Sunday, December 23, 2007

'எழுத்துக்கலை' பற்றி இவர்கள் ...(8)-கு.ப.ராஜகோபாலன்

1. 'கண்டதை எழுதுவதுதானா கதை?' என்று கேட்கலாம். கதை உருவாகும் பொழுது, கண்டதுமட்டுமின்றிக் காணாததும் தங்கத்துடன் செப்புச் சேருவதுபோல் சேருகின்றன. அந்த அனுபவமும், காந்தத் துண்டுபோல, தான் இழுக்கக்கூடிய பல இரும்புத் துகள்களைப்போன்ற நிகழ்ச்சிகளையும் நிலைகளையும் ஆகர்ஷித்துக் கொள்ளுகிறது. ஆசிரியனுடைய அனுபவம் என்ற நிலையில் அடிபட்டு, பல்வேறு உருக்களில் கதைகளாக மாறுகின்றன.

2. வாழ்க்கையின் உண்மையான விஷயங்களைப்பற்றித் தைரியமாக எழுதுவதே - எடுத்துக் காட்டுவதே - சிறுகதை.

3. குணச்சித்திரம் பல வகைப்பட்டது. அசாதாராண பிரகிருதிகள், வாழ்க்கை விதிக்கும் சுவட்டில் போக முடியாமல், அதை எதிர்த்து, வேறு தனிப்பாதைகளில் போக முயலும் காட்சியை வர்ணிப்பது ஒரு வகை. அலைமோதும் வாழ்க்கைக் கடலில் இறங்கி, நீந்தத் தெரியாமல் தத்தளித்து மாயும் மென்மையான மனித இயல்புகளை அனுதாபத்துடன் படம் பிடிப்பது மற்றொரு வகை. லட்சிய வீரர்கள் (ஆண்களும், பெண்களும்) வாழ்க்கத் தரையிலிருந்து கிளம்பி, சம்பாதியைப் போல மனோரத சூரியனிடம் செல்ல முயன்று, சிறகெரிந்து வீழும் வீழ்ச்சியைச் சித்தரிப்பது
மேலும் ஒருவகை. கடைசியாகக் குறிப்பிட்ட இந்த இலட்சிய வீரர்கள்தான் வாழ்க்கையின் விதிக்கும் விதியாக நிற்பவர்கள். இவர்களுடைய சித்திரங்களே எதிர்காலச் சமுகத்துக்கு வழிகாட்டிகள்.

4. எழுத எழுதத்தான் மனிதனின் ஆத்மா வெளிப்படும்.

5. இலக்கிய ஆசிரியன் என்னதான் சொல்லவேண்டும் வாசகனுக்கு?
ஒன்றுமே சொல்லக்கூடாது. சொல்லாமல் சொல்ல வேண்டும்.

(இன்னும் வரும்)

1 comment:

நிலாமகள் said...

. //எழுத எழுதத்தான் மனிதனின் ஆத்மா வெளிப்படும்.

5. இலக்கிய ஆசிரியன் என்னதான் சொல்லவேண்டும் வாசகனுக்கு?
ஒன்றுமே சொல்லக்கூடாது. சொல்லாமல் சொல்ல வேண்டும்.//

அற்புதம்....