Friday, October 28, 2005

உவமைகள் வர்ணனைகள் - 44

நான் ரசித்த உவமைகள்- வருணனைகள் - 44

வண்ணநிலவன் படைப்புகளிலிருந்து:


1. ............இத்தனைக்கும் ராமையா எல்லோரையும் விட நல்ல உயரம். ஆனால் அவனைப் பார்த்தால் யாருக்கும் ஒரு பயபக்தியோ மதிப்போ வருவதில்லை. குழிவிழுந்த கண்கள்; நீண்ட தாடை; நீளமான கழுத்து; தோள்பட்டையிலிருந்து இரண்டு கைகளும் அறுந்து தொங்கிக் கொண்டிருக்கிற மாதிரி ஒரு பிடிமானமே இல்லாமல் தொங்கும்; ஆறரைஅடி உயரம்.

- 'கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவன்' கதையில்.

2. 'ஸ்...ஸ்....ஸ்......' என்று சாரைப் பாம்பு சீறுகிறமாதிரி யாராவது வீட்டுக்குள் நுழைந்தால் அது பாடலிங்கம் பிள்ளைதான் என்று கண்களை மூடிக்கொண்டு சொல்லி விடலாம். அவரிடம் அசந்து மறந்து யாராவது 'சுகமில்லை' என்று சொன்னால் தொலைந்தது. காயத்தைப் பொடி பண்ணித் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார். காயம் அவருக்குச் சர்வரோக நிவாரணி. ஜலதோஷம் முதல் எலும்புமுறிவு வரை காயத்தைப் பொடித்துத் தேனில் குழைத்துச் சாப்பிடச் சொல்லி விடுவார்.

- 'ஞாயிற்றுக்கிழமை'.

3. அவர்கள் வீட்டில் ஒருத்தர் குரல் போல ஒருத்தருக்கு இல்லை. அவர்களின் அம்மாவுக்கு ஒரு குரல். விசித்திரம் நிரம்பிய - பூனை கூப்பிட்டு அழுகிறது போன்றது அம்மாவின் குரல்.

- 'அழைக்கிறவர்கள்.'

4. அப்பாவின் குரல் ரொம்ப மென்மையானது. அப்பாவைச் சந்தித்து விட்டுப் போன அவருடைய ரசிகர்களில் பலர், ஊருக்குப் போனதும் அப்பாவின் குரலைப் பாராட்டி எழுதாமல் இருந்ததில்லை. அவருடைய உள்ளங் கைகளைப் போலவே அவருடைய குரலில் சொல்ல முடியாத மிருது இருந்தது. அந்தக் குரலைக் கேட்டால், பூவால் காதைத் தொட்ட மாதிரி இருக்கும்.

- 'அண்டை வீட்டார்'.

5. பக்கத்தில் இருந்தவரை மெதுவாகத் திரும்பிப் பார்த்தான். அவருடைய குரல் வியாபாரிகளுக்கே உரிய கள்ளத்தனமுள்ள கீச்சுக் குரலாக இருந்தது. சின்ன வயசிலேயே இந்த வியாபாரக் குரல் இவருக்கு வந்திருக்கும்போல. எல்லோரும் பின்னால் ஆகப் போகிறதைச் சின்ன வயதிலேயே இனம் காட்டி விடுகிறார்கள் என்று தோன்றுகிறது.

- 'ஏழாவது நாள்'.

6. வேட்டியைப் பெரிதாக, ஒரு பிறந்த குழந்தை தூங்குகிற அளவிற்கு 'மடி'வ்¢ட்டுக் கட்டிக் கொண்டார். அப்படிக் கட்டிக் கொண்டால்தான் அவருக்கு வேட்டி கட்டிக் கொண்டது போல இருக்கும்.

- 'யுகதர்மம்'.

7. செல்லம்மா பாஷையில், வீட்டில் வாக்கரிசி முட்டிப் போகும்போது, பெரிய ஞானக்கிறுக்கன் போல் இந்தத் திண்ணையில் சாய்ந்து கொள்வான். மழுமழுவென்று, தயிர்க்காரியின் சிரட்டையைப் போல் சிரைக்கப்பட்ட தலை மேல் இரண்டு கைகளும் பின்னிக் கிடக்கும். இன்றைக்கும் அதே மோனத் தவத்தில் ஆழ்ந்து, மனம் எங்கோ பழங்கனவுகளில் லயித்துக் கிடக்கும்போதுதான் செல்லம்மாவின் குரல் ஆளையே அடிக்கிற மாதிரி பீரிட்டுக் கிளம்பியது.

- 'மயான காண்டம்'.

8. இருட்டைப் போக்கினது பஞ்சாயத்துபோர்டில் ந்¢றுத்தியிருந்த விளக்குத் தூண்களோ, பதினைந்து நாட்களுக்கு ஒருதடவை வீசுகிற நிலா வெளிச்சமோ இல்லை. இருட்டை அழித்தது வீடுகளிலிருந்து கேட்ட பேச்சுக் குரல்களும் நடமாட்டங்களுமே. எல்லா வீடுகளிலும் வெளிச்சமே இல்லாமல், விளக்குகளை எல்லாம் பறித்துக் கொண்டிருந்தாலும் கூட வீடுகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்கிற சிறு விஷயமே இருட்டை விரட்டப் போதுமானதாக இருந்தது. இருட்டு ஒரு போதும் எஸ்தர் குடும்பத்திற்கு துயரம் தருகிறதாக இருந்தது இல்லை. இப்போது இருட்டு தருகிற துக்கத்தை, வெயிலின் கொடுமையைப் போலத் தாங்க முடியவில்லை.

- 'எஸ்தர்'.

9. அது நிலாக் காலம். வண்டியின் வேகத்தில் பனை ஓலைகளினூடே தெரிந்த நிலா ஒளிந்து பார்க்கிற மாதிரி மறைந்து மறைந்து தெரிந்தது. வண்டிக்கு அடியில் நிலா வெளிச்சத்தில் வண்டிச் சக்கர நிழல்கள், ரொம்ப தூரத்துக்கு ரோட்டை விட்டுக்கீழே இறங்கி, பெரிய ராட்க்ஷஸச் சக்கரங்களாக வண்டியுடன் கூடவே உருண்டு வந்து கொண்டிருந்ததைப் பார்க்க வேடிக்கையாகத்தான் இருந்தது.

- 'குழந்தைகள் ஆண்டில்'.

10. அவளுடைய வாழ்க்கை ஏன் இப்படி ஆயிற்று? மாடியிலிருந்து கிழித்துப் பறக்கவிட்ட பேப்பர்த் துண்டுகள் மாதிரி எந்த இடத்தில் தலை சாய்ப்பது என்று தெரியாமல் இருக்கிறாள்.

- 'ஒரே ஒரு நாள்' நாவலில்.

- இன்னும் வரும்.

- வே.சபாநாயகம்.

No comments: