Wednesday, August 04, 2004

நினைவுத் தடங்கள் - 21

சின்ன வயதிலேயே எனக்கு ஓவியத்தைப் போலவே புகைப்படக் கலையிலும் ஈர்ப்பு ஏற்பட்டிருந்தது. எங்கள் தாய்மாமா வீட்டில் பெரிய பெரிய ரவிவர்மா ஓவியங்கள் இருந்ததையும் அவை எனக்கு சின்ன வயதில் பிரமிப்பையும் ரசனையையும் ஏற்படுத்தின என்று முன்பே குறிப்பிட்டிருக்கிறேன். அதுபோலவே நிறைய புகைப்படங்களும் வீடு முழுக்க மாட்டப் பட்டிருந்தன. அப்போதெல்லாம் ஒருவர் வீட்டில் குழந்தையையோ, குடும்பத்தையோ படம் எடுத்தால் அதில் ஒரு பிரதியை கண்ணாடி சட்டம் போட்டு உற்றார் உறவினர்க்குக் கொடுப்பார்கள். புதிதாக திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளும் ஸ்டூடியோவுக்குப் போய், நின்று கொண்டு உட்கார்ந்துகொண்டு என்று பல் போஸ்களில் படம் எடுத்துக் கொண்டு அதன் பிரதிகளை நெருங்கிய உறவினர்க்குத் தருவர்கள். அப்படிச் சேர்ந்த படங்கள் ஒவ்வொரு வீட்டிலும் புகைபடிந்து ஒட்டடை பின்னி நிறையத் தொங்கும்.

அப்போதைய படங்கள் எல்லாம் அனேகமும் `செப்பியா` எனப்படும் செம்பழுப்பு நிறத்திலேயே இருக்கும். என் மாமாக்களில் ஒருவர் உடையார் பாளையம் ஜமீனில் அந்தக் காலத்தில் பேஷ்கார் ஆக இருந்தார். அவர் நிறைய அவரது அலுவலக உடையில் பல போஸ்களில் எடுத்து மாட்டியிருந்தார். குடுமித்தலையில் சேட் தொப்பி போல பூப் போட்ட பட்டைத் தொப்பி, உக்கழுத்துவரை பொத்தான் போட்ட கோட்டு, நெற்றியில் விபூதிப் பட்டை, சந்தனப் பொட்டு, காதில் காவடிமாதிரி அடியில் இருக்கும் சிவப்புக் கல் வைத்த கடுக்கன், கோட் பையில் செருகிய கர்ச்சீப், கழுத்தில் விசிறியடுக்கு அங்கவஸ்திரம்- பரமசிவம் கழுத்துப் பாம்பு மாலை போல, பஞ்சகச்சம் வைத்துக் கட்டிய
வேட்டி, காலில் முன் பக்கம் வளைந்த வார் செருப்பு என்று தான் யார் படம் எடுத்துக் கொண்டாலும் ஒரே மாதிரியில் இருக்கும். என் மாமா ஒரே பிளேட்டில் எடுத்த மாதிரி ஒரு டஜன் பாஸ்போர்ட் சைஸ் படங்கள் - டை கட்டியும் கட்டாமலும், கோட் போட்டும் போடாமலும்,வெயிஸ்ட் கோட்டுடனும் என்று பனிரெண்டு போஸ்களில் எடுத்து அமைத்த படம் ஒன்றும் ஏதோ கும்பகோணம் மகாமக ஸ்பெஷல் சலுகைப் படம் என்று எடுத்து மாட்டியிருந்தார்.

தம்பதிகள் படமும் அந்தக் காலத்துப் பாஷனில் இருக்கும். ஆண்கள் மேல் சொன்ன லட்சணங்களுடனும் பெண்கள் கழுத்து நிறைய நகைகளுடன் காதில் கொப்பு, மாட்டல், மூக்கில் பேசரி, புல்லாக்கு, முழங்கைக்குமேல் நெளி, இடுப்பில் ஒட்டியாணம் என்று என்று சர்வாலங்கார பூஷிதையாய்த்தான் போட்டோவுக்கு நின்றார் கள். ரவிக்கையின் கை முழங்கை தாண்டி முக்கால் கைக் கொண்டதாக அந்தக்
காலத்து பாஷனுக்கு அத்தாட்சியாக இருக்கும். படம் எடுப்பவர் வீட்டுக்கு வந்தோ அல்லது தன் ஸ்டூடியோவிலொ கருப்புத்துணி மூடிய முக்காலி ஸ்டேண்டில் நிற்கும், பிளேட் காமிராவில் தான் படம் எடுப்பார். கைக்காமிராவெல்லாம் பின்னால்தான் வந்தது. அந்தச் சின்ன வயதில் நான் பார்த்து ரசித்த போட்டோப் படங்களும் போட்டோ எடுத்தபோது பார்த்ததும் எனக்கு போட்டோ எடுக்கும் ஆசையை ஏற்படுத்தியது.

எட்டு ஒன்பது வயதில் அதுவும் அந்தக் காலத்தில் என் ஆசை எப்படி நிறைவேறும்? ஒரு சதுர அட்டைப் பெட்டியில் ஒரு வட்டமான பழைய மூக்குக் கண்ணடி லென்சைப் பொருத்தி லென்சை கையால் மூடித்திறந்து ஸ்டூடியோக் கேமிராவில் செய்வது போலச் செய்து படம் எடுத்த மாதிரி பாவனை செய்தேன். ஆரம்ப வகுப்பு பாடப் புத்தகங்களிலிருந்து கிழித்த மரம், செடி, ஆடு, மாடு, ஊஞ்சல் ஆடும் பெண், வண்டியோட்டும் ஆள் படங்களை சின்ன அட்டைகளில் ஒட்டி, அதற்கேற்றபடி படம் எடுத்தமாதிரி பாவனை செய்து அப் படங்களை நண்பர்களிடம் காட்டுவேன். அவை அசல் அல்ல என்று தெரிந்தாலும் என்னிடம் போட்டொ எடுத்துக் கொள்ள சிறுவர்கள் கெஞ்சுவார்கள். இப்படித் தான் என் ஆரம்ப காலப் போட்டோ முயற்சி இருந்தது.

பிறகு கல்லூரிக்குப் போன பிறகு இண்டர் படிக்கும் போது தான், நிஜ போட்டோ எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. என் இன்னொரு மாமா மகன் ஜே.எம்.கல்யாணம் - சென்னை மூத்த வழக்கறிஞர் கே.எம். விஜயனின் அப்பா ஒரு சிறந்த போட்டோக் கலைஞர். அவர் தான் எனக்கு இக் கலையில் குரு. அவர் அப்போது `ரோலிப்ளக்ஸ்' என்ற அப்போதைய விலை உயர்ந்த, தரமான கேமராவால் அற்புதமான படங்களை எடுத்து வந்தார். அனேகமாக எங்கள் உறவினர்கள் எல்லோர் வீட்டிலும் அவர் எடுத்த படங்கள் தொங்கின. அவர் என் போட்டொ ஆர்வத்தைப் பார்த்து தன்னிடம் இருந்த அமெச்சூர் `பேபி ப்ரவ்னி` கேமிராவை எனக்குக் கொடுத்து அதில் பழகும்படி சொன்னார்.

அது ஒரு சின்ன கையடக்கமான காமிரா. அது கொடாக் பெட்டி காமிரா போல இல்லாமல் ரோலிப்ளக்ஸ் கேமிரா மாடல்¢ல் - ரிப்ளெக்ஸ் டைப்பில் இருந்தது. ஆளை போக்கஸ் செய்து பட்டனை அமுக்க வேண்டியது தான். வேறு டைமிங், அப்பர்ச்சர் என்று எதுவும் கிடையாது. நல்ல வெளிச்சத்தில் கை நடுங்காமல் எடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். அற்புதமாக வரும். மேலும் பெட்டி கேமரா மாதிரி இல்லாமல் இது மிகவும் சிக்கனமாக இருந்தது. அதற்கு வேண்டியது 1 1/4" க்கு 1 1/4" அளவில் சதுரமான 12 படங்கள் எடுக்கும் 128பிலிம் தான். அதன் விலை அப்போது - 1951ல் - ரூ.1.25 தான். அப்பா அனுப்பும் மாதாந்திர பணத்தில் சிக்கனம் செய்து மாதம் ஒரு பிலிமாவது வாங்கி விட முடியும். அந்த கேமிராவால் நான் முதலில் எடுத்த படம் எங்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழக நிர்வாக கட்டடம் தான். நாலு புறமும் பெரிய கடிகாரங்கள் காட்டும் மணிக்கூண்டுடன் அமைந்த - பல்கலைக் கழக அடையாளம் சொல்லும் பெரிய கட்டடம், என் முதல் படத்திலேயே வெகு அழகாகப் பதிவாகி இருந்தது. என் முதல் கதையை அச்சில் பார்த்த பரவசத்தை அது ஏற்படுத்தியது. முதல் ரோல் முழுதும் பல்கலைக் கழகத்தின் பல்வேறு காட்சிகள் தான். ஒரு படம் கூட சோடையில்லாமல் பளிச் சென்று அற்புதமாய் அமைந்து விட்டது பெரிய சாதனை புரிந்து விட்ட பூரிப்பை ஏற்படுத்தியது.

- மீதி அடுத்த மடலில்.

-வே.சபாநாயகம்

No comments: