Monday, October 18, 2004

வர்ணனைகள் உவமைகள் 30 - ஜெயமோகன்

நான் ரசித்த வருணனைகள் உவமைகள் - 30: ஜெயமோகன் படைப்புகளிலிருந்து:


1. மலையன் வீடுவழி ஓடும் ஓடையை அங்கிருந்து பார்க்க முடிந்தது. பல நூறு அடி ஆழத்தில் வெள்ளைச் சரிகை ஒன்று விழுந்து கிடப்பது போலிருந்தது. வெவ்வேறு நீல நிறங்களில் சிறிய மலைகள்; அப்பால் அகஸ்தியர்கூட மலையில் இளநீலத் திரை.
மலைகளே விதம் விதமான படுதாக்கள் தான்.

- 'நச்சரவம்' கதையில்.

2. எனக்கு மிகவும் பரிச்சயமான ஆறு இது. என் இளமைப் பருவத்துத் தோழி. மழையில் அவளுடைய துள்ளல். இரவில் அவளுடைய மௌனம். பனி பெய்யும் காலையில் அவளது நாணம். எவ்வளவு நெருக்கமானவள் இவள் எனக்கு ........

- 'நதி'.

3. உற்சாகமான மரம் அது. இந்த சோகம் அதற்கு அபூர்வமானது. காலையில் வானம் கழுவிச் சாய்த்து வைக்கப்பட்ட பெரிய நீல நிறக் கண்ணாடி போலத் தோன்றும்போது பார்க்க வேண்டும் அதை. வானத்தைத் துடைக்க அசையும் பட்டுக் குஞ்சம் போலிருக்கும். கூந்தல் காற்றில் மிதக்க, இடையசைத்து ஆடும் நளினமான பெண்மை. காலையில் பச்சைந்¢றம் சற்று நீர்த்துப் போயிருக்கும். ஒளியின் பிரகாசம் ஏற ஏற, ஓலைப் பரப்பு மின்னத் தொடங்கும். புள்ளியாக ஒளித்துளிகள். அவை காற்று வீசும் போது வரிசை குலையாமலேயே அசையும்.

- 'கண்'.

4. அந்தக் காலத்தில் குலசேகரம் தாண்டினால் உச்சிப் பொழுதில் கூட நின்ற யானை மறையும் இருட்டு. அதற்கப்பால் மூளியலங்காரி கண்ணீர் போல முப்பது நாளும் மழை. புலி போட்ட மீதத்தை நரி தின்கிற காடு. தரை தெரியாமல் செடிப் படப்பு. வானம் தெரியாமல் இலைப் படப்பு. வழியாக மூத்தபட்டன் பூணூல் போல ஒரு ஒத்தையடிப் பாதை. அது பேச்சிமடி தாண்டி, பெருஞ்சாணி மலை தாண்டி, நெடு மங்காடு சுரம் தாண்டி அனந்த பத்மநாபன் பாதங்களில் முடிகிறது. காட்டுமிருகத்தின் நகமும், காணிக்காரன் காலுமல்லாமல், நாட்டுவாசியின் வாசம்கூடப் படாத பேச்சியின் ராச்சியம் அது.

- 'படுகை'.

5. மரத்தாலும் பிரம்பாலும் ஆன ஒரு சாமானைத் தூக்கிக் கொண்டு வந்து முற்றத்தில் போட்டார் மேனோன். அது ஒட்டடையும் கரியும் படிந்து இருந்தது. பகல் ஒளியில் ஏதோ அந்தரங்க உறுப்பைத் திறந்து வைத்தது போல அசிங்கமாக இருந்தது.

- 'பல்லக்கு.

6. வானத்தைத் தொட்டு ஏதோ எழுத முனையும் தூரிகை போல நின்றிருந்தது ஆலமரம்.

- 'வனம்'.

7. பாடல் பெற்ற ஸ்தலம். வசைஎன்றும் சொல்லலாம். ஞானசம்பந்தர் போகிறபோக்கில் தனக்கு அருள் செய்யாமல் ஒற்றைக் காலில் நிற்கும் நடராசனை எட்டு வரியில் இடக்குப் பண்ணி விட்டுப் போனார்.

- 'சிவமயம்'.

8. சொடேரென்று மங்கான்சிங் சவுக்கை உதறினான். சொடேரென்று ஒலி என் மீது தெறித்தது. என் உடம்பு மெல்ல நடுங்க ஆரம்பித்தது. அந்தக் கணம் ஒன்றை அறிந்தேன்.சவுக்கு ஒரு பொருளல்ல. அது ஒரு இருப்பு. அதன் கருமை நெளியல், அதன் சீறல், ஈவிரக்கமற்ற ஒலி.

- 'சவுக்கு'.

9. அச்சுக்காரியஸ்தனுக்கு ஆஸ்த்துமா. அந்தியில் ஒரு மாதிரி, காலையில் வேறு மாதிரி. தம்பிரானுக்கு முன் ஒரு முகம். அடியாளர்களிடம் இன்னொரு முகம். நுணுக்கமாக இரண்டு தாள்களை ஒட்ட வைத்து உருவாக்கப்படும் அட்டைக் காகிதம் போல் ஒரு இரட்டை மனிதர் அவர்.

- 'லங்காதகனம்'.

10. படிகளில் கூட்டம் பெருகியது. ஒரு ஆறு. மேலேறும் ஆறு. கால்களினால் ஆன ஆறு, புடவைகளால், வேட்டிகளால், பேண்டுகளால், செருப்புகளால் ஆன ஆறு.

- 'ஏழாம் உலகம் நாவலில்'.

- தொடர்வேன்.

- அடுத்து நாஞ்சில் நாடன் படைப்புகளிலிருந்து.

- வே.சபாநாயகம்

No comments: