Monday, November 26, 2012

'நான் ரசித்த முன்னுரைகளிலிருந்து................6. எஸ்.வைதீஸ்வரன் - உதய நிழல்..




நீங்கள் வாசிக்கப்போகும் இவைகள் - கவிதைகள். சாதாரணமானதாக பொருளற்றதாக பழகிப்பொய்விட்ட தவிர்க்க முடியாத நியதியாகத் தோன்றும் வாழ்க்கையிலிருந்து ஆசையால் அறிவால் உணர்வால் கல்லிடியடுக்கபட்ட சில கலையுண்மைகள் இவைகள்.

பூமியில் வெகு நாட்களாகப் பதிந்து போய்க்கிடக்கிற ஒரு பாறாங்கல்லை சலித்துப் போன வெறும் ஆத்திரத்தால் புரட்டிவிட அடியிலிருந்து திடீரென்று கொப்பளிக்கும் நீரூற்றையோ நெளியும் அநேக ஜீவராசிகளையோ கண்டு பிரமிப்படைந்து நிற்கும் நிலைகள் - எனக்கு கவிதை யுணர்வுகளாகத் தோன்றுகின்றன.

வாழ்க்கைப் பாறாங்கல்லை நாம் அடிக்கடி புரட்டிப் பார்க்க நமக்கு சக்தியும் ஆவலும் கோபமும் அவசியம். இரண்டாவதாக வாழ்க்கையைப் புரட்டிப் பார்க்கும் சுதந்திரம்.

பிறந்த கணத்திலேயே பூமியின் ஆகர்ஷணப் பிடிப்பில் சிக்கிக்கொண்டு விடுகிற நமக்கு வளர வளர வாழ்வில் நம்மை சுற்றிக் கொள்ளுகிற சூழ்நிலைக் கட்டுகளை சதா எதிர்த்துப் போராடி நம்மை நாம் உறுதிப் படுத்திக் கொள்ளுகிற முயற்சியிலேயெ வாழ்க்கை முடிந்துவிடுகிறது.

குடும்பம் சமூகம் அரசியல் மதம் இவைகள் ஒவ்வொன்றும் தங்கள் விசேஷ ஆக்ரமிப்பைச் செலுத்தும்போது தனி மனிதனின் சிந்தனை வெறும் சந்தை மாடாக உணர்வற்றுப் போய்விடுகின்ற நிலை ஏற்படுகின்றது.

மனிதன் வாழ்வதாலேயெ தூசுபடிந்துபோய்விடுகிற அவனுடைய உண்மை வாழ்க்கையைகண்டறிந்து கொள்வதற்கு கலைகள் உதவி செய்ய முடியும். ஆனால் கலைகள் உண்மையான மன விழிப்பைக் கொடுக்க வேண்டுமானால் அவைகள் சுதந்திரமான தெளிவான பயமற்ற உள்ளத்திலிருந்து படைக்கப் பட்ட சிருஷ்டி - சுதந்திரம் கூடியவரை மக்களிடமிருந்து பற்க்கப் படாமலோ அல்லது நசுக்கப்படாமலோ இருக்கிறதோ அங்கே இயல்பான வளர்ச்சிக்கும் ஆரோக்யத்திற்கும் இடமுண்டு. ஒரு நாட்டின் நல்ல எதிர்காலம் இப்படிப்பட்ட ஒரு சுதந்திர நிலையை வெகுவாக நம்பி இருக்கிறது.அப்படிப்பட்ட தனிமனித சுதந்திரத்தின் அத்தாடசிகளாக என் கவிதைகளை உங்கள் முன்பு சமர்ப்பிக்கிறேன்.

முக்கியமாக இக்கவிதைகள் நீங்கள் வாசித்துஅனுபவிப்பதற்காகத்தான் எழுதப்பட்டவைகள் - புரிந்துகொள்ளக் கூடாதென்ளோ உங்களை அனாவசியக் குழப்பத்தில் ஆழ்த்த வேண்டும என்பதோ என் நோக்கமல்ல. ஆனால் வாசகன் என்ற முறையில் நீஙக்ள எந்த கலைப்படைப்பை ரஸிக்க அணுகும்போதும் அவசியமாகிற ஆரம்ப முயற்சியை  இவைகளை ரஸிக்கும்போதும் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்.

நான் இக்கவிதைகளை இன்று திரும்பப் படித்தபோது எனக்குப் புலப்பட்ட அடிப்படையான கருந்தை உங்களுக்குச் சொன்னால் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன். பொதுவாக என் கவிதைகள் மனத்துக்கும்   வயிற்றுக்கும் மனத்துக்கும் கொள்கைக்கும் மனத்துக்கும் உயற்கைக்கும் ஏற்படுகிற நிலையான மோதல்களாகக் கூறலாம். இம்மோதல்களின் விளைவுகள் - இன்பமாகவோ துயரமாகவோ ஏமாற்றமாகவோ தொனிக்கலாம். ஆனால் அந்த உணர்வுகளை மீறிய ஒரு அமைதி நிலைக்கு வழிகாட்டும் ஏணிகளாக இவைகள் பயன்பட வேண்டும் என்பதுதான் என் உள் ஆசை.

இக்கவிதைகளின்  வடிவங்கள் அவைகள் சொல்லும் கருத்துக்களாலேயே தீர்மானிக்கப் பட்டவைகள். இவைகள் இன்று வாழ்கின்ற என்னால் எழுதப்பட்ட கவிதைகள் என்பதைத் தவிர இவைகளைப் புதுக் கவிதைகள் என்றோ பழங்கவிதைகள் என்றோ பெயரிட்டு விளையாட நான் விரும்பவில்லை.

தமிழ் கவிதைகளிலே மரபு என்று கூறப்படும் ஒன்றை வளர்ப்பதோ அல்லது வெட்டி வீழத்துவதோ இப்படைப்புகளின் நோக்கமேயில்லை. அதனாலேயே அந்தமாதிரி வளர்ச்சி வீழ்ச்சி விளைவுகளுக்குஇக்கவிதைகள் நேரடியாக பொறுப்பேற்காது.

முடிவில் என் வாசகர்களுக்கு ஒரு எச்சரிக்கை. கவிதைகள் ஒரே மூச்சில் படித்து அனுபவித்துவிடக்கூடிய நாவல்கள் அல்ல. ஒவ்வொரு கவிதைக்கும் இடையில் ஒரு குறிப்பிட்ட மன அவகாசம் தேவை. ஒவ்வொரு கவிதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதும் ஆர்வமுள்ள திறந்த மனம் மிக மிக அவசியம்.

கவிதையனுபவம் நல்ல கனவு காண்பது போல. நல்ல கனவுகள் தனைமறந்த துயிலில்எதிர்பார்க்கலாமே தவிர நினைத்தபோது தோன்றி நிற்கும்படி கட்டளையிட முடியாது.

                - இனி நீங்கள என்னைத் தாண்டிப் படிக்கலாம்.

சென்னை                                                                    எஸ்.வைதீஸ்வரன்.                                                           
மார்ச் 1970



No comments: