Monday, November 29, 2004

நினைவுத் தடங்கள் - 26

காலை 9 மணிக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வந்த பின் தான் முறைப்படி காலைப்பள்ளி துவங்கும் என்றாலும், அய்யாவின் எதிர் பார்ப்பின்படி எல்லா பிள்ளகளும் 8 மணிக்கே வந்துவிட வேண்டும். ஆசிரியர்கள் வருவதற்குள் காலைப் பிரார்த்தனை, முறைபோட்டு எழுதுதல், காப்பி எழுதுதல் எல்லாம் அய்யா பார்வையில் நிகழும்.

எல்லொரும் காலையில் குளித்து நெற்றியில் அவரவர்க்குரிய மதச் சின்னங்களை இட்டுக் கொண்டு கையில் விறகோ வரட்டியோ அய்யாவின் சமையலுக்காகக் கொண்டு வருவது கட்டாயம். சம்பளம் என்பது வெறும் எட்டணா தான். அதுவும் பெண்களுக்கும் ஹரிஜனங்களுக்கும் கிடையாது என்பதால் பெற்றோர் இந்த விறகு விஷயத்திற்குச் சுணங்குவதில்லை. விறகைக் கொண்டு வந்து அய்யா தங்கும் கூடத்திற்கு வெளியே வெயிலில் போட்டு விட்டுப் போய் உட்கார்ந்ததும், சட்டாம் பிள்ளை ஆண்கள் ஒவ்வொருவரையும் பின் பக்கம் தடவிப் பார்த்துக் கோவணம் கட்டியிருக்கிறார்களா என்று சோதிப்பான். யாராவது கோவணம் கட்டாது வந்தால், அய்யாவிடம் அவன் கொண்டு போகப் படுவான். அய்யா அவனது துண்டை உருவி அம்மணமாக்கி வீட்டுக்குத் துரத்தி விடுவார். அப்படியே வீட்டுக்கு ஓடி கோமணம் கட்டிக்கொண்டு வந்தால் தான் ஆயிற்று. சிலர் மறதியாலோ கோவணத்துக்குத் துணி கிடைக்காமலோ கட்டாது வரும்போது சட்டாம்பிளையிடமிருந்து தப்பிக்க பின்புறம் அரணாக் கயிற்றில் பேப்பரைச் சுருட்டிச் செருகி முட்டாகக் காட்டுவது உண்டு. சட்டாம்பிள்ளைக்கு அவ்வப்போது ஏதாவது தின்பண்டம் கொண்டு வந்து கொடுத்தால் காட்டிக் கொடுக்க மாட்டான். இல்லாவிடில் அய்யாவிடம் மாட்ட வைத்துவிடுவான். துணியை உருவி துரத்துவதுடன், ஏமாற்றுவேலையில் ஈடுபட்டதற்காக கடுமையாய்ப் பிரம்படியும் கிடைக்கும்.

பிரார்த்தனை ஆரம்பிக்கு முன் அய்யா எல்லோருடைய நெற்றியையும் சுற்றி வந்து பார்ப்பார். யாராவது நெற்ற்¢க்கு இட்டுக் கொண்டு வராதிருந்தால் அய்யா உடனே சட்டம் பிள்ளைக்குக் கையைக் காட்டுவார். அவன் வெளியே போய், தெருவில் கிடக்கும் சாணியை எடுத்துவந்து நெற்றிக்கு இடாதவன் நெற்றியில் மூன்று வரிகளாக விபூதிப் பட்டை மாதிரிப் பூசி விட்டுவிடுவான். நாழியாக ஆக, சாணி காய்ந்து வறவற வென்று இழுக்கும். அப்புறம் அவன் நெற்றிக்கு இட ஒரு நாளும் மறக்க மாட்டான்.

அடுத்து அய்யா "கடவுள் வணக்கம் பாடுங்க" என்றதும் எல்லோரும் எழுந்து நின்று கைகூப்பியபடி உரத்த குரலில் ஒரே இரைச்சலாய்ப் பாட ஆரம்பிப்பார்கள். குரு வணக்கத்தில் தொடங்கி, விநாயகர், சரஸ்வதி என்று, ஒரு கடவுளுக்கு ஒரு பாடல் வீதம் வள்ளலார், அருணகிரியார் பாடல்களைப் பாடுவார்கள். எல்லோருடைய வாய்களும் அசைகின்றனவா என்று அய்யா கவனமாகப் பார்ப்பார். மற்றபடி இரைச்சலை அவர் கண்டு கொள்வதில்லை.

கடவுள் வணக்கம் முடிந்ததும் முறைபோட்டு மணலில் எழுதுவதும் காப்பி எழுதுவதும் தொடங்கும். மூன்றாம் வகுப்புக்கு மேல்தான் காப்பிநோட்டு. அரிச்சுவடி வகுப்பும், ஒன்று, இரண்டாம் வகுப்புகளும் மணலில் ஒருவன் உரத்து ராகமாய்ச் சொல்லிக் கொண்டே எழுத மற்றவர்கள் பின்பற்றி உரத்துச் சொல்லியபடி எழுதவேண்டும். மாற்றி மாற்றி முறை போட்டுக் கொண்டு தொடர வேண்டும். இப்படி 'அ' தொடங்கி 'ன்' வரை 247 எழுத்துக்களையும் வாய்ப்பாடுகளையும் தினமும் எழுதியாக வேண்டும். இதனால் எழுத்துப் படிவதோடு மனப்பாடமும் ஆகிவிடும். ஒரு பக்கம், அய்யா மேசை மீது அடுக்கி வைக்கப் பட்டிருக்கு காப்பி நோட்டுகளை ஒவ்வொன்றாய் எடுத்துத் தன் கைப்பட எதாவது வாசகங்களை எழுதிப் பொடுவார். அவற்றை எடுத்து எல்லோரும் அவரவர் நோட்டுகளில் அய்யா எழுதி இருப்பது போலவே அச்சு அச்சாய்க் காப்பி எழுதுவர். அடுத்து எல்லோரும் தலைக்கு எண்ணெய் தடவி தலைவாரி இருக்கிறார்களா, சட்டைப் பொத்தான்களைச் சரியாகப்
போட்டிருக்கிறார்களா என்றெல்லாம் பார்ப்பார். அது முடிந்ததும் அய்யா வருகைப் பதிவேட்டை எடுத்து வகுப்புவாரியாகப் பெயர்க¨ளை அவர்களது சாதியுடன் பதிவு செய்துள்ளபடி, வாசிப்பார். பெயரோடு சாதியையும் சேர்த்து எழுதுவதும் அழைப்பதும்தான் அய்யாவின் வழக்கம். புதுப் புத்தகத்தில் பெயர் எழுதிக் கொடுக்கும்பொதும் அப்படித்தான். அதை யாரும் அப்போது ஆட்சேபிப்பதில்லை. விட்டுவிட்டால் தான் ஆட்சேபணை எழுமே தவிர சேர்ப்பதில் புகார் வராது.

இதற்குள் மணி ஒன்பது ஆகிவிடும். மற்ற ஆசிரியர்களும் வந்துவிடுவர். அவர்களிடம் ஒப்படைத்து விட்டு அய்யா தன் கூடத்துக்கு சமையல் செய்யப் பொய்விடுவார். மணி பனிரெண்டு வரை பாடத்திட்டப்படி பாடங்கள் நடக்கும். காலை வகுப்பு முடிந்ததும் ஆசிரியர்கள் சாப்பிடப் போய் விடுவார்கள். அவர்கள் போனாலும் பிள்ளைகள் உடனே போய்விட முடியாது. அய்யா வெளியே வந்து ஒரு அரைமணி நேரம் மனக்கணக்குகளை எல்லோருக்கும் போட்டுச் சரி பார்ப்பார். பிறகு "சரி, போய்ச் சாப்பிட்டுட்டு சீக்கிரம் வாங்க" என்று அனுப்பி வைப்பார். எங்களுக்கு முன் தலைமுறைவரை அதிகாலை பாடியது போல இப்போதும் மதியச் சாப்ப்பாட்டுக்குப் போகும்போதும் ஒரு பாட்டுப் பாடுவது உண்டு.

"சட்டம் சரவை தானெழுதி
சரவா இலக்கத் தொகை ஏற்றி
இட்ட கணக்கும் வாசகமும்
எல்லாக் கணக்கும் பார்த்துவிட்டோம்
வட்டமான சூரியனும்
மதியம் திரும்பி மேற்காச்சு
திட்டம் பண்ணி அனுப்புமையா
திருவடிசரணம் தானே!" - என்று ஒரே குரலில் பாடி விடைபெறுவதுண்டு.

- தொடர்வேன்.

-வே.சபாநாயகம்.

No comments: