Monday, September 27, 2010

இவர்களது எழுத்துமுறை - 8 கி.ராஜநாராயணன்

1. நான் என் கதைத் தொகுப்புகளுக்கு முன்னுரை எழுதுவதில்லை. கதையில் சொல்லாததையா முன்னுரையில் சொல்லிவிட முடியும்?

2. கதை எழுதுவதற்கு முன்பு நான் கடிதங்கள்தான் எழுதிக் கொண்டிருப்பேன். பத்துப் பக்கம் இருபது பக்கம்கூட எழுதுவேன். ஒரே நாளில் எழுத மாட்டேன். தினமும் கொஞ்சம் கொஞ்சமாய் எழுதுவேன். பின்னாளில் என் எழுத்துக்களுக்கு ஒரு ஸ்டைல் உருவானதென்றால் அதற்கு இந்தக் கடிதங்களே காரணம்.

3. கோபல்ல கிராமம் எழுத உங்களைத் தூண்டியது எது?

ஆந்திராவிலிருந்து தமிழகத்தில் குடியேறி ஒரு கிராமத்தையே அமைத்த கம்மா நாயுடுகளைப் பற்றி எழுதத் திட்டமிட்டிருந்தேன். அவர்கள் அங்கே குடியேறியதைப் பற்றி ஒரு கதை வைத்திருக்கிறார்கள். இப்படி ஒவ்வொரு ஜாதிக்காரர்களிடமும் ஒரு கதை இருக்கு. ஒவ்வொரு தொழில்காரர்களிடமும் ஒரு கநை இருக்கு. கோபல்ல கிராமத்தை எழுதி முடிக்க ஏழு வருஷங்கள் ஆயின. தொடர்ச்சியாக அல்ல விட்டு...விட்டுத்தான் எழுதினேன். எழுதி முடிச்சி கொஞ்சம் கொஞ்சமாய் செதுக்கி செழுமைப் படுத்தினேன். கயத்தாறு ஆசாரி வண்டி
செய்யற மாதிரி நிதானமா செய்தேன்.

4. போராட்டக்காரரான உங்கள் எழுத்தில் மென்மையும் - வருத்தமும் மேலோங்கி இருக்கிறதே?

சில சில எழுத்தாளர்களுக்கு சில சில இயல்பு. அதன்படித்தான் அவர்களது எழுத்துக்கள் இருக்கின்றன. சிலர் கண்டிப்பதே கூட மென்மையாய் இருக்கும். பாராட்டுவதும் அப்படியே. அந்தோன் செகாவ் ரொம்ப மென்மையா, ரொம்ப சுகமா கதை சொல்வார். ஒரு வேளை அந்த பாதிப்பு என் கதையில் இருக்கலாம். ரோம்ப டாம்-டூமு-ன்னு நான் எழுதறதில்லே.

5. நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது உங்கள் கதைகளில் இருந்த பிரச்சினைகளின் தீவிரம், கூர்மை வீச்சு எல்லாம் பின்னளில் வெறும் லயிப்பில் ஆழ்ந்துவிட்டதாக ஒரு குற்றச்சாட்டு...?

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோது ஒரு தீவிரம் இருந்தது. அது எழுத்தையும் பாதித்தது. அப்புறம் மனிதனுடைய வயது ஆக... ஆக... அவன் பகுவப் படறான். அனுபவப் படறான். பழம் பழுக்கிற மாதிரி. அப்ப அந்த மாறுதல் எழுத்தில் வரத்தானே செய்யும்! பத்தொன்பத வயதில் ஒரு கண்டக்டர் உங்களைத் திட்டினால் உங்களுக்குக் கோபம் வரும். நாற்பது வயதில் சரிதான் போ என்ற சகிப்புத் தன்மை வந்துவிடும். இதைப் பக்குவம் என்று வைத்துக் கொண்டாலும் சரி, மழு மாறிப்போச்சு என்றாலும் சரி.

6. செக்ஸ் கதைகளை எழுதுவதனால்உங்கள் இமேஜ் கெட்டுவிடாதா?

இமேஜ் என்பது நான் எழுதிய விஷயத்திற்காக வந்தது. அது அப்படியே நிற்கும். இந்தக்கதைகள் சரி என்றால் காலம் பாராட்டும்.

7.. எழுதுவது போராட்டமா?

சிலர் தண்ணீர் குடிக்கிற மாதிரி சுலபமா எழுதிடறாங்க. நாட்டியம் ஆடறவ சந்தோஷமா ஆடறா. பாடறவன் சந்தோஷமா பாடறான். எழுத்து மட்டும் ஏன் பிரசவ வலியா இருக்கு? எழுத்து மாதிரி கஷ்டமான கலை எதுமில்லை. 0

No comments: