Friday, August 06, 2004

நினைவுத் தடங்கள் - 22

கோடைவிடுமுறை வரைக்கும் கண்ணில் பட்ட காட்சிகளை எல்லாம் நிறைய எடுத்தேன். சிதம்பரம் கோயிலுக்குப்போய் கோபுரங்களையும் சிவகங்கைக் குளத்தையும் பொன்னம்பலத்தையும், நடன சிற்பங்களையும் கல்சங்கிலி தொங்கும் பிரம்மாண்ட தூண்களையும் எடுத்தேன். எடுத்து மாளவில்லை. ஏகப்பட்ட படங்கள் எடுத்தும் சலிக்க வில்லை. எடுத்த பிலிமை பல்கலைக் கழக வளாகத்திலேயே இருந்த ஆர்.டி.வேலு ஸ்டூடியோவின் கிளையில் கொடுத்து டெவலப் செய்து பிரிண்ட் போடுவேன். ஸ்டூடியோ உரிமையாளர் சின்ன பேபி ப்ரௌனி காமிராவில் எடுத்தவைகளா என்று நம்ப முடியாமல் கேட்டார். என் படங்கள் அவருக்குத் திருப்தியாக இருந்ததால் பிறகு சலுகை காட்டத் தொடங்கினார். இருட்டறைக்குள் உடனிருந்து டெவலப்பிங் ப்ரிண்டிங்கு களைப் பார்க்கவும் அனுமதித்தார். அவ்வப்போது விளக்கமாகச் சொல்லியும் கொடுத்ததோடு நானே அங்கு ப்ரிண்ட் போடவும் அனுமதித்தார். அதன் பிறகு கோடைவிடுமுறைக்கு ஊர் திரும்பியபோது டெவலப்பிங் மற்றும் ப்ரிண்ட்டிங் செய்யத் தேவையான கரைசல்கள், ப்ரிண்டிங் தாட்கள் எல்லாம் சலுகை விலையில் கொடுத்தார்.

ஊருக்கு வந்ததும் மச்சுவீட்டின் ஒரு அறையை என் இருட்டறையாக ஆக்கிக் கொண்டு, எடுத்த பிலிம்களைக் கழுவவும் ப்ரிண்ட் போடவும் செய்தேன். நாள் முழுதும் காமிராவைத் தூக்கிக்கொண்டு,பால்ய நண்பன் ஒருவனோடு காடுமேடெல்லாம் சுற்றிக் கண்ணில் பட்டதையெல்லாம் படமெடுத்தேன். போட்டோ அப்போது பிரமிப்பான விஷயமானதால், இப்போது சினிமா ஷ¥ட்டிங் நடந்தால் கூடுகிறமாதி ஒரு கூட்டம் எங்கு போனாலும் ஒரு சிறியவர் பெரியவர் பேதமன்றித் தொடர்ந்து வரும். ஸ்கூட்டர் வழியில் நின்று விட்டால் ஒர் கூட்டம் சூழ்ந்து கொண்டு மேற் கொண்டு செய்யவிடாமல் டென்ஷன் உண்டாக்குவார்களே அதுபோல் இந்தக் கூட்டமும் நம்மைப் படம் எடுக்கவிடாமல் தொல்லை கொடுக்கும்.

நான்கு மைலுக்கு அப்பால் இருந்த ஒரு கிராமத்தில் முருகன் கோயிலில் மயில் ஒன்று இருப்பதாக அறிந்து அதைப்படம் எடுக்க நண்பனுடன் போனேன். கோயிலை விசாரித்துப் போவதற்குள் ஒரு பெரிய கூட்டம் சூழ்ந்து கொண்டுவிட்டது. மயிலைப் படம் எடுக்கப் போகிறோம் என்றதும் ஆளுக்கு ஆள் யோசனை சொல்லத் தொடங்கிவிட்டார்கள். கோயிலை அணுகி மயிலைப் படம் எடுக்க முயன்றபோது கூட்டத்தின் கூச்சலால் மிரண்டுபோய் மயில் பறந்து விட்டது. அதைத் தொடர்ந்து தேடிப் போய் எடுக்கும்போது மீண்டும் தூரத்தே போய் உட்கார்ந்தது. நாங்களும் விடாது தொடர்ந்தோம். கடைசியில் அது பஸ் போகும் சாலைக்குப் போய்விட்டது. அப்போது வழியோடுபோன பஸ்ஸ¤ம் கூட்டத்தைக் கண்டு நின்று விட்டது. மதியம் தாண்டியும் மயிலைப் படம் எடுக்க முடியாமல் ஏமாற்றத்தொடு திரும்பினோம்.

இப்படி 4 வருஷங்கள் சின்னக் காமிராவில் படம் எடுத்து சலித்தபின் என் அத்தான் ஒரு விலையுயர்ந்த காமிரா, கொஞ்சம் சல்லிசான விலைக்கு வந்தபோது 150ரூ.க்கு வாங்கிக்கொடுத்தார். அப்போது நான் படிப்பை முடித்துவிட்டு ஆசிரியராகப் பணியேற்றிருந்தேன். யாஷிகா-ஏ என்ற ஜப்பான் காமிரா. இதுவும் ரோலிப்ளெக்ஸ் போல ரிப்ளெக்ஸ் காமிராதான். இதில் டைமிங் அப்பர்ச்சர் எல்லாம் உண்டு. பெட்டிக் கேமிரா போல அல்லாமல் தேவையான ஒளியை நாமே கணக்கிட்டுச் சரியாக அமைத்தால்தான் நல்ல தெளிவான படம் எடுக்க முடியும். இதற்காக சில போட்டோப் புத்தகங்கள் வாங்கிப் படித்து சோதனை முயற்சியாகப் பல படங்கள் எடுத்தேன். கண்ணன், தினமணிக் கதிர் போன்ற பத்திரிகைகளில் நான் எடுத்த படங்கள் வெள்¢யாகின. ப்ளாஷ் லைட் வாங்கியதும் நெருங்கிய உறவினர்கள் திருமணங்களில் எல்லாம் நான் தான் போட்டோகிராபர். இப்போது வெளிநாட்டுக்கு எல்லோர் வீட்டிலும் யாராவது போயிருப்பதால் எல்லோர் வீட்டிலும் இளைஞர்கள் கல்யாணமண்டபத்தில் காமிராவும் கையுமாய் நிற்கிறார்கள். நமக்கு இப்போது மவுஸ் இல்லை. வருந்தி அழைத்தாலும் போகமுடிவதில்லை.

பிறகு வன்னப்படங்களின் ஆக்கிரமிப்பு ஏற்பட்டது. வண்ணப் படங்கள் எடுக்க ரிப்ளெக்ஸ் காமிராக்கள் அதிக செலவை உண்டாக்கும் என்பதால் 35mm காமிரா ஒன்று வாங்க வேண்டி வந்தது. மஸ்கட்டில் என்ஞினீயராக இருந்த என் மைத்துனன் மூலம் cannon QL-1.9 என்ற காமிராவை வாங்கி ஸ்லைட் படங்களாக நிறைய எடுத்தேன். அதற்காக ஒரு சின்ன ஸ்லைட் புரொஜெக்டரும் வாங்க வேண்டியிருந்தது.
இதைக் கொண்டு மாமல்லபுரம், செஞ்சி, மதுரை, தஞ்சாவூர், கன்னியாக்குமரி போன்ற இடங்களுக்குக் கெல்லாம் குடும்பத்துடன் போய் சிலிர்ப்புடன் ஏராளமாய் எடுத்தேன். என் அம்மா குறைப் பட்டுக் கொண்டபடி நான் என் சம்பளத்தில் அதிகம் செலவழித் தது டைகள் வாங்கவும் போட்டோ எடுக்கவும் தான். ஒன்றையொட்டி ஒன்று வாங்குவது போல் ஓய்வுபெற சில ஆண்டுகள் இருக்கும்போது கட்டிய வீட்டில் போட்டொ டார்க் ரூம், அதில் என்லார்ஜிங் மிஷின் என்று வளர்ந்து கொண்டே போயிற்று. இப்படி போட்டோக் கலை ஒரு 50 வருஷம் என்னைப் பிடித்து ஆட்டியது. இப்போது தான் கொஞ்ச நாட்களாக, கணினி வாங்கி அதில் தீவிரமாய் ஈடுபாடு ஏற்பட்ட பிறகு
போட்டோவுக்கு நேரமில்லை. இருந்தாலும் அவ்வப்போது கை துறுதுறுக்கத்தான் செய்கிறது.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: