."

"அடப் பாவமே! இப்ப எங்க இருக்காளாம்?"

"அவன் ஊருக்குக்குத்தான் போயி, பண்ணிக் குடிசையிலே அவங்கூட வாழுது சாதி கெட்டக் கழுத!"

"அப்'றம் எப்பிடித் தெரிஞ்சுது? யாரு பாத்தாங்களாம்?"

" நானே எங்கண்ணாலப் பாத்தேன்! போனமாசம் பெண்ணாடத்துக்கு பெரியம்மா ஊட்டுக்கு வண்டியிலே போறப்ப பெலாந்தொறகிட்ட வாய்க்காங் கரையிலே பண்ணி மேச்சுக்ககிட்டிருந்தா! வண்டிக்காரன் அழவாரத்தான் 'ஆச்சி, ஆச்சி! அங்கப் பாருங்க' ண்ணான். 'என்ன அதிசயம் அங்கே' ன்னேன். 'அதிசயந்தான்! அது யாருன்னு பாருங்க. உங்க ராசாங்கம் தான்'னு சொன்ன தும் நான் நம்பாம முன்னாலே எட்டிப்பாத்தேன். கன்னங்கரேல்னு கருவாடுமாதிரி காய்ஞ்சி போயி ஒரு கிழிச வட்டுத் துணியக் கட்டிக்கிட்டு ரவிக்கக்கூட இல்லாமெ மொட்டத் தலயோட, ஒரு நீட்டு மூங்கிக்குச்சியிலே கரண்டிமாதிரி தகரம் அடிச்சதாலே பண்ணிவிட்டய அள்ளி இடுப்புல இருந்த கூடயில போட்டுக் கிட்டு பாவி நிக்கிறா! முன்னாலே நெறயப் பண்ணிங்க மேஞ்சுக்கிட்டிருக்கு! அடக் கண்றாவியேன்னு வண்டிய நிறுத்தச் சொல்லி எறங்குனேன்.

''சத்தம் கேட்டுத் திரும்புன அவ என்னப் பாத்துட்டு அவசரமா ஓடி அங்க இருந்த புளியமரத்துக்குப் பின்னாலே மறைஞ்சு கிட்டா. நானும் விடலே. அவ நிக்கறதுக்கு எதுப்புறமாப் போயி நின்னேன். அவ அந்தப் பக்கமாத் திரும்பி தலயக் குனிஞ்சுக்கிட்டா. 'அடப் பாவி மவளே! இது என்னாடி கோலம்? உன்னப் பெத்தவ இந்த நெலையில உன்னப் பாத்தாத் தாங்குவாளா? அடி, நீ வாழ்ந்த வாழ்வென்ன, இருந்த இருப்பென்ன - இப்படிச் சீரழியணும்னு உனக்கு என்னடி தலயெழுத்து? இப்பிடிச் சாதிகெட்டு, குலங்கெட்டு சாக்கடையிலே ஏண்டி விழுந்தே? சொத்து சொகம், மானம் மரியாத எல்லாத்தியும் தொலைச்சுட்டு நிக்கிறியே, எனக்கே வயிறு எரியுதே ஒன்னப்பாக்க!' ன்னு ஆத்திரமும் அழுகையுமாச் சாடுனேன். ஆனா அவ அம்மக்குள்ளியாட்டம் அழுத்தமா பதிலும் சொல்லாம, திரும்பியும் பாக்காம நின்னா. எனக்கு எரிச்சலும் எரக்கமும் தாளாமே 'எக்கேடாவது கெட்டு நாசமாப் போ! அன்னிக்கு எழுதுனவன் அழிச்சா எழுதப் போறான்? ஒந்தலயெழுத்துப்படிதான் நடக்கும்'னு சொல்லிட்டு நா வந்து வண்டியில ஏறிக்கிட்டேன். பின்னால அவ தேம்புறது கேட்டது. 'அழுவுது ஆச்சி!' ண்ணான் அழவாரத்தான். 'அழுட்டும் போ! யார் விதிய யார் மாத்த முடியும்? நீ ஓட்டு வண்டிய' ன்னு வந்துட்டேன்" என்று முடித்தார்கள் அம்மா.

சிதம்பரத்துக்கு வியப்பாகவும் பரிதாபமாகவும் இருந்தது. 'இதென்ன, விதி மனிதவாழ்வை இப்படிப் பந்தாடுகிறது? 'குடை நிழலிருந்து குஞ்சரம் ஊர்ந்தோர் நடைமெலிந்து ஓர் ஊர் நண்ணினும் நண்ணுவர்' என்பது அரசனுக்கு மட்டுமா? ஆண்டிக்கும் அதுதான் போலும்!' என்று பட்டது.

- இப்போது அந்தப் பெட்டிக் கடை இருந்த காலி இடத்தைப் பார்த்ததும் இத்தனையும் நினைவில் ஓடின.

அப்புறம் ஒரு நாள் குப்புசாமியும் தொடங்கிய இடத்துக்கே வந்து விட்டதும், பிள்ளை குட்டிகள் பிறந்து செலவுகள் கைமீறி ராசாங்கத்தின் நிலத்தை யும் வீட்டையும் விற்றுத் தொலைத்து மீண்டும் தன் பழைய குடிசைக்கே திரும்பி விட்டதும் கேள்விப்பட்டார். ராசங்கம் போனதுமே சீதேவியும் தன் அக்கா மூதேவிக்குக் கையைக் காட்டி விட்டு அவனை விட்டுப் போய்விட்டதாகப் பேசிக்கொண்டார்கள்.

வெகுநேரம் தெரு முனையிலேயே நின்றுவிட்டதை உணர்ந்தவராய் சிதம்பரம் திரௌபதை அம்மன் கோயிலை நோக்கி நடந்தார்.

( தொடரும் )

No comments: