Monday, October 18, 2004

களஞ்சியம் 9: வறுமைப்பாட்டு

எனது களஞ்சியத்திலிருந்து - 9 - வறுமைப் பாட்டு:

'கொடிது கொடிது வறுமை கொடிது' என்று பாடினார் ஔவையார். 'நல்குரவு' என்று ஒரு அதிகாரமே வறுமையின் துன்பம் பற்றி வள்ளுவர் எழுதி இருக்கிறார். வறுமையைவிடத் துன்பம் தருவது எது என்று ஆராய்ந்தால் வறுமையேதான் என்கிறார்.

'இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னாதது'.

அது மட்டுமல்ல - வறுமை என்கிற பாவி ஒருவனைப் பற்றிக் கொண்டால் இம்மை இன்பம் மட்டுமின்றி மறுமை இன்பமும்கூட இல்லாது செய்து விடுமாம்.

'இன்மை என ஒரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும்' என்கிறது குறள்.

இந்த இல்லாமை என்கிற வறுமை அதிகமும் புலவர்களையே பீடிக்கிறது. அதன் கடுமை தாளாமல் அது தரும் துன்பத்தையும் அவர்கள் கவிதை ஆக்குகிறார்கள் என்பதைப் பழம் பாடல்கள் நமக்குச் சொல்கின்றன.

வறுமையின் துன்பத்தை அனுபவித்த சுந்தர கவிராயர் என்கிற புலவர், வறுமை வந்தால் என்னென்னவெல்லாம் அரிதாகிவ்¢டும் என்று ஒரு பாடலில் சொல்கிறார். 'வறுமை ஒருவனை வந்து அடையுமானால் உண்பதற்குச் சோறு கிடைப்பது அரிதாகும்; அறுசுவை உணவும், பால், தயிர், நெய் மூன்றும் கிடைப்பதற்கு அரிதாகும்; பகற்பொழுதில் வெற்றிலைப் பாக்கு கிடைப்பது அரிதாகும்; இருள் நிறைந்த நள்ளிரவ்¢ல் அன்புடைய காதலி அருகில் இருப்பது அரிதாகும்; படுத்துத் தூங்குவதற்குப் பாய் கிடைப்பது அரிதாகும்; உடம்பை மறைப்பதற்குரிய ஆடை கிடைப்பது அரிதாகும்,' என்கிறார்.

அன்னம் உணற்கு அரிதாம்;
ஆமாறு மூன்றும் அரிதாம்;
பள்ளம் அரிதாம்
பகலின்கண்; - துன்ந்¢சியில்
நேயம் அரிதாகும்;
நித்திரைக்கும் பாய் அரிதாம்;
காயக்கு அரிதாம்
கலை.

(அன்னம் - சோறு; ஆமாறு மூன்று - ஆவினிடத்தில் இருந்து பெறும் பால் தயிர், நெய் ஆகிய மூன்று; பள்ளம் - வெற்றிலைப் பாக்கு; துன் - நெருங்கிய; நேயம் - அன்பு, அன்புடைய காதலி; காயம் - உடல்; கலை - ஆடை.)

'வறுமையானது உயர்ந்த குடியில் பிறந்தவரிடத்திலும் இழிவான சொற்கள் தோன்றுவதற்கு ஏதுவான தளர்ச்சியை உண்டாக்கும்' என்கிறார் வள்ளுவர்.

'இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு வரும்.'

இதனை விவேக சிந்தாமணி உருக்கமாகச் சித்தரிக்கிறது.

'தாங்கொணா வறுமை வந்தால்
சபைதனில் செல்ல நாணும்;
வேங்கைபோல் வீரங் குன்றும்;
விருந்தினர் காண நாணும்;
பூங்கொடி மனையாட்கு அஞ்சும்:
புல்லருக்கு இணங்கச் செய்யும்;
ஓங்கிய அறிவு குன்றும்;
உலகெலாம் பழிக்கும் தானே.

பொறுக்க முடியாத வறுமை ஒருவனுக்கு வருமானால், பலர் கூடிய அவைக்குள் செல்ல அவனுக்கு நாணம் உண்டாகும். வேங்கையைப் போன்ற அவனது வீரமும் குன்றி விடும். விருந்தினரைப் பார்க்க நேரின் வெட்கம் ஏற்படும். மலர்க்கொடி போன்ற மனை விக்கு அச்சப்பட நேரிடும். அற்பருடன் சேருமாறு செய்யும். மென்மேலும் வளர வேண்டிய அறிவும் குறையும். உலகமெல்லாம் அவனைப் பழிக்கும்.

'வறுமைக்கு ஆட்பட்டவன், நேற்றும் என்னைக் கொன்றது போன்ற துன்பத்தைச் செய்த வறுமை, இன்றும் என்னை வந்து துன்புறுத்துமோ?' எனத் தினமும் அஞ்ச வைக்கும் என்கிறார் வள்ளுவர்.

'இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.'
(நெருநல் - நேற்று; ந்¢ரப்பு - வறுமை)

மதுர கவியார் என்னும் புலவர் வறுமையால் மிகவும் வாடினார். காளத்தியப்பர் என்கிற வள்ளலைத் தேடி தன் வறுமை தீரப் பரிசில் பெறச் சென்றார். வழியில் ஒரு சத்திரத்தில் இரவு தங்கும்படி நேர்கிறது. படுத்தவரின் சிந்தனை விரிகிறது. வறுமையை விளித்து, 'ஏ வறுமையே! நிழலைப் போல என்னைப் பின்பற்றி என்னோடு இவ்வளவு நாட்கள் திரிந்து வருந்தினாய். நாளைக்கு இருப்பாயோ? நாளைக்கு நான் திருநின்றை யூருக்குப் போய் வள்ளல் காளத்தியப்பரைப் பார்த்தபின் என் பாடலைக் கேட்டு உன்னை அவர் ஓட்டிவிடுவார். அதற்ககப்புறம் நீ எங்கோ நான் எங்கோ? போனால் போகிறது! இன்று மட்டும் சற்றே என்னோடு இருந்து விட்டுப் போ!' என்று நக்கலாகப் பாடுகிறார்.

`நீளத் திரிந்து உழன்றாய்
நீங்கா நிழல் போல
நாளைக்கு இருப்பாயோ
நல்குரவே - காளத்தி
நின்றைக்கே சென்றக்கால்
நீ எங்கே நான் எங்கே
இன்றைக்கே சற்றே
இரு!

(உழன்றாய் - வருந்தினாய்; நின்றை - திருந்¢ன்றையூர்)

'இப்படி வறுமையில் வாடுபவர் நெருப்பிலே கூட இருந்து உறங்குதலும் கூடும்; ஆனால் வறுமை வந்துற்றபோது யாதொன்றாலும் உறங்குதல் அரிதாம்' என்கிறார் வள்ளுவர்.

'நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்ப்¢னுள்
யாதொன்றும் கண்பாடு அரிது.'

புலவர்கள் தாம் வறுமையால் வாடுகிறவர்களா வேறு யாரும் இல்லையா என்றால் அந்தகக் கவி வீரராகவ முதலியார் எனும் பெரும் புலவர் எப்போதும் வறுமை நீங்காத எட்டு பேரைப் பட்டியலிடுகிறார்

'கவிகற்றவர்க்கும், கணிகற்றவர்க்கும், கம்மாளருக்கும், ஓவிகற்றவர்க்கும், உபாத்திகளுக்கும், உயர்ந்த மட்டும் குவிவைக்கும் ஒட்டர்க்கும், கூத்தாடிகட்கும், குருக்களுக்கும் இவரெட்டுப் பேர்கட்கு நீங்கா தரித்திரம் என்றைக்குமே!'

பாட்டிசைக்கும் பாவலர்க்கும், சோதிடம் கணிக்கத் தெரிந்தவர்க்கும், உலோகவேலை செய்யும் தொழிலாளருக்கும் , ஓவியம் தீட்டும் ஓவியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், உயரமான சுவர் வைக்கிற ஒட்டர்களுக்கும், கூத்தாடும் நடிகர்களுக்கும், புரோகிதர்களுக்கும், வறுமை எப்போதும் நீங்காது.

இன்றைக்கு அந்தகக் கவி வீரராகவர் இருந்தால் ஆசிரியர்களை இந்தப் பட்டியலிலிருந்து நீக்கி விடக் கூடும்!

- மேலும் வரும்.

- வே.சபாநாயகம்

No comments: