Wednesday, November 09, 2005

உவமைகள் - வர்ணனைகள் 45

நான் ரசித்த உவமைகள்-வருணனைகள் - 45:

மாலன் படைப்புகளிலிருந்து:

1. ராஜசேகர் முகத்தில் லட்சங்களைச் சுவாசிக்கிற களை தெரிந்தது. ஒழுங்காக வாரி இருந்தான். கண்களில் பணம் பண்ணும் சாமர்த்தியம் சிகப்பாக ஒளிர்ந்தது. இவனை ஒரு துரும்பைப் பார்க்கிற மாதிரி பார்த்தான்.

- 'bait' கதையில்.

2. நிமிர்ந்து பார்த்தான். முதலில் என்னைப் பார் என்னும் மூக்கு. சிரிப்பதற்கில்லை இது சாப்பிட மட்டும்தான் என்பது போல் சிறிதாய்க் கீறின உதடுகள். மரத்தில் செதுக்கினாற்போல் இறுகிய முகம். முகத்தில்தான் எத்தனை வகை! உழுது பாத்தி கட்டின மாதிரி; திருஷ்டிப் பூசனி மாதிரி; தோய்த்து உலர்த்தின மாதிரி; எண்ணெயில் பொறித்த மாதிரி; செடியில் பூத்த மாதிரி. ஆனால் இவை ஒவ்வொன்றிற்கும் பின்னும், எல்லோருக்குள்ளேயும் ஒரு முகம் இருக்கிறது. கோபமாய்; அன்பாய்; சிலருக்குத் திமிராய்.......

- 'அக்னி நட்சத்திரம்'.

3. ஜனனியின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது தேன் கூட்டில் கல் எறிவது போல. ஒரு கேள்விக்குப் பதில் சொன்னால் அத்தோடு ஓயாது சரம் சரமாய்க் கேள்வி கிளம்பும்.

- 'தப்புக் கணக்கு'.

4. இவன் கண் திறந்த போது எல்லாமே முடிந்திருந்தது. ஆச்சரியங்கள் காத்திருந்தன. அவற்றில் ஒன்று எதிரில். நாலடி உயரம். முக்கோண முகம். மற்ற உறுப்புக்களை உதாரணிக்க அப்போது உலகத்தில் பொருள்கள் இல்லை.

- 'கல்கி'.

5. அப்பா லட்சுமி சகஸ்ரநாமம் சொல்லிக் கொண்டிருந்தது எங்கோ தொலைவில் தொடுவானத்துக்கு அருகே இருந்து ஒலிப்பது போல் கேட்டது. இந்த ஆயிரம் பேரைச் சொல்லும் புண்ணியத்துக்காக அப்பா சமஸ்கிருதத்தைக் கடித்துத் துப்ப வேண்டாம். இவருக்கு சமஸ்கிருதம் தெரியாது. தமிழ் லிபியில் அச்சான புத்தகத்தை வைத்து ஒப்பேற்றிக் கொண்டிருக்கிறார்.தமிழும் இல்லாத சமஸ்கிருதமும் இல்லாத இந்தப் புதிய பாஷை லெட்சுமிக்குப் புரியவில்லையோ என்னவோ? இல்லாவிட்டால் இப்படித் தினமும் மழையோ, பனியோ ஐந்து மணிக்கு எழுந்து தலையில் தண்ணீரைக் கொட்டிக் கொள்ளும் சின்சியாரிட்டிக்காகவேனும் அவர் கேட்டதைக் கொடுத்திருக்கலாம்.

- 'என் வீடு'.

6. "ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்"

பாடல் கேட்கப் பரவசமாய் இருந்தது. வெதுவெதுவென்று உஷ்ணமாய் உடல் சூடேறியது. 'ஆயுதம்' என்ற குரல் உச்சத்தில் போய் நின்றது. சடாரென்று அந்த நேரத்தில் கவிதையின் முழு அர்த்தமும் புரிந்தது. ஆயுதம்னா கத்தி கபடாவா? பாரதி சொல்லுக்கு எழுதுவதும் நம் ஆயுதம்(writing is our weapon) என்றல்லவா அர்த்தம்? சுரண்டறவன் வயித்தில் சொருகுகிற கத்தி மாதிரி நியூஸ்பேப்பர் வந்து விழவேண்டும். நசுக்கி வைத்திருகிறவர்கள் போல், ஆட்டம் பாம் போல் எழுச்சியூட்டும் கட்டுரைகள் வந்து விழவேண்டும்.மெஷின்கன் சுடுவது மாதிரி படபடவென்று கவிதை தெறித்துக் கொண்டு வரவேண்டும் என்றல்லவா அர்த்தம்? அர்த்தம் புரிந்து போனதில் மனசு பொங்கிற்று.

- 'ஆயுதம்'.

7. மணலாய்க் கிடந்தது தாமிரபரணி. சித்திரம் தீட்டிய மாதிரி லேசான பழுப்பில் நிலா முழுசாய் மிதந்து கொண்டிருந்தது. கையால் அள்ளித்தெளித்த மாதிரி நட்சத்திரங்கள். இந்தக் குளிர் கூட இதமாய் இருந்தது. மனம் இன்னும் சூடேறிப் போகவில்லை. எங்கேயோ ஒருசிறு குயில். தம்பூர்த் தந்தியைச் சுண்டி விட்டமாதிரி திரும்பத் திரும்ப வந்து மொய்க்கும் கொசுவைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம் போலிருந்தது. எங்கே போனாலும், எதைத் தொட்டாலும் துரத்தித் துரத்தி வந்து ஊசியாய்க் குத்துகிற நினைப்பைத்தான் விரட்ட முடியவில்லை.

- 'வழி தவறிய வண்ணத்துப் பூச்சிகள்'.

8. மார்ச்சு மாதத்து மத்தியானத்து வெயில். சுகமான விடுமுறைச் சோம்பல். உடம்பைப் பிடித்து உலுக்கிய உலுக்கலில் ஞயிற்றுக் கிழமையின் நல்ல தூக்கம் முறிந்து விழுந்தது. எனக்குள் சின்னதாய் ஒரு விஸ்வாமித்திரன். எதிரே என் சின்னத்தங்கை. கையிலே
ஒரு தந்தி. பார்த்தேன். உடம்பின் செல்களில் மெலிதாய் ஒரு மின்சாரம். நிறைய வியர்த்தேன். மனதுள் சோடாக் குமிழ் நுரையாய்ப் பொங்கும் சந்தோஷம். கூடவே ஒரு சின்ன பயம்.

- 'சூரிய தேசம்' கட்டுரையில்.

9. யோசித்துப் பார்த்தால் இப்படித்தான் எல்லோரும் குளவி போல் வாயில் ஒரு பிரச்சினையைக் கவ்விக் கொண்டு இறக்கி வைக்க இடம் தேடி சுற்றிச்சுற்றி வருகிறார்கள் அலைச்சலும் இரைச்சலுமாய்.

- 'கோட்டை' கதையில்.

10. காலையில் இருந்தே ஜானகிராமனுக்குள் ஒரு புகை மூட்டம். வார்த்தைகளுக்குத் தவிக்கிற கவிதை மாதிரி ஒரு வதை. ஒரு சந்தோஷமான இம்சை. இன்னதென்று தெளிவாய் உருவம் புலப்படாமல் ஒரு கற்பனை.வாசிக்க வயலினை எடுத்தால் வழிதப்பிப் போகிறது. விதம் விதமாய் வில்லை ஓட்டிப் பார்த்தாயிற்று. நழுவி நழுவிச் சறுக்குகிறதே ஒழியப் பிடிகிடைக்கிற வழியாய் இல்லை. வெறுத்துப்போய் வில்லை வீசி விட்டு தோட்டத்தில் உலாவ வந்த நிமிஷத்தில் சட்டென்று பொறி தட்டிற்று. உற்சாகக் குருவி உள்ளே கூவிற்று. திடுமென ஒரு அலை பொங்கி அதில் தான் நுரைப் பூவாய் அலம்பி அலம்பிப் போகிற மாதிரி மிதப்பாய் இருந்தது. அவசரமாய் உள்ளே திரும்பி வயலினை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தார். வில்லை இரண்டு இழுப்பு இழுப்பதற்குள் வாசல் பக்கம் தொந்தரவு. ரிஷபத்தை நீளக்கூவித் தெருக் கதவு திறந்தது. கற்பனை கலைந்து ரௌத்திரம் பொங்கக் கண்ணைத் திறந்து பார்த்தார்.

- 'வித்வான்'.

- மேலும் வரும்.

-வே.சபாநாயகம்.

1 comment:

Nirek said...

hello Saba Uncle,

I never read much about Malan's works. after reading ur blog on his works, my regard for him has increased.
yours is a great blog on Tamil indeed! Great work!


btw, i am satheesh, Dr.VGP's brother-in-law's son.