Thursday, August 26, 2010

இவர்களது எழுத்துமுறை - 5 மௌனி

எம்.ஏ.நுஃமானின் 30-12-1984 சந்திப்பின்போது;

---------------------------------------------------------------------


1. கேள்வி: நீங்கள் எப்படிக் கதை எழுதுகிறீர்கள்?


மனதில் தோன்றுகிறவை, கற்பனையானவை, திடீரென்று எழும் கருத்துக்கள் -

எல்லாம் ஒரு நோட்டில் குறித்து வைக்கிறேன். எழுதும்போது அதில் சில எனக்கு

உபயோகப்படும். எனது கதைகளை நான் ஒரே இருப்பில் எழுதி முடித்து விடுகிறேன். ஒரே

இருப்பில் முடியாவிட்டால் முடிந்த அவ்வளவும்தான் கதை.


2. உங்கள் மொழி நடையைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாள்கிறீர்களா?


இல்லை. அப்போது வருவதுதான் எழுத்து.


3. கேள்வி: பெரிய எழுத்தாளர்கள் தங்கள் கதைகளைப் பல முறை திருத்தித் திருத்தி

எழுதுவார்களாமே, நீங்கள் அப்படிச் செய்வதில்லையா?


இல்லை. செப்பனிடும் பழக்கம் இலை. ஒரே முறையில் எழுதுவதுதான்.

எழுத்துபிழைகள் இருந்தால் அதைத் திருத்திக் கொள்வேன். இப்போது என்னால் எழுதவோ

வாசிக்கவோ முடியவில்லை.



4. கேள்வி: எழுதவேண்டும்போல் இருந்தால் யாரையும் கொண்டு எழுதுவிக்கலாமே....


அப்படி டிக்டேட் பண்ணுவது எழுத்தல்ல.



கி.அ.சச்சிதானந்தம்:

-----------------------------


மௌனி எழுதுவற்கு நிரம்ப கால அவகாசம் எடுத்துக் கொள்வார். ஒவ்வொரு

சொல்லையும் சுண்டிச் சுண்டிப் பார்ப்பார். ஒரு நாளைக்கு ஒரு வாக்கியத்தோடு

நிறுத்திக் கொண்டதும் உண்டு. தமிழில் முதலில் வரவில்லை என்றால் ஆங்கிலத்தில்

எழுதிவிடுவார். பின்னால் தமிழ்ப்படுத்துவார். ஒரு கதைக்கு இருபது டிராப்ட்

கூடப் போட்டிருக்கிறார்.


கேள்வி 1: தாங்கள் நீண்ட காலமாக எழுதாமல் இருக்கிறீர்களே ஏன்?


ஏதோ ஒரு சமயம் எழுதியவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற ஆவலில்

என்னை இந்த கேள்வி கேட்டதற்கு நான் பெருமை கொள்கிறேன். அப்போது நான்

எப்படி எழுதினேன் என்பதே எனக்குப் புரியவில்லை.எனக்கு நிறைய எழுத வேண்டும்

என்ற ஆவல் எப்போதும் உண்டு. எப்படி எழுதுவது என்பது வர வர வெகு கடினமாகவே

தோன்றுவதை உணர்கிறேன். நான் எழுதுவதை சந்தர்ப்பம் நிர்ப்பந்தத்தினாலல்லாது

பிறருக்குத் தெரியப்படுத்திக் கொள்வது இல்லை. எழுத்தாளன் எனப் பிறருக்குக்

காட்டிக்கொளவதில் வெட்கம் கொள்ளுபவன்.


கேள்வி 2: சிறுகதை இலக்கியப் படைப்பில் தங்கள் நோக்கில் தொழில் நுணுக்கங்களாக

எவற்றைக் கூறுகிறீர்கள்?


எந்த அம்சம் தொழில் நுணுக்கமென நான் என் சிறுகதைப் படைப்பில் கையாண்டேன்

என்பது சொல்லும் வகைக்குத் தெளிவாக உணர்வு கொள்ளவில்லை. ஆனால் ஒன்று

சொல்லலாம் என நினைக்கிறேன். எதைச் சொல்கிறோம் என்பது, எப்படிச்சொல்லுவது

என்ற உணர்வுடன் கலந்து உருவாவதுதான் இலக்கியம். ஒன்றைவிட்டால் இரண்டும்

கெட்டு ஒன்றுமே இலக்கியம் எனத் தோன்ற உண்டாகாது. ('தீபம்' பேட்டி அக்.1967)



பிரமிள்:

-----------


1. மௌனிக்குத் தன் கதைகளில் ஒவ்வொரு சொல்லுமே முக்கியமானது. சொற்களின்

அர்த்தத்தோடு, சில வேளைகளில், அவற்றின் சப்த அமைப்பையும் கூட அவர் கவனத்தில்

ஏற்கிறார்.


2. தமது கதாபாத்திரங்களின் பெயர்கள்கூட கதையின் முக்கியமான ஓட்டத்தை மீறி

சப்தம் போட்டுவிடக்கூடாதே என்ற அக்கறையுடன் பாத்திரங்களின் பெயர்களையும்

சாமானியமானவையாகவே உபயோகிக்கிறார். சில கதைகளில், அவசியமில்லை என்று

காணும்போது பாத்திரத்துக்குப் பெயரே இராது.


3. மௌனி தன் கதைகளில் பெரும்பாலும் நிகழ்ச்சிகளினாலன்றி கவித்துவத்தினாலேயே

பாத்திரங்களிடையே உறவு போன்றவற்றைக் கொண்டு வருகிறார். ஆழமான கதையம்சத்தின்

துணையின்றி, சாதாரண கதைகளிலேயே ஒரு காவிய உணர்வைத் தருகிறார்.



நகுலனுடனான சந்திப்பில்:

------------------------------------


கேள்வி; நீங்கள் எப்படி எழுகிறீர்கள்?


அனுபவம் ஒரு புள்ளி. அந்தப் புள்ளியை இசை பிசகாமல் ஒரு வட்டமாகப்

பூரணமாக்க, அனுகூல அனுபவ பாவனையாலும், அனுபவ சாத்திய பாவனையாலும்

முயற்சிக்கிறேன். சில சமயம் வெற்றி; சிலசமயம் தோல்வி. 0

4 comments:

Jegadeesh Kumar said...

பகிர்வுக்கு நன்றி.
உங்கள் சேவைக்குத் தலைவணங்குகிறேன்.

சே.வேங்கடசுப்ரமணியன் said...
This comment has been removed by the author.
சே.வேங்கடசுப்ரமணியன் said...
This comment has been removed by the author.
சே.வேங்கடசுப்ரமணியன் said...

சிறந்த பணி அய்யா? எனது கோரிக்கையையும் ஏற்று பதிவிட்டமைக்கு நன்றி.

7:12 PM