Tuesday, August 08, 2006

கடித இலக்கியம் - 16

('சந்திரமௌலி' என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)

கடிதம் - 16

நாகராஜம்பட்டி
7-2-77

அன்புள்ள சபா,

வணக்கம்.

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எழுதி, இன்றுதான் ஒரு கடிதம் உங்களுக்குத் தபாலில் சேர்த்தேன். இன்று மறுபடியும் இதை எழுதுகிறேன். எந்தச் சூழ்ந்¢லையில் இருந்து கொண்டு நமது சித்தம் இயங்குகிறது என்பதற்குச் சான்றாக, இந்தக் கடிதத்தில் சில விஷயங்களைப் பிரஸ்தாபிக்கப் போகிறேன்.

முன் எப்பொழுதையும் விட இப்பொழுதுதான் நமக்கும் நமது உத்யோகத்திற்கும் அனுசரிக்கவொண்ணாததோர் முரண்பாடு எழுந்துள்ளது. ஓர் ஆசிரியன் என்கிற முறையில் இந்தக் குடும்பக் கட்டுப்பாட்டு அமுல் முறை எனக்குச் சம்மதப்படமாட்டேன் என்கிறது. உள்மனத்தின் ஆட்சேபணைகள் சமயங்களில் உரக்க வெளியே வந்து விடுகிறது. ஒவ்வொரு ஆசிரியரும் இரண்டு கேஸ¤கள் எப்படியாவது போட்டு ஆக வேண்டுமாம். இலக்கைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்று தயை செலுத்தி அரசாங்கம் உத்தரவிட்டிருந்தாலும் அதிகாரிகள் தங்கள் கைவசம் உள்ள அதிகாரங்களை நமது கழுத்துக்குப் பெருங்கயிறாகத் திரிக்கிறர்கள். இல்லாவிட்டால் என்னென்னவோ செய்வார்களாம். கன்னா பின்னாவென்று நம் பணியாற்றும் இடங்களைக் கலைப்பார்களாம். மாறுதல் கொடுப்பார்களாம். மிரட்டுகிறார்கள்.

இது அரசாங்கத்துக்கு எவ்வளவு பெரிய நஷ்டம். அது செய்கிற நல்ல காரியங்கள் கூட மறைகிற அளவுக்கு இந்தக் குடும்பக் கட்டுப்பாடு திட்ட அமுல் புழுதியை, அதிகாரிகள் வாரி இறைக்கிறார்கள். ஒவ்வொருவரும் 'நான் என்ன செய்யட்டும்' என்று கையை மேலே சுட்டிக் காட்டுகிறார்கள். கடைசியில் இந்த ஆணை எங்கேதான் பிறக்கிறது?

நாம் கொண்டிருக்கும் அச்சத்திலிருந்து பிறக்கிறது மனித இனவிருத்தியின்மீது நாம் கொண்ட அச்சம்.

- இது சம்பந்தமாகப் பேசிக்கொண்டு போவது வேறு கிளை. அது போகட்டும். இப்போது நாம் என்ன செய்வது?

இந்த உத்தியோகம் நாம் வகிக்கத் தகுமா? வகித்துத்தான் தீர வேண்டுமெனில் அதற்கப்புறம் நம் அந்தஸ்து - ஒரு குருவின் பீடம் - என்னாவது? நம் இலக்கியத்தின் குரல்கள் எல்லாம் போலியாகி விடாதா? அப்புறம் நமக்கு இலக்கியம் தான் எதற்கு? நாம் எதைப் பற்றி எந்த அடிப்படையில் பேசுவது?

இந்த உத்தியோகமே இல்லையெனில் நமது பெண்டு பிள்ளைகள் என்னாவது? நிலம் நீர் உள்ளவர்கள் எல்லாம் இப்போது மஹா பாக்கியவான்கள். நமது தாய் தந்தையர் என்னாவது?

திருவள்ளுவனுக்கு என்ன திடம்!

"ஈன்றாள் பசி காண்பான் ஆயினும் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை"

இதை ரசிக்கும் நமது ரசனை கூடவல்லவா அப்புறம் போலி? என்ன செய்வது?

தூரத்தில் ஓர் அழைப்புக் குரல். அழைப்பதாகக் கூட உறுதியாகச் சொல்ல முடியாது. அது நம்முடன் பேசுகிறது. இந்த உத்தியோகத்தை ராஜிநாமா செய்து விடுவது மேல் என்கிறது. நமது எழுத்துத்துறை சம்பந்தப்பட்ட வேறு ஏதாவதோர் எளிய சம்பளத்தை உறுதியாகப் பற்றிக் கொண்டு வேறு மாதிரியாக வாழ்க்கையை நடத்தத் துணிந்துதான் பார்க்கலாமே, மெதுவாக யோசனை செய்யேன் - என்கிறது. இந்த இக்கட்டிலிருந்து மேலே வழி எப்படியெப்படி பிரியுமோ தெரியவில்லை.

நாமெல்லாம் கொஞ்சம் தைரியவான்களாக இராமல் போய் விட்டோம். எல்லாவற்றிற்கும் அடிப்படையான குறை இதுதான் என்று சிந்தித்துச் சிந்தித்துச் சலிப்புத் தோன்றுகிறது.

ஓர் ஆசிரியன் எங்கே, குழந்தைகள் மீது அவனுக்குள்ள அன்பு எங்கே, போதனையில் அவனுக்குள்ள ஆசை எங்கே, நான் சொல்லுகிறேன் குழந்தைகளே என்று சீடர்களுக்குச் சொல்வவதற்கு அவனுக்குள்ள அதிகாரம் எங்கே, தவம் போல் அவன் வாழவேண்டிய வாழ்நெறி எங்கே - புரோக்கர்களுக்குத்தான் கடைசியில் லாபம் என்பதாக அவன் கிட்டத்தட்டத் தன் ஒரு மாத ஊதியத்தை வாரியிறைத்து ஒரு குடும்பக்கட்டுப்பாடுக் கேஸை அலைந்து திரிந்து அதிகாரிக்குப் பயந்து பிடித்து ஊமைபோல் குமுறும் இந்த அவலம் எங்கே?

இதற்கு என்ன பதில்? என்ன வழி? என்ன தீர்வு? இந்த சிந்தனை தேச விரோதமானதா? எவரிடத்தும் இதை நாம் வெளிப்படுத்தத் தயங்கினால், அடே இலக்கியகர்த்தாவே, உன்னைவிட ஒரு பாமர தைரியம் இந்தத் தேசத்தை உய்விக்கும் போடா என்று சொல்லத் தோன்றுகிறது. இல்லையா?

- பி.ச.குப்புசாமி

No comments: