Monday, August 02, 2004

நினைவுத் தடங்கள் - 20

'கொடுப்பினை வேண்டும்' என்று ஏங்க வைக்கும் கலைகளில் ஒன்று இசை. எல்லோருக்கும் இசை வசப்படுவதில்லை. எம்.எஸ்.சுப்புலட்சுமி, மதுரை மணி அய்யர், கே.பி.சுந்தராம்பாள் என்று மிகச் சிலருக்கே அந்த பாக்யம் கிட்டுகிறது. ஆனால் இசையை ரசிக்க அனேகமாக
அதிகப்படியானவர்க்கு வாய்த்திருக்கிறது. 'பாட்டின் சுவையதனை பாம்பறியும் என்பார்கள்' என்பார் மகாகவி பாரதி. அப்படியிருக்க மனித
இனம் பாட்டை ரசிப்பதில் அதிசயமென்ன?

எனக்கும் பிள்ளைப் பிராய முதலே இசையில் ஈடுபாடு இருந்தது. எங்கள் வீட்டில் யாரும் பாட வல்லவர்களாக இல்லை. வீட்டின் சூழ்நிலையும் பாரம்பரியமும்கூட இந்தக் கொடுப்பினைக்கு அவசியமானவை. பிராமணக் குடும்பங்களில் இது சர்வ சாதாரணமாக குழந்தைகளுக்கு அமைந்து விடுகிறது. வளைகாப்புத் தொடங்கி பிள்ளைப் பேறு வரை கர்ப்பிணியை அமரவைத்துப் பாடுவதும், பிள்ளை பிறந்தது முதல் தாலாட்டுக்குப் பதில் தாய் கர்நாடக இசையைப் பாடுவதும் குழந்தைக்கு இசைஞானம் கருவிலேயே ஏற்பட வாய்ப்பாகிறது. இன்றைய நகரீய வாழ்வில் அந்த வாய்ப்பு குறைந்து போனாலும் மற்றக் குழந்தைகளை விட பிராமணக் குழந்தைகளுக்கு இசை ரசனையும் இசைத் திறனும் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறோம். இசை வேளாள ருக்கும் இது சாத்யமே.

எனக்கு இசைரசனை எப்போது தொடங்கியது எண்ணிப் பார்க்கிறேன். எங்கள் வீட்டின் மறுபாதியில் இருந்த எங்கள் பெரியப்பா வீட்டில் நவராத்திரி தோறும் கொலு வைப்பார்கள். எங்கள் பெரியப்பா மகள் என்னைவிடப் பத்து வயது மூத்தவர். அவருக்கு கொலுவைப்பதிலும் கொலுவின் முன்னால் பாடவும் ஆசை. அவருக்குப் பாட வராது. அவரது சினேகிதி - எங்கள் புரோகிதரின் பெண்ணுடன் சேர்ந்து ஏதாவது பாடுவார். அதை எங்கள் உள்ளூர் நாதசுரக்காரர் அவர்கள் பாடியதை நாதசுரத்தில் வாசிப்பார். வெளியூரிலிருந்து புதிதாகக் குடிவந்த ஒரு நாயுடு அம்மாவும் தெலுங்கில் எதாவது பாடுவார். நாதசுரம் அதையும் அடியொற்றி இசைக்கும். அந்த சின்ன வயதில் - 5,6 வயதில் அதை நான் ரசிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து எங்களுர் இளைஞர்கள் சிலர் - புரோகிதர் மகன், நாதசுரக்காரர் மகன் மற்றும் சில இசையார்வமுள்ள இளைஞர்கள் பக்கத்து நகரத்தில் நடக்கும் டெண்ட் சினிமாக் கொட்டகைகளில் பார்த்து வந்த படங்களிலிருந்து பாடல்களை எப்போதும் பாடியபடி இருபார்கள். அப்போதைய படங்களில் பாட்டுதான் பிரதானம்.

எம்.கே.தியகராஜ பாகவதரும் பி.யூ.சின்னப்பாவும், எம்.எஸ்ஸ¤ம் நடித்தபடங்கள் அப்போது பிரபலமானவை. பாட்டின் எண்ணிக்கையை வைத்தே விளம்பரம் வரும்.

'..........இன்னார் நடித்த 48 பாடல்கள் கொண்ட படம்' என்று விளம்பரம் இருக்கும்.

எம்.கே.டி நடித்த சிவகவி, பில்கணன் - பி.யூ.சின்னப்பா நடித்த மங்கையற்கரசி, குபேர குசேலா - எம்.எஸ் நடித்த பக்த மீரா, சேவாசதனம் -எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த நந்தனார் - கே.பி.எஸ் நடித்த மணிமேகலை போன்ற படங்களை அவர்கள் பார்த்துவிட்டு வந்து சின்னப் பிள்ளைகளான எங்களுக்கு நடித்தும் பாடியும் அந்தப் படங்களைப் பார்க்கும் ஆவலை ஏற்படுத்துவார்கள். அதனால் ஏற்பட்ட
ரசனை எனக்கு கர்னாடக இசைமீது ஈர்ப்பை வளர்த்தது.

முதன்முதலாக கிராமபோன் என் பத்து வயதில் தான் எனக்கு அறிமுகமானது. எங்கள் வீட்டின் மறுபாதியில் இருந்த என் பெரியப்பா மகன் அன்றைய பாணி மைனர். புதுமைப்பித்தன் சித்தரிக்கிற - குதி புரள கிளாஸ்கொ மல் வேட்டி, மஸ்லின் ஜிப்பா, 'நெஞ்சின் பெட்டைத் தன்மையைக் காட்டும் மைனர் செயின்' சகிதமாய் சென்ட் மணக்க ரேக்ளா வண்டியில் தினமும் மாலையில் ஜமாவோடு பக்கத்து நகரத்துக்குப் போய் இரண்டு ஆட்டமும் சினிமா பார்த்து விட்டு திரும்புவதுதான் தினசரி ஜோலி.

அவர் இசைப் பிரியர். அவர் திடீரென்று ஒரு நாள் ஒரு கிராமபோன் பெட்டியைத் தன் ரேக்ளா வண்டியில் கொண்டு வந்தார். ஒரு ஆள் அணைத்துத் தூக்கும் படியான பெரிய சதுர அளவிலான பெட்டி அது. நூக்க மரத்திலான அந்தப் பெட்டி புதுப் பாலிஷில் பளபளத்தது. தங்க
நிறத்தில், ஊமத்தை பூ வடிவிலான அதன் ஒலி பெருக்கிக் குழல் எல்லோரையும் வசீகரித்தது. தெருத் திண்ணையில் வைத்து, பெட்டியைத் திறந்து கூடவே அவர் கொண்டு வந்திருந்த சதுரப் பெட்டியிலிருந்த இசைத்தட்டைப் பொருத்தி ஓடவிட்டார். கணீரென்ற எம்.கே.டி யின் 'அம்பா மனங்கனிந்து..' என்ற பாடல் எழுந்ததும் அதுவரை கிராமபோனைப் பார்த்திராத என்னைப் போன்ற சிறுவர் களும் பெரியவர்களூம் 'ஆ'வென வாய்பிளந்து அதிசயித்தது இன்னும் மனதில் பசுமையாய் நிற்கிறது. தொடர்ந்து பாகவதரின் 'அப்பனைப் பாடும் வாயால்', 'மன்மத
லீலையை வென்றார் உண்டோ' போன்ற அவரது புகழ்பெற்ற பாடல்களையும் எம்.எஸ், தண்டபாணி தேசிகர் சின்னப்பா, அரியக்குடி பாடல்களையும் தினமும் போட்டு எங்க ளைக் கிறங்க வைத்தார். தொலைக் காட்சி வந்த புதிதில் தொலைக்காட்சிப் பெட்டி உள்ள வீடுகளில் கூடிய கூட்டம் போல தினமும் எங்கள் வீட்டின்முன் ரசிகர் கூட்டம்தான். என்.எஸ். கிருஷ்ணன், காளி.என்.ரத்தினம் ஆகியோரது நகைச்சுவைத் தட்டுகளும் டம்பாச்சாரி, தூக்குத் தூக்கி போன்ற நாடகங்களும் எங்களுக்குக் கேட்கக் கிடைத்தன. திரும்பத் திரும்பத்
தினமும் கேட்டு எங்களுக்கு மனப்பாடம் ஆகிவிட்டது. தூக்கத்தில் கூட பாகவதர் பாட்டுதான். அப்படி கர்னாடக இசை என்னை ஆட்கொண்டது.

அதனால் ஏற்பட்ட தாக்கம்தான் உறவினர் வீட்டுக் கல்யாணங்களில் கண் விழித்துப் பிரபல பாடகர்களின் இசைக் கச்சேரிகளை ரசிக்க வைத்தது. அத்தோடு அண்டை கிராமங்களில் நடைபெறுகிற அரிச்சந்திரன், வள்ளித்திருமண நாடகங்களில்
புகழ்பெற்ற சோழமாதேவி நடேசன் போன்ற அற்புதக் கலைஞர்களின் நாடகப்பாடல்களைக் கேட்க அந்த வயதிலிலேயே மைல்கணக்கில் அயர்வு பாராமல் நடக்க வைத்தது. பின்னாளில் அண்ணாமலையில் பயின்றபோது சித்தூர் சுப்பிரமணியப் பிள்ளை மற்றும் தண்டபாணிதேசிகர் தலைவர்களாக இருந்த இசைக் கல்லூர்¢யில் நடந்த கச்சேரிகளைத் தேடிக் கேட்க வைத்தது. அப்படி கர்னாடக இசையை ரசித்து விட்டு இப்போதைய சினிமாப் பாடல்களைக் கேட்க மனம் சம்மதப் படவில்லை.

-தொடர்வேன்.

- வே.சபாநாயகம்.

No comments: