Friday, October 29, 2004

களஞ்சியம் 10 - அசலும் நகலும்

கவிஞர்கள் தங்களுடைய முன்னோடிகளின் படைப்புகளிருந்து சொல்லாட்சிகள், உவமைகள், வருணனைகள், கருத்துக்களை அழகாக எடுத்தாண்டிருப்பதைப் பார்க்கிறோம். திருக்குறள் அப்படி கம்பனது காவியத்திலும் பிறகாப்பியங்களிலும் நிறைய எடுத்தாளப் பட்டுள்ளது. கவிஞர் கண்ணதாசன் தன் சினிமாப் பாடல்களில் பழம்பாடல்களையும் பாரதியின் பாடலையும் முன் மாதிரியாகக் கொண்டு அதே சொல்லாட்சி, சந்தம், யாப்புகளை அசலைப் போலவே - இன்னும் சொன்னால் அசலை விடவும் அற்புதமாய்ப் போலச் செய்திருக்கிறார். அவரது 'அத்திக்காய் ஆலங்காய்...' பாடலும், 'உள்ளமிளகாயோ ஒரு பேச்சுரைக்காயோ.....' போன்றவை தனிப்பாடல்கள் சிலவற்றின் நகலாக இருப்பதை, தனிப்பாடல் திரட்டுகளைப் படித்தவர் அறிவர். அவரது 'மெதுவா மெதுவா தொடலாமா?' என்பதும், 'வளையல், வளையல் கல்யாண வளையலுங்க....' என்பதும் கவிக்குயில் சரோஜினி நாயுடுவின் ஆங்கிலக் கவிதைகளான 'பல்லக்குத் தூக்கிகள்'(Palanquin Bearers) - 'Lightly O lightly we bear her along' என்பதையும், 'வளையல் விற்பவர்கள்'(Bangle sellers) - 'Bangle sellers are we, who bear the shining loads to the temple fair...' என்பதையும் நினைவூட்டுவன.

இவையெல்லாம் ஓரளவே போலச் செய்யப்பட்டவை. ஆனால் பாரதியின் கண்ணன் துதியான,

'காயிலே புளிப்பதென்னே? கண்ணபெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்னே? கண்ணபெருமானே!'

என்ற வரிகளை அப்படியே அடியற்றி அதே பாணியில் 'அம்பிகாபதி' திரைப்படத்தில் பாடியுள்ள பாடல் அற்புதமானது.

'கண்ணிலே இருப்பதென்ன? கன்னி இளமானே
காவியமோ ஓவியமோ? கன்னி இளமானே!
கார்குழலை ஏன் வளர்த்தாய்? கன்னி இளமானே
காளையரைக் கட்டுதற்கோ? கன்னி இளமானே!
பல்வரிசை முல்லையென்றால் கன்னி இளமானே,
பாடும் வண்டாய் நான் வரவா? கன்னி இளமானே!
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளமானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளமானே!
அன்ன நடை பின்னுவதேன்? கன்னி இளமானே
ஆர்விழிகள் பட்டனவோ கன்னி இளமானே!'

- காலம் பல கடந்தும் காதுகளில் ரீங்கரிக்கிற இப்பாடலை மறக்க முடிகிறதா?

இன்றைய நவீன கவிஞர்களும் இதே போல சங்கப் பாடல்களை அடியற்றி போலச் செய்திருக்கிறார்கள்.

பிசிராந்தையார் என்ற புலவரை 'இவ்வளவு வயதாகியும் உங்களது தலை முடி நரைக்காதிருப்பது எப்படி?' என்று கேட்டபோது அவர் அளித்த பதிலாக ஒரு பாடல் 'புறநானூறு' தொகுப்ப்¢ல் உள்ளது:

'யாண்டு பல ஆக
நரையில ஆகுதல்
யாங்காகியர் என
வினவுதிராயின்
மாண்ட என் மனைவியடு
மக்களும் நிரம்பினர்
நான் கண்டனையர்
என் இளையரும்
வேந்தனும் அல்லவை
செய்யான் காக்கும்
அதன் தலை
ஆன்றவிந்து அடங்கிய
கொள்கைச் சான்றோர் பலர்
யான் வாழும் ஊரே!'

இதை ஒட்டி கவிஞர் சிவசக்தி என்பவர் எழுதிய ரசமான கவிதை இது:

`யாண்டு சில ஆகியும்
நரை பல ஆகுதல்
யாங்கு ஆகியர் என
வினவுதிர் ஆயின்.....
மாண்பிலா மனைவி
தறுதலைத் தனையர்
சுரண்டிடும் சுற்றம்
நன்றியிலா நண்பர்
அரசியல் பேய்கள்
ஆகியோர் உறைகாடு
யான் வாழும் காடே!

காலத்துக் கேற்ற பாட்டு தானே!

கவிஞர் மீராவும் இதே போல `செம்புலப் பெயல் நீரார்' என்ற சங்கப் புலவரின் பாடலை ஒட்டி அங்கதச் சுவையடு ஒரு கவிதை எழுதியுள்ளார்.

`யாயும் யாயும்
யாராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
யானும் நீனும்
எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே! - இது சங்கப் பாடல்.

மீரா பாடுகிறார்:

`என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஊர்
வாசுதேவ நல்லூர்
என் தந்தையும் உன் தந்தையும்
ஒரே ஜாதி
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார்
நானும் நீயும் உறவின்முறை
எனது ஒன்று விட்ட
அத்தை பெண் நீ
எனவே
அன்புடை நெஞ்சம்
தாம் கலந்தனவே!

- மேலும் சொல்வேன்.

-வே.சபாநாயகம்.

Monday, October 18, 2004

நினைவுத் தடங்கள் - 24

இளமைப் பிராய நினைவுகள் எல்லோருக்கும் இனிமையானது. அது மீண்டும் வராதா என்று ஏக்கமும் ஏற்படுவதுண்டு. 'மீண்டும் வாழ்ந்தால்.........' என்று ரைட் ஆனரபிள் ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் ஒரு நூல் எழுதியுள்ளார். அது போல மீண்டும் இளமைப் பருவத்திலிருந்து வாழ்க்கை தொடர முடிந்தால்............ என்று நடக்க சாத்யமில்லாத நினைப்பு எனக்கு அவ்வப்போது தோன்றுவதுண்டு. அவ்வளவு சுவாரஸ் யமான இளமை அனுபவங்கள் எல்லோருக்கும் இருக்கவே செய்யும். காரணம் இன்றைய வாழ்க்கையை வடிவமைத்தது அப்போது ஏற்பட்ட சூழ்நிலையே. குறிப்பாக இளமைக்கால கல்விச் சூழ்நிலை ஒருவரது வாழ்வில் முக்கியமானது. எனக்கு அமைந்த இளமைக் கல்விச் சூழ்நிலை இன்றைய- நெறியான ரசனை மிக்க வாழ்க்கைக்கு அடித்தளமாக இருந்திருக்கிறது. அதற்கு நான் வாழ்நாள் முழுதும் நன்றிக்கடன் செலுத்த வேண்டியது எனக்கு அட்சராப்பியாசம் செய்து வைத்து எண்ணும் எழுத்தும் பிழையறக் கற்பித்த எனது ஆசான் சி.எஸ்.சாமிநாத அய்யர் என்கிற வீரசைவருக்குத் தான்.

அப்போதெல்லாம் கல்விச் சேவையில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டிருந்தவர்கள் லிங்காயத்துகள் என்கிற வீரசைவர்கள்தான். சில பகுதிகளில் அவர்கள் சாத்தாணி வாத்தியார்கள் என்று அழைக்கப் பட்டார்கள். எங்கள் ஆசிரியர் எங்கள் அப்பாவின் இளமைக் காலத்திலேயே சிதம்பரத்திலிருந்து இளைஞராக எங்கள் ஊருக்கு வந்தவர். மூன்று தலைமுறையினர்க்குக் கற்பித்தவர். ஊர்ச் சாவடியை பள்ளிக்கூடம் நடத்த மக்கள் அவருக்கு அளித்தார்கள். ஆரம்பத்தில் சில ஆண்டுகள் அரசு அங்கீகாரம் இல்லாத திண்ணைப் பள்ளிக்கூடமாகத்தான் நடத்தினார். பிறகு அதை அரசு உதவி பெறும் பள்ளியாக- 'இந்து எய்டட் எலிமெண்டரி ஸ்கூல்' ஆக உயர்த்தினார்.

'கோல்டுஸ்மித்' எழுதியுள்ள 'கிராமத்துப் பள்ளி ஆசிரியர்" (The village school maaster) போல சகலமும் அறிந்தவர் அவர். பள்ளி அலுவலுக்கிடையே தேடி வரும் கிராம மக்களுக்கு, பஞ்சாங்கம் பார்த்து நாள் பார்த்துச் சொல்வார். 'பிராமிசரி நோட்' எழுதித் தருவார். இன்னும் படிப்பறிவற்ற அம் மக்களுக்குப் பல வகையிலும் உதவி, அவர்கள் மத்தியில் ஒரு மரியாதையை ஏற்படுத்துக் கொண்டிருந்தார்.

அவரது பள்ளியில் படிப்பு ஆறு வருஷங்கள். அரிச்சுவடி என்பதுதான் தொடக்க வகுப்பு. ஒரு ஆண்டு முழுதும் தமிழ் அரிச்சுவடி முழுதும் கற்ற பிறகே முதல் வகுப்பு. அகரம் தொடங்கி 247 எழுத்துக்களையும் ஆற்றுமணல் பரப்பப் பட்ட தளத்தில் உரத்து உச்சரித்த படியே எழுதிப் பழக வேண்டும். அப்படியே நூறு வரையிலான எண்ணிக்கை யும் மணலில் எழுதியே பாடமாக வேண்டும். இதில் தேர்ச்சியானதும் அரிச்சுவடியில் உள்ள ஓரெழுத்துச் சொற்கள், ஈரெழுத்துச் சொற்கள், மூவெழுத்துச் சொற்கள் எனப்படிப் படியாய் வாக்கிய அமைப்புவரை படிக்கப் பயிற்சி தருவார். இடையில் கதையும் பாட்டும் மூலம் கதை கேட்கவும் சொல்லவும் பயிற்சி. முதல் வகுப்பில் 'உலகநீதி', இரண்டாம் வகுப்பில் 'ஆத்திச் சூடி', மூன்றாம் வகுப்பில் 'கொன்றை வேந்தன்', நான்காம் வகுப்பில் 'வெற்றி வேற்கை', ஐந்தாம் வகுப்பில் 'விவேக சிந்தாமணி' மற்றும் 'மூதுரை', 'நல்வழி' ஆகிய நீதி நூல்களும் ஏதாவது ஒரு சதகம் அவரவர் வீட்டு மதத்துக்கேற்ப 'அறப்பளீசுர சதகம்', திருவேங்கட சதகம்' என்று ஆறு ஆண்டுகளில் தமிழ் பிழையற எழுதவும் படிக்கவும் நீதி நூல்களில் பயிற்சியும் பெற்றேன். அது இன்று எனது இலக்கிய ரசனைக்கும் படைப்புக்கும் பெரிதும் காரணமாய் இருக்கிண்றன. தினசரி காலையில் அவரே கைப்பட தலைப்பு எழுதிக் கொடுத்து அனைவரும் காப்பி எழுத வேண்டும். இதனால் கையெழுத்து அழகாய் எழுதப் பயிற்சி கிடைத்தது.

இன்றைய ஆரம்பக் கல்வியில் எண்ணிலும் எழுத்திலும் இத்தகைய முறையான பயிற்சி இல்லாதால் தான் இன்றைய இளைஞர்க்கு உச்சரிப்பிலும், எழுத்திலும், கணிதத்திலும் இலக்கியத்திலும் தடுமாற்றத்தைப் பார்க்கிறோம். ஆசிரியர்களிடமும் அத்தகைய அர்ப்பணிப்பையும் சேவை மனப்பாங்கையும் இன்று காண முடியாமையும் இளைஞர்களின் கல்வித் தரக் குறைவுக்குக் காரணம். ஒரு மாணவனுக்கு மாதம் எட்டணா மட்டும் சம்பளமாய் வாங்கிக் கொண்டு கற்பித்து வல்லவனாய் ஆக்கிய அந்த ஆசிரியருக்கு மாறாக- இன்றைய ஆயிரக்கணக்கில் கறந்து கொண்டு பிள்ளைகளை வெறும் மனப்பாட எந்திரங்களாய் ஆக்கிவரும் கான்வெண்ட் படிப்பை எண்ணும்போது மனம் வெதும்பத்தான் முடிகிறது.

-தொடர்வேன்.

-வே.சபாநாயகம்

வர்ணனைகள் உவமைகள் 30 - ஜெயமோகன்

நான் ரசித்த வருணனைகள் உவமைகள் - 30: ஜெயமோகன் படைப்புகளிலிருந்து:


1. மலையன் வீடுவழி ஓடும் ஓடையை அங்கிருந்து பார்க்க முடிந்தது. பல நூறு அடி ஆழத்தில் வெள்ளைச் சரிகை ஒன்று விழுந்து கிடப்பது போலிருந்தது. வெவ்வேறு நீல நிறங்களில் சிறிய மலைகள்; அப்பால் அகஸ்தியர்கூட மலையில் இளநீலத் திரை.
மலைகளே விதம் விதமான படுதாக்கள் தான்.

- 'நச்சரவம்' கதையில்.

2. எனக்கு மிகவும் பரிச்சயமான ஆறு இது. என் இளமைப் பருவத்துத் தோழி. மழையில் அவளுடைய துள்ளல். இரவில் அவளுடைய மௌனம். பனி பெய்யும் காலையில் அவளது நாணம். எவ்வளவு நெருக்கமானவள் இவள் எனக்கு ........

- 'நதி'.

3. உற்சாகமான மரம் அது. இந்த சோகம் அதற்கு அபூர்வமானது. காலையில் வானம் கழுவிச் சாய்த்து வைக்கப்பட்ட பெரிய நீல நிறக் கண்ணாடி போலத் தோன்றும்போது பார்க்க வேண்டும் அதை. வானத்தைத் துடைக்க அசையும் பட்டுக் குஞ்சம் போலிருக்கும். கூந்தல் காற்றில் மிதக்க, இடையசைத்து ஆடும் நளினமான பெண்மை. காலையில் பச்சைந்¢றம் சற்று நீர்த்துப் போயிருக்கும். ஒளியின் பிரகாசம் ஏற ஏற, ஓலைப் பரப்பு மின்னத் தொடங்கும். புள்ளியாக ஒளித்துளிகள். அவை காற்று வீசும் போது வரிசை குலையாமலேயே அசையும்.

- 'கண்'.

4. அந்தக் காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப் பொழுதில் கூட நின்ற யானை மறையும் இருட்டு. அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை. புலி போட்ட மீதத்தை நரி தின்கிற காடு. தரை தெரியாமல் செடிப் படப்பு. வானம் தெரியாமல் இலைப் படப்பு. வழியாக மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒத்தையடிப் பாதை. அது பேச்சிமடி தாண்டி, பெருஞ்சாணி மலை தாண்டி, நெடு மங்காடு சுரம் தாண்டி அனந்த பத்மநாபன் பாதங்களில் முடிகிறது. காட்டுமிருகத்தின் நகமும், காணிக்காரன் காலுமல்லாமல், நாட்டுவாசியின் வாசம்கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது.

- 'படுகை'.

5. மரத்தாலும் பிரம்பாலும் ஆன ஒரு சாமானைத் தூக்கிக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டார் மேனோன். அது ஒட்டடையும் கரியும் படிந்து இருந்தது. பகல் ஒளியில் ஏதோ அந்தரங்க உறுப்பைத் திறந்து வைத்தது போல அசிங்கமாக இருந்தது.

- 'பல்லக்கு.

6. வானத்தைத் தொட்டு ஏதோ எழுத முனையும் தூரிகை போல நின்றிருந்தது ஆலமரம்.

- 'வனம்'.

7. பாடல் பெற்ற ஸ்தலம். வசைஎன்றும் சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிறபோக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும் நடராசனை எட்டு வரியில் இடக்குப் பண்ணி விட்டுப் போனார்.

- 'சிவமயம்'.

8. சொடேரென்று மங்கான்சிங் சவுக்கை உதறினான். சொடேரென்று ஒலி என் மீது தெறித்தது. என் உடம்பு மெல்ல நடுங்க ஆரம்பித்தது. அந்தக் கணம் ஒன்றை அறிந்தேன்.சவுக்கு ஒரு பொருளல்ல. அது ஒரு இருப்பு. அதன் கருமை நெளியல், அதன் சீறல், ஈவிரக்கமற்ற ஒலி.

- 'சவுக்கு'.

9. அச்சுக்காரியஸ்தனுக்கு ஆஸ்த்துமா. அந்தியில் ஒரு மாதிரி, காலையில் வேறு மாதிரி. தம்பிரானுக்கு முன் ஒரு முகம். அடியாளர்களிடம் இன்னொரு முகம். நுணுக்கமாக இரண்டு தாள்களை ஒட்ட வைத்து உருவாக்கப்படும் அட்டைக் காகிதம் போல் ஒரு இரட்டை மனிதர் அவர்.

- 'லங்காதகனம்'.

10. படிகளில் கூட்டம் பெருகியது. ஒரு ஆறு. மேலேறும் ஆறு. கால்களினால் ஆன ஆறு, புடவைகளால், வேட்டிகளால், பேண்டுகளால், செருப்புகளால் ஆன ஆறு.

- 'ஏழாம் உலகம் நாவலில்'.

- தொடர்வேன்.

- அடுத்து நாஞ்சில் நாடன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்

களஞ்சியம் 9: வறுமைப்பாட்டு

எனது களஞ்சியத்திலிருந்து - 9 - வறுமைப் பாட்டு:

'கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார். 'நல்குரவு' என்று ஒரு அதிகாரமே வறுமையின் துன்பம் பற்றி வள்ளுவர் எழுதி இருக்கிறார். வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால் வறுமையேதான் என்கிறார்.

'இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது'.

அது மட்டுமல்ல - வறுமை என்கிற பாவி ஒருவனைப் பற்றிக் கொண்டால் இம்மை இன்பம் மட்டுமின்றி மறுமை இன்பமும்கூட இல்லாது செய்து விடுமாம்.

'இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்' என்கிறது குறள்.

இந்த இல்லாமை என்கிற வறுமை அதிகமும் புலவர்களையே பீடிக்கிறது. அதன் கடுமை தாளாமல் அது தரும் துன்பத்தையும் அவர்கள் கவிதை ஆக்குகிறார்கள் என்பதைப் பழம் பாடல்கள் நமக்குச் சொல்கின்றன.

வறுமையின் துன்பத்தை அனுபவித்த சுந்தர கவிராயர் என்கிற புலவர், வறுமை வந்தால் என்னென்னவெல்லாம் அரிதாகிவ்¢டும் என்று ஒரு பாடலில் சொல்கிறார். 'வறுமை ஒருவனை வந்து அடையுமானால் உண்பதற்குச் சோறு கிடைப்பது அரிதாகும்; அறுசுவை உணவும், பால், தயிர், நெய் மூன்றும் கிடைப்பதற்கு அரிதாகும்; பகற்பொழுதில் வெற்றிலைப் பாக்கு கிடைப்பது அரிதாகும்; இருள் நிறைந்த நள்ளிரவ்¢ல் அன்புடைய காதலி அருகில் இருப்பது அரிதாகும்; படுத்துத் தூங்குவதற்குப் பாய் கிடைப்பது அரிதாகும்; உடம்பை மறைப்பதற்குரிய ஆடை கிடைப்பது அரிதாகும்,' என்கிறார்.

அன்னம் உணற்கு அரிதாம்;
ஆமாறு மூன்றும் அரிதாம்;
பள்ளம் அரிதாம்
பகலின்கண்; - துன்ந்¢சியில்
நேயம் அரிதாகும்;
நித்திரைக்கும் பாய் அரிதாம்;
காயக்கு அரிதாம்
கலை.

(அன்னம் - சோறு; ஆமாறு மூன்று - ஆவினிடத்தில் இருந்து பெறும் பால் தயிர், நெய் ஆகிய மூன்று; பள்ளம் - வெற்றிலைப் பாக்கு; துன் - நெருங்கிய; நேயம் - அன்பு, அன்புடைய காதலி; காயம் - உடல்; கலை - ஆடை.)

'வறுமையானது உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்திலும் இழிவான சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும்' என்கிறார் வள்ளுவர்.

'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு வரும்.'

இதனை விவேக சிந்தாமணி உருக்கமாகச் சித்தரிக்கிறது.

'தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரங் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்:
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்;
உலகெலாம் பழிக்கும் தானே.

பொறுக்க முடியாத வறுமை ஒருவனுக்கு வருமானால், பலர் கூடிய அவைக்குள் செல்ல அவனுக்கு நாணம் உண்டாகும். வேங்கையைப் போன்ற அவனது வீரமும் குன்றி விடும். விருந்தினரைப் பார்க்க நேரின் வெட்கம் ஏற்படும். மலர்க்கொடி போன்ற மனை விக்கு அச்சப்பட நேரிடும். அற்பருடன் சேருமாறு செய்யும். மென்மேலும் வளர வேண்டிய அறிவும் குறையும். உலகமெல்லாம் அவனைப் பழிக்கும்.

'வறுமைக்கு ஆட்பட்டவன், நேற்றும் என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைச் செய்த வறுமை, இன்றும் என்னை வந்து துன்புறுத்துமோ?' எனத் தினமும் அஞ்ச வைக்கும் என்கிறார் வள்ளுவர்.

'இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.'
(நெருநல் - நேற்று; ந்¢ரப்பு - வறுமை)

மதுர கவியார் என்னும் புலவர் வறுமையால் மிகவும் வாடினார். காளத்தியப்பர் என்கிற வள்ளலைத் தேடி தன் வறுமை தீரப் பரிசில் பெறச் சென்றார். வழியில் ஒரு சத்திரத்தில் இரவு தங்கும்படி நேர்கிறது. படுத்தவரின் சிந்தனை விரிகிறது. வறுமையை விளித்து, 'ஏ வறுமையே! நிழலைப் போல என்னைப் பின்பற்றி என்னோடு இவ்வளவு நாட்கள் திரிந்து வருந்தினாய். நாளைக்கு இருப்பாயோ? நாளைக்கு நான் திருநின்றை யூருக்குப் போய் வள்ளல் காளத்தியப்பரைப் பார்த்தபின் என் பாடலைக் கேட்டு உன்னை அவர் ஓட்டிவிடுவார். அதற்ககப்புறம் நீ எங்கோ நான் எங்கோ? போனால் போகிறது! இன்று மட்டும் சற்றே என்னோடு இருந்து விட்டுப் போ!' என்று நக்கலாகப் பாடுகிறார்.

`நீளத் திரிந்து உழன்றாய்
நீங்கா நிழல் போல
நாளைக்கு இருப்பாயோ
நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால்
நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே
இரு!

(உழன்றாய் - வருந்தினாய்; நின்றை - திருந்¢ன்றையூர்)

'இப்படி வறுமையில் வாடுபவர் நெருப்பிலே கூட இருந்து உறங்குதலும் கூடும்; ஆனால் வறுமை வந்துற்றபோது யாதொன்றாலும் உறங்குதல் அரிதாம்' என்கிறார் வள்ளுவர்.

'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்ப்¢னுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.'

புலவர்கள் தாம் வறுமையால் வாடுகிறவர்களா வேறு யாரும் இல்லையா என்றால் அந்தகக் கவி வீரராகவ முதலியார் எனும் பெரும் புலவர் எப்போதும் வறுமை நீங்காத எட்டு பேரைப் பட்டியலிடுகிறார்

'கவிகற்றவர்க்கும், கணிகற்றவர்க்கும், கம்மாளருக்கும், ஓவிகற்றவர்க்கும், உபாத்திகளுக்கும், உயர்ந்த மட்டும் குவிவைக்கும் ஒட்டர்க்கும், கூத்தாடிகட்கும், குருக்களுக்கும் இவரெட்டுப் பேர்கட்கு நீங்கா தரித்திரம் என்றைக்குமே!'

பாட்டிசைக்கும் பாவலர்க்கும், சோதிடம் கணிக்கத் தெரிந்தவர்க்கும், உலோகவேலை செய்யும் தொழிலாளருக்கும் , ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உயரமான சுவர் வைக்கிற ஒட்டர்களுக்கும், கூத்தாடும் நடிகர்களுக்கும், புரோகிதர்களுக்கும், வறுமை எப்போதும் நீங்காது.

இன்றைக்கு அந்தகக் கவி வீரராகவர் இருந்தால் ஆசிரியர்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கி விடக் கூடும்!

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்

வருணனைகள் உவமைகள் - 29: வண்ணதாசன்

நான் ரசித்த வருணனைகள் உவமைகள் - 29: வண்ணதாசன் படைப்புகளிலிருந்து

1. தொம்மென்று அறைக் கதவை வீசியடைத்தான். அதிர்ச்சியில் கொடியில் கிடந்த பாண்ட்ஸ், ஹேங்கரிலிருந்து வழ வழத்து- ஒரு கீழிறங்குகிற பாம்பை நினைவூட்டியபடி- தரையில் சரிந்தது.

- 'பூனைகள்' கதையில்.

2. டைப்பிஸ்ட் கம்-க்ளெர்க் என்று ஒரு அவசரமான நியமனத்துடன் யாரும் எதிர்பாராத அலுவலகச் சூழ்நிலையில் நின்றபோது 'வேறு ஆளே கிடைக்கலையா, கருவாட்டுக் கூடையிலே பொறுக்கின மாதிரி' என்று யாரோ பின்னால் சொல்ல அவள் ஒவ்வொரு சீட்டாக வணங்கி அறிமுகமாகிக் கொண்டிருந்தாள்.

- 'சில பழைய பாடல்கள்'.

3. அந்தக் குவார்ட்டர்ஸ் வீட்டுக்கு முன் செல்லப்பா நிற்கையில் உள்ளே வரவிடாமல் தடுப்பதுபோல ஒரு நார்க்கட்டில் குறுக்குவாட்டில் நிறுத்தப் பட்டிருந்தது. அதன் கால்கள் நான்கும் முட்டவரும் கொம்புகள் போன்று ஒரு ஆயத்ததுடன் இருந்தன.

- 'தற்காத்தல்'.

4. அது அவள் நடந்து செல்கிற தோற்றத்தில் கைகளில் சரிந்த சேலையை முழுவதுமாக அள்ளி மறுபடி மேலே வீசிக் கொள்கிற நேரத்தின் படம். ஓரு கை தோளுக்குச் சென்று கொண்டிருக்க, ரவிக்கைக்கு முழுக்கனத்தைக் கொடுத்திருந்த மார்பும் தோளின் செழுமையும் பக்க வாட்டில் தெரிய, புடவை ஒருசந்தோஷமான பாய்மரம் போலப் பின்பக்கம் விசிறி அந்தரத்தில் இருக்க, அவள் கண்கள் மூடியிருக்கும். வாய்
கொள்ளாத சிரிப்பில் கன்னத்து ரோஸ் பவுடர் பூச்சுத் திரண்டு மேடிட்டு ஓரிரண்டு ஜிகினா மினுக்கும்.

- 'போய்க் கொண்டிருப்பவன்'.

5. தாத்தா முன்னைப்போல இப்போது சவரம் செய்து கொள்வதுகூட இல்லை. சினிமாக்களில் நாலு பக்கமும் இருந்து நாலுபேர் ஒருத்தனை அமுக்கிப் பிடிப்பதுபோல தாத்தாவின் தோற்றம் சகல பக்கங்களிலும் பிடிபட்டு அமுங்கிக் கொண்டிருந்தது.

- 'நிறை'.

6. லோகாவைப் பார்க்கமல், இன்னும் ஜன்னல் கம்பியின் துரு ஏறிய திண்மையில் விரலைச் சுண்டிக் கொண்டிருந்தான். நாலு கம்பியிலும் விரல் வேகமாக வழிந்து ஒரு இசையின் துவக்கம் போலச் சப்தம் மறுபடி மறுபடி எழுந்தது. இந்த இயக்கத்துக்குச் சம்பந்த மில்லாது ஓடுகிற ஒரு கசந்த நாடாபோல அவனுடைய பேச்சிருந்தது.

- 'திறப்பு'.

7. சட்டென்று எல்லாம் முடிந்து போயிற்று. அவனுக்கு வேலை கிடைத்து வேறு ஊருக்குப் போனதுடன் எல்லாம் நின்று விட்டது. இவளுக்கு மட்டும் அந்த முகத்தின் துரத்தல் இருந்தது. கொம்புகளைப் பாய்ச்சுவதற்குக் குனிந்த தலையுடன் துரத்திக்கொண்டே வருகிற காட்டு மிருகம்போல, அவளைக் கொஞ்ச நாள் அந்த முகம் அலைக்கழித்தது. அப்புறம் அதையும் தொலைத்தாயிற்று. மலையிலிருந்து கழற்றி ஒவ்வொன்றாக வீசுவதுபொல இந்த வாழ்க்கையின் வீச்சு எல்லாவற்றையும் பிடுங்கி எறிந்து கொண்டிருந்தது.

- 'அந்தந்த தினங்கள்'.

8. அவர்களைச் சுற்றி, ஏப்ரலின் மலர்ச்சியைக் கிளை நுனிகளில் ஏந்திக் கொண்டு கம்மென்று வாகை மரங்கள் வாசனையைப் பெய்து கொண்டிருந்தது. வெகுதூரம் வரைகூடவே வந்து நம் விரட்டலுக்குப் பின் மனமின்றித் திரும்புகிற வீட்டு நாய்க் குட்டியாக வேப்பம்பூவின்
வாசனையும் விட்டுவிட்டுக் கூடவே வந்துபோய்க் கொண்டிருந்தது.

- 'சங்கிலி'.

9. தேர் நிலைக்கு வந்து நின்றிருந்தது. தேரின் வடம் ஒவ்வொன்றும் நீளம்நீளமாக அம்மன்சன்னதி வரைக்கும் பாம்புமாதிரி வளைந்து வளைந்து கிடந்தது. தேர் சகலஅலங்காரங்களுடனும் தோரணங்களுடனும் வாழை மரத்துடனும் நிலவு வெளிச்சத்தில் மௌனமாகப் பேசாமல் நின்றது. கோமுவோடு கோபித்துக் கொண்டு சண்டைபோட்டதுபோல் தோன்றியது.

- 'நிலை'.

10. கொஞ்சம் கொஞ்சமாகக் கூடிவருகிற இவனுடைய கோபமும் படபடப்பும் கவனிக்க வைத்தன. டவுன் பஸ்ஸில் சில கண்ணாடிகள் நொறுங்கி அப்படியே நிற்குமே அதுபோல பேசுகிறவனுடைய முகம் ஆயிரம் நடுங்கலுடன் நொறுங்குவது தெரிந்தது.

- 'பளு'.

- தொடர்வேன்.

-அடுத்து ஜெயமோகன் படைப்புகளிலிருந்து.

-வே.சபாநாயகம்.